Search This Blog

23.11.11

வால்ட்டேரும் பெரியாரும்

பேராசிரியர் அறவாணன் அவர்களுக்கு . . .

கடவுள் : வால்ட்டேரும் பெரியாரும் எனும் தலைப்பில் பேராசிரியர் க.ப.அறவாணன் ஜனசக்தி நாளேட்டில் (24.9.2011) கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார்.

லூயி மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்த ஃபிரென்ச் மக்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த எழுத்து வால்டேருடையது. இது போன்ற தனிப் பெருமையைப் பெரியாருக்கு நாம் சூட்டிவிட முடியாது என்று எழுதியுள்ளார்.

இது ஒரு தேவையில்லாத விஷமமான வீண் வம்பு வேலை! ஒவ்வொரு நாட்டின் சூழலும், பிரச்சினையும் மாறுபடுகின்றன. வெறும் எழுத்துகளால் நம் நாட்டை நிமிர்த்திவிடமுடியாது.

எழுத்து பேச்சு இவற்றோடு களங்கள் பலவற்றையும் காண வேண்டிய அவசியம் இங்கு உண்டு.

வால்ட்டேர் வெறும் எழுத்தாளரே தவிர, களங்கள் கண்டவர் அல்லர்.

ஆனால் தந்தை பெரியார் அவர்கள் தத்துவத்தின் கர்த்தாவாகவும் இருந்தார்; பிரச்சாரகராகவும் இருந்தார்; களங்கள் கண்டு சிறையேகியும் உள்ளார்.

நேரிடையாக அனுபவிக்கும் ஒரு அரசனின் கொடுமைகளைக் கண்டு அவற்றால் பாதிப்புக்கு ஆளாகிய மக்கள் கொந்தளித்து எழுவது எளிதானது - இயல்பானது.

தாங்கள் பாதிக்கப்படுகிறோம் - வஞ்சிக்கப் படுகிறோம் - இழிவு படுத்தப்படுகிறோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் ஆதிக்கக்காரர்கள் கிழித்த பக்தி வட்டத்துக்குள் சிக்கி, தாங்களாகவே தங்கள் மூளைக்கு விலங்கு மாட்டிக் கொண்ட மக்களின் அறிவைத் திருத்தம் செய்வது - போராடுவது என்பது எளிதானதன்று.

சிந்திப்பதே கூட பாவம் என்று கருதிய மக்கள்! மாற்றம் என்பது பாவகதிக்குத் தங்களைப் பிடித்துத் தள்ளக்கூடியது - இழிவையும் அடிமைத்தனத்தையும் இந்தப் பிறவியில் பதற்றம் இல்லாமல் அனுபவித்தால்தான் போகிற கதிக்கு நல்லது நடக்கும் என்று முரட்டுத்தனமாக நம்புகிற மக்களிடத்திலே தந்தை பெரியார் அவர்கள் பேசியதும், எழுதியதும், இயக்கம் கண்டதும் வால்டேருக்கு மேல் ஆயிரம் மடங்கு கூடுதலாகும். இந்து மதத்தை எதிர்ப்பது கிறித்துவ மதத்தை எதிர்ப்பதை விட மிகவும் கடுமையானது! பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு வால்டேரின் வழிகாட்டுதல் அங்கு தேவைப்படவில்லை.

இங்கு அப்படியல்ல! ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக சூழ்ந்த அறியாமை இருட்டு வவ்வால்களாக இருந்த மக்களுக்கு அங்குலம் அங்குலமாகக் காட்டுதல்களும், கை தாங்குதல்களும், தூக்கி விடுதல்களும் தேவைப்படுகின்றன.

தன் மறைவிற்குப் பிறகும் தக்க பாதுகாப்பான ஏற்பாடுகள் தேவைப்பட்டன தந்தை பெரியாருக்கு. வால்ட்டேருக்குப் பிறகு அவரைத் தொடரும் இயக்கம் கிடையாது அங்கு; இங்கோ இயக்கம் தேவைப்பட்டது - அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பகுத்தறிவுத் தொண்டு தொடரும் நிலையை அறிய முடியும். பெரியார் காட்டிய இந்த சுயமரியாதை - பகுத்தறிவு நெறி - வால்ட்டேர் வாழ்ந்து எழுதிக் காட்டிய பிரஞ்சு நாடு உட்பட உலகுக்கே தேவைப் படும் பரிணாமத்தைப் பெற்றுள்ளது.

மத அச்சுறுத்தலின் பிடியில் உலக மக்கள் இன்று; தாலிபான்களும், காவிகளும் மதவெறியர்களும் மானிடத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகவே உள்ளனர்.

இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு நெறி காலத்தைக் கடந்து வெல்லக் கூடிய ஆற்றல் மிக்கது.

தந்தை பெரியார் என்கிறபோது இவ்வளவு கனபரி மாணங்களும் உண்டு என்பதைப் புரிந்து கொள்ளாமல் எழுதுவது அறவாணன் போன்ற மெத்தப் படித்தவர்களுக்குத் தேவையில்லாத ஒன்றே! பார்ப்பனர்களும் தமிழர்களே என்று எழுதப்போய் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளவர் - இப்பொழுது தந்தை பெரியார் பற்றியும் தவறாக எழுதி தேவையில்லாத விமர்சனத்துக்கு ஆளாவது ஏனோ?

----------------”விடுதலை” ஞாயிறுமலர் 29-10-2011

0 comments: