Search This Blog

13.10.10

பறையன் என்றால் என்ன?பார்ப்பான் என்றால் என்ன?


வடஆற்காடு ஜில்லா சுயமரியாதை மகாநாடு

தலைவர் அவர்களே! தோழர்களே! !

இன்று இந்த மகாநாட்டுக்கு வந்த எனக்கு இங்குள்ள பல சங்கங்களால் வரவேற்பு பத்திரங்கள் வாசித்துக் கொடுக்கப்பட்டதற்கு பதில் சொல்லுவேன் என்று தலைவர் சொன்னார். வரவேற்புப் பத்திரங்களை ஒரு சடங்காகவே கருதி வருகிறேன், அவை புராணக் கற்பனைகள் போல் இருக்கின்றனவே ஒழிய உண்மைகள் மிக அருமையாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட சில விஷயங்களினுடைய பாராட்டுதலும் எனக்குச் சேர வேண்டியதில்லை. அவைகள் எல்லாம் எனக்குத் துணையாய் இருந்து என்னுடன் ஒத்துழைத்து எனக்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டிவந்த வாலிபர்களுக்கே சேர வேண்டியதாகும். ஆதலால் அப்புகழ்ச்சிகளை அவர்களுக்கே சமர்ப்பித்து விடுகிறேன்.

தோழர்களே! இம்மாநாட்டுக்குத் தலைமை வகித்த தலைவர் தோழர் கே. எம். பாலசுப்பிரமணியம் பி.ஏ., பி.எல். அவர்கள், தான் ஒரு சின்னப் பையன் என்றும், தன்னை தலைமைப் பதவியில் உட்கார வைத்து நான் வேடிக்கை செய்கிறேனென்றும் சொன்னார். இந்த இயக்கம் இன்று ஏதாவது ஒரு அளவுக்காவது மதிக்கத்தகுந்த அளவுக்கு பயன்பட்டு வருகின்றது என்று சொல்லப்படுமானால் அதற்கு காரணம் இந்தமாதிரி “சின்னப் பையன்களே” காரணமாகும். இப்படிப்பட்ட சின்னப் பையன்கள் இந்த இயக்கத்தில் இருப்ப தினாலேயே தான் எனக்கு ஒருபுரம் வயது வளர்ந்தாலும் வாலிபமும் கூடவே வளர்ந்து வருகிறது. எனது சவகாசம் முழுவதும் சின்னப்பையன்களிடமே இருப்பதினால் தான் சின்னப்பையன் தன்மை எனக்கு இன்னமும் இருந்தும் வளர்ந்தும் வருகிறது. என் ஆசை யெல்லாம் நான் எப்போதும் சின்னப் பையன்கள் மாதிரியே இருக்க வேண்டு மென்பதோடு பெரிய ஆளுகள் மாதிரி ஆகக்கூடாது என்பதுமாகும்.

இத்தலைவரவர்கள் நமது இயக்கத்தில் கலந்திருப்பது இயக்கத்திற்கு ஒரு அளவிட முடியாத ஆதரவாகும் என்பதைப்பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் காட்டவேண்டியதில்லை. ஆனால் அவருக்கு வேண்டுமானல் பெருத்த நஷ்டம் ஏற்படலாம். ஏனெனில் அவருக்குள்ள ஊக்கமும் உற்சாக மும், அறிவும் வேறு கட்சிகளில் பயன்படுத்தப்படுமானால் அவர் பெருத்த பதவியையும், செல்வத்தையும் அடையத் தக்கவராவர். ஆதலால் அது அவருக்கு நஷ்டமாகலாம். ஆனால் பெரும் பெரும் பதவிகளையும், செல்வம் சேர்க்கும் முறைகளையும் இன்னமும் நாம் நிலைக்கவைக்கப் போவதானால் தான் அவருக்கு அது நஷ்டமாகும். எனக்கு இருக்கும் நம்பிக்கைப்படி பார்த்தால் வெகு சீக்கிரத்தில் பெரும் பதவிகள் என்பவைகளும், செல்வம் சேர்க்கும் முறைகள் என்பவைகளும் ஒழிந்து விடுமென்றே கருதுகிறேன்.

நமது இயக்கம்

நமது இயக்கம் இப்போது ஏதோ ஒரு புதிய துறையில் இறங்கி விட்டதாக வரவேற்புத் தலைவர் வார்த்தைகளிலிருந்தும், மகாநாட்டுத் தலைவர் வார்த்தையில் இருந்தும் ஊகிக்க இடம்கொடுத்தது. இந்த அபிப்பிராயம் நம் இயக்கத்திற்கு தூண்கள் போல இருந்து ஆதரவளித்துவந்த, உதவிபுரிந்து வந்த இன்னும் பல அறிஞர்கள் உள்ளத்திலும் தோன்றி இருப்பதாக அறிகிறேன். அவ்வளவோடு மாத்திரமல்ல, இக்கருத்தின் மீது இயக்கத்துக்கு சிலருடைய பாராமுகமும் ஏற்பட்டு வருகிறதையும் உணரு கிறேன்.

காரணம் என்னவென்றால் சுயமரியாதை இயக்கம் இதுவரை சமூக முன்னேற்ற இயக்கமாக இருந்தது மாறி இப்போது பொருளாதாரத்திலும், அரசியலிலும் பிரவேசித்து விட்டதாகவும் இதனால் இயக்கம் ஆதரவு அற்று அரசாங்க அடக்கு முறைக்கு ஆளாக்கி நசித்துப்போகுமென்றும் சொல்லுகி றார்கள். சிலர் தாங்கள் அரசாங்க ஆக்கினைக்கு தயாராயில்லை என்றும் ஆதலால் இதில் கலந்து கொள்ள முடியாது என்றும் சொல்லுகிறார்கள்.

இக்கூட்டத்தார் எல்லோருக்குள்ளும் மகிழ்ச்சியடையத்தக்க ஒரு விஷயமிருக்கிறது. அதென்ன வென்றால் அரசாங்க அடக்கு முறைக்கு ஆளாக முடியாது என்கின்ற காரணம் மாத்திரமே அல்லாமல் இக்கொள்கை விஷயத்தில் ஆட்சேபணையிருப்பதாக காணப்படவில்லை என்பதேயாகும். இது எப்படியிருந்த போதிலும் விஷயத்தை சற்று கவனித்துப்பார்ப்போம்.

சமூக முன்னேற்றம்

சமூக முன்னேற்றமென்றால் என்ன? எந்த சமூக முன்னேற்றம் என்பதை நாம் கவனிக்க வேண்டும். மனித சமூக முன்னேற்றம் என்பது மனிதர்கள் குளிப்பது, மதக்குறி இடுவது, புராணங்கள் படிப்பது, கோவில் குள யாத்திர உற்சவம் செய்வது முதலாகிய இவைகள் தானா? அல்லது ஜாதி வித்தியாசம் ஒழிப்பது, சத்திரம் சாவடி கட்டுவது பள்ளிக் கூடம் வைப்பது முதலியவைகள் தானா? இந்த மாதிரியான சமூக முன்னேற்றம் பல ஆயிர வருஷ காலமாக நடந்து வந்திருப்பதை சரித்திர வாயிலாக அறிகிறோம். இதற்காக ஆயிரக்கணக்கான மகாத்மாக்களும், முனிகளும், ரிஷிகளும், கடவுள் தூதர்களும், அவதராங்களும், கடவுள் அம்சங்களும் தோன்றி ஞானோபதேசம் செய்து வண்டிவண்டியான ஆதாரங்கள் சப்ளைகள் செய்தும் கடவுள்கள் பேரால் வெளியானவை என்று சொல்லியும் கட்டுப் பாடுகள் செய்து வைத்திருப்பதும் நாம் பார்க்கிறோம். இவற்றிற்காக உலகத் தையும், உலக மக்களையும் தேசமென்றும், மதம் என்றும், ஜாதி என்றும், வகுப்பு என்றும் பிரித்து இவற்றின் பேரால் பல ஸ்தாபனங்களையும் ஏற்ப டுத்தி 10 லட்சக்கணக்கான மக்கள் மதாச்சாரியார், உபதேசியார், மடாதிபதியார் முதலிய பேர்களால் வாழ்ந்து வருவதையும் பார்க்கின்றோம். இவ்வளவெல் லாம் இருந்தும் மனித சமூக முன்னேற்றத்திற்கு என்ன பலன் ஏற்பட்டது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

சுமார் 2000, 3000 வருஷத்திற்கு முந்திய மக்கள் சமூக நிலையை எடுத்துக் கொண்டால் அதில் இன்று என்ன மாறுதல், என்ன முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது? அந்தக்காலத்தில் இருந்த கொடுமை, ஏழ்மை, உழைப்புக் கஷ்டம், மனக்கவலை, அடிமைத்தனம் எல்லாம் இன்றும் இருந்துதான் வருகின்றது. ராமர் காலத்தில், அரிச்சந்திரன் காலத்தில் இருந்து வந்த மேல் ஜாதி, கீழ் ஜாதி, பெண்ணடிமை, பிரபு, கூலிக்காரன், பிராமணன், சண்டாளன் முதலிய கொடுமைகள் இன்றும் இருந்துதான் வருகிறது. பெண்களுக்கு உரை போட்டு தம்பூர் போலும், தலைகாணி போலும் வைத்திருக்கும் கொடுமை இன்று இல்லையா? பெண்களை விற்கும் கொடுமையும், அடிமை கொள்ளும் கொடுமையும் இன்று இல்லையா? ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி இன்று இல்லையா? மக்களை தெருவில் நடக்க விடாமை, தொடமுடியாமை, கண்ணால் பார்க்க முடியாமை ஆகிய மூர்க்க குணங்கள் இன்று இல்லையா? யாதொரு பாடும் படாமல் ஒரு நாளைக்கு நாலு வேளை, ஆறு வேளை சாப்பிடுகின்ற மக்களும் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் 12 மணி நேரம் பாடு பட்டும் அவர்கள் பெண்டு பிள்ளைகள் இரண்டு நாளைக்கு ஒரு தரம் கூட சமயல் செய்ய யோக்கியதை இல்லாத மக்களும் இல்லையா? இவைகள் எல்லாம் மதக் கட்டளை, கடவுள் சித்தம், அரசாங்க விதி என்பவைகளின் மீதே நடந்து வருகின்றனவா இல்லையா? என்பவைகளை யோசித்துப் பாருங்கள்.

மனித சமூக முன்னேற்றம் என்பதில் நாணையமாயும், யோக்கிய மாயும் பாடுபடுவதாய் இருந்தால் மேல்கண்ட கொடுமைகளை யெல்லாம் ஒழிக்க வேண்டுமா வேண்டாமா? என்று யோசித்துப் பாருங்கள். மனித சமூகம் என்றால் இதில் எந்த தேசத்தானாவது, எந்த மதத்தானாவது, எந்த சமயத்தானாவது, எந்த ஜாதியானாவது விலக்கப்பட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். எல்லா தேசத்திலும், எல்லா மதத்திலும், எல்லா ஜாதி யிலும், எல்லா அரசாங்கத்திலும் இந்தக் கொடுமைகளைப் பார்க்கின்றோம். சிலர் “எங்கள் மதத்தில் தீண்டாமை, பார்க்காமை முதலியவை இல்லை” என்று சொல்லக்கூடும். தீண்டாமை, பார்க்காமை என்பது ஒரு மதத்தையே அடிப்படையாகக் கொண்டதல்ல என்பதே எனது அபிப்பிராயம். தீண்டாமை என்பது ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அதென்ன வென்றால் ஒருவன் பாடுபடாமல் ஊரான் உழைப்பில் வாழவேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது.

உதாரணமாக பறையன் என்றால் என்ன? அவன் சதா கஷ்டமான வேலையைச் செய்ய வேண்டியவன் என்பதே. பார்ப்பான் என்றால் என்ன? அவன் சரீரத்தால் வேலையே செய்யக் கூடாது என்பதே. எங்காவது பார்ப்பனன் போட்டர் வேலை, மண்வெட்டி வேலை, வீதி கூட்டும் வேலை, கக்கூஸ் எடுக்கும் வேலை, வண்டி இழுக்கும் வேலை, பியூன் வேலை முதலிய கஷ்டமான வேலை செய்கிறானா? பார்ப்பனப் பெண்களாவது காட்டு வேலை, தோட்ட வேலை, வீட்டுக்கூலி வேலை முதலியவைகள் செய் கின்றார்களா? இதற்காகத்தான் ஜாதி பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கொள்கைகள் அதாவது இந்த மாதிரி பல ஜனங்கள் கஷ்டப்படுவதும், சில ஜனங்கள் சுகப்படுவதுமான நிலை எந்த தேசத்தில் எந்த மதத்தில் எந்த ராஜரீகத்தில் இல்லை என்று யோசித்துப்பாருங்கள். நன்றாய் யோசித்துப்பாருங்கள். இதை சீர்படுத்த வேண்டுமானால் எந்த விதமான சமூக முற்போக்கு வேலை செய்வது? பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் வேலை செய்யாமல் சமூக முற்போக்கு எப்படி ஏற்படும்? ஒரு சமூகத்துக்கு பொருளாதாரமும் அரசியலும் அவசியமானதா அல்லவா? இந்த இரண்டையும் விட்டு விட்டு செய்யும் முற்போக்குக்காக நமது சுயமரியாதை இயக்கம் தேவையே இல்லை. சும்மா அலங்காரமாக, வேடிக்கையாக புராண முட்டாள் தனத்தையும், பார்ப்பன சூட்சியையும் பேசி காலங்களிப்பது மாத்திரமே சுயமரியாதை இயக்கத்தின் வேலையானால் சுயமரியாதை இயக்கம் அழிந்து போவதே மேலான காரியம் என்று சொல்லுவேன்.

அரசியலைப்பற்றியும், பொருளாதாரக் கொடுமையைப்பற்றியும் பேசுவதே குற்றமான காரியம் என்று சில தோழர்கள் கருதி இருப்பதாகத் தெரி கின்றது. அது வீண் பயங்காளித்தனமேயாகும். இந்த மாதிரி பயங்காளித்தனம் கொண்ட மனதினால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அரசியலுக்காகவும், பொருளாதாரத்துக்காகவும் நாம் யாரையும் அடிக்கவோ, தடுக்கவோ, குத்தவோ, சுடவோ, வெடிகுண்டு எறியவோ அல்லது எவ்வித பலாத்காரத்தை உபயோகிக்கவோ வேண்டுமென்று நான் சொல்ல வரவில்லை. ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டும் என்பதற்கு நாம் எத்தனை பேரைக் கொன்றுவிட்டோம், யாரை சுட்டோம், யார் மீது வெடிகுண்டு போட்டோம், வெறும் நமது வாய்க் கிளர்ச்சியின் பயனாகவே நமது அபிப்பிராயத்தை தயவு தாட்சண்யம் இல்லாமல் வெளியிட்டதின் பயனாகவே மனித சமூகத்திற்குள் ஒரு உணர்ச்சியை உண்டாக்கி விட வில்லையா? “சுயராஜ்யம் கிடைத்த பின்பு தீண்டாமையை விலக்கிக் கொள்ளலாம்” என்று சொன்ன தோழர் காந்தி இரண்டு வருஷத் திற்குள் இன்று “தீண்டாமை ஒழிய 21 நாள் பட்டினி கிடக்கிறேன்” என்று சொல்லவும், “இந்தப் பட்டினி வெகு நாளைக்கு முன்னதாகவே இருந்திருக்க வேண்டும்” என்று சொல்லவும் கூட நாம் செய்துவிட்டோமா இல்லையா? என்று யோசித்துப்பாருங்கள். நமது பயமற்ற, தாக்ஷண்ணியமற்ற உண்மை பிரசாரத்தால் பார்ப்பன ஆதிக்கம் இந்த 4, 5 வருஷத்தில் எவ்வளவு தூரம் அடக்கப்பட்டது. ஆனால் அப்பொழுதே பணக்கார ஆதிக்கத்தையும் நாம் சரியானபடி கண்டிக்காததால் பணக்கார ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. இப்போது அது பார்ப்பன ஆதிக்கத்துக்கு உதவி புரிகின்றது. ஆதலால் பொருளாதார துறையில் இரங்கி தைரிமாய் தாக்ஷண்ணிய மில்லாமல் அக்கொடுமையை வெளியாக்கினால் கண்டிப்பாய் பணக்கார ஆதிக்கத்துக்கு சாவுமணி அடிப்பதோடு பொருளாதாரக் கொடுமையும் சற்றாவது குறையும்.

பொருளாதார உயர்வு தாழ்வைப் பற்றியும், கொடுமையைப்பற்றியும், அது சம்மந்தமாக அரசியலைப்பற்றியும், நாம் பேசும்போது பயங்காளி களுக்கும், சுயநலக்காரர்களுக்கும், ரஷியா ஞாபகம் வந்துவிடுகின்றது. இது பைத்தியக்காரத்தனமே யாகும். “அன்னிய அரசாங்கமே வேண்டியதில்லை. எங்கள் தேசத்தை எங்களிடம் ஒப்புவித்து விட்டு வெளி நாட்டார் வெளியாகிவிட வேண்டும்” என்று சொல்லும் தேசியவாதிகளின் அரசியலை விட நம்முடைய அரசியல் கொடுமையானதல்ல. முட்டாள் தனமானதல்ல.

நாம் என்ன சொல்லுகின்றோம்?

அன்னியன் என்பதற்காக யாரையும் நாட்டைவிட்டு போகும்படி சொல்லுவதில்லை. அன்னியர் ஆட்சி என்பதற்காக எந்த ஆட்சியையும் நாம் அழிக்க வேண்டும் என்பதில்லை.

ஆனால் நாம் என்ன சொல்லுகிறோம். முதலாளித் தத்துவமுரை கொண்ட ஆட்சி வேண்டாம், பாடுபடும் மக்கள் அதன் பயனை அடையும் படியான முரைகொண்ட ஆட்சி வேண்டும் என்று தான் சொல்லுகிறோம்? ஏனெனில் உலகத்தில் பாடுபடும் மக்களோ, 100-க்கு 90-பேர்கள் இருக் கிறார்கள். சோம்பேரிகள் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழுகின்றவர்கள் 100-க்கு 10-பேர்கள் தான் இருப்பார்கள். ஆதலால் 100-க்கு 90-பேருக்கு அனுகூலமான ஆட்சி அவர்களுடைய நலனுக்காக அவர்களாலேயே ஆட்சி புரியக் கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும் என்கிறோம். இதனால் என்ன தப்பு, இது ஏன் முடியாத காரியமாகவேண்டும். இதை ராஜத்துவேஷம் என்றோ, வகுப்பு துவேஷம் என்றோ சொன்னால் அதற்காக பயந்துவிடுவதா என்று கேழ்க்கின்றேன். அப்படியானால் வருவதுதான் வரட்டுமே. என்ன முழுகிப்போய்விடும்? சதா சர்வகாலம் உழைத்து சோம்பேரிகளுக்குப் போட்டு விட்டு பட்டினியாகவே ஒரு சமூகம் உலகில் உயிர் வாழ வேண்டுமானால் அந்த சமூகம் பூண்டற்றுப் போவதில் யாருக்கு என்ன சங்கடம். சோம்பேரிகள்தானே இதற்காக வருத்தப்படவேண்டும். கசாப்புக் கடைக்காரனுக்காகவே ஆட்டுச் சமூகம் இருக்கின்றது என்றால், அந்த ஆட்டு சமூகம் உலகில் அற்றுப்போவது ஆடுகளுக்கு நஷ்டமா? என்று யோசித்துப் பாருங்கள்.

உதாரணமாக தஞ்சாவூர் ஜில்லாவை எடுத்துக் கொள்ளுங்கள். காவேரி ஆற்றுப் பாசனம் முழுவதும் அங்குதான் பயன்படுகின்றது. எத்தனை ஆறுகள் ஓடுகிறது. கொல்லைக்கு போகக்கூட இடமில்லாமல் ஜில்லாவின் பெரும்பாகம் நஞ்சையாக இருக்கிறது. ஜில்லா போர்டு, தாலூகா போர்டு முனிசிபாலிட்டி எல்லாம் “பொதுஜனங்கள்” கையிலேயே இருக்கிறது. இருந்து என்ன லாபம்? சிலர் கொள்ளை அடிக்கிறார்கள். சிலர் 1000 ஏக்ரா, 5000 ஏக்ரா, 10000 ஏக்ரா என்பதாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் மாத்திரமல்லாமல் கோயில், மடம் முதலியவைகளுக்கும் இதுபோலவே லட்சக்கணக்கான ஏக்ராவும், செல்வமும் இருக்கிறது.

இங்குள்ள சுவாமிகளுக்கும், மடாதிபதிகளுக்கும் உர்ச்சவம், திருக்கல்யாணம், கோபனம் ஆகியவைகளுக்கு கணக்கு வழக்கிலடங்காத பொருள் செலவழிக்கப்படுகின்றது. இவ்வளவும் இருந்து பயன் என்ன?

சிங்கப்பூர், பினங்கு, மலேயா, மோரிசு, பிஜி. கண்டி முதலிய இடங்களில் இருக்கும் கூலிகளில் அதிகமான விகிதாச்சாரம் தஞ்சாவூர் ஜில்லாக்காரர்களாகவே இருந்து வருகிறார்கள். தஞ்சாவூரில் அன்ன சத்திரங்களுக்கும் சமஸ்கிருத காலேஜுகளுக்கும் குறைவில்லை என்றால் இதன் கருத்து என்ன? என்று யோசித்துப்பாருங்கள். பாடுபடும் மக்கள் பறையனாய், பள்ளனாய், சாம்பனாய் கஞ்சிக்கு வகையில்லாமல் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு போய் நாயிலும், கழுதையிலும் கடையாய் பாடு படுவதும் சோம்பேறிகள் அன்னச்சத்திரத்தில் சாப்பிட்டு சமஸ்கிருத காலேஜில் வாசிப்பதும் அங்குள்ள மிராசுதாரர்கள் தினம் தினம் நிலா விருந்தும், சதுரும், பாட்டுக்கச் சேரியும், ஜலக்கிரீடையும் அனுபவிப்பதும் அங்குள்ள மடாதிபதிகள் ராஜபோகம் அனுபவித்துக் கொண்டிருப்பதும் சகிக்கக்கூடிய காரியமா? என்று யோசித்துப் பாருங்கள்.

இதுபோலவே இன்னமும் எத்தனை ஜில்லாக்கள் எத்தனை மாகாணங் கள், எத்தனை தேசங்கள் இருந்து வருகிறது. இன்னும் “நமது சுதேச” ராஜாக்களை எடுத்துக்கொண்டால் அவர்களின் யோக்கியதையை சொல்ல வேண்டுமா? அநேக ராஜாக்கள் தங்கள் தேசத்தினுடைய மொத்த வரு மானத்தில் 100 க்கு 75 விகிதம் தேவடியாளுக்கும், குதிரைப் பந்தயத்துக்கும், விருந்துக்கும், மோட்டாருக்கும், வசந்தோற்சவத்திற்கும் பாழாக்குகிறார்கள்.

படிப்பு விஷயத்தில்

நமது நாட்டில் இவ்வளவு கொள்ளைக்கும், அக்கிரமங்களுக்கும், அயோக்கியத்தனத்திற்கும் பணம் இருந்தும் படிப்பு விஷயத்தில் 100 க்கு 12 பேர்கள் அதுவும் பார்ப்பனர்களும், பணக்காரர்களும் மாத்திரமே படிக்க முடிந்தது என்றால் இந்த ஆட்சியைப் பற்றியோ, அரசாங்கத்தைப் பற்றியோ எப்படிப் பேசாமல் இருப்பது என்று யோசித்துப் பாருங்கள். நாம் உண்மை யான மனித சமூகத்திற்குப் பாடுபடுவர்களாயிருந்தால் மேல்கண்ட அக்கிர மங்களுக்கும் கொடுமைகளுக்கும் காரண பூதங்களாயிருப்பனவைகளை அழித்தே ஆகவேண்டும். அது கடவுளானாலும், மதமானாலும், அரசாங்க மானாலும் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டியதேதான். கடவுள் பக்தர்களும், மதபக்தர்களும், எங்கள் மீது பாய்வதில் பயனில்லை. தங்கள் தங்கள் கடவுள் மீதும், மதத்தின் மீதும் பாய்ந்து அவைகளுக்கு புத்திவரும்படி செய்யுங்கள். நாங்கள் கடவுளும், மதமும் மேல் கண்ட அயோக்கியத்தனங்களுக்காக சோம்பேறிகளால் சூட்சிக்காரர்களால் மூடர்களால் கற்பிக்கப்பட்டதென்றே கருதுகின்றோம். ஆதலால் நாங்கள் அதைப்பற்றி லட்சியம் செய்வதில்லை. இன்றைய அரசியலையும் சோம்பேரிகளுக்கும் பணக்காரர்களுக்கும் காப்பளிக்க ஏற்பட்ட கவசம் என்றே கருதுகிறோம்.

ஆகையால் அவைகளையும் அடியோடு மாற்றி பாடுபடுபவர் களுக்கும் ஏழைகளுக்கும் காப்பளிக்கக்கூடியதான ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும் என்று கருதுகிறோம்.

இப்படிக் கருதுவதால் ஆபத்து வந்து விடும் என்று கருதுகிறவர்கள் எங்களையே இந்த ஆபத்துக்குள்ளாக்கிவிட்டு மரியாதையாய் விலகி தப்பித்துக் கொள்ளட்டும். அதைப்பற்றி எங்களுக்கு பயமில்லை. ஆனால் எங்களுக்கு முட்டுக் கட்டை போட வேண்டாம் உள்ளே இருந்து துரோகம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளுகிறோம். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இவைகளை எல்லாம் அடிதடி குத்து வெட்டு ரத்தக்களரி இல்லாமல் சாதிக்க இடமிருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம். இதை ஒப்புக்கொள்ளுகிற எந்த ஸ்தாபனத்துடனும் கலந்து வேலை செய்ய தயாராய் இருக்கிறோம். நாங்கள் காங்கிரசுக்கு எதிரிகள் என்று இந்த ஊரில் சிலர் கருதியிருப்பதாய் கேழ்விப்பட்டோம். இந்தக் கொள்கைகள் காங்கிரசுடைய கொள்கைகளாய் இருந்தால் நாங்கள் காங்கிரஸ்காரர்கள் தான். வருணாச் சிரமம் இருக்க வேண்டும், ஜாதி இருக்கவேண்டும், “ராஜாக்கள்” இருக்க வேண்டும், முதலாளிகள் இருக்க வேண்டும், மதம் வேண்டும், வேதம் புராணம் இதிகாசம் இருக்க வேண்டும், இன்றைக்கு இருக்கிற தெல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இவைகளை எல்லாம் பலப்படுத்த நிலைக்கவைக்க வேண்டி ‘வெள்ளைக்காரன் மாத்திரம் போகவேண்டும்’ என்கின்ற காங்கிரசோ, சுயராஜியமோ, தேசியமோ, காந்தியமோ சுயமரியாதை இயக்கத்திற்கு வைரியே யாகும். சுயமரியாதை இயக்கத்தார்களால் அழிக்கப்பட வேண்டியவைகளில் இந்த காங்கிரசும், காந்தியமும் ஒன்றாகும். சுயமரியாதை இயக்கம் தமிழ் நாட்டில் மாத்திரம் இருப்பதாய் கருதுகிறீர்கள் அது தவறு. உலகில் எங்கும் எந்த மூலை முடுக்குகளிலும் இருக்கிறது. இந்தியாவில் மலையாளம், ஆந்திரம், வங்காளம், பம்பாய், பஞ்சாப் முதலிய அனேக மாகாணங்களில் இருக்கிறது. அவை களைப் பார்க்கும்போது நமது சு. ம. இயக்கம் மிகவும் வேகமற்ற சக்தி குறை வான தன்மையில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நாம் யாரையும் பார்த்து காப்பி அடிக்கிறவர்கள் அல்ல. நமது தகுதிக்கு நிலைமைக்கு ஏற்ற அளவில் இருக்கின்றோம். பலாத்காரத் தன்மையையோ இரகசிய முறை யையோ நாம் அடியோடு வெறுக்கிறோம். நமது கொள்கை நியாயமும், நேர்மையும் ஆனதால் நமக்கு பலாத்காரமும், ரகசியமும் வேண்டாம்.

தோழர்களே நாம் தைரியமாயும், நேர்மையாயும், ஒற்றுமையாயும், கவலையாயும் வேலை செய்தோமேயானால் நம்ம ஆயுளிலேயே நமது இச்சை பூர்த்தியாவதைக் காணலாம்.

------------------------07, 08.05.1933 நாள்களில் திருப்பத்தூரில் நடைபெற்ற வட ஆற்காடு ஜில்லா முதலாவது சுயமரியாதை மாநாட்டில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை. ”குடி அரசு” - 14.05.1933