Search This Blog

31.10.10

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே - அசுரன் யார் என்று தெரியுமா?

தீபாவளி கொண்டாடும் தமிழர்களே
அசுரன் யார் என்று தெரியுமா?

திராவிடர்கள், வாழ்க்கை வசதிகள், பண்பாடுகள் நிறைந்த நாகரிக இனமாக வாழ்ந்து வந்தனர். கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆரியர் கூட்டம் பிழைப்புக்கு வழிதேடி வந்தனர். செழிப்பான திராவிட நாட்டைப் பார்த்து இங்கேயே தங்கி விட்டனர். ஆரியர்கள் யாகம் என்ற பெயரால் சோமபானம், சுரபானம் போன்ற மது வகைகளைக் குடித்தும், ஆடு, மாடு, மான், குதிரை முதலிய விலங்குகளைக் கொன்று தின் றும், காமக்களியாட்டங்களை நடத்தினர்.

புலால் உண்ணாமை, பண்பாடு, நாகரிகம் நிறைந்த திராவிடர்கள் யாகத்தைத் தடுத்தனர். ஆரியர்கள் திராவிட இனத்தாரில் சிலரை போதைப் பொருள் களையும் தங்கள் இனப் பெண்களையும் கொடுத்து வசப்படுத்த ஆரம்பித்தனர். ஆரிய இனப் பெண்களின் நிறத்தை யும், உடலையும் பார்த்து பலர் அவர் களின் வலையில் வீழ்ந்தனர். அந்த துரோகிகளை இந்திரர்கள் என்று கூறி, அவர்களின் துணை-யுடன், யாக எதிர்ப்பாளர்களைக் கொன்று யாகத்தை நடத்தினர்.

ஆரியர்கள் கூறிய வேதங்கள் என்பவை, யாக நடப்புகளையும் அவர் களுக்குக் கிடைத்த உதவிகளையும் தெரிவிக்கின்றது. வேதங்களையும், கற்பனைக் கடவுள்களையும் சொன் னவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும், வேதத்தையும் கடவுள் வணக்கத்தையும் எதிர்த்தவர்கள் அசுரர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ரிக், அதர்வண வேதங்களில் யாகத்தைத் தடுக்கும் அசுரர்களை அழிக்கும்படி இந்திரன், சோமன், அக்னி என்பவர்களைக் கோரும் மந்திரங்கள் பலவும் உள்ளன. அவர்களால் கொலை செய்யப்பட்டதாக சாஸன், அகி, விருத்திரன், சம்பரன், சகவசு, திருபீகன் உரன், சுக்கனன், சுவசன், விபம்சன், பிய்ரு, நமுசி, ருதிக்கிரமன், அதிதிக்கவன், குதச்சணி, ஆபுதி, கிருணகரு என்ற பலம் பொருந்திய அசுரர்களின் பெயர்கள் குறிக்கப் பட்டுள்ளன.

மேலும் மேற்கண்ட அசுரர்களை அழித்த இந்திரன், சோமன், அக்னி முதலியவர்களை வணங்கி மேலும் அசுரர்களை அழிக்கும்படி வேண்டுகின்றனர். அதில் அசுரர்களின் மணிக்-கட்டை முறி, தோலைக் கிழி, முழங்கால், முழங்கை, கழுத்துக்ளை முறி, கிழித்தெறி, சின்னா பின்னப் படுத்து, அக்னி சுவாலையால் சுடு, துண்டு துண்டாக வெட்டு, நீர்ப்பானை யில் வைத்து வேகவை, பூமி விழுங் கட்டும், படுபாதாளத்தில் விழட்டும், மலை வெடித்து விழுங்கட்டும், நாச மாகட்டும், பசுவின்பால் அவர்களுக்கு நஞ்சாகட்டும், வாரிசு இல்லாமல் அழியட்டும், அவர்களது செல்வம், பசு முதலியவற்றை கொள்ளையடித்து எங்களுக்குக் கொடு என்று கேட்கின்றனர்.

இவையனைத்தையும், தேவர்கள் குடி மயக்கத்தில்தான் செய்வர். அதனால் அவர்களுக்கு சோம ரசத்தை திகட்டும் வரை கொடு என்கின்றனர். பின்னர் கற்பனையான இதிகாசங்களிலும் புராணங்களிலும் இந்த முறையே கடைப்பிடிக்கப்பட்டு திராவிடர்-களை அழித்ததாகக் கூறியுள்ளனர்.

அவற்றில் இரணியாட்சன், நரகாசுரன், கம்ஸன், சிசுபாலன், ஜராசந் தன், ராவணன், கும்பகர்ணன், இந்திர ஜித்து, கவந்தன்; பெண்பாலர் தாடகை, சூர்ப்பனகை, சிம்மிகை என்ற திரா விடர்களின் பெயர்கள் வரு-கின்றன. அவர்களுக்கு உதவிய துரோகி-களை ஆழ்வார்கள் என்றுள்ளனர். திரா விடர்கள் பூர்வகுடிகள் என்பதை ரிக்வேதம் 2710 சுலோகத்தில் அசுர குலத்தை, தாஸ இனத்தை, பழை மையாகவே தொன்று தொட்டு இங்கு வாழ்ந்து வருபவர்களை வேரோடு அழிக்கவும் என்றுள்ளது. திராவிடர் களை வேதத்தில் அசுரர், அரக்கர், தஸ்யூ, தாஸர், சூத்திரன், தைத்ரியன், யதூதனர், பிசாசு, பூதம் என்று குறித் துள்ளனர். ஆயினும் பல இடங்களில் அசுரர்கள் வலிமை மிக்கவர்கள் யோக்கியர்கள் என்றுள்ளது.

அசுரர் என்பது காரணப் பெயரே. சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள். ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன.

இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர். அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க திராவிடர்களையே குறிக் கிறது. அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர்.

இந்த உண்மையை, தந்தை பெரியார் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்து, புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டு நமது மக்கள் கொண்டாடும் பண்டிகைகள் நமது இன முன்னோர்களை அழித்த நாள்களே என்பதால், அவற்றைக் கைவிட்டு மானமும் அறிவும் உள்ள மக்களாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறி வும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.

------------------விடுதலை, 27.10.2005


**********************************

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி!
தமிழ்க் கடல் மறைமலை அடிகள் கூறுகிறார்

வட நாட்டில் அக்காலத்திலிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.

பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீப + ஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும். ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.

ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்

நூல்: தமிழர் மதம் பக்கம்: 200-201

மறைமலை அடிகள் ஆன்மிகவாதிதான். அவரே கூறுகிறார் தீபாவளி பார்ப்பனர் புனைவு என்று. தமி ழர்களே நீங்கள் தீபாவளியைக் கொண்டாடலாமா?

சிந்திப்பீர்!

0 comments: