Search This Blog

29.12.11

கடவுள் சக்தி - தந்தை பெரியார்

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்து, குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணத்தில் சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாயிருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27 வருஷமாவது ஆகியிருக்க வேண்டும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்களா? இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது இந்தப் பிள்ளைகளுக்காவது மான அவமானமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, என்ன? பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே வெட்கமில்லையா? என்று கேட்கக் கூடிய புத்தி இருந்திருக்காதா?

கேள்வி:- என்னடா உனக்கு கடவுள் இல்லையென்று சொல்லுகின்ற அளவு தைரியம் வந்து விட்டதா?

பதில்:- அவர்தான் மனோ வாக்குக் காயங்களுக்கு எட்டாதவரென்று சொன்னாயே! அவரை நான் உண்டு என்று சொன்னால் நீயே உனக்கு எப்படித் தெரியும்? என்று கேட்பாயே. அதனால்தான் என் புத்திக்கு எட்டாததையும், தெரியாததையும் நான் ஒப்புக் கொள்வதில்லை என்று சொல்லிவிட்டேன். இதில் என்ன தப்பு?

கேள்வி:- கடவுள் கருணாநிதி அல்லவா?

பதில்:- கடவுளே நமது மனதுக்கும், காயத்துக்கும் எட்டாதவராயிருக்கும்போது அவர் கருணாநிதி என்பது உனக்கு எப்படித் தெரிந்தது?

-------------------- "பகுத்தறிவு", ஜூலை - 1935.

நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம்.

*****

ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும் மனதினால் நினைத்த அக்கிரமங்களைப் பார்த்தும் ஒன்று கூட விடாமல் பதிய வைத்தும், அதற்குத் தகுந்தபடி தீர்ப்புக் கூறி, தண்டனை கிண்டனை கொடுக்கவும், அதற்காக நரகத்தில் ஆழ்த்தி வைக்கவும், மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து, அவற்றில் கஷ்டப்படுத்தி வைக்கவும் முடியுமாம்.

*****

நமது கடவுள்கள் சக்தி எவ்வளவு அதிசயமானது!

*****

அதிலும் மகமதியர்களுடைய கடவுளும், கிறித்தவர்களுடைய கடவுளும் மனிதன் செத்த பிறகு எல்லோர் குற்றம் குறைகளையும் ஒன்றாய் பதிய வைத்திருந்து, ஏதோ அதற்கு இஷ்டப்பட்ட நாளில் அதாவது, ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட புதை குழியிலிருந்து எழுப்பி கணக்குப் பார்த்து ஒரே அடியாய் தீர்ப்புச் சொல்லிவிடுமாம்.

*****

இந்துக்களுடைய கடவுள்கள் அதாவது, சைவர்கள் கடவுள்களும், வைணவர்களுடைய கடவுள்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனியாகவே அவ்வப்போது அவனைச் சுட்டு எரித்த பின் கண்களுக்குத் தெரியாத அவனுடைய ஆத்மாவைப் பிடித்து வைத்து, அதற்கு ஒரு சூட்சம சரீரமும் கொடுத்து, அந்தச் சரீரத்திற்கு அதற்குத்தக்க தண்டனை கொடுக்குமாம். அது பெரிதும் அடுத்த ஜென்மத்தில் இன்னின்ன ஜந்துவாய் பிறந்து, இன்னின்ன பலன் அனுபவிக்க வேண்டும் என்று கட்டளையிடுமாம்.

*****

கிறித்து சமயத்தில் உள்ள கடவுள் சக்திப்படி எல்லா மனிதனும் பாவம் செய்தேதான் தீருவானாம்.

*****

அந்தப் பாவம் ஏசுகிறித்து மூலம்தான் மன்னிக்கப்படுமாம்.

*****

மகம்மதிய மார்க்கப்படி மகம்மது நபிகள் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம்.

*****

சைவ சமயப்படி சிவன் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம். அவருக்குத்தான் பரத்துவம் உண்டாம்.

*****

வைணவ சமயப்படி விஷ்ணு மூலமாகத்தான் முடியுமாம். விஷ்ணுவுக்குத்தான் பரத்துவம் உண்டாம்.

*****

ஆனால் சைவ, வைணவ சமயங்கள்படி மக்கள் பாவமே செய்வது மாத்திரமல்லாமல் புண்ணியமும் செய்யக்கூடுமாம்.

*****

அதற்காக சொர்க்கம், வைகுண்டம், கைலாசம் என்கின்ற பதவிகள் உண்டாம்.

*****

அப்புறம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஜன்மங்களும் உண்டாம்.

*****

இந்த அபிப்பிராயங்கள் எவ்வளவு குழப்பமானதாய் இருந்தாலும், பார்ப்பானுக்கு அழுதால் மேல் கண்ட மோட்சங்களோ அல்லது நல்ல ஜன்மமோ எது வேண்டுமோ அது கிடைத்துவிடுமாம்.

*****

ஆகவே, பொதுவாகக் கடவுளுடைய சக்திகள் அளவிட முடியாது என்பதோடு, அறிந்து கொள்ள முடியாது என்பது மாத்திரமல்லாமல் அதைப் பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ, சிந்திக்க முயற்சிப்பதோ மகாமகா பெரிய பெரிய பாவமாம்.
அதாவது, எந்தப் பாவத்தைச் செய்தாலும், எவ்வளவு பாவத்தைச் செய்தாலும், அவற்றுக்கெல்லாம் பிராயச்சித்தமும், மன்னிப்புமுண்டாம்.

*****

ஆனால், கடவுளைப் பற்றியோ, அவரது சக்தியைப் பற்றியோ ஏதாவது எவனாவது சந்தேகப்பட்டு விட்டானோ பிடித்தது மீளாத சனியன்.

*****

அவனுக்கு மன்னிப்பே கிடையாது. கிறித்துநாதரைப் பிடித்தாலும் சரி, மகம்மது நபி பெருமானைப் பிடித்தாலும் சரி அல்லது இவன் விஷ்ணு, மகேசன் ஆகிய எவரைப் பிடித்தாலும் சரி, ஒரு நாளும் அந்தக் குற்றம் (எந்தக் குற்றம்) கடவுளைச் சந்தேகிக்கப்பட்ட குற்றமா? மன்னிக்கப்படவே மாட்டாது.

*****

ஆனால், இந்த எல்லாக் கடவுள்களுக்கும் அவர்களால் அனுப்பப்பட்ட பெரியார்களுக்கும், அவர்களுடைய அவதாரங்களுக்கும், கடவுளைப் பற்றியும், அவர்களுடைய சக்தியின் பெருமைகளைப் பற்றியும் மக்கள் சந்தேகப்படாமல் இருக்கும்படிக்கோ அல்லது அவநம்பிக்கைப்படாமல் இருக்கும்படிக்கோ செய்விக்க முடியாதாம்.

*****

ஏனென்றால், அவ்வளவு நல்ல சாதுவான சாந்தமான கருணையுள்ள சர்வ சக்தி பொருந்திய சர்வ வியாபகமுள்ள கடவுள்களாம்.

*****

பாவம் நாம் ஏன் அவற்றைத் தொந்தரவு செய்ய வேண்டும்.

*****

எல்லாம் கடவுள் செயல் என்று சும்மா இருந்து விடுவோம்.


--------------------- தந்தைபெரியார் - “பகுத்தறிவு”, செப்டம்பர் - 1935

1 comments:

தமிழ் ஓவியா said...

நிர்வாண சாமியார்!

மன்னார்குடி மூவா நல்லூரைச் சேர்ந்தவர் சேகர் என்ற கட்டடத் தொழிலாளி. இவர் திடீ ரென்று நிர்வாணமாக ஓடி, ஒரு கோவிலுக்குள் போய் குந்திக் கொண் டார். அவர் யாருக்கோ சாபமிட்டார் - மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி நீதிமன்ற ஆணைப் படி சென்னை கீழ்ப்பாக் கம் மனநல மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டா ராம். புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என் றால், பயித்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டார்.

அவர் சொன்ன சாபம் பலித்துவிட்டதால், அந்தச் சாமியார் பக்கம் கவனம் திரும்பிவிட்ட தாம். (பயித்தியக்காரன் கிழித்ததும் கோவணத் துக்கு ஆச்சு என்பது பழமொழி அல்லவா!) கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு முக்கியப் பிரமுகர்கள் சென்று (முதலமைச்சர் அலுவலகத்தின் அதி காரம்வரை பயன்படுத் தப்பட்டு) மீண்டும் அந்தப் பைத்தியக்கார நிர்வாண சாமியாரை அவர் முன்பு தங்கி இருந்த சூட்டுக் கோல் ராமலிங்க சுவாமி சித்தர் கோவிலுக்குக் கொண்டு வந்துவிட்டன ராம். (வடலூர் வள்ளலா ருக்கு இப்படி ஒரு அவலமா?)

அடடே, எப்படிப்பட்ட சாதனை! எப்படிப்பட்ட அறிவுத் தீட்சண்யம்! உடைகளையெல்லாம் (கோவணம் உள்பட) கழற்றி எறிந்துவிட்டு அம்மணக்குண்டியாக, நிர்வாணமாக ரோட்டில் திரிந்தால் ராஜமரி யாதை கிடைக்கும் என்று அறிவார்களாக!

மானத்தைக் காப்பாற் றிட உடை உடுத்துபவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் உருப்படாத பேர்வழிகள் என்பதை உணர்வார் களாக!

ஒன்று செய்யலாம், நாட்டில் நடக்கப் போவதை யெல்லாம் முன்கூட்டியே அறிந்து சொல்லும் ஒரு வர்தான் நாட்டுக்கு மிக மிக அவசியம் தேவைதான்.

சுனாமி வருமா? புயல் வீசுமா? மழை பொய்க் குமா? நிலநடுக்கம் ஏற் படுமா? பொருளாதார வீழ்ச்சி ஏற்படுமா? என் பதையெல்லாம் அறியக் கூடியவர்தான் அவசர அவசரமாக இப்பொழுது தேவை! தேவை!! பேராற் றல் படைத்த (?) இத்த கைய அம்மணக் குண்டி சாமியார்களை இந்தியா வின் குடியரசுத் தலைவ ராகவோ, பிரதமராகவோ அல்லது மாநிலங்களின் முதலமைச்சர்களாகவோ ஆக்கினால் என்ன?

பிரதமருக்கு ஆலோசனை கூறும் அறிவுசார் மன்றம் (Knowledge Commission) இதுபற்றி யோசிக்குமாக!

- மயிலாடன் 28-12-2011