Search This Blog

17.4.10

குஷ்பும்- கற்பும் - சோ கூட்டத்தின் கற்பு நிலைப்பாடு என்ன?


கற்பெனப்படுவது யாதெனின்.. யாதெனின்!


திரைப்பட நடிகையான குஷ்பூ திருமணத்திற்குமுன் கூடி வாழ்வது குறித்துத் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தினை மய்யப்படுத்திப் பல்வேறு விமர்சனங்கள் வெடித்துச் சிதறிக் கொண்டு இருக்கின்றன.

இதுதான் சந்தர்ப்பம் என்று திருவாளர் சோ ராமசாமி - தந்தை பெரியார் அவர்களைக் குறுக்கே கொண்டு வந்து நிறுத்தி குறுக்குச்சால் ஓட்டப் பார்க்கிறார்.

பொதுவாக அவரின் விமர்சனமும், கருத்தும் வலுவான எடுத்துக்காட்டுகளைக் கொண்டதாக அமையவே அமையாது. எடுத்துக் காட்டப்படுபவைகளுக்கான ஆதாரம் என்பது அவரிடம் எதிர்பார்க்கவே முடியாத ஒன்றுதான். எல்லாம் பொத்தாம் பொதுவாகத் தானிருக்கும்.

நகைச் சுவை உணர்வு என்பது மிகச் சிறந்த அம்சம். அதுபொருள் பொதிந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும்.

ஆனால் நகைச்சுவை என்ற பெயரால் சிரிப்பை மூட்ட வேண்டும் என்பதற்காக உடலில் பல சேட்டைகளைச் செய்து காட்டுவார்கள் - அந்த இரண்டாந்தர வகையைச் சேர்ந்ததுதான் சோவின் பாணி.

குஷ்பு கூறிய கருத்து உச்சநீதிமன்ற தீர்ப்பு இவற்றைப் பற்றி எழுத வந்த சோ பெரியாருக்கு ஒரு நியாயம், குஷ்புவுக்கு ஒரு நியாயமா? எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றினை தமது துக்ளக்கில் (7.4.2010) நீட்டி முழங்கியிருக்கிறார்.

நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள்?....

..எனவே பெண்ணடிமை ஒழிய, திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல, மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டும் என்றாலும் இந்தத் திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்...

பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால், முதலாவதாக அவர்களை கற்பு என்னும் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும்..

கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்...

..பெண்கள் விடுதலைக்கும், சுயேச்சைக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்கின்றோம்.

இன்னும் சிறிது வெளிப்படையாய், தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும், அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால், இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும், அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவைதான் தந்தை பெரியார் சொன்னதாக திருவாளர் சோவால் எடுத்துக்காட்டப்பட்டிருப்பவை.

தொடர்ச்சி ஏதும் இல்லாமல், துண்டு துண்டாக தமது வசதிக்கு ஏற்ப முன்னும் பின்னும் இல்லாமல் தந்தை பெரியார் கூற்றுகளைக் கையாண்டுள்ளார். இது ஒரு முடக்குவாதமும் அறிவு நாணயமற்ற மோசடியுமாகும்.

கற்பு என்பது பற்றி தந்தை பெரியார் கூறியுள்ள கருத்து ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டதாகும். அது பெண்ணுக்கு மட்டுமே உரித்தானது ஆணுக்குத் தேவையற்றது என்றிருக்கும் நிலைப்பாட்டை நிலைகுலைய வைக்கும் கருத்துக் கணைகளை வீசியிருக்கிறார் தந்தை பெரியார்.

கற்புபற்றி மட்டுமல்ல - பெண்களை அடக்கி ஒடுக்கும் சமாச்சாரங்கள் குறித்து நேர்மையான முறையில், அழுத்தமான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பெண் ஏன் அடிமையானாள் என்ற தந்தை பெரியார் அவர்களின் நூலினை ஆழமாகப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

உண்மையாக, பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்புமுறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்.

கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும்.

கற்புக்காக மனத்தில் தோன்றும் உண்மை அன்பை காதலை மறைத்துக் கொண்டு காதலும், அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கிற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

எனவே இக்கொடுமை நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை, இயற்கைக் கற்பை, சுதந்திரக் கற்பைக் காணலாமே ஒழிய, நிர்ப்பந்தங்களாலும், ஒரு பிறப்புக்கொரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காண முடியாது என்பதுடன், அடிமைக் கற்பையும் நிர்ப்பந்தக் கற்பையும் தான் காணலாம். அன்றியும், இம்மாதிரியான கொடுமையைவிட வெறுக்கத்தக்க காரியம் மனித சமூகத்தில் வேறொன்று இருப்பதாக என்னால் சொல்ல முடியாது (பெண் ஏன் அடிமையானாள்? முதல் அத்தியாயம் கற்பு எனும் தலைப்புக்குக்கீழ் தந்தை பெரியார்) இவ்வாறு கூறியுள்ளார்.

கற்புப்பற்றி தந்தை பெரியாரின் கருத்து மிகத் தெளிவாக இதில் கூறப்பட்டுள்ளது.

கற்பு என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

பெண்ணுக்கு மட்டும் கற்பு தேவை; ஆணுக்குத் தேவையில்லை என்பதை ஏற்க முடியாது.

ஆண் _ பெண் இருவருக்கும் சமமான சுயேச்சைக் கற்பு தேவை!

கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டு இருக்கக் கூடாது என்று தந்தை பெரியார் தெரிவித்துள்ள கருத்தில் எந்த இடத்தில் குற்றம்? எந்த இடத்தில் நொள்ளை? எடுத்துக்காட்டி விவாதிக்க முன் வர வேண்டாமா? மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான். நெட்டை மனிதன் வேடிக்கை பார்த்தான் என்பதெல்லாம் கிறுக்குவதற்கு சுவையாக இருக்கலாமே தவிர அறிவுத்தன்மைக்கு உவப்புடையதாக இருக்க முடியாது.

நாசமாகப் போகிற கற்பு கற்பு என்று சொல்லி நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள். பார்ப்பானோ மிகக் கெட்டிக்காரன், ஆயிரம் பேரை அவள் பார்த்திருந்தால்கூட, அவளைப் பத்தினியாக்கி விடுவான். சீதை, துரோபதை, தாரை இவர்களே இதற்கு உதாரணம்; கற்பு என்றால் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியாக அல்லவா இருக்க வேண்டும்? பைத்தியக்காரத்தனமாக மூட நம்பிக்கைகளை புகுத்திப் பாழாக்கி விட்டார்கள்

கட்டுப்பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத் திற்காகவும் கற்பு ஒரு காலமும் கூடாது! கூடவே கூடாது! வாழ்க்கை ஒப்பந்தத் திற்காகவும், காதல் அன்பிற்காகவும் இருவரையும் கற்பு என்னும் சங்கிலி யால் எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டட்டும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கிற கற்பு மாத் திரம் அடிமைப்படுத்துவதில் ஆசை, மூர்க்கத்தனமே அல்லாமல், அதில் கடுகளவு யோக்கியமும், நாணயமும் பொறுப்பும் இல்லவே இல்லை

பாவத்திற்குப் பயந்து பதிவிரதையாய் இருப்பவளும் காவலுக்குப் பயந்து பதிவிரதையாயிருப்பவளும், மானத்திற்குப் பயந்து பதிவிரதையாயிருப்பவளும் ஒரே யோக்கியதை உடையவளே ஆவாள் (நூல்: சுயமரியாதைத் திருமணம் - ஏன்?

வாழ்க்கை ஒப்பந்தத்துக்காகவும் காதல் அன்பிற்காகவும் ஆண் பெண் இருவரையும் கற்பு என்னும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டட்டும் என்று தந்தை பெரியார் கூறியதன் மூலம் கற்பின்மீது அவருக்குள்ள நிலைப்பாடு எத்தகையது என்பது வெளிப்படை; ஆனால் கற்பு என்பது ஒரு சார்பானது. பெண்ணுக்கு மட்டுமே உண்டு. ஆண் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்கிற ஆண் ஒடுக்குத்தன்மையைத்தான் தந்தை பெரியார் தயவு தாட்சண்யம் ஏதுமின்றி நொறுக்கித் தள்ளுகிறார்.

உண்மை இவ்வாறு இருக்க சோ பார்ப்பனர் சகட்டு மேனிக்கு ஒழுக்கத்தைப் பற்றியே கவலைப்படாதவர் பெரியார் என்ற போக்கில் கிறுக்குவது போக்கிரித்தனம்தானே!

திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கூறியது உண்மைதான். அதற்குக் காரணம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற கொடுமை நிலவுவதும் ஆண் பெண் சுயசிந்தனைகளுக்குத் தடையாக இருப்பதும்தான். குடும்ப வாழ்வில் சிக்கிய மனிதன் சுயநலப் பிராணியாக வாழ்ந்து தொலைக்கிறான் என்பதால்தான்.

இதுபற்றி தந்தை பெரியார் கூறுகிறார்.

சொத்துரிமை இல்லாத ருசியா போன்ற நாடுகளில் ஆண்களும், பெண்களும் கணவன் - மனைவி என்று இல்லாமல் நண்பர்கள், காதலர்களாக இருந்துவருகின்றனர்; திருமணம் என்ற அமைப்பு முறையில் அமைப்பும் ஏற்பாடும் இல்லாமலே வாழ்கிறார்கள். இதற்குக் கட்டுப்பாடற்ற காதல் என்று பெயர். சுதந்திரமான ஆண் -பெண் உறவு வாழ்க்கை அங்கே இருக்கிறது. சொத்து, வாரிசு உரிமை இருக்கிற காரணத்தால்தான் நம்முடைய நாட்டில் கட்டுப்பாடுள்ள குடும்ப முறை ஏற்படுத்த வேண்டியதாயிற்று.

ருசியா போன்ற சொத்துரிமையற்ற நாடுகளில் இது போன்ற கட்டுப்பாடுகள் தேவை இல்லாமல் போய் விட்டது. ஏதோ இயற்கை உணர்ச்சிக்காக ஓய்வு நேரங்களில் சாந்தி ஏற்படுவதற்காக ஒரு வாழ்க்கைத் துணை இருக்க வேண்டும்; அவர்கள் சினேகிதர்கள் மாதிரி என்றைக்கும் இருப்பார்களே தவிர, அங்குக் கல்யாண முறையே கிடையாது. இதுதான் அங்குள்ள ஆண் பெண் உறவுத்தன்மை

(நூல்: சுயமரியாதைத் திருமணம் ஏன்?) என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.

திருமணம் குடும்ப அமைப்பு முறை என்பது சுயநல அமைப்புத் தன்மை கொண்டது என்பதும், தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்ற கடுகு உள்ளம் அவர்களை ஆட்டிப் படைத்திருக்கிறது என்பதும்தான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தியலாக இருக்கிறது.

பிறருக்குத் தொண்டாற்ற வேண்டும் என்று விரிந்த இதயத்தை இந்தத் திருமண வழிப்பட்ட குடும்ப அமைப்பு முறை அளிப்பதில்லை.

அன்னை நாகம்மையார் மறைவுற்றபோது தந்தை பெரியார் எழுதிய இரங்கல் இலக்கியத்தில்கூட தனக்கிருந்த ஒரே கட்டும்கூட இப்பொழுது இல்லை. முழுமையாகப் பொதுத் தொண்டில் மூழ்குவேன் என்றாரே!

தந்தை பெரியார் ஒரு தொலைநோக்காளர்; பற்றற்ற முறையில் சிந்திக்கக் கூடியவர்; அந்தக் கண்ணோட்டத்தில் அவர் எடுத்து வைக்கும் கருத்து ஒரு கட்டத்தில் கடும் விமர்சனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளானாலும், காலத்தைக் கடந்து அவை வெற்றி பெற்றிருக்கின்றன.

ஆசா பாசச் சூழலில் சிக்கிக் கொள்ளாமல், ஒரு பிரச்சினையின் தன்மையை நிர்வாணமாய் பார்க்கும் துணிவு எத்தனைப் பேருக்கு உண்டு?

திருமணம் என்ற அமைப்பு முறை இல்லாமல் நண்பர்களாகக் குடும்பம் நடத்துவோர் எண்ணிக்கை உலகில் பெருகிக் கொண்டே வருகிறது.

ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நண்பர்களாக வாழ்வதைக் கொச்சைப்படுத்துபவர்கள் யார்? அவர்களின் யோக்கியதை என்ன? ஒரு சந்தர்ப்பவாதத்துக்காக எதையோ தூக்கிப் பிடிக்கும் சோ கூட்டத்தின் கற்பு நிலைப்பாடு என்ன? ஒழுக்கத்தின் சீர்மைதான் என்ன?

அய்வருக்கும் தேவியான துரோபதைதானே அழியாத பத்தினி! அந்தப் பெண் அய்ந்து பேர் போதாது என்று ஆறாவதாக கர்ணனையும் காதலித்தாள் என்பதைப் பயபக்தியோடு ஏற்றுக் கொள்ளும் சோ கூட்டம் ஒழுக்கக் கேடுபற்றி வாய் திறக்கலாமா?

திருமணத்தில் பார்ப்பான் சொல்லும் மந்திரம் குறித்து பாபா சாகேப் அம்பேத்கர் கூறுவது என்ன?

ஆரியர்கள், தங்கள் மனைவியரைத் தேவர்கள் வைத்துக் கொள்வதையும், தேவர்களால் கர்ப்பமாக்கப்படுவதையும் தங்களுக்குக் கிடைத்த கவுரவமாகக் கருதினார்கள். இந்திரன், யமன், நசத்யா அக்னி, வாயு முதலிய தேவர்கள் மூலம் ஆரியப் பெண்கள் பிள்ளைகளைப் பெற்றனர் என்ற குறிப்பை மகாபாரதத்திலும் ஹரிவம்சத்திலும் காணலாம்.

தேவர்களுக்கும் ஆரியப் பெண்களுக்குமிடையே முறைகேடான உடலுறவு அடிக்கடி நிகழ்ந்தது. நாளடைவில் தேவர்களுக்கும், ஆரியர்களுக்கும் இடையே உறவு வலுப்பட்டது. அது நிலப்பிரபுத்துவமாக வடிவம் பெற்றது. தேவர்கள் ஆரியர்களிடமிருந்து இரண்டு வரங்களைப் பெற்றார்கள்.

ராட்சசர்களுக்கு எதிராகத் தேவர்கள் போர்செய்து, ஆரியர்களைப் பாதுகாத்ததற்காக, ஆரியர்கள் தேவர்களுக்கு அவ்வப்போது யக்ஞம் நடத்தி விருந்து படைக்க வேண்டும் என்பது முதல் வரம்.

ஆரியப் பெண்களை அனுபவிக்கும் முதல் உரிமை தங்களுக்கு வேண்டும் என்று தேவர்கள் ஆரியர்களைக் கேட்டார்கள். இது இரண்டாவது வரம். மிகப் பழங்காலத்திலேயே இது நடைமுறைக்கு வந்துவிட்டது. ரிக்வேதத்தில் (ரிக்_-85_40) இதுபற்றிய குறிப்பு காணப்படுகிறது.

அதன்படி ஓர் ஆரியப் பெண்ணை அனுபவிக்கும் முதல் உரிமை சோமனுக்கு; இரண்டாவது உரிமை கந்தர்வனுக்கு; மூன்றாவது அக்கினிக்கு; கடைசி உரிமை ஆரியனுக்கு. ஒவ்வொரு ஆரியப் பெண்ணும் பூப்படைந்தவுடன் யாராவது ஒரு தேவனிடம் அவன் அனுபவிப்பதற்காக ஒப்படைக்கப்படுவாள்.

(நூல்: டாக்டர் அம்பேத்கர் எழுத்துக்-களும் பேச்சுக்களும் - தொகுதி -_ 4 பக்கம் 302)

மேற்கண்டவாறு அம்பேத்கர் அவர்கள் குறித்துள்ளமைக்கு ஏற்ப, ஆரியப் பெண்களுக்கு வழமையாக இருந்ததை மந்திரங்களாக்கி, இதரர்களுக்கு குறிப்பாக, சூத்திரர்களுக்கும் திருமண காலத்தில் புரோகிதர் கூறுகிறார்.

சோம ப்ரதமோ

விவிதே கந்தர்வோ

விவித உத்தர:

த்ருத்யோ அக்நிஷ்டேபதி

துரியஸ்தே மனுஷ்யஜா

ஆரியப் பண்பாடும் ஒழுக்கமும் இவ்வளவு மோசமாக இருப்பதைத் தமிழர்களோ தன்மானமுள்ள எவருமோ ஏற்க முடியுமா? அதை ஒழிப்பதற்கே சுயமரியாதைத் திருமணத்தைத் தந்தை பெரியார் அவர்கள் தோற்றுவித்தார்!

(கி. வீரமணி அவர்கள் எழுதிய சுயமரியாதைத் திருமணம் - தத்துவமும், வரலாறும் எனும் நூலிலிருந்து)

கற்பு என்பதும், ஒழுக்கம் என்பதும் ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானது என்பது தந்தை பெரியார் அவர்களின் ஒழுக்கவியலாகும்.

அதனைக் கொச்சைப்படுத்தும் சோ வகையறாக்களின் பண்பாடு என்பது அம்பேத்கர் எடுத்துக்காட்டிய மேற்கண்ட தன்மை கொண்டதாகும்.

எது நெறி? எது வெறி? என்பதைத் தெரிந்து கொள்வீர்!


------------------மின்சாரம் அவர்கள் 17-4-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: