Search This Blog

8.12.11

வீரமணி ஒரு விமர்சனம்

வீரமணி ஒரு விமர்சனம் புத்தகத் திறனாய்வு!

சிங்.குணசேகரன்
தலைமை செய்தியாளர்
விடுதலை.

பிரபல மூத்த எழுத்தாளர் சோலை அவர்கள் ஜனசக்தி, நவமணி, அலை ஓசை, மக்கள் செய்தி, அண்ணா என பல ஏடுகளிலும் ஆனந்த விகடன், ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட் டர், நக்கீரன் போன்ற இதழ்களிலும் எழுதிய ஆற்றலாளர்.

அவர் எழுதிய கட்டுரைகளோ பல்லாயிரம். எழுதிய நூல்களோ பலப்பல. அவர் அறிந்த நெருக்கமான தலைவர்களோ பெரியார், தோழர் ஜீவா, அண்ணா, காமராசர், கலைஞர், எம்.ஜி.ஆர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அத்துணை தலைவர்களிடமும் அன்பாகவும், நெருக்கமாகவும் பழகிய 60 ஆண்டுகால எழுத்தாளர். அவர் என்றுமே நாகரிகம் மறந்து எல்லைக்கோட்டைத் தாண்டி எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எழுதியதில்லை.

அப்படிப்பட்ட சிறந்த எழுத்தாளர் சோலை அவர்கள் வீரமணி ஒரு விமர்சனம் என்ற நூலை எழுத வில்லை-திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்க்கை வரலாற்றையே இந்த நூலில் எழுதி விட்டாரா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு புருவத்தை உயர்த்தி அதிசயித்துப் பார்க்கும் அளவுக்கு சோலை அவர்கள் அவ்வளவு வரலாற்றுச் சுவையான செய்திகளையும் மாலையாகத் தொடுக்கவில்லை. மலைத்துப் போகின்ற அளவுக்கு மலை, மலையாக எழுதி குவித்துத் தள்ளியிருக்கின்றார் தனது அன்பால், ஆர்வத்தால் உழைப் பால், எழுத்தாற்றலால்.

கலைஞரின் அணிந்துரையோ!

வீரமணி ஒரு விமர்சனம் நூலுக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கொடுத்திருக்கின்ற அணிந்துரையே முழுநிலவின் வெளிச்சத்தை அப்படியே பிரதிபலித்திருக்கின்றார்-மிகச்சிறப் பாக!

உலகம் உருண்டை என்பது போல கலைஞர் அவர்கள் தலைவர் வீரமணி அவர்களைப் பற்றி முழு பரிமாணத்தையும் எடுத்துக்காட்டியிருக்கின்றார். தனது உன்னதமான அறிவாற்றலால்.

கடலுக்குள் மூழ்கி முத்தெடுப்பதைப் போல்


இப்பொழுது நேராக நூலுக்கு வருவோம். கடலுக்குள் மூழ்கி முத்தெடுப்பதைப் போல வீரமணி ஒரு விமர்சனம் என்ற நூல் 160 பக்கங்கள் கொண்ட புத்தகம் 22 தலைப்புகளில் தமிழர் தலைவரின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை நடைபாதை நண்பருக்கு கதை சொல்வது போல் அல்ல. உலக தமிழர்களுக்கு ஒரு திராவிட இயக்க பொக்கிஷத்தையே தந்திருக்கிறார் என்று சுருங்கச் சொன்னாலே போதும். விவரிக்க இயலாது. அவ்வளவு அரிய தகவல்கள் அழகிய வடிவமைப்பில் அத்துணையும் நூலில்.

புத்தகத்தை வாங்கி அவசர அவசரமாக இடைவிடாமல் படித்தால் தான் அத்துணை சுவைகளையும் சுவைத்திட இயலும். பெரியாரின் கனவுகளை எப்படி எல்லாம் நனவாக்கினார் வீரமணி.

அண்ணா-கலைஞர்-வீரமணி


அய்யாவின் குருகுலத்தில் அண்ணா-கலைஞர்-வீரமணி ஆகியோர் எப்படி போர்ப்படைத் தளபதிகளாக உருவாக்கப் பட்டனர் என்கிற வரலாற்றை விளக்கு கிறார் நூலாசிரியர். பட்டாசு தொழிற் சாலைக்குள்ளேயே வானவேடிக்கை நடத்திக்காட்டும் கட்டுப்பாடுமிக்க பெரி யாரின் அறிவுதீரமிக்க தொண்டர்கள் எப்படிப்பட்டவர்கள் என்கின்ற செய்தி கள். ஏராளம்! ஏராளம்!!

அய்யா விரும்பி, அண்ணா தலைமையேற்ற ஈரோடு சிறப்பு மாநாட்டு நிகழ்ச்சி களை மிகச்சிறப்பாக படம் பிடித்துக் காட்டுகின்றார். பெரியாருடன் பயணித்த பலர்

அவ்வப்போது ஆங்காங்கே தங்கி விட்டனர். பெரியாருடைய வேகத்தோடு மற்றவர்களால் இணைந்து போக முடியாத நிலை. ஆனாலும் பெரியாரின் ரதம் வேகமாக நகர்ந்துகொண்டிருந்த ஒரு சூழ்நிலை.

1944-1945 ஈரோடு திராவிடர் மாணவர் பயிற்சி முகாமில் சிறுவர் வீரமணி எப்படி பட்டை தீட்டப்பட்டார்?

அய்யா, அம்மா வியப்பு

அய்யாவும், அம்மாவும் சிறுவர் வீரமணி அவர்களின் பேச்சாற்றல், கட்டுப்பாடுகளைக் கண்டு வியந்த சம்பவங்கள், நீயும் வருகிறாயா? வீரமணி என்று அய்யா அவர்கள் பிரச்சாரத்திற்காக கூப்பிட்ட அந்த சம்பவம்.

அண்ணா அவர்களுக்கு திராவிட நாடு ஏடு நடத்திட அய்யா செய்த பேருதவி, கடலூர் திருப்பாதிரிபுலியூரில் அய்யா-அண்ணா வீற்றிருக்க வீரமணி தனது பேச்சாற்றலால் மின்னலைப் பிடித்து சவுக்காக சுழற்றிய காட்சிகள்.

1945ஆம் ஆண்டு திருச்சி பொன்மலையில் நடைபெற்ற திராவிட வாலிபர் சங்க ஆண்டு விழாவில் அண்ணா, டி.கே.சீனிவாசன், வீரமணி பங்கேற்று விட்டு ரயில்வே பிளாட்பாரத்தில் அண்ணாவுடன் வீரமணி அவர்கள் பிரியாணி பொட்டலத்தைப் பிரித்து உணவு உட்கொண்ட காட்சி. அண்ணா அவர்களை ரயிலில் அனுப்பி வைத்த காட்சிகளை தலைவர் வீரமணி அவர்களின் மூலமே விளக்கும் அரிய செய்திகள். கலைஞரின் தூக்கு மேடை நாடகத்தில் வீரமணியும், நடித்தார் என்கின்ற அந்தக் காட்சி செய்திகள்.

அய்யாவும், ராஜாஜியும் திருவண்ணாமலையில் சந்தித்து பேசிய பின் கழகத்தில் ஏற்பட்ட அதிர்வுகள். அய்யாவின் புயலைக் கிளப்பும் அறிவிப்பு. சொத்துகளை இயக்க நலன்கருதி காப்பாற்றிட அய்யா மேற்கொண்ட நடவடிக்கைகள். இப்படிப்பட்ட நிலையில் அண்ணா அளந்தே அடி எடுத்து வைத்தார். பிரிந்து சென்ற அண்ணா அய்யாவை விமர்சிக் காத நிலை.

1950இல் வீரமணி விளம்பர அதிகாரியான செய்தி. வீரமணி அவர்களின் படிப்பிற்காக உதவிய பிரமுகர்கள் முக்கிய சம்பவங்கள் இன்னல்கள், இடையூறு களைக் கடந்து கடலூரிலிருந்து வீரமணி அவர்கள் சென்னைக்கு வந்த சம்பவங்கள்.

வீரமணி அவர்களை அய்யா அழைத்து அரசியல் சட்டத் தில் எந்தெந்த பிரிவுகள் வர்ணாஸ்ரமத்திற்காக வாதிடுகின்றன என்பதை விளக்க துண்டு பிரசுரம் தயாரிக்கச் சொன்னது. சிறை ஏகியவர்களுக்கு வீரமணி வழிகாட்டியாக எப்படித் திகழ்ந்தார்?.

வீரமணி அம்மாவுடனேயே இருங்கள்! என்று அய்யா சிறை ஏகுவதற்கு முன் கூறிய கட்டளை. முதல்வர் காமராசரை அம்மா சந்தித்து முறையிட்ட வரலாற்றுச் சம்பவங்கள். அய்யாவின் கட்டளையை தன் உழைப்பால் தொண்டால் நிரூபித்தவரலாறுகள்.பெரியாரின் சிறை அனுபவங்களை அய்யாவே விவரிப்பது. கடலூரில் வழக்கு ரைஞர் தொழிலை நடத்துவதா? கழகப் பணியைத் தொடருவதா? வீரமணி அவர்களின் மனப்போராட்டம். வீரமணி யாருக்கு மோகனா அவர்களை அய்யாவே திருமணம் நடத்தி வைத்த செய்திகள்.

விடுதலையை நிறுத்திவிடலாம் என்று அய்யா கூறியது வீரமணி அவர்கள் பதறியது விடுதலைக்கு ஆசிரியராக அய்யா நியமித்ததை வரவேற்கிறேன் என்ற மிகச்சிறப்பான செய்திகள் கொண்ட பெரியாரின் வரலாற்றுக் குறிப்பு அறிக்கை.

அண்ணா அமர்ந்த இடத்தில் வீரமணி


அண்ணா அமர்ந்திருந்த ஆசனத்தில் வீரமணியார். விடுதலை இன்று தமிழி னத்தின் மூச்சுக்காற்றாய், கலங்கரை விளக்கமாய் நவீன வசதி பொலிவுகளுடன் வளர அவரின் அயரா உழைப்பு, அய்யா விடுதலை வளர்ச்சியைப் பார்த்துப் பூரித்துப் பாராட்டியது.

அய்யா சொத்துகளை அறக்கட்டளையாக்கி, பொதுமக்களுக்குப் பயன்படும் படியாக செய்த சம்பவங்கள் உயில் பதிவு செய்யப்பட்டது என்பதை எல்லாம் புத்தக ஆசிரியர் இதுவரை கேட்டிராத வரலாற்றுச் செய்திகளாய் சோலை மிகச்சிறப்பாக விளக்குகிறார்.

200 ரூபாய்க்காக எம்.ஆர்.ராதாவை பெரியார் கண்டித்தது. பிறகு அவருக்குத் தெரியாமலேயே பெரியார், அண்ணா யாருக்கும் தெரியாமல் ராதா நாடகத்தை தரையில் உட்கார்ந்து பார்த்த சம்பவங்கள் என இப்படி பலப்பல சுவாரஸ்யமான உண்மைச் சம்பவங்கள்.

வீரமணியை ஆயுள் செயலாளராக சட்ட நிபுணர்களின் ஆலோசனைப்படி வங்கியில் டெபாசிட் செய்த நிகழ்வுகள், மிசாவில் தலைவர் வீரமணி, அன்றைய தி.மு.க இளைஞரணி செயல்வீரர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் மற்றும் பல மிசா கைதி தோழர்களுக்கும், சோற் றில் சிறுநீர், கல், மண், வேப்பெண்ணெய் கொட்டிய சாப்பாடு. அடி, உதை, கொலை வெறித் தாக்குதல் பற்றிய ஒரு பெரிய வரலாற்றுக் கொடுமையான வெளி உலகத்திற்கே வெளிவராத சம்பவங்கள் ஏராளம். ஏராளம் அப்படியே படம் பிடித்துக்காட்டியுள்ளார் சோலை அவர்கள்.

வீரமணி ஏகிய சிறை பட்டியல்


வீரமணி கண்ட சிறைக்களங்களின் பட்டியல்கள் வீரமணி அவர்களது உயிருக்கு குறி வைத்த மம்சாபுரம் தாக்குதல், கலைஞர் துடித்தது. எம்.ஜி.ஆர். விசாரித்தது. ராயபுரத்தில் வீரமணியாரை கொலை செய்யும் நோக்கத்துடன் கொலைவெறித் தாக்குதல், தம்மம் பட்டியில் வீரமணி அவர்களை காரோடு கொளுத்தி கொல்ல முயன்ற மறக்க முடியாத கொடூர சம்பவங்கள் என வீரமணி அவர்களின் உயிருக்கு எப்பொழுதெல்லாம் குறி வைக்கப்பட்டதோ அத்துணை கொலை வெறித் தாக்குதல் சம்பவங்களையும் விளக்கியிருக்கிறார். சுயமரியாதை திருமணம் அண்ணா முதல்வராக இருந்த பொழுது அய்யா-வீரமணியாரைக் கலந்து சட்டப்படி சொல்லுபடியாக்கிய முக்கிய சம்பவம். விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் உண்ணாவிரதத்தை தலைவர் வீரமணி அவர்கள் முடித்து வைத்தது.

இந்திய தலைவர்களுடன் வீரமணி அவர்கள் நெருக்கமாக இருந்தது. வீரமணி அவர் களின் அன்றாட உழைப்பு, எழுத்தாற்றல், நூல்கள் படைப்பு, இன எதிரிகளுக்கு அவர் சிம்ம சொப்பனமாக இருந்தது. உலக தமிழினத்தைக் காப்பாற்ற அவர் போராடி வருவது போன்ற செய்திகளை இந்தப் புத்தகத்தில் திறம்பட விளக்குகிறார். ஜாதி ஒழிப்பு, இந்தி ஒழிப்பு, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு, மக்கள் சமத்து வத்திற்காக பாடுபடுவது, இடஒதுக்கீடு, சமூகநீதி தத்துவம் இவைகளுக்காக வீரமணியார் பாடுபட்டுவருவது இங்குள்ள தமிழர்களுக்கு மட்டுமல்ல.

ஈழத் தமிழர்களுக்காக, தமிழக மீனர்வகளுக்காக போராடி வருகின்ற தொடர் போராட்டங்கள், காவிரி நீர் பிரச்சினை. இடஒதுக்கீட்டிற்கு புத்துயிர் கொடுத்தது. மண்டல் கமிஷன் அறிக்கை அமலாக்கம், எம்.ஜி.ஆரின் 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணையை ஒழிக்க பாடுபட்டது. சேது சமுத்திர திட்டம், தமிழ்நாடு எப்படி எல்லாம் வஞ்சிப்படுகிறது என்பதை எல்லாம் மக்களுக்குப் பிரச்சாரம் செய்து நாளும் போராடிப் போராடி தங்கம் போல் ஒளிவிடுகிறார் வீரமணி அவர்கள் என்பதை விளக்கியிருக்கிறார் சோலை அவர்கள்.

பெரியார் டிரஸ்ட்டு ஒரு திறந்த புத்தகம். அய்யா, அம்மா அவர்களுக்கு பிறகு திராவிடர் கழக தலைவர் வார்த்தெடுத்த கல்வி நிறுவனங்கள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வரை, மற்றும் மருத்துவமனைகள் என ஏகப் பட்ட தொண்டு நிறுவனங்கள் நாளும் வளர்ந்து மக்கள் நலத்தொண்டு பணி யாற்றி வருகின்றன. அவை எல்லாம் ஒளிப்படங்களாக நூலில் மிக அழகாக நேர்த்தியாக அச்சிடப்பட்டிருக்கின்றன.

வளர்த்திருக்கிறார் வீரமணி


பெரியார் ஒப்படைத்த பணிகளுக்கு நூற்றுக்கு ஆயிரத்திற்கு மேல் பணியாற்றி தன் ஆயுளையே தமிழக மக்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார் திருவாளர் வீரமணி அவர்கள். எந்தவித பிரதி பலனையும் எதிர்பாராமல் இப்படி தொண்டாற்றுபவர். எவரும் இல்லை நாட்டிலே. எந்த நிறுவனமும் இப்படி இல்லை. கி.வீரமணி அவர்களின் வாழ்க்கையை பனிப் பாறையின் ஒரு முனை அளவுதான் காட்டியிருக்கிறார் சோலை.

இதை அவரே சொல்லியிருக்கிறார். இன்னும் சொல்ல வேண்டிய செய்திகளும், வரலாற்றுச் சம்பவங்களும் ஏராளமாகப் புதைந்து கிடக்கின்றன. வீரமணி ஒரு விமர்சனம் என்னும் புத்தகம் ஒவ்வொருவர் கையிலும், ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது. செய்திகளைச் சம்பவங்களை வடித் தெடுத்த சோலை அவர்கள் பாலைவனத்தில் தோன்றிய ஒரு சோலை வனமே (ஒயாசிஸ்). என்று பாராட்ட லாம். எழுத்தாளர் சோலைக்கு நமது உளம்கனிந்த நன்றி பாராட்டுகள்! திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 79ஆம் ஆண்டு (டிச.2இல்) அடி எடுத்து வைக்கின்றார்.

நூறாண்டுகளுக்கு மேல் வாழ்க...!


அவர் நூறாண்டுகளைத் தாண்டி சிறப்பாக மகிழ்ச்சியுடன் நல்ல உடல் நலத்துடன் வாழவேண்டும் என்பது தான் தமிழ்கூறும் நல்லுலகத்தின் ஆசை. தொடரட்டும் அவரது தொய் வில்லாப் பொதுத்தொண்டு, வாழ்த்த வார்த்தைகள் இல்லை. தலைதாழ்ந்து வணங்குகிறோம்!

-----------------------"விடுதலை” 1-12-2011

1 comments:

தமிழ் ஓவியா said...

பதில் சொல் தினமலரே!


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: சிறீரங்கத்தில் அர்ச் சகப் பார்ப்பனர்களை பல்லக்கில் வைத்துத் தூக்கும், மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கை மீண்டும் தொடர்ந்தால், திராவிடர் கழகம் போராட்டத்தில் குதிக்கும்.

டவுட் தனபாலு: இப்படித்தான், கல் சிலையைக் கும்பிடுறவன் காட்டுமிராண்டின்னீங்க... ஈ.வெ.ரா., சிலையைக் கும்பிடறீங்க... கிருஷ்ண ஜெயந்தியை கிண்டல் பண்ணீங்க... அண்ணாதுரை நூற்றாண்டு விழா கொண்டாடுறீங்க... பல்லக்கு தூக்குற தைக் கண்டிக்கிறீங்க... தலைவர்களை சாரட் வண்டியில வச்சு ஓட்டுறீங்க... வாழ்க உங்க பகுத்தறிவு...!

- தினமலர், 7.12.2011

வழக்கம் போல வல்லடி வழக்கிலே ஈடுபட்டுள்ளது தினமலர்.

தலைவர்களுக்கு விழா எடுப்பதும், பார்ப்பானைப் பல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்லுவதும் ஒன்றா!

இந்தப் பால பாடம் கூடத் தெரியாத கூட்டத்துக்குப் பத்திரிகை ஒரு கேடா?

மனிதனை மனிதன் தூக்குவதை நியாயப்படுத்தும் காட்டுவிலங்காண்டி கள் இன்றைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒரு சூத்திரப் பூசாரியைப் பார்ப் பனர்கள் பல்லக்கில் வைத்துத் தூக்கு வார்களா?

சிறீரங்கக் கோவில் பார்ப்பனர் களின் கால்கள் எல்லாம் முடமாகிப் போய்விட்டனவா? நடந்து சென்றால் கவுரவம் குறைந்து போய்விடுமா?

பெரியார் சிலையை யாரும் கும்பிடு வதில்லை, கும்பிடக்கூடாது என்பதற் குத்தான் கடவுள் இல்லை கடவுள் இல்லை! என்ற கல்வெட்டு அதில் இடம் பெற்றுள்ளது.

சிறீரங்க நாதன் கோவிலுக்கு எதிரிலும், காஞ்சி சங்கர மடத்துக்கு எதிரிலும் தந்தை பெரியார் சிலை இருக் கிறதே - ஆத்திரம் வராதா அய்யர் கூட்டத்துக்கு?

காலையில் எழுந்தவுடன் காஞ்சி சங்கராச்சாரியார் பெரியார் சிலையைச் சுற்றிவந்து கும்பிடுப் போடுவதாகக் கேள்வி - இப்படிப்பட்ட கூட்டத்துக்கு இனிமேல் இப்படித்தான் எழுத வேண்டும்.

பிறக்காத கடவுள்களுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுவதும், பிறந்து வளர்ந்து நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்யும் - செய்த தலைவருக்குப் பிறந்த நாள் கொண்டாடுவதும் ஒன்றல்ல.

பிறப்பு - இறப்பு அற்றவன் - உருவமற்றவன் கடவுள் என்று கத்திக் கொண்டு உருவம் ஏன்? கோவில் ஏன்? ஆண்டாண்டு திருக்கல்யாணம் ஏன்? போன வருடம் செய்து கொண்ட கல்யாணத்தை எவன் அடித்துக் கொண்டு போனான்? பதில் சொல் தினமலரே!
---"விடுதலை” 8-12-2011