Search This Blog

6.10.10

பகுத்தறிவுப் பார்வையில் நவராத்திரி


நவராத்திரியாம்!

இந்து மதத்தில் பொழுது விடிந்து பொழுது போனால், இந்த மதத் தொல்லைதான்; ஓயாப் பண்டிகைகள்தான், சடங்குக் குவியல்கள்தான். மனிதனின் அறிவு வேறு எந்த உருப்படியான செயலிலும் பாவக் கூடாது - இந்தச் சகதிகளுக்குள் முடங்கி முணுகிக் கிடப்பதுதான் மனித வாழ்வு என்று ஆக்கிவிட்டது இந்த இந்து மதம்.

ஒவ்வொரு மாதமும் பண்டிகை மட்டுமல்ல; ஒவ்வொரு வாரத்திலும்கூட விரதம், படையல் என்று பார்ப்பனப் பிடுங்கல் சுரண்டலுக்கு வழிவகுப்பவை யாகும்.

விநாயகர் சதுர்த்தி கழிந்தது என்றால், இம்மாதத்தில் நவராத்திரி - ஆயுத பூஜை வகையறாக்கள். நவராத்திரி என்ற சொல்லே தமிழ்ச் சொல் அல்ல - எல்லாம் ஆரிய வடமொழியின் இறக்குமதிச் சொற்கள்தாம்.

கருநாடக மாநிலத்தில் இதே பண்டிகை தசரா என்றும், வங்காளத்தில் துர்கா பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.

ஒரு நாள் அல்ல, இரு நாள்கள் அல்ல, ஒன்பது நாள்கள் (நவ என்றால் ஒன்பது) கொண்டாடப் படுகின்றன.

ஒவ்வொரு நிமிடமும் மனித வாழ்வுக்கு இன்றியமையாத காலமாகும். காலத்தைக் கண்ணாகப் போற்றும் மனிதனும், நாடும்தான் முன்னேற்றப் பாதையில் முனைந்து ஓடும்.

தொடர்ச்சியாக ஒன்பது நாள்களை மதத்தின் பெயரால் பாழ்படுத்தும் ஒரு நாடு எப்படித்தான் முன்னேறித் தொலைய முடியும்?

ஒவ்வொன்றுக்கும் ஒரு வகையான கதையளப்பு! அறிவுக்குச் சற்றும் பொருந்தாத அழுக்கு மூட்டைகள் அவை.

கடவுள் உருவமற்றவர், கண்ணுக்குத் தெரியாதவர், விருப்பு வெறுப்பு அற்றவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் சூலாயுதத்துடனும், வேலாயுதத்துடனும், கபாலத்துடனும், சிங்கத்தின்மீதும், மூஞ்சூறு மீதும், புலியின் மீதும், காகத்தின் மீதும் சவாரி செய்வது போன்ற உருவங்கள் - வழிபாடுகள் - கோயில்கள் என்றால் இந்த முரண்பட்ட, வெட்கம் கெட்ட மூடத் தனத்தை எண்ணி எங்கு போய் முட்டிக்கொள்வது!

ஒவ்வொன்றுக்கும் ஸ்தல புராணக் குப்பைகள் வேறு - பராசக்தியே துர்க்கையாக இருந்து தீமைகளை அழிக்கிறாளாம்; அவளே சரசுவதியாக இருந்து கல்வியையும், அறிவையும் கொடுக்கிறாளாம்; அவளே மகாலட்சுமியாக இருந்து செல்வத்தையும் வாரி வழங்குகிறாளாம்.

இவை உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகத்திலேயே இந்து மதக்காரர்கள்தான் கல்வியிலும், செல்வத்திலும், ஆற்றலிலும் முதலிடத்தில் இருக்கவேண்டும்.

11 ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் போட்டும் இன்னும் தற்குறித்தனம் ஒழிக்கப்படவில்லை. இன்னும் 77 விழுக்காடு மக்களின் ஒரு நாள் வருமானம் ரூபாய் 20 தான். சீனாக்காரன் கையில் உள்ள இந்தியாவின் நிலப் பகுதிகள் இன்னும் மீட்கப்படவில்லை.

பூஜைகளுக்கும், புராணப் புளுகுகளுக்கும் ஏதாவது சம்பந்தா சம்பந்தம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கவேண்டும். சரசுவதி பூஜை கொண்டாடாத நாட்டில் நூற்றுக்கு நூறு படித்திருக்கிறார்களே! முயற்சி வேண்டாம் - பக்தி போதும் என்று போதனை செய்து வளர்க்கப்பட்ட நாட்டிலே புத்தி எப்படி வளப்பம் பெறும் - முன்னேற்றம் எங்கே முளைகட்டும்?

ஆயுத பூஜையாம் - ஆயுதங்கள் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கேற்ப ஒவ்வொரு காலகட்டத் திலும் மாற்றம் பெறும். அவை மனிதனின் கருவிகள்தான் - அவற்றிற்குப் பூஜை போடவேண்டுமா?

அப்படிப் பார்த்தால் வீட்டைச் சுத்தம் செய்யப்படும் மிக முக்கியமான கருவி விளக்குமாறுதான் - அதற்குப் பூஜை உண்டா? நகர சுத்தித் தொழிலாளி எந்தக் கருவிகளுக்குப் பூஜை போடுவார்?

விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் பூஜைக்குரியவை எவை என்ற கேள்விகள் எழாதா?

குண்டூசி கூட கண்டுபிடிக்கத் தெரியாத நாட்டில் ஆயுத பூஜைக்கு மட்டும் குறைவு இல்லை. கடவுள்களின் கைகளில் இருக்கும் கருவிகள் எல்லாம் கொலைக்கருவிகளாகத்தான் இருக்கின்றன - அந்தக் கருவிகளைக் கொண்டு இந்து மதக் கடவுள்கள் சண்டை போட்டுள்ளன - கொலைகளைச் செய்துள்ளன - அதற்காகத்தான் பூஜை புனஷ்காரங்களா?

பூஜை, புத்தியைக் கொடுக்காது - துன்மார்க்கத்தைத்தான் கொடுக்கும் என்பதற்கு நவராத் திரிப் பண்டிகை ஒன்று போதாதா?

-------------------- "விடுதலை” தலையங்கம் 6-10-2010

0 comments: