Search This Blog

8.12.11

திருவண்ணாமலை திருக்கார்த்திகையின் தாத்பரியம் என்ன? சிந்திப்பீர், பக்தர்களே!

---

உற்பத்தி நாசம்!

திருவண்ணாமலையில் மகா தீபமாம். 3 ஆயிரம் கிலோ நெய், ஆயிரம் மீட்டர் காடா, 7 அடி உயரமுள்ள செப்புக் கொப்பரை சகிதமாக இந்தத் தீபம் ஏற்றப்படுகிறது திருவண்ணாமலையில்.

குழந்தை பாலுக்கு அழுகிறது - குழவிக் கல்லுக்குப் பாலாபிஷேகமா என்று கேட்டது - தந்தை பெரியார் அவர்களின் மனிதநேய இயக்கமான சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகம்.

மனிதன் படும் கஷ்டங்கள் அவன் செய்த பாவம் - தலை எழுத்து. ஆண்டவன் கட்டளை என்று சொல்லிவிட்டு, கல்லாக உள்ளதைக் கடவுளாக்கி உணவுப் பொருள்களைத் தீயில் கொட்டி நாசமாக்கும் நாசகார செயல் இந்த 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மதத்தின் பெயரால் அனுமதிக்கப்படுவது என்ன கேவலம்! படித்த மேதைகள் உலகத்தையே புரட்டி எழுதும் பத்திரிகையாளர்கள், ஊடகக்காரர்கள் இந்தக் கேவலத்தை, பச்சையான ஊதாரித்தனத்தை, உற்பத்தி நாசத்தைக் கண்டித்து எழுதுவதற்குத் துப்பில்லையே!

துப்பில்லை என்றாலும் பரவாயில்லை இந்தக் கேடு கெட்டதனத்துக்குச் சிறப்பிதழ்களையும், சிறப்புக் கட்டுரைகளையும், தலபுராணங்களையும் வரிந்து வரிந்து எழுதிக் குவிக்கின்றன என்றால் இவர்களைவிட மானுடத்தை வஞ்சிப்பவர்கள், காலில் போட்டு மிதிப்பவர்கள் யார்?

கடவுள்தான் மனிதனைப் படைத்தான் என்றால், அந்தக் கடவுள் தான் மனிதனைக் காக்க வேண்டும், கவனிக்க வேண்டுமே தவிர இந்த மனிதன் ஏன் சர்வ சக்தி வாய்ந்ததாகக் கூறப்படும் கடவுளைக் கவனிக்க வேண்டும் - சீராட்ட வேண்டும் - பாராட்ட வேண்டும். பக்தர்கள் காணிக்கை கொடுப்பது - பகவான் அருள் பாலிப்பது என்ற ஏற்பாடு பச்சையான வியாபாரம் தானே? இன்னொரு வகையில் சொல்லப் போனால் காணிக்கை என்னும் லஞ்சம் கொடுத்துக் கடவுளின் கருணையைப் பெறுகின்றனர் என்று எடுத்துக் கொள்ளலாம் அல்லவா! காணிக்கை கொடுப்பது என்னவோ உண்மை. கடவுள் கருணை பொழிகிறார் என்பது மட்டும் பொய்யே - அசல் பொய்யே - கடைந்தெடுத்த அக்மார்க் பொய்யே!

கடவுளுக்குச் சக்தியிருக்குமேயானால் மருத்துவமனைகள் ஏன்? காவல் நிலையங்கள் ஏன்? அரசாட்சிதான் ஏன், ஏன்? இவையெல்லாம் கடவுள் இல்லை என்பதற்கான ஏற்பாடுகள்தானே?

அதுவும் இந்த திருவண்ணாமலை தீபத்துக்குச் சொல்லப்படும் தலப்புராணக் கதை ஒழுக்கத்தைப் போதிக்கக் கூடியதுதானா?

பிர்மா பெரியவனா - விஷ்ணு பெரியவனா என்கிற தன் முனைப்புச் சண்டை கடவுளிடத்திலும் இப்படி. சிவன் என்ன செய்தான்? அப்படியே ஜோதியாக எழுந்து நின்று என் முடி, என் பாதம் இவற்றில் ஒன்றை முதலில் கண்டு வருகிறானோ அந்த ஆசாமிதான் சக்தி வாய்ந்தவன் என்று பரீட்சை வைத்தானாம். விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்துப் பூமியைத் துளைத்துக் கொண்டு சென்றானாம். பிர்மா கருடன் மேல் ஏறி முடியைக் காணப் புறப்பட்டானாம். கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகாயத்திலிருந்து தாழம்பூ ஒன்று வருவதைக் கண்ட பிர்மா, சிவன் முடியை நான் கண்டதாக சாட்சியம் கூறு என்று கேட்டுக் கொண்டானாம். தாழம்பூவும் சம்மதித்ததாம். ஆனால் அது பொய்யென்று சிவன் கண்டு பிடித்து விட்டானாம். அதிலிருந்தே பிர்மாவுக்குக் கோவில் கிடையாதாம் (ஆனாலும் ஓரிரு இடங்களில் இருக்கின்றன. அது என்ன கூத்தோ!) தாழம்பூவை கடவுள் பூசைக்குப் பயன்படுத்தத் தடையாம். திருவண்ணாமலை திருக்கார்த்திகையின் தாத்பரியம் இதுதானாம். சிவன் ஜோதியாக உருவெடுத்தான் அல்லவா - அதன் அடிப்படையில் தான் இந்தத் தீபமாம். ஆக கடவுள் அதுவும் படைத்த கடவுளான பிர்மா பொய் சொன்னதை நினைவூட்டும் திருவிழாவாம். இதுதான் கடவுள் யோக்கியதையா? பொய் சொல்லுவதற்கு ஒரு கடவுளா? இந்தக் கடவுள்களை நம்பும் பக்தர்கள் எப்படி யோக்கியர்களாக இருக்க முடியும்?

ஒரு கணம் சிந்திப்பீர், பக்தர்களே!

---------------------"விடுதலை” தலையங்கம் 8-12-2011

2 comments:

smart said...

பெரியார் பிறந்த நாளைக்கு ஏனையா மாலை எல்லாம் போட்டு மாலையை வீண்ணடிக்குறீங்க. போஸ்டரல்லாம் போட்டு காகிதத்தை வீண்ணடிக்குறீங்க ?

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: சிறீரங்கத்தில் அர்ச்சகப் பார்ப்பனர்களை பல்லக்கில் வைத்துத் தூக்கும், மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கை மீண்டும் தொடர்ந்தால், திராவிடர் கழகம் போராட்டத்தில் குதிக்கும்.

டவுட் தனபாலு: இப்படித்தான், கல் சிலையைக் கும்பிடுறவன் காட்டுமிராண்டின்னீங்க... ஈ.வெ.ரா., சிலையைக் கும்பிடறீங்க... கிருஷ்ண ஜெயந்தியை கிண்டல் பண்ணீங்க... அண்ணாதுரை நூற்றாண்டு விழா கொண்டாடுறீங்க... பல்லக்கு தூக்குற தைக் கண்டிக்கிறீங்க... தலைவர்களை சாரட் வண்டியில வச்சு ஓட்டுறீங்க... வாழ்க உங்க பகுத்தறிவு...!

- தினமலர், 7.12.2011

வழக்கம் போல வல்லடி வழக்கிலே ஈடுபட்டுள்ளது தினமலர்.

தலைவர்களுக்கு விழா எடுப்பதும், பார்ப்பானைப் பல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்லுவதும் ஒன்றா!

இந்தப் பால பாடம் கூடத் தெரியாத கூட்டத்துக்குப் பத்திரிகை ஒரு கேடா?

மனிதனை மனிதன் தூக்குவதை நியாயப்படுத்தும் காட்டுவிலங்காண்டிகள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு சூத்திரப் பூசாரியைப் பார்ப்பனர்கள் பல்லக்கில் வைத்துத் தூக்குவார்களா?

சிறீரங்கக் கோவில் பார்ப்பனர்களின் கால்கள் எல்லாம் முடமாகிப் போய்விட்டனவா? நடந்து சென்றால் கவுரவம் குறைந்து போய்விடுமா?

பெரியார் சிலையை யாரும் கும்பிடு வதில்லை, கும்பிடக்கூடாது என்பதற் குத்தான் கடவுள் இல்லை கடவுள் இல்லை! என்ற கல்வெட்டு அதில் இடம் பெற்றுள்ளது.

சிறீரங்க நாதன் கோவிலுக்கு எதிரிலும், காஞ்சி சங்கர மடத்துக்கு எதிரிலும் தந்தை பெரியார் சிலை இருக் கிறதே - ஆத்திரம் வராதா அய்யர் கூட்டத்துக்கு?

காலையில் எழுந்தவுடன் காஞ்சி சங்கராச்சாரியார் பெரியார் சிலையைச் சுற்றிவந்து கும்பிடுப் போடுவதாகக் கேள்வி - இப்படிப்பட்ட கூட்டத்துக்கு இனிமேல் இப்படித்தான் எழுத வேண்டும்.

பிறக்காத கடவுள்களுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுவதும், பிறந்து வளர்ந்து நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்யும் - செய்த தலைவருக்குப் பிறந்த நாள் கொண்டாடுவதும் ஒன்றல்ல.

பிறப்பு - இறப்பு அற்றவன் - உருவமற்றவன் கடவுள் என்று கத்திக் கொண்டு உருவம் ஏன்? கோவில் ஏன்? ஆண்டாண்டு திருக்கல்யாணம் ஏன்? போன வருடம் செய்து கொண்ட கல்யாணத்தை எவன் அடித்துக் கொண்டு போனான்? பதில் சொல் தினமலரே!

------------------"விடுதலை” 8-12-2011