Search This Blog

3.2.12

பாவத்தைப் போக்க வந்த பரமபிதா -பைபிள் கூறும் உண்மைகள்


லகிலுள்ள மக்கள் அனைவரையும் உலுக்கி எடுக்கும் வார்த்தை ஒன்று உண்டானால் அது பாவம் என்பதாகும். அது ஒருவனைப் பிடித்துக் கொண்டால் அவன் பாவியாகிவிடுகின்றான். அப்படிப்பட்ட பாவம் உலகத்தில் எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது? அதை விரட்டுவது எப்படி என்ற விவரங்கள் உலகின் பெரும்பான்மையான மக்களுக்குத் தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த விவரங்கள் பைபிளிலேயே இருக்கின்றது என்ற உண்மை எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லாததால், எல்லோருமே தெரிந்து கொள்ளும்படிச் செய்வது அவசியமாகின்றது. முழுமையாகத் தெரிந்து கொள்ள தேவன் உலகத்தைப் படைத்த ஆதிகாலத்திலிருந்தே வரவேண்டும்.

(பேதுரு 3:5) பூர்வ காலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயின.

இறைவனாகிய தேவன் ஆதிநாளிலே பூமியையும், சூரியனையும், சந்திரனையும், நீரையும், காற்றையும் படைத்தார். பூமியில் வாழ்வதற்கு ஆதாம், ஏவாள் என்று பெயரிடப்பட்ட ஆண், பெண் இருவரையும் படைத்தார். பூமியிலே அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதற்காக கார்டன் ஆப் ஈடன் (Garden of Eden) என்ற தோட்டத்தையும் உருவாக்கி அதில் அவர்களை ஆனந்தமாக வாழும்படிச் செய்தார் சில நிபந்தனைகளுடன்.

ஆதாம், ஏவாள் இருவருக்கும் இறைவன் விதித்த நிபந்தனைகள் என்ன என்று பார்ப்போம். அவர்கள் இருவரும் தோட்டத்திலோ, உலகின் மற்ற பகுதிக்கோ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், இறைவனால் அமைக்கப்பட்ட கார்டன் ஆப் ஈடன் என்ற தோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலே உள்ள ஒரு குறிப்பிட்ட மரத்தின் கனியை மட்டும் சாப்பிடக்கூடாது. மேலும், அந்தக் கனி இருக்கும் மரத்தின் அருகில்கூட போகக் கூடாது என்று நிபந்தனையாக மட்டுமல்லாது கட்டளையாகவும் கூறியிருந்தார்.

ஆண்டவனின் ஆணைப்படியே நடந்து ஆனந்தமாக வாழ்ந்து வந்தார்கள் தேவனால் படைக்கப்படாத சாத்தானைக் காணும் வரை.

சாத்தானின் ஏமாற்று வார்த்தைகளில் சிக்கிய ஆதாமும், ஏவாளும் தேவனுடைய கட்டளைப்படி நடக்காமல், எந்தக் கனியைக் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது என்று தேவன் கட்டளை யிட்டிருந்தாரோ அந்தக் கனியை இருவரும் சாப்பிட்டார்கள். பழத்தைச் சாப்பிட்ட மறுவிநாடியே பாவம் அவர்கள் இருவரையும் பிடித்துக் கொண்டது. மேலும், அவர்கள் இருவரும் பாவிகள் ஆகிவிட்டனர். இந்தப் பாவமானது அவர்கள் இருவரோடு மட்டும் விடாமல், ஆதாம், ஏவாள் இருவருக்கும் பிறந்த அவர்களின் சந்ததியினரையும் தொடர்ந்து பிடித்துக் கொண்டது. இதனால் ஆதாம், ஏவாளுக்குப் பின் தோன்றிய உலக மக்கள் அனைவரையும் பாவம் பிடித்து பாவிகளாக மாறினார்கள்.

பாவம் என்றால் என்ன? அது எப்போது எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு விடை இப்பொழுது எல்லோருக்கும் நன்றாக, தெளிவாக விளங்கியிருக்கும். உலகில் இப்படித் தோன்றிய பாவத்தைப் போக்கவே இயேசு பூமிக்கு வந்தார்.

1. மத்தேயு (1:15) பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார். அவர்களில் பிரதான பாவி நான்.

இப்படியாக உலகில் தோன்றிய பாவத்தினால் ஜனங்கள் பாவியாகி விட்டதால், அந்தப் பாவிகளைக் காப்பாற்றவே இயேசு உலகிற்கு வந்தார் என்பதனைப் பைபிள் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றோம். ஆதாமையும், ஏவாளையும் அவர்களால் உண்டான உலக மக்கள் அனைவரையும் பாவியாக்கியது அவர்கள் சாப்பிட்ட பழத்தினால் அல்லவா. அப்படியானால் அவர்கள் சாப்பிட்ட பழத்தில் என்னதான் மகிமை இருக்கின்றது. இதனுடைய மகத்துவம்தான் என்ன? மர்மம்தான் என்ன என்பதையும் நாம் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதாம், ஏவாள் இருவரும் சாப்பிட்ட பழத்தின் பெயர் ஆங்கிலத்தில் புரூட் ஆப் நாலெட்ஜ் (Fruit of knowledge), தமிழில் அறிவுக் கனி என்பதாகும்.

அதாவது, உலகத்தைப் படைத்த தேவன் ஆதாம், ஏவாள் இருவரையும் படைக்கும் பொழுது அவர்கள் இருவரது அறிவையும் எடுத்து, அதைப் பழமாக்கி தோட்டத்திலுள்ள ஒரு மரத்திலே வைத்துவிட்டு ஆதாம், ஏவாள் இருவரையும் முட்டாள்களாக உலாவ விட்டிருந்தார். அவர்கள் இருவரும் சாத்தானின் பேச்சைக் கேட்டு அறிவுக்கனியைச் சாப்பிட்டதால் அறிவாளி ஆகிவிடுகிறார்கள்.

ஒரு மனிதன் அறிவாளியாக ஆவது என்பது இயேசுவின் கணிப்பின்படி பாவியாக ஆவது என்பதாகும். எனவேதான் இந்தப் பாவத்தைப் போக்கி, அதாவது அவர்களுடைய அறிவைப் போக்கி மனிதர்களை மீண்டும் பழைய நிலைக்கு, அதாவது அவர்களை முட்டாள்களாக மாற்றுவதற்காகவே இயேசு பூமிக்கு வந்தார் என்பது தெளிவாக நமக்குத் தெரிய வருகின்றது.

மத்தேயு (3:11) மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் ஞானஸ்நானங் கொடுக்கிறேன்.

ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுத்து மக்களிடமுள்ள பாவத்தைப் போக்குவதாகக் கூறி ஜனங்களிடையே பிரச்சாரத்தை ஆரம்பித்தார். பாவத்தைப் போக்கக்கூடிய ஞானஸ்நானம் என்றால் என்ன? ஜலத்தைக் கொண்டு ஞானஸ்நானம் செய்வது என்பது எப்படி என்ற கேள்வி எழக்கூடும்.

ஞானம் என்றால் அறிவு. ஸ்நானம் என்றால் கழுவுதல், குளிப்பாட்டுதல் என்று பொருள். ஒரு மனிதனுடைய பாவத்தைப் போக்க அதாவது அவனுடைய அறிவைப் போக்க, அவனுடைய அறிவை ஜலத்தினாலே கழுவி, குளிப்பாட்டி ஞானத்தை ஸ்நானம் செய்து முட்டாளாக்குவதுதான் இயேசு தேர்ந்தெடுத்த வழி. இதே முறைதான் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

எவ்வளவோ முயன்றும் இயேசுவால் பன்னிரெண்டு பேர்களை மட்டுமே சீடர்களாக ஆக்கி முழு முட்டாள்களாக மாற்ற முடிந்தது. பதிமூன்றாவது நபரான யூதாசை இயேசுவால் பாதிதான் முட்டாளாக மாற்ற முடிந்தது. பாதி அறிவாளியாக இருந்தான். பாதி அறிவாளியாக இருந்த யூதாஸ் இயேசுவின் செயலை பிலாத்து மன்னனிடம் காட்டிக் கொடுத்தான்.

மாற்கு (15:15) அப்பொழுது பிலாத்து இயேசுவை வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.

மாற்கு (15.24) அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்.

மாற்கு (15:37) இயேசு மகா சப்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.

பூமிக்கு வந்த நோக்கம் முழுமையாக முடிவடையாமல் இறக்க நேரிட்டதால், ஆவி வடிவமெடுத்து இயேசு தன்னுடைய பன்னிரெண்டு சீடர்களைச் சந்தித்து, தாம் பூமிக்கு வந்த நோக்கத்தை அவர்கள் மூலம் நிறைவேற்றுவதற்காக அவர்களிடம் வந்து கீழ்க்கண்டவாறு கட்டளையிடுகிறார்.

மத்தேயு (28:18) இயேசு சமீபத்தில் வந்து அவர்களை நோக்கி,

மத்தேயு (28:19) நீங்கள் புறப்பட்டுப் பேய், சகல ஜாதிகளையும், சீஷராக்கி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,

மத்தேயு (28:20) நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேஷம் பண்ணுங்கள்.

அவர்களுடைய ஞானத்தை ஸ்நானம் செய்து அவர்களுடைய பாவத்தை, அதாவது அறிவைப் போக்கி, புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாற்றுங்கள். முட்டாள்களாக மாறிவிட்டார்களா? என்பதைக் கண்டுகொள்வதற்குச் சில வழிமுறைகளையும் கூறினார்.

மாற்கு (16:16) விசுவாசமுள்ளவனாகி ஞானஸ் நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்.

மாற்கு (16:17) விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்.

மாற்கு (16:18) சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றையும் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது.

மனிதர்களுக்கு அறிவை உண்டாக்கிய சாத்தானாகிய பிசாசுவை விரட்டியடிப்பார்கள். பாம்புகளைக் கையிலே பிடிக்கச் சொன்னாலும் பிடிப்பார்கள். சாவைத் தரக்கூடிய விஷத்தைக் குடித்தாலும் சாகமாட்டார்கள் என்று சொன்னாலும் நம்புவார்கள். இதில் எதையேனும் நம்ப மறுத்தால் அவர்களுடைய ஞானம் சரியாக ஸ்நானம் செய்யப்படவில்லை. அவர்கள் புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாறவில்லை என்பதை நாம் எளிதாகக் கண்டு கொள்ளலாம் என்று இயேசு எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார். அதன்பின்,

லூக்கா (24:51) அவர்களை ஆசீர்வதிக்கையில் அவர்களை விட்டுப் பிரிந்து பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்.

மாற்கு (16:20) அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள்.
கொர்த்தியர் (1:23) நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்.

ரோமர் (6:6) நாம் இனி பாவத்துக்கு ஊழியம் செய்யாதபடிக்கு

ரோமர் (6:12) சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக மாற்கு (1:4) யோவான் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தான்.

மாற்கு (1:8) நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன் என்று பிரசங்கித்தான்.

இவ்வாறாக உலக முழுவதும் பல இடங்களையும் சுற்றி பல்வேறு விதமாகப் பிரசங்கம் செய்து அனைத்து ஜாதியிலும் அநேகம் பேருக்கு ஞானஸ்நானம் செய்து புனிதர்களாக அதாவது முட்டாள்களாக மாற்றினார்கள். தன் வாழ்நாளிலேயே இயேசுவால் பன்னிரெண்டு பேர்களை மட்டுமே பாவத்தைப் போக்கிப் புனிதர்களாக மாற்ற முடிந்தது. ஆனால், இயேசுவால் புனிதர்களாக மாற்றப்பட்ட பன்னிரெண்டு சீடர்களும் உலக முழுவதும் பெரும்பான்மையான மக்களைப் புனிதர்களாக, அதாவது முட்டாள்களாக மாற்றி இயேசுவுக்குள் பலப்படுத்தினார்கள். ஒருவன் ஸ்நானம் பெற்று முழுமையான இயேசுவின் விசுவாசியாக அதாவது கிறித்தவனாக மாறிவிட்டான் என்று சொன்னால் அவன் ஒரு முழு முட்டாளாக மாறிவிட்டான் என்றே அர்த்தம்.

ரோமர் (5:14) ஆதாம் முதல் மோசே வரைக்கும் ஆதாமின் மீறுதலுக்கொப்பாய் பாவஞ் செய்தவர்களையும் ஆட்கொண்டது.

1. யோவான் (3:8) பாவஞ் செய்கிறவன் பிசாசினாலுண்டாகிறான். ஏனெனில், பிசாசானவன் ஆதி முதல் பாவஞ் செய்கிறான். பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். ரோமர் (16:20) சீக்கிரமாய் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப் போடுவார்.

ஆதியிலேயே சாத்தானுடைய செயல்பாடுகளால் பூமியில் பாவம் உண்டாயிற்று. அந்தப் பாவத்தைப் போக்கவே இயேசு பிறந்து வர வேண்டியதாயிற்று. சாத்தானால் உண்டான ஞானத்தை, ஸ்நானம் செய்து ஒவ்வொருவருடைய பாவத்தை அதாவது அறிவைப் போக்கி அவர்களை இயேசுவுக்குள் பலப்படுத்தினாலும் ஞானஸ்நானம் பெற்றவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பாவியாகவே அதாவது அறிவாளியாகவே பிறக்க ஆரம்பித்து, இதனால் ஞானஸ்நானம் பெற்று கிறித்துவின் விசுவாசியாக மாறிய ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையை சர்ச்சுக்குக் கொண்டு சென்று அந்தக் குழந்தையின் ஞானத்தை ஸ்நானம் செய்து அதனுடைய பாவத்தை - அறிவைப் போக்கி இயேசுவின் விசுவாசியாக்கி, கிறித்தவனாக மாற்றி வீட்டுக்குக் கொண்டுவரும் நிகழ்ச்சியானது தொடர்ந்து நடந்து வருகின்றது என்ற விஷயம் எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும். ஆதாம், ஏவாள் காலத்திலிருந்தே இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை உண்மையென்று பைபிளும் ஒப்புக் கொள்கின்றது. அப்படியானால், பாவத்தை - அறிவை நிரந்தரமாகப் போக்கும் வழிதான் என்ன? அறிவை உண்டாக்கிய சாத்தானை நசுக்கி அழிப்பதுதான் அதற்கு ஒரே தீர்வு. அப்படியானால் சாத்தானை அழிப்பதற்கு இயேசு மறுபடியும் பிறந்து வரவேண்டுமே. அதுவும் சீக்கிரமாய் வரவேண்டுமே.

(வெளி 22:20) இவற்றைச் சாட்சியாக அறிவிக்கிறவர் மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே வாரும்.

சாத்தானை நிரந்தரமாக அழித்து, பூமியின் மேலுள்ளோரின் பாவத்தை அதாவது அறிவை நிரந்தரமாகப் போக்கி அவர்களை நிரந்தர முட்டாள்களாக மாற்றி இரட்சிக்க பரம பிதாவாகிய இயேசு மீண்டும் சீக்கிரமாய் பிறந்து வர தயார் ஆகிவிட்டார். பாவத்தை, அதாவது அறிவை நிரந்தரமாகப் போக்கிக் கொள்ள நீங்கள் தயாரா? இயேசுவே சீக்கிரமாய் வாரும். ஆமென்.

கிறித்தவர்களும், கிறித்தவ மதபோதகர்களும் மற்றவர்களைப் பாவிகளே என்று அழைப்பதற்கான காரணமும், இயேசு விரைவில் வருகிறார் என்று கூறுவதன் காரணமும் எல்லோருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறோம்.

-------------------- ஆய்வாளன் ”உண்மை” 1-15 2012 இதழில் எழுதிய கட்டுரை

1 comments:

jamessamuel said...

tharcheyalaga intha bloagai parka vendi vandhathu paavathai kurithu yezhuthiyathai vaasikka nerittathu vedhathai sariyanamuraiyil vaasikatha kuraiu inke kankirathu vedham rendu vidhamana ragasiyathai therivikkirathu ontru sariirathayum innontru aavikuriayathum ithai puriamal vaaikkuvanthabadi yezhudhuvathental biblai ariyadha makkaluku sollalam.