Search This Blog

20.7.12

பார்ப்பனர்கள் செய்து வைத்த சூழ்ச்சி - சம்பிரதாயங்கள்!


கேரள மாநிலம் அய்யப்பன் கோயில் தொடர்பான சில பிரச்சினைகள் - நியாயமாக மக்கள் - பக்தர்கள் மத்தியில் புதிய சிந்தனைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

1) மகரஜோதி என்பது பற்றிய முதல் பிரச்சினை; மகரஜோதி என்பது அய்யப்பன் சக்தியால் உருவாவது அல்ல; அது திட்டமிட்ட வகையில் மக்களை ஏமாற்றிட, மோசடி செய்ய செயற்கையாக மனிதர்களால் உருவாக்கப் பட்டது என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டு விட்டது.

தேவசம் போர்டும் ஒப்புக் கொண்டு விட்டது. சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டு விட்டார். இன்னும் சொல்ல வேண்டுமானால், கேரள மாநில முதல் அமைச்சராகவிருந்த ஈ.கே. நாயனார் அவர்களே இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவராகவிருந்த ஜோசப் எடமருகுவிடம் ஒப்புக் கொண்டு விட்டார்.

மதத்தின் கோட்பாடு நாணயமுடையதாக, நேர்மை உடையதாக இருக்குமானால், மகர ஜோதிப் பித்தலாட்டத்தை நிறுத்திக் கொண் டிருக்க வேண்டும். ஆனால் நடப்பது என்ன? மோசடி என்று மிக வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, அந்த மோசடி தொடர அனுமதிக்கப்படுவது எப்படி?

மதத்தின் பெயரால் எந்த மோசடியையும் செய்யலாம் என்று சட்டம் ஏதாவது நாட்டில் இருக்கிறதா? இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், உண்மையின் அடிப்படையில் மகர ஜோதியைத் தடை செய்ய ஆணை பிறப்பிக்காதது ஏன்? பக்தர்களாவது உண்மை தெரிந்த நிலையில் மகர ஜோதியைத் தரிசனம் செய்வது என்ற பெயரால் செல்லுவது எத்தகைய அறிவீனம்! பக்தி வந்தால் புத்தி போய் விடும் என்று தந்தை பெரியார் சொன்னதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?

இரண்டாவதாக தேவபிரசன்னம் பற்றிய பிரச்சினை. சபரிமலை அய்யப்பன் கோயிலில் 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோதிடர் உன்னிக்கிருஷ்ணன் பணிக்கர் தலைமையில் 21 சோதிடர்கள் தேவபிரசன்னம் மேற்கொண்டனர். பெண் ஒருவர் அய்யப்பன் திருமேனியைத் தீண்டியதாகவும், அதன் காரணமாக அய்யப்பன் மிகவும் கோபமாக இருப்பதாகவும் தேவ பிரசன்னத்தின் வாயிலாகக் கூறப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நடிகை ஜெயமாலா அய்யப்பன் திருமேனியைத் தொட்டது நான்தான் என்று தானாகவே முன்வந்து கூறினார்.

இதனால் பெரும் சர்ச்சை வெடித்துக் கிளம்பியது. அய்யப்பன் கோயில் தந்திரிகள் வழக்கொன்றைத் தொடர்ந்தனர். அந்த வழக்கு இப்பொழுது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதிலும் பொது மக்களும் பக்தர்களும் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். பெண் என்றால் சக்தியின் வடிவம் என்று சொல்கிறார்களே, அப்படி இருக்கும்போது ஆண் பக்தர்கள் அய்யப்பன் திருமேனியைத் தீண்டலாம், பெண் மட்டும் தீண்டக் கூடாது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கிறது? இது குறித்துப் பெண் பக்தர்களாவது சிந்திக்க வேண்டாமா? போர்க் கொடியை உயர்த்த வேண்டாமா?

இந்தச் சம்பிரதாயங்களை எல்லாம் கடவுளா செய்தார்? அப்படி ஒருவர்தான் இல்லையே! இந்தப் பார்ப்பனர்கள் செய்து வைத்த சூழ்ச்சி தானே! உருவம் அற்றவன் என்று சொல்லி விட்டு, இன்னொரு பக்கத்தில் உருவத்தைச் செதுக்கி வைத்ததால் எவ்வளவுப் பெரிய குளறுபடிகள் என்று சிந்திக்க வேண்டாமா?

--------------------”விடுதலை” தலையங்கம் 20-7-2012

16 comments:

தமிழ் ஓவியா said...

குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு?


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பக்தர் கேள்வி

இது பைத்தியக்காரத்தனம் என்கிறார் கோவில் நிர்வாகி

பெங்களூர், ஜூலை 20-திருப்பதி ஏழுமலையான் தனது திருமணத்துக்காக, குபேரனிடம் எவ்வளவு கடன் வாங் கினார் என்பது உட்பட, பல்வேறு கேள்விகளுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பதில் கேட்டுள்ளார் பெங்களூரை சேர்ந்தவர்; கோவில் நிர்வாக அதிகாரியோ இதனை பைத்தியக்காரத்தனம் என்கிறார்.

பத்மாவதி தாயாரைக் காதலித்த ஏழுமலையான் அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்தக் கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன. வாங்கிய கடனை அடைக்க பக்தர்கள் காணிக்கை கொடுக்க வேண்டும் என்று திருப்பதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தின் அடிப்படையில் பெங்களூரைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர், தேவஸ் தானத்திடம் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், புராண காலத்தில் பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்ள, குபேரனிடம் ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு என்பது உட்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதற்கு கடந்த 6 மாதம் கடந்தும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பதில் கொடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு மாதத்துக்குள் பதில் கொடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.

ஆனால் 6 மாதம் கடந்தும் பதில் கொடுக்காததால், தேவஸ்தானத்துக்கு எதிராக 2 நாட்களுக்கு முன் ஆந்திர மாநில தகவல் அறியும் உரிமை ஆணையத்திடம் நரசிம்ம மூர்த்தி புகார் கொடுத்துள் ளார். இது குறித்து விளக்கம் கேட்டு திருப்பதி தேவஸ் தானத்துக்கு ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.

கடந்தாண்டில் (2011) தேவஸ் தானத்துக்கு கிடைத்த வருமானம்

தமிழ் ஓவியா said...

உண்டியல் காணிக்கை - ரூ.731.00 கோடி

வங்கி டெபாசிட் வட்டி - ரூ.405.23 கோடி

விஅய்பி டிக்கெட் வருவாய் - ரூ.165 கோடி

முடி காணிக்கை வருவாய் - ரூ.179 கோடி

பிரசாதம் விற்பனை - ரூ.135 கோடி

தங்கும் அறைகள் வருவாய் - ரூ.69 கோடி

ஆர்ஜித டிக்கெட் வருவாய் - ரூ.43 கோடி

தங்க டாலர் விற்பனை - ரூ.17 கோடி

ஓட்டல், கடைகள், மொட்டை கட்டணம் - ரூ.90.47 கோடி

திருமணத்துக்காக குபேரனிடம் ஆலோசனை நடத்தி பதில் தேவஸ்தானம் தகவல்

திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சீனிவாசராவ் கூறுகை யில், ஏழுமலையான் தனது திருமணத் துக்காக வாங்கிய கடன் எவ்வளவு என்பது உள்ளிட்ட கேள்விகள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. வந்தால், அறங்காவலர் குழு நிர்வாகிகள், ஜீயர் சுவாமிகள், அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பதில் அளிக்கப் படும் என்றார்.

திருமலை திருப்பதி தேவஸ் தான மக்கள் தொடர்பு அலுவலர் ரவி கூறுகையில், இது மதம் தொடர்பான பிரச்சினை. இந்த மாதிரி கேள்விகள் கேட்பது பைத்தியக்காரத்தனம் என்றார்.

புராணக் கதைகள்

திருப்பாற்கடலில் வந்த பிருகு முனிவர், தன்னை கண்டு கொள்ளாமல் அவமதித்த தாக மஹாவிஷ்ணு மார்பில் எட்டி உதைத்தார்.

தமிழ் ஓவியா said...

அடி வாங்கியும் அமைதி யான விஷ் ணுவோ, முனிவரின் காலை அழுத்தி பிடித்து விட்டார். இதை கண்டதும் முனிவர் தன் செயலுக்காக வெட்கப்பட்டார். மகாலட் சுமிக்கு வந்ததே கோபம். எட்டி உதைத்த முனிவரை சக்ராயுதத் தால் வெட்டி வீழ்த்தாமல், ஒத் தடம் கொடுக்கிறாரே என்று கோபத்துடன் வெளியேறி பூலோகத்தில் ஒரு அரண்மனை தோட் டத்தில் குழந்தையாய் கிடந்தாள்.

காதல் மலர்ந்தது எப்படி?

மன்னன் ஆகாச ராஜன் இந்த குழந்தையை தன் மகளாக வளர்த்தார். மகாலட்சுமி இல்லாமல் வருந்திய விஷ்ணு, உடனே சிறீநிவாசன் என்ற பெயரில் வேடனாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் மகாலட்சுமி வளர்வது கண்டு அவள் மீது காதல் கொண்டார். பத்மாவதிக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் முடிக்க சம்மதித்த ஆகாச ராஜன், பல கோடிக்கு சீதனம் தர வேண்டும் என்று நிர்ப்பந்தித்தார். (இவையெல்லாம் புராணக் கதைகள்)

கடன் பட்டது எப்படி?

உடனே சிறீநிவாசனான மஹா விஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி வராகன் (பன்றி முத்திரையுடன் கூடிய பொற்காசு) கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும்வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே நிபந்தனை.

வட்டி கட்டுவது எப்படி?

அதர்மமான வகையில் கோடியை போடுவோர் காணிக்கையை வட்டியாக வும், தர்ம வழியில் சம்பாதிப்போர் காணிக்கையை அசலின் ஒரு பகுதி யாகவும் பெறுவது என்று ஏழுமலை யான் முடிவு செய்தார்.

குபேரனுக்கு போகுமா?

குபேரனுக்கு கொடுப்பதற்காக காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்காக திருமலையில் அன்னதானம் முதலான பல வசதிகள் செய்து தருவதும், பக்தர்கள் தரிசித்து மகிழ பலவாறாக பெரு மாளுக்கு அலங்காரம் செய்வதும், இந் தியா முழுவதும் பல தர்ம காரியங்களை நடத்துவதுமாக (குபேரனுக்கு) போய்ச் சேருகிறது என்றும் சொல்லலாம். இப்படியெல்லாம் கதை.

மதம் சம்பந்தமான பிரச்சினையில் இப்படியெல்லாம் கேள்வி கேட்பது பைத்தியக்காரத்தனம் என்கிறார் கோயில் மேலாளர். இந்தப் பைத்தியக்காரத்தனத் தின் அடிப்படையில் கோயில் கட்ட லாமா? உண்டியல் வசூல் செய்யலாமா? இதனை எந்தப் பைத்தியக்காரத்தனப் பட்டியலில் சேர்ப்பதுவோ! 20-7-2012

தமிழ் ஓவியா said...

கவுதம புத்தர் ஒரு நாத்திகர்


உலகில் தோன்றிய சிந்தனையாளர்கள் வரி சையில் புத்தர் சிறப்பிடம் வகிக்கிறார். இன்று தமிழினத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நாத்திகக் கருத்துகளுக்கு எவ்வாறு புத்தர் கொள்கைகள் முன்னோடியாக திகழ்ந்தது என்பன பற்றி அறிய போதி மாதவன் சரித்திரம் என்னும் நூல் உதவும். அதில் புத்தரின் அறிவுரைகளை அப்படியே வெளியிட்டுள்ளனர்.

கடவுள் மறுப்பு

தெய்வங்களை நினைத்து இரங்கி ஏங்குவதில் பயனில்லை. பிரம்மனே இவ்வுலகை படைத்தான் எனில், இதை ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி வைக்க வேண்டும். (பக்கம் 73)

புனிதம்

தண்ணீரைத் தெளித்து விட்டு இது புனிதத்தலம் என்று கூறுவதால் ஓர் இடம் புனிதமாகி விடாது. புனிதத்தன்மை இதயத்தைப் பற்றிய உணர்ச்சி யேயாகும். தண்ணீரால் பாவத்தை கழுவ இயலாது (பக்கம் 108)

மனிதன் மயக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் மீன் புலால் முதலிய உணவுகளை விலக்குவதாலோ அம்மணமாக அலைவதாலோ, தலையை மழிப்பதாலோ, அக்கினிக்கு ஆகுதிகள் செய்வதாலோ அவன் பரிசுத்தமாகி விடமுடியாது.

ஆன்மா மறுப்பு

உடல் ஆன்மாவற்றது. பிக்குகளே; உடலே ஆன்மாவாயிருந்தால் இந்த உடல் நோய்க்கு உட்படாது. (பக்கம் 186)

உடலின் தோற்றத்தின் போது உள்ளே புகுந்து கொண்டு, அது மடியும் போது வெளியேறும் ஆன்மா ஒன்று இல்லையென்று அவர் (புத்தர்) மறுத்துள்ளார் (பக்கம் 188)

சுவர்க்கம் - நரகம்

நீருள் நின்று தவம் புரிவதால் சுவர்க்கம் கிடைக்கும் என்றால் மீன்களே முதலில் சுவர்க்கத்திற்கு உரியவை (பக்கம் 108)
பலியிடும் உயிர் உடனே சுவர்க்கம் செல்வதானால், ஒருவன் முதலில் தன் தந்தையையே பலியாக்கி அனுப்பி விடலாமே (பக்கம் 125)

பிரார்த்தனை

பிரார்த்தனை செய்து என்ன பயன்? இது வெளுத்துவிடாது. தெய்வங்களை வேண்டி உயிர்ப் பலி இடவேண்டாம். பண்டம் பழங்கள் வைத்து பூஜை செய்து பலனை எதிர்பார்த்து இருக்க வேண்டாம். (பக்கம் 233)

பொது உடைமை

செல்வர்களுடைய வானளாவிய மாளிகைதான் துயரத்தின் இருப்பிடம் 20-7-2012

தமிழ் ஓவியா said...

மனுதர்ம நூலை அம்பேத்கர் எரிக்கச் சொல்கிறார்


சிலவற்றைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே மனுஸ்மிருதி.

அநீதிகளைச் செய்தாவது சிலவற்றை அழிக்காவிட்டால் பார்ப்பன இனம் அழிந்து போகும் என்றெண்ணி, அதற்காகச் சிதறி - ஒற்றுமையின்றிக் கிடந்த பார்ப்பனர்களை ஒன்று திரட்டி, சதி வேலைகளை நரித் தந்திரத்தின் மூலம் செய்து முடிப்பதற்காக விடப்பட்ட அறைகூவல் தான் மனுஸ்மிருதி.

சிதைந்த ஒற்றுமையை மீட்க அவ்வப்போது இதுபோன்ற முயற்சிகள் நடைபெறுவது வரலாற்று உண்மை. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற பழமொழிக்கேற்ப, மிக மிக முயன்று, புதிய கொடுமையான பார்ப்பன (அ)நீதியை உருவாக்கியவன் மனு.

இந்த மனுஸ்மிருதி, நீதியும் நேர்மை மிக்கத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அப்படிப்பட்ட நீதி நூலை உருவாக்குமளவுக்கு அவன் (மனு) ஒரு சமூகவியல் அறிஞனும் அல்ல. அவன் ஒரு அயோக்கியன்.

ஒரு குலத்துக்கொரு நீதி வழங்கும் இந்த மனுஸ்மிருதி தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டும். மீளமுடியாக் கொடுமைச் சேற்றில் எங்களை புதைக்க எண்ணிய மனுஸ்மிருதியை, உயிரைப் பணயம் வைத்தாவது ஒழித்துக் கட்டியே தீர வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்தது இதனால் தான்.

அம்பேத்கர் சிந்தனைகள் என்ற நூலிலிருந்து 20-7-2012

தமிழ் ஓவியா said...

கடவுள் ஒருவர் இருக்கிறாரா?


கடவுளை நம்பும் முட்டாள்களே!

அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார். அவரன்றி ஒரு அணுவும் அசையாது, அவரே உலக நடப்புக்குத் காரணஸ்தர் ஆவார் என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே! கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவகோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

கடவுள் இருக்கிறார் என்றால், ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?

பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை? இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?

கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும் எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும், வணங்கியும் வந்தும், யோக்கியனாகவோ கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காண முடியவில்லையே, ஏன்?

- தந்தை பெரியார் (உண்மை, 14.7.1970

தமிழ் ஓவியா said...

மதம் தேவையா?


மதத்தைக் காப்பாற்றவே கோளல்களும், சொத்துக்களும், அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா?அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா? என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.

பெரியார்-(விடுதலை, 3.12.1962

தமிழ் ஓவியா said...

அய்யா பெரியார் வரலாற்று நாயகன்


வடநாட்டில் எத்தனையோ மதக் கலவரங்கள் நடக் கின்றன. ஆனால், தென்னிந்தியாவில் நடப்பதில்லை. அப்படி நடக்காமல் இருப்பதற்கான விதையை ஊன்றி யவர் பெரியார்தான். நான் இஸ்லாமியன். இறை நம்பிக்கை உள்ளவன். ஆனால், மூட நம்பிக்கை களை எதிர்ப்பவன். அவர் வரலாற்று நாயகன் என்பதில் சந்தேகமே இல்லை. திரைப்பட இயக்குநர் அமீர் - (குமுதம் ரிப்போர்ட்டர், 12.7.2012)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


நாம் செய்றது நல்ல காரியமா இருந்தாப் போதும். பக்தனா இருக்கிறத விட யோக்கியனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிக்கிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா? என்று கேள்வி எழுப்பிய பகுத்தறிவாளர் பெருந்தலைவர் காமராஜர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

சாமி குத்தம்...!


பகுத்தறிவுப் பகலவன் தோன்றிய இந்த மண்ணில் இன்றும், இப்படியும் நடக்கிறதா என்று நெஞ்சம் பதைத்தது. ஒருவேளை, முத்துலட்சுமி ரெட்டியின் காலத்திற்கு முந்தி நடந்த சம்பவமாக இருக்குமோ? மனம் குழம்பியது. 6.6.2012 குமுதம் இதழில் தப்புத்தாளம் என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரையில் ஜெயலட்சுமி என்ற மாரியம்மாவின் கதையைப் படித்தபோது...! பிழிவாக அதை இங்கே பார்ப்போம்:

ராஜம்மாவுக்குத் திருமணமாகி பத்து ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை. இனி குழந்தையே பிறக்காது என்று மருத்துவர்களும் கைவிட்ட நிலை. காரைக்குடி சுற்று வட்டாரத்தில் அவர்கள் ஏறி இறங்காத கோயில்களே இல்லை. கடைசியில் கல்லலுக்கு அருகில் உள்ள அம்மன் கோவில் வேண்டுதல் பலித்திருக்கிறது. ஆணோ பெண்ணோ அதை உனக்கே காணிக்கையா கொடுத்திடுறோம் என்றுதான் கணவன் மனைவியின் வேண்டுதல். (காணிக்கையாய்த் தருவதற்கு ஏன் பத்துமாதம் சுமந்து வேதனைப்பட வேண்டும்?) ஜெயலட்சுமி பிறந்தாள். பள்ளி சென்று கொண்டிருந்த அவள் பருவம் அடைந்தபோது வயது பன்னிரண்டு.

பெண் பிள்ளை ஆயிற்றே. கோயிலில் கொண்டுபோய்விட மனமில்லை. பொட்டுக் கட்டிவிட்டால் கடவுளுக்கும், கோயிலுக்கும் பணிவிடை செய்து அங்கேயே தங்கவேண்டும் என்பது வழக்கம். காலப்போக்கில் ஜமீன்தார்களும், செல்வந்தர்களும், நில பிரபுக்களும் பாலியல் உறவுக்கு உட்படுத்திய வரலாறுகளைக் கேட்டு இருவரும் அதிர்ந்து போனார்கள். எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள். குழந்தைக்குப் பதிலாக ஆடும் மாடும் காணிக்கை தந்தார்கள். உறவுக்காரர்களோ சாமிக்கு நேர்ந்துவிட்ட பெண்ணை வீட்டுல வச்சுக்கிட்டிருந்தா சாமி குத்தமாயிரும் என்று பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். கட்டிக் கிடந்த ஆடு மாடும் அடுத்தடுத்த மாதங்களில் இறந்துபோக தானாஆடுமாடு சாகுதுன்னா என்ன அர்த்தம்? சாமி குத்தந்தேன் என்று பேசாத வாய் இல்லை.

தமிழ் ஓவியா said...

ராஜம்மாவுக்குப் பயம்தான் என்றாலும் மகளைக் கோயிலுக்குத் துரத்த மனம் இடந்தரவில்லை. அதன் பிறகு ஆறேழு மாதத்தில் கணவனின் தந்தை கால்தவறி கிணற்றில் விழுந்து இறக்க, வேண்டாம் ராசம்மா, சாமி கொழந்தைய சாமி கிட்டேயே கொடுத்துடு. அதோட கோபத்துக்கு ஆளாகாதே என்று நச்சரித்தன உறவுகள்! இதற்கிடையே விழுப்புரம் அருகே குப்பம் என்ற ஊரில் ஒரு பெண்ணைத் தேவதாசி ஆக்கிய செய்தி அறிந்து கணவருடன் அங்கே ஓடினாள் ராசம்மா.

சாமிக்கு நேர்ந்துகிட்டா அந்தக் கொழந்தைய வீட்டுல வச்சுக்கப் படாது; அது சாமிகுத்தம். மீறினா அம்புட்டுப் பேத்தையும் போட்டுத்தள்ளிரும் என்று அவர்கள் சொல்ல அரண்டு போனார்கள் இருவரும். என்ன நடந்தாலும் சரி. பெண்ணை கோயிலுக்கு அனுப்புவதில்லை என்ற முடிவுக்கு வந்தார்கள். அடுத்த ஆண்டில், ராசம்மாவின் கணவன் லாரியில் அடிபட்டு செத்துப் போக ஊரே கொதித்தெழுந்தது. சாமி சும்மாவிடுமா? அடுத்து சொந்தபந்தத்துல காவு வாங்கும். இந்த ஊரையே பலி வாங்கினாலும் வாங்கும். நோய் வந்து ஆடுமாடுக சாகும். வெவசாயம் வௌங்காமப் போகும். பேசாம ஜெயலட்சுமிய சாமிக்கே கொடுத்துரு என்று ஊரே திரண்டு வந்து நிர்பந்தப்படுத்தியது.

மகளை அழைத்துக்கொண்டு கண்காணாத இடத்துக்குப் போய்விடலாம் என்று கூட நினைத்தாள்; வயசுக்கு வந்த பெண்ணோடு இந்தக் காலத்தில் எங்கே போவது? மகளைத் தேவதாசியாக்க உடன்பட்டாள். ஜெயலட்சுமி மாரியம்மாளாகும் சடங்கு நடந்தேறியது. கோயில் சொத்தானாள்! மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் போக, அவரது உத்தரவின் பேரில் மாரியம்மா இன்று காப்பகத்தில்! பொட்டுக் கட்டியாச்சு. இனி சாமிபாடு. அரசாங்கம் பாடு. ஊருக்கு வந்த ஆபத்து நீங்கிருச்சு என்கிறது ஊர்! காரைக்குடி வட்டாரத்தில் நடந்த கதையாம். கவனிக்கவும்!

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை இது என்றால் கொளுத்திவிடலாம். கொடுமைப்படுத்தும் கோரத்தை என்ன செய்யப் போகிறோம்?

அம்மன் கோயில் வேண்டுதலால்தான் குழந்தைபாக்கியம் கிடைத்ததா? ஏற்கனவே பூஜிக்கப்பட்ட தெய்வங்களுக்கு இதில் பங்கில்லையா? கேட்ட வரத்தை உடனே தரும் வல்லமை அந்த பொம்மை அம்மனுக்கு இருக்குமானால் பிள்ளைச் செல்வம் இல்லாதவர்கள் மட்டுமல்ல, நோய் வாய்ப்பட்டோர், வேலை இல்லாதோர், தொழில் முனைவோர், தேர்வு எழுதிய பள்ளிப் பிள்ளைகள், மழை வேண்டி வரும் உழவர்கள், கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருடர்கள் அங்கே வரிசை கட்டி நிற்க மாட்டார்களா? சுனாமியும், தானே புயலும் பலரின் உயிர்பறித்ததும், நாட்டைச் சீரழித்ததும் நேர்த்திக் கடனைச் செலுத்தத் தவறியதால் வந்த வினைதானா?

கேடேதும் இல்லாத வீடேதும் இருக்கிறதா? கீழ்மேல் ஆதலும், நோதலும், மகிழ்தலும், சாதலும் வாழ்வின் இயல்பே அன்றி வேறென்ன? புரிந்திருந்தால் மனப் பிறழ்வுகளுக்கும் உளைச்சல்களுக்கும் வேலை ஏது?
ஒருவர் இருவர் அல்ல, ஒரு குடும்பமே விபத்தில் உயிரிழக்கும் சம்பவங்கள் நாளும் நிகழ்ந்து கொண்டுதானே இருக்கின்றன?

படிப்பறிவில்லாத பாமரர்கள் வாழ்ந்த காட்டுமிராண்டிகள் காலத்தை என்றோ கடந்து வந்துவிட்டதாகச் சொல்கிறார்களே அதெல்லாம் கனவுதானா? கற்பனைதானா?

கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக இன்னும் எத்தனை காலம் காத்திருக்கப் போகிறோம்?

கண்களை இறுக மூடிக்கொண்டு பாழ் கிணற்றில் விழும் ப(க்)தர்களே, கருத்துக் குருடர்களே விழித்தெழுந்து தேடுங்கள் நல்லறிவை! விடியலையும், விடுதலையையும் அது தேடித்தரும் உங்களுக்கு!
(வேலை நிறைய இருக்கு எங்களுக்கும்)



- சிவகாசி மணியம்

தமிழ் ஓவியா said...

பெரியாரின் தொண்டு வியந்த அமெரிக்கப் பேராசிரியை


அமெரிக்காவின் பாஸ்டன் அருகில் உள்ள (Studbury) ஸ்டட்பர்ரி என்ற சிறு நகரத்தில் அமைந்துள்ள பிரபல ஆங்கிலக் கவிஞர் ஹென்ரி வேர்ஸ்ஒர்த் லாங்பெல்லோ (H.W.Longfellow) அவர்கள் பெயரில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவத்துடன் அமைக்கப்பட்டுள்ள லாங்க்பெலோ இன் (Longfellow Inn) உணவகத்தில், World Teach உலக நாடுகளுக்கு ஆங்கிலத்தினை நன்கு எழுதப் பேச உதவிடும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் பேராசிரியை ஹெலன் கிளாரி செலிவெர்ஸ் (Helan Clariessievers) நமது உண்மை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சிறப்பான மதிய உணவுக்கொப்ப சிற்றுண்டி விருந் தினை (Breakfast) 8.7,2012 ஞாயிறு காலை 9.30 மணி அளவில் கொடுத்து வரவேற்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் - பெரியார் கல்வி நிலையங்கள், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களின் சீரிய சமூகப் புரட்சித் தொண்டு பற்றியும் பாராட்டி, ஊக்கமூட்டும் வகையில் கலந்துரையாடினார்.

சென்னை, திருச்சி, தஞ்சை கல்வி நிறுவனங்களை பெரியார் அறக்கட்டளைகள் நடத்துவதை நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்த அந்த அம்மையார் (இவர் ஹார்டு வேர்டு பல்கலைக்கழக அமைப்பில் உள்ள உலக நாடுகளுக்கு ஆங்கில ஆசிரியர்களை அனுப்பி உதவும் தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆவார்). நமது நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் உயர் நிலைப் பள்ளி - குழந்தைகள் இல்லம் குழந்தைகள் பயன்படும் வகையில் ஆசிரியைகளை அனுப்பியுள்ளார். நமது இயக்கம், சமூகப் புரட்சியை அமைதியான வழியில் நடத்தி வருகிறது என்றும் இந்திய அரசியல்வாதிகள் பெரியார், காந்தி போன்ற தலைவர்களைப் பின்பற்றி தங்களின் நாட்டில் ஒரு புதிய சமூகத்தை அமைக்கலாம் என்று கூறினார். கி.வீரமணி அவர்களுடன் அசோக்ராஜ் அவர்களும் சென்றிருந்தார். பெரியார் உலகமயமாகி வருவதற்கு இது ஒரு அருமையான சான்று ஆகும்.

இச்சந்திப்பு குறித்து அசோக்ராஜ் அவர் களுக்கு பேராசிரியை ஹெலன் கிளாரி செலிவெர்ஸ் மின்னஞ்சலில் அனுப்பியுள்ள கடிதத்தில், மகிழ்ச்சியெல்லாம் என்னுடையதே! அன்று காலை உணவு அருந்திய நிகழ்ச்சி எனக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. நீங்கள் இருவரும் கூறியவை அனைத்தும், நீங்களும் உங்கள் தந்தையும், சகோ தரரும் செய்துவரும் நற்செயல்கள் அனைத்தும் மிகுந்த ஆர்வமும் தூண்டுதலும் அளிப்பதாக இருந்தன. என்னை சந்தித்துப் பேச டாக்டர் வீரமணி முன்வந்ததை நான் மிகவும் பாராட்டுகிறேன் எனக்காக அவரிடம் எனது நன்றியைத் தெரிவிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கையும், உணவுப் பொருளும்


- திருமதி.வாசுகி திருவள்ளுவர்

இந்தியா இன்னும் ஏன் வல்லரசாகவில்லை, லண்டன் பத்திரிகையில் படித்தவை, மூடநம்பிக்கையினால் உணவுப் பொருள்களை வீணடிக்கின்றனர்.

முதலாவது, எலுமிச்சம் பழம். அது படும்பாடு மிகவும் சுவாரசியமானது. அதை இரண்டாக வெட்டி குங்குமத்தை தடவி வாசற்படி இரு மருங்கிலும் வைத்தல், மனிதனை முன்நிறுத்தி எலுமிச்சையை காலால் நசுக்கி அதை நாலாப் பக்கமும் பிய்த்து எறிதல், மாலையாக கட்டி காயும் வரை நிலையில் கட்டி தொங்க விடுதல், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் சக்கரங்களில் வைத்து நசுக்குதல், வாகனத்தின் முகப்பில் மாலையாக தொங்க விட்டு திருஷ்டி கழித்தல், தற்சமயம் கடைகளில் கண்ணாடி குவளை நீரில் மிதக்க விடுதல்.

இரண்டாவது, தேங்காய். இதை சூரைத் தேங்காய் என்று வீதியில் போட்டு உடைத்தல். இது சிதறி மண்ணோடு கலந்து யாருக்கும் பயன்படாமல் செய்வது. மேலும் வாகனங்களின் டயர்களை குத்தி சேதப்படுத்துகிறது. மலையாளிகள் தென்னம்பாளையை வெட்டி குவளை (உலோகப் பானையில்) வைத்து அனைத்து விழாக்களிலும் வைக்கின்றனர். அது தேங்காயை கருவிலேயே அழிப்பதாகும்.

மூன்றாவது, பூசணிக்காய் காய்கறிகளிலேயே மிகவும் சத்துள்ளது. மிகவும் குளிர்ச்சியானது. அதை நடு வீதியில் போட்டு உடைத்தல் அல்லது அதில் விகாரமான உருவத்தை வரைந்து நிலையில் கட்டி தொங்க விட்டு அழுகச் செய்வது. நடுவீதியில் போட்டு உடைப்பதால் அதன் மீது ஏறும் வாகனங்கள் சறுக்கி நிறைய விபத்துகள் உண்டாகின்றது. மேலம் பூசணிப் பூக்களை பறித்து சாணியில் சொருகி வைத்து கருவிலேயே அதை அழித்து அழகு பார்க்கின்றனர்.

தினமும் சூடம் (கற்பூரம்) கொளுத்தும் பக்தர்கள் அது வலிநிவாரணி மற்றும் தேமலுக்கு தயாரிக்கும் மருந்து என்று தெரியாமல் வீணடிக்கின்றனர். அதை வெளிநாட்டினர் மருந்தாக்கி இந்தியரிடமே ஒரு குப்பி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர்.

ஆடி மாதமானால் வேப்ப மரங்களை மொட்டையாக்கி விடுகின்றனர் அம்மன் பக்தர்கள். வேப்பிலை ஆடை அணிந்து கற்கால மனிதனாகின்றனர். அந்த வேப்பக் கொட்டையை எடுத்து வெளிநாட்டினர் பல நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்கின்றனர்.

அபிஷேகம் என்ற பெயரில் கற்சிலைகளுக்கு பால், தேன், நெய், தயிர், இளநீர் ஆகியவற்றை ஊற்றி வீணடிக்கின்றனர்.

யாகம் என்ற பெயரில் நெய், பொரி போன்ற உணவுப் பொருள்களையும் விலையுயர்ந்த பட்டுத் துணிகளையும் தீயில் போட்டு பொசுக்குகின்றனர்.

கடவுளை வழிபடும் பக்தர்கள் சிந்தித்தால் இதைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கு இக்கருத்தைத் தெளிவுபடுத்தினால் இந்தியாவின் பொருளாதாரத் தையும், நிதியையும் பெருக்கலாம். விலைவாசியைக் கட்டுப்படுத்தி அரசாங்கத்தைக் குறை கூறுவதைத் தவிர்க்கலாம். இப்படி பக்தியின் பெயரால் உணவுப் பொருள்களை வீணடிக்காமல் இருந்தால் நாமும் நம் நாட்டை வல்லரசாக்கலாம் என்று நம்புவோமாக.

தகவல்: சேக்கிழான், சென்னை _ 81.

தமிழ் ஓவியா said...

நித்தியானந்தாவை மதுரை ஆதீனகர்த்தர் நீக்குவாரா? ஏற்கெனவே சொன்ன வாக்கைக் காப்பாற்றுவாரா?



நித்தியானந்தா குற்றவாளி என்று கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு!
முறைகேடாக வசூலித்த ரூ.8 கோடியைத் திருப்பித் தர உத்தரவு
நியூயார்க், ஜூலை 21- நித்தி யானந்தா பவுண்டேஷன் முறைகேடு களில் ஈடுபட்டது தெரியவந் துள்ளதால், அதற்கு நன்கொடை கொடுத்த அமெரிக்கா வாழ் இந்தி யருக்கு 8கோடியை திருப்பித்தர வேண்டும் என்று கலிபோர்னியா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறி யுள்ளது.

அமெரிக்க நீதிமன்றம் நித்யானந் தாமீதுள்ள குற்றம் உண்மை என்று தீர்ப்புக் கூறினால் நித்யானந்தாவை இளைய ஆதீனகர்த்தர் பதவியி லிருந்து நீக்கி விடுவேன் என்று செய்தியாளர் களுக்குப் பேட்டியாக அளித்தார் மதுரை ஆதீனகர்த்தர். இந்த நிலையில் நித்யானந்தா நீக்கப்படு வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நித்தியானந்தா பவுண்டேஷன் அங்கு வாழும் இந்தியர்கள் உள்ளிட்டோரிடம் நன்கொடை வசூலித்தது. ஆனால், நித்தியானந்தா பவுண்டேஷன் நிதிமோசடியில் ஈடுபட்டதாகவும், லாபமில்லா அமைப்பு என்று கூறி, நன்கொடைகளை தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாகவும் குற்றச் சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நித்தி யானந்தா பவுண்டேஷனுக்கு நிதியுதவி அளித்த, அமெரிக்கா வாழ் இந்தியரான பொபட்லால் சாவ்லா என்பவர் கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் கடந்த 26 முதல் 29ஆம் தேதி வரையில் விசாரணை நடைபெற்றது. நித்தியானந்தாவின் முதன்மை சீடரான மா நித்தியா சதானந்தா என்று அழைக்கப்படும் ஜமுனா ராணி, வழக்கு விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் கலிபோர்னியா நீதிமன்றம் வெளி யிட்டுள்ள தீர்ப்பு:

நித்தியானந்தா பவுண்டேஷன், பொபட்லால் சாவ்லாவை ஏமாற்றி நிதி பெற்றிருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

நித்தியானந்தா பவுண் டேஷனின் ஏஜன்டாக நித்தி யானந்தா செயல்பட்டுள்ளார். பவுண் டேஷனின் நடவடிக்கைகள் அனைத் திலும் அவர் முக்கிய பங்காற்றி யுள்ளார். பாதிக்கப்பட்ட பொபட் லால் சாவ்லாவுக்கு நித்தியானந்தா பவுண்டேஷன் ரூ.8 கோடியை திருப்பி தர வேண்டும். மேலும், அவருடைய வழக்குச் செலவு அனைத்தை யும் பவுண்டேஷன் தரவேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நித்தி யானந்தா பவுண்டேஷனுக்கு நிதியுதவி அளித்த மேலும் பலர், இதேபோல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தங்களுடைய நிதியை திரும்ப பெற லாம் என்று திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

21-7-2012

தமிழ் ஓவியா said...

பொன் மொழிகள்

நாம் துணிச்சலோடு இருந்தால் எந்த சக்தியும் நமக்குத் துணையாக வந்துவிடும்.

கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதைவிட உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்தது.

நீங்கள் செய்யும் தவறை உடனே திருத்திக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இன்னொரு தவறைச் செய்த வராகி விடுவீர்கள்.

வெற்றி என்பது லட்சியத்தை படிப்படியாக புரிந்து கொள்வது.

தமிழ் ஓவியா said...

இந்நாள்... இந்நாள்....


செக்காட்டுபவனும், பீடா கடைக்காரனும், வண் ணானும் எதற்காக சட்டசபைக்குச் செல்லவேண்டும் என்ற வினாவை விழுப்பிய வருணாசிரம வீரர்! திலகர் பிறந்த நாள் இந்நாள் (23.7.1859)