Search This Blog

18.11.10

கடவுளைத் தொழவந்தவன் குண்டு வெடித்து சாகின்றானே!


கடவுளைத் தொழ வந்தவனே குண்டு வெடித்து சாகிறானே-உன் கடவுள் காப்பாற்றவில்லையே!

திருவரங்கம் மாநாட்டில் தமிழர் தலைவர் பேச்சு

கடவுளைத் தொழவந்தவன் குண்டு வெடித்து சாகின்றானே! உன்னுடைய கடவுளுக்கு ஏது சக்தி? உன் கடவுளையே ஏ.கே.47 துப்பாக்கி வைத்துக் காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறதே என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

திருவரங்கத்தில் 8.11.2010 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

சங்கராச்சாரி யாருக்காக அழுதார்?

பெரிய சங்கராச்சாரியார் யாருக்காக அழுதார்? மிளகாய்ப் பொடியைத் தூவியதற்காக அழவில்லை. அரிஜனன் கடவுளை கும்பிடப் போனானே என்பதற்காக அழவில்லை. அக்கிரகாரத்து மடிசார் மாமிகளின் மீது அடிவிழுந்து போய்விட்டதாம். அதற்காக சங்கராச்சாரியார் அழுதாராம்.

இதற்கு மேலே நாங்கள் விளக்கம் சொல்ல வேண்டுமா? ஆக, இதற்கு அடித்தளம் எங்கே போயிருக்கிறது? காரணம் ஜாதி. பிறவியினால் நாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுவதைத் தவிர வேறு என்ன? எங்களுக்கு மட்டும்தான் அந்த உரிமை, மற்றவர்களுக்கு இல்லை என்று நினைத்ததினாலே ஏற்பட்ட கோளாறுதானே.

எல்லோரும் சமம் என்று பெரியாருடைய கொள்கையை ஏற்றிருந்தீர்களேயானால் உங்களை நாங்கள் வெறுக்க வேண்டிய அவசியமோ அல்லது எங்களை நீங்கள் வெறுக்க வேண்டிய அவசியமோ அல்லது பிரிந்து வாழவேண்டிய அவசியமோ இல்லையே. தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.

கடவுள் தோன்றியிருந்தால்....

கடவுள் மனிதனை உற்பத்தி செய்தார் என்றால் எதற்கு இத்தனை மதம்? பெரியார் சொன்னார், கடவுள் தோன்றியிருந்தால் எல்லோருக்கும் ஒரே மாதிரிதானே தோன்றியிருப்பார்?

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சூரியனா இருக்கும்? ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு சந்திரன் இருக்கிறதா? சூரியனைப் பற்றிச் சொல்லும் பொழுது அகில உலகத்தை ஒத்து ஒரே மாதிரிதானே சொல்லுகின்றான். ஏனென்றால் உண்மை. அதைப் பற்றிச் சொல்லக்கூடிய அளவில் இருக்கிறார்கள்.

கடவுள் கற்பனை அப்படி அல்ல. உண்டென்பார் சிலர். இல்லையென்பார் பலர். அவரவர்கள் கற்பனையைப் பயன்படுத்தி கடவுளைப் பற்றிச் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.

மனிதனைப் பிரித்தது கடவுளே....!

அந்தக் கடவுள் மனிதனைப் பிரித்தது. உழைத்தவனை ஏமாற்றியது. சுரண்டியது. நீ கீழ்ஜாதி உனக்குப் படிக்கத் தகுதி இல்லை. படிக்கத் தகுதி இல்லாத காரணத்தால் உத்தியோகம் பார்க்கத் தகுதி இல்லை. நீ மற்றவர்களைப் போல சமமாக வாழ முடியாது. சமவாய்ப்பு, சம உரிமை, சட்டத்தின் முன்னாலே சமம் என்று சொல்லக்கூடிய நிலை இல்லை. வர்ணாசிரமப்படி பெண்ணின் நிலை

வர்ணாசிரம, ஜாதி அடிப்படையிலே பஞ்ச மனுக்குக் கீழே ஆறாவது அடுக்கில் இருக்கக் கூடியவர்கள்தான் பெண்கள் என்று சொன்ன காரணத்தினால் தான் தந்தை பெரியார் நோய்நாடி நோய் முதல் நாடினார். கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை என்று சொன்னார். இராமன் கற்பனை என்று தெரிந்தால் சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு தடை ஏற்பட்டிருக்குமா?

ஜெயலலிதா சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக வழக்கு போட்டாரே என்று சொன்னார்கள். இந்த சிறீரங்கத்தைச் சார்ந்தவர்தானே அந்த அம்மையார்? கடவுள் மூடநம்பிக்கை என்ற அளவிலேதான் மற்ற நாடுகளில் இருக்கிறது.

உலக நாத்திகர்கள் போராடுகிறார்கள்

அதை எதிர்த்து உலக நாத்திகர்கள் அங்கே போராடுகிறார்கள். ஆனால் இந்த நாட்டைப் பொறுத்தவரையிலே என்ன சிக்கல் என்று சொன்னால் மூடநம்பிக்கை மட்டுமல்ல, தன்னம் பிக்கைக்கு எதிரானது மட்டுமல்ல, அந்த கடவுள்தான் ஜாதியை உண்டாக்கினான். முகத்திலே பிறந்தவன் உயர்ஜாதி. தோளிலே பிறந்தவன், தொடையிலே பிறந்தவன், காலிலே பிறந்தவன் கீழ்ஜாதி என்று எழுதி வைத்திருக்கின்றான்.

பெரியாரிடத்திலே ரொம்ப நாளாக கேள்வி கேட்கின்ற பழக்கம் உண்டு. பொதுக்கூட்டத்தில் கேள்வி கேட்பார்கள். நீங்கள் கால்வரைக்கும் சூத்திரன் பிறந்தான் என்று எழுதி வைத்திருக் கின்றீர்கள்.

பெரியார் சொன்ன பதில்

பஞ்சமன் என்று சொல்லக்கூடிய அய்ந்தாவது ஜாதிக்காரன் எங்கே பிறந்தான் என்று கேட்டார். ஏனென்றால் கால்வரைக்கும் வந்தாகிவிட்டதே என்று துண்டுச்சீட்டில் எழுதி கேட்டபொழுது, தந்தை பெரியார் சொன்னார். அவன்தான்டா அவங்க, அப்பாவுக்கும், அம்மாவுக்கும் முறைப்படி பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்திருப்பான் என்று சொன்னார் (கைதட்டல்). இந்த ஜாதி முறைக்கு கடவுள் தானே காரணம்? மனிதன் உண்டாக்கி னான் என்றால் எப்பொழுதோ ஜாதிமுறை விடைபெற்றிருக்கும். ஒழிந்து போயிருக்கும் அதற்கு இடமில்லையே.

பக்தி என்பது மூடநம்பிக்கை ஆகி, மனிதர் களைப் பிரித்துப் பார்க்கக்கூடிய அளவுக்கு ஆகிவிட்டது. இத்தனை மதம் இந்த நாட்டிலே இருக்கிறது. அதனாலே என்ன பயன்?

ஏ.கே.47 பாதுகாப்பு இல்லாத கடவுள் உண்டா?

கடவுளுக்கு சக்தி இருக்கிறது என்று சொல்லுகின்றீர்கள். கோவில் மதிற்சுவரே திடீரென்று விழுகிறது. அதைவிட கொடுமையான விசயம் வேறு என்ன?

இன்றைக்கு எந்தக் கடவுளாவது ஏ.கே.47 பாதுகாப்பு இல்லாமல் கோவில்களில் இருக்கிறதா? மெட்டல் டிடக்டர் இல்லாமல் சுலபமாக பக்தர்கள் உள்ளே போய்விட்டு வரக்கூடிய சூழல்கள் உண்டா? அப்படியானால் கடவுள் சர்வ சக்தி வாய்ந்தவன் என்பது பொய்யாகிவிட்டதா-இல்லையா? அவனில்லாத இடமே இல்லை என்று சொன்னால் என்ன ஆகும்? தீவிரவாதம், பயங்கரவாதம் அதற்குத் தாய் யார்? தந்தை யார்? மதங்கள் தானே.

மாலேவ்கான் குண்டு வெடிப்பு என்ன?

மாலேவ்கான் குண்டுவெடிப்பு என்ன? காஷ்மீரிலே இப்பொழுது வழக்கு என்று சொல்லிக்கொண்டு வந்திருப்பதற்கு இப்பொழுது என்ன அடையாளம்? எனவே இந்து தீவிரவாதம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறதா-இல்லையா?

எண்ணிப்பார்க்க வேண்டும். இது ஒரு பக்கம் இன்னொரு பக்கத்திலே இஸ்லாமியர்கள் மட்டும்தான் தீவிரவாதிகள் அல்ல. பாகிஸ்தானிலேயே இஸ்லாமியர்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிக்கிறது.

தொழவந்தவனைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா?

கடவுள் கருணையே வடிவானவனாக இருந்தால், தன்னைத் தொழ வந்தவனைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா? அதுவும் அந்த மதத்தைக் காப்பாற்று கிறவனுக்கு சக்தி இல்லையே.

அதேமாதிரி கிறிஸ்துவ மதமாகட்டும். கற்பழிப்பில் ஈடுபட்டு கைதானவர், முக்கியமான பாதிரியார் அல்லவா? போப் ஆண்டவர் தனியே ஒரு மன்னிப்பு செசனே நடத்தக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறாரே. இந்த மதம், அந்த மதம் என்று அல்ல. மதம் பிடித்தது என்றால் யானைக்குப் பிடித்தாலே ஆபத்து. மனிதனுக்கு மதம் பிடித்தால் அதைவிட ஆபத்து. மனிதர்களை கடவுள் ஒன்று சேர்க்கவில்லை. கடவுள் மனிதனைப் பிரித்திருக்கிறது-ஜாதிகளாக, மதங்களாக. இதுதான் எதார்த்தமான நிலை.

மதங்கள் மக்களை ஒன்று சேர்க்கவில்லை

மதங்கள் மக்களை ஒன்று சேர்க்கவில்லை. பிரித்திருக்கிறது. பெரியாருடைய சுயமரியாதை தத்துவம் மனிதநேயத்தின் அடிப்படையில் வந்தத தனால் மனிதர்களை ஒன்றுபடுத்துகின்ற தத்துவமே தவிர, மனிதர்களைப் பிரிக்கின்ற தத்துவமல்ல. பின் ஏன் பார்ப்பன எதிர்ப்பைப் பேசுகிறோம்? நீங்கள் தீண்டாமை என்று சொல்லுகின்றீர்கள். நாயைத் தடவிக் கொடுக்கிறீர்கள். அதற்கு உணவு ஊட்டுகிறீர்கள்.

ஜாதிமுறை இருக்கலாமா?

இந்த நாட்டைப் பக்குவப்படுத்தக்கூடிய உழைப் பாளியாக இருக்கின்ற என்னுடைய சகோதரன் அவன் சேற்றிலே காலை வைத்தால்தான் நீ சோற்றிலே கை வைக்கமுடியும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடிய நிலை இருக்கிறது என்று சொன்னால் அருமை நண்பர்களே! இந்த ஜாதி முறை இருக்கலாமா?

எனவேதான் ஜாதி ஒழியவேண்டும் அந்த ஜாதியைக் காப்பாற்றுகிற மதமாக இருந்தாலும், கடவுளாக இருந்தாலும் அவைகளுக்கு இங்கே வேலையில்லை என்று காட்டுவதுதான் எங்களுடைய இயக்கத்தின் நோக்கம்.

இந்த ஆட்சியையே வீழ்த்த எண்ணுகிறான்

எனவேதான் தந்தை பெரியார் சொன்னார். கடவுள் இல்லை என்று மட்டும் சொல்லவில்லை. கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார் மனிதனை நினை என்று சொன்னார். மனிதர்களுக்குள்ளே பேதப்படுத்தாதே என்று சொன்னார்.

இதைச் செய்கின்ற காரணத்தால்தானே இந்த அரசையேகூட வீழ்த்தவேண்டும் என்று நினைக் கின்றார்கள். கலைஞர் அரசு என்னய்யா தவறு செய்தது?

-(தொடரும்)------------------ “விடுதலை” 16-11-2010

***********************************************************************************


உங்கள் அன்புக்குத் தலைவணங்கி தொண்டறத்தின் மூலம் நன்றிக்கடன் அடைப்பேன்

தமிழர் தலைவர் விளக்கவுரை

உங்கள் அன்புக்குத் தலைவணங்கி எனது தொண்டறத்தின் மூலம் எனது நன்றிக் கடனை அடைப்பேன் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

திருவரங்கத்தில் 8.11.2010 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

எல்லாம் நம் தலையெழுத்து....!

கலைஞர் அரசில் அவர்கள் இன்ன தவறு செய்தார்கள் என்று சொல்ல முடியுமா? காட்ட முடியுமா? கடைகோடியில் இருக்கிறவன் என்ன நினைத்திருப்பான்? கடவுள் நம்மை குடிசையில்தான் வாழ வைத்தார். கடவுள் நம்மை இப்படித்தான் இருக்கும்படியாக செய்தார். அது நம்முடைய தலையெழுத்து என்று சொன்னான்.

அது அவன் தலை எழுத்து அல்ல. அவன் எழுதிய தலை எழுத்தையே நான் மாற்றி எழுதுகிறேன் என்று சொல்லுகிற நேரத்தில் இன்றைக்கு 22 இலட்சம் குடிசைகள் அத்தனையையும் கான்கிரீட் வீடு களாகக் கட்டிக் கொடுப்போம் என்று சொல்லக்கூடிய துணிச்சல் கலைஞருக்கு உண்டு.

ஈரோட்டு குருகுலத்தில் பயின்றவர் அல்லவா!

பெரியாருடைய கொள்கையிலே ஈரோட்டு குருகுலத்திலே கலைஞர் பயின்ற காரணத்தால் கடவுளை மற! மனிதனை நினை! என்று நினைத்தார். மனிதனை அவர் நினைத்த காரணத்தால்தான் இவ்வளவு பெரிய வாய்ப்புகள் ஏற்பட்டன.

எல்லோருக்கும் சம வாய்ப்பு வரவேண்டும் என்று செயல்படும்பொழுது மீண்டும் இந்த ஆட்சி வரக்கூடாது என்று பார்ப்பனர்கள் நினைக்கிறார்கள். அனைவரும் சமம்

அனைவரும் சமம். அதனால் என்ன கெட்டுப்போய்விட்டது? காலம் காலமாக சிதம்பரம் நடராஜர் கோயில் எங்களுக்கே சொந்தம் என்று அங்குள்ள பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தி னார்கள். அவர்களிடமிருந்து எடுத்து அந்த கோயில் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் கீழ் வந்திருக்கிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்ச ராக இருந்தபொழுது 150 ஆண்டுகளாக சிதம்பரம் கோயில் வழக்கு நடந்துகொண்டிருந்தது.

எம்.ஜி.ஆர். சொன்ன ரகசிய செய்தி

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் இவற்றில் வழக்கு மாறி, மாறி நடைபெற்றுக்கொண்டிருக் கிறது. அன்றைக்கு அறநிலையப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த வி.வி.சாமிநாதன் அவர்களை அழைத்து எம்.ஜி.ஆர் சொன்னார். இவர்கள் சரியாக வரமாட்டார்கள். வீரமணியிடம் சொல்லுங்கள். அவருடைய வைத்தியம்தான் இதற்குச் சரியாக இருக்கும் (கைதட்டல்). ஆகவே, அவரையே கூட்டம் போட்டு பேசச் சொல்லுங்கள்; அவரையே மனுகொடுக்கச் சொல்லுங்கள் என்று சொன்ன பிறகு அமைச்சர் எங்களை வந்து பார்த்தார்.

அன்றைக்கு அது சிதம்பர ரகசியம். இன்றைக்கு இது ரகசியமல்ல. எம்.ஜி.ஆர். இல்லை. அதனால் இவர் துணிச்சலாகச் சொல்லுகிறார் என்று கருதாதீர்கள். வி.வி.சாமிநாதன் இன்னமும் இருக்கிறார். செத்துப் போனவர்களை வைத்து சாட்சியம் சொல்லுகிறவர்கள் அல்ல நாங்கள். சிதம்பர ரகசியம் என்ற தலைப்பில் கூட்டமே போட்டோம். என்னுடைய உரை புத்தகமாகவே வந்திருக்கிறது.

காலங்காலமாக முடியாத காரியத்தை....

காலம் காலமாக முடியாத காரியத்தை கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடனே, இந்த அய்ந்தாவது முறையான பொற்கால ஆட்சியில் 3000 அந்தணர்கள்- தீட்சிதர்கள் சிதம்பரம் கோவில் எங்களுக்கே சொந்தம் என்று சொன்னார்கள், பாருங்கள். வழக்குப் போட்டு தீர்ப்பு வாங்கப்பட்டது. அய்ந்து மணிக்குத் தீர்ப்பு. 6 மணிக்கு அதிகாரியை அனுப்பினார் முதல்வர். இங்கேயும் பெண் அதிகாரி யாராவது வந்தால் என்ன பாடுபடுத்தினார்கள் என்பது தெரியாதா? (கைதட்டல்). இப்படி எத்தனையோ வரலாறுகள் உண்டு. அதற்கும் கூட ஆபத்பாந்தவர்கள் நாங்கள்தான்.

கருப்புச்சட்டைக்காரன் காவலுக்கு கெட்டிக்காரன்

கருப்புச்சட்டைக்காரன் காவலுக்கு என்றைக்கும் கெட்டிக்காரன் (கைதட்டல்). பக்தர்கள் கூட எங்களிடம் வருவதுண்டு. கடவுள் இல்லை என்பது அப்புறம் இருக்கட்டும். உங்களைத் தவிர வேறு யாரும் இதைப் பேச முடியாது. உங்களைத் தவிர இதைச்சொல்ல முடியாது. குமுறல்களைச் சொல்ல வேண்டுமென்றால் மருத்துவமனைக்கு வருகிற நோயாளிகளைப் போல-திராவிடர் கழகம் என்ற மருத்துவமனைக்குத்தான் மற்றவர்கள் வந்து சேருவார்கள். சிகிச்சை இங்கேயிருக்கிற கருப்புச் சட்டைகளால்தான் அளிக்கக் கூடிய அளவிலே இருக்கும்.

இன்றைக்கு சிதம்பரம் கோவில் வருமானம் என்ன?

இன்றைக்கு சிதம்பரம் கோவிலில் வருகிற உண்டியல் பணம் அதிகமாகியிருக்கிறது. இந்து அறநிலையத்துறையில் அந்தப்பணம் சேர்க்கப் படுகின்றதே. சிதம்பரம் தீட்சிதர்கள் ஆத்திரப்பட்டனர். பார்த்தான். உண்டியலில் பொது மக்கள் நிறையவா ரூபாய் நோட்டுகளை போடுகிறீர்கள் என்று சொல்லி எண்ணெய்யை எடுத்து உண்டியலில் ஊற்றிவிட்டார்கள். எண்ணெய் ஆனாலும் கலைஞர் விடுவாரா? அவருக்குத் தெரியும் ரிசர்வ் பேங்கில் கொடுத்து மாற்ற. கடவுள் இருந்திருந்தால் அடப்பாவி, ஏண்டா என்னுடைய உண்டியலில் எண்ணைய்யை ஊற்றுகிறாய் என்று கேட்டிருப் பாரா, இல்லையா?

கிருஷ்ண தேவராயர் கொடுத்த நகைகள் எங்கே?

திருப்பதி கோவிலுக்கு கிருஷ்ணதேவராயர் காலத்தில் கொடுத்த அத்துணை நகையும் காணாமல் போய்விட்டது. வெங்கடாஜலபதி அப்படியேதான் உட்கார்ந்திருக்கின்றார்.

அரசுக்கு சிதம்பரம் கோயில் மூலமாக வருகின்ற வருமானம் ரூ.25 இலட்சம் இப் பொழுது. ஆனால், தீட்சிதர்கள் கொடுத்த கணக்கு நீதிமன்றத்தில் எவ்வளவு தெரியுமா?

வெறும் முப்பத்து மூன்றாயிரம் ரூபாய்-இது வருடக் கணக்கு கற்பகாம்பாள் கபாலீசுவரர் கோவிலுக்கு வந்த வருமானத்தைவிட இது ரொம்பக் குறைவு என்று எழுதியிருந்தார்கள்.

திருவரங்கம் கோவில் மதிற்சுவர் வந்ததெப்படி?

சிதம்பரம் கோவிலைப் பற்றியே பேச வேண்டும் என்றால், இன்னொரு நாள் சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்தால்தான் விரிவாகப் பேச முடியும். (கைதட்டல்). திருவரங்கம் கோவிலின் மதிற்சுவர் எப்படி வந்தது என்ற தகவலையும் அதில் சொல்லுவோம்.

நாகப்பட்டினத்தில் புத்த விகாரங்களில் உள்ள தங்கத்தை எல்லாம் கொள்ளை அடித்து வந்து திருமங்கை ஆழ்வார் இந்த சிறீரங்கம் கோவிலின் மதிற்சுவரைக் கட்டினார் என்கின்ற விவரங்களை எல்லாம் ஆதாரத்துடன் எடுத்துப் பேசுவதற்கு நிறைய செய்திகள் இருக்கின்றன. நீங்களோ மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.

என்னைத் தட்டிப்பாருங்கள்

என்னையோ தராசிலே அமர வைத்து எடைபோட்டு பார்த்திருக்கிறீர்கள். என்னை நாணயத்தாலே எடை போட்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. இது சரியான நாணயமா, கள்ளநாணயமா என்று நாணயத்தை எப்படி தட்டிப் பார்க்கிறீர்களோ, அது போல என்னைத் தட்டிப்பாருங்கள். எங்களுடைய கொள்கைகளைத் தட்டிப்பாருங்கள்.

அதை அப்படியே ஏற்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஆகவே, இவ்வளவு பெரிய அளவுக்குக் கோயிலைக் கட்டியவர்கள் தமிழர்கள். கோயிலுக்குள் சிலை வடித்தவர்கள் தமிழர்கள். கோயிலுக்கு மானியம் விட்டவர்கள் தமிழர்கள். இந்த கோவிலைப் பொறுத்த வகையிலே ஒரே ஒரு கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது.

தூங்குகிறவனுக்கு 6 வேளை சாப்பாடாம்!

சீறீரங்கநாதர் நிரந்தரமாக தூங்கிக்கொண்டிருக்கின்றார். ஏன் பள்ளி கொண்டிருக்கிறீரய்யா சிறீரங்கநாதரே என்று எவ்வளவு உரத்துப்பாடி எத்தனை வருடகாலமாகத் தொடர்ந்து பாடிக் கொண்டு வருகின்றார்கள். மேளதாள இசையை எல்லாம் எழுப்பி, முரசு கொட்டி, வீணை பாடி இவ்வளவு செய்தும் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. சிறீரங்கத்தில் தீ பற்றியது- அப் பொழுது கூட அவர் எழுந்திருக்கவில்லை.

ஆனாலும், தினமும் கணக்கு எழுதி ரெங்கநாதர் ஆறுவேளையும் சாப்பிடுகிறார் என்று சொன்னால் என்ன அர்த்தம்? ஒரு கணக்குப் பிள்ளை இப்படி கணக்கு எழுதினால் எப்படியிருக்கும்? முதலாளி தூங்கிக்கொண்டிருந்தபொழுது ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டது. 10 ரூபாய், 15 ரூபாய் என்று கணக்கு எழுதினால் இதை யாராவது நம்புவார்களா? ஏனய்யா, நீ திருடியதைப் பற்றிக் கூட கவலை இல்லை.

என்னையும் முட்டாளாக்குவதா?

நான் தூங்கிக்கொண்டிருந்தபொழுது சாப்பிட்டேன் என்று கணக்கு எழுதினாயே உன்னையும் முட்டாளாக்கி, என்னையும் முட்டாளாக்குவது நியாயமா என்று கேட்க மாட்டோமா? சாதாரண பகுத்தறிவைப் பயன்படுத்தினாலே பக்தி நிற்காது. அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார். பக்தி வந்தால் புத்திபோய்விடும். புத்தி வந்தால் பக்தி போய்விடும். வெளிச்சம் வந்தால் இருட்டு போய்விடும். இருட்டு வந்தால் வெளிச்சம் போய்விடும் என்று.

உலக மக்களோடு போட்டி போட வேண்டும்

ஆகவே, மக்களை அறிவாளிகளாக ஆக்க வேண்டும். மக்களை மனிதர்களாக ஆக்க வேண்டும். உலக மக்களோடு நாம் போட்டியிட வேண்டும். யாரையும் வேற்றுமைப்படுத்துவது அல்ல. நாட்டிலே கலவரத்தை உண்டாக்குவது அல்ல. நம்முடைய மக்கள் அன்போடு வாழவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். கட்டித் தழுவி வாழுங்கள். ஒருவருக்கு ஒருவர் மனிதநேயத்தோடு மனிதர்களாக வாழுங்கள்.

மதவெறியை மாய்ப்போம்!

மனிதநேயத்தைக் காப்போம்!

ஒருவர் உயர்ந்தவர்; இன்னொருவர் தாழ்ந்தவர். ஒருவர் தொடக்கூடியவர்; இன்னொருவர் தொடக் கூடாதவர் என்றெல்லாம் நினைக்காதீர்கள். சுரண்டப் படுபவரும் இருக்கக்கூடாது. சுரண்டுபவரும் இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை. அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்த இயக்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

மதவெறியை மாய்த்து மனிதநேயத்தை காப்போம். ஜாதிவெறியைச் சாய்த்து சமத்துவத்தை உருவாக்குவோம். பெரியார் வாழ்க என்று கூறி இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக ஏற்பாடு செய்த திருவரங்கம் தோழர்கள், அவர்களுக்கு ஒத்துழைத்த அனைத்துக்கட்சி நண்பர்கள், அதே போல மாவட்ட தோழர்கள், எனக்கு எடைக்கு எடை தந்த அத்துணை நண்பர்கள் இவர்களுக்கெல்லாம் நன்றியைத் தெரிவித்து எனக்கு 78ஆம் ஆண்டு வரவில்லை என்றாலும், எனக்கு 78 பொருள்களை நீங்கள் தந்திருக்கிறீர்கள் என்று சொன்னால் உங்களுடைய அன்புக்குத் தலைவணங்கி நான் உங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ப தொண்டறத்திலே மேலும் இந்தக் கடனை அடைப்பதற்கு உழைப்பேன்! உழைப்பேன்!! உழைப்பேன்!!! என்று உறுதி கூறி முடிக்கிறேன் வணக்கம். நன்றி! -

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

------------------- “விடுதலை” 17-11-2010

3 comments:

nimmie said...

So it was an Ambani who was the beneficiary. Not a shudra,not a dalit and not a 'Dravidian' Mr.Veeramani, what have you got to say about the Shudra rule now?

நம்பி said...

//Blogger nimmie said...

So it was an Ambani who was the beneficiary. Not a shudra,not a dalit and not a 'Dravidian' Mr.Veeramani, what have you got to say about the Shudra rule now?

November 18, 2010 1:34 PM//

என்ன சொல்ல வர்ற...? கேடுகெட்ட பார்ப்பன ரூல் வேணுமா...? உனக்கு.?..நீ சொல்ற ''சூத்ரா '' என்பதற்கு பொருள் தெரியுமா...? அதை முதலில் தெரிந்து கொண்டு எழுது. இதை இங்கிலிபீஸ்ல வேற எழுதற... என்ன காரி முழிஞ்ச பின்னூட்டம்... ரொம்ப புத்திசாலியா எழுதறாத நினைப்போ...?

நம்பி said...

//Blogger nimmie said...

So it was an Ambani who was the beneficiary. Not a shudra,not a dalit and not a 'Dravidian' Mr.Veeramani, what have you got to say about the Shudra rule now?

November 18, 2010 1:34 PM//

இந்த மாதிரி இன்னும் இழிவு படுத்தி எழுதறீயே இதிலே தெரிஞ்சுக்க வேணா எவனோட நாட்டாமை இருக்குது, எவனோட ரூல் நடக்குது என்று...மனிதம் என்பது என்னவென்றாவது தெரியுமா..நீ தான் பெண்ணியத்தை பற்றி எழுதறீயா...?