Search This Blog

30.7.12

பெரியார்மீதான விமர்சனம் பற்றி மருத்துவர் இராமதாசு


தந்தை பெரியார்மீதான விமர்சனம்?


தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு சா. இராமதாசு அவர்களின் பேட்டி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

தாங்கள் தந்தை பெரியார் அவர்களைப் பின்பற்றுவதாகக் கூறுகிறீர்கள். நீங்கள் இருக்கும் மேடையிலேயே பெரியாரையே விமர்சிக்கிறார்களே என்ற கேள்விக்கு பா.ம.க. நிறுவனரிடமிருந்து தெளிவான பதில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் கேள்வியேகூட வேறு மாதிரியாக இருந்திருக்க வேண்டும். பெரியாரைக் கொச்சைப் படுத்திப் பேசுகிறார்களே என்ற வகையில் வினா எழுப்பப்பட்டு இருக்க வேண்டும். விமர்சனம் என்பது வேறு - கொச்சைப்படுத்துவது என்பது வேறு.

அப்படியே பார்த்தாலும் தந்தை பெரியார் அவர்களை விமர்சிக்க இப்பொழுது என்ன அவசியம் வந்தது? அதன் மூலம் யாருக்கு லாபம்? விமர்சிக்க வேண்டிய பிரச்சினைகள் எத்தனை எத்தனையோ இருக்க, தந்தை பெரியார் அவர்களை சரியான புரிதல் இன்றி விமர்சிப்பது யாரைத் திருப்திப்படுத்த?

தந்தை பெரியாரைச் சொல்லியே வெளியில் வந்தார். இப்பொழுது தந்தை பெரியார் அவர்களை தமிழினத்துக்கு விரோதமானவர் என்று பா.ம.க., மேடைகளிலே பேசுவதன் மூலம் பெரும் வீழ்ச்சியை அந்தக் கட்சி சந்திக்கப் போகிறது என் பதை இன்றைக்கே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

தமிழ்த் தேசியம் என்ற பதாகையை வீர தீரமாகத் தூக்கி வந்தவர்கள் பெரியார்மீது கை வைக்கப் போய் சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்ற நிலைக்கு ஆளாகி இருப்பதை மருத்துவர் தெரிந்து கொள்வது நல்லது. இன்றைக்குத் தமிழ்நாட்டில் பி.ஜே.பி.யைத் தவிர, தந்தை பெரியார் பெயரைச் சொல்லாமல் யாரும் அரசியல் நடத்த முடியாத நிலைதான்.

சமூக நீதிக் கொள்கையை முன்னெடுப்பதாகச் சொல்லிக் கொண்டே இன்னொரு வகையில் தந்தை பெரியார் அவர்களைக் கொச்சைப்படுத்தலாம் என்றால் அதனைத் தமிழ்நாடு ஒரு போதும் அனுமதிக்காது. சமூகநீதி என்பது இந்த நாட்டில் வெறும் இடஒதுக்கீடு மட்டுமல்ல - அது விரிந்த பொருள்களை உள்ளடக்கமாகக் கொண்டது.

தந்தை பெரியார் அவர்களின் எந்த கொள்கை தவறானது - தமிழர்களுக்கு விரோதமானது என்று இவர்களால் எடுத்து வைக்க முடியுமா?

பார்ப்பனர்களும், அவர்களின் ஊடகங்களும் எவற்றை முன்னிறுத்தித் தந்தை பெரியார் அவர்கள்மீது சேற்றை வாரி இறைக்கிறார்களோ, அவற்றையே இரவல் வாங்கி இவர்களும் அந்த வேலையைச் செய்வதன் மூலம் தமிழர்கள் மத்தியில் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள் என்று பொருள்.

இன்னொன்றையும் இதில் கவனிக்கத் தவறக் கூடாது. திராவிட இயக்கத்தையும் அதன் ஒப்பற்ற கொள்கையையும் இவர்கள் எதிர்ப்பதன் மூலம் பார்ப்பனர் எதிர்ப்பைக் கைக்கொள்ள இவர்கள் தயாராக இல்லை; மாறாக அவர்களின் கைகளுக்குள் புதைந்துகொள்ள முடிவு செய்து விட்டார்கள் என்றே கருத வேண்டும்.

இது உண்மைதான் என்பதைத் தெரிந்து கொள்ள பெரிய ஆய்வுகள் தேவையில்லை. அவர்கள் நடத்தும் பொதுக் கூட்டங்களில் பார்ப்பனர்கள் பற்றியோ அவர்களின் ஆதிக்கத்தைப் பற்றியோ, சமூகநீதிக்கு எதிரான பார்ப்பனர்களின் நிலைப்பாடு குறித்தோ ஒரு வார்த்தை பேசுவது கிடையாது.

பெரும்பாலும் தற்பெருமையும், அரசியல் கட்சிகளைச் சாடுதலும்தான் அதிகம் இருக்கும்.

தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துவதும், திராவிட இயக்கத்தை கேவலமாக விமர்சிப்பதும் தான் அவர்களின் இன்றைய முதன்மைத் திட்டமாக இருந்து வருகிறது.

எந்தக் கட்சியுடன் கூட்டுச் சேராமலும், தந்தை பெரியார் அவர்களையும், திராவிட இயக்கத்தை விமர்சித்தும் வாக்கு கேட்டு வரட்டும்! தமிழர்கள் வட்டியும் முதலுமாகப் பாடம் கற்பிக்கத் தயாராகவே இருப்பார்கள்.

இடையில் கறுப்புச் சட்டை போட்டதெல்லாம் இவற்றின் மூலம் வெளிறி விட்டது. தமிழ்மண், தந்தை பெரியார் அவர்களின் பிரச்சாரத்தால் உழைப்பால் பல நிலைகளிலும் தாக்கம் பெற்று தலை நிமிர்ந்து நிற்கிறது. இதில் எந்தச் செங்கல்லை இவர்கள் உருவப் போகிறார்கள்? சந்திப்போம்!
-----------------------"விடுதலை” தலையங்கம் 30-7-2012

5 comments:

தமிழ் ஓவியா said...

உமாபாரதி
S


பி.ஜே.பி.யில் மீண்டும் சரணடைந்த செல்வி உமாபாரதி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒன்றைக் கூறியுள்ளார். ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார். அதற்கு எதிர்ப்புத் தெரி வித்து இன்றைய தமிழக முதல் அமைச்சர் ஜெய லலிதா கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதைக் காப் பாற்றுவார் என்று நம்பு கிறேன் என்று பேட்டியில் கூறி இருக்கிறார்.

நாட்டு மக்கள் எல்லாம் மறதி மன்னர்கள் அல்லது மாங்காய் மடையர்கள் என்ற நினைப்பில் இத்த கைய அரசியல்வாதிகள், அதிலும் குறிப்பாக இந்த இந்துத் துவாவாதிகள் மிதக்கி றார்கள் போலும்! ராமர் பாலத்தை இடிக் கச் சொன்னது ஒன்றும் அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அல்ல - அப்படி ஒரு பாலம் இருந்தால் அல் லவா உடைக்கவும் முடியும்.

இந்தப் பாதையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றச் சொன்னது நீரி என்ற தொழில் நுட்ப நிறுவனம். அவ்வாறு முடிவு எடுக்கப் பட்டதும்கூட அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் அல்ல; அது தேசிய ஜனநாயகக் கூட் டணியான வாஜ்பேயி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் தான் அத்தகைய முடிவும் எடுக்கப்பட்டது.

இதில் மேலும் ஒரு முக்கியமான தகவலும் உண்டு - அதுவும் இதே உமாபாரதி சம்பந்தப்பட்டது என்பதுதான் படு நகைச் சுவை!

மத்திய அமைச்சராக உமாபாரதி இருந்தபோது தான் ராமன் பாலம் இருந்ததா, இல்லையா என்பதை தொல் பொருள் துறைமூலமாக ஆய்வு செய்யச் சொல்லப்பட்டது. அந்த ஆய்வு பாலம் இருப் பதற்கான சுவடே இல்லை என்று தெரிவித்துள்ளது என்ற தகவலை சேது சமுத்திரத் திட்டத்தில் நிருவாக இயக்குநர் ரகுபதி வெளிப்படுத்தினர் (ஆதாரம்: தினமலர் 26.7.2007 பக்கம் 5).

உண்மை இவ்வாறு இருக்க அதே உமாபாரதி இப்பொழுது பல்டி அடித் துப் பேசுவதன் பொருள் என்ன?

முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத் துள்ளார். அதுவும் மிகவும் பொருத்தம்தான்! ராமன் பாலத்தை (?) ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று சொன்னதோடு மட் டுமல்ல; இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அச்சிட்டுக் கொடுத் தவரே இதே ஜெயலலிதா தானே! முரண்பாடு என்னும் ஒரே ஓடத்தில் பயணம் செய்பவர்கள் (Sailing in the Same Boat) இப்படி யாகத்தானே நடந்து கொள்வார்கள்.

- மயிலாடன் 30-7-2012

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு முழக்கம் மக்களைப் பக்குவப்படுத்திய மகத்தான கொள்கை முழக்கம் நார்வே நாட்டு மனிதநேயத் தலைவர் போற்றிப் புகழுரை

சென்னை, ஜூலை 30- சென்னை பெரியார் திடலில் 29.7.2012 அன்று பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பாக மதமில் லாத சமுதாயம் நோக்கி (towards post religious society) எனும் தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நார்வே நாட்டு மனிதநேய சங்கத்தின் தலைவர் ஈவன் கிரான்(Even Gran) சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார். அவருடன் அவரது துணைவியார் சமூக வியல் பேராசிரியர் எர்ரி எல்வெஸ்டாட் (Eiri Elevestad) கலந்து கொண்டார். கூட்டத்தின் தொடக்க உரையினை பகுத் தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் ஆற்றினார். அடுத்து பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் கலந்துரை யாடல் தலைப்பு பற்றி சுருக்கமாக கருத் துரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் தொகுப்புரையினை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார் வழங்கிட தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் திராவிடர் புரட்சி நன்றியுரை ஆற்றினார்.

ஈவன் கிரான் பேச்சு



நார்வே ஒற்றை பண்பாட்டுத் தன்மை (mono culturalism) கொண்ட நாடாகும். அந்நாளில் நிலவிவந்த கிறிஸ்தவம் சகிப்புத்தன்மை அற்றும் அனைவரையும் உள்ளடக்கியதாக விளங்கியது. 1814இல் உருவான அந்நாட்டு அரசமைப்புச் சட்ட மும் சில பிரிவு கிறிஸ்தவ நடவடிக்கை களை தடை செய்ய உருவாக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டில் தேவாலயங்கள் செயல்பட்டு வந்தன. மக்கள் தெளிவு பெற 1845இல் தான் இதர கிறிஸ்தவ பிரிவு களுக்கு அனுமதி, அங்கீகாரம் கிடைத் தது. 19ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நார்வே சுதந்திர சிந்தனையாளர் இயக்கம் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக மக்களின் மனநிலையில் மதம் குறித்த சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங் கின. மதம் சார்ந்த சமூகச் செயல்பாடுகள் தனி மனித செயல்பாடுகளாக மாற முற்பட்டன. பல்வேறு நாடுகளில் நிலவிய (survival) எழுச்சி கொள் மதிப்பீடுகள் மற்றும் தொன்மை (traditional) பகுத்தறிவு (rationalistic) மதிப்பீடுகள் மக்கள் மனதில் புதுவித ஒளியைப் பாய்ச்சின. இப் படிப்பட்ட பண்பாட்டு மன மாற்றங்களினால் இன்று நார்வே நாடு மதம்நீங்கிய மதச் சார்ப்பற்ற நிலையில் தலையானதாய் விளங்குகிறது.

மதம் நீங்கிய நாட்டின் அம்சங்கள்



சென்னை பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் பங்கேற்ற நார்வேயைச் சேர்ந்த ஈவன் கிரானுக்கு சிறப்பு செய்யப்பட்டது. உடன் அவரது மனைவி உள்ளார்.

1. மதத்திற்கும் பகுத்தறிவிற்கும் உறவு இல்லை. பைபிளில் அல்லது குரானில் கூறப்பட்டுள்ளது என மேற்கோள் காட்டி கருத்தை உருவாக்கிட முடியாது.

2. மதமும் மதத் தலைவர்களும் முன் னைப்போல அரசு அதிகாரம் கொள்ள முடியாது.

3. மதம் என்பது தனிநபர் சார்ந்த தாகவே இருக்க முடியும். 4. மதங்களே மதச்சார்பின்மையுடன் இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

புதிய யுகம் என்பதுதன் பெயரால் ஆன்மீகப் போர்வையில் மீண்டும் மத உணர்வுகள் தலைதூக்கும் அபாயமும் உருவாக்கியுள்ளது. பிற மத நம்பிக்கை களை குறிப்பாக இந்து மத நம்பிக்கை களை உள்வாங்கும் நிகழ்வுகளும் உள்ளன. அறிவியலுக்குப் புறம்பாகவும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தனிநபர் அக்கறை உணர்வுடன் இத்தகைய புது யுகங்கள் புறப்பட்டு விட்டன. வணிகத் தன்மையும் உடன் சேர்ந்து கொள்கிறது இதில் உள்ள முட்டாள்தனங்களை புலப் படுத்தி மக்களைப் புரிய வைக்கும் முகமாக நார்வே நாட்டு மனிதநேயச்சங்கம் யாரும் முட்டாளாக விரும்புவதில்லை (டிடினல டமைநள வடி நெ கடிடிடநன) எனும் முனைப்பு இயக் கத்தினைத் தொடங்கியுள்ளது.

இந்தியா நார்வே நாடுகளின் மதசார்ப்பற்ற சிந்தனைகள்

நார்வேநாட்டைவிட இந்தியாவில் மதச்சக்தி பெரும் ஆளுமை கொண்டதாக உள்ளது. மதப்பன்மை மற்றும் இனப்பன்மை நிலைமைகளை எதிர்த்து மதச்சார்பின்மை போராட வேண்டி உள்ளது. இருப்பினும் குறிப்பாக தமிழ்நாட்டில் மக்களின் மனதை பக்குவப்படுத்திய நிலைமைகள் வெளிப்படை யாக தெரிகின்றன. தந்தை பெரியாரின் கொள்கை பிரச்சார முழக்கமான கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை

கடவுளை கண்டுபிடித்தவன் முட்டாள்

கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்பதை பகிரங்கமாக சொல்ல முடிகிறது. தந்தை பெரியாரின் சிலை பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்த கைய நிலைமைகள் மக்கள் மனதை எந்த அளவிற்கு பக்குவப்படுத்தியுள்ளன. தந்தை பெரியாரின் கொள்கைக்கு ஏற்புத் தன்மை என்பதை விட பெரும்பான்மை யினர் எதிர்ப்புத்தன்மையற்ற நிலைகள் பெருமை அளிப்பதாக உள்ளன. இத்தகைய நிலைமைகள் ஆஸ்லோவில் (நார்வே நாட்டு தலைநகர்) உருவாகுமா என்பதை நினைத்துக் கூட பார்க்கமுடியாது தந்தை பெரியாரின் கொள்கை போற்றுதலுக்கு உரியது. மதமற்ற சமுதாயத்தில் தந்தை பெரியாரின் கொள்கை வழிமுறைகளுக்கு சிறப்பிடம் உண்டு. இவ்வாறு ஈவன் கிரான் பேசினார்.



அவரது பேச்சிற்கு அவரது துணை வியார் பேராசிரியர் எர்ரி எல்வஸ்டாட் பேசும்பொழுது மக்களாட்சியில் ஊடகங் களின் போக்கு, கோரிக்கைகள் நிறைந்த தாகவே உள்ளது. அறிவை வளர்ப்பதாக இல்லை எனக் குறிப்பிட்டார்கள்.

சிறப்புப்பேச்சிற்குப் பின், வருகை தந்தோரின் அய்யப்பாடுகள், கேள்வி களுக்கு ஈவன் கிரான் தனது கருத்தினை வழங்கினார். கலந்துரையாடல் கூட்டத்தில் பேராசிரியர்கள், திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, பொறுப்பாளர்கள், சுதந்திர சிந்தனை அமைப்பினர் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் எனப் பலரும் முனைப்புடன் பங்கேற்றனர். 30-7-2012

தமிழ் ஓவியா said...

ராஜாஜி


கேள்வி: எனது அருமைத் தலைவர் ராஜாஜிக்கு பிராமணர் அல்லாதவரிடம் புகழ் இல்லையே ஏன்?
ஆர்.சேஷாத்திரி அய்யங்கார், பருத்திப்பட்டு

பதில்: பிராமணர் அல்லாத தலைவர்களால் கொண்டாடப் பட்டவர்தான் ராஜாஜி. ஆரம்ப காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா.வும், வரதராஜூலு நாயுடுவும் அவருக்கு இரு கரங்களாக இருந்தார்கள். சத்தியமூர்த்தி - காமராஜர் புயலை ராஜாஜி எதிர்கொள்ள அரணாக இருந்தவர் ம.பொ. சிவஞானம். தனது எழுத்தால் ராஜாஜிக்கு வலிமை சேர்த்தவர் காண்டீபம் ஆசிரியர் எஸ்.எஸ். மாரிச்சாமி. தனது பேச்சால் உதவினார் சின்ன அண்ணா மலை.

அனைத்துக்கும் மேலாக பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் நீட்சியாக தன்னை அறி வித்துக் கொண்ட அண்ணா 67 தேர்தலில் ராஜாஜியை தனது அணியின் நடுநாயகமாக வைத்துக் கொண்டார். எந்த ராஜாஜியை எதிர்த்துக் கால மெல்லாம் அரசியல் நடத்தினாரோ அந்த காமராஜர்... ராஜாஜியின் கடைசிக் காலத்தில் அவரோடு ஒரே மேடைக்கு வந்தார். எனவே, ராஜாஜி, அனைவராலும் விமர்சிக்கப் பட்டாரே தவிர, யாராலும் ஒதுக்கப்படவில்லை.

(ஜூனியர் விகடன் 1.8.2012 பக்.10)

கேள்வி கேட்டவர் அய்யங்கார். பதில் சொல்லும் ஜூ.வி.யோ அய்யர்வாள். கேள்வி கேட்கப்படும் ராஜாஜியோ அய்யங்கார். விட்டுக் கொடுத்துவிடு வார்களா? ஆனால் ஒன்று. கேள்வி கேட்கும் அய்யங்காருக்கு ஏன் அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டது என்று பதில் சொல்லும் ஜூ.வி. அய்யர்வாள் கொஞ்சங்கூட நிதானித்துப் பார்க்க வில்லையே-ஏன்?

பார்ப்பனர் அல்லாதாரிடத் தில் ஆச்சாரியர் மீது வெறுப்பு இருக்கிறது என்ற உண்மை அய்யங்காருக்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றது. அதனால் தான் அந்தக் கேள்வியையே கேட்கிறார். ஜூ.வி. அய்யர்வா ளுக்கும் இந்த உண்மை தெரி யும். என்றாலும் ஆச்சாரியாரை விட்டுக் கொடுக்க முடியாதே - அதனால்தான் இந்த விளக் கெண்ணெய் கத்தாழைக் கூட்டு வழவழ குழகுழ பதில்.

1937 இல் ஆட்சிக்கு வந்தபோதும் 2500 பள்ளிகளை இழுத்து மூடினார். அதே நேரத்தில் பார்ப்பனர் படிப்பதற்கு சமஸ்கிருதக் கல்லூரியைத் திறந்தார். 1952 இல் வந்த போதும் ஆறாயிரம் கிராமப் பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆணையையும் பிறப்பித்தார் ஆச்சாரியார்.

இந்தக் குலக்கல்வித் திட்டத்தின் பின்னணியைத் தந்தை பெரியார் தமிழர்களிடம் விளக்கிக் கூறினார். ஆச்சாரி யார் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டம் வருணாசிரம நோக்கம் கொண்டது என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை தமிழர்கள் ஏற்றுக் கொண்டனர்.

சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மத் திட்டத்தை ஆச்சாரியார் திணித்தார். பார்ப்பனரல்லாதார் வெறுப்பைத் தேடிக் கொண்டார். இதற்கு என்ன ஆராய்ச்சியா தேவை?

- மயிலாடன் 31-72012

தமிழ் ஓவியா said...

ஜாதி அடையாளம்

ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதே நேரத்தில் அரசியலில் தாங்கள் ஜாதியைத் தானே முன்னிறுத்துகிறீர்கள் - அடையாளம் காட்டுகிறீர்கள் என்ற கேள்விக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாசு அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் என்ன பதில் சொல்கிறார்?

யாருக்குத்தான் ஜாதி உணர்வு இல்லை? ஒவ்வொரு கட்சிக்குள்ளும் ஜாதி உணர்வு இருக்கிறது. பிகாரில் லாலு பிரசாத், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, கருநாடகாவில் தேவகவுடா, உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி என்று எடுத்துக் கொண்டாலும் இந்தியா முழுமையும் ஜாதி அடிப்படை அரசியல்தான் நடக்கிறது. நாங்கள் சொன்னால் மட்டும் எங்களுக்கு ஜாதி முத்திரையைக் குத்துகிறார்கள் என்பதுதான் மருத்துவரின் பதில்.

மற்ற மற்ற மாநிலங்களில் உள்ள ஜாதி அரசியலைத் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டுக் கூற முடியாது. தமிழ்நாட்டில் உள்ளது போல் சமூகப் புரட்சி இயக்கம் அங்கெல்லாம் கிடையாது. தந்தை பெரியார் போன்ற ஜாதி ஒழிப்புப் புரட்சியாளரின் முக்கால் நூற்றாண்டுக் கால ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம். அதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் போட்டுக் கொள்வது பிற மாநிலங்களில் உண்டு. தமிழ் நாட்டில் அவ்வாறு போட்டுக் கொள்வதில்லை. அப்படிப் போட்டுக் கொள்வதற்கு வெட்கப்படும் நிலைதான் இங்கு. இந்த அடிப்படை உண்மையை மருத்துவர் உணரவேண்டும்.

இதற்கு முன்பும்கூட ஜாதியை முன்னிறுத்தி கட்சி நடத்தியவர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் வெற்றி பெறவில்லையே. தேர்தல் நேரங்களில ஜாதிக் கட்சிகளோடு கூட்டு சேர்ந்து போட்டியிட்ட நிலைமைகள் எல்லாம் கூட உண்டு. அது வெற்றியைக் கொடுத்திருக்கிறதா?

மருத்துவர் சொல்லும் கூற்றுப்படியே ஒரு கேள்வியை அவரிடம் கேட்க முடியும். தமிழ்நாட்டில் ஜாதி உணர்வு இருக்கிறது என்பது உண்மையானால், ஜாதி அடையாளத்தைக் காட்டி அரசியல் நடத்தும் பா.ம.க. தேர்தலில் குறைந்த பட்சம், வட மாவட்டங்களிலாவது பெரு வாரியான வகையில் வெற்றி பெற்று இருக்க வேண்டுமே. ஏன் வெற்றி பெற முடியவில்லை? தமிழ்நாட்டு மண்ணுக்குரிய தனித்தன்மைதான் இது.

மற்றொரு கேள்விக்கு பா.ம.க. நிறுவனர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதே - பாட்டாளி என்றால் தமிழ்நாட்டில் வன்னியர் மட்டும்தானா? இப்படி ஒரு கட்சியை தாம் துவக்கியதற்கு தொடக்கத்தில் என்ன கருத்தினை முன்வைத்தார்? நரிக்குறவர், நாவிதர், வண்ணார், போன்ற பல சமுதாயத்தினரும், வன்னியர்கள் போல கல்வி, வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டனர். இந்தச் சமுதாய அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கத்தான் பா.ம.க.வை ஆரம்பித்ததாகக் கூறினாரே! (நம்பு தம்பி நம்மால் முடியும் ஜூலை 2008) அதன்படி நடந்து கொண்டதுண்டா?

இதுவரை எந்த ஒரு சட்ட மன்றத் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ வன்னியரைத் தவிர்த்த வேறு யாரையாவது வேட்பாளராக நிறுத்தியதுண்டா?

அத்தனை சட்டப் பேரவை உறுப்பினர்களும், அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் வன்னியர்களே - பெயர் மட்டும் பாட்டாளி மக்கள் கட்சி. புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் எம் மீது படுத்துக்கொள்ளுங்கள் என்று கூறும் கதையாக அல்லவா இருக்கிறது!

தொடக்கத்தில் தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு மத்தியில் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டாலும், பிற்காலத்தில் அந்த நிலையும் மாற்றப்பட்டு அனைத்தும் வன்னியர் களுக்கே என்பதுதானே பா.ம.க.வின் நிலைப்பாடு.

வன்னியர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் அடைய வேண்டியது மிகவும் அவசியமே. இதில் இரண்டு கருத்துக்களுக்கு இடம் இல்லை. அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி என்ற போர்வையில் வன்னியர்களுக்கு மட்டுமான அரசியல் நடத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?

இன்னொரு பக்கத்தில் ஜாதி ஒழிப்பே தங்கள் கொள்கை என்கிறார். அப்படியானால் ஜாதி ஒழிப்புக்காக அவர் வைத்துள்ள திட்டங்கள் என்ன? குறைந்தபட்சம் ஜாதி ஒழிப்பு மாநாடுகளை நடத்த முன்வருவாரா? தம் கட்சியினர் ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவாரா? வன்னிய ஜாதியில் வேறொரு ஜாதியினர் கலப்பு மணம் செய்தால் வெட்டுவோம் என்பதுதான் ஜாதி ஒழிப்பா? ஜாதிப் பெருமை பேசுபவர்களால் எப்படி இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும்?
31-7-2012