Search This Blog

29.11.11

ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு -4


ஜாதியின் வேரறுக்கச் சட்டநகல் எரிப்பு (4) அய்யாவின் அறப்போர் வரலாறு (26-11-1957)

எங்களுடைய பிள்ளை குட்டிகளாவது சூத்திரத் தன்மையிலிருந்து விடுபட்டே ஆகவேண்டும். அதற்காக எந்த விலையையும் கொடுக்கவும் நாங்கள் தயார் என்பதை 26 ஆம் தேதியன்று நிரூபித்துக் காட்டுங்கள் என்று அறைகூவலுடன் முடித்தார்.

நவம்பர் 26ஆம் தேதி அரசமைப்புச் சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டுக் கைது ஆனவர்கள் நீதிமன்றத்தில் கூறவேண்டிய பட்டய வாக்குமூலம் இது 23.11.1957 விடுதலையில் வெளிவந்தது.

நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக் காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத் துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக் கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவும் இல்லை; அச்சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்து வதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்ற வாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக் கையில் நான் கலந்து கொள்ள விரும் பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்ப வில்லை. நான் குற்றவாளி என்று கருதப் பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராகயிருக்கிறேன்.

(விடுதலை 23.11.1957)

பெரியார் போராட்ட நாளுக்கு முன் வேண்டுகோள் ஒன்றினை விடுத்தார். ஒரு சமூக சீர்திருத்த இயக்கத் தலைவன், பொறுப்பான ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டும் வேண்டுகோள் எப்படிப்பட்ட உயர்ந்த நாணயமான, பண்புமிக்க தலைவர் தந்தை பெரியார் என்பது போராட்டக் களத்திலும் வெளிப்படுகிறது.

முக்கியமான காரியம் ஒன்றை வணக்கமான வேண்டுகோளாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அதை அவசியம் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டியது என்னை ரிமாண்டு செய்வதனாலேயோ, மற்றும் இப்போது செஷன்சில் நடைபெறும் வழக்கின் பெயரால் என்னை நீண்ட நாள் அரசாங்கத்தார் தண்டனைக்குள்ளாக்கி விடுவதாலேயோ, பொதுமக்கள் யாரும் ஆத்திரப்படுவதற்கோ, நிலை குலைந்து விடுவதற்கோ ஆளாகாமல் மிக்க மகிழ்ச்சியோடு அச்சேதியை வரவேற்க வேண்டும். எந்தவிதமான கலவரமோ, பலாத்காரமோ பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த ஆண்களுக்கோ பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ, துன்பம் வேதனை உண்டாக்கக் கூடியதான செய்கை, அதாவது ஆயுதப் பிரயோகமோ, அடிதடியோ, நெருப்புக் கொளுத்துதலோ முதலிய ஒரு சிறிய காரியம் கூட நடத்தாமலும், நடை பெறாமலும் இருக்கும்படியாக ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும். நான் ஆயுதப் பிரயோ கம் செய்ய வேண்டும் என்றும், அக்கிரகாரங்கள் கொளுத்தப்பட வேண்டும் என்றும் சொன்னதும் சொல்லி வருவதும் உண்மை. அவை இப்போது அல்ல. அதற் கான காலம் இன்னும் வரவில்லை. வரக் கூடாதென்றே ஆசைப்படு கிறேன். அப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடு வதற்குக் காலம் எப்போது வரும் என்றால் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவது முதலிய இன்னும் நான்கைந்து கட்டங் கள் நடத்தி அவைகளால் ஒன்றும் பயனில்லை; வெற்றிக்கு அவை பயன் படவில்லை என்று கண்டு பலாத் காரத்தைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகுதான் நாம் அவற்றில் இறங்கவேண்டியவர்களாக இருக்கிறோம். நான் மேலே வேண்டிக் கொண் டிருக்கிறபடி, எந்த விதமான கலவரமும், செய்கையும் ஏற்படாமல் இருக்க வேண்டிக் கொள்கிறேன். அதிகாரிகளி டத்தில், போலீஸ்காரர்களிடத்தில் மரியாதையாகவும், கட்டுப்பாடாகவும் நடந்து கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என்று வேண்டுகோளுடன் முடித்திருந்தார்.

இந்தியத் தலைமை அமைச்சர் நேரு டில்லியில், திராவிடர் கழகக் கிளர்ச்சி காட்டுமிராண்டித்தனம். அநாகரிகமான காரியம்; இதை ஒழிக்காமல், அடக்காமல் இடம் கொடுத்துக் கொண்டிருக் கிறார்கள் என்று பேசினார். தமிழக அமைச்சரவை மந்திரி ஒருவர், பெரியார் திராவிடர் கழகத்திற்குக் கருமாதி செய்கிறார். ஏனென்றால் அவருக்குப் பிறகு கருப்புச் சட்டைக்காரர்கள் இருப்பதில் அவருக்கு இஷ்டமில்லை என்றார்.

பிரதமர் பண்டித நேருவுக்கும், பண்பாடில்லாமல் பேசிய தமிழக அமைச்சருக்கும் தக்க பதிலை, தரமான பதிலை 28.11.1957 அன்று திருச்சி நகர்மன்றத் திடலில் நடைபெற்ற கூட்டத்தின் வாயிலாக தந்தை பெரியார் அளித்தார்.

மான உணர்ச்சியைப் பற்றிச் சொல்லிப் பரிகாரம் கேட்டால் கருமாதி செய்கிறேன் என்று பதில் சொன்னால் கழகத்திற்குக் கருமாதி நடக்கிறதோடு வேறு சிலருக்கும் சேர்த்து கருமாதி நடந்துவிட்டுப் போகட்டும் என்றுதானே பதில் சொல்லவேண்டும்? கொடி கொளுத்துகிறேன் என்ற போது பறந்து கொண்டு சமாதானம் சொன்னார்கள்; ஏன் அப்போது சட்ட மில்லை. இப்போது சட்டம் வந்துவிட்டது. ஒரு கை பார்க்கிறேன் என்பதுதானா மேலிடத்துப் பதில்? காட்டுமிராண்டித் தனம் என்பதுதானே மேலிடத்துப் பரிசு.
(விடுதலை 29.11.1957)

அழுத்தப்பட்டுக் கிடக்கும் சமுதாயம் தலையெடுப்பது பெரிதா? இல்லை எனக்குக் கழகம்தான் பெரியதா? கழகம்தான் எங்களுக்கு எல்லாம் கஞ்சி ஊற்றுகிறதா? உப்புக்கு வழியிருக்கிறதா என்று பார்ப்பவனுக்குக் கழகத்தில் இடமில்லை. அவனவன் சொந்தத்தில் சோறு தின்றுவிட்டுப் பாடுபடுகிறவன் கழகத்தின் மூலம் எந்தப் பதவிக்கு ஆசைப்படுகிறோம்? அது ஒழிவதால் எதற்குக் கவலைப்படப் போகிறோம்.

(விடுதலை 29.11.1957)

26.11.1957 இல் பெரியார் அறிவித்தபடி போராட்டம் நடைபெற்றது. அரசு என்ன செய்தது?

உண்மையில் பலமான முறையில் கிளர்ச்சி நடந்தது. போலீஸ்காரர்கள் இனிமேல் எங்களால் பிடிக்க முடியாது. சிறையில் இடமில்லை என்கிற அளவுக்கு நடந்துள்ளது.

இன்று கைதானவர்கள் பட்டியல் 3000 என்று போட்டிருக்கிறார்கள். அதுவும் தப்பு. சரியான விவரம் கிடைக்கவில்லை. கொளுத்தப் போகிறோம் என்று அறி வித்திருந்த சில இடங்களுக்கும் போலீசே போய் எட்டிப் பார்க்கவில்லை. லால்குடி மாதிரி இடங்களில் பாதிப் பேரைக் கூடப் பிடிக்கவில்லை.

அதற்கே அங்கிருந்த லாரியில் அள்ளிப் போட்டுக் கொண்டு திருச்சி சிறையதிகாரி இங்கு இடமில்லை என்று திருப்பி அனுப்பி மீண்டும் லால் குடிக்குக் கொண்டு போய்த் திரும்ப இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று செய்தி வரவே திரும்பத் திருச்சிக்குக் கொண்டு வந்து இப்படிப் பந்து விளையாடி யிருக்கிறார்கள். சட்டம் கொளுத்துவோர் பட்டியல் விடுதலை ஏட்டில் நாள்தோறும் வெளி யிடப்பட்டு அதன் எண்ணிக்கை 10 ஆயிரமாகப் பெருகியது. 26.11.1957 ஆம் நாள் மட்டும் மூவாயிரம் பேர் கைதாயினர். 15பேர் சிறைக் கொடுமையில் மாண்டனர். ஜாதியை ஒழிக்கப் போராடியவர்களை இழித்துக் கூறியது போராட்டத்தைப் பெரியார் இன்னும் தீவிரமாக்கத் துணை புரிந்தது எப்படி?
வருத்தத்தோடு சொல்கிறேன். அர சாங்கத்திற்கு எச்சரிக்கை செய்கிறேன். அடக்குமுறையை நம்பாதீர்கள். ஒரு காற்றில் அடித்துக்கொண்டு போய்விடும். இந்தக் கிளர்ச்சி அடிக்க அடிக்கப் பந்து போல் கிளம்புமே தவிர அடங்காது. இது எங்கள் காரியம் அல்ல! எனக்கு மாத்திரம் ஆகக் கூடியதல்ல! அத்துணை பேருக்கும் சம்பந்தமான காரியம்! அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பறை யன், பஞ்சமனாக இருக்கிற ஒரு நேஷன் இந்த இழிவு கூடாது என்றால், வடவர்கள் நேஷனுக்கு அவமானம் என்கிறார்களே! இது என்ன நியாயம்? இப்படித்தான் இருக்க வேண்டும் என்றால் எத்தனை பேர் மானத்தை விட்டு இருப்பான்? இன்று 3000 பேர் ஜெயிலில் இருக்கிறார்கள் என்றால் இதை நான் பெரிதாகக் கருத வில்லை. நாடகம் போன்றது என்றுதான் சொல்லுவேன். தோழர் குருசாமி இதுவரை 9 தடவை ஜெயிலுக்குப் போயிருக்கிறார். நான் போவதாயின் 16ஆவது முறையாக லாம். இந்த அடக்கு முறைகளை நாங்களா பொருட்படுத்துவோம்? இந்த பூச்சாண்டி யாரிடம்? இந்தக் காரியத்திற்கு 500 பேராவது சாகவும் முன்வரவேண்டும். சிறைக்குப் போவதில் ஒன்றுமில்லை என்றார் பெரியார்.

(நிறைவு)

--------------முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் அவர்கள் 29-11-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: