Search This Blog

5.11.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! - 17

ஆச்சாரியார் ஆகஸ்டு துரோகிதானே?



இனநலனைக் காட்டிக் கொடுக்கும் கோடரிகள் யார் இருக்கிறார்கள்? அப்படிப்பட்டவர்கள் ஏதாவது கிறுக்கி நூலாக வெளியிட்டுள்ளார்களா? என அலைந்து திரிந்து தேடி, அதிலிருந்து பொறுக்கி தந்தை பெரியாரையும், திராவிடர் கழகத்தையும் தாக்குவதாக நினைத்துக் கொண்டு ஏதோ எழுதித் தொலைக்கிறார் திருவாளர் லட்சுமிநாராயண அய்யர்.

இந்த இதழ் துக்ளக்கில் (2-11-2011) காமராசரை பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியார் கூறிவிட்டாராம். அது தமிழகக் காங்கிரசாரில் கணிசமானவர் களிடையே அதிருப்தியை உண்டாக்கியதாம். அந்தக் கணிசமானவர்கள் யார்? யார்? பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா?

கடைசிக் கடைசியாக அவாளுக்குக் கிடைத்தவர் திருவாளர் சி.சுப்பிர மணியம்தான்.

ஈ.வெ.ரா. எந்த அர்த்தத்தில் காமராஜரைப் பச்சைத் தமிழர் என்று சொன்னார் என்பது எனக்குத் தெரியாது. காமராசர் பச்சைத் தமிழர் என்றால், நான் வெள்ளைத் தமிழனா? ஆர்.வெங்கட்ராமன் நீலத்தமிழரா? பக்தவத்சலம் சிவப்புத் தமிழரா? கக்கன் ஊதா தமிழரா? இதோ நிற்கிறாரே மாணிக்கவேலு நாயக்கர் இவர் மஞ்சள் தமிழரா? இப்படியெல்லாம் சொல்வது சரியில்லை என்றே எனக்குத் தோன்று கிறது.

நாங்கள் எல்லோரும் தமிழர்கள். உண்மையில் எல்லோரும் இந்தியர்கள். இதுதான் எனக்குத் தெரிந்த விளக்கம் என்று சுப்பிரமணியம் கூறினார்.

காமராஜரை மட்டுமே பச்சைத் தமிழர் என்று ஈ.வெ.ரா. கூறுகிறாரே? என்று ஒரு நிருபர் கேட்டார். அதுபற்றி அவரிடம்தான் கேட்கவேண்டும் என்று சுப்பிரமணியம் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார் என்றது துக்ளக் கட்டுரை.

எந்த அர்த்தத்தில் பச்சைத் தமிழர் என்று காமராசரை பெரியார் சொன்னார் என்று எனக்குத் தெரியாது என்று சொன்னதாக முதல்வரியில் காணப்படுகிறது. இந்த நிலையில் அவர் சொன்னதையெல்லாம் எடுத்துக் காட்டுவது வெட்டி வேலை என்பதல்லாமல் வேறு என்ன?

எனக்குத் தெரியாது என்கிறார் ; பிறகு பெரியாரைத் தான் அது பற்றி கேட்கவேண்டும் என்கிறார். அப்படிப் பட்ட மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா திருவாளர் லட்சுமிநாராயணர்?

அதுவும் ஆச்சாரியாரின் சீடரிடமா பெரியாரைப் பற்றிக் கேட்பது? ஆச்சாரியாரை ஆட்சி பீடத்திலிருந்து விரட்டி அடித்ததோடு மட்டுமல்லாமல், ஆச்சாரியாருக்குப் பிறகு முதல் அமைச்சர் பதவிக்கு காமராசரை எதிர்த்து சி.சுப்பிரமணியம் போட்டி யிட்டபோது, காமராசருக்கு ஆதரவாக இருந்தார் பெரியார் என்ற கோபம் சி.சு.வுக்குக்கடைசி வரை இருந்து வந்ததே! அப்படிப்பட்டவருக்கு பச்சைத் தமிழர் என்று காமராசரைப் பெரியார் பாராட்டினால் பிடிக்குமா?

பார்ப்பனர்களுக்குக் கைத்தடியாக இருந்த அதே சி.சுப்பிரமணியம் கூட பார்ப்பான் - தமிழன் என்ற ஒரு முக்கியமான பிரச்சினையில் சிக்குண்டு மூச்சுத் திணறும் ஒரு சம்பவம் நடந்ததே! பெரியார் பார்ப்பனர் பற்றி ஏன் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதை அனுபவத்தில் சி.சு. அறிந்து கொண்டாரே!

சி.சுப்பிரமணியம் அவர்களின் சிபாரிசுப்படி தமிழ் நாடு அரசின் வழக்கறிஞராக அழகிரிசாமி அவர்கள் நியமிக்கப் பட்டபோது பார்ப்பனர்கள் ஆர்த்தெழுந்து அமர்க்களம் செய்தபோது சி.சுப்பிரமணியம் பூணூல் மகாத்மியத்தின் பூரணத்துவத்தைப் புரிந்து கொண்டாரே! கல்கி இதழில் கண்ட னங்கள் தெரிவித்து எழுதினாரே ராஜாஜி.

அரசு வழக்கறிஞராக்கப்பட்ட அழகிரிசாமியை எதிர் காலத்தில் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்க மாட்டோம் என்று உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று பார்ப்பன வழக்கறிஞர்கள் அமைச்சர் சி.சு.விடம் கோரிக்கை வைத்தபோது அவருக்குக் கோபம் பொங்கி எழுந்ததே!

அழகிரிசாமியின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

10-8-1960 அன்று மனு விசா ரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் பார்ப்பனர்கள். டி.வி.பாலகிருஷ்ண அய்யர் மற்றும் ஜி.ஆர்.ஜெகதீசன் அய்யர்.

ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட் டாலும் பார்ப்பன நீதிபதிகள் சன்னமாக தங்கள் விஷக் கொடுக்கைக் காட்டினர் தீர்ப்பில்.

அழகிரிசாமி நியமனம் செய்யப் படுவதற்கு சட்ட அமைச்சர் சி.சுப்பிர மணியம்தான் முழுக் காரணம். ஜனநாயக அரசு இயங்கும் நாடுகளில் நியமனங்களில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சலுகை காட்டுவது சகஜம் தான். அழகிரிசாமியின் பெயர் உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டால், அதைக் குடியரசுத் தலைவர் கவனமாகப் பார்க்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பில் அடங்கி யிருந்த மணி வாசகமாகும்.

நீதிபதியின் வாசகங்கள், அரசு வழக்கறிஞர் நியமன விஷயத்தில் சட்டமன்றத்தின் உரிமைகளை மீறும் விதத்தில் அமைந்துள்ளன. ஆகவே நீதிபதி பாலகிருஷ்ண அய்யர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உரிமை மீறல் தாக்கீது (Notice) ஒன்றைக் கொடுத்தார் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.லாசர்.

இது நீதிபதியை அவமதிக்கும் செயல் என்று வழக்குரைஞர் ராமச்சந்திர அய்யர் எனும் பார்ப்பனர் புதிய ரிட் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் தொடர்ச்சியாக சபா நாயகருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. 7-10-1960 அன்று சபாநாயகர் உயர்நீதி மன்றத்துக்கு வருமாறு கூறப்பட்டு இருந்தது. அரசமைப்புச் சட்டத்தின்படி என்னை யாரும் விசாரணைக்கு உட்படுத்த முடியாது என்று சபாநாயகர் யூ.கிருஷ்ணராவ் கறாராகக் கூறிவிட்டார்.

சி.சுப்பிரமணியனாருக்கு பார்ப்பன நஞ்சின் டிகிரி என்பது எத்தகையது என்பது அப்போதுதான் புரிந்தது.

பச்சைத் தமிழர் காமராசர் என்றால் அங்கு நிறப் பிரச்சினை கிடையாது. பச்சையான உண்மை, பச்சையான பொய் என்று சொன்னால் இந்த இடத்தில் என்ன பொருள்? கறுப்பு, சிகப்பு, மஞ்சள், வெள்ளை என்ற அர்த்தத்திலா? தமிழில் ஒரு பொருள் பன்மொழி, பல் பொருள் ஒரு மொழி உண்டே!

காங்கிரசுக்குள்ளேயே ஆச்சாரியாருக்கும் (ராஜாஜிக்கும்) காமராசருக்கும் இடையே நடைபெற்ற சண்டை ஒன்றும் இரகசியமானதல்லவே! காந்தியார் வரை சென்று சிரித்த விவகாரம்தானே அது.

ஆகஸ்டு துரோகி என்று அழைக்கப் பட்ட ஆச்சாரியார் வழக்கம் போல கொல்லைப் புற வழியாக அகில இந்திய காங்கிரஸ் வழியாக காங்கிரசில் நுழைந்த போது, மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற (31-10-1045) காங்கிரஸ் மாநாட்டில் (காமராசர்தான் காங்கிரஸ் தலைவர்) கல்தா கொடுக்கப்படவில்லையா?

அந்த மாநாட்டுக்குத் தம்மை காமராசர் அழைக்க வேண்டும் என்று ராஜாஜி கெஞ்சவில்லையா?

திருச்செங்கோடு தாலுகா காங்கிரஸ் கமிட்டியினர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குத் தெரியாமல் ராஜாஜியைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப் பினராக தேர்வு செய்தது செல்லாது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டதே!

1942 முதல் 1945 வரை ராஜாஜி ஆங்கிலேய ஆட்சிக்கு எப்படியெல்லாம் விசுவாசமாக இருந்தார் என்பதெல்லாம் நாறிப்போன சங்கதி யாயிற்றே!

இந்த யோக்கியதையில் ஆச்சாரியாரை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சுவதும், நீதிக்கட்சியை வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவான கட்சி என்று பிலாக்கணம் பாடுவதும் அவாளின் பாச உணர்வுக்கும், மோச உணர்வுக்கும் முறையே எடுத்துக் காட்டுகள் ஆகும்.

ஆச்சாரியாருக்கும் காமராசருக்கும் இடையே நிலவி வந்த இந்தப் போராட்டத்தின் பின்னணியையும், ஆச்சாரியார் 1952 இல் வழக்கம் போல கொல்லைப்புற வழியாக சட்டப் பேரவையில் நுழைந்து முதல அமைச்சர் ஆன நிலையையும், ஆட்சியில் அமர்ந்த பின், அசல் அக்கிரகாரப் புத்தியோடு, மனுதர்ம நோக்கத்தோடு அவர் ஆட்சி செய்ததையும், வருணாசிரம திட்ட மானகுலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததையும், தந்தை பெரியார் கடுமையாக எதிர்த்து முறியடித்த வரலாற்றையும், அதன் காரணமாக ஆச்சாரியார் பதவியை விட்டு ஓடிய நிலை யையும், அதனைத் தொடர்ந்து காம ராசர் முதல் அமைச்சர் ஆனதை யும், பார்ப்பன வட்டாரங்கள் காம ராசரைக் கடுமையாக விமர்சித்ததையும், காமராசர் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து பஞ்சம, சூத்திர மக்களுக்குக் கல்விப் பாட்டையை கண்ணை மூடிக் கொண்டு திறந்துவிட்டதையும் முறை யாகத் தெரிந்து வைத்திருந்தால், பெரியார் பச்சைத் தமிழர் காமராசர் என்று சொன்னதற்கான அழுத்தமான வரலாற்றுப் பின்னணியும், காரணமும், காரியமும் கண்டிப்பாகத் தெரிந்து விடுமே!

-----------------------------------(அது குறித்தும் மேலே பேசுவோம்)

பிரிட்டீஷாரின் பேச்சாளர் ராஜாஜி!

1942ஆம் ஆண்டு ஆகஸ்டுப் புரட்சியில் கைதான தலைவர்களெல்லாம் 1945ஆம் ஆண்டில் ஒருவர் பின் ஒருவராய் விடுதலை செய்யப்பட்டு வந்தனர். வைஸிராய் லார்டு வேவல் காங்கிரஸ் தலைவர்களையெல்லாம் அழைத்து சமரசம் பேசினார். முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில், காங்கிரசை விட்டு விலகியிருந்த ராஜாஜியையும் அழைத்துப் பேசினார்.

இதே சமயத்தில் ராஜாஜி மீண்டும் காங்கிரசில் சேர்ந்துவிட வேண்டும் என்று விரும்பி அதற்காக முயன்று வந்தார். ஆனால், ஆகஸ்டுப் போராட்டத்திற்கு எதிராகவும், நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவாகவும் அறிக்கை விட்டு காங்கிரசை விட்டு விலகிய அவரை மீண்டும் காங்கிரசில் சேர்ப்பதை பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்கள் எதிர்த்தனர்.

1942 மே மாதத்தில் அலகாபாத் நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுப்பதை ஆதரித்து ராஜாஜி ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதற்கு ஆதரவாக 15 வாக்குகளும், எதிராக 120 வாக்குகளும் கிடைத்தன. அதைத் தொடர்ந்து ராஜாஜி காரியக் கமிட்டியிலிருந்தும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகினார்.

தன்னுடைய (பாகிஸ்தான்) தீர்மானம் தோற்றாலும், தாம் தொடர்ந்து போராடப் போவதாகவும் அறிவித்தார் ராஜாஜி. இதனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நோட்டீஸ் அனுப்பியது. இது மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியிலிருந்தும், சட்டசபை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகும்படி அவருக்கு மகாத்மா காந்திஜியே கடிதம் எழுதினார்.

வல்லபாய் பட்டேல் வற்புறுத்தியதால் தான் ராஜாஜிக்கு காந்திஜி இப்படி ஒரு கடிதத்தை எழுதினார் என்று பட்டாபி சீத்தாராமையா குறிப்பிட்டிருக்கிறார். இதன்படி காங்கிரசிலிருந்து விலகிய ராஜாஜி, ஆகஸ்டுப் போராட்டத்தையும் கடுமையாக எதிர்த்தார். பாகிஸ்தான் பிரிவினையையும் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வந்தார்.

1942 முதல் 1945ஆம் ஆண்டு வரை அவரது சொல்லும் செயலும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவானதாகவே இருந்தன. பிரிட்டிஷாரின் பேச்சாளரைப் போலவே ராஜாஜி பேசி வந்தார். இது காங்கிரஸ் தொண்டர்களை மிகுந்த ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது.

இவ்வளவு நடந்த பிறகு 1945ஆம் ஆண்டில் ராஜாஜி வைஸிராயுடன் சமரசப் பேச்சில் ஈடுபட்டதும், மறுபடியும் காங்கிரசில் சேர முயன்றதும் காங்கிரஸ்காரர்களுக்கு எரிச்சலூட்டியது. குறிப்பாக ஆகஸ்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் செய்து வந்த தேசபக்தர்களுக்கு வேதனை அளித்தது.

--------------------(நூல்: சரித்திர நாயகன் காமராஜர்! - சிவலை இளமதி)

----------------தி.க.பொதுச்செயலாளர் மானமிகு கலி.பூங்குன்றன் அவர்கள் 5-11-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: