Search This Blog

29.12.09

அறுத்தெறி பூணூலை என்று ஆவேசக் குரல் கொடுக்க வேண்டாமா ஆரியப் புத்திரர்கள்?

‘மும்மூர்த்திகளும் பார்ப்பனர்களே!’


பாரதீய ஜனதாவா? அது தேசியக் கட்சி! அதன் பார்வை ஏகப் பாரதம்! மாநிலங்கள் என்ற அமைப்பே கூடத் தேவையில்லை; கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரை ஒரே தேசம்! பாகிஸ்தான் பர்மாவைக்கூட இணைத்து அகண்ட பாரதத்தை உருவாக்குவதுதான் அவர்களின் கட்டுக்கடங்கா ஆர்வம்.

காந்தியாரைப் படுகொலை செய்ததால் தூக்கலிடப்பட்ட நாதுராம் கோட்சேயின் அஸ்திகூட கலசத்தில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருவது எதற்காக? பாகிஸ்தானை இந்தியாவோடு இணைத்த பிறகு அந்தப் பகுதி சிந்து நதியில் அதனைக் கரைப்பதற்குத்தானாம்.

இப்படியெல்லாம் பேசுவதற்கு இவர்களுக்கு அருகதையுண்டா? இந்தியா ஒரே நாடு ஏகப் பாரதம் என்று பிலாக்கணம் பாடும் இவர்கள் இந்திய மக்கள் அனைவரும் ஒரு தாயின் மக்கள் என்று நெஞ்சார நினைப்பவர்கள்தானா?

பாரதத் தாயின் புதல்வர்கள் என்றால் இங்கு எல்லோரும் சகோதர சகோதரிகள்தானே! சரிசமம்தானே! அப்படியென்றால் எங்கிருந்து வந்து குதித்தது வர்ணாசிரமம் என்னும் நாகம் ஜாதி என்னும் புற்றுநோய்?

பதிலளிக்க வேண்டாமா பாரதீய ஜனதாவையும் ஆர்.எஸ்.எஸையும் ஆட்டிப் படைக்கும் பார்ப்பனர்கள்?

“அறுத்தெறி பூணூலை’’ என்று அண்டம் நடுங்க ஆவேசக் குரல் கொடுக்க வேண்டாமா ஆரியப் புத்திரர்கள்?

சங்கராச்சாரி மடத்தில் ஒரு சாம்பானை நியமிப்போம் என்று சங்கநாதம் செய்ய வேண்டாமா?

இதிகாசங்களை எரி தீயில்! வாட்டிட எழுச்சி கொள்ள வேண்டியதுதானே? மனுதர்மம் ஒழிப்பு மாநாடு கூட்ட வேண்டியதுதானே?

ஏன் செய்யவில்லை? ஏன் எழுதவில்லை?

ஏன் குரல் கொடுக்கவில்லை?

ஏடுகள் என்ன இவர்களுக்குப் பஞ்சமா? ஊடகங்களும் இவர்களின் கையிருப்புதானே? உண்டு இல்லை என்று ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதானே?

ஏன் தயக்கம்? ஏன் மயக்கம்? இன்னும் புரியவில்லையா? எல்லாம் வெளி வேடம்தான் ஊராரை ஏமாற்றத்தான். உள்ளுக்குள். ஓங்கி ஒலிக்கும் நாதம் எல்லாம் “நாங்கள் பிராமணாள்!’’ ‘‘நீங்கள் எல்லாம் சூத்திராள்!’’ என்பதுதான்.

ஆர்.எஸ்.எஸை உருவாக்கியவர்கள் அத்தனைப் பேரும் பார்ப்பனர்களே! மூத்த குருநாதரான பாலகங்காதர திலகரே பச்சைப் பார்ப்பனர்தான்

பிளேக் நோயை ஒழிக்க அதற்கு மூலாதாரமான எலியை வேட்டையாடினால், எலி விநாயகரின் வாகனம் என்று கூறி எலியை ஒழித்த வெள்ளைக்கார அதிகாரிகளை சுட்டுக் கொல்லத் தூண்டிய சூட்சும மனிதர் அவர்.

இவ்வளவு எழுச்சிக்குப் பிறகும்கூட.. இன்றளவில்கூட நிலைமை என்ன?

பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவர் நிதின் கட்காரி யார்? ஒரு பார்ப்பனர்.

நாடாளுமன்றத்தில் மக்களவையின் தலைவர் சுஷ்மா சுவராஜ் யார்? ஒரு பார்ப்பனர்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவர் அருண்ஜேட்லி யார்? ஒரு பார்ப்பனர்.

பாரதீய ஜனதா என்ற கட்சியின் மூன்று முக்கிய பதவிகளின் மும்மூர்த்திகள் மூவரும் பார்ப்பனர்களே!

ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் யார்? ஒரு பார்ப்பனர்

விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால் யார்? ஒரு பார்ப்பனர்.

அகில இந்திய விசுவ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் வேதாந்தம் யார்?

ஒரு பார்ப்பனர் இப்படி சகலமும் பார்ப்பனமயமாகித் திமிரிக் கொண்டிருக்கும் ஒரு கட்சிதான் பாரதீய ஜனதாவும் அதன் பரிவாரங்களும்.

இந்த அமைப்புகளில் உள்ள பார்ப்பனர் அல்லாதார் குறிப்பாக “சூத்திரர்கள்” “பஞ்சமர்கள்’ இப் பொழுது இவர்களை அடையாளம் காணாவிட்டால் வேறு எப்போது?

கிலுகிலுப்பையைக் குழந்தைகளி டம் காட்டி கழுத்துச் சங்கிலியைக் களவாடும் திருடர்களுக்கும், சிறுபான்மையினர்களைக் காட்டி, இந்தியாவில் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை வருணா சிரமத்தின் பெய ரால் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் பார்ப்பனர்களுக்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு?

பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் ஒன்றும் தந்தை பெரியாரின் சீடரல்லர் _ ‘வகுப்புத் துவேஷியும்’’ அல்லர். அவரே என்ன கூறுகிறார்? ‘‘முன்னாள் ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க.வின் அனைத்துக் கூட்டங் களையும் கருத்தரங்குகளையும், பேச்சுகளையும் கடந்த நாற்பதாண்டு காலமாக நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்த இந்துக்களின் கட்சி ஏன் எப்போதுமே தீண்டாமைபற்றிய கேள்வியை எழுப்பியதேயில்லை? இந்துக்களிடையே உள் ஜாதி நடைமுறை மிகவும் அடக்குமுறை நிறைந்த ஒன்றாக உள்ளது. பா.ஜ.க.வைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஆர்.எஸ்.எஸ். பார்ப் பனர்களின் அமைப்பு என்பது இதன் காரணங்களுள் ஒன்றாக இருக்க லாம்.’’

(‘டெக்கான் கிரானிக்கல்’ 4.2.2008)

உமாபாரதி யார்? பாரதீய ஜனதா கட்சியின் அனல் பறக்கும் பேச்சாளர் ஆயிற்றே! கட்சியின் இளைஞர் பிரிவின் செயலாளராகவும் இருந்தவர் ஆயிற்றே! பாபர் மசூதி இடிப்பில் துள்ளிக் குதித்து ஆனந்த வெள்ளத்தில் நீந்தியவராயிற்றே!

பா.ஜ.க.,வைப்பற்றி அவரைவிட அதிகம் தெரிந்தவர் வேறு யாராவது இருக்க முடியுமா? அவர் என்ன சொல்லுகிறார்?

“பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தங்கள் கொள்கைகளில் நிலையற்றவர் களாக இருக்கிறார்கள். கட்சியின் தலைமை மேல்ஜாதி பார்ப்பனர்களின் ஆதிக்கத்திற்குள்ளேயே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த தலைவர்கள் கட்சியில் புறக்கணிக்கப்படுகிறார்கள். தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சரியாக வழங் கப்படவில்லை. வேறுபாட்டுக் கண்ணோட் டத்தோடு பார்ப்பனர் மற்றும் முன்னேறிய ஜாதியினருக்கே அதிக வாய்ப்புகள் தரப்படுகின்றன. இது மிகப் பெரிய சமூக அநீதியாகும். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமா?’’

(பா.ஜ.க.வின் இளைஞர் பிரிவு செயலாளராக விருந்த உமாபாரதி மத்தியப் பிரதேசம் போபால் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி -25.4.1996) இதற்கு என்ன பதில்?

கல்யாண்சிங் யார்?

பாரதீய ஜனதா கட்சி யின் சார்பில் உத்தரப்பிரதேச மாநில முதல் அமைச்சராக யிருந்தவர், பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அம்மாநில முதல் அமைச் சரும் அவர்தான். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கள் பட்டியலிலும் இடம் பெற்றவர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

அவர் என்ன சொல்லுகிறார்?

‘‘பாபர் மசூதிக்கு ஒன்றும் ஆகாது என என்னிடம் பா.ஜ.க., தலைவர்கள் தெரி வித்தனர். அயோத்தியில் அடையாள கரசேவை மட்டுமே செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்கள். இருவர் எழுத்துப் பூர்வ மாகத் தெரிவித்தனர்.

அவர்களது வாக்குறுதியை நம்பியே மசூதி பாதுகாக்கப்படும் என நானும் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்தேன். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்பதால் என்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்க பா.ஜ.க., தலைவர்கள் இந்த விஷயத்தில் சதி செய்தனர் என்றே தோன்றுகிறது’’

(‘தினமணி’ 3.5.2009)

இதற்கு என்ன பதில்?

பங்காரு லட்சுமணன் யார்?

பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவராக கொண்டு வரப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அதுகூட பா.ஜ.க. என்பது பார்ப்பனர் கட்சி என்ற முத்திரை விழுந்துள்ளதே அதைத் திசை திருப்புவதற்கான ஒரு தற்காலிக ஏற்பாடுதான் அவரை வெளியேற்றிய விதமும் அத்தன்மையைச் சேர்ந்ததுதான் அவர் ஒரு முறை (1.4.2002) சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது.

“அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் பி.ஜே.பி. மரண அடி வாங்கியதற்குக் காரணம் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர்களைக் கட்சி அலட்சியப்படுத்தியதுதான்’’ என்று கூறினாரே இதற்கு என்ன பதில்?

கிருபாநிதி யார்?

தமிழ்நாட்டு மண் ணில் தந்தை பெரியார் ஊன்றியிருக்கும் உணர்வின் அலைகளிலிருந்து தப்பிக்க, பா.ஜக.. என்ன செய்தது? ஒரு தாழ்த்தப்பட்டவரை தமிழகத் தலைவராக நியமித்தது. அவர்தான் டாக்டர் கிருபாநிதி.

அவரின் கண்ணீர்ப் பேட்டி இதோ:

“தேசிய கவுன்சில் கூட்டம் இந்தூரில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். இல. கணேசனும் வந்திருந்தார். கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, நான் தங்கியிருந்த தாஜ் ரெசிடென்சியல் ஹோட்டலுக்குக் கிளம்ப வேண்டும். காருக்காக போர்டிகோ அருகில் காத்திருந்தேன்.

அப்போது அங்கு இல. கணேசன் அவசரமாக வந்தார். ‘நீ என்ன பெரிய ஆளா? உன்னை ஒழிச்சுடுவேன்’ என்றெல்லாம் பேசியவர் ஜாதி ரீதியாகவும் என்னை இழிவாகப் பேசினார்.

நான் அவர்கிட்ட பொறுமையா பேசுங்கன்னு சொன்னேன். ஆனா அவர் எதையும் கேட்கிற நிலையில் இல்லை. நிதானம் இழந்து காணப்பட்டார். யார்கிட்டப் பேசறோம், என்ன பேசறோம்னு உணருகிற நிலைமையில் இல்லை. ஒரு கட்டத்துல என் கையைப் பிடிச்சு முறுக்கி அடிச்சுட்டார்.

கேள்வி: இல. கணேசன் உங்கள்மீது அவ்வளவு கோபமாவதற்கு என்ன காரணம்?

டாக்டர் கிருபாநிதி: என் பதவிக் காலம் முடியப் போகிறது. அதற்குமுன் கட்சி கணக்கு வழக்குகளை ஒப்படைக்கணும். அதனால் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தபோது பல இழுப்படிகள் நடந்திருப்பது புரிந்தது. மாநிலச் செயலாளராக இருந்த இல. கணேசன் தேசிய செயலாளராக ஆன பிறகும் மாநிலக் கட்சி நிதியைக் கையாண்டு கொண்டிருந்தார். இதை நான் தடுத்ததால்தான் ஆத்திரப்பட்டு என்னை அடிக்கும் அளவுக்குப் போய்விட்டார்.

கேள்வி: நீங்கள் தமிழகத் தலைவராகப் பதவியேற்றதிலிருந்தே பலவித அவமானங்களை சந்தித்து வந்தீர்கள் அல்லவா?

டாக்டர் கிருபாநிதி: ஆமாம் தலைவர் என்கிற முறையில் கட்சிப் பணிகளைக் கவனிக்க எனக்கு அடிப்படை வசதிகள்கூட செஞ்சுத்தரலை ஃபேக்ஸ் மிஷினை நானே சொந்தமா வாங்கினேன். டைப் அடிக்கணும் என்றால் வெளியில் கொடுத்து அடிச்சுக்கிட்டேன். இப்படிக் கட்சிப் பணிகளுக்கு சொந்த பணத்தைச் செலவழித்தேன். கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்திலேயே (கமலாலயம்) ரங்கநாதன் மற்றும் ராஜசிம்மன் ஆகிய இருவரும்தான் ஆட்டிப் படைக்கிறார்கள்.

இவர்களை இயக்கும் சூத்திரதாரி இல. கணேசன் தான். கமலாலயத்துக்கு வரும் கட்சிக்காரர்கள் தலைவர் இருக்கிறாரா என்று கேட்டால் சரியான பதில்கூட சொல்ல மாட்டார்கள். எவ்வளவோ அவமானங்கள்.

கேள்வி: உங்கள் கட்சியில் சாதீய உணர்வுகள் தலை விரித்து ஆடுகிறது என்று பலகாலமாக செய்திகள் வருகின்றன. நீங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர் என்பதால் தான் அவமானப்படுத்துகிறார்களா?

டாக்டர் கிருபாநிதி: (சற்று மவுனத்திற்குப்பிறகு) நடக்கிறதை எல்லாம் பார்க்கும்போது அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கு. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருத்தன் தலைமைப் பதவியில் இருக்கிறதை அவங்களால் ஜீரணிக்க முடியலை. (“தமிழா தமிழா’’ ஏப்ரல் 2003).

இந்தத் தகவல்களை கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கும் டாக்டர் கிருபாகரன் எழுதியிருப்பதாகவும் இதே பேட்டியில் வெளியாகியுள்ளது.

இதற்கு என்ன பதில்?

‘‘தமிழ்நாட்டில் கூட மிக வெளிப்படையாக நடந்த ஒரு தகவல். அப்பொழுது மாநில பா.ஜ.க., தலைவராக இருந்தவர் கே. நாராயணராவ். மாநில பா.ஜ.க., செயலாளராகவும், மாநில விவசாயி அணித் தலைவராகவும் தேசியப் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தவர் பொ. நந்தகுமார், கோவை மாவட்ட பா.ஜ.க., இளைஞரணி தலைவராகயிருந்தவர் ந. லட்சுமணகுமார் இருவரும் பா.ஜ.க.வை விட்டு விலகியபோது மாநிலத் தலைவர் நாராயணராவுக்கும், அகில இந்திய பா.ஜ.க,. தலைவர் ஏ.பி. வாஜ்பேயியிக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விவரம் மிக முக்கியமானது.

‘‘தமிழக பாரதீய ஜனதா தொடர்ந்து மற்றொரு பிராமணர் சங்கமாக செயல்படுவதை எதிர்த்து வெளியேறுகிறோம்’’ என்று எழுதினார்களே இதற்கு என்ன பதில்? பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களின் பார்ப்பன மனப்பாங்கு எத்தகையது? தாழ்த்தப்பட்ட மக்கள்மீது அவர்களின் பார்வை எந்தத் தரத்தைச் சார்ந்தது?

முரளி மனோகர் ஜோஷி, பவுதிகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்தானேஅக்கட்சியின் தலைவராக அலங்கரித்தவர்தானே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தவர்தானே!

படிப்பும் பதவியும் வளர்ந்த அளவுக்குப் பார்ப்பனர்களின் மனப்பாங்கு பக்குவப்பட்ட ஒன்றுதானா? வளர்ச்சியை நோக்கிப் பயணம் செய்வதுதானா?

ஒரு தகவல்: நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் தேர்தல், காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் தொடக்கத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலை; பா.ஜ.க., சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்ற அறிவிப்பும் வெளிவந்தது. இந்த நிலையில் முரளி மனோகர் ஜோஷி அளித்த பேட்டி ஒன்று “இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் வெளிவந்தும் உள்ளது (11.7.1991)

Nobody can take the BJP as a pariah and then expect it to support you’’

“பாரதீய ஜனதாவை தங்கள் வசதிக்கேற்ப யாரும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. பா.ஜ.க.வை நீங்கள் ஒரு பறையனைப் போல் நடத்தக் கூடாது. இதைச் செய்துவிட்டு நாங்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது’’ என்று ‘மெத்தப் படித்த மேதாவி’ ஒருவர் பேசுகிறார் என்றால் அவர் படித்த படிப்பும்கூட அவரின் பார்ப்பனத் திமிருக்கு முன் மண்டியிடுகிறது என்றுதானே பொருள்!

ஜோஷியின் இந்தச் சொல் பிரயோகத்தை எதிர்த்து பல அமைப்புகள் குடியரசு தலைவருக்குத் தந்திகளைக்கூட அனுப்பின என்பதும் மறக்காமல் சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்தப் பார்ப்பன ஜனதா (பா.ஜ.க.,) கட்சியில் பாதந்தாங்கிக் கிடக்கும் பஞ்சமர்களே விழிமின்!

அடியாள்களாக சேவகம் செய்யும் பிற்படுத்தப்பட்டோரே விழிமின்! விழிமின்!!


-------------------மின்சாரம் அவர்கள் 27-12-2009 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

1 comments:

malar said...

இதுகெல்லாம் யாரும் பின்னுட்டம் போடமட்டர்களே !!!!!!!!