Search This Blog

26.10.12

பிராமணாள் உணவு விடுதி பெயர் நீக்க போராட்ட வரலாறு


1957ஆம் ஆண்டில் சென்னை திருவல்லிக்கேணியில் முரளீஸ் கஃபே என்னும் பெயரில் உணவு விடுதியை நடத்தி வந்த பார்ப்பான் மட்டும் பிராமணாள் பெயரை நீக்க மறுத்தார்.

தந்தை பெரியார் அவர்கள் அறிவித்த பிராமணாள் பெயர் அழிப்புப் போராட்டத்தின்போது பல ஊர்களிலும் பார்ப்பனர்களே முன்வந்து அந்த வருணாசிரமப் பெயரை நீக்கி விட்டனர். நீக்காத ஊர்களில் திராவிடர் கழகத் தோழர்கள் அந்தப் பெயரை அழித்ததுண்டு.

திருவல்லிக்கேணி பார்ப்பனர் முரண்டு பிடித்த காரணத்தால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பிரச்சார நோக்கில், தொடர் போராட்டத்தை அறிவித்தார் தந்தை பெரியார். ஆறு மாதங்களுக்கு மேல் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் 1010 கருஞ்சட்டைத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கடைசியாக ஓட்டல் முதலாளி சரண் அடைந்த காரணத்தால் போராட்டம் கை விடப்பட்டது. பின்னர் அந்த உணவு விடுதிக்கு அய்டியல் கஃபே என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

சிறீரங்கத்திலும் மீண்டும் ஒரு முரளீஸ் கஃபே போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படும் என்று தெரிகிறது.

நீண்ட காலமாக நடைபெற்று வந்த அந்த உணவு விடுதியின் பெயரில் திடீரென்று இப்பொழுது பிராமணாள் திணிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? எந்தப் பின்னணியில் இது நடந்திருக்கிறது?

முதல் அமைச்சர் ஜெயலலிதா சிறீரங்கம் தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினர் - முதல் அமைச்சரே நமது இனத்தைச் சேர்ந்தவர் - பிராமணாள் என்று பெயர் சூட்டினால் யார், என்ன செய்ய முடியும்?  அதிகாரம் நம் கையில்தானே இருக்கிறது என்ற தைரியத்தில் இது நடக்குமானால் யாருக்குக் கெட்ட பெயர் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
ஆளும் கட்சியானபின் கூடுமானவரை பிரச்சினை உருவாகாமல் தொலைநோக்கோடு செயல்படுவது தான் புத்திசாலித்தனமாகும். மாறாக ஆளும் நிலையில் இருந்து கொண்டு பிரச்சினைக்குத் தூபம் போடுவது புத்திசாலித்தனம் ஆகாதே.

இதுகுறித்து வெளிப்படையாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விட்டும் முதல் அமைச்சர் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்காதது கெட்ட வாய்ப்பே!
மாறாக ஆளுங்கட்சியின் அதிகார பூர்வமான நாளேட்டில் பிராமணாளுக்கு வக்காலத்து வாங்கி எழுதியிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்து கிறது.

திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உரிய முறையில் அதற்குப் பரிகாரம் தேடப்படும் என்றாலும், ஆளும் அ.இ.அ.தி.மு.க.வின் இந்தப் போக்கு - அதன் பிற்போக்குத் தன்மையையும், பெரியார் - அண்ணா என்கிற தலைவர்களின் பெயர்களை உதட்டளவில் மட்டும் உச்சரிக்கக் கூடியவர் முதல் அமைச்சர் என்ற நிலையையும் தான் வெளிச்சத்துக்குக் கொண்டு வரும். முன்பு ஒருமுறை சட்டப் பேரவையிலேயே ஆம் நான் பாப்பாத்திதான்! என்று சொல்லப் போய் அதன் காரணமாகக் கடும் விமர்சனத்துக்கு ஆளானவர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இது பெரியார் பிறந்த மண்! - மேலும் இந்தப் பிரச்சினைக்கு எதிராக தந்தை பெரியார் அவர்களே போராட்டம் நடத்தியுள்ளார்  - நடத்தி வெற்றியும் பெற்றுள்ளார் என்று தெரிந்து கொண்ட பிறகும் கண்டும் காணாமல் இருப்பதோ, இந்தப் பிரச்சினையில் ஒரு பொதுக் கூட்டம் நடத்துவதற்குக்கூட அனுமதி மறுப்பதோ நடைபெறும் தமிழ்நாடு அரசின் சிந்தனைப் போக்கு எத்தகையது என்பதை எடுத்துக்காட்டுவதாகும்.

(அண்ணா) திராவிட முன்னேற்றக் கழகம் என்பதற்குப் பதிலாக அக்கிரகார முன்னேற்றக் கழகம் என்று சாதாரண பொது மக்கள் மத்தியில் பரவலாகப் பேசும் ஒரு நிலையைத்தான் இது ஏற்படுத்தும். அந்நிலை ஆட்சிக்கு நல்லது தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல; பிரச்சாரம், போராட்டம் என்ற இரண்டையும் அணுகு முறையாகக் கொண்ட சமூகப் புரட்சி இயக்கமாகும்.

இந்தப் பிரச்சினையில் திராவிடர் கழகம் ஒரு பக்கம் பிரச்சாரம் மற்றொரு பக்கம் போராட்டம் என்று தொடங்க ஆரம்பித்தால் அந்த நிலைக்குத் தமிழ்நாட்டு மக்களின் பெருத்த ஆதரவு கிட்டும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை. வீணாக அரசுக்குக் கெட்ட பெயர் ஈட்ட வேண்டாம்!

                   -------------------------"விடுதலை” தலையங்கம் 25-10-2012

11 comments:

தமிழ் ஓவியா said...


பார்ப்பன சனாதனத்தை நிரந்தரமாக கட்டிக் காக்க பெங்களூரு அருகில் நவீன அக்ரகாரம்


பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்களா?

இதோ, பார்ப்பன சனாதனத்தை நிரந்தரமாக

கட்டிக் காக்க பெங்களூரு அருகில் நவீன அக்ரகாரம்

1800 வீடுகள் அனைத்தும் பார்ப்பனர்களுக்கே!

பெங்களூரு அக்.25- பார்ப்பனர்கள் மட் டுமே குடியிருக்கும் - வேறு யாருக்கும் அனு மதியில்லாத நவீன அக்ர காரம் பெங்களூரு அரு கில் அமைய உள்ளது.

இங்கு பார்ப்பனர்களின் வேதகால சனா தன தர்மங்கள் முற்றி லும் பின்பற்றப்படுமாம்; காப்பாற்றப்படு மாம். 150 ஏக்கரில் உருவாகும் இந்த நவீன அக்ரகாரத்தில் பார்ப் பனர்களைத் தவிர வேறு யாருக்கும் மனைகள் விற்கப்பட மாட்டா என்ற அறிவிப் பையும் பச்சையாக வெளியிட்டுள்ளனர்.

உண்மையான வேதிக் கிராமத்தை உரு வாக்கிடவும், பல்வேறு சம்பிரதாயங்களைச் சேர்ந்த பிராமணர் களுக்குத் தகுந்த சூழ் நிலைகளைத் தோற்று வித்திடவும் திட்டமிடப் பட்டுள்ளது.

அமையப் போகும் அக்ரகார மனைகளின் முக்கிய நோக்கங்கள்

தற்கால இந்தி யாவில் பிராமண அக்ர கார சம்பிரதாயங்கள் முழுமையாக மறைந்து விட்டன. அவற்றை மீண்டும் புதுப்பித்து நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.

பல்வேறு சம் பிரதாயங்களைச் சேர்ந் தவர்களுக்கு, அவர்கள் எந்த ஆச்சாரங்களையோ அல்லது குருக்களையோ பின்பற்றுபவர்களாக இருந்தாலும் தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறிட மேடை அமைத் துத் தர வேண்டும்.

தமிழ் ஓவியா said...

பிறரை நம்பி இராமல் தன் சொந்தக் காலில் நிற்றல், தொடர்ந்து மதச் சடங்குகளை நிறை வேற்றுதல், சனாதன தர் மத்தின் கொள்கையின் படி வாழ்தல்; ஆன்மீகம், வேதம் இவற்றின்படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளல்.

உடல் நலனைப் பேணிட மருத்துவமனை அமைத்தல்.

தர்ம ஸ்தாபனங்களை நிறுவுதல்

இந்த அறங்காவல் குழு சங்கர அக்ரகாரம் எனும் வேத கால கிரா மத்தை அமைக்க உள்ளது.

இந்த வேதகால கிராமம் பிராமண குலத்தினர்க்கென்றே அமைக்கப்படுகின்றது.

இந்த கிராமம், பெங் களூருவுக்குப் புறத்தே யுள்ள இடத்தில் அமைய இருக்கிறது.

இந்த அக்ரகார நக ரியத்தில் திட்டமிடப் பட்டுள்ள குடியிருப்பு மனைகள் பிராமண குலத்தைச் சேர்ந்தவர் களுக்கு மட்டுமே விற் பனை செய்யப்படும்.

இந்த வேதகால கிராமத்தில் வசிக்கப் போகும் பிராமணர்கள், எந்தப் பிரிவினராகவும், உட்பிரிவினராகவும், சம்பிரதாயத்தினராகவும், பழக்க வழக்கங்களைக் கொண்டவராகவும், எம் மொழிப் பேசுபவராக வும் இருக்கலாம்.

நகரியம் ((Township))

ஒன்றிணைக்கப் பட்ட சமூகம்

பரப்பளவு 150 ஏக்கர்

இதற்குள் கல்வி நிலையங்களின் பிரிவு, குடியிருப்புப் பிரிவு ஆகியன இருக்கும். ட பசுமைச் சூழ் நிலை மிளிர்ந்திடும்.

அமைதியான சூழ் நிலை நிலவிடும்.

கல்வி நிலையங் களின் பிரிவில் மதம், ஆன்மீகம், தர்மம், உடல் நலம், வேதப் பாட சாலைகள் ஆகியன அடங்கி இருக்கும்.

ஆலயங்கள் பிரிவில் சிறீ சங்கரமடம், திரு வைகுந்தம், சிறீ இராகவேந்திரா மடம், குரு பவனம், நிர்வாக அலுவலகம், மதக் குருக் களுக்கான இருப்பிட வசதிகள், பிரவசன மந் திரம், திறந்தவெளி அரங் கம், நிகழ்ச்சி மண்டபம் ஆகியன அடங்கி இருக் கும்.

முதியோர் இல் லங்கள் இதில் அடக்கம்.. இங்கு சனாதன தர்மம் பின்பற்றப்படும்.

இயற்கை மருத் துவம், ஆயர்வேத மருத் துவமனை ஆகியவை அமைக்கப்படும். ஒரு சிறந்த மருத்துவமனை யில் இருக்க வேண்டிய அனைத்துப் பிரிவுகளும் இருக்கும்.

மாற்று மருத் துவ முறைகளும் பின் பற்றப்படும். நல்லுணர் வுக்கான மருத்துவ முறை களும் இதில் அடக்கம்.

முதியோர் களுக்கு அவர்களின் குறைகள் நீங்கிட, போக்கிட உதவிகள் செய்யப்படும் அவர் களின் உடல் நலம், மன நலம் பேணப்படும்.
முதியவர்களுக்கென்று தனி மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.

இந்நகரியத்தில் மொத்தமாக 1800 குடியிருப்பு மனைகள் உருவாக்கப்படும்.

அதற் கான சாலைகள் வசதி, கழிவுநீர் நீக்க வசதி, மின் ஆற்றல் வசதி ஆகியன செய்துத் தரப்படும்.

அக்ரகார நகரியத் தில் உள்ள அனைத்து மனைகளும் பிராமணர் களுக்கு மட்டுமே விற்கப்படும். அவர்கள் எந்தப் பிரிவினராகவும், சம்பிரதாயங்களைச் சேர்ந்தவர்களாகவும், எம்மொழியினராகவும் இருக்கலாம். முதலில் வருபவர்களுக்கு முதல் உரிமை வழங்கப்படும்.

முதலில் 600 மனை களும், அடுத்து 1200 மனைகளும் விற்பனை செய்யப்படும்.

இதன் அங்கத்தினர் கள் எப்பாடுபட்டாவது சனாதன தர்மத்தை நிலை நிறுத்துபவர் களாக இருக்க வேண் டும். இனி வரப் போகின்ற பல தலைமுறையினருக் குப் பின்னரும் பெருமை யும் சேர்க்கப்படுவதாக அது விளங்கும்.

அய்தராபாத் நெடுஞ் சாலையில் இருந்து (என்.எச்.202) 4 கி.மீ. தொலைவில் இருக்கும் தேவனஹல்லி விமான நிலையத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் இருக் கும் சிக்பல்பூர் நகரத்தி லிருந்து 30கி.மீ. தொலை விலும், பாகேபல்லி நகரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும் இருக் கும்.

தாலுகா: பகே பல்லி

மாவட்டம்: சிக்பல்பூர்

பதிவு அலுவலகம்: குடிபண்டா 25-10-2012

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்தி - நம்பிக்கை - சீட்டுக் கிழிந்தது!



குடந்தையில் 11 அய்ம்பொன் கோயில் சிலைகள் கோவிந்தா!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே பெருமாள் கோவிலில் 11 அய்ம்பொன் சிலைகள் புதன்கிழமை திருட்டு போயின.

கும்பகோணம் அருகேயுள்ள பாபுராஜபுரம் ஊராட்சிக்குள்பட்ட புளியஞ்சேரி அக்ரஹாரத்தில் ருக்மணி சத்யபாமா சமேத வேணு கோபாலசுவாமி (பெருமாள்) கோவில் உள்ளது. தனியாருக்குச் சொந்த மான இந்தக் கோவிலை ஒரு பிரிவைச் சேர்ந்த பரம்பரையினர் மட்டும் வழிபட்டு வருகின்றனர்.

ஏறத்தாழ நூறு ஆண்டுகள் பழைமையான இந்தக் கோவிலில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அர்த்த மண்டபத்தின் தென்மேற்கு மூலையில் சுவரும், மண்டபமும் இடிந்து உள்ளே விழுந்தன.
இந்தக் கோவிலை திருப்பணி செய்ய அறங்காவலர்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அக்டோபர் 22-ஆம் தேதி கும்பகோணத்தைச் சேர்ந்த ரவிச்சந்திர குருக்கள் இந்தக் கோவிலில் பூஜை செய்து, பின்னர் பூட்டிவிட்டுச் சென்றார். செவ்வாய்க்கிழமை பகல் முழுவதும் மழை பெய்து கொண்டிருந்ததால், குருக்கள் கோவிலுக்கு வரவில்லை.

புதன்கிழமை காலை 10 மணிக்கு கோவிலுக்கு வந்த குருக்கள் அர்த்த மண்டபத்துக்கும் கருவறைக்கும் இடையே உள்ள கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பூட்டும் காணாமல் போனது தெரியவந்தது.

மேலும், கோவில் கதவு உடைக்கப் பட்டு, கருவறையில் இருந்த 5 ஆழ் வார்கள் சிலைகள், வேணுகோ பாலன், ருக்மணி, சத்யபாமா, கிருஷ் ணன், நரசிம்மன், ஆஞ்சநேயர் ஆகிய 11 சிலைகள் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் எனக் கூறப் படுகிறது.

காளஹஸ்தி கோவில் கோபுரம் கற்கள் இடிந்து விழுந்தன நகரி: காளஹஸ்தி சிவன் கோவி லில், விமான கோபுரத்திலிருந்து கற்கள் இடிந்து விழுந்தன.

சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி வாயுலிங் கேஸ்வர சுவாமி கோவிலில், ஞான பிரசூனாம்பிகை தாயார் சன்னதி விமான கோபுரத்தில், மூன்று கலசம் அமைந்து உள்ளது. இந்த கலசம் அருகே, கற்கள் திடீரென இடிந்து கீழே சரிந்தது. கடந்த நான்கு தினங்களாக காளஹஸ்தி பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் விமான கோபுரத்தின் மீது தண்ணீர் இறங்கியதால், கலசத்தின் அடிப்பகுதி சேதமடைந்து, கற்கள் இடிந்து விழுந்துள்ளன. அப்போது, பக்தர்கள் யாரும் அருகில் இல்லாத தால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை.

நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த பக்தர்கள், இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தாயார் சன்னதி விமான கோபுரத்தின் மீது உள்ள கலசங்கள் அருகே செடிகள் முளைத்துள்ளன. இதை அகற்றி, பராமரிக்க தவறியதால் கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. விமான கோபுரத்தை உடனடியாக பழுது பார்க்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என, கோவில் அதிகாரி தெரிவித்தார். கடந்த ஆண்டும், கோவில் முகத் துவார கோபுரத்தில் கலசம் ஒன்று சரிந்து விழுந்தது.

தமிழ் ஓவியா said...

அதற்கு முன்பு ராஜகோபுரமே தலைகுப்புறக் கவிழ்ந்ததே!

திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்தது

திருவாரூர்: திருவாரூர் தியாக ராஜர் கோயில் கமலாலய தெப்பக் குளத்தின் 66 அடி நீள சுவர் மழையால் இடிந்து விழுந்தது.

திருவாரூரில் தியாகராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான கமலாலயம் தெப்பக் குளம் பிரமாண்டமானது. தொடர்ந்து 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. கன மழையால் கமலாலய தெப்பக் குளத்தில், துர்காலயா சாலை வடக்கு பகுதியில் 66 அடி நீள சுற்றுச்சுவர் நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் திடீரென இடிந்து குளத்துக்குள் விழுந்தது. எப்போதும் பரபரப்பான துர்காலயா சாலையில் தெப்பக்குளத்தின் சுவர் இடிந்ததால் தடுப்பு வைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தெப்பக்குளத்தில் நடைபெற்று வந்த படகு போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தகவலறிந்த இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் ஆர்டிஓ, தாசில்தார், நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சாட்டையால் அடித்து பேய் விரட்டலாம்!

என்று ஒழியும் இந்த மூடப் பேய்?

நாமக்கல்: நாமக்கல் அருகே நடந்த, அச்சப்பன் கோவில் திரு விழாவில், பக்தர்களை சாட்டையால் அடித்து, பேய் விரட்டும், "வினோத' நிகழ்ச்சி நடந்து.

நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமத்தில், அச்சப்பன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில், ஆண்டுதோறும், ஆயுதபூஜைக்கு மறுநாளான விஜயதசமியன்று, திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதில், குரும்பா இன மக்கள் மட்டும் பங்கேற்பர். விழாவின், முக்கிய

நிகழ்ச்சியாக, பக்தர்களைச் சாட்டை யால் அடித்து பேய் விரட்டுதல், சேவை நடனம் உள்ளிட்டவை நடக் கும். இதில், திருமணமாகாத பெண்கள், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் மற்றும் துஷ்ட ஆவி பிடித்தோர் பங்கேற்பார்களாம். அவர்கள், தரையில் மண்டியிட்டபடி, கைகளை மேலே தூக்கியிருப்பர். கை தூக்கியுள்ள பக்தர்களை, அச்சப்பன் கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடம் தரித்த நபர், பிரம்மாண்ட சாட்டையைச் சுழற்றி, நடனமாடியபடி அடிப்பது வழக்கம்.

தமிழ் ஓவியா said...

அதன் மூலம், தங்களைப் பிடித்த துஷ்ட ஆவி உள்ளிட்டவை நீங்கும் என்பது, விழாவில் பங்கேற்கும் பக்தர் களின் நம்பிக்கையும் இந்தாண்டுக்கான, அச்சப்பன் கோவில் திருவிழா, விஜய தசமியான, நேற்று நடந்தது. சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குரும்பா இன மக்கள், கோவிலில் குவிந்தனர். மாலை, 3 மணியளவில், பிரசித்தி பெற்ற பேய் விரட்டுதல் நிகழ்ச்சி துவங்கியது. அதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் ஈர ஆடையுடன் வரிசையாக மண்டியிட்டு, கைகளை மேலே உயர்த்தியவாறு காத்திருந்தனர்.

கோவில் பூசாரி மற்றும் கோமாளி வேடம் தரித்த நபரும் மேள தாளம் முழங்க சாட்டையை சுழற்றியபடி வந்தனர். பின், கைகளை மேலே உயர்த்தி மண்டி யிட்டிருந்த பக்தர்களை சாட்டையை சுழற்றி அடித்தனர். ஒரே அடியில் சிலர் எழுந்து சென்றனர். ஒரு சில பக்தர்கள் இரண்டு, மூன்று அடிகளுக்கு பின் எழுந்து சென்றனர்.அச்சன் கோவில் திருவிழாவையொட்டி, 40-க்கும் மேற் பட்டோர் நேர்த்திக் கடனாக, தங்களது தலையில் தேங்காய் உடைத்துக் கொண்டனராம்.

உடலில் ரத்தம் பீறிட கத்திபோடும் விழாவாம்!

பொள்ளாச்சி: நவராத்திரியை ஒட்டி, பொள்ளாச்சி அருகே அம்மன் கோவிலில், உடலில், "கத்தி போடும்' நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டம், நெகமத்தில், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது.

இங்கு, நவராத்திரி விழா, அக்., 15இல் துவங்கியது. கடந்த, 19ஆம் தேதி மாலை, திருவிளக்கு வழிபாடும், நேற்று முன்தினம் இரவு, 8 மணிக்கு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையும் நடந்தது.

விஜயதசமி தினமான நேற்று காலை, 9 மணிக்கு, விநாயகர் கோவிலில் அலகு சேவை செய்து, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

அங்கிருந்து, சக்தி அழைத்து வரப்பட்டது; உடன், மாவிளக்கு மற்றும் முளைப்பாரி ஏந்தி பக்தர்கள் வந்தனர்.

இதன் பிறகு, பக்தர்கள், "கத்தி போடும்' நிகழ்ச்சி, காலை 11:30 மணியளவில் துவங்கியது. இதில் பங்கேற்றவர்கள், "வேசுக்கோ தீசுக்கோ' என்ற முழக்கமிட்டவாறு, இரு கத்திகளை கொண்டு கைகளை கீறிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியை சுற்றுவட்டார கிராம மக்கள் கண்டு களித்தனராம்.

துர்க்கா சிலை கரைப்பில் இளைஞர் சாவு

சென்னை: தசரா திருவிழா வையொட்டி சென்னையில் துர்க்கை அம்மன் சிலைகளை வைத்து வழி பாடு செய்தனர். வழிபாடு செய்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நேற்று மாலை கடலில் கரைத்த போது இளைஞர் ஒருவர் பெரும் அலையில் சிக்கி பரிதாபமாக இறந்துபோனார்.

விநாயகர் சதுர்த்தி திருவிழாவை யொட்டி, விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்து, பின்னர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்ததுபோல, தசரா திருவிழாவை யொட்டி சென்னையில் சவுகார்பேட்டை உள்பட பல்வேறு இடங்களில் 80 துர்க்கை அம்மன் சிலைகளை வைத்து வழிபாடு செய்தனர்.

வழிபாடு செய்த துர்க்கை அம்மன் சிலைகளை நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் மற்றும் நீலாங்கரை பல்கலைநகர் கடற்கரைப் பகுதிகளில் துர்க்கை அம்மன் சிலைகளை கடலில் கரைத்தனர். நீலாங்கரை பல்கலை. நகர் கடலில் சிலைகளைக் கரைத்தபோது, மணி கண்டன் (வயது 27) என்ற இளைஞர் கடலில் மூழ்கினார்.

அவரை மிகப் பெரிய அலை இழுத்துச் சென்றது. அவரோடு மேலும் ஒரு இளைஞரும் கடலில் மூழ்கி னார். ஆனால், அவரை அங்கிருந் தவர்கள் காப்பாற்றிவிட்டனர். இறந்த மணிகண்டன் கிழக்கு தாம் பரத்தை சேர்ந்தவர். திருமணமாகாதவர். சென்னை விமான நிலையத்தில் சரக்கு பொருட்களை ஏற்றி, இறக்கும் பிரிவில் ஊழியராக வேலை பார்த் தார். இவரது உடல் நேற்று இரவு அதே பகுதியில் கரை ஒதுங்கியது.

நீலாங்கரை காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத் தினார்கள்

தமிழ் ஓவியா said...


கல்வி வளர்ந்தது எப்பொழுது....


ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று பள்ளிகளில் சேர்ப்பது - நாக்கில் எழுதுவது என்று இருந்து வருகிறது. அப்பொழுதெல்லாம் கல்வி வளர்ந்ததா?

அப்பொழுதெல்லாம் சரஸ்வதி கல்வி அருள்பாலிக்காததுஏன்?

கடவுளை மறுத்த பெரியாரும், ஆட்சிக்கு வந்த காமராசரும் தானே கல்வி வளர்ச்சிக்குக் காரணமும் - காரியமும்?

இதற்குக்கூட பார்ப்பான் வந்துதான் நாக்கில் எழுத வேண்டுமா?

அதுவும் ஓம் என்ற அசிங்கமான, ஆபாசமான (ஆண் - பெண் உறவு) வார்த்தையையா எழுத வேண்டும்? 25-10-2012

தமிழ் ஓவியா said...


மகுடி இசையும் - பாம்புச் செவியும்

இசைக்கு கட்டுண்டுதான் பாம்பு படம் எடுத்து ஆடுகிறதா? இந்த கேள்வி நம்மில் சிலருக்கு இருக்காது. ஏனெனில் பதில் ஆம் என்பதில் நம்பிக்கை. எனக்கு சிறுவயது முதல் இருந்தது. குடவாசல் பாம்பாட்டி மகுடி கொண்டு வர மறந்து ஒரு முறை பாம்புக்கூடையின் மூடியை திறந்து அதைவைத்து ஆட்டியே பாம்பை படமெடுக்கச் செய்தது முதல். இதனால் சிறுவயதிலேயே எனக்கு இதற்கு தீர்வு தெரிந்து விட்டது என்று சொல்லமாட்டேன்.

இப்பொழுதும் ரேடியோவில் புன்னாகவராளி கேட்கையில் அப்படி இப்படி பார்த்துவிட்டு, காலை நாற்காலி மீது மடித்து வைத்துக்கொள்ளுவேன். சரி, அப்ப விடை என்ன? கட்டுரையினுள் செல்வோம்.

நம்மில் பலருக்கு மகுடி இசையை கேட்டுதான் பாம்பு படம் எடுக்கிறதா என்று சந்தேகம் இருக்கலாம். மகுடி இசை, புன்னாகவராளி என்று இருந்தாலும், இப்படி சந்தேகப்பட்டு வேறு விளக்கம் தேடுவதற்கு மற்றொரு காரணம் பாம்பிற்கு நமக்கு வெளிப்படையாக தெரிகிறாற்போல் காது கிடையாது. பின்னர் எப்படி அதுக்கு மகுடி இசையெல்லாம் கேக்கும்?

அதுதான் காது. நம்ம கண்ணுக்கு தெரியாது. ஆனா அதுக்கு கேட்கும். வேடிக்கை போதும். இதற்கு ஓக்காமின் ஷவரக்கத்தி தத்துவதீர்வின்படி வேறு எளிய விளக்கமும் கொடுக்கமுடியும். ஒருவேளை மகுடியை ஊதுவதால் இல் லாமல், அந்த சாக்கில் பாம்பாட்டி அப்படி இப்படி மகுடியை ஆட்டுவதை கண்ணால் பார்த்து பாம்பு ஆடுகிறதோ. ஒரு தற்காப்பிற்கு எதிரியை (மகுடியை) அப்படியே படம் எடுத்து பயம் காட்டுகிறது என்று வைத்துக்கொள்ளலாமே. அட ஆமா, குடவாசல் பாம்பாட்டி மூடியை ஆட்டியதும் இதுக்குதானா. சரியா வரமாதிரி தான் இருக்கு. சமீபத்திய ஆராய்ச்சி இவ்விஷயத்தில் என்ன சொல்கிறது?

மேலே சொன்ன அனைத்தையும் தூக்கியடிப்பது போல, பாம்பிற்கு செவி உண்டு என்கிறது. அமேரிக்க பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் லியோ வான் ஹெம்மன், பால் ஃப்ரெய்டெல் மற்றும் புரூஸ் யங் தங்கள் ஆராய்ச்சி முடிவில் இரை நகர்வதை பாம்பு தன் காதால் கேட்டுதான் துரத்திப் பிடிக்கிறது என்று ருசுவுடன் நிருபிக்கிறார்கள்.

பாம்பிற்கு வெளியே தெரிகிறாற்போல் காது மடல்தான் இல்லை. ஆனால் நம் உள்நாக்கு போல, அதற்கு உள்காது உண்டாம். இந்த உள்காதுடன் பாம்பின் தாடைக்கு எலும்புத் தொடர்பே இருக்கிறதாம்.

பாம்பின் தாடை நுண்ணியமாக அதிர்கையில், இந்த ஸ்டேப்ஸும் அதிரும். இந்த அதிர்ச்சியை அதன் மூளை கேட்கிறது. ஸ்டேப்ஸ் என்னும் எலும்பு நம் காதிலும் உண்டு (உடம்பிலேயே மிகச்சிறிய எலும்பு). நமக்கு அது காற்றின் அழுத்த மாற்றங்களை, அதிர்வுகளை உணர்கிறது (காது எப்படி இயங்குகிறது என்று வேறு தருணத்தில்).

பாம்பு நிலத்தில் ஊர்கையில் தூரத்தில் எலி ஓடினால் போதுமாம். அந்த நுண்ணிய அதிர்வுகளை கூட தாடை உணர்ந்து, தானும் ஆடி, தன்னுடன் ஸ்டேப்ஸையும் ஆட்டி, எலி யை மாட்டி விடும்.

மண் தரையாக இருந்தால் இன்னுமே உத்தமம். எலிமுதல் எது நகர்ந்தாலும் அது குளத்தில் கல் போட்டால் பரவுவது போல நொடிக்கு 50 மீட்டர் வேகத்தில் அதிர்வுகளை மண்ணில் பரப்பும் (இந்த வேகம் மாறுபடும், ஒப்பிட்டுகொள்ள காற்றில் ஒலி அலைகளின் வேகம் நொடிக்கு 330 மீட்டர்). அந்த அதிர்வுகளின் வீச்சு மிகவும் கம்மி; ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பாகம். ஆனாலும் அது பாம்பிற்கு கேட்குமாம். பாம்புச்செவி என்று சரியாகத்தான் சொன்னார்கள்.

மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சி முடிவுகளை பார்க்கையில், காது இருந்தாலும், ஊர்கையில் தான் பாம்பின் செவி நில அதிர்வுகளை உணர்கிறது என்று தெரிகிறது. தலையை நிலத்திலிருந்து தூக்கிவிட்டால், பாம்பிற்கு இந்த காது பயனற்று போய்விடுகிறது. அதனால் காற்றில் வரும் மகுடி இசையை அதனால் கேட்கமுடியாது என்று கருதலாம்.

பாம்பாட்டியும் அப்படி உட்கார்ந்து கொண்டு முதலில் காலால் தரையை தட்டி ஊறும் பாம்பின் காதில் விழுவார். சரேல் என்று நிமிர்ந்து பார்க்கையில் மகுடி ஊதி, ஆட்டுவார். பாம்பு படமெடுத்து தொடரும்.

அது படமெடுப்பது, தான் கண்ணால் கண்ட எதிரியை (மகுடியோ, மூடியோ, நாமோ) தற்காப்பிற்காக பயமுறுத்தி தன்னை நெருங்கவிடாமல் செய்வதற்கு. ஆகையால், கட்டுரையின் முதலில் நாம் ஊகித்த காரணம் சரிதான் என்று நினைக்கத்தோன்றுகிறது.

தமிழ் ஓவியா said...

யாத்திரை

இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர் களே அள்ளும் அவலம் ஒரு சில இடங்களில் நீடிக்கிறது. அதை முற்றிலும் ஒழிக்கும் வகையில் விழிப்புணர்வு யாத்திரை தொடங்கப்படும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நல்ல நோக்கம் தான் - வரவேற்கத்தக்கது தான். மத்திய அமைச்சராக இருக்கக் கூடியவர் இதனை அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள செய்யக் கூடாதா?

அடுத்த பிரதமராக வரத்துடிக்கிற குஜராத் முதல் அமைச்சர் நரேந்திடி மோடியோ இப்படி மலம் அள்ளுவது கர்மயோக் தெய்வப்பணி என்று திருவாய் மலர்ந்தருளியதையும். இந்நேரத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும். 65 ஆண்டு சுதந்திரத்தில் ஒரு மனிதன் மலத்தை இன்னொருவன் சுமப்பது என்ற நிலை நீடிப்பது ஆரோக்கியம்தானா?

அய்ந்து நட்சத்திரக் கலாச்சாரம் ஒரு பக்கம் - மனிதன் மலத்தைச் சுமப்பது, கையால் அள்ளுவது இன்னொரு புறமா? ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் (?) என்று.

தமிழ் ஓவியா said...

உண்டியல்

திருமலை ஏழுமலையானின் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் 9 நாள் உண்டியல் வருமானம் ரூ.12.9 கோடியாம்.

இந்தியா ஏழை நாடு என்கிறார்கள். நாள் ஒன்றுக்கு ரூ.20 வருமானம் உள்ளவர்கள் 77 விழுக்காடு என்கின்றனர். இப்படிப்பட்ட நாட்டில் ஒரு குத்துக் கல்லுக்காக மக்கள் பணத்தைக் கொட்டி அழுகிறார்கள் என்றால் - இதுபற்றி சிந்திக்க வேண்டாமா? அறியாமையும், மூடத்தன மும்தான் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முதல் எதிரிகள் என்பது இதன் மூலம் விளங்க வில்லையா?

சர்வவல்லவன், சர்வ வியாபி என்று கடவுளுக்கு இலக்கணம் சொல்லிவிட்டு, இப்படி கடவுளுக்கு உருவம் செய்து வைத்து பாமர மக்களின் உழைப்பால் கிடைக்கும் பணத்தை பகற் கொள் ளையடிப்பது நியாயம்தானா? பணக்காரர்கள் மட்டுமல்லர்; ஏழை பாழைகளும் கூட கடன் வாங்கியாவது திருப்பதி சென்று நேர்த்திக் கடன் கழிப்பதும், உண்டியலில் பணம் கொட்டுவதும் வாடிக்கைதானே?

கல் முதலாளியாகிய திருப்பதி கோயில் நகைகளில் ஊழல், லட்டு உற்பத்தியில் ஊழல், டாலர் ஊழல் என்று இன்னொரு பக்கத்தில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆந்திர மாநில உயர்நீதிமன்றமே நகைக் கணக்குகளை சரிபார்த்து அதன் விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கவில்லையா?

ஊழல் உற்பத்தியாகும் இடம் முதலில் கோயில் தான். நான் காணிக்கை தருகிறேன் - எனக்கு வரம் கொடு என்பது பேரம் - ஊழல் இல்லாமல் வேறு என்னவாம்?

தமிழ் ஓவியா said...

சபரிமலை

பக்தர்கள் வசதிக்காக சபரிமலைக்கு 400 சிறப்புப் பேருந்துகளை கேரள அரசு இயக்குகிறது.

சபரிமலை அய்யப்பன் என்பதே சுத்த பித்தலாட்டம். சாஸ்தா என்பது புத்தனுக்குள்ள பெயர். இந்தப் பெயரை உருட்டல் புரட்டல் செய்து புத்தர் சிலையை சபரிமலை அய்யப்பனாக மாற்றினார்கள்.

விநாயகர் என்பதும் புத்தருக்குப் பெயர். இந்தப் பெயரையும் உருட்டல் - புரட்டல் செய்து புத்தனை - விநாயகர் - பிள்ளையார் என்று பித்தலாட்டம் செய்து விட்டனர். (மயிலை சீனி வெங்கடசாமி அவர்களின் ஆய்வுப் பெட்டகமான பவுத்தமும் தமிழும் எனும் நூலைக் காண்க - விரிவான தகவல்கள் கிடைக்கும்).

சபரிமலையில் மகரஜோதி என்பதுதான் உச்சமானது. அது சுத்த பித்தலாட்டம் - மகர ஜோதியும் அல்ல - மண்ணாங்கட்டியும் அல்ல. அது மனிதனால் (கேரள மின்சார வாரிய ஊழியர் களால்) செயற்கையாகக் காட்டப்படுவது என்று உறுதிபடுத்தப்பட்டு, ஒப்புக் கொள்ளவும் பட்டுவிட்டது. தேவசம்போர்டும் ஆம் என்றது; அதன் அமைச்சரும் ஆமாம், ஆமாம் என்றார்.

மாநில முதல் அமைச்சராக இருந்த ஈ.கே.நாயனாரும் செயற்கையானதுதான் என்பது எங்களுக்கும் தெரியும் என்றார்.

இவ்வளவுக்குப் பிறகும் ஆண்டுதோறும் மகர ஜோதி பித்தலாட்டம் அங்கீகரிக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்படுகிறது என்றால், இது நாடு தானா? நம்பகத்தன்மை என்பதை மதத்தின் பெயரால், பக்தியின் பெயரால் காயடித்து குழியில் புதைத்துவிட்டனர் என்பதற்கு இந்த ஒன்றே ஒன்று போதாதா?

வெட்கம்! மகா வெட்கம்!!

தமிழ் ஓவியா said...


சுயமரியாதை அரிச்சுவடி!


1. அடுத்த ஜென்மம் என்பது - முடிச்சு மாறிகள் பேச்சு
2. ஆரியர் சூழ்ச்சி - அறிவு வீழ்ச்சி
3. இதிகாசம் என்பது - மதிமோச விளக்கம்
4. உண்மையைச் சொல்ல - ஒரு போதும் தயங்காதே.
5. ஊழ்வினை என்பது - ஊக்கத்தை கெடுப்பது.
6. கருமாந்திரம் என்பது - காசு பறிக்கும் தந்திரம்
7. கல்லை தெய்வமென்று - கற்பிக்க வேண்டாம்
8. கோத்திரமென்பது - குலத்தைப் பிரிப்பது
9. சனாதன தர்மம் என்பது - சண்டாள அதர்மம்
10. சாமி சாமி என்பது - காமிகளின் உளறல்
11. சூத்திரன் என்றால் - ஆத்திரங் கொண்டடி
12. திதி கொடுப்பது - நிதியைக் கெடுப்பது
13. தெய்வ வழிபாடு - தேச மக்களுக்கு கேடு
14. பல தெய்வ வணக்கம் - பட்டு வீழ்க
15. பார்ப்பனர்கள் என்பவர்கள் - பகற் கொள்ளைக்காரர்கள்
16. புராணங்கள் - பொய் களஞ்சியங்கள்
17. பேதமென்பது - வேதியருக் கணிகலம்
18. மகாபாரதம் - பஞ்சமா பாதகம்
19. மடத் தலைவர்கள் - மடைத் தலைவர்கள்
20. மதக்குறி என்பது - மடையர்க்கறிகுறி
21. முத்தி முத்தி என்று - புத்தியைக் கெடுக்காதே
22. விதி விதி என்பது - மதியைக் கெடுப்பது
23. வேதம் என்பது - சூதாய்ச் சொன்னது
24. ஜாதி வேறுபாடு - ஜன சமூகத்திற்குக் கேடு
25. க்ஷேத்திரமென்பது - சாத்திரப் புரட்டு


- குடிஅரசு 23.2.1930