Search This Blog

31.1.11

இந்துக்களே வடகலையும், தென்கலையும் ஒன்றாகச் சேர்க்க முடிந்ததா?

இந்துக்களே, ஒன்று சேர்வீர்! என்று சொல்லும் கூட்டமே!
முதலில் வடகலையும், தென்கலையும் ஒன்றாகச் சேர்க்க முடிந்ததா?
திருச்சி நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவர் கேள்வி

இந்துக்களே, ஒன்று சேருங்கள் என்று சொல்லும் இராமகோபாலன் கூட்டமே முதலில் வடகலையையும், தென்கலையையும் உன்னால் ஒன்றாக சேர்க்க முடிந்ததா?என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

திருச்சியில் 8.1.2011 அன்று நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டையொட்டி இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

காஞ்சிபுரம் யானைக்கு நாமம்...!

கடவுளுக்காக காஞ்சிபுரம் கோயிலுக்கு யானை கொடுத்தார்கள். அந்த யானைக்கு நாமத்தைப் போட்டார்கள். யானைக்கு வடகலை நாமத்தைப் போடுவதா? தென்கலை நாமத்தைப் போடுவதா? என்று இந்தச் சண்டை 150 வருடங்களாக நடக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு வருகிறது. வெள்ளைக்கார நீதிபதிக்கு வடகலை என்றாலும் தெரியவில்லை. தென்கலை என்றாலும் தெரிய வில்லை. ஏன் இந்த இரண்டு பிரிவினரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். நாமம் என்றால் என்ன? பிரிவி கவுன்சிலில் பிரிட்டிஷ் நீதிபதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நாமத்தைப் பற்றித் தெரியாது.

புத்திலிசாலி வழக்குரைஞர் ஒருவர் நீதிபதியிடம் விளக்கி சொன்னார், மைலார்டு! நீதிபதி அவர்களே, இவர்கள் இரு பிரிவினருக்கும் ஏற்பட்டுள்ள சண்டைலு க்கும் ரு க்கும் ஏற்பட்டுள்ள வழக்கு சண்டை என்று சொன்னாராம். ஆங்கில எழுத்து Y என்பது பாதம் வைத்த நாமம். U என்பது பாதம் வைக்காத நாமம் என்று சொன்னாராம். அன்றைக்கு ஏற்பட்ட இந்த வழக்குச் சண்டை இன்றைய வரைக்கும் தீரவில்லை.

இந்துக்கள் முதலில் ஒன்றாக இருக்கிறீர்களா?

இந்து மதம் ஒரே மதம் என்று சொல்லுகின்றான். இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லு கின்றான். இந்துக்களை ஒன்று சேர்ப்பது அப்புறம் இருக்கட்டும். வடகலைக்காரரையும், தென்கலைக் காரரையும் ஒன்று சேர்க்காத உன் மதம், என்ன மதம்? எச்சக்கலை மதம் அல்லவா, உன் மதம்? (சிரிப்பு-கை தைட்டல்).

தந்தை பெரியார் அவர்கள் சொன்ன கருத்தை யாராவது எள்மூக்கு முனையளவுகூட மறுத்துவிட முடியுமா? தந்தை பெரியாருடைய கருத்து உலகம் பூராவும் பரவுகிறது என்று சற்று நேரத்திற்கு முன்பு சொன்னோம். இதோ என்னுடைய கையிலே இருக்கின்ற ஆதாரம்-நவீன இந்தியாவை உரு வாக்கியவர்கள்- என்கிற புத்தகம் இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஒரு உயர் ஜாதியைச் சார்ந்தவர். எங்களுக்கு ஜாதிப் பிரச்சினையைச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவர் பெரியார் கருத்துக்கு மாறுபட்டவர், பெரியாரிஸ்ட் அல்ல.

பெரியாரைப் புறந்தள்ள முடியவில்லை

பெரியாரிஸ்டாக அல்லாதவர்கள்கூட இன்றைக்குப் பெரியாரைப் புறந்தள்ள முடியவில்லை. (கைதட்டல்) பெரியாரை மறைத்துவிட முடிய வில்லை. பெரியாரைக் கொண்டுவர வேண்டி யிருக்கிறது.


எப்படி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நோய்க்கு உரிய மருந்தைத் தேடுவார்களோ அதே போல கடவுள், மதம், ஜாதி என்ற நோய்க்கு உரிய மருந்தைத் தேடுகிறார்கள் என்றால் அதுதான் பெரியார் என்கிற தத்துவம் (கைதட்டல்). ராமச்சந்திர குகா என்பவர்தான் மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இண்டியா என்ற புத்தகத்தை எழுதி யிருக்கின்றார்.

ஆங்கில நூலில் பெரியார் பற்றி....

19 முக்கிய நபர்களைப் பற்றி எழுதியிருக்கின்றார். முக்கியமாக அவர் தேர்ந்தெடுத்தது-ஒன்று, சமுதாயத்துறையிலே ஜோதிபா ஃபுலே டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர். அதே வரிசையிலே தென்நாட்டிலேயிருந்து ஒரே ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கின்றார். அவர்தான் அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் என்று மிகத்தெளிவாக இந்த நூலிலே பெரியார் அவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.

இவ்வளவு காலம் ஆங்கில நூல்களிலே பெரியார் இடம்பெறுவதில்லை. பெரியார் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டு வந்தார். ஆனால் இன்றைக்கு முடியவில்லை. எவ்வளவு காலத்திற்கு அவர்களாலே தடுக்க முடியும்? தடுக்க முடிய வில்லை.

காற்றுக்குத் தடை போட முடியுமா?

காற்றுக்கு எப்படி ஒருவர் தடை போட முடியாதோ அதே போலத்தான் பெரியார் கொள்கைக்கும் எவரும் தடை போட முடியாது என்று சொல்லக்கூடிய அளவிலே இன்றைக்கு வந்திருக்கிறது.

The Radical Reformer E.V.Ramasamy என்று தலைப்பு கொடுத்திருக்கிறார். பெரியாரைப் பற்றிச் சொல்லும்பொழுது, தீவிரமான புரட்சியாளர் சீர்திருத்தவாதி-அவர்தான் புரட்சியாளர் என்று அர்த்தம்.

1938ஆம் ஆண்டிலிருந்து ஈ.வெ.ராமசாமி, பெரியார் என்று அழைக்கப்பட்டார். பெரியார் என்றால் தலைசிறந்த மாமனிதர். அதற்கு காரணம் பெண்களின் உரிமைக்காகப் போராடினார். மூடநம்பிக்கை ஒழிப்புக்காக அரும்பாடு பட்டார். கர்ப்பத்தடை-குடும்பக்கட்டுப்பாட்டை வலியுறுத்தினார். நாத்திகக் கருத்துகளை அறிவியல் உண்மைக் கருத்துகளை மக்களிடத்திலே எடுத்துச் சொன்னார். அதுமட்டுமல்ல; தென்னாட்டிலே இந்தியை கட்டாயமாகத் திணிக்கின்ற அந்த ஒரு பண்பாட்டுப் படை எடுப்பை எதிர்த்து மிகப்பெரிய அளவுக்கு ஒரு போராட்டத்தைத் தொடங்கி இறுதியிலே பெரியார் வெற்றி பெற்றார்.

பெரியாரின் தனிச் சிந்தனை

மேலும் பெரியார் அவர்கள் மிக ஆழமாக இராமாயணத்தைப் பற்றி சிந்தித்து விமர்சனம் செய்தார், எழுதினார், ஆய்வு செய்தார். யாருக்கும் இல்லாத துணிவோடு இராமாயணத்தை ஆய்வு செய்தார்.


பெரியாருடைய தனித்த சிந்தனையை, சிறப்பைப் பற்றி இந்த நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார். பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது ஒரு செய்தியை மிக அழகாகச் சொன்னார். பெரியாரின் போர் முறைக்கும், மற்றவர்களுடைய போர் முறைக்கும் இருக்கின்ற வித்தியாசம் ஒன்று.

பெரியாரின் போர் முறை

பெரியாரின் போர் முறை இருக்கிறதே அது மூலபலத்தைத் தெரிந்து முறியடிப்பதுதான் பெரியாரின் போர் முறை என்று சொன்னார். அதாவது நேரடியாக இருக்கிற எதிரியைவிட அந்த மூலம் எங்கேயிருக்கிறது, நோய் நாடி நோய் முதல் நாடக்கூடியது-அந்த அடிப்படையிலே போகக் கூடியவர் அவர்.

பார்ப்பனர்களுக்கு புரசீஜர் கோட்

ஜாதி எப்படியிருக்கிறது? ஜாதிக்கு என்ன அடையாளம்? பார்ப்பனர்களைப் பொறுத்த வரையிலே சங்கராச்சாரியார் கொஞ்ச நாள்களுக்கு முன்பு சொன்னார். சங்கராச்சாரி சொன்னது மட்டுமல்ல; அவர் சனாதனத்திலே- ஆத்திகத்திலே சங்கராச்சாரியார் சொன்னார். அரசியலிலே இருந்த ராஜகோபாலாச்சாரியார் சொன்னார். எப்பொழு தெல்லாம் பார்ப்பனர்களுக்கு சங்கடங்கள் வருகிறதோ. அப்பொழுதெல்லாம் வெளியே வருவதற்கு அவர் என்ன செய்ய வேண்டும் என்றால் புரசீஜர் கோட் என்று எப்படி நாம் சட்டத்தைப் புரட்டுகின்றோமோ- அதே போல நமக்குள்ள புரசீஜர் கோட் என்னவென்றால் இராமாயணம் தான். அந்த இராமாயணத்திலே எப்படி நடந்திருக்கிறார்கள் என்று பாருங்கள். அந்த இராமாய ணத்தைப் பின்பற்றுங்கள் என்று சொன்னார்.

கனிமொழி அழகாகச் சொன்னார்

அதைத்ததான் கவிஞர் கனிமொழி அவர்கள் அழகாகச் சொன்னார். நம் கையைக் கொண்டே நம் கண்களைக் குத்த ஏற்பாடு செய்திருக்கின்றான். அதிலே விழிப்பாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை அவர்கள் சொன்னார்களே, அதற்கு என்ன அர்த்தம்.


நமது சமுதாயத்திலே துரோகிகளைப் பிடித்து நம்மால் விளம்பரப்படுத்தப்பட்டவர்கள், நம்மால் ஆளாக்கப்பட்டவர்கள் - நம் இனத்தவர்களையே பிடித்துக் காட்டுவார்கள்.

அதுதான் விபீஷ்ணன், அதுதான் அனுமார். உலக நாத்திகர் மாநாடு என்றவுடன், நடப்பதற்கு முன்னாலே அவர்களுக்கு அதிர்ச்சி.

பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்

பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்! என்று கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.

உலக நாத்திகர் மாநாட்டை இவ்வளவு பெரிதாக திருச்சியிலே நடத்துகிறார்களே என்ற ஆத்திரம் -பார்ப்பனர்களுக்கு. நான் காலையில் சென்ற பொழுது ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன்.

இராமாயண் பஜன் மேளாவாம்!

வருகிற 23ஆம் தேதி இந்து முன்னணியினுடைய தலைவர் ராமகோபாலய்யர் என்ன பேசுவார் என்றால் இராமாயண் பஜன் மேளா! என்று எழுதி வைத்திருக்கின்றார்கள்.

இந்திக்காரர்களுக்கு இந்தி மொழியில் சொல்லுகிறோம். வங்கத்தில் இருந்து வந்தவருக்கு அந்த மொழியில் சொல்லுகின்றோம். பஞ்சாப் காரருக்கு பஞ்சாப் மொழியில் சொல்லுகின்றோம். தெலுங்கு மொழிக்காரர்களுக்கு தெலுங்கு மொழியில் சொல்லுகிறோம் -அது வேறு. உடனே ஒரு மாற்று சொல்ல வேண்டும் என்பதற்காக இராமாயணத்திற்குச் செல்லு கின்றான். நம்முடைய மக்களை அடிமைப்படுத்த வேண்டும், நம் மக்களுக்கு மூளைச் சாயத்தை ஏற்ற வேண்டும் என்பதற்காக இராமாயணத்தைச் சொல்லுகின்றான். இராமாயண் பஜன் மேளா? நடைபெறும் என்று எழுதி வைத்திருந்தான். நாங்கள் என்ன சாதாரண ஆளா? மாவட்ட தலைவரைக் கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே கூப்பிட்டேன். 24ஆம் தேதி நீங்கள் ஒரு விளம்பரம் போடுங்கள்! (கைதட்டல்).

இராமாயணப் புரட்டைப் பற்றி வீரமணி பேசுவார்!

வீரமணி இராமாயணப் புரட்டைப் பற்றி திருச்சியில் ஓர் ஆராய்ச்சி உரையாற்றுவார் என்று போடுங்கள் என்று சொன்னேன் (கைதட்டல்). நான் கன்னா, பின்னா என்று யாரையும் தனிப்பட்ட முறையில் பேசமாட்டேன். இராமாயணத்தில் இராமன் பிறந்த ஒரு கதையைச் சொன்னாலே போதும் (பலத்த கைதட்டல்). அதே போல சீதைக்கு ஏற்பட்ட ஆபத்து என்ன என்று சொன்னாலே தெரிந்துவிடும்.

அண்ணா அழகாகச் சொன்னார்

அண்ணாவே ரொம்ப அழகாகச் சொன்னார். கம்பன் பாடியதையே எடுத்துச் சொன்னார். மனத்தினால், வாக்கினால் மறு உற்றேன் எனினும் சினத்தினால் தீயேன்! என்று கம்ப இராமாயணத்தில் உள்ளதை எடுத்துச்சொன்னார்.

சீதையைப் பற்றி இராமன் சந்தேகப்படுகின்றான். சீதை சொல்லுகிறாள்: நான் மனதால் தப்புப் பண்ணவில்லை. அதே மாதிரி வாக்கினால் சொல்லினால் நான் தப்புப் பண்ணவில்லை. சினத்தினால் தீ சுடும் என்று சொல்லுவார்கள்.

அண்ணா இந்த இடத்தில் ரொம்ப அழகாகச் சொன்னார். அண்ணா, தந்தை பெரியார் பள்ளிக் கூடத்தில் படித்தவரல்லவா? ராமகோபாலய்யருக்கு வெட்கம் இல்லையே!

சமஸ்கிருதத்தில் மனோ, வாக்கு, காயம். மன தினால் தப்பு பண்ணவில்லை. உள்ளத்தினால் தப்பு பண்ணவில்லை. வாக்கினாலே-சொல்லினாலே தப்பு பண்ணவில்லை. காயத்தையும் சேர்த்துத்தானே கம்பன் சொல்லியிருக்க வேண்டும்.

ஏன் கம்பன் காயத்தை விட்டான்? அண்ணா சொன்னார். ரொம்ப அழகாக-கம்பன் காயத்தைத் தெரிந்தே விட்டுவிட்டான் கவிதையிலே-காரணம் காயம் காயப்பட்டுவிட்ட காரணத்தினாலே என்று சொன்னார் (கைதட்டல்).

இந்த ஒன்றைச் சொன்னால் போதாதா? ராமகோபாலய்யருக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இராமாயணத்தை இனிமேல் எவராவது கையிலே தூக்குவார்களா?

-----------------------தொடரும் -"விடுதலை” 30-1-2011

2 comments:

கோவி.கண்ணன் said...

//இந்துக்களே வடகலையும், தென்கலையும் ஒன்றாகச் சேர்க்க முடிந்ததா? தமிழ் ஓவியா//

ஜெயலிதாவையும் போயாஸ் தோட்டத்து பூசாரியையும் ஒன்றாகப் பார்த்தவர்கள் நாங்கள்

தமிழ் ஓவியா said...

நீங்க பார்க்காதது எதுவும் இருந்தால் சொல்லுங்க கோவி.