Search This Blog

6.12.09

பெரியார் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் என்ன தெரியுமா?

பெல்லாரி

‘1938 டிசம்பர் 5,6 ஆகிய நாள்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நாள்கள்! ஆம். இந்நாளில்தான் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புக்காக நீதிமன்றத்தில் தோன்றி வழக்குகளைச் சந்தித்தார்.

நவம்பர் 13-இல் சென்னையில் பெண்கள் மாநாடு கூட்டி “பெரியார்” என்ற பட்டத்தை வழங்கி வரலாற்றில் இடம் பெற்றனர் மாதர் குல மாணிக்கங்கள். இந்தி எதிர்ப்புக்களத்தில் பெண்களை மறியல் செய்யத் தூண்டினார் என்ற குற்றச்சாற்றின் பேரில் தந்தை பெரியார்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

1938டிசம்பர் 5,6 நாள்களில் சென்னையில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. சர். ஏ.டி. பன்னீர்செல்வம், ராஜா சர். முத்தையா செட்டியார் போன்ற வர்கள் எதிர் வழக்காட வேண்டும் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டும் தந்தை பெரியார் மறுத்து விட்டார். எழுத்து மூலம் நீதிபதியிடம் ஓர் அறிக்கை கொடுத்ததோடு தமது கடமையை முடித்துக் கொண்டார். அது வாக்கு மூலமா? தண்டனையைக் கொடுக்கச் சொல்லித் தூண்டக்கூடிய சொற்றொடர்களா? இதோ தந்தை பெரியார் பேசுகிறார்.

“”இந்தக் கோர்ட் காங்கிரஸ் மந்திரிகள் நிர்வாகத்திற்கு உட்பட்டது.

நீதிபதியாகிய தாங்களும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர்கள்; இவை தவிர, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் மந்திரிகள், அதி தீவிர உணர்ச்சி கொண்டிருக்கிறார்கள். அது விஷயத்தில் நியாயம், அநியாயம் பார்க்க வேண்டியதில்லையென்றும், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்து உபயோகித்து ஒழித்தாக வேண்டுமென்றும், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை திடீரென்று வந்து புகுந்த திருடர்களுக்கு ஒப்பிட்டு கனம் முதல் மந்திரியார் இந்தி எதிர்ப்பு விஷயமாய் மந்திரிகள் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் அடக்குமுறையே என்பது எனது கருத்து. அடக்கு முறைக் காலத்தில் இம்மாதிரி கோர்ட்டுகளில் நியாயத்தை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.

ஆகவே கோர்ட்டார் அவர்கள் தாங்கள் திருப்தி அடையும் வண்ணம் எவ்வளவு அதிக தண்டனை கொடுக்க முடியுமோ, அவைகளையும், பழி வாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும், எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க உண்டோ அதையும் கொடுத்து, இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்து வைக்கும்படி வணக்கமாகக் கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவு நியாயமான லட்சியத்தை அடைய வேண்டுமானாலும் அதற்காகக் கஷ்ட நஷ்டங்களடைதல் என்னும் விலை கொடுக்க வேண்டுமாதலால் அவ்வளவு வேண்டிக் கொள்கிறேன்” என்றார். தந்தை பெரியார்.

நீதிமன்றத்தில் இப்படியெல்லாம் கூறிய தலைவர் தந்தை பெரியாரன்றி வேறு ஒரு வரும் உண்டோ!

நீதிபதி தீர்ப்புக் கூறினார்:

செய்த குற்றங்கள் இரண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோராண்டு கடுங்காவல், ஒவ்வோராயிரம் ரூபாய் அபராதம், அபராதம் செலுத்தாவிடில் மீண்டும் அவ்வாறு மாதம் தண்டனை; இரண்டு தண்டனைகளையும் தனித்தனி காலத்தில் அடைய வேண்டும்.

சிறைப்பறவை சிரித்துக் கொண்டே பெல்லாரி சிறைக்குச் சென்றது.

-------------------- மயிலாடன் அவர்கள் 6-12-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

0 comments: