Search This Blog

6.4.10

முசுலிம்களின் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை - ஒரு பார்வை!



சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை நாட்டில் பல சர்ச்சைகளை உண்டு பண்ணியுள்ளன. வேண்டுமென்றே இதனைச் சர்ச்சைக்கு உட்படுத்துபவர்கள் இந்துத்துவாவாதிகள்; அவர்கள் முசுலிம்களுக்கான இந்தப் பிரச்சினையைப் பொறுத்தமட்டிலும் மட்டுமல்ல அவர்களின் எல்லாப் பிரச்சினைகளிலுமே மூக்கை நுழைத்து ஏதாவது தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கக்கூடியவர்கள்தாம்.

முசுலிம்களோ, கிறித்துவர்களோ தங்கள் மதங்களையும், வழிபடும் கடவுள்களையும்கூட இந்து மயமாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற அளவுக்கு இந்துத்துவாவாதிகளின் குரூரமான ஆதிக்கக் கரங்கள் நீள்வது எல்லோரும் அறிந்ததே.

முசுலிம்களின் முன்னேற்றத்திற்காக பல ஆணையங்கள் மத்திய அரசால் நியமிக்கப்பட்டன. இந்த வகையில் நீதிபதி சச்சார் குழு, நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா தலைமையிலான ஆணையங்கள் ஆய்வு செய்து பரிந்துரைகளையும் வழங்கியுள்ளன.

கேரளாவில் 12, தமிழ்நாட்டில் 3.5, பிகாரில் 3, கருநாடகாவில் 4, உத்தரப்பிரதேசத்தில் 2 விழுக்காடு ஒதுக்கீடுகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. மேற்கு வங்கத்தில் 10 விழுக்காடு அளிக்கப்படும் என்று மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் இராசசேகரரெட்டி தலைமையில் அமைந்த அமைச்சரவை முசுலிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது இந்திய அரசமைப்புச் சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என்று ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. (2004 செப்டம்பர்).

இதனைத் தொடர்ந்து மத அடிப்படையில் அல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் என்ற அடிப்படையில் முசுலிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் இயற்றப்பட்டது.

முசுலிம்களுக்கு 5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதன் மூலம் ஆந்திரப் பிரதேசத்தில் இட ஒதுக்கீடு அளவு 50 விழுக்காட்டைத் தாண்டுவதால், அதுவும் செல்லாது என ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் சிவப்பு மை கொண்டு அடித்து வீழ்த்திவிட்டது. (2005 நவம்பர்).

ஆந்திர மாநில அரசு தன் நிலையிலிருந்து பின்வாங்கவில்லை. முசுலிம்களுக்கு அளிக்கப்பட்ட 5 விழுக்காட்டில் ஒரு விழுக்காட்டினைக் குறைத்துக் கொண்டு 4 விழுக்காடு வழங்கிட ஆணை பிறப்பித்தது.

இட ஒதுக்கீடு என்றாலே அதனை எதிர்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கிறதே, சும்மா இருந்துவிடுவார்களா? இதனை எதிர்த்தும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இப்பொழுது ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு (Bench) இந்த வழக்கினை விசாரித்தது. ஏழு நீதிபதிகளில் ஒருவர் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், இன்னொருவர் கருத்து எதையும் சொல்லாமலும், மற்ற அய்வர் எதிராகவும் தீர்ப்பு அளித்த நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு சற்றும் களைப்பு அடையாமல் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் ஜே.எம்.பஞ்சால், பி.எஸ். சவுகான் ஆகியோர் உள்ளிட்ட அமர்வு வழக்கினை விசாரித்து தீர்ப்பு ஒன்றையளித்தது (25.3.2010)

ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தவறானது என்று கூறி, முசுலிம்களுக்கு அளிக்கப்பட்ட 4 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று இடைக்கால தீர்ப்பு அளிக்கப்பட்டது.

முசுலிம்களுக்கான இட ஒதுக்கீடு என்ற ஒன்று நீதிமன்றங்களால் எப்படியெல்லாம் பந்தாடப்படுகின்றது என்பதை எண்ணினால், சமூகநீதி பாதுகாப்பான நிலையை இன்னும் எட்டவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

2001 மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவில் உள்ள முசுலிம்களின் எண்ணிக்கை 13.4 விழுக்காடாகும். ஒவ்வொரு சமூகமும் எந்த அளவு விகிதாச்சாரத்தைப் பெற்று இருக்கிறது என்பதற்கு ஜி.இ.ஆர். (Gross Enrollment Ratio) என்று குறிப்பிடுகிறார்கள். அந்த வகையில் பார்க்கும்போது உயர் கல்வியில் கிறித்துவர்கள் 19.85; சீக்கியர்கள் 17.81; இந்துக்கள் 13.13, முசுலிம்கள் 7.7. இந்துக்களில் தாழ்த்தப்பட்டோர் 7.37 விழுக்காடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புள்ளி விவரங்கள் உணர்த்துவது என்ன? இந்த ஏற்றத்தாழ்வுகளுக்குப் பரிகாரங்கள்தான் என்ன? சமூகநீதி என்ற கண்ணோட்டந்தானே இந்த அவல நோயைத் தீர்ப்பதற்கான கைகண்ட மருந்து? இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூக நீதிக்கு முதன்மை இடம் அளிக்கப்படவில்லையா?

சமூகநீதிக்கு எதிரான சக்திகள் எதிர்க்குரல் கொடுக்கும்போது, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மக்களும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நமது கனிவான, உரிமையுடன் கூடிய வேண்டுகோளாகும்.


------------------ “விடுதலை” தலையங்கம் 6-4-2010

0 comments: