Search This Blog

29.7.12

பெரியாரின் நண்பர்


பெருமைக்குரிய தலைவர் அவர்களே! பெரியோர்களே! தோழர்களே! அனைவருக்கும் என் வணக்கம். எனக்கு முன் பேசிய தலைவர் (காமராஜர்) அவர்களும் திரு. அண்ணாமலைப் பிள்ளையவர்களும் மறைந்த டாக்டர் நாயுடு அவர்களின் தொண்டைப் பற்றி விளக்கமாகச் சொன் னார்கள். அவர்கள் சொன்னது கொஞ்சம்கூட மிகைப்படுத்திக் கூறியதாகாது. முற்றிலும் சரியே. பல வருஷங்களாக அவருடன் கலந்து கூடி பழகியவன், வேலை செய்தவன், நண்பனாக இருந் தவன் என்ற முறையிலேயே நான் ஒரு சில வார்த்தைகளைக் கூறலாம் என்று முன்வந்துள்ளேன்.

எங்கள் முதல் தொடர்பு

எனக்கு மறைந்த தலைவர் நாயுடு அவர்களைச் சுமார் 40 வருஷங்களுக்கு மேலாகத் தெரியும். அதாவது 1914 முதல். அப்போது அவர் திருப்பூரில் பிரபஞ்ச மித்திரன் என்ற பத்திரிகையைத் துவக்கினார். அப்போதுதான் எனக்கும் அவருக்கும் முதல் சந்திப்பு ஏற்பட்டது. அது முதல் அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போதெல்லாம் காங்கிரசு பிரபலமடைய வில்லை. பிறகுதான் கொஞ்ச காலம் கழித்து காங்கிரசு பிரபலம் அடையத் துவங்கியது. காந்தியார் போன்ற தலைவர்கள் காங்கிரசுக்குள் வர ஆரம்பித்த காலமாகிய அந்நாளில்தான் கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரசு செல்வாக்கு பெறத் தொடங்கியது.

அந்தக் காலத்தில் டாக்டர் வரத ராஜூலு நாயுடு அவர்கள் மதுரை தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக ராஜதுவேஷக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது தொடரப்பட்ட வழக்கு சுமார் ஒரு வருடம் தொடர்ந்து நடைபெற்றது. அவர் சார்பில் வழக்கறிஞராக ஆச்சாரியார் அவர்கள்தான் வாதாடினார். அந்த வழக் குக்காக அடிக்கடி சென்னையில் இருந்து மதுரைக்குப் போவார்கள். ஈரோடு மத்தியில் உள்ள இடமானதால் அவர்கள் என்னைச் சந்திப்பார்கள். நானும் அவர் களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பதென்று ரயில்வே ஸ்டேஷனுக்காவது போய்ச் சந்திப்பேன். அப்போது தான் இராஜாஜி அவர்களது நட்பும் எனக்குக் கிடைத்தது. அது கிடைக்கக் காரணமானவர் டாக்டர் வரதராஜூலு நாயுடுதான். அன்பர் டாக்டர் நாயுடுதான் என்னைப் பொதுக் காரியங்களில் ஈடுபட வைத்தவர். அவர் அடிக்கடி வந்து என்னிடம் வெள்ளைக்காரர்கள் செய்யும் கொடுமைகளைப் பற்றி ஆவேசமாக எடுத்துக் கூறுவார். அந்த நேரத்தில்தான் பஞ்சாப் படுகொலை கொடுமை ஏற்பட்டது. அப்போது நாயுடு அவர்கள் வந்து அதைப் பற்றி மிகவும் ஆத்திரத்துடன் என்னிடம் கூறினார். உடனே நானும் மனம் குமுறி வருத்தப்பட்டு என்னால் ஆன தொண்டைச் செய்தேன். இது போன்ற அக்கிரமங்கள் ஒழிக்கப்பட்டே ஆகவேண்டும் என்பதாகக் கூறி எனது வியாபாரத்தையும் விட்டு விட்டுப் பொது வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன். ஆச்சாரியார் அவர்கள் என்னைக் கோவை ஜில்லா செயலாளராகப் போட்டு காரியாலயச் செலவுக்காகவும் கட்சி பிரசாரத்திற்காகவும் ரூ. 600 க்கு செக் எழுதி ரிஜிஸ்டர் செய்து எனக்கு அனுப்பினார்.

என்னை காங்கிரசுக்கு இழுத்தவர் அவரே

திரு. நாயுடு அவர்கள் வற்புறுத்தியதன் பேரிலேயே நான் காங்கிரஸ் தொண் டனானேன். பொது வாழ்வைப் பொறுத்த வரை நான் அவருக்குச் சீடனானேன். 1920 லிருந்தே பாடுபட ஆரம்பித்தேன். அந்தக் காலத்தில் ஜெயில் என்றால் மக்கள் எல்லாம் பயந்தார்கள். காரணம் மிகமிக கொடுமைகள் செய்யப்பட்டன. இப்போது சிறைக்குப் போகிறவர்களில் பலர் வெளியே இருப்பதை விட வெகு வசதிகளை அனுபவிக்கிறார்கள். அப் போது அப்படியல்ல காலஞ்சென்ற வ.உ.சி. அவர்கள் சிறையிலே செக்கிழுக்கிறார் என்ற செய்தி வெளியே பரவியிருந்த காலம்.

நாயுடுவின் சிறை வாழ்க்கை

அந்தக் காலத்தில் பலமுறை சிறை சென்று ஜெயிலுக்குப் போவதைச் சுலப மாக்கிக் காட்டியவர் திரு.நாயுடு அவர்களாவார். டாக்டர் நாயுடு அவர்களுக்கும் ஜெயிலில் வேலை கொடுத்தார்கள். பட்டை தட்டுதல், கேப்பைக்களி ஆட்டும் வேலை போன்ற கடினமான வேலையே கொடுத்தார்கள். இந்தக் கொடுமைகளை மக்களிடம் எடுத்துக் கூறி மக்களைத் தட்டி எழுப்பும் ஆற்றல் வாய்ந்த பேச் சாளராகத் திகழ்ந்தார் நாயுடு அவர்கள்.

பொதுமக்களைப் பேச்சினால் கவர்ந்தவர்

அந்தக் காலத்தில் இருந்த தலைவர்களிலேயே நாயுடு பேச்சு என்றால்தான் பெருங்கூட்டம் கூடும். அது முதுபெருந் தலைவர் இராஜாஜி அவர்கள் பேசுகின்ற கூட்டமானாலும் சரி பெருங்கூட்டம் வரவேண்டுமென்றால் முதலில் டாக்டர் நாயுடு அவர்களைக் கொஞ்ச நேரமாவது பேசவிட வேண்டும் என்ற நிலை இருந்தது.

பெருந்தியாகி

தமிழ்நாடு பத்திரிகையில் யாரோ எழுதியதற்காக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர் சிறை சென்றார். இது மாதிரி பொதுக் காரியங்கள் என்றால் அவர் சொந்தப் பணத்தைத் தான் செலவு செய்வார். அவர் கட்சி வேலையாக எங்கு போனாலும் கட்சிப் பணத்தைச் செலவு செய்ய மாட்டார். ஆனால் நான் கட்சி வேலையாகச் சென்றால் சொந்தப் பணத்தைச் செலவு செய்யமாட்டேன். கட்சிப் பணத்தைத் தான் செலவு செய்வேன். அப்போதெல்லாம் அவருக்கு ஏராளமான அளவில் வருமானம் வந்து கொண்டிருந்தது. திருப்பூரிலிருந்து அவர் கோவை வந்த சமயத்தில் அவருடைய மாத வருமானம் சுமார் ரூ. 2000 இருக்கலாம். சித்த வைத்தியம், மின்சார ரசம் இவை மூலம் ஏராளமாக வருவாய் கிடைத்தது. எல்லாவற்றையும் கட்சிக்கும் பொது வாழ்க்கைக்குமே தாராளமாகச் செலவு செய்துவிடுவார். எத்தனையோ முறை வரி கொடுக்க மறுத்து ஜெயிலுக்குப் போய் இருக்கிறார். அவருடைய சொத்துகளும் சாமான்களும் ஜப்தி செய்யப்பட்டு ஏலத்திற்கு வரும்.

கருத்து வேறுபடினும் உண்மை நண்பர்கள் ஆவோம்

அவருடன் நெடுநாள் உழைத்த நான் 1925 இல் எப்படியோ பிரிய நேர்ந்தது. அப்போது பெரியார் திரு.வி.க. அவர்கள் நவசக்தி பத்திரிகையின் ஆசிரியராகவும், டாக்டர் நாயுடு அவர்கள் தமிழ்நாடு பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந் தார்கள். கடுமையாகத் தாக்கி எழுதுவேன். அவர்களும் கடுமையாகத் தாக்கு வார்கள். ஆனால் நேரில் கண்டுவிட்டால் நாங்கள் எல்லோரும் உண்மையான சகோதரர்களாகத்தான் பழகுவோம். அந்தக் காலத்தில் தமிழில் பேசத் தெரிந்தவர்கள் மிகமிக அபூர்வம். அப்போது திரு.வி.க., நாயுடு இந்த இரண்டே பேர்தான். ஆச்சாரியாருக்குக் கூட அந்தக் காலத்தில் சரியாகத் தமிழில் பேசத் தெரியாது. வீடு பிரிச்சு போட்டிருக்கு என்று சொல்லத் தெரியாமல், வீடு அவுத்துப் போட்டிருக்கு என்றுதான் சொல்லுவார். சத்தியமூர்த்திக்குக் கூட அந்தக் காலத்தில் மக்களை வசப்படுத்தக்கூடிய முறையில் பேசத் தெரியாது. டாக்டர் நாயுடு அவர்களுடைய பேச்சு மக்களை வசப்படுத்தக் கூடிய, உணர்ச்சி ஊட்டக்கூடிய பேச்சாகும். உங்களுக்கெல்லாம் அதிசயமா யிருக்கும். நான் பேச அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன் என்று சொன்னால் அது உண்மை.

ஈடுசெய்ய முடியாத நஷ்டம்

அவர் இயற்கை எய்தினது உண்மையிலேயே ஒரு பரிகரிக்க முடியாத நஷ்டமாகும். ஏனென்றால் அவர் போன்ற தலைவர் இனி கிடையாது. தலைவர் (காமராஜர்) போன்றவர்கள் இந்தப் பதவி (முதலமைச்சர்) யல்லாது இனி கவர்னர் ஜெனரலாக வந்தாலும் கூட அவருடைய மதிப்பு இவருக்கு வராது - இப்படிச் சொல்லுவதால் இவருக்குத் தகுதியில்லை என்றோ, வர வாய்ப்பு இருக்காது என்றோ அர்த்தமல்ல. உலகத்தின் இன்றைய போக்கை வைத்தே இப்படிச் சொல்லுகிறேன். மக்களிடத்தில் தலைமைக்கான சன்னது பெற்றவர்கள் ஒரு சிலர்தான் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவராகப் போய்க் கொண்டே இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குப் பிறகு அந்த இடத்தில் யார் என்ற கேள்விக்குச் சரியான பதில் கிடைக்க முடிவதில்லை.


இனி, சிறந்த தலைவர் யார்?

பொதுவான நிகழ்ச்சிகள் எல்லா வற்றிற்கும் தலைமை வகிக்க என்று அவர் ஒருவர்தான் இருந்தார். இப்போது அவரும் இல்லை. அந்த இடமும் காலியாகத்தான் இருக்க வேண்டும்.

இனி நம் நாட்டுக்குத் தலைவர் கிடையாது. இனிமேல் வருகிற தலைவர்கள் எல்லாம் முனிசிபாலிட்டி, டிஸ்டிரிக்ட் போர்டுக்கு வரும் தலைவர்கள் மாதிரிதான் இருப்பார்கள். அத்தகைய தலைவர்களும் மக்களை நடத்திச் செல்லக் கூடிய முழுச் செல்வாக்கு பெற்றவர்களாக இருக்க முடியாது. இதற்கு என்ன காரணம் என்றே என்னால் சரியாகச் சொல்ல முடிவதில்லை. தலைவர்கள் உற்பத்தியாகாததோ அல்லது மக்கள் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாத அந்த அளவுக்கு மக்கள் பண்பு உயர்ந்துவிட்டதோ என்றால் தலைவர்களுக்கோ பஞ்சமில்லை. ஏராளமாகத்தான் வருகிறார்கள். ஆனால் மக்கள்தான் அவர்களிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை. உதாரணமாக கோவையில் பிர பலஸ்தர்களாக விளங்கிய சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார், வெள்ளி யங்கிரி கவுண்டர் போன்ற அய்ந்து தலைவர்கள் இருந்தார்கள். அவர்கள் கோவை ஜில்லாவுக்கு மாத்திரமில்லாமல் மாகாணத்திற்கே தலைவர்களாக இருந்தார்கள். அவர்கள் மறைந்த பிறகு தலைவர் யார் என்றால் யாருமே தென்படவே இல்லை. அதிகத் தலைவர்கள் உற்பத்தியாவ தனால்தான் மக்கள் அவர்களை நம்ப மறுக்கின்றார்கள். தலைவர் நாயுடு அவர்கள் இடத்தைப் பூர்த்தி செய்ய ஆள் இனி கிடையாது.


நான் சென்னைக்கு எப்போது வந்தாலும் திரு. நாயுடு அவர்கள் என்னை வந்து சந்திக்கத் தவறுவதே கிடையாது. 15 நாளைக்கு முன்பு என்னிடம் டெலிஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். இன்று காலை அவருடைய மகன் டெலி ஃபோனில் அவர் காலமான செய்தியைச் சொன்னதும் முதலில் நம்பாமல் பிறகு அதிர்ச்சி அடைந்தேன். திடீரென அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். இல்லா விட்டால் அவரது உடல் கட்டுக்கு இன்னும் பல ஆண்டுகள் இருப்பார். அவர் எப்போதெல்லாம் என்னைப் பார்க் கிறாரோ அப்போதெல்லாம் என் உடம்பைக் கவனித்துக் கொள்ளும்படி சொல்லி வற்புறுத்துவார். உணவு விஷயத்தில் எவ்வகையான உணவுகளை உண்ண வேண்டும் என்பதில் மிக கண் ணுங் கருத்துமாக இருப்பார். நானும் அப்படிப் பார்த்துதான் சத்தான உணவையே சாப்பிட வேண்டும் என்று சொல்லுவார். ஆனால் என்னால் இது முடிவதில்லை. இதற்குக் காரணம் எனக்கு ஓய்வில்லை என்பதும், நான் இதையெல்லாம் பற்றிக் கவலைப்படாத ஒரு சோம்பேறி என்பதும் ஆகும். என் சாப்பாடு பிச்சைக்காரன் சாப்பாடு மாதிரி. இங்கொரு நாள் அங்கொருநாள், இந்த வீட்டில் ஒரு நாள் அந்த வீட்டில் ஒரு நாள் என்று சாப்பிட்டு அலைந்து கொண்டிருப்பவன். என்னால் எப்படி உணவு விஷயத்தில் அவ்விதம் நடந்து கொள்ள முடியும்?

யாருக்கும் உதவி புரியும் பண்புள்ளவர்

டாக்டர் நாயுடு அவர்களிடத்தில் காணப்பட்ட மற்றொரு அரிய பண்பு என்ன என்றால் யார் போய் எந்தக் காரியத்தை அவரிடம் சொன்னாலும் மாட்டேன் என்று சொல்லாமல் தன்னால் முடிந்தவரை செய்து முடிப்பார். அதிலும் இப்போது தலைவர் அவர்கள் பொறுப் பான பதவிக்கு வந்த பிறகு டாக்டரிடத் தில் இன்னும் ஏராளமான அளவுக்குப் போய் செய்யச் சொல்லி தொந்தரவு கொடுத்தார்கள். அவரும் யாருக்கும் உதவி செய்யாமல் இருந்ததில்லை. அவருடைய வயது இப்போது 71. என்னை விடச் சிறியவர்தான். ஆனாலும் நல்ல அளவுக்குப் பொது வாழ்வில் இருந்து உழைத்தார்கள். தலைவர் காமராசர் அவர்களுக்குக் கிடைத்த நல்ல துணைவராக இருந்தார் டாக்டர் நாயுடு அவர்கள். பல விஷயங்களை நல்ல யோசனைகளைச் சொல்லக் கூடியவராக இருந்தார். இப்போதெல்லாம் அப்படிப்பட்ட நல்ல துணைவர்களைத் தேர்ந்தெடுப்பதே மிகமிகக் கஷ்டமான காரியமாகும்.

எப்படியோ நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார் டாக்டர் நாயுடு அவர்கள். இப் போது சும்மா அவரது ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்று பேசுவது வெறும் பேச்சாகும். ஆத்மா என்று ஒன்று இருந்தால் அது நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது தானே சாந்தி அடையும். அதிலொன்றும் சந்தேகம் வேண்டியதில்லை.

தனக்கென வாழா பிறர்க்குரியாளர்

இப்போது நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பண்புகளைப் பற்றி நினைக்க வேண்டும். டாக்டர் அவர்களுடைய குடும்பம் சங்கடமான நிலையில் இல்லை என்றாலும் அவர் இவ்வளவு பாடுபட்டும் அவர் தனக்கென்று ஏதும் வைத்துக் கொள்ளவில்லை. பெரிய பதவி களை அவர் அனுபவித்ததும் கிடையாது. நான் தொடர்ந்து காங்கிரசில் இருந்திருப்பேனானால் நிச்சயமாக அவரை நான் மந்திரியாக்கிப் பார்த்திருப்பேன். இப்போதிருப்பவர்கள் அவருக்கு அந்த வாய்ப்பைத் தரவில்லை என்பதோ அவர் அதற்கு அனுபவமற்றவர் என்றோ அல்ல இதற்கு அர்த்தம். அதற்குக் காரணம் டாக்டர் நாயுடு அவர்களே தன்னை அப்படி ஆக்கிக் கொண்டார். முக்கியமாக குருகுலப் போராட்டத்தில் அவர் தீவிர மாக ஈடுபட்டு ஒரு சிலரின் வெறுப்புக்கு ஆளாகியது மாத்திரமல்லாமல் தன்னை யாரென்றும் காட்டிக் கொண்டார்.

திருப்தியான வாழ்க்கை நடத்தியவர்

ஆனாலும் அவர் திருப்தியோடுதான் மனக்குறை இல்லாமல் வாழ்ந்தார். அந்தத் திருப்தி உணர்ச்சியைத்தான் பொது வாழ்வில் இன்று இருப்பவர்கள் பெற வேண்டும். அதைத்தான் அவரது வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியில் உழைத்ததினால் அவர் பணமோ பதவியோ பெறவில்லை. மாறாகத் தன்னுடைய செல்வத்தை அதற்கென செலவு செய்தார். அவர் ஒன்றும் இதனால் பயன் பெறவில்லை.

கற்க வேண்டிய பாடம்

தொண்டுக்குப் பலன் அடையவேண் டும் என்று நினைக்காமல் வாழ வேண்டும். காலஞ்சென்ற டாக்டர் நாயுடு அவர்கள் அப்படித்தான் பலன் அடையாமல் பொது வாழ்வில் உழைத்தார். அதைத்தான் பொது வாழ்வில் உள்ள அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.

இறுதி மரியாதை

இங்கு (இறுதிச்சடங்கு நடைபெறும் இடம்) வந்துள்ள பலரும் பலவித கொள் கையுடையவர்கள் என்றாலும் அவரவர் நம்புகின்ற லட்சியங்களை வைத்துப் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பலனைப் பற்றிக் கவலைப்படாமல் காரியமாற்ற வேண்டும். இதுதான் நாம் டாக்டர் அவர்களுக்குச் செய்யும் சிறந்த இறுதி மரி யாதையாகும்.

---------------------------------டாக்டர் வரதராஜூலு நாயுடு பற்றி தந்தை பெரியார் இரங்கலுரை --"விடுதலை" 24 ஜூலை 1957

9 comments:

தமிழ் ஓவியா said...

அடியாட்களை ஏவி அட்டகாசம்! சிவசங்கர் பாபா கைது செய்யப்படுவாரா?



சென்னை, ஜூலை 29- சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள நீலாங்கரையில் ஆசிரமம் அமைத்து பக்தி வியா பாரம் செய்யும் சிவசங்கர்பாபாவின் மீது வன்முறையைத் தூண்டிய தாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாபா நடத்தும் கோடீஸ்வர அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் மாம்பாக்கம் - கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் ஏ.எம்.எஸ். வணிக வளாகத்தின் ஒரு பகுதியில் சுரேஷ் என்பவர் 11-4-2011 முதல் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். மாத வாடகை ரூ. 9000 அளிக்க ஒப்புக் கொண்டு முன்பணம் ரூ. 30,000 செலுத்தி 11 மாத காலத்திற்கான வாடகை ஒப்பந்தம் ஒன்றும் செய்து கொண்டுள்ளார். தனது அழகு நிலையத்திற்கு ஏற்ற வகை யில் கட்டடத்தை அழகுபடுத்த - தான் 15 லட்ச ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகக் கூறும் சுரேஷ், தனது வாடகை ஒப்பந்தத்தை புதுப்பிக்கக் கோரியபோது, அந்த அறக்கட்டளையினர் அவ்வாறு ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்த துடன் அந்த இடத்தை உடனே காலி செய்து விடுமாறும் சுரே ஷைக் கேட்டுள்ளனர். நாளடை வில் அவரை மிரட்டவும் செய் தனர். கட்டடத்தை அழகுபடுத்த, தான் பெரும் அளவில் செலவு செய்துள்ளதால், வாடகை ஒப் பந்தம் நீட்டிக்கப்படாவிட்டால், தான் பேரிழப்புக்கு ஆளாக நேரிடும் என்று அவர் தெரிவித் திருந்தும், அறக்கட்டளையினர் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இடத்தைக் காலி செய்யக் கூறி மிரட்டலும் அதிகரித்தது.

இதனால் காஞ்சிபுரம் மாவட் டக் காவல் துறை அதிகாரிக்கு சுரேஷ் அனுப்பிய ஒரு புகார் கடிதம் கேளம்பாக்கம் காவல்நிலைய ஆய்வாளருக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டது. அத்துடன் செங் கல்பட்டு மாவட்ட மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் சுரேஷ் தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் 23-07-2012 அன்று இரவு சுரேஷ் தனது அழகு நிலையத்தை மூடிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு பல குண்டர்கள் லாரியில் வந்து அழகு நிலையத் தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கே இருந்த பொருள் களை எல்லாம் அடித்து உடைத்து லாரியில் வாரிப் போட்டுக் கொண் டிருந்தனர். தகவல் அறிந்த சுரேஷ் தனது மனைவியுடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்றது டன் காவல்துறையினரிடமும் புகார் அளித்தார். சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வன்முறையில் ஈடு பட்ட வர்களையும், லாரியில் ஏற் பட்டடிருந்த அழகுநிலையத்தின் உடைக்கப்பட்ட பொருள்களுடன் லாரியை காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று, சிவசங்கர்பாபா, ஜானகி, நாகராஜன் மற்றும் இதர அறக் கட்டளை உறுப்பினர்கள் மீதும், வன்முறையில் ஈடு பட்டவர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

பக்தி போர்வையில் ஊரையும், மக்களையும் ஏமாற்றி வரும் சிவசங்கர் பாபாவின் வன்முறைச் செயல்களுக்கு தக்க நடவடிக் கையை காவல்துறை மேற்கொள் ளும் என்று நம்புகிறோம்.

29-7-2012

தமிழ் ஓவியா said...

சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியில் சிறீலங்கா
எழுத்துரு அளவு
ஞாயிறு, 29 ஜூலை 2012 14:01
கொழும்பு, ஜூலை 29- போர்க் குற்றச் சாட்டுகள் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு அய்ந்து ஆண்டுகள் தேவைப் படலாம் என்ற சிறீலங்கா அரசின் செயல் திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் நிராகரித்துள்ளார்.

இது அனைத்துலக அழுத்தங்களைச் சமாளிக்க தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை.

அனைத்துலகச் சமூகம் இந்த விவகாரத்தை மறந்து போவதற்காக காலத்தை இழுத்தடிக்கும் நோக்கிலேயே இந்த அய்ந்தாண்டு செயற்திட்டம் வனையப்பட்டுள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதே வேளை, நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத் துவதற்கான செயற்திட்டம், அனைத்துலக அழுத்தங்களை குறைக்கும் முயற்சியே என்று சிறீலங்காவின் எதிர்க்கட்சிகள் விமர்சித் துள்ளன. 29-7-2012

தமிழ் ஓவியா said...

தேவதாசி விண்ணப்பம்

நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும் விபசாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபடவேண்டு மென்பதாக பலர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, சென்னை சட்ட சபை அங்கத்தினரும், உப தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்ட சபையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டி ருக்கின்றது. அதன் தத்துவம் என்னவென்றால், விபசாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்கு பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும், அப்படிச்செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண் டுமென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி, என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப் பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த விண்ணப்பம் அச்சகோதரிகளால் அனுப்பப்பட்டி ருக்காது என்பதும், அதற்குப்பின்புறம் சிலரிருந்துகொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது.

ஏனெனில், அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவது, அப்பெண்மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்கு கற்புகெடாமலிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகு மென்றாவது நாம் நினைக்கமுடியாது. ஆனால், அப்பெண்களுக்கு தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வைகூட நிலத்தில் விழாமல் மேலாமினுக்காய் இருந்து வாழ்ந்துவரும் மாமாக்கள் என்று சொல்லு கின்றவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும். ஆதலால், அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூல கர்த்தாக் களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும், இக்கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும், சமுகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப் பதை விட அதர்மமானதும், கொடுமையானதுமான காரியம் வேறில்லை.

தவிர, மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும், நமது மற்ற பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து, இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொள்கையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம். ஆனால், அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கட்சியை நியாயமென்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாக தங்கள் பெண்களை உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று கேட்பதுடன், அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து, அதை மற்றவகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட் சேபனை, அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத் திலும், ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும், கற்பு அபிமானத் திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட்கின் றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித்தானே, ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்து விட்டன.



தவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்ற பெண்கள் கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும், அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயாராயிருந்து விட்டால் மற்ற பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது. இப்படிச் சொல்லுவதானது, ஆண் சமுகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும் இயற்கைத் தத்துவமும் கடவுள் சித்தமும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இவ் விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது நமது அபிப்பிராயம். ஆனாலும், பெண்களுக்கு காவலும், கட்டுப்பாடும், நிபந்தனை யும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பை, கற்பு என்று நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது. இவ்விஷயத்தில், உலகத்தில் உள்ள எல்லா மதமும் பழக்கத்தில் தனிமயமாகத்தான் நடந்து கொள்ளு கின்றது. ஆனால், இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இரு பாலர்க்கும் சரி சமானமான சுதந்திரம் இல்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.

- தந்தை பெரியார்- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.10.1927

தமிழ் ஓவியா said...

சக்தியுள்ள கடவுள்கள்?


தமிழ்நாட்டுக் கோயில்களி லிருந்து திருடப்பட்ட ரூபாய் 110 கோடி மதிப்புடைய சிலைகள் அமெரிக்காவில் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன.

இதனைப் படித்தால் அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. இணைய தளத்தில், வெளியிடப்பட்ட படங்களைப் பார்த்து அதன் அடிப்படையில் இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனவாம்.

நம் நாட்டுக் கோயில்களின் வீர தீரப் பிரதாபங்களை ஆன்மீகச் சிறப்பிதழ் போட்டு விளம்பரப்படுத் தும் அதே இதழ்கள்தான் - தமிழ் நாட்டுக் கோயில்களில் இருந்த சாமி சிலைகள் அமெரிக்காவில் பறிமுதல் செய்துள்ளதையும் வெளி யிடுகின்றன. இதில் இவர்களுக்கு வெட்கம் சிறிதும் இல்லை. இந்து மதக் கோயில்களுக்குள் வெளி மதக் காரன் நுழைய அனுமதியில்லை - வெளியிலேயே அறிவிப்புப் பல கையைத் தொங்கவிட்டிருக்கிறார்கள்.

அதே நேரத்தில் இப்பொழுது என்ன நடக்கிறது? அமெரிக்காவில் உள்ள கிறித்துவக் காவல்துறை அதிகாரிகள்தான் அந்த இந்துக் கடவுள்களைக் கைப்பற்றுகிறார்கள். கண்டுபிடித்தது கிறித்துவக் கை என்பதால் இந்தியாவுக்குக் கொண்டு வந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட் டோம் என்று சங்கராச்சாரியார் களும், இந்து முன்னணி வகை யறாக்களும் சொல்வார்களா?

பார்ப்பனர்கள் பலே கெட்டிக் காரர்கள் ஆயிற்றே! அதற்கும் சடங்கு, சாங்கித் தியம், சுத்திகரிப்பு என்று சொல்லி பணம் பறிப்புத் தொழிலைத் தயா ராக வைத்திருக்க மாட்டார்களா?
சுரண்டல் தொழிலில் நட்டக் கணக்குக்கு இடம் ஏது? 29-7-2012

தமிழ் ஓவியா said...

உமாபாரதி
S


பி.ஜே.பி.யில் மீண்டும் சரணடைந்த செல்வி உமாபாரதி சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஒன்றைக் கூறியுள்ளார். ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுத்தார். அதற்கு எதிர்ப்புத் தெரி வித்து இன்றைய தமிழக முதல் அமைச்சர் ஜெய லலிதா கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதைக் காப் பாற்றுவார் என்று நம்பு கிறேன் என்று பேட்டியில் கூறி இருக்கிறார்.

நாட்டு மக்கள் எல்லாம் மறதி மன்னர்கள் அல்லது மாங்காய் மடையர்கள் என்ற நினைப்பில் இத்த கைய அரசியல்வாதிகள், அதிலும் குறிப்பாக இந்த இந்துத் துவாவாதிகள் மிதக்கி றார்கள் போலும்! ராமர் பாலத்தை இடிக் கச் சொன்னது ஒன்றும் அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அல்ல - அப்படி ஒரு பாலம் இருந்தால் அல் லவா உடைக்கவும் முடியும்.

இந்தப் பாதையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றச் சொன்னது நீரி என்ற தொழில் நுட்ப நிறுவனம். அவ்வாறு முடிவு எடுக்கப் பட்டதும்கூட அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலும் அல்ல; அது தேசிய ஜனநாயகக் கூட் டணியான வாஜ்பேயி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் தான் அத்தகைய முடிவும் எடுக்கப்பட்டது.

இதில் மேலும் ஒரு முக்கியமான தகவலும் உண்டு - அதுவும் இதே உமாபாரதி சம்பந்தப்பட்டது என்பதுதான் படு நகைச் சுவை!

மத்திய அமைச்சராக உமாபாரதி இருந்தபோது தான் ராமன் பாலம் இருந்ததா, இல்லையா என்பதை தொல் பொருள் துறைமூலமாக ஆய்வு செய்யச் சொல்லப்பட்டது. அந்த ஆய்வு பாலம் இருப் பதற்கான சுவடே இல்லை என்று தெரிவித்துள்ளது என்ற தகவலை சேது சமுத்திரத் திட்டத்தில் நிருவாக இயக்குநர் ரகுபதி வெளிப்படுத்தினர் (ஆதாரம்: தினமலர் 26.7.2007 பக்கம் 5).

உண்மை இவ்வாறு இருக்க அதே உமாபாரதி இப்பொழுது பல்டி அடித் துப் பேசுவதன் பொருள் என்ன?

முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதாவிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத் துள்ளார். அதுவும் மிகவும் பொருத்தம்தான்! ராமன் பாலத்தை (?) ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று சொன்னதோடு மட் டுமல்ல; இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அச்சிட்டுக் கொடுத் தவரே இதே ஜெயலலிதா தானே! முரண்பாடு என்னும் ஒரே ஓடத்தில் பயணம் செய்பவர்கள் (Sailing in the Same Boat) இப்படி யாகத்தானே நடந்து கொள்வார்கள்.

- மயிலாடன் 30-7-2012

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு முழக்கம் மக்களைப் பக்குவப்படுத்திய மகத்தான கொள்கை முழக்கம் நார்வே நாட்டு மனிதநேயத் தலைவர் போற்றிப் புகழுரை

சென்னை, ஜூலை 30- சென்னை பெரியார் திடலில் 29.7.2012 அன்று பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பாக மதமில் லாத சமுதாயம் நோக்கி (towards post religious society) எனும் தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

அன்னை மணியம்மையார் மன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நார்வே நாட்டு மனிதநேய சங்கத்தின் தலைவர் ஈவன் கிரான்(Even Gran) சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார். அவருடன் அவரது துணைவியார் சமூக வியல் பேராசிரியர் எர்ரி எல்வெஸ்டாட் (Eiri Elevestad) கலந்து கொண்டார். கூட்டத்தின் தொடக்க உரையினை பகுத் தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன் ஆற்றினார். அடுத்து பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் கலந்துரை யாடல் தலைப்பு பற்றி சுருக்கமாக கருத் துரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் தொகுப்புரையினை பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெஸ் பெரியார் வழங்கிட தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் திராவிடர் புரட்சி நன்றியுரை ஆற்றினார்.

ஈவன் கிரான் பேச்சு



நார்வே ஒற்றை பண்பாட்டுத் தன்மை (mono culturalism) கொண்ட நாடாகும். அந்நாளில் நிலவிவந்த கிறிஸ்தவம் சகிப்புத்தன்மை அற்றும் அனைவரையும் உள்ளடக்கியதாக விளங்கியது. 1814இல் உருவான அந்நாட்டு அரசமைப்புச் சட்ட மும் சில பிரிவு கிறிஸ்தவ நடவடிக்கை களை தடை செய்ய உருவாக்கப்பட்டது. அரசின் கட்டுப்பாட்டில் தேவாலயங்கள் செயல்பட்டு வந்தன. மக்கள் தெளிவு பெற 1845இல் தான் இதர கிறிஸ்தவ பிரிவு களுக்கு அனுமதி, அங்கீகாரம் கிடைத் தது. 19ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட நார்வே சுதந்திர சிந்தனையாளர் இயக்கம் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக மக்களின் மனநிலையில் மதம் குறித்த சிந்தனையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங் கின. மதம் சார்ந்த சமூகச் செயல்பாடுகள் தனி மனித செயல்பாடுகளாக மாற முற்பட்டன. பல்வேறு நாடுகளில் நிலவிய (survival) எழுச்சி கொள் மதிப்பீடுகள் மற்றும் தொன்மை (traditional) பகுத்தறிவு (rationalistic) மதிப்பீடுகள் மக்கள் மனதில் புதுவித ஒளியைப் பாய்ச்சின. இப் படிப்பட்ட பண்பாட்டு மன மாற்றங்களினால் இன்று நார்வே நாடு மதம்நீங்கிய மதச் சார்ப்பற்ற நிலையில் தலையானதாய் விளங்குகிறது.

மதம் நீங்கிய நாட்டின் அம்சங்கள்



சென்னை பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் பங்கேற்ற நார்வேயைச் சேர்ந்த ஈவன் கிரானுக்கு சிறப்பு செய்யப்பட்டது. உடன் அவரது மனைவி உள்ளார்.

1. மதத்திற்கும் பகுத்தறிவிற்கும் உறவு இல்லை. பைபிளில் அல்லது குரானில் கூறப்பட்டுள்ளது என மேற்கோள் காட்டி கருத்தை உருவாக்கிட முடியாது.

2. மதமும் மதத் தலைவர்களும் முன் னைப்போல அரசு அதிகாரம் கொள்ள முடியாது.

3. மதம் என்பது தனிநபர் சார்ந்த தாகவே இருக்க முடியும். 4. மதங்களே மதச்சார்பின்மையுடன் இருக்க வேண்டும்.

தமிழ் ஓவியா said...

புதிய யுகம் என்பதுதன் பெயரால் ஆன்மீகப் போர்வையில் மீண்டும் மத உணர்வுகள் தலைதூக்கும் அபாயமும் உருவாக்கியுள்ளது. பிற மத நம்பிக்கை களை குறிப்பாக இந்து மத நம்பிக்கை களை உள்வாங்கும் நிகழ்வுகளும் உள்ளன. அறிவியலுக்குப் புறம்பாகவும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தனிநபர் அக்கறை உணர்வுடன் இத்தகைய புது யுகங்கள் புறப்பட்டு விட்டன. வணிகத் தன்மையும் உடன் சேர்ந்து கொள்கிறது இதில் உள்ள முட்டாள்தனங்களை புலப் படுத்தி மக்களைப் புரிய வைக்கும் முகமாக நார்வே நாட்டு மனிதநேயச்சங்கம் யாரும் முட்டாளாக விரும்புவதில்லை (டிடினல டமைநள வடி நெ கடிடிடநன) எனும் முனைப்பு இயக் கத்தினைத் தொடங்கியுள்ளது.

இந்தியா நார்வே நாடுகளின் மதசார்ப்பற்ற சிந்தனைகள்

நார்வேநாட்டைவிட இந்தியாவில் மதச்சக்தி பெரும் ஆளுமை கொண்டதாக உள்ளது. மதப்பன்மை மற்றும் இனப்பன்மை நிலைமைகளை எதிர்த்து மதச்சார்பின்மை போராட வேண்டி உள்ளது. இருப்பினும் குறிப்பாக தமிழ்நாட்டில் மக்களின் மனதை பக்குவப்படுத்திய நிலைமைகள் வெளிப்படை யாக தெரிகின்றன. தந்தை பெரியாரின் கொள்கை பிரச்சார முழக்கமான கடவுள் இல்லை, கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை

கடவுளை கண்டுபிடித்தவன் முட்டாள்

கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி

என்பதை பகிரங்கமாக சொல்ல முடிகிறது. தந்தை பெரியாரின் சிலை பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இத்த கைய நிலைமைகள் மக்கள் மனதை எந்த அளவிற்கு பக்குவப்படுத்தியுள்ளன. தந்தை பெரியாரின் கொள்கைக்கு ஏற்புத் தன்மை என்பதை விட பெரும்பான்மை யினர் எதிர்ப்புத்தன்மையற்ற நிலைகள் பெருமை அளிப்பதாக உள்ளன. இத்தகைய நிலைமைகள் ஆஸ்லோவில் (நார்வே நாட்டு தலைநகர்) உருவாகுமா என்பதை நினைத்துக் கூட பார்க்கமுடியாது தந்தை பெரியாரின் கொள்கை போற்றுதலுக்கு உரியது. மதமற்ற சமுதாயத்தில் தந்தை பெரியாரின் கொள்கை வழிமுறைகளுக்கு சிறப்பிடம் உண்டு. இவ்வாறு ஈவன் கிரான் பேசினார்.



அவரது பேச்சிற்கு அவரது துணை வியார் பேராசிரியர் எர்ரி எல்வஸ்டாட் பேசும்பொழுது மக்களாட்சியில் ஊடகங் களின் போக்கு, கோரிக்கைகள் நிறைந்த தாகவே உள்ளது. அறிவை வளர்ப்பதாக இல்லை எனக் குறிப்பிட்டார்கள்.

சிறப்புப்பேச்சிற்குப் பின், வருகை தந்தோரின் அய்யப்பாடுகள், கேள்வி களுக்கு ஈவன் கிரான் தனது கருத்தினை வழங்கினார். கலந்துரையாடல் கூட்டத்தில் பேராசிரியர்கள், திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, பொறுப்பாளர்கள், சுதந்திர சிந்தனை அமைப்பினர் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் எனப் பலரும் முனைப்புடன் பங்கேற்றனர். 30-7-2012

தமிழ் ஓவியா said...

ராஜாஜி


கேள்வி: எனது அருமைத் தலைவர் ராஜாஜிக்கு பிராமணர் அல்லாதவரிடம் புகழ் இல்லையே ஏன்?
ஆர்.சேஷாத்திரி அய்யங்கார், பருத்திப்பட்டு

பதில்: பிராமணர் அல்லாத தலைவர்களால் கொண்டாடப் பட்டவர்தான் ராஜாஜி. ஆரம்ப காலத்தில் பெரியார் ஈ.வெ.ரா.வும், வரதராஜூலு நாயுடுவும் அவருக்கு இரு கரங்களாக இருந்தார்கள். சத்தியமூர்த்தி - காமராஜர் புயலை ராஜாஜி எதிர்கொள்ள அரணாக இருந்தவர் ம.பொ. சிவஞானம். தனது எழுத்தால் ராஜாஜிக்கு வலிமை சேர்த்தவர் காண்டீபம் ஆசிரியர் எஸ்.எஸ். மாரிச்சாமி. தனது பேச்சால் உதவினார் சின்ன அண்ணா மலை.

அனைத்துக்கும் மேலாக பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் நீட்சியாக தன்னை அறி வித்துக் கொண்ட அண்ணா 67 தேர்தலில் ராஜாஜியை தனது அணியின் நடுநாயகமாக வைத்துக் கொண்டார். எந்த ராஜாஜியை எதிர்த்துக் கால மெல்லாம் அரசியல் நடத்தினாரோ அந்த காமராஜர்... ராஜாஜியின் கடைசிக் காலத்தில் அவரோடு ஒரே மேடைக்கு வந்தார். எனவே, ராஜாஜி, அனைவராலும் விமர்சிக்கப் பட்டாரே தவிர, யாராலும் ஒதுக்கப்படவில்லை.

(ஜூனியர் விகடன் 1.8.2012 பக்.10)

கேள்வி கேட்டவர் அய்யங்கார். பதில் சொல்லும் ஜூ.வி.யோ அய்யர்வாள். கேள்வி கேட்கப்படும் ராஜாஜியோ அய்யங்கார். விட்டுக் கொடுத்துவிடு வார்களா? ஆனால் ஒன்று. கேள்வி கேட்கும் அய்யங்காருக்கு ஏன் அப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டது என்று பதில் சொல்லும் ஜூ.வி. அய்யர்வாள் கொஞ்சங்கூட நிதானித்துப் பார்க்க வில்லையே-ஏன்?

பார்ப்பனர் அல்லாதாரிடத் தில் ஆச்சாரியர் மீது வெறுப்பு இருக்கிறது என்ற உண்மை அய்யங்காருக்கு நன்றாகவே தெரிந்திருக்கின்றது. அதனால் தான் அந்தக் கேள்வியையே கேட்கிறார். ஜூ.வி. அய்யர்வா ளுக்கும் இந்த உண்மை தெரி யும். என்றாலும் ஆச்சாரியாரை விட்டுக் கொடுக்க முடியாதே - அதனால்தான் இந்த விளக் கெண்ணெய் கத்தாழைக் கூட்டு வழவழ குழகுழ பதில்.

1937 இல் ஆட்சிக்கு வந்தபோதும் 2500 பள்ளிகளை இழுத்து மூடினார். அதே நேரத்தில் பார்ப்பனர் படிப்பதற்கு சமஸ்கிருதக் கல்லூரியைத் திறந்தார். 1952 இல் வந்த போதும் ஆறாயிரம் கிராமப் பள்ளிகளை இழுத்து மூடி அரை நேரம் படித்தால் போதும், மீதி அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்று ஆணையையும் பிறப்பித்தார் ஆச்சாரியார்.

இந்தக் குலக்கல்வித் திட்டத்தின் பின்னணியைத் தந்தை பெரியார் தமிழர்களிடம் விளக்கிக் கூறினார். ஆச்சாரி யார் கொண்டு வந்த குலக் கல்வித் திட்டம் வருணாசிரம நோக்கம் கொண்டது என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை தமிழர்கள் ஏற்றுக் கொண்டனர்.

சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மத் திட்டத்தை ஆச்சாரியார் திணித்தார். பார்ப்பனரல்லாதார் வெறுப்பைத் தேடிக் கொண்டார். இதற்கு என்ன ஆராய்ச்சியா தேவை?

- மயிலாடன் 31-72012

தமிழ் ஓவியா said...

ஜாதி அடையாளம்

ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்கிறீர்கள். அதே நேரத்தில் அரசியலில் தாங்கள் ஜாதியைத் தானே முன்னிறுத்துகிறீர்கள் - அடையாளம் காட்டுகிறீர்கள் என்ற கேள்விக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் திரு. ச. இராமதாசு அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் என்ன பதில் சொல்கிறார்?

யாருக்குத்தான் ஜாதி உணர்வு இல்லை? ஒவ்வொரு கட்சிக்குள்ளும் ஜாதி உணர்வு இருக்கிறது. பிகாரில் லாலு பிரசாத், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, கருநாடகாவில் தேவகவுடா, உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி என்று எடுத்துக் கொண்டாலும் இந்தியா முழுமையும் ஜாதி அடிப்படை அரசியல்தான் நடக்கிறது. நாங்கள் சொன்னால் மட்டும் எங்களுக்கு ஜாதி முத்திரையைக் குத்துகிறார்கள் என்பதுதான் மருத்துவரின் பதில்.

மற்ற மற்ற மாநிலங்களில் உள்ள ஜாதி அரசியலைத் தமிழ்நாட்டோடு ஒப்பிட்டுக் கூற முடியாது. தமிழ்நாட்டில் உள்ளது போல் சமூகப் புரட்சி இயக்கம் அங்கெல்லாம் கிடையாது. தந்தை பெரியார் போன்ற ஜாதி ஒழிப்புப் புரட்சியாளரின் முக்கால் நூற்றாண்டுக் கால ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம். அதற்கான போராட்டங்கள் நடத்தப்பட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் பெயர்களுக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் போட்டுக் கொள்வது பிற மாநிலங்களில் உண்டு. தமிழ் நாட்டில் அவ்வாறு போட்டுக் கொள்வதில்லை. அப்படிப் போட்டுக் கொள்வதற்கு வெட்கப்படும் நிலைதான் இங்கு. இந்த அடிப்படை உண்மையை மருத்துவர் உணரவேண்டும்.

இதற்கு முன்பும்கூட ஜாதியை முன்னிறுத்தி கட்சி நடத்தியவர்கள் எல்லாம் தமிழ் நாட்டில் வெற்றி பெறவில்லையே. தேர்தல் நேரங்களில ஜாதிக் கட்சிகளோடு கூட்டு சேர்ந்து போட்டியிட்ட நிலைமைகள் எல்லாம் கூட உண்டு. அது வெற்றியைக் கொடுத்திருக்கிறதா?

மருத்துவர் சொல்லும் கூற்றுப்படியே ஒரு கேள்வியை அவரிடம் கேட்க முடியும். தமிழ்நாட்டில் ஜாதி உணர்வு இருக்கிறது என்பது உண்மையானால், ஜாதி அடையாளத்தைக் காட்டி அரசியல் நடத்தும் பா.ம.க. தேர்தலில் குறைந்த பட்சம், வட மாவட்டங்களிலாவது பெரு வாரியான வகையில் வெற்றி பெற்று இருக்க வேண்டுமே. ஏன் வெற்றி பெற முடியவில்லை? தமிழ்நாட்டு மண்ணுக்குரிய தனித்தன்மைதான் இது.

மற்றொரு கேள்விக்கு பா.ம.க. நிறுவனர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதே - பாட்டாளி என்றால் தமிழ்நாட்டில் வன்னியர் மட்டும்தானா? இப்படி ஒரு கட்சியை தாம் துவக்கியதற்கு தொடக்கத்தில் என்ன கருத்தினை முன்வைத்தார்? நரிக்குறவர், நாவிதர், வண்ணார், போன்ற பல சமுதாயத்தினரும், வன்னியர்கள் போல கல்வி, வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்டனர். இந்தச் சமுதாய அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கத்தான் பா.ம.க.வை ஆரம்பித்ததாகக் கூறினாரே! (நம்பு தம்பி நம்மால் முடியும் ஜூலை 2008) அதன்படி நடந்து கொண்டதுண்டா?

இதுவரை எந்த ஒரு சட்ட மன்றத் தேர்தலிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலிலோ வன்னியரைத் தவிர்த்த வேறு யாரையாவது வேட்பாளராக நிறுத்தியதுண்டா?

அத்தனை சட்டப் பேரவை உறுப்பினர்களும், அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் வன்னியர்களே - பெயர் மட்டும் பாட்டாளி மக்கள் கட்சி. புலிக்குப் பயந்தவர்கள் எல்லாம் எம் மீது படுத்துக்கொள்ளுங்கள் என்று கூறும் கதையாக அல்லவா இருக்கிறது!

தொடக்கத்தில் தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகிய தாழ்த்தப்பட்டவர்களுக்கு மத்தியில் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டாலும், பிற்காலத்தில் அந்த நிலையும் மாற்றப்பட்டு அனைத்தும் வன்னியர் களுக்கே என்பதுதானே பா.ம.க.வின் நிலைப்பாடு.

வன்னியர்கள் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னேற்றம் அடைய வேண்டியது மிகவும் அவசியமே. இதில் இரண்டு கருத்துக்களுக்கு இடம் இல்லை. அதே நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி என்ற போர்வையில் வன்னியர்களுக்கு மட்டுமான அரசியல் நடத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?

இன்னொரு பக்கத்தில் ஜாதி ஒழிப்பே தங்கள் கொள்கை என்கிறார். அப்படியானால் ஜாதி ஒழிப்புக்காக அவர் வைத்துள்ள திட்டங்கள் என்ன? குறைந்தபட்சம் ஜாதி ஒழிப்பு மாநாடுகளை நடத்த முன்வருவாரா? தம் கட்சியினர் ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவாரா? வன்னிய ஜாதியில் வேறொரு ஜாதியினர் கலப்பு மணம் செய்தால் வெட்டுவோம் என்பதுதான் ஜாதி ஒழிப்பா? ஜாதிப் பெருமை பேசுபவர்களால் எப்படி இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும்?
31-7-2012