Search This Blog

4.12.13

பார்ப்பனீயத்தின் பிடியிலிருந்து விடுபடுங்கள் - பெரியார்

மதம்!
 
அதுசமயம் அவர்கள் "ஒருசிலர் ஆரியர் ஏது? திராவிடர் ஏது? எல்லாம் ஒன்றாய்விட்டதே, எல்லாம் கலந்தாய்விட்டதே" என்று எடுத்துச் சொல்லி நமது திராவிட நாட்டுப் பிரிவினை முயற்சியைக் கெடுக்கப் பார்க்கிறார்கள். ஆரியர் திராவிடர் இவர்களுக்குள்ளே இந்தக் கலப்பு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்லி நம் இன உணர்ச்சியைத் தடை செய்யப்பார்க்கிறார்கள். இந்தக் கலப்பு ஏற்பட்டுவிட்டதென்றால் அது போதுமா? இன்னும் பழக்க வழக்கங்களில் பேதம் இருந்து வருகிறதே அது ஒழிய வேண்டாமா? அது ஒழிய வேண்டும் என்று உணர்ச்சியூட்ட ஓர் இயக்கம் வேண்டாமா? அப்படிப்பட்ட உணர்ச்சியூட்டத்தானே, திராவிடர் கழகம் இருந்து வருகிறது.

இரத்தக் கலப்பு ஏற்பட்டுவிட்டதென்பது உண்மையானால் தோழர்களே, இன்னும் ஏன் ஆரியர் எல்லோரும் பார்ப்பனர்களாக இருக்க, திராவிடர் எல்லோரும் சூத்திரர்களாக இருக்கிறார்கள்? இன்னும் ஏன் பார்ப்பான் உச்சிக்குடுமி வைத்துக் கொண்டிருக்கிறான்? இன்னும் ஏன் பார்ப்பான் பூணூல் மாட்டிக் கொண்டிருக்கிறான்? இன்னும் ஏன், பார்ப்பான் தொட்டால் சாகாத கடவுள், நாம் தொட்டால் செத்துப் போய்க் கொண்டிருக்கிறது?

இந்து மதம் ஒழிய வேண்டுமென்றால் என் மீது கோபித்துக் கொள்ளும் ஆரியத் தோழர்களைக் கேட்கிறேன். பார்ப்பனத் தோழர்களைக் கேட்கிறேன். இந்து மதத்தை ஒப்புக் கொண்டிருப்பதால்தானே நாங்கள் சூத்திரர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம்? இந்து மதத்தை ஒப்புக் கொண்டிருப்பதால்தானே நீங்கள் பார்ப்பனர்களாக - பிராமணர்களாக ஆக்கப்பட்டிருக்கிறீர்கள்? இப்படி எங்களை இழிவுபடுத்தி வைத்திருக்கும் இந்து மதம் ஒழிய வேண்டுமென்றால் அது எப்படிக் குற்றமாகும்?


எங்களை வகுப்புவாதிகள், பிராமணத் துவேஷிகள், மக்களைப் பிரிக்கப் பார்க்கிறவர்கள் என்கிறீர்களே? உண்மையில் மக்களைப் பிரித்து வைப்பது நீங்களா, நாங்களா? ஒருத்தன் பார்ப்பானாகவும், ஒருத்தன் பஞ்சமனாகவும் இருக்க நீங்கள் காரணமா, நாங்கள் காரணமா? மக்களிடையே பிரிவினை கூடாது என்கின்ற எண்ணம் உங்களுக்கு உண்மையாகவே இருக்குமானால் நீங்களே விலக்கி விடலாமே, "இனி நாட்டிலுள்ள எல்லோருமே சமம் பார்ப்பானென்றும், பஞ்சமனென்றும் மேதமில்லை, பார்ப்பானென்றும் சூத்திரனென்றும் பேதமில்லை," என்று நீங்களே ஒழித்து விடலாமே, உங்கள் உச்சிக்குடுமியையும் பூணூலையும் நீங்களே கொடுத்து விடலாமே, கோயில் சாவிகளை எங்களிடம் தந்து, பூசை செய்யும் தட்டில் விழும் காசை எடுத்துக் கொள்ளவும் நீங்களே எங்களை அனுமதித்து விடலாமே. நீங்களே அழித்து விடலாமே, பிறவியினால் பேதமும், இழிவும் கற்பிக்கும் சாஸ்திரப் புராண இதிகாச ஆதாரங்களை நீங்களே முன்வந்து விடலாமே எங்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள.

இதை எல்லாம் செய்ய மறுக்கிறீர்கள். இன்னும் கோயிலில் உங்களுக்குத் தனி இடம் வேண்டுமென்கிறீர்கள். நீங்களே பூஜை செய்ய வேண்டுமென்கிறீர்கள். நீங்களே தட்டில் விழும் காசை எடுத்துச் சொருகிக் கொள்கிறீர்கள். இன்றும் சாஸ்திரங்களும் புராணங்களும் இதிகாசங்களும் அப்படியே இருக்க வேண்டும் என்கிறீர்கள். சூத்திரன் படிக்கக்கூடாது, படித்தால் நாட்டுக்குக் கேடு என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும் மனுநீதி சாஸ்திரமும் அப்படியே இருக்க வேண்டுமென்கிறீர்கள். இன்னும் நாங்கள் தொட்டால் உங்களுக்கு "தீட்டு" வந்துவிடுகிறது என்று சொல்லிக் கொண்டு எட்டி நின்று வருகிறீர்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உங்களுக்கே இடம் வேண்டும் என்கிறீர்கள். சகல உத்தியோகங்களும், உங்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்கிறீர்கள். எங்கள் விகிதாசாரம் கூட எங்களுக்குக் கிடைக்கக்கூடாது என்று சூழ்ச்சிகள் பல செய்து வருகிறீர்கள். இப்படி எல்லாமே நீங்களே எங்களுக்குத் தொல்லைக் கொடுத்துக் கொண்டு வந்தும், எங்களையே துவேஷிகள், பிரிவினை முயற்சிக்காரர்கள் என்று குற்றம் சாட்டி வருகிறீர்கள். இது ஒழுக்கமாகுமா? நேர்மையாகுமா? நீங்களே சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.


தோழர்களே நாங்கள் ஒன்றும் பார்ப்பான் ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை. பார்ப்பனீயம் ஒழியட்டும், வர்ணாஸ்ரம தர்மம் ஒழியட்டும் என்று தான் கூறி வருகிறோம்.

ஜாதி மத பேதங்கள் ஒழியட்டும், எல்லோரும் ஒன்று படட்டும் என்றுதான் கூறிவருகிறோம். ஒன்றுபடாதவரை எங்களுக்குக் கிடைக்க வேண்டிய விகிதாசார பயனாவது எங்களுக்குக் கிடைக்கட்டும் என்று தான் நாங்கள் கூறி வருகிறோம்.

இப்பேதங்களால் இதுவரை வசதியும், சுகபோகமும் அனுபவித்து வந்த கூட்டத்திற்கு எங்களது இம்முயற்சி பெரிய சங்கடமாயிருப்பதால், எங்கள் முயற்சியில் மக்கள் ஈடுபடாமல் இருக்க, நாங்கள் ஏதோ பிரிவினை செய்ய முயற்சிக்கிறோம் என்று அக்கூட்டத்தினர் கூச்சல்போட்டு வருகிறார்கள். பச்சைப் பார்ப்பனீய தந்திரம் இது. எனவே நீங்கள் இப்பொய்ப் பிரசாரத்தில் ஏமாந்து போய்விடாதீர்கள். ஏனப்பா நாங்கள் 'இழிஜாதி மக்கள்' என்றால் "கடவுள் அப்படி படைத்து விட்டார், அதற்கு நாங்களென்ன செய்யட்டும்" என்று சுலபமாய்க் கூறி விடுகிறார்கள் பார்ப்பனர்கள்.

கடவுளுக்கு வக்காலத்து வாங்கிப் பேச நீ யாரப்பா என்று தான் நாம் கேட்க விரும்புகிறோம். இந்த ஜாதி உயர்வு தாழ்வுக்கு கடவுள் காரணம் என்றால் அவரே வந்து சொல்லட்டுமே, நான் தான் இப்படிப் படைத்தேன் என்று. அவர் சொல்லாததை நீ ஏனப்பா அவர் பேரால் சொல்கிறாய் என்றுதான் பார்ப்பானைக் கேட்கிறோம்.

அப்படிச் சொல்லுமா எந்தக் கடவுளாவது? சொன்னால் நீங்கள் தான் ஒப்புக் கொள்வீர்களா அந்தக் கடவுளை? அவனுக்குத் தான் தெரியும் அது பேசாத குழவிக்கல் என்று. அதனால் தானே கடவுளைச் சாட்சிக்கு அழைக்கப் பார்ப்பான் மறுத்து வருகிறான்.

நீங்கள்தான் குழவிக் கல்லுக்குக் கோயில் கட்டுவீர்கள். கும்பாபிஷேகம் செய்து வைப்பீர்கள். அதற்குப் பெண்டு பிள்ளையும் தேடி வைப்பீர்கள். பார்ப்பான் செய்ய மாட்டானே, இவ்வேலைகளை அவன் அடித்துக் கொள்ள மாட்டானே மொட்டை. அவன் தூக்கமாட்டானே காவடி. நீங்கள் தான் மடையர்கள், மூடநம்பிக்கைக்காரர்கள், குழவிக் கல்லைச் சாமி என்று கட்டியழ.


எனவே தோழர்களே! தன்னைக் கடவுள் உயர்வாகப் படைத்து விட்டதென்று, பார்ப்பான் கூறிவருவதெல்லாம் வெறும் பித்தலாட்டம். அவனது கடவுள் சிருஷ்டியே வெறும் பித்தலாட்டம் நிறைந்தது. மற்ற நாட்டவரெல்லாம் ஒரே கடவுளை, அதுவும் உருவமில்லாத கடவுளை, அதுவும் ஒழுக்கமுள்ள கடவுளைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்க, பார்ப்பான் மட்டும் பல கடவுள்களை, அதுவும் உருவமுள்ள கடவுள்களை ஒழுக்கத்திற்குக் கட்டுப்படாத கடவுள்களைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறான் என்றால், இதிலிருந்தே தெரியவில்லையா பார்ப்பானுடைய பித்தலாட்டம்.

தன்னை உயர்வென்று கூறிக் கொள்ள இவன் மட்டுமென்ன ஆகாயத்திலிருந்து குதித்து விட்டவனா? இவனும் நம்மைப் போல் ஒரு தாய் வயிற்றிலிருந்து பிறப்பவன் தானே! என்ன இவன் நம்மைக்காட்டிலும் ஒழுங்காக வாழ்வது?

ஜெயிலைப் பாருங்கள். அதிலும் இவர்கள் தம் விகிதத்திற்கு மேல் அதிகமாகத்தானே இருக்கிறார்கள். நம்மவர்களாவது கஞ்சிக்கில்லாமல் ஏதோ கத்திரிக்காய், பூசணிக்காய் திருடிவிட்டு வந்திருப்பார்கள். ரூ.100, ரூ.200 திருடியவர்களாக இருப்பார்கள். இவர்களோ 1000, 10000- திருடியவர்களாக, போர்ஜரி செய்தவர்களாக, பெரிய பாங்கிகளையே மோசம் செய்தவர்களாக, லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கியவர்களாக இருப்பார்களே.

ஆகவே எக்காரணம் பற்றியும் பார்ப்பனர்கள் தம்மை உயர்வென்று கூறிக் கொள்ளவோ, நம்மை இழிவானவர்கள் என்று கூறவோ உரிமையுடையவர்களல்ல. கடவுள் பேராலோ, மதத்தின் பேராலோ நம்மை இழிவுபடுத்த உரிமையுடையவர்களும் அல்லர். எனவே பார்ப்பனீயத்தின் பிடியிலிருந்து விடுபடுங்கள். பகுத்தறிவு வழிநட முன்வாருங்கள்."


------------------------- திருவண்ணாமலையில் தந்தை பெரியார் அவர்கள். 16.11.1949- அன்று ஆற்றிய சொற்பொழிவு. - ”விடுதலை” 18.11.1949

8 comments:

தமிழ் ஓவியா said...


தஞ்சை!

கொட்டு மழை
முத்தில் குளித்த
கொள்கையூர்
தங்கங்களே!

குவலயத்தின்
உச்சியிலன்றோ
குடியேறி
விட்டீர்கள்!

அடடா, என்ன
காட்சி அது!
கண்டது கனவா -
நனவா!

மழையப்பனை
விரட்டி
வாலைச் சுருட்டச் செய்தீர்களே!

மேடையில்
வீற்றிருந்த
தலைவர்கள்
என்ன பேசினார்கள்?

தணல் தொட்டியில்
எப்படி உருக்கி
வார்த்திருக்கின்றார்
தந்தை பெரியார்?

இந்தக் கருஞ்சட்டைகள்
சுவாசிப்பதெல்லாம்
இலட்சியத் தீயின்
துண்டங்களா?

இந்தத் தொண்டர்
குழாம் உண்பதெலாம்
தியாக நெருப்பின்
பண்டங்களா?

ஆசா பாசங்கள்
அண்டாதா?
ஆசையால்
அடிதான் சறுக்காதா?

சபலங்கள்
சேட்டை செய்யாதா?
சஞ்சல நோய்களும்
தீண்டாதா?

கட்டுப்பாடெனும்
கட்டிலின்
நான்கு கால்கள்
இவர்கள் தானோ!

பெரியாரோடு
ஒழிந்ததா?
நரியார் எண்ணங்கள்
பலித்ததா?

பெரியார் விட்டுச்
சென்ற வித்து
வீரமணி யெனும்
பெருஞ் சொத்து!

அவர்தம்
கண்ணசைப்பில்
கருஞ்சட்டைப்
பட்டாளம்

கண்டது காண்
தஞ்சையெனும்
கொள்கை அருவியின்
குற்றாலம்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


என்ன?



காட்டுமிராண்டித்தன்மை என்றால் என்ன? மனிதன் அறிவுப் பக்குவம் அடையாமல் மிருகப் பிராயத்தில் இருக்கும் தன்மையைக் குறிப்பிடும் சொல். இது உலகத்தில் எல்லா நாடுகளிலும் எந்தச் சமூகத்திலும் இருந்து வந்த நிலைமையேயாகும்.
(விடுதலை, 24.1.1968)

தமிழ் ஓவியா said...


நேற்றைய ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் சிதம்பரம் கோயில்

நேற்றைய (03.12.2013) ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் (தந்தி தொலைக்காட்சி) சிதம்பரம் கோயில் தொடர்பான விவாதம் பார்த்தேன். தொடர்புடைய நால்வரைப் பங்கேற்க வைத்தது சரிதான்.அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை வைத்ததும் சரிதான் என்றாலும், ஆயுத எழுத்து நிகழ்ச்சியை நடத்திய ரங்கராஜ் பாண்டே, ஆயுதத்தை கையிலெடுக்காத குறையாய் அவரும் வெங்கடேச தீட்சிதரோடு சேர்ந்து குரல் கொடுத்து தனது இனப் பாசத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதோடு அவருக்கும் ஒரு படி மேலே சென்று, விட்டேனா பார் எனத் துள்ளித் குதித்து அடேயப்பா!என்ன ஒரு இனப்பற்று. மேலும் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களை பேசவிடாமல் அவரது கருத்துக்களை திசைதிருப்பியும் திரு.செந்தில்நாதன் சொன்ன அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரானால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்றதை மிக லாவகமாக புறந்தள்ளி ஒரு வழியாக விவாதத்தை முடித்தார்.இடையில் பேசிய அந்த தீட்சிதர் போகிற போக்கில் சும்மா தமிழ்,தமிழ்னு இனியும் பேசிக்கிட்டு இருக்காதீங்க என்று சொல்கிறார். இத்தனையும்வெல்க தமிழ் என்று தனது நாளிதழில் அடைமொழி போட்டுக்கொள்ளும் நம் தமிழர் நடத்திய தந்தி தொலைக்காட்சியில் தான்.இதுதான் தமிழ் தேசியத்தின் இறுதி வடிவம் என்று சொல்லாமல் சொல்லும் தந்தி தொலைக்காட்சி.
கொடுமை! கொடுமை!!

- தி. என்னாரெசு பிராட்லா, மாவட்ட செயலாளர், காரைக்குடி

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் சல்மான் குர்ஷித்: கலைஞர் பேட்டி


சென்னை, டிச.24- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றது தொடர்பாக நடைபெறும் விவாதத்தில் தி.மு.க. பங்கேற்கும் என்றார் டெசோ தலைவர் கலைஞர்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

செய்தியாளர் :- தமிழகம் முழுவதும் மீண்டும் மின்வெட்டு நடைமுறைக்கு வந்துவிட்டதே; சென்னையிலேயேஅன்றாடம் இரண்டுமணிநேரம் மின்வெட்டு செய்யப்படுகிறதே?
கலைஞர் :- சந்தோஷம்!

செய்தியாளர் :-ஆனால் மின் வெட்டு ஏற்படும் போதெல்லாம், முதலமைச்சர் ஜெயலலிதாஅதற்கு தி.மு. கழகத்தின் மீது பழிபோடுகிறாரே? மேலும் மத்தியஅரசும், தி.மு. கழகமும் சேர்ந்து சதிசெய்வதாகச் சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- அது அவர்களுடைய வாடிக்கை. தாங்கள் செய்கிற தவறை மறைக்க பிறர் மீது பழி போடுவது என்பது ஜெயலலிதாவுக்கு இன்று நேற்றல்ல; என்றுமே வாடிக்கை.

செய்தியாளர் :- கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் பிரச்சினையில் இரு தரப்பினருடன் பேசி சுமூகமான முடிவெடுக்க வேண்டுமென்று சொல்லி யிருந்தீர்கள். ஆனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறதே?

கலைஞர் :- நாட்டின் பொருளாதாரம் அல்லது விஞ்ஞான வளர்ச்சிக்காக சிலநடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. விவசாயத் துறையின் வளர்ச்சிக் காக இயந்திரமயம் என்றபெயரால் சில காரியங்கள் நடக்கின்றன. அதேநேரத்தில் விவசாயத்திற்கு கேடு விளைவிக்காமல் இருக்க மற்ற துறையினரும், தொழில் துறையினரும் அக்கறைகாட்டவேண்டும். அதனால் தான் இரு சாராரும் பேச்சுவார்த்தைநடத்தி அதனை ஒரு முனைப்படுத்த வேண்டும் என்று நான் தெரி வித்தேன்.

செய்தியாளர் :- மத்தியஅமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கைசென்றது பற்றி வருகின்ற நாடாளு மன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் விவாதம் வருமென்றுசொல்கிறார்களே?

கலைஞர் :- அப்படியொரு விவாதத்திற்கு அங்கே அனுமதிக்கப்படுமானால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்கள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் அங்கே விவாதத்தில் பங்கேற்பார்கள். செய்தியாளர் :- நேற்றையதினம் கேப்டன் தொலைக் காட்சியைச் சேர்ந்த செய்தியாளர்களை ஒருகுழுவினர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். ஆனால் காவல்துறையினர் தொலைக்காட்சிநிறுவனத்தைச் சேர்ந்தவர்களையே கைது செய்திருக்கிறார்கள். 200 பேருக்குமேல்பத்திரிகையாளர்களைபோலீசார் கைதுசெய்திருக்கிறார்களே?

கலைஞர் :- இதனை வன்மையாகக் கண்டிக் கிறேன்.

இவ்வாறு கலைஞர் அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.

தமிழ் ஓவியா said...


ஆதாரமே இல்லை

சரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை. - (விடுதலை, 26.8.1967)

தமிழ் ஓவியா said...


போர்க் குற்றங்கள்மீது நடவடிக்கை:


இலங்கைக்கு,அமெரிக்காஎச்சரிக்கை

சர்வதேச சமூகம் பொறுமை காக்காது!

இலங்கை உள்நாட் டுப் போரில், ராணுவத் தின் அட்டூழியம் மற் றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அந்நாடு நடவடிக்கை எடுக்கா விடில், சர்வதேச சமூகம் இனியும் பொறுமையாக இருக்காது என்று தெற் காசிய விவகாரங்களுக் கான அமெரிக்க வெளி யுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா பிஸ் வால் கூறினார்.

போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசின் நடவடிக்கை யில் வரும் மார்ச் மாதத் துக்குள் எந்த முன்னேற் றமும் இல்லாவிட்டால் அய்.நா. தலைமையி லான விசாரணை கோரு வோம் என்று இங்கி லாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த மாதம் கூறியிருந்தார். இக் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் நிஷா பிஸ் வால் இவ்வாறு கூறி யுள்ளார்.

அய்.நா. அறிக்கை

2009-ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி மாதங் களில், சிங்கள ராணுவத் தால் சுமார் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என் றும், ராணுவத்தினர் கடும் போர்க் குற்றங் களில் ஈடுபட்டதாகவும், அய்.நா. அறிக்கை கூறு கிறது.

இந்நிலையில், போர்க் குற்றங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்கும் விவகாரத்தில் இலங்கை அரசு தாமாக முன்வந்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிஷா பிஸ்வால் கூறியுள் ளார்.

இந்த விவகாரத்தில் இலங்கை தங்கள் நாட்டு சட்ட திட்டங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அவ் வாறு நடந்து கொள்ளும் என்றும் நம்புகிறோம். மேலும் போருக்குப் பிறகு நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணையத் தின் பரிந்துரைகளையும் இலங்கை அரசு நிறை வேற்ற வேண்டும். இந்த நடவடிக்கைகளில் முன்னேற்றம் இல்லா விட்டால் சர்வதேச சமூகம் இனியும் பொறு மையாக இருக்காது என்றார் நிஷா பிஸ்வால்.

இலங்கை ராணுவத் தின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை அனு மதிக்க முடியாது என்று கூறிவரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, உள் நாட்டு விசாரணைக்கும் உத்தரவிட மறுத்து வருகிறார். ராணுவத்தின் அத்துமீறல் குற்றச்சாட் டுகளையும் அவர் மறுத்து வருகிறார்.

அதிகாரப் பகிர்வை நோக்கி சிறு நடவடிக் கையாக கடந்த செப் டம்பர் மாதம் நடை பெற்ற இலங்கை வடக்கு மாகாணத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி வெற்றி பெற்ற போதி லும், அங்கு ஊடகங்கள் மீதான நெருக்குதல், மனித உரிமை மீறல்கள் போன்ற சமீபத்திய செய் திகள் அதிர்ச்சி அளிக் கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மோடிக்கான விசா வழங்கும் கொள்கையில் மாற்றம் எதுவும் செய்யவில்லை அமெரிக்கா மீண்டும் அறிவிப்பு


வாஷிங்டன், டிச.5- அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருந் தாலும் அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக வும், மோடிக்கு விசா வழங்குவது தொடர் பான கொள்கையில் மாற்றம் எதுவும் செய் யப்படவில்லை என்றும் அதிபர் ஒபாமாவின் அமெரிக்க நிர்வாகம் மீண்டும் தெரிவித்துள் ளது.

இதுகுறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசியா விற்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் செய்தி யாளர்களிடம் கூறிய தாவது:

அமெரிக்க விசா விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின் றேன். அனைவரது விசா விண்ணப்பத்தின் மீதும் உரிய ஆய்வு நடத்தப் படும். அதன்படி விசா விண்ணப்பம் சமர்ப்பிக் கும் அனைவரது விண் ணப்பமும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அந்த நடைமுறையின் இறுதி முடிகள் குறித்து பேச இயலாது என்றார் பிஸ் வால்.

அப்போது நரேந்திர மோடிக்கு விசா வழங் குவது குறித்து செய்தி யாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப் பினர். அதற்கு பதில் அளித்த பிஸ்வால், "அமெரிக்க விசா கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. விசா விண்ணப்பங்கள் எப்போதும் விண்ணப் பத்துக்கு தகுந்தவாறு பரிசீலனை செய்யப் படுகின்றன.

அரசு விசா, அரசு அதிகாரிகளுக்கான விசா, சுற்றுலா விசா என விசாக்களில் பல்வேறு விசாக்கள் உள்ளன.

எனவே, விசா விண் ணப்பத்தின் தன்மை மற்றும் யார் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார்கள் என்பதைப் பொறுத்தே அதன் மீதான முடிவுகள் இருக்கும்' என்று கூறினார்.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கலவ ரத்தைத் தொடர்ந்து, 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்தது. அதே நிலைதான் தற்போ தும் நீடித்து வருகிறது என்பதை அமெரிக்கா சுட்டிக் காட்டியுள்ளது.

தமிழ் ஓவியா said...


பெரியார் சமத்துவபுரத்தில் கோயிலா?


கரூர் மாவட்டம், வெள்ளியணையில் இம்மாவட்டத்தில் முதல் பெரியார் சமத்துவபுரம் உள்ளது. இச்சமத்துவபுரத்தில் கடந்த 2010 ஆண்டு மாவட்ட முன்னாள் ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி அவர்கள் மார்பளவு பெரியார் சிலையை நிறுவினார். சிலையின் அருகில் புற்றுக் கண் கோயில் திடீரென முளைத்துள்ளது. சமத்துவபுரத்தின் உள்ளே பால நாகம்மா கோயில் என இரண்டு கோயில்கள் சமத்துவபுரத்தில் உள்ளன. இந்த இரண்டு கோயில்களிலும் பாம்பு புற்றின் அருகில் சாமி படங்களும், மஞ்சள் துணி கட்டி மஞ்சள், சந்தனம், குங்குமம் தெளித்து தினம் பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்த கோயில் அருகே வேப்ப மரம், மற்றும் கோயிலை கீற்றுக் கொட்டகை அமைத்து பெரியார் சமத்துவபுரத்தின் நுழைவு பகுதியில் பெரியார் சிலை அருகே கோயில் அமைத்து சில சமூக விரோதிகள் தீய செயலில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக அந்த கோயிலை அப்புறப்படுத்தி ஜாதி சமய ஏற்றத் தாழ்வுகளை அகற்ற முன்னால் முதல்வர் கலைஞர் அவர்களால் கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரம் அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இல்லையென்றால் கழகத் தோழர்களையும், பகுத்தறிவு சிந்தனை யாளர்களையும் ஒன்று திரட்டி பெரிய போராட்டம் நடைபெறுவதை தவிர்க்க உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட வேண்டும். எந்த நோக்கத்துக்காக பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கப்பட்டதோ அதை உருக்குலைக்க சதி நடக்கிறது. அரசு தலையிடட்டும்.