Search This Blog

13.11.10

கடவுளால் கலகம் விளைகிறது - ஜாக்கிரதை!


ஜார்ஜ் புஷ்

2003 இல் அமெரிக்கா ஈராக்மீது போர் தொடுத்தது; நான்கு மாத இடைவெளியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இசுரேலியப் பிரதமர் ஏரியல் ஷரோன், பாலஸ்தீனியப் பிரதமர் முகம்மது அபாஸ் ஆகியோர் சந்தித்தனர்.

அப்பொழுது புஷ் சொன்னார்:

நானாக எந்த நாட்டின் மீதும் யுத்தம் செய்யவில்லை; கடவுளின் ஆலோசனை, கட்ட ளையின்படிதான் அதனைச் செய்தேன். ஜார்ஜ் ஆப்கானிஸ்தானம் சென்று பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டு! என்று சொன்னார். உடனே அதனை செய்து முடித்தேன். அதன்பின், ஜார்ஜ், ஈராக் செல்லு, அங்கு நடக்கும் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டு என்று கூறினார். அதனையும் செய்து முடித்தேன். தற்போது மீண்டும் என்னை அனுப்பியிருக்கிறார். பாலஸ்தீனத்துக்கு நாட்டையும், இசுரேலுக்குப் பாதுகாப்பையும் ஏற்படுத்திக் கொடு; மேற்கு ஆசியாவில் அமைதி ஏற்படுத்து! என்று கடவுள் எனக்குச் சொல்லியிருக்கிறார். கடவுளின் ஆணைப்படியே இங்கு நான் வந்திருக்கிறேன் என்றும் சொன்னார். அதன்படியே பல லட்சக் கணக்கான மக்களைக் கொன்று குவிக்கக் காரண மானார். ஈராக் அதிபர் சதாம் உசேனைத் தூக்கில் ஏற்றினார். ஈராக்கில் கொடிய ரசாயனப் போர்க்கருவிகள் குவிந்து கிடக்கின்றன அது உலகுக்கே பெரிய அச்சுறுத்தல் என்று அலறினார். நேரில் சென்று அதனைச் சோதிக்கப் போகிறோம் என்றார். இந்த அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தார் என்று தெரிய வில்லை. ஓ, அதுதான் கடவுள் ஆணை என்று சொல்லிவிட் டாரே! எல்லாம் கடவுளினால் தான் நடக்கின்றன என்று நம்பும் மக்கள், இதனையும் நம்பித்தானே தொலைக்க வேண்டும் ( ஆம், என்க!)

ஏழாண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது அதே ஜார்ஜ் புஷ் என்ன சொல்லி இருக்கிறார்?

ஈராக்மீது போர் தொடுத்ததில் நான் பல தவறுகளைச் செய்துவிட்டேன். போர் தொடுத்ததன் மூலம் நான் மூழ்கிய கப்பலின் கேப்டன் போன்ற நிலையில் இருந்தேன். ஈரான் தொடர்பான பிரச்சாரத்திலும் தவறு நேர்ந்துவிட்டது. பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்து வதிலும் தவறு நேர்ந்துவிட்டது. போர் நடந்த முறையிலும் தவறு செய்து விட்டோம் என்று ஜார்ஜ் புஷ் எழுதிய நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சரி, இதுகுறித்து விமர்சனத்துக்கு வருவோம். ஜார்ஜ் புஷ் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மீது போர் தொடுத்ததும், பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக் களைக் கொன்றதும், போரில் அமெரிக்கத் துருப்புகளும் மாண்டு மடிந்ததும், ஜார்ஜ் புஷ் கூற்றுப்படி கடவுள் கட்டளை தானே? அதை மனதில் இறுத்திக் கொண்டு, இப்பொழுது புஷ் எழுதியுள்ளதையும் அசை போட்டுப் பார்க்க வேண்டும். கடவுள் கட்டளைப்படி செய்த ஒன்றை இப்பொழுது தவறு என்று ஒப்புக் கொள் கிறாரே - இதன் பொருள் என்ன? கடவுள் தவறு செய்யக் கூடியவர், தவறான வழி காட்டக் கூடியவர் என்று இதன்மூலம் ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கிறதா - இல்லையா? இன்னொன்று, தவறு செய்பவர்கள் கடவுளை மூடு திரையாக, முகமூடியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும் பெறப்படுகிறதா - இல்லையா? கடவுள் பக்தி கற்றுக் கொடுத்த யோக்கியதை இதுதான்.

கடவுளால் கலகம் விளை கிறது - ஜாக்கிரதை!

-------------------- மயிலாடன் அவர்கள் 12-11-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: