Search This Blog

13.12.08

மதம் என்றால் என்ன? கிறிஸ்தவ மதம் நன்மை விளைவித்துள்ளதா?


முன்னுரை

இந்நூல் அறிவியல் உலகில் தலைசிறந்த பேரறிஞர் என்று இற்றைஞான்றுவரை போற்றப் பெறும் தோழர் ராபர்ட் கிரீன் இங்கர்சால் அவர்கள் பாஸ்டன் நகரில் 1889 ஆம் ஆண்டில் அமெரிக்க மதச் சுதந்திர சங்கத்தில் “மதம் என்றால் என்ன? என்னும் பொருள் பற்றி ஆற்றிய பேருரையாகும். இது லண்டன் பகுத்தறிவு நூற்பிரசுரக் கழகத்தாரால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கும் “Ingersoll lectures& essays என்ற நூலின் ஓர் அத்தியாயமாகும். இந்நூலின்கண் மதங்களின் புரட்டையும், கடவுளின் தன்மையையும், தெள்ளத்தெளிய நன்கு எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.

இந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதியளித்த லண்டன் பகுத்தறிவு நூற்பிரசுரக் கழகத்தார்க்கும் இதை அழகிய செந்தமிழ் நடையில் அறிஞர் பலரும் அவாவுறும் வண்ணம் கைமாறு கருதாது மொழிபெயர்த்தளித்த பெருந்தகையாளரும் உயர்தரமன்ற வழக்கறிஞரும், அட்வக்கேட்டுமான தோழர் சோ. லட்சுமிபரதன் பாரதி எம். ஏ. பி. எல். அவர்கட்கும் நமது உள்ளங்கனிந்த நன்றியுரித்தாகுக.

இணையிலா அறிவியல்வாதியாம், இங்கர்சால் அவர்களின் அரிய கருத்துக்களையும், போற்றற்கரும் தர்க்க முறைகளையும், தமிழுலகம் படித்துப் பயனடையுமாறு இந்நூலை ஆதரிக்குமென்று பெரிதும் நம்புகின்றோம்.


-------------------------பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.

(நான்காம் பதிப்பு -1996)


************************************************************

மதம் என்றால் என்ன?

எல்லாம் வல்ல - எங்கும் நிறைந்த ஒரு கடவுள் யாவற்றையும் படைத்து, அவற்றை ஆண்டு நடத்தி வருவதாயும், படைக்கும் பொருள்களெல்லாம் அக்கடவுளுக்கு அடங்கியும், வணங்கியுமிருக்க வேண்டுமென்றும், இன்னும் அக்கடவுளிடும் கடவுள்களைப் பணிவுடன் ஆற்றுபவனே சமயநெறி மீறாது இருப்பவனென்றும் சொல்லப்படும். இத்தகைய மதமே இவ்வுலகில் பொதுப்படையாகப் பெரும்பாலாராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக இக்கடவுள் பலிகளை விரும்புவதாகவும், தாய் தந்தையர் தம் குழந்தைகளது இரத்தத்தைச் சிந்துவதனால் இக்கடவுள் மனநிறைவும் மகிழ்ச்சியுமடைவதாகவும் அனைவராலும் நம்பப் பட்டு வந்தது. பின்னால், இவர்கள் ஆடு, மாடு, கோழி, சேவல் முதலியவற்றின் இரத்தப் பலிகளினால் திருப்தியடைவதாகவும், மெய்யடியார் செய்யும் இத்தகைய பலி, தியாகம், யாகம் ஆகியவைகளுக்குப் பதிலாக இவர் வான-மழையையும், வையகச் செழிப்பையும், தானிய விளைவுகளையும் மக்களுக்கு உதவுவதாகவும் கருதப்பட்டது. இத்தகைய யாகங்களையும், தியாகங்களையும் செய்யாவிட்டால் இக்கடவுள் பஞ்சத்தையும், பூமி அதிர்ச்சியையும், வெள்ளத்தையும் அனுப்புவாரென்றும் மக்கள் நம்பினர்.

கிறித்துவ மதத்தின் கருத்துப்படி இந்த நம்பிக்கை கடைசியாகக் கடவுள் தனது குமாரன் கொலையுண்டதின் காரணமாய் அவரது இரத்தப் பலியை ஏற்றுக்கொண்டு மன நிறைவடைந்து அதன் பின்னர் வேறு இரத்தப் பலிகளை விரும்புவதில்லை யென்ற கொள்கையில் வந்து முடிந்திருக்கிறது. (இந்துக்கள் இன்னும் பலவிதமான இரத்தப் பலிகளில் நம்பிக்கையுடன் உயிர்க் கொலைகள் செய்து வருவது பரவலாக இருக்கிறது.) இவ்வாறே, பல்லாயிரம் ஆண்டுகளாக இக்கடவுள் மக்களின் தியானங்களைக் கேட்டு வரமருளியதாகவும், பாவங்களை மன்னித்துத் தொண்டர்களது ஆத்மாக்களுக்கு வீடுபேறு அளிப்பதாகவும் நம்பிவந்தனர். பொதுவாக இப்படிப்பட்ட நம்பிக்கைகளையே மதமெனலாம்.


இவற்றினின்று இவைபற்றிய பின்வரும் கேள்விகள் எழுகின்றன. நமக்குத் தெரிந்த அல்லது நாமறிந்த எந்த நிகழ்ச்சியையாவது அல்லது உண்மையை யாவது மதம் அடிப்படையாகவுடையதா? கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? அவர் உங்களையும் என்னையும் படைத்தவரா? எப்பொழுதாவது வரங்கள் கொடுத்த துண்டா? எந்த நரபலியாவது அல்லது மிருக பலிகளாவது செய்யாமல் இக்கடவுளது உதவியைப் பெற்றதுண்டா? முதலாவதாக எல்லாம் வல்ல இறைவன் மக்களையும், அவர்தம் மரபினரையும் படைத்தாரா? அறிவில்லாது இன்னலுறும் மாந்தரை ஏன் படைத்தார்? கடவுள் குருடர்களையும், திக்கற்றவர்களையும் ஏன் படைத்தார்? பாவிகளையும் பைத்தியக்காரர்களையும் படைத்ததேனோ? சர்வ ஞானியும் சர்வாதிகாயுமான ஒரு கடவுள் இத்தகைய சிறுமைகளையும், குறைகளையும், படைத்ததற்கு ஏதேனும் காரணம் காட்ட முடியுமோ? பிறப்பினால் இத்தகைய சிறுமையடைந்தவர்கள்கூட தம்மை இங்ஙனம் படைத்தவனிடம் கடமைப் பட்டுள்ளரோ? இரண்டாவதாக, ஒரு பேராற்றல் படைத்த கடவுள் இந்த உலகத்தை ஆண்டு அதை நடத்துகிறாரா?

எல்லாத் தலைவர்களுக்கும் அரசர்களுக்கும் மாமன்னர்களுக்கும் இன்னும் அரசிகளுக்கும் அவர்தான் காரணமா? நடந்த யுத்தங்களுக்கெல்லாம் அதில் ஆறாகப் பெருகியோடிய ரத்தத்திற்கெல்லாம் அவர்தான் பொறுப்பாளியா? பல நூற்றாண்டுகளாயிருந்த அடிமை வாணிகத்திற்கும்; ஓயாத சவுக்கடியினால் தீராத துன்பமுறும் முதியோர்களுக்கும், பால் மணம் மாறாக் குழந்தைகளைப் பிரித்துக் கொடிய மாந்தர் விற்பனை செய்ததற்கும்; குடும்பங்களைப் பிரித்துச் சின்னாபின்னப்படுத்தியதற்கும் அவர்தான் பொறுப்பா? மதத்தின் பெயரால் செய்த கொடுமைகள் அத்தனைக்கும், மக்களை கழுவேற்றியதற்கும், தீயிலிட்டெத்தற்கும், வெஞ்சிறையில் குட்டையிலிட்டுத் துன்புறுத்தியதற்கும் அவர்தான் பொறுப்பா? கொடியவர்களும் தீயோர்களும், வீரர்களையும் சன்மார்க்கர்களையும் அழித்திடுதல் கண்டும் சோம்பியிருந்தாரா? கொடுங்கோலரக்கர் குணமிகு நல்லவர்களைக் கொலை செய்திடுதல் கண்டும் சும்மா கிடந்தாரா?

வெஞ்செயல் அரக்கர் பக்தர்களைத் துன்புறுத்தி உடல் கருக எத்திடும் வரை அஞ்சிக்கிடந்தாரா? இத்தகைய கடவுளை மதிப்பதெப்படி? தனது நண்பர்களைப் பகைவர்கள் துன்புறுத்தி எத்திடுங்கால் அதைத் தடுத்திடும் ஆற்றலுடைய ஒரு சாதாரண மனிதனும் அதைப் பார்த்து வாளா இருப்பானா? நண்பரைவிட, பகைவரைப் பேணும் இழிதன்மை பேயிடமும் காண முடியாதே!

எங்கும் நிறைந்து, பேராற்றலும் நற்குணமும் படைத்த ஒரு கடவுள் இவ்வுலகை ஆள்வது உண்மையாயின் பெரும் சண்டமாருதப் புயற்காற்றுகளுக்கும், பூமி திடுக்கிடக்கலக்கும் அதிர்ச்சிகளுக்கும், பஞ்சங்களுக்கும், நோய்களுக்கும் நாமென்ன காரணம் சொல்லக்கூடும்? சிசுக்களை வருத்தும் பலவகைப்பட்ட புண்களுக்கும், சிறிய கிருமிகளுக்கும், பெயரோகங்களுக்கும், ஆயிரக் கணக்கான நோய்களுக்கும் வழி சொல்வதெங்கனம்? கூற்றுவனெனத் தியும் கொடிய மிருகங்களுக்கும், நச்சுப் பாம்புகளுக்கும் வகையிடுவதெவ்வாறு? உயிரே உயிரைத் தின்றழிக்கும் உலகினை என்னுரைப்பது? அளவிலா அருட்சோதிக் கடவுள் படைத்தருளுவது நொடிய மூக்குகளும், கொடிய நகங்களும், கூரிய பற்களும், தேறிய நஞ்சும்தானா? அச்சத்துடன் பறந்தோடும் புள்ளினங்களைப் பிடித்து உண்பதற்காகவோ, பரந்த இறங்குகளைப் பருந்துகளுக்கருளியது? எண்ணிறந்த உபயோகமில்லாத உயிர்களைத் தின்னுவதற்காகவா படைத்தருளினான்? நுணுகிய கண்ணின் நரம்புகளை அரிப்பதற்காகவா அணு போன்ற பூச்சிகளை ஆக்கினான்?

அணுவினுஞ் சிறிய ஒரு பூச்சியின் பசியைத் தணிப்பதற்கு ஒரு மனிதனை குருடாக்குதல், உயிர்கள் உயிர்களைத் தின்று வாழுதல், கொடுமையென்னும் குன்றின் சிகரத்தினின்று சிதறும் குருதி வீழ்ச்சியின் பெருக்கு முதலியவற்றைச் சிறிது சிந்தியுங்கள். மடிபவர் எண்மதிக்கற்பாலதோ? என்னே இவர்தம் தயையும், அருளும் இருந்தவாறு? இவ்வுண்மை நிகழ்ச்சிகளினின்று நோக்குழி மதமென்பதுதான் என்னவாயிருத்தல் கூடும்?

மதமே உன் பெயர் பயமே!

பயமே தலைதூக்கி நிற்கிறது. பலியும் கொடுக்கிறது. பயமே ஆலயம் நிறுவி, மனிதர்தம் தலைவணங்கச் செய்கிறது. பயமே அன்புபோல் பாசாங்கு செய்கிறது. மதம் அடிமை நலங்களான கீழ்ப்படிதல், அடக்கம், தன்னை வெறுத்தல், துன்பங்களை மறத்தல், எதிர்க்காமை ஆன இவற்றை போதிக்கின்றது.


மதமும் பயமும் தூண்டுகின்ற உதடுகள், அவன் என்னைக் கொன்றாலும் நான் அவனை நம்புவேன் என்னும் வாக்கியத்தை உதடுகள் உச்சரிக்கின்றன. இதனினும் கீழாய பாதாளம் வேறு உண்டா? மதம் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும், மனிதத் தன்மையையும், வீரத்தையும், பாதுகாப்பையும் போதிப்ப தில்லை. மதம் கடவுளைத் தலைவனாக்கி, மனிதனை ஏவலாள் ஆக்குகின்றது. ஆனால், அடிமைத்தனத்தை இன்பமாக்குவதற்குப் போதிய ஆற்றலும், வன்மையும் படைத்தவராக எஜமானன் (கடவுள்) இருக்க முடியாது.

இத்தகைய ஒரு தெய்வம் உளதேல் அது நன்மை பயப்பது எனத் தெளிதல் கூடுமா? அது அருட்கண்ணுடையது என்றும், மனித வர்க்கத்தைப் பேணுவதென்றும் எப்படிக் காண்பிக்கக்கூடும்? இக்கடவுள் இருப்பாரேயாகில் கோடிக் கணக்கான மக்கள் நிலத்தைப் பயன்படுத்தி உழுது விதைத்துப் பயிரிடுவதையும்; தமது வாழ்க்கைக்கு எதிர்பார்க்கும் விளை வினையே ஆதாரமாக நம்பியிருப்பதையும் அறிந்தேயிருக்கிறார். எனினும் தேய தெய்வம் - இவ்வருட் கடவுள் வானத்தினின்று மழை இல்லையென்றால் மக்கள் பாழான நிலங்களைப் பார்த்து கருத்தழிவைக் கண்டும் வான மழை இல்லை யென்றால்! அவர்கள் மீதமாக வைத்திருந்ததைக் கொஞ்சம் கொஞ்சமாக உண்பதையும், பசிப் பிணியால் மெலிந்து போகும் நாள்கள் கிட்டியதையும், அவர்கள் சிறிது சிறிதாக நலிந்து போவதையும், அவர்களின் ஆளை விழுங்கும் குழிவிழுந்த கண்களையும் பார்க்கிறார். அவர்கள் தன்னைக் கூவி அழைத்துத் துதிப்பதையும் கேட்கிறார்! தங்களிடமிருந்த ஆடு, மாடு, கோழிகளை வதைத்துத் தின்றும் பின்னும் பசியின் கொடுமை தாக்க பைத்தியமுற்று, எலும்பும் தோலுமாயிருக்கும் குழந்தைகளைக்கூடக் கொன்று தின்னுவதையும் பார்க்கிறார். வானம் கொடிய வேலினைப் பிடித்த மாரனையொக்கும். வையகம் நெஞ்சு துடிக்கும் காமுகனையொக்கும். எனினும் வெதுப்பினை ஒழித்தும் தண்ணிய காதலையொக்கும் மழையை ஒளிந்து கொள்ளச் செய்தார். இத்தகைய தெய்வத் தின்பால் அருளென்னும் கனிவுறு நெஞ்சக மலர் பூக்குமோ? அவர் மனித வர்க்கத்தைக் காப்பதாகவும், அவரது அருள் அழியாது மிளிருவதாகவும் சொல்லுதற்கு இயலுமோ?

அவர் கிராமங்களை அழித்திடும் பெரும் கழற்காற்றுகளை அனுப்பி நிலப்பரப்புகளைத் தாய் தந்தையர் குழந்தைகளுடைய நைந்த தேகங்களால் நிரப்புவதைக் கொண்டோ அவரது நற்குணத்தை நாம் நிலைநாட்டுவது? எமலையின் நெருப்புக் குழம்புகள் ஆற்றுப் பெருக்கெடுத்துச் சுற்றியிருக்கும் நாட்டு நகரங்களை அழித்திடுதல் கண்டு நாம் அவரது மேன்மையைப் புகழ்வதா? இவ்வாறு நாமறிந்த காட்சிகளைக் கொண்டு நாம் அவரது நன்மையைத் தேர்ந்து தெளிவதா? இத்தகைய கொடுமைகள் நிகழாதிருப்பின் அவர் மக்களைக் காப்பதில்லை என்று நாம் சந்தேகப்படுவோமா? பஞ்சமும் நோயும் புயற்காற்றும் பூகம்பங்களும் இல்லையாயின் கடவுளின் அன்பைப் பற்றிய சந்தேகம் எழுமா? மதாச்சாரியர்கள், கடவுள் மக்களை எல்லாம் ஒன்றுபோல் படைக்கவில்லை என்பர். அவர் பல வகுப்புகளையும் உருவத்தாலும், நிறத்தாலும், அறிவாலும் வேறுவேறு வகைப்படப் படைத்தார். இதில் அவரது அன்பையும் ஞானத்தையும் காண முடியுமா?

இவர் தம்முன், உயரிய வர்க்கத்தினர் தம் நிலை கண்டு அகமகிழ்ந்து கடவுளை வாழ்த்துவதா? அப்படியாயின் ஏனையோர் தமது நிலை கண்டு இரங்கிக் கடவுளைப் பழிப்பதா? அன்றி விலங்கினும் தாம் உயர்ந்தவர் எனக் கண்டு தேறுவதா? கடவுள் இத்தகைய உயர்ச்சி தாழ்ச்சிகளை விளைவிக்குங் காலத்தில் அவருக்கு, வலியவர் மற்றவர்களை வருந்தச் செய்து அடிமைகளாக்கி இறுதியில் அழியச் செய்வர் என்பதை அறிவார். அப்படி அவர் செய்திருந்தால், சிந்தப் போகும் இரத்த வெள்ளத்தையும், பிணக்குவியல் நிறையப் போகும் நிலபரப்புகளையும், தம் பெயரால் மக்கள் எய்தவிருக்கும் இன்னல்கள் ஆயிரக் கணக்கானவற்றையும், இன்னும் எல்லையில்லாத தொல்லைகள் ஏராளமாக நிகழப்போவதையும் அறிந்திருந்தால் அவனும் கொடியதொரு பேயுமுளதோ? என்றாலும், ஏன் நாம் கடவுளை நல்லவரென்கிறோம்?

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து மடிந்ததும் நூலோர்கள் செக்கடியில் நொந்ததும், எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கக் கழுவேற்றப்பட்டதும், ஓயாத சவுக்கடியினால் தீராத துன்புறும் உடலோடு நம்பிக்கையிழந்த அடிமைகளின் கதறுதல்களும், தியாகிகளைப் பெருகுதீயின் புகையிலும், வெய்யிலிலுமிட்டு மாய்த்ததும், சான்றோர்களைக் குட்டையிலிட்டுத் துன்புறுத்தியதும் எண்ணற்ற வீரர் சுதந்திரம் நாடி கூற்றினுக்குயிர் கோடி கொடுத்தும் அதனைப் பெறாததும், அடிபட்டுக் குடும்பச் சுமை தாங்கும் அடிமை மனைவியர் அல்லலுறுவதும் தாய் முகங்காணாது தவித்திடும் இளங் குழந்தைகள் துக்கப்படுவதும், காற்றினும், மழையினும், கடலினும், ஆற்றினும், வெள்ளத்தினும், விடத்தினும், ஊற்றினும், பள்ளத்தினும், திடலினும், கூற்றுவன் கொள்ளையிடுலானும், மாற்றலர், கள்வர், இடி இவற்றானும் மக்கள் மடிந்ததும் ஆகிய இன்னோரன் பழமையிற்கண்ட பழிகளென்ன! இன்னும் வருகிற இன்னல்கள் எத்தனை! கொடிய காட்சிகளென்ன! இத்தனையும் நோக்கின் மனித வர்க்கத்தைக் காத்து அருளுகின்ற குணமும் திறனும் படைத்த ஒரு கடவுள் இல்லை என்பதையே காட்டுகின்றன வல்லவா?

பொதுவாக மக்கள் இயற்கைக்கு மாறான, அற்புதமான விஷயங்களையே விடாது பிடித்துக் கொள்ளுகிறார்கள். ஒரு கடவுளை ஒழித்தால் மற்றொரு தெய்வத்தை மனதில் கொள்ளுகிறார்கள். காளியும் மாரியுமில்லாதொழியின் பிள்ளையாரும், முருகனும் முன் வந்து நிற்கிறார்கள். இவர்களையும் தாண்டினால் சிவனையும், விஷ்ணுவையும் பிடித்துக் கொள்ளுகிறார்கள். இவற்றையும் விட்டால் அறங் காக்கும் ஒரு சக்தியைப் பற்றிப் பேசுகிறார்கள்.

இத்தகையதான் என்ன?

மனிதன் முன்னேற்றமடையவே செய்கிறான். ஆனால், எப்படி? தன்னுடைய அனுபவ முதிர்ச்சியினாலல்லவா? ஓரிடத்திற்குப் போக வேண்டிய ஒருவன், தெருவானது இரு கிளைகளாகப் பிரிகிற இடத்திற்கு வருகிறான்; சரியான பாதையென்ற நம்பிக்கையோடு இடதுபக்கம் போகின்றான். பின்னால் தப்பிதமென்று தெரிந்தவுடன் திரும்பவும் வந்து வலது பக்கமாய்ப் போய் குறித்த இடத்தைச் சேருகின்றான். அடுத்த தடவை போகும்பொழுது ஞாபகமாய் இடது பக்கப் பாதையில் போகாமல் வலது பக்கமாகவே போகின்றான்; ஏனெனில், தனது அனுபவத்தால் இடது பக்கம் சரியான பாதையல்லவென்று அவனுக்குத் தெரியும். ஆனால், இதையுணராச் சமயப் பித்தர்கள் உடனே மக்களைச் சரியான வழியிற் செலுத்தும் ஒரு பேராற்றல் இருப்பதாக அறைகூவுகின்றார்கள்.

சுடர் வீசி எரியும் நெருப்பின் அழகைக் காணும் ஒரு குழந்தை அதைப் பிடிக்கத் தனது கையை நீட்டுகின்றது. நெருப்பு கையைச் சுட்டுவிடவே வேதனைப்படுகின்றது. அதன் பிறகு தீயை அணுகுவதில்லை. உடனே சரியான வழியிற் செலுத்தும் ஒரு சக்தி அக்குழந்தைக்கு ஒரு பாடம் கற்பித்ததாகக் கருதப்படுகிறது. இவ்வுலக அனுபவத்தையெல்லாம் திரட்டினால் அது நம்மைச் சரியான வழியிற் செலுத்துவிக்கும் ஒரு சக்தியென்றே சொல்லலாம். இச்சக்திக்குத் தன் உணர்வேனும், புத்தியேனும், அறிவேனும் கிடையாது. இன்னும் அதற்கு என்று ஒரு நோக்கமேனும், தீர்மானிக்கும் புத்தியேனும் கிடையாது. அது நமக்குக் கிடைக்கும் ஒருவிதப் பயன். ஆனால், ஆயிரக்கணக்கானவர்கள் நமக்கு ஒழுக்க உணர்ச்சியிருக்கும் ஒரு தன்மையின் மூலம் கடவுள் இருக்கிறாரென்பதை நிலைநாட்ட முயற்சிக்கிறார்கள்.

மதாச்சாரியார்களும், இன்னும் தத்துவ சாஸ்திரிகள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் இந்த ஒழுக்க உணர்ச்சியென்பது - அறம் அல்லது கடமையை உணரும் மனப்பாங்கானது நமக்கு எங்கேயோ இருந்துகொணர்ந்து கொடுக்கப்பட்ட ஒரு சக்தியென்றும், நமது மனச்சாட்சி நமக்குப் புறம்பான அல்லது அன்னியமான ஒரு பொருளென்றும் வற்புறுத்துகின்றனர். அது தானாக இங்கே ஏற்படவில்லையாம். மனிதனால் உண்டாக்கப்படாமையால், அதை அமைத்திருக்கும் ஒரு கடவுள் உண்டெனக் கொள்கிறார்கள்.

மனிதன் சமூக உணர்ச்சியுடையவன். அவன் குடும்பங்களிலும் இனத்தாருள்ளும் சமூகத்திலும்தான் வாழ்கிறான். ஒரு குடும்பத்தை அல்லது இனத்தை அல்லது தேசத்தைச் சேர்ந்தவன் எவனாவது அக்குடும்பத்திற்கு அல்லது இனத்திற்கு அல்லது தேசத்திற்கு சந்தோஷத்தை அல்லது சுகத்தை அதிகப்பானாயின், அவன் நல்லவனாகக் கருதப்படுகிறான். அவனைக் கண்டு மற்றவர்கள் அதிசயிக்கிறார்கள். அவனை வாழ்த்துகிறார்கள். அவனை கவுரவம் செய்கிறார்கள். அவனை நல்லவனாக - அதாவது ஒழுக்கமுடையவனாகக் கருதுகிறார்கள். நமது குடும்பத்திற்கு அல்லது இனத்திற்கு அல்லது தேசத்திற்கு துயரமிழைப்பவர்கள் கெட்டவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களைக் குற்றஞ்சாட்டி அவமதித்து தண்டனை செய்கிறார்கள். அவர்கள் ஒழுக்கமில்லாதவர்களாக இகழப்படுகிறார்கள்.

குடும்பத்தாரும், இனத்தாரும், சமூகத்தாரும் ஒருவிதமான செயலை அல்லது ஒழுக்கத்தைப் பின்பற்றி நடக்க வேண்டிய முறைகளை விதிக்கிறார்கள். இதில் ஒரு விதமான அற்புதமுமில்லை. மனிதர்களுள் மேம்பட்டவரான ஒருவர் அன்பினின்று அற உணர்ச்சி (மனச்சான்று) பிறக்கிறது என்றார். கடமையைப் பற்றிய அல்லது அறத்தைப் பற்றிய உணர்ச்சி இயற்கையாக ஏற்பட்டதாகும்.

நாகரிகமில்லாதவர்களும், அரக்கர்களும் (Savages) தங்கள் செயல்களினால் உடனே விளையும் பயன்களை மட்டுமே கவனிக்கிறார்கள். மக்கள் முன்னேற்றமடையுங்காலத்தில் பின் வரப்போகும் பலாபலன்களையும் சிந்திக்கிறார்கள். ஒழுக்கத் திட்டங்களும் உயருகின்றன. மனிதன் தன்னுடைய மனோரதத்தை (Imagination) வளர்க்கிறான். தன்னுடைய சவுகரியங்களைப் போலவே பிறருடைய சவுகரியங்களையும் கருதுகிறான். அற உணர்ச்சி அதிகப்பலமடைகிறது. மனிதன் தன்னைத்தானே பரிசோதித்துத் தனது செயல்களைப் பற்றி தீர்மானிக்கிறான்.

அவன் அன்புடையவனாகிறான் - அன்பே முக்கியமானதும், தலைமையானது மாகும். ஒழுக்கங்களுக்கு எல்லாம் ஆரம்பமாகவும், அடிப்படையாகவும் இருக்கிறது. தனது அன்பிற்குப் பாத்திரமான ஒருவருக்குத் தீங்கு செய்கிறான். இதன் மூலம் அவனுக்கு மனக்கஷ்டமும் பச்சாதாபமும் துக்கமும் தோன்றுகின்றன. இவற்றிலெல்லாம் அற்புதம் என்ன இருக்கிறது?

மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளுகிறான். இயற்கையானது மனிதனுடைய சாயலையே திரும்பவும் காட்டும் ஒரு நிலைக் கண்ணாடியாக இருக்கிறது. இந்த நிலைக் கண்ணாடியினுள்ளே தெரிகிற ஒரு தோற்றத்தைப் பிடித்து விட்டதாகக் கொள்ளுகிற ஒரு போலிக் கொள்கையிலேயே இந்த அற்புதமான மதங்களெல்லாம் தொங்குகின்றன. சமய வழிப்படும் பிளோட்டோ (Plato) முதலான எல்லா வேதாந்திகளும் தங்களுக்கு வேண்டிய விஷயங்களைத் தாங்களே உண்டாக்கிக் கொள்ளுகிறார்கள். எல்லா மதஸ்தாபகர்களும் இவ்விதமே செய்திருக்கிறார்கள். எல்லாம் வல்ல இறைவன் ஒருவனிருக்கிறான் என வைத்துக்கொள்வோம். அவனுக்கு நாம் என்ன செய்யக்கூடும்?

அவர் யாவற்றையும் கடந்தவராதலின் அவர் எதினின்றும் பிறந்தவரென்றாவது, எவ்விதக் கட்டுப்பாடுகள் உடையவரென்றாவது சொல்வதற்கில்லை. எனவே, அவருக்கு நன்மையேனும், தீமையேனும் செய்ய முடியாது. அவருக்கு வேண்டுவதொன்றில்லை; அவர் எங்கும் நிறைந்தவர்; எல்லாமறிந்தவர். எனவே யாவற்றையும் கடந்து ஒரு கடவுள், தன்னுடைய புகழ்ச்சியை விரும்புகிறார் என்று நம்புகிற ஒரு மனிதன் அகங்காரத்தை என்னென்றுரைப்பது?

கிறித்தவர்கள் பிற மதங்களெல்லாம் பொய்யெனக் கூறிக் கொள்ளுகிறார்கள். எனவே இங்கு கிறித்துவ மதத்தை மட்டும் விவரமாகப் பேசுவோம். அப்படிப் பேசினால் மதம் என்ன செய்திருக்கிறது என்பது நன்கு விளங்கும். கிறிஸ்தவ மதம் நன்மை விளைவித்துள்ளதா? மனிதர்களை உயரிய குணமுடையவர்களாக, தயாள சிந்தனையுடையவர்களாக மேலும் மேலும் உண்மையானவர்களாகச் செய்திருக்கிறதா? கிறிஸ்தவ திருச்சபைகள் ஆதிக்கமுடைய காலங்களில் மனிதர் சுகமாகவும், மேன்மையாகவுமிருந்தார்களா?

இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கீசு, அயர்லாந்து முதலிய தேசங்களில் கிறித்து மதத்தால் விளைந்ததென்ன? இன்னும் இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் செய்த நலங்களென்ன? யதார்த்தத்தை விரும்புவோர், நெஞ்சின் மேல் கையை வைத்துக் கேட்போம். இம்மதமில்லாவிட்டால் இந்நாடுகள் கேடடைந்திருக்குமோ? கிறிஸ்து மதமின்றி வேறுமதம் பரவியிருந்தால் இந்நாடுகளுக்கு ஏதேனும் கேடு சூழ்ந்திருக்குமா? இன்னும் பியூரிட்டன்ஸ் என்று சொல்லப்படும் வீர, வைதீகக் கிறித்துவப் பகுதியாரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு கிறிஸ்து மதம் செய்ததென்ன? அவர்கள் இன்பத்தை வெறுத்தனர். அவர்கள் வாழ்க்கையின் வாசலில் இறப்பெனும் கருந்திரையைத் தொங்க விடுகிறார்கள். சந்தோஷ முழக்கங்கள் எழாதவாறு வாயைப் பொத்தி மூடி விடுகிறார்கள். அவர்களுக்கு ஆண்டு முழுவதும் துக்கம்தான். பாலியமும், இளமையும், குழந்தைகளின் மழலையும், காலைச் சங்கீதமும், உலகினின்று ஒழியும்படியாக அவர்கள் உழைத்தார்கள். இத்தகைய வீர வைதீகக் கிறிஸ்தவர்களின் மதம் ஓர் கலப்பற்ற துன்பக் களஞ்சியமாகும். அவர்கள் தங்கள் வேதாகமத்தை வேத வாக்காகக் கொண்டனர். இக்கொள்கை அவர்களைக் கொடியவர்களாகவும், இழிதன்மையாளர்களாகவுமே மாற்றியது. அவர்கள் வட அமெரிக்க இந்தியர்களது மதத்தைத் தழுவி இருப்பினும் கூட இதனினும் கேடான நிலைமையிலிருக்க மாட்டார்கள்.


உங்களின் வேதத்தைப் பற்றிய கொள்கை மக்களிடத்து எத்தகைய பலனைத் தந்தது என்பதற்கு ஓர் சான்று தருகிறேன். எலிசபெத் என்ற ராணிக்கு முடிசூட்டிய திருநாளில் காலம் என்பதற்குப் பிரதிநிதியாகத் தோன்றிய ஒரு கிழவன் சத்தியமென்ற ஒரு குழந்தை தன் பக்கம் நிற்க ஒரு வேதப் புத்தகத்தை அம் மகாராணிக்குப் பரிசாகக் கொடுத்தான். அம்மகாராணியும் உடனே அதைப் பணிவோடு வாங்கித் தனது கண்களில் ஒற்றி அதைக் கவனமாக வாசிப்பதாக வாக்களித்தாள். அவ்வேதத்தை உரிமையாக்கும் பாகத்தில் போப் கட்சியைச் சேர்ந்தவர்களையெல்லாம் தலையை வாங்கிவிடும்படியாக அம்மகாராணி வேண்டிக் கொள்ளப்பட்டாள். இந்தச் சம்பவத்திலிருந்து போப் கட்சிக்கு எதிராக வேதத்தை மதிக்கும் புனிதர்களுடைய உண்மையான மனப்பாங்கை அறிந்து கொள்ளலாம். அது தங்களுக்கு எதிர்க் கட்சி யாருடைய மனப்போக்கைப் போலவே அவ்வளவு கேவலமானதாயும், கொடூரமானதாயுமிருந்திருக்கிறது.

அமெரிக்காவில் ஜியார்ஜியா பகுதியில் உள்ள மக்களை அன்பும், தயாளமும் உடைவர்களாகச் செய்திருக்கிறதா? மனிதர்களை உயிரோடு தோலையுரித்து வதை செய்பவர்கள் கல்லாலும், மரத்தாலுமாகிய தெய்வங்களைக் கும்பிட்டாலும்கூட இதனினும் கொடூரமானவர்களாகி விடுவார்களா? மதமின்றி மக்கள் முன்னேற்றமடைய முடியாதா? மதத்தைக் கட்டி அழுதாய் விட்டது. மதத்தைப் பரிசோதனை செய்தாகிவிட்டது. எந்த தேசத்திலும், எந்தக் காலத்திலும் அது தவறு செய்து விட்டது. அதனால் எவ்வித உபயோகமுமில்லை. மதம் ஒருபொழுதும் மக்களை தயாள சிந்தையராக்கியதில்லை. மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டதையும், கழுவேற்றப்பட்டதையும் மறந்துவிடாதீர்கள். மதம் எப்பொழுதும் கலைகளுக்கும், விஷயப் பரிசீலனைகளுக்கும், அறிவிற்கும் விரோதியாகவே இருந்து வந்தது - வருகிறது.

மதம் மனிதனை எப்பொழுதும் விடுதலை செய்யவில்லை. அது ஒரு பொழுதும் மனிதனை ஒழுக்கமும், பரிபக்குவமும், சுறுசுறுப்பும், சக்தியும் உடையவனாகச் செய்வதில்லை.

கிறித்துவர்கள் - நாகரிகமற்று நாட்டு மனிதர்களைப் பார்க்கிலும் பரிபக்குவமுடையவர்களென்றாவது தூய சிந்தையரென்றாவது, உண்மையானவரென்றாவது சொல்ல முடியுமா? காட்டு மக்களிடத்துக் காணப்படும் தீய குணங்களுக்கும், மனிதர்களிடத்துக் காணப்படும் தீய குணங்களுக்கும், கொடுமைகளுக்கும் அவர்களது மூட நம்பிக்கைகளே காரணமல்லவா? இயற்கையில் முழு அய்க்கிய ஒழுங்கில் நம்பிக்கையுடையவர்களுக்கு மதம் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். உலகப் பொருள்களின் இயற்கையையும், குணங்களையும் நமது வழிபாடு மூலம் மாற்ற முடியுமா? நமது வேண்டுகோளின் பிரகாரம் கடலில் வெள்ளிய அலைகளைக் கூட்டவேனும் குறைக்கவேனும் முடியுமா? தியாகத்தால் காற்றுகளை மாற்ற முடியுமா? மண்டியிட்டு வணங்கினால் செல்வம் கிட்டுமா? தெய்வத்தினிடம் முறையிடுவதால் வியாதி குறையுமா? சடங்குகள் செய்வதால் நமது அறிவு வளருமா? ஒழுக்கமும் விழுப்பமும் பிச்சையாகப் பெற முடியுமா? மானசீக உலகத்தில் தோன்றும் உண்மைகள்கூட உலகத்தில் தோன்றும் உண்மைகளைப் போல இணங்காதவைகளாகவும் கட்டாயமானதாகவும் இருக்கவில்லையா? இயற்கையை ஆளும் ஒரு கர்த்தா இருக்க வேண்டுமென்றும், இக்கர்த்தா வழிபாடுகளுக்கு மனிமிரங்குகிறாரென்றும், வெகுமதியும் தண்டனையும் செய்கிறாரென்றும், இவர் வாழ்த்துதலையும், புகழ்ச்சியையும் விரும்புகிறாரென்றும், வீரமுள்ளவர்களையும் சுதந்திரமுள்ளவர்களையும் புறக்கணிக்கிறாரென்றும் எண்ணுகிறார்கள். இவ்வெண்ணத்தின் பேரிலேயே மதம் அமைந்திருக்கிறது.

மனிதனுக்குத் தெய்வலோகத்திலிருந்து கிடைத்த உதவி என்ன?

நாம் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றித் துணிவு செய்யுமுன் அதற்கு அடிப்படையாக உண்மைகளிருக்கின்றனவா என்று தெளிதல் வேண்டும். கட்டடத்திற்கு ஆதாரம் வேண்டுமா? நமது நிதானங்களைக் கொண்டும், பிரமைகளைக் கொண்டும், அனுமானங்களைக் கொண்டும் ஒரு கொள்கையை நிலை நாட்ட முடியுமா? கட்டடம் கட்டுவதாயின் அடியிலிருந்தல்லவா கட்ட வேண்டும்.

விசாரணையின்பேரில் எனக்கு ஒரு துணிவேற்பட்டிருக்கிறது. அதற்கும் நான்கு விஷயங்கள் அடிப்படை துலாவதாக பொருள், அல்லது பதார்த்தம். இது அழியாத வஸ்து. இரண்டாவது ஆற்றல், இதுவும் அழியாதது. மூன்றாவதாக, பொருளும் சக்தியும் இது இதென்று பிரிக்க முடியாதன சக்தியற்ற பொருளும் - பொருளற்ற சக்தியும் கிடையாது; நாலாவதாக, அழியாத தன்மையுடையனவற்றை ஒருவரால் ஆக்கப்பட்டனவாகக் கூறுதல் பொருந்தா வழக்காம்; அழிக்க முடியாததை ஆக்கவும் முடியாது.

இம்மூலக் கருத்துக்கள் உண்மையானால் பொருளும், சக்தியும் ஆதிமுதல் அந்தம் வரை இருக்குமென்பதும், அவற்றைக் கூட்டவோ குறைக்கவோ முடியாதென்பதும் தெளிவாய் நமக்குக் கிடைக்கின்றது. இதனின்று ஒன்றும் உண்டாக்கப்படவில்லை; ஒன்றையும் உண்டாக்கவும் முடியாது. ஆக்கியோன் ஒருவனுமில்லை; இருக்கவும் முடியாது என்பன விளங்கும். இவ்வடிப்படைக் கொள்கைகள் உண்மையானால் இயற்கைக்கு ஒரு எஜமானும் கிடையாது. பிறப்பு, இறப்பு அற்றதும், என்றும் பிரிக்கொணாததுமாக, பொருள், சக்தி என்பவைகள் இருக்குமாகில், ஒரு கடவுளுமிருக்க முடியாதென்பதும், ஒரு கடவுளும் இப்பிரபஞ்சத்தைப் படைத்து ஆளவில்லையென்பதும், பிரார்த்தனைகளுக்கு வரங்கொடுக்கும் கடவுள் கிடையாதென்பதும், ஒடுக்கப்பட்டவர்க்கு உதவும் ஒரு தெய்வமில்லையென்பதும், மாசற்றார் மனக்குறைகளுக்கும், வருத்தங்களுக்கும் இரங்கும் ஒரு கடவுளில்லையென்பதும், அடிபட்டுச் சாகும் அடிமைகள் விடுதலையையும், குழந்தையைப் பறி கொடுத்த தாயையும், சித்திரவதைப்படுவோர் துயரைத் தீர்ப்பதையும், தீச்சுடரில் எரிக்கப்படும் வைராக்கிய வீரனது விடுதலையையும், கவனிக்கக்கூடிய ஒரு கடவுள் இல்லையென்பதும் தானாகவே விளங்கும். அதாவது மனிதனுக்குத் தெய்வ சகாயமொன்றுமில்லை.

பெரும் பெரும் வேள்விகளும், யாகங்களும், தியாகங்களும் விழலுக்கிறைத்த நீரேயாகும். பிரார்த்தனைகளெல்லாம் கேட்பாரற்ற பாலைவனக் காற்றினிடையே செத்தொழிந்தன. நான் எல்லாம் தெரிந்ததாகப் பாவனை பேசவில்லை. எனக்குத் தெரிந்ததையே பேசுகிறேன். பொருளும் சக்தியும் என்றுமழியாது நிலவுவதனால் நடக்கக் கூடியனவெல்லாம் நடந்தன - இன்னும் நடக்கின்றன. பின்னாலும் நடந்தே தீரும் என்று எளிதில் உணரலாம். இப்பிரபஞ்சத்தில் தலைவிதியென்ற வீண் சாபல்யமொன்றும் கிடையாது. ஒவ்வொரு காரியத்திற்கும், நிகழ்ச்சிக்கும் காரணமுண்டு. நிகழாதன நிகழ்ந்திருக்க முடியாது. நிகழ்காலம் சென்ற காலத்தின் கர்மவிளைவாயும் வருங்காலத்தின் காரணமாகவும் இருக்கிறது. இத்தகைய முடிவற்ற நெடிய காலச் சக்கரமென்னும் சங்கிலித் தொடர்ச்சியில் காணாமற் போன, அல்லது ஒடிந்துபோன ஒரு வளையமாவது கிடையாது.

ஒவ்வொரு விண்மீனின் உருவமும் அசைவும் ஒவ்வொரு உலகத்தின் தட்பவெப்பமும், அசைவும் ஒவ்வொரு உலகத்தின் சீதோஷ்ணமும், கந்த மூலாதிகள் முதற்கொண்டு சகலவிதமான உயிர்களின் தோற்றமும், உருவமும் எல்லாப் பிறவிக் குணங்களும், புத்தியும், மனச்சாட்சி உண்டெனக் கூறுவதும், மறுப்பதுவும், சகல தூயக் குணங்களும், தீய குணங்களும் எல்லாவிதமான கனவுகளும், நினைவுகளும் நம்பிக்கைத் துரோகங்களும் காரணங் கொண்டு அவசியமாக ஏற்பட்டவையேயாகும். இப் பிரபஞ்சத்தில் ஏற்பட்டுள்ள எண்ண முடியாத பொருள்களிலேனும் அவற்றின் சம்பந்தங்களிலேனும் எதுவும் வேறுவிதமாக இருந்திருக்க முடியாது.

பெரும் சக்தி பிறப்பற்று என்றும் நிலைத்திருக்குமானால், மனிதன் ஒரு தனித்த விசேஷமான படைக்கப்பட்டப் பொருளில்லையென்றும், அவனை ஒரு கூரிய அறிவு படைத்த கடவுள் படைக்கவில்லையென்றும், நாம் சொல்லலாம். கடவுள் களிமண்ணைக் கலந்து ஆண் - பெண் உருவாக்கி உயிர் மூச்சினை அதனுள் ஊதிவிடவில்லை என்று நமக்கு இப்போது தெரியும். நமது முற்பிதாக்கள் வேறு உலகத்தாரல்லவென்று இப்பொழுது அறிவோம். அவர் இவ்வுலகிலேயே தோன்றி வளர்ந்தவரென அறிகிறோம். நமக்கு ஏதாவது தெரியுமானால் இந்தப் பிரபஞ்சம் இயற்கையானதென்றும், அதிலுள்ள ஆண்களும் - பெண்களும் இயற்கையாகவே பிறந்திருக்கிறார்களென்றும் தெரியும். நமது முன்னோர்களைத் தெரியும். அவர்களது சந்ததி வரலாறுகளையுமறிவோம். இவ்வுலக வளர்ச்சியில் ஆதிமுதற்தொட்டு மனிதன் வரையுண்டான சங்கிலியின் தொடுப்புகள் முழுமையும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. கடவுள் ஆவேசத்தினால் எழுதப்பட்ட வேத புத்தகங்கள் மூலம் நமக்கு இவ்விஷயங்கள் கிடைக்கவில்லை. உலகத்தில் கிடைக்கும் உண்மைகளைக் கண்டும், உயிர்களின் உருவங்களைக் கொண்டுமே இச்செய்திகள் உறுதி செய்யப்படுகின்றன.

மிகச் சாதாரணமான பிராணிகளிலிருந்து இன்னதெனக் குறிக்கமுடியாத ஒரு தேவையிலிருந்து குருட்டுத்தனமான உணர்ச்சியிலிருந்து இவ்விதமாகப் பெருகி வளர்ந்து கொண்டே வந்து உருவங்களிலும் வகைகளிலுமிருந்தே கடைசியாக மனிதன் தோன்றுகிறான். வாழ்க்கையென்னும் தேர் ஓடிய தெருக்களெல்லாம் நமக்குத் தெரியும். முன்னேறுமாறு எடுத்து வைத்த காலடிகள் நமக்குத் தெரியும். அவைகளைத் தேடி எடுத்து விட்டோம். இதற்கு நாம் எர்னஸ்ட்டு ஹெக்கல் என்ற சிறந்த உயிர் நூல் புலவருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இப்பொழுது நாம் இப் பிரபஞ்சத்தின் இயற்கையை நம்பி அதில் ஒரு விளக்க முடியாத அற்புதத் தெய்வீகத் தன்மை இருப்பதை மறுக்கிறோம்.

சீர்திருத்தம்

உலகத்தைச் சீர்திருத்தும்படியாக ஆயிரக்கணக்கான வருஷங்களாக மக்கள் முயன்று வருகிறார்கள். மக்கள் தெய்வங்களையும், தேவதைகளையும், பிசாசுகளையும், பூதங்களையும், சுவர்க்கங்களையும், நரகங்களையும் உண்டு பண்ணினார்கள். வேத சாத்திரங்களை எழுதினார்கள். அற்புதங்களைச் செய்தார்கள். தேவாலயங்களையும் காலக் கிரகங்களையும் நிறுவினார்கள். அரசர்களுக்கும் அரசிகளுக்கும் முடிசூட்டினார்கள். மகுடங்களைப் பிடுங்கினார்கள். சிறைகளிலடைக்கவும் சித்திரவதை செய்யவும் தோலையுரிக்கவும், உயிருடனெரிக்கவும் தலைப்பட்டார்கள். பிரார்த்தனைகளும், பிரசங்கங்களும் செய்தார்கள். பலவிதமாக வாக்களித்தும் பயமுறுத்தியும் பார்த்தார்கள். ஏமாற்றத்தாலும் இன்சொல்லாலும் வெல்ல நினைத்தார்கள். அறிவுரையும் போதனையும் செய்தார்கள். இம்மட்டோ! இன்னும் எத்தனை விதமாகவோ மக்களை உண்மையானவர்களாக்க - ஒழுங்கானவர்களாக்க - தொழில் தேர்ச்சியுடையவர்களாக்க - ஒழுக்கமுடையவர்களாக்க முயன்றார்கள். மருத்துவமனைகளையும், கல்லூரிகளையும் பெருக்கிக் கட்டினார்கள். மக்களை மென்மேலும் சுகமுடையவர்களாக்கவும், நல்லவர்களாக்கவும் செய்வதற்குத் தங்களால் ஆனதையெல்லாம் செய்தார்கள். என்றாலும் அவர்கள் முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை. விழலுக்கிறைத்த நீரேயாயின - ஏன்? இதற்கு நான் காட்டுகின்ற காரணமென்ன?

அறியாமையும், ஏழ்மையும் தீமையும் உலகத்தில் சூழ்ந்திருக்கின்றன. சாக்கடைகள், குழந்தைகள் வளருமிடமாக இருக்கின்றன. தங்களுக்கே ஆதரவற்று சாப்பாட்டிற்கில்லாத மக்கள் வீடுகளிலும், குடிசைகளிலும் வெளி இடங்களிலும் குழந்தைகளைப் பெற்று நிரப்புகின்றார்கள். அவர்கள் கடவுள் அருளையும் அதிர்ஷ்டவசத்தையும், தர்ம சிந்தனையையும் நம்புகிறார்கள். அவர்கள் செயல்களின் பலாபலன்களையும் தங்களது பொறுப்பையும் உணரத்தக்க புத்தியில்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பிள்ளைகளை விரும்பவில்லை. ஏன்? பிள்ளை, அவர்களுக்கும் அந்தப் பிள்ளைகளுக்குமே ஒரு பெருத்த சனியனாக இருக்கிறது. அது ஒரு பெருத்த பாரமாகையால் அதை விரும்பவில்லை. இத்தகைய தேடுவாரற்ற குழந்தைகள், சிறைகளையும் வைத்தியசாலைகளையும் நிரப்புவதுடன் தூக்கிற்கும் தங்கள் கழுத்தைக் கொடுக்கின்றன. ஒரு சில அசம்பாவிதமாக அதிர்ஷ்டத்தினாலோ அன்றி பிறர் தயவாலோ காப்பாற்றப்படுகின்றன. அவைகள் தீயக் குணங்களையும் கொடுமையையும் கைக் கொள்ளுகின்றன. அவைகள் பொய்ப் புரட்டுக்களாலும் கொள்கைகளினாலும் உயிர் வாழ்கின்றன.

தங்கள் தீய குணங்களைத் தங்களுடன் மட்டுமே வைத்துக்கொள்ளாது தங்கள் வாரிசுகளுக்கும் அளிக்கின்றன. இதனால் விளையும் தீங்குகள் அளவிடற்கரியதாய் மிளிர்கின்றன. இத்தகைய தீமை வெள்ளப் பெருக்கெடுத்து வருங்கால் அதற்கெதிரான சீர்திருத்தத் துறைகள் எம்மட்டு? தாட்சண்யமுங்கூட தன்னையறியாது கொலை - களவு குற்றங்களை அதிகரிக்கும் ஒரு கருவியாய் விடுகிறது. தவறுகளைச் செய்வது இயற்கைக்கு ஓர் அறிகுறி போன்று தோன்றுகிறது. ஏன்? இயற்கைக்கு புத்தியேனும் முன்கூட்டி அடைந்த நோக்கமெனும் இல்லாமையே ஆகும். இயற்கை யாதொருவிதமான நோக்கமுமில்லாமல் படைக்கவும் கருத்தில்லாமல் படைத்தவற்றைக் காக்கவும் எண்ணமின்றி இவற்றை அழிக்கவும் செய்கின்றது. மனிதனுக்குச் சிறிது அறிவிருக்கிறது. அவன் அதை உபயோகப்படுத்த வேண்டும். மனிதனை உயர்த்தக்கூடிய சக்தி அறிவொன்றேயாகும்.

அறிவீனர்களும், ஏழைகளும், கொடியவர்களும் குழந்தைகளைப் பெருக்கா வண்ணம் தடுக்க முடியுமா? என்பதே கேள்வி. அறியாமையும், கொடுமையும் ஆற்றுப் பெருக்கெடுத்து நாகரிகமெனும் ஊருணியைக் கெடுக்காம லிருக்கச் செய்ய முடியுமா? இவ்வுலகம் எப்பொழுதும் அறியாமைப் பேய்க்கு அடிமையாக இருக்க வேண்டுமா? பலா பலன்களை யாவரும் சிந்திக்கும்படி செய்யக்கூடிய அளவு நாகரிகம் உலகில் வளரும்படி செய்ய முடியுமா? பாரமாகவும் தொல்லையாகவும் கருதக்கூடிய தங்களால் பராமரிக்க முடியாத குழந்தைகளை ஏன் பெற வேண்டும்? அவர்களுக்குப் புத்தியையும் மனச்சாட்சியையும் நியாயத்தையும் விட பெண்ணாசை அதிகமாக இருப்பதினாலல்லவா? இவர்களைத் துண்டுப் பிரசுரங்களாலும் வீண் பேச்சுகளாலும் திருத்த முடியாது. இன்னும் உபதேசங்கள் மூலமாயும், கொள்கைகள் மூலமாயும் திருத்த முடியாது. ஆசை இப்பொழுதும், எப்பொழுதும் செவிடாகவே இருந்து வருகிறது.

இச்சீர்திருத்த வழிகள் பலன் தரா.

குற்றவாளிகள் நாடோடிகளும் பிச்சைக்காரர்களும் இன்னும் எண்ணற்ற குறைகளும் நாள்தோறும் பெருகிக் கொண்டே வருகின்றன. சிறைச்சாலைகளும் அன்னச் சந்திரங்களும் நிறைந்திருக்கின்றன. மதம் பயனற்றுத் தயங்கித் தவிக்கிறது. சட்டம் தண்டனை செய்யக்கூடுமே தவிர குற்றவாளிகளைச் சீர்திருத்தவாவது குற்றங்களைக் களையவாவது முடியாது. கொடுமையின் கடுமை உயிர்த்து வருகின்றது. இதற்கு விரோதமாகச் செய்கின்ற காரியங்கள், நள்ளிரவின் இருளைப் போக்க முயலும் மின்மினிப் பூச்சிகளின் செய்கைகளையே ஒத்திருக்கின்றன. ஆனால், நம்பிக்கை ஒன்றிருக்கிறது. அறியாமையும் ஏழ்மையும், தீமையும் உலகத்தை நிரப்புவது நின்றே தீர வேண்டும். ஒழுக்க ரீதியாய் போதிப்பதனால் இக் காரியம் கைகூடாது. மதத்தினாலாவது, சட்டத்தினாலாவது குருவினாலாவது மிருக பலம் அல்லது ஒழுக்க நியாயம் இவற்றின் வலிகொண்டாவது முடிக்க முடியாது. இதனைச் சாதிப்பதற்கு ஒரே ஒரு வழிதானுண்டு. கலைப் பெருக்கும், ஆராய்ச்சியும் வளர்ப்பதோடு மங்கையரை, தயை சுதந்திரமுடையவர்களாகவும் தமக்குத்தாமே அரசிகளாகவும் செய்ய வேண்டும்.

மனித குலத்தை கடைத்தேறச் செய்யக்கூடிய ஒரே பொருளான உண்மைகளை - மாதர்கள், தாய்களாக வேண்டுமா? வேண்டாமா? என்பதைத் தாமே தீர்மானிக்கும் சக்தியை அவர்களுக்கு அளிக்க வேண்டும். இதுவே சரியான வழி. இதுவே மாதர்களுக்கு விடுதலையளிக்கிறது. இவ்விதமாகப் பிறக்கிற குழந்தைகள் போற்றிப் பராமரிக்கப்படும். அவைகளை தாய்மார்கள் அள்ளி யெடுத்து மார்போடணைத்து உச்சி மோந்து வெள்ளமெனச் சுரக்கும் பால் தருவார்கள். அவைகள் வீட்டிலே மட்டற்ற மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் உண்டாக்கும்.

சுதந்திரமுடையவர்களைக் காட்டிலும் அடிமைகளே உண்மையும் சுத்தமும் உடையவர்களென்று எண்ணுகிறவர்களும், கல்வியறிவைவிட பயமே நம்பிக்கையான வழி காட்டியென நம்புகிறவர்களும், பிறர் ஆணைகளைத் தலை மேற்கொள்ளுகிறவர்களே நல்லவர்களெனக் கருதுபவர்களும், அறியாமையெனும் படுகுழியிலிருந்து நற்குணமெனும் அழகிய வாசனையுடைய மலர் தோன்றுவதாக நினைப்பவர்களும் அவர்களது கலவரமும் குழப்பமும் அடைந்த முகங்களைத் தமது கைகளால் மூடிக்கொள்ளட்டும்.

இன்னும் ஒழுக்கமெனும் உயரிய பொருளைத் தேடுவதற்கு அறிவெனும் கருவி பகையென்பவர்களும், அந்தகார இருளில் பரிசுத்தம் வகிப்பதாகக் கருதுகிறவர்களும், மனிதர்கள் தங்களைப் பற்றியும் தங்கள் வாழ்க்கையைப் பற்றியும் தெரிந்து கொள்ளுதல் தீமையெனக் கருதுகின்றவர்களும், ஆசையை அடக்கியாளும் ஒரு கருவியாக நாம் அறிவைக் குறிப்பதைக் கண்டு அலமலந்து பயப்படுவார்கள். ஆனால், நான் ஆண்களும் பெண்களும் தங்களுக்குள்ள பலாபலன்களை அறியும் சக்தியினாலும், அறிவினால் விளையும் ஒழுக்கத்தாலும் வியாதிகளையும் துக்கத்தையும் உலகத்தைவிட்டு ஓட்டக்கூடிய ஒரு காலத்தை எதிர்பார்க்கிறேன்.

அக்காலம் வரும்பொழுது சிறைச்சாலைகளின் மதில்கள் தகர்த்தெறியப்பட்டுவிடும்; காவற்கூடங்களில் வெளிச்சம் நிறுவப்பட்டு, நிரம்பவும் மக்களைத் தூக்கிலிடும் தொல்லையும் ஒழியும். ஏழ்மையும் தீய குணங்களும் சந்ததியற்றுப் போகும். மக்கள் பசிப்பிணியால் நைந்த - மெலிந்த கைகளைப் பிச்சைக்காக நீட்ட மாட்டார்கள். உலகம் முழுமையும் சுதந்திரமும் உன்னதமுமடையும்.


மதம் ஒருக்காலமும் மக்களைச் சீர்திருத்தாது. அடிமைத்தனமே மதம். பயமெனும் மதில்களையும் கோட்டைகளையும் உடைத்து சுதந்திரத்தோடு வருங்காலத்தை நேர்முகமாக எதிர்ப்பது அதனினும் எத்தனையோ மடங்கு மேலானதாகும். இன்னும் சில வேளைகளில் கவலையற்றுத் தன்னை மறந்திருப்பதும், வந்தனவற்றை ஏற்று அதற்கேற்ப நடத்தலும், கண்மூடித்தனமான உலக சக்தியில் மிதப்பதும், நினைவிலும் கனவிலும் காலத்தைக் கழிப்பதும், உயிர்களின் கட்டுப்பாடுகளையும் சங்கிலிகளையும் அறுப்பதும், நமது நோக்கத்தையும் முடிவையும் மறப்பதும், மனம் கட்டுகின்ற காட்சி மாளிகையில் உறங்குவதும், அனுபவித்த சுகங்களை நினைந்து நினைந்து மகிழ்வதும், வாழ்க்கையின் ஆரம்பத்தைத் திரும்பக் கொண்டு வருதலும், இறந்தவர்தம் உருவங்களையும் முகங்களையும் திரும்பக் காணுதலும், வரும் வருஷங்களில் விளைவிப்பதற்காக அழகிய படக் காட்சிகளைப் போன்ற மனோராச்சியங்கள் செய்வதும், தெய்வங்களையெல்லாம் இன்னும் அவற்றினுடைய வாக்குத் தத்தங்களையும் பயமுறுத்தல்களையும் மறப்பதும், வாழ்க்கை இன்பமான இரத்த ஓட்டத்தை உங்கள் நரம்புகளில் கண்டு உற்சாகப்படுவதும், போர் முரசுக்கேற்ப உங்களது பயமற்ற இருதயநாடி அழகாக அடிப்பதும் - இவையெல்லாம் மதமெனும் அடிமைத்தனத்தை விட எத்துணை மேலானது!

அப்பால் நல்லன யாவையும் நாடிச் செய்ய விரைதல், அறிவு பணித்த மனோரதத்தை எண்ணி துணிந்தியற்றுதல், அழகிய மனவெழுச்சிகளுக்கு இறக்கைகள் தந்து அவைகளைத் தேனீக்கள் போன்று கழிவுறு மலர்கள் என்னும் கடையான பொருள்களிடத்திருந்துங்கூட களிதரு அமிர்தம் போன்ற கலைகளைக் கொண்டுவரச் செய்தல், தைரியமான தேரிய கண்களால் உண்மைகளைக் காணுதல், முற்காலத்திற்கும் தற்காலத் திற்குமுள்ள நுண்ணிய தொடர்புகளைக் காணுதல், நொந்தார் சுமைகளை ஏற்றுத் தாங்குதல், அறிவை வளர்த்தல், நியாயத்தைப் பாதுகாத்தல், ஆன்மாவிற்கு ஒரு அழகிய அரண் கட்டுதல் ஆகிய இவையன்றோ உண்மை நெறி; இவற்றைச் செய்வதன்றோ உண்மையான வணக்கம்.



---------------------ராபர்ட் ஜி.இங்கர்சால் –நூல்:- ‘மதம் என்றால் என்ன?

0 comments: