Search This Blog

9.7.12

வாசக சாலைகளும், கல்வியின் நிலையும் -பெரியார்



அன்புள்ள தோழர்களே!

பொதுமக்களுக்கு அறிவூட்டுவதற்கு இம்மாதிரி வாசகசாலைகள் பெரிதும் அவசியமானதாகும். பள்ளிக்கூடங்கள் எழுத்து வாசனையையும் ஏதாவதொரு விஷயத்தில் விளக்கத்தையும் தான் உண்டாக்க உதவும். ஆனால், வாசகசாலை என்பது பொது அறிவு விளக்கத் தையும் சகல விஷயங்களிலும் ஞானத்தையும் உண்டாக்கும். நல்ல முறையில் அமைக்கப்படும் வாசகசாலையும், புத்தக சாலையும் மனிதர்களை சகல விஷயங் களிலும் ஞான பண்டிதர்களாகவும் அனுபவ ஞானமுடையவர்களாகவும் ஆக்கிவிடும். நம் நாட்டில் பொது உணர்ச்சியின் மீது ஏற்படுத்தப்படும் வாசகசாலை, புத்தகசாலை மிகக் குறைவென்றே சொல்லலாம்.

நம் நாட்டில் ஒரு புத்தகசாலை இயக்கம் இருப்பதாகவும், அதற்கு சர்க்கார் ஆதரவு கூட இருப்பதாகவும், 4, 5 வருடமாக அறிந்து வருகிறேன். ஆனால், அது யாரோ ஒரு குறிப்பிட்ட நபர்களின் சுய நலத்துக்கும், சில குறிப்பிட்ட பத்திரிகை, புத்தகம் ஆகியவை விற்பனையாவதற்கும், உள் எண்ணத்துக்கும் பயன்பட்டு வருவதாக உணர்கிறேன். நம் நாட்டில் எப்படிப் பட்ட பொது நன்மையான காரியத்தையும், ஒரு சில நபர்களோ, ஒரு வகுப்போ சுவாதீனம் செய்து கொண்டு சுயநலத்திற்கே பயன்படுத்திக் கொண்டு வரப்படுகிறது. இதற்குக் காரணம் பொது மக்களுக்குக் கல்வியறிவும், பொது ஞானமும் இல்லாததேயாகும்.

மத விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பொது ஜனங்கள் பக்தி செலுத்தவும், பணம் கொடுக்கவும், அடிபணியவும் ஒரு வகுப்பார் அவற்றை கொள்ளையடிக்கவும், நலம் பெறவும்தான் பயன்படுத்தப்படுகிறதே ஒழிய, மற்றபடி மதத்தால் ஒழுக்கமோ, ஞானமோ பெற முடிகிறதா? என்று பாருங்கள். அது போலவே அரசியலை எடுத்துக் கொள்ளுங்கள். பொது ஜனங்கள் காசு பணம் கொடுக்கவும், ஓட்டுக் கொடுக்கவும், ஒரு வகுப்பார் அதனால் நலம் பெறவும், உயர் வாழ்வு நடத்தவும் மற்ற மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தவும் தான் பயன்பட்டு வருகிறது. அதுபோலவேதான் கல்வியை எடுத்துக் கொண்டாலும் சரி, வேறு எதை எடுத்துக் கொண்டாலும் சரி அவற்றிற்காக பொது மக்கள் வரி கொடுக்க வேண்டும். கஷ்டப்பட வேண்டும். பலனை எல்லாம் ஒரு சிறு வகுப்பார் அடையவேண்டும் என்கிறதாகத்தான் இருந்து வருகிறது.

உழைப்பு நமக்கு, பலன் யாருக்கு?

கல்விக்காக செலவாகும் பணம், நேரம், உழைப்பு ஆகியவைகளை எடுத்துக் கொள்வோமேயானால் அதனால் கல்வி கற்றுக் கொடுப்பவர்கள் என்னும் கூட் டத்தார் அடையும் பலனில் 4இல் ஒன்று 8இல் ஒன்று கூடப் படிக்கும் மக்களுக்கோ, படிக்கச் செலவுக்கு பணம் கொடுக்கும் பெற்றோர்களுக்கோ பயன்கிடையாது. நம் கல்வித் திட்டம் பெரிதும் கற்றுக் கொடுப்பவர்கள் நன்மைக்கு ஆகவே இருந்து வருகிறது. இவற்றிற்கு எல்லாம் காரணம் பொது மக்களுக்குப் பொது ஞானம் இல்லாததேயாகும்.
புத்தக சாலை, வாசக சாலை ஆகியவைகளை வெளிநாடுகளில் நான் பார்த்து இருக்கின்றேன். ஒரு புத்தக சாலையில் 500 பேர் 600 பேர் வேலை யாட்கள் இருந்து வருவதைப் பார்த்தேன். 3 லட்சம் 4 லட்சம் புத்தகங்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். தினம் ஒன்றுக்கு 5 ஆயிரம் 10 ஆயிரம் பேர்கள் வந்து படிப்பதும், எழுதிக்கொண்டு போவதும், புத்தகங்கள் எடுத்துக் கொண்டு போவது மான காரியங்களை ஒரு நாள் முழுதும் இருந்து பார்த்து இருக்கிறேன்.

கிராமங்களுக்கும் மற்ற சின்ன ஊர்களுக்கும் புத்தகங்கள் வாரா வாரம் அனுப்பப்படுவதையும் திரும்பி வந்து சேருவதையும் பார்த்தால் மிக மிக ஆச்சரியமாய் இருக்கும். ரயில்வே வாகன் புத்தகசாலையின் முன் வாசலில் வந்து நிற்கும். அந்த ரயில் தொடர்ச்சியாகப் போய்ச் சேரும் ஊர் வரையில் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு கட்டு வீதம் பல புத்தகங்கள் கட்டப்பட்ட கட்டுகள் வாகன் நிறைய அடுக்கப்படும். தபால் கட்டுபோல் அது டேஷன் டேஷனுக்கு எடுத்துக் கொடுக்கப்படும். அதுபோலவே வரும் போது படித்து முடித்த புத்தகங்கள் கட்டுக்கட்டாய் வாங்கிவரப்படும். இந்தக் காரியம் ஒரு பெரிய இலக்காவாக நடைபெறுகிறது.

பத்திரிகை அபிமானம்

அது போலவே பத்திரிகை படிப்பதும் நடைபெறுகிறது. பத்திரிகை படிக்காத மனிதன் சமுகத்தில் கேவலப்படுத்தப் படத்தக்கவராவர். சகல கூலிக் காரர்களும், தொழிலாளிகளும் வீட்டு வேலைப் பெண்களும் தினம் 2 முறையாவது பத்திரிகை படிப்பார்கள். வீடுமெழுகும் ஒரு வேலைக்காரப் பெண் ஒரு கையில் லோஷன் நனைத்த துணியில் நிலத்தை மெழுகிக் கொண்டே மற்றொரு கையால் பத்திரிகை படித்துக்கொண்டே இருப்பதை நான் பார்த்தேன். பத்திரிகை விநியோகிக்கப் பட்ட 2 மணி 4 மணி நேரத் திற்குள் பழைய பத்திரிகையை வாங்கும் வியாபாரி வந்துவாங்கிக் கொண்டுபோய் கடைகளுக்கு விற்றுவிடுவான். அன் றாடப் பத்திரிகையை அன்றாடமே கடையில் சாமான் மடித்துக் கொடுப்பதைப் பார்க்கலாம். அரசியல் ஞானமும், மற்றும் ஊர்ப் பொது விஷயமும் ஒவ்வொரு வருக்கும் தெரியும். ஒருவரை ஒருவர் ஏமாற்றமுடியாது. இவற்றிற்கெல்லாம் காரணம் அந்த நாடுகளில் படித்த மக்கள் 100க்கு 100 பேர்களாக இருப்பதே ஆகும்.

நம் நாட்டில் 100க்கு 8 பேர் 10 பேரே படித்திருக்கிறார்கள். பெண்கள் 1000க்கு 8 பேர் 10 பேரே படித்திருக் கிறார்கள். இதனால் அதிக வாசக சாலை ஏற்படவோ அதிக புத்தகசாலை ஏற்படவோ இடமில்லாமல் போனதோடு, ஏற்பட்டாலும் பயன்படவோ, நிலை பெறவோ முடியாமல் போய்விடுகிறது. நம்மில் கொஞ்சம் பேரே படித்திருந்தாலும் நமக்குப் படிக்க நல்ல புத்தகங்கள் கிடை யாது. தமிழ்ப் புத்தகமெல்லாம் புராணங்களும், அவற்றிற்குப் புதுப்புது உரைகளும் கருப்பொருள்களும், நுண்பொருள்களு மாகத்தான் இருக்கிறதே ஒழிய, அறிவுக்கு ஏற்ற புத்தகங்கள் இல்லை. கதைப் புத்தகம், இலக்கியப் புத்தகம் என்பதும் ஒரு ஊரில் ஒரு ராஜா, அவன் வேட்டைக்குப் போனான். அங்கொரு பெண்ணைப் பார்த் தான் காதல் கொண்டான் என்கின்ற துவக்கமும், காதலுக்கு உயிரை விட்டான்; கற்புக்காக உயிரை விட்டான் என்கிற முடிவுமல்லாமல் வேறு விஷயம் காண்பது அரிதாகவே இருக்கும். நம் புத்தக வியாபாரிகள், வித்வான்கள், கலை வாணர்கள் எல்லோருடைய யோக்கி யதையும் இப்படித்தான் இருக்கிறது.

இங்கிலீஷின் சிறப்பு

இங்கிலிஷ் பாஷைக்கும், கலைக்கும் மத சம்பந்தமோ, பைபிள் சம்பந்தமோ கிடையாது. இங்கிலிஷ் பண்டிதர்களுக்கு மத சம்பந்தமான விஷயம் தெரியாது. ஆனால், தமிழ் பண்டிதனுக்கு மதத்தைவிட வேறொன்றும் தெரியாது. இதனால் தான் நம் பாஷைகள் உலகில் மதிக்கப்படுவதில்லை. ஆதிபாஷையாக இருக்கலாம். கடவுள் பேசிய பாஷையாக இருக்கலாம். அநேக அருள் வாக்கு கொண்ட பாஷையாக இருக்கலாம். அது வேறு விஷயம். அறிவுக்கு பயன் உண்டா? என்பதற்குப் பதில் வேண்டும். நம் தமிழ் பண்டிதர்கள் 100க்கு 99 பேர்கள் மத பக்தர்களே ஒழிய, அறிவாளிகள் என்று சொல்லத்தக்கவர்கள் மிகச் சிலரேயாவார்கள்.

ஆனால், தமிழ் பாஷை நமக்கு நன்மை அளிக்கவில்லை. நமக்கு இன்று இருக்கும் சிறிது வீரத்துக்கும், தன்மான உணர்ச்சிக்கும் தமிழ் எவ்வளவோ உதவி புரிந் திருக்கிறது. அது இல்லாதவரை இவ்வளவு தமிழ் மக்களும் நிஜமாய் குரங்கு களாகவே (அனுமார்களாகவே) இருந்திருப்போம். ஆனாலும் தமிழைப் போற்ற வேண்டுமானால், பரப்ப வேண்டு மானால் மதத்திலிருந்து பிரிக்க வேண் டும். விஞ்ஞானம், பொது அறிவு தமிழில் ததும்ப வேண்டும். பத்திரிகைகளும், வெறும் அரசியலும் மதமுமாகத் தான் இருக்கிறதே தவிர பொது அறிவுக்கு பத்திரிகை இல்லை.

பொது அறிவு பரப்பக்கூடிய பத்திரிகைகள் மலிந்திருக்குமானால் மதத்தினால் அரசியலில் மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள இழிவுகளும் கேடுகளும் ஏற்பட்டிருக்கவே மாட்டா. ஆதலால் இந்த வாசக சாலை புத்தகசாலை நிர்வாகஸ் தர்கள் இவற்றை கவனிக்க வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். இவ் வாசகசாலைக்குப் பனகல் வாசகசாலை என்று பெயர் வைத்திருப்பதில் நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறேன்.

பனகல் பெருமை

பனகல் என்று பெயர் வைப்பது பனகல் ராஜாராமராய நிங்காரின் தனிப்பட்ட பெயருக்கு ஆக அல்ல. அது ஒரு புரட்சியின் அறிகுறியைக் காட்டுவ தற்கு ஆகும். பனகால் ஒரு புரட்சி வீரர். தியாகராயரையும், மாதவநாயரை யும் லெனினுக்கு ஒப்பிட்டால் பனகால் டாலினுக்கு ஒப்பிடலாம். இவர்களு டைய புரட்சி வீரம் தான் தேவர்களாய் இருந்த இந்நாட்டு பார்ப்பனர்களை மனிதர்களாக ஆக்கிற்று. அவர்களது புரட்சித் தன்மைதான் இந்நாட்டு சூத் திரர்களை இழிமக்களை கீழ்ஜாதி யார்களை மனிதர்களாக ஆக்கிற்று. இக்காரியம் மதங்களையும் கடவுள் களையும் ஒழிப்பதைவிட சொத்துக் களை சமமாக பிரித்துக் கொடுப்பதை விட முக்கியமானதும் பிரயாசையான தும் என்பதை உணருங்கள்.

ஓர் உதாரணம்

இன்றைய சூத்திரர்களுக்கும் பார்ப் பனரல்லாத மக்களுக்கும் சண்டாளர்களுக்கும் தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கும் இதன் அருமையும் பெருமையும் தெரியாது. ஏனெனில் இப்படிப்பட்டவர்கள், மனிதத்தன்மை சமத்துவ உணர்ச்சி ஏற்பட்டதற்குப் பிறகு அறிவு பெற்றவர்களும் கருப்பந்தரித்த வர்களுமாவார்கள். ஆதலால் அவர்கள் பிறக்கும் முன்பு அறிவு பெறுமுன்பு அவர்கள் சமுகத்துக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் என்ன யோக்கியதை இருந்தது என்பது அவர்களுக்குத் தெரி யாது. ஒரு சிறு உதாரணம் சொல்லு கிறேன். சுமார் 30, 35 வருஷங்களுக்கு முன் எனது தகப்பனார் ஈரோட்டில் முனிசிபல் கவுன்சிலர், பிரபல வியாபாரி, சுமார் 100, 150 ரூபாய் இன்கம்டாக்ஸ் கட்டி வந்தவர். அவரை அக்காலத்தில் 12ஙூ ரூ 15 ரூ சம்பளம் உள்ள ஒரு முனிசிபல் பில்கலெக்டர் பார்ப்பனன் வரி விதிப்பு விஷயமான ஒரு விண்ணப்பத்தை நேரில் பார்த்து பைசல் செய்ய மண்டிக் கடைக்கு வந்து கூப்பிடுவான். அப்படிக் கூப்பிட வந்தால் அவனைக் கண்டதும் என் தகப்பனார் எழுந்து ராவால ராவால தேவடா வரவேணும் வரவேணும் சாமீ என்று இரு கை கூப்பி (தூக்கி) கும்பிட்டு உட்காரச் சொல்லிவிட்டு நின்று கொண்டே இருப்பார். அப்பார்ப்பன பில்கலெக்டர் தலை ஆட்டிவிட்டு உட்கார்ந்து கொண்டு ஏமிரா வெங்கிட்ட நாயுடு போத்தாமா ஆஇண்டினி சூசே தானிக்கு ஏண்டா வெங்கிட்ட நாயுடு, அந்த வீட்டை பார்க்க போகலாமா? என்று கூப்பிடுவான். என் தகப்பனார் ஆ! ஹா என்று சொல்லி வஸ்திரத்தைத் தலையில் கட்டிக் கொண்டு அவன் பின்னால் புறப்பட்டு விடுவார். சுற்றி விட்டு வந்தவுடன் மஞ்சள், மிளகாய், கருப்பட்டி வெல்லம், எல்லாம் ஒரு சாக்கில் கட்டி பையனிடம் கொடுத்து சுவாமிகள் வீட்டில் கொடுத்து விட்டுவா என்று சொல்லி வழியனுப்புவார் இதை நான் நேரில் பார்த்ததைச் சொல்லுகிறேன்.

பார்ப்பனத் திமிர்

இதே மாதிரி எவ்வளவு பெரிய மிராசு தாரரையும், ஒரு வக்கீல் குமாஸ்தா பார்ப்பனன் நாயிலும் கீழாக மதித்து அடாபுடா என்று பேசுவான். இதுவும் நான் கண்ணால் பார்த்ததேயாகும். இந்த நிலைமைக்கும், இன்றைய நிலைமைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். ஆகவே எனக்கும் என் போன்றவர் களுக்கும் அல்லவா தெரியும் தியாகராயருக்கும், நாயருக்கும், பனகாலுக்கும் எவ்வளவு மரியாதை செலுத்த வேண்டும், எவ்வளவு பெருமை அளிக்க வேண்டும் என்பது.

சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பு பார்ப்பனர்கள் நிலைமையும் மத உணர்ச்சியும் எப்படி இருந்தது? இந்த 10, 15 வருஷத்தில் எவ்வளவு தூரம் மாற்ற மடைந்திருக்கிறது? என்பவைகளை உணர்ந்தவர்களுக்குத்தான் அவ்வியாதியினால் ஏற்பட்ட பலனும் அதன் அவசியமும் விளங்கும். இம் மாதிரியான பெரிய புரட்சிகள் சமுதாய வாழ்வில் உண்டாக்கின இயக்கங்களுக் கும், புரட்சிக்காரர்களுக்கும் மக்கள் நன்றி செலுத்துவதற்கும், அவற்றை ஞாபகப் படுத்தி மற்றவர்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்பதற்குமாகவே அவர்களின் பெயர்களை மக்களுக்கும் இம் மாதிரியான வாசகசாலை முதலியவைகளுக்கும் இடப்பட்டு வருகிறது.

ஒரு வேண்டுகோள்

இவ்வூர் பொதுஜனங்கள் இவ்வாசக சாலையை ஆதரிக்க வேண்டும். அங்கத் தினர்களாக வேண்டும். தாராளமாக பண உதவி செய்ய வேண்டும். பெண்களும், ஆண்களும் அங்கத்தினர்களாக வேண் டும். சீர்திருத்த உணர்ச்சியும், பகுத்தறிவு உணர்ச்சியும் பெற வேண்டும். அறிவுக்குப் புறம்பான எதையும் அலட்சியம் செய்ய வேண்டும்.

இந் நிலைமையை நம் மக்கள் அடைந்து விட்டால் சுதந்திரத்துக்கு என்றும், சுயமரியாதைக்கு என்றும் மக்கள் போர் தொடுக்க வேண்டிய அவசியமே ஏற் படாது. ஏனெனில் இன்று நாம் அறிவில்லாத குறையில் அடிமையாய் சுயமரியாதை அற்றுக் கிடக்கின்றோமே ஒழிய, சுதந்திரமில்லாமல் அல்ல. மனிதனுக்குச் சுதந்திரம் இருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ள அறிவில்லை. எப்படி பயன்படுத்துவது? எது சுதந்திரம்? என்பது கூட நமக்கு இன்னும் சரியாய் தெரியவில்லை. சிலர் வெள்ளைக்காரனை விரட்டுவது, சுதந்திரம் என்கிறார். சிலர் பொருள்கள் சமமாய் இருப்பதைச் சுதந்திரம் என்கிறார், சிலர் கட்டுப்பாடு ஒழுக்கம் இல்லாமல் இருப்பது சுதந்திரம் என்கிறார். சிலர் தனது முட்டாள்தனம், பேராசை, அயோக்கியத்தனம், நன்றி கெட்டத்தனம் ஆகியவைகளுக்கு ஏற்ப தன்னிச்சையாய் திரிவது சுதந்திரமென்கிறார். சிலர் பாடுபடாமல் ஊரார் உழைப்பால் வாழ்ந்து திரிவது சுதந்திரம் என்கிறார். எது சுதந்திரம் என்பது ஒரு பெரிய பிரச்சினையாய் இருக்கிறது.
ஆகவே, மக்கள் யாவரும் கல்விபெற்று உலக விவகாரமுணர்ந்து, தன்னைப் போல் அந்நியர் என்பதை உணர்ந்து அன்புடனும் பரோபகார உணர்ச்சியுடனும் இருந்து வாழ ஆசைப்பட வேண்டியது மனிதனுக்கு அவசியமாகும். அதற்கு இப்படிப்பட்ட வாசகசாலை அறிவு வளர்ச்சிப் புத்தகம் சமத்துவ உணர்ச்சி சம்பாஷணைக் கூடம் ஆகியவை அவசியம் என்று சொல்லு கிறேன். தோழர்களே!

---------------01.03.1938-இல் காஞ்சிபுரம் பனகல் அரசர் வாசக சாலை ஆண்டு விழாவில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் உரை-”குடிஅரசு” - சொற்பொழிவு - 06.03.1938

4 comments:

தமிழ் ஓவியா said...

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கோயில்களா? சட்ட விரோத நிகழ்ச்சியை அரசு தடுக்குமா?


மதுரை, ஜூலை 9- உசிலம்பட்டி வட்டத்திலுள்ள போச்சம்பட்டி ஊராட் சியில் உள்ள சமத்துவபுரத்தில் இரண்டு கோயில்கள் சட்ட விரோத மாக கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஓரிடத்தில் காளியம்மன் கோயி லும், மற்றொரு இடத்தில் விநாயகர் கோயிலும் கட்டுவதற்கு முன்னோட் டமாக, சமத்துவபுரத்தின் இரு இடங்களில் சிமென்ட் மேடைகள் கட்டப்பட்டு அங்கு காளியம்மன் கற்சிலையும், விநாயகர் கற்சிலையும் வைக்கப்பட்டுள்ளன.

ஜாதி, மத பேதமின்றி மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒற்றுமை யாக வாழ்வதற்காக தந்தை பெரியார் பெயரில் கலைஞர் ஆட்சியில் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர், உயர்ஜாதியி னர், மதசிறுபான்மையினர் குடும்பங் களும் கலந்து வசிக்க ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் 100 வீடுகள் ஒதுக்கப்பட்டன. இலவசமாக அரசு வீட்டை குடியிருப்பாகப் பெற்று பயன டைந்த மக்களே பெரியார் நினைவு சமத்துவப்புரத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையிலும், பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எந்தவித மத வழிபாட்டுத்தலமும் இருக்கக் கூடாது என்ற சட்டத்திற்கு விரோத மாகவும் கோயில்கள் கட்டுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

போத்தம்பட்டி சமத்துவபுரத்தில் கோயில் கட்டுவதற்கு அந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம் மாள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்த சமத்துவபுரத்தில், 2011 இல் தொடங்கப்பட்டது முதல் 22 கிறித் துவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின் றன. இங்கு ஒரு தேவாலயம் கட்ட இந்த 22 குடும்பங்களும் அனுமதி கோரி வருகின்றனர் என்று பாண்டி யம்மாள் கூறுகிறார்.

சமூக விரோதிகள்

உசிலம்பட்டி வட்டத்தில் பெரும் பான்மையினராக உள்ள சில ஜாதி இந்துக்கள் போத்தம்பட்டி சமத்துவ புரத்தில் உள்ள பல வீடுகளைக் கைப்பற்றியுள்ளனர். அவர்களில் பலர் பணத்தை அதிக வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் ஆவர். கடன் வாங்கியவர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் போவதால், அவர்களின் சமத்துவபுர வீடுகளைக் கடன் கொடுத்தவர்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள்.

சமத்துவபுர விவகா ரங்களை இப்போது இந்தக் கும்பல் தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தாகக் கூறப்படுகிறது. அவர்கள் செல்வாக்கும், அதிகாரமும் மிக்கவர் களாக இருப்பதால் அவர்களிடம் எதுவும் கேட்க முடிவதில்லை என்று சமத்துவபுரத்தில் குடியிருக்கும் மற்ற மக்கள் கூறுகின்றனர்.

நரிக்குறவரை அடக்கம் செய்யக் கூடாதாம்

சமத்துவபுரத்தில் குடியிருந்த நரிக்குறவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்துபோனபோது, அவரது உடலை சமத்துவபுரத்துக்கு அருகில் அடக்கம் செய்வதை இந்த ஆட்கள் தடுக்க முயன்றனர் என்று பாண்டியம் மாள் என்பவர் இந்த கும்பலின் அராஜகப் போக்கைப் பற்றி கூறினார். இங்கு கோயில் கட்டுவதைத் தடுக்க, தான் ஏற்கெனவே மதுரை ஆட்சியர் அன்ஷூல் மிஸ்ராவிடம் மனு கொடுத் திருப்பதாகவும் பாண்டியம்மாள் கூறினார்.

கோட்டாட்சியர்

இது பற்றி கேட்கப்பட்டபோது, சமத்துவபுரத்தில் கோயில் கட்டுவது விதிகளுக்கு எதிரானது. சமத்துவ புரம் உருவாக்கப்பட்டதன் நோக்கத் தையே அது சிதைத்துவிடும். நாங் கள் உடனடியாக நடவடிக்கை எடுப் போம் என்று வருவாய் கோட்டாட் சியர் சாந்தி கூறினார். 9-7-2012

தமிழ் ஓவியா said...

செவ்வாய்தோஷம் பேசுவோருக்குச் சவுக்கடி!


செவ்வாய்க்கிரகத்திலிருந்து எடுக்கப்பட்ட புத்தம் புதிய ஒளிப்படங்களை நாசா முதன்முறையாக வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிரகத்தை ஆய்வு செய்வதற்காக நாசா அனுப்பிய இயந்திர ரோவர் அங்கு தரையிறங்கி இப்புகைப்படங்களை தனது 380 பாகை சுழலக்கூடிய சூப்பர் கேமராக்களால் படம்பிடித்துள்ளது.

செவ்வாயில் சுமார் பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியதாக கருதப்படும் செம்மண்ணால் போர்த்தப்பட்ட எரிமலை குழிகள், இப்புகைப்படங்களில் தெளிவாக தெரிகின்றன. இயந்திர ரோவர், செவ்வாயில் 3,000 மார்டியன் நாட்கள் (8 வருடங்களும் 6 மாதங்களும்) தங்கியுள்ளதுடன், 15 வருடங்களுக்கு அங்கு தங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 1997ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி குறித்த ஆயசள ஞயவாகனேநச பூமியில் தரையிறங்கியது. இவ்வொளி படங்கள் 2011 டிசம்பர் 21 - 2012 மே 8ஆம் தேதி கால எல்லைக்குள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் நாசாவின் மற்றுமொரு ரோவர் செவ்வாயில் தரையிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 9-7-2012

தமிழ் ஓவியா said...

பூனைக்குட்டி வெளியில் வந்தது ராஜபக்சே சொல்லித்தான் முள்ளிவாய்க்காலில் தமிழர்களைக் கொன்றோம்! ராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியா!


கொழும்பு, ஜூலை 9- முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதற்குக் காரண கர்த்தா இலங்கை அதிபர் ராஜபக்சேதான் என்ற உண்மையைப் போட்டு உடைத்தார் இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியா.

முள்ளிவாய்க்கால் பகுதியில் 45,000 தமிழர் கள் அடைக்கலம் புகுந் திருந்ததால், அங்கு தாக்குதல் நடத்த சற்று தயங்கினோம். ஆனால் ராஜபக்சேதான் தொடர்ந்து தாக்கி அழிக்கும்படி உத்தர விட்டார். இதையடுத்தே மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். இதனால் தான் ஈழப் போரில் வெல்ல முடிந்தது அந் நாட்டு படை தளபதி ஜெகத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.

ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு, ராஜபக் சேவுக்கு எதிரான போர்க்குற்றசாட்டுக்கு தேவையான வலுவான ஆதாரமாக பின்னர் உரு வெடுக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஈழத்தில் நடந்த இறுதிகட்டப்போரின் போது முள்ளிவாய்க்கா லில் விஷ கொத்துக்குண் டுகள் வீசி 40,000 தமி ழர்கள் கொல்லப்பட்ட னர். இந்த போர்க்குற்றத் திற்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்ட தால் சிறீலங்கா அரசு பல்வேறு நெருக்கடி களை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் சிறீலங் காவின் குருநாகல் பகுதி யில் நடந்த படை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு படைத் தளபதி ஜெகத் ஜெயசூர்யா ராஜபக்சே சொல்லித்தான் முள்ளி வாய்க்கால் பகுதியை படை நிர்மூலமாக்கியதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

கடந்த 2009-ஆம் ஆண்டு சிறீலங் காவின் வடக்கு பகுதியில் சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் உதவியோடு போர் நடத்தினோம். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதி யில் போர் நடத்துவதா வேண்டாமா என்று தோன்றியது. ஏனென்றால் அந்த பகுதியில் 45,000-க்கும் அதிக மான தமிழர்கள் வசித்து வந்தனர்.

அங்கு குண்டு போட்டால் ஒருவர்கூட மிஞ்சமாட்டார்களே என்று நினைத்தோம். மேலும் இறுதி கட்டப் போரை நடத்தக் கூடாது என்று பல்வேறு நாடுகளும் வலியுறுத்தின.

இதையடுத்து அதிபர் ராஜபக்சே விடம் ஆலோசனை நடத்தினோம். அப்போது அவர் எக்காரணம் கொண் டும் போரை நிறுத்த வேண்டாம் என்றும் சர்வதேச மிரட்டல்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து திட்ட மிட்டபடி தாக்குதல் நடத்துங்கள் என்று என்னிடம் தொலைபேசி மூலம் உத்தரவிட்டார்.

அவர் கொடுத்த தைரியத்தில்தான் போரை வெற்றிகரமாக நடத்த முடிந்தது. மேலும் போர்காலத்தில் அவர் தான் எங்களுக்கு பலமாக இருந்தார். அவர் மட்டும் மனிதாபி மான அடிப்படையில் இரக்கம் காட்டியிருந்தால் நம்மால் இறுதி கட்டப்போரில் வென்றிருக்க முடியாது. இறுதிகட்டப் போரில் நாம் வெல்ல உறுதுணையாக இருந்த நாடுகளையும், அவர்கள் செய்த உதவிகளையும் மறக்கவே முடியாது என்றார் ஜெயசூர்யா.

ஜெயசூர்யாவின் இந்தப் பேச்சு மூலம் கடைசிக் கட்ட போரின்போது மிகக் கொடூரமாக தமிழர்கள் கொலை செய்யப்பட்டது உண்மை தான் என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் ராஜபக்சே சொல்லித்தான் தாங்கள் தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றோம் என்பதையும் இந்த ஜெயசூர்யா கூறியுள்ளதால் இது ராஜபக்சேவின் போர்க்குற்ற செயல் பாடுகளுக்கான வலுவான ஆதார மாக, வாக்குமூலமாக உருவெடுக்கும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.9-7-2012

தமிழ் ஓவியா said...

ஒலிம்பிக்கும் இந்தியாவும்

ஜூலை 5ஆம் தேதி இலண்டன் ஒலிம்பிக் தடகளப் போட்டிக்கான தகுதிப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி கேரளாவைச்சேர்ந்த இரு வீரர்களுக்குக் கிடைத்தது. பி. குனஹூமுகம்மது என்பவர் சிறந்த தடகள வீரர்! 400 மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் தங்கம் வெல்லுவார் என்று எதிர்ப் பார்க்கப்படும் வீரராவார்! மற்றொரு வீரர் ஜோசப்ஜி ஆப்ரகாம் என்பவர் ஆசியப் போட்டியில் 400 மீட்டர் தடையோட்டத்தில் (ழரசனடநள) தங்கப் பதக்கம் பெற்றவர்.

மகிழ்ச்சிதான்.. நிலைமை என்ன தெரியுமா? இந்த இரண்டு வீரர்களும் இலங்கையில் நடைபெற்ற தகுதிப் போட்டியில் பங்கு பெற முடியவில்லை; காரணம் என்னவாம்?

இலங்கை செல்வதற்குப் போதிய பண வசதியில்லையாம். 30 ஆயிரம் ரூபாய் பணம் இல்லாததால் போக முடியாமல் போய் விட்டதாம்.

இதுகுறித்து குனஹு முகம்மது கூறியிருப்பதாவது: கேரளாவில் உள்ள பலரிடமும் சென்று நான் பணம் கேட்டேன். ஆனால் யாரும் எனக்குப் பணம் தர முன் வரவில்லை. எனது வங்கிக் கணக்கில் வெறும் 9000 ரூபாய் மட்டும்தான் இருந்தது. இதனால் விமான டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தேசிய தடகள உதவி பயிற்சியாளர் விஜோ தோட்டன் கூறியதாவது:

இந்த இருவரும் கடந்த இரு நாள்களாக தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர். இருவருக்கு உதவும் வகையில் விளையாட்டுத் துறைத் தலைவர், அதிகாரிகள் என்று பல தரப்பட்டவர்களிடம் தடகள வீரர்களின் சூழ்நிலையை எடுத்துக் கூறினேன். ஆனால் யாரும் நிதி உதவி செய்ய முன் வரவில்லை.

இதுகுறித்து விசாரித்தபோது தடகள வீரர்களின் இதுபோன்ற அவசர தேவைகளுக்கு நிதி உதவி வழங்க விளையாட்டு அமைப்பில் நிதி சேமிப்பு எதுவும் இல்லை என்று தெரிய வந்தது. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறமையுள்ள இரு தடகள வீரர்கள் ரூபாய் 30 ஆயிரம் பணம் இல்லாததால் அந்த வாய்ப்பை இழந்தது வருந்தத்தக்கது. இதுபோன்ற துயர சம்பவங்களைத் தவிர்க்க நம் நாட்டு விளையாட்டு அமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றார்.

இந்தத் தகவல்கள் எந்த அளவுக்கு வெட்கக் கேடானவை என்று விவரிக்கத் தேவையில்லை. இதுவே கிரிக்கெட் விளையாட்டு என்றால் ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். கிரிக்கெட் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுக்கு இருக்கும் மரியாதையும், முக்கியத்துவமும் தடகளப் போட்டி என்ற தனி மனிதனின் திறனை வெளிப்படுத்தக் கூடிய உண்மையான ஆற்றலுக்கு மரியாதை இல்லை.

காரணம் என்ன? இதற்குள்ளும் பார்ப்பனீயம் வருணாசிரமம் புகுந்து கொண்டு இருக்கிறது என்பதுதான்! பார்ப்பனர்களுக்குக் குத்தகை போன கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெறுகிறார்கள். அய்ந்து நட்சத்திர ஓட்டல்களை கட்டுகிறார்கள். கிரிக்கெட்காரர்களுக்குப் பாரத ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்று ஊடகங்களைத் தங்கள் கைகளில் வைத்திருக்கும் பார்ப்பனர்கள் கருத்தினை உருவாக்குகிறார்கள். குறைந்தபட்சம் மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேடி வருகிறது.

சுண்டைக்காய் நாடுகள் எல்லாம் ஒலிம்பிக்கில் தங்கங்களைக் குவிக்கின்றன. 120 கோடி மக்களைக் கொண்ட இந்தியா வெட்கக்கேடான இடத்தில் இருப்பதற்குக் காரணம் இது போன்ற பார்ப்பனீய அணுகுமுறைகள் தான்.

விளையாட்டுத்துறைகளுக்கென்று மத்தியிலும், மாநிலத்திலும் அமைச்சர்கள் இருக்கிறார்களே - அவர்கள் எல்லாம் எதற்காக இருக்கிறார்கள்? திறமையுள்ளவர்கள் இருந்தும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளாதது மன்னிக்கப்படவே முடியாத குற்றமாகும். இது வன்மையான கண்டனத்துக்கு உரியதே!9-7-2012