Search This Blog

5.11.10

தமிழரின் வாழ்வைச் சித்திரவதை செய்யும் தீ... வாளி!

தீ . . . வாளி!


தமிழரின் தன்மானத்தைக் சுட்டுக் கருக்கும் ஆரியத் தீ! தமிழரின் வாழ்வைச் சித்திரவதை செய்யும் வாளி! இந்தத் தீவாளி வருகிறது. தீபம் ஏற்றுங்கள், புத்தாடை புனையுங்கள், புன்முறுவல் செய்யுங்கள் என்று புராணீகர்கள் கூறுவர், தீபாவளி ஸ்நானம் என்று மகத்துவம் கூறுவர். மடத்தனத்தை வளர்க்க, தன்மானமுள்ள தமிழரே! தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று உம்மைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் - காரணத்தோடு. முரட்டுப் பிடிவாதக்காரரும், மூடமதியிலே மூழ்குவதிலே, சேற்றிலே அமிழ்ந்து ஆனத்திக்கும் எருமைபோலக் களிப்போரும், எட்டிலே உள்ள எதற்கும், எம்மால் புதுப்பொருள் கூறமுடியும், புலமையின் காலணமாக, என்று கூறுவோருக்கும், மனைதோரும் அகல்விளக்குச் சுடர்விடும் அழகு, நமது நாட்டுக்கலையின் கனிவு என்று கூறும் கலாரசிகர்கட்கும், நாம், மதிவழிநடமின் என்று கூறி, சொல்லை இழக்க விருமபவில்லை. புறம்போக்கு நிலத்திலே பொழுது புலருமுன் ஆரம்பித்து, விண்கருக்கும்வரை உழுதாலும பயனில்லை. புத்தியின் உச்சியை அடைந்துவிட்டதாகக் கருதும் பேர்வழிகளும் புறம்போக்குக்கும் அதிக வித்தியாசமில்லை. புரட்சி வேகம் நாட்டிலே பெருக்கெடுத்து ஓடும்போதுதான், புறம்போக்குகளும் வயலாகி, வளம்பெறும் ஆனால் புரட்சி வேசம் உண்டாக தீவிரவாதிகள் முதலிலே, ஆரித்தீயும் ஆரிய வாளியும் கலந்ததெனவரும இப்பண்டிகையை பகீஷ்கரிக்கவேண்டும். ஆரியர் கொண்டாடினாலாவது பொருள் உண்டு. தோற்கடிக்கப்பட்ட, துரோகத்தால் வீழ்த்தப்பட்டத் திராவிடர் அதனைக் கொண்டாடுவது, இனஇழிவுக்கு அடையாளமென்போம். கள்ளனிடம் சிக்கிக்கற்பழிக்கப்பட்ட கன்னி, கண்ணீருடன் இருக்கும்போது கள்ளீ! உன் பொருட்டு நான் எடுத்துக்கொண்ட பிரயாசை எவ்வளவு? அலுப்பு எவ்வளவு? இந்தச் சந்தோஷத்தை உனக்கு அளித்ததற்காக ஓர் அருமையான, பாட்டு பாடிக்கொண்டே என் கால்களைச் சற்று வருடிக்கொண்டிரு, நான் தூங்குகிறேன் என்று கள்ளன் கட்டளையிட, கன்னி, அவன் காலைப் பிடித்துக்கொண்டு, கானம் செய்வது போன்றது, தீபாவளியைத் தமிழன் கொண்டாடுவது! ஓநாய்க்கு உபசாரம் செய்ய ஆடு அமர்த்தப்படுவதுபோல, பக்காத் திருடனின் பாதக்குறடுகளை, சொத்தைப் பறிகொடுத்தோன் சுமப்பதுபோல, உதைக்கும் கழுதையின் காலுக்கு உதைப்பட்டவன், தங்கத்தால் இலாடம் கட்டுவதுபோல, கொட்டும் தேளை எடுத்துக் கண்களிலே செருகிக்கொள்வதுபோல, மனைவியைக் கற்பழித்தவனுக்கு மலரபிஷேகம் செய்வதுபோல, எந்த ஆரியம் மூடத்தனத்தை மூட்டித் தமிழகத்தைத் தீய்த்ததோ, மடைத்தனத்தை வளர்த்து தமிழரின் மானத்தை மாய்த்ததோ, சனாதனத்தைப் புகுத்தித் தமிழரின் செல்வத்தைச் சுரண்டிற்றோ, அந்த ஆரியத்துக்குத் தமிழர் தூபதீப நைவேத்யமிடுவது, அவர்களின் ஆணவத்துககு அறிகுறியான நாட்களை, விழாக் கொண்டாடுவதும் ஈனத்தனம் என்போம்.

தீயும் வாளியும், தமிழரைக் கெடுத்ததுபோதும், இனியேனும் தீபாவளி போன்ற தீயரின் திருவிழாக்களைக் கொண்டாடாது, திருந்துவரா, வைதீகர்கள் என்று கேட்கிறோம். எத்தனை தமிழர்கள் தீபாவளியை நாங்கள் கொண்டாடவில்லை என்று கூறுகின்றனரோ என்பதைப் பொறுத்துத்தான், தமிழரின் மறுமலர்ச்சி இருக்கிறது. இந்த நமது உணர்ச்சி, இன்று, சில ஆயிரவருக்கு மட்டுமே உண்டு என்ற போதிலும், அந்தக் தொகை பெருகிவருவது நமக்குப் பெருமகிழ்வூட்டுகிறது. இன்று நாம், தமிழரை நோக்கி, புதுவைத் தோழர் சிவப்பிரகாசம் அவர்கள் கேட்பதுபோல,

தீந்தமிழான செந்
தேன் மொழிநாடே
தீமை வைதீகம்
ஏனோ நீ ஏற்றாய்?

என்று கேட்கும் நிலையில் மட்டுமே இருக்கிறோம். என் செய்வது!

------------------------அறிஞர் அண்ணா -”திராவிட நாடு” - 24.10.1943

0 comments: