Search This Blog

4.1.11

தமிழ்ப் புத்தாண்டும் - பொங்கல் விழாவும்!



பொங்கல் விழாவை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கான பொருள்களை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தை முதல்நாள் - தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் விழாவின் மாட்சியைக் குறித்து பெருமிதமாக எடுத்துக் கூறியுள்ளார்.

தமிழர்களின் மொழி, நாகரிகம், இன செழுமையை எண்ணிப் பார்த்து பூரிப்படைந்து தமிழர் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
நமக்கு முன்பே மறைமலை அடிகளார், திரு.வி.க. போன்ற தமிழ்ச் சான்றோர் ஒன்று கூடி தைமுதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை முடிவு செய்தனர். சித்திரையில் வரும் புத்தாண்டு வடமொழியை அடிப்படையாகக் கொண்டது. எனவே, ஆங்கில, தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகள் பேசுபவருக்கு ஒரு புத்தாண்டு இருப்பதுபோல, தமிழர்களுக்கும் ஒரு புத்தாண்டு வேண்டும் என்ற நோக்கில் பெரும் புலவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவு
இது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒளிர் விளக்குகளை மின்னச் செய்து கொண் டாடுங்கள் என்பது - ஏதோ கார்த்திகைத் தீபம் போல் என்று யாரும் கருதத் தேவையில்லை.
பொதுவாக விழா என்று சொன்னால், வண்ண வண்ண விளக்குகளால் தோரணங்கள் கட்டி மகிழ்ச்சி அடைவதில்லையா? அந்தக் கண்ணோட்டத்தில்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார்.

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எடுத்துச் சொன்ன ஒரு கருத்து ஆழமானது - வரலாற்று ரீதியானது.

தமிழர்களுக்கென்று ஒரு ஆண்டு இருக்கவேண்டாமா? இதில் என்ன துவேஷம் இருக்கிறது? உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், சமஸ்கிருதத்தில் பெயர்களை வைத்துக் கொண்டு அதுதான் தமிழ் ஆண்டுகள் என்று சாதிப்பதில்தானே துவேஷத்தின் புயலே இருக்கிறது.

சென்னை மாகாணத்தில் உள்ள பார்ப்பனர்கள் துவேஷமாக இருந்துகொண்டே, மற்றவர்களைப் பார்த்துத் துவேஷிகள் என்று கூறுவார்கள் என்றார் லாலாலஜபதி. அதைத்தான் இந்த இடத்திலே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி 2011 ஆம் ஆண்டுக்கு நாள்காட்டி வெளியிட்டுள்ளது. தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு அரசாங்கம் சட்டம் போட்டு அறிவித்ததைத் தூக்கி எறிந்துவிட்டு, பூணூல் சட்டத்துக்கு முன் அரசாங்கச் சட்டம் எம்மாத்திரம் என்று சவால் விடுவதுதானே இதன் பொருள்?

பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள் இந்த இடத்தில் நின்றுதான் உரத்த முறையில் சிந்திக்கவேண்டும். அப்பொழுதுதான் பார்ப்பனர்களின் தமிழ் விரோத - தமிழின விரோத குருதித் துடிப்பை தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

அறிஞர் அண்ணா அவர்கள் பார்ப்பனர்களின் இந்த உணர்வை மிக அழகாகப் படம் பிடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும் தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்கநூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமி ழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழி யெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான்.

(திராவிட நாடு, 2.11.1947).

இதைவிடப் பார்ப்பனர்களை எப்படிதான் அடையாளம் காட்ட முடியும்?

தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று முடிவு செய்ததுகூட கலைஞர் அல்லவே - அவராகத் திணித்ததில்லையே! மறைமலை அடிகள், திரு.வி.க., கா. நமச்சிவாயனார், கா.சு. பிள்ளை போன்ற பெருமக்கள் அல்லவா கூடி முடிவெடுத்தனர்? அதற்கு எந்த உள்நோக்கத்தைக் கற்பிக்க முடியும் இந்தப் பார்ப்பனர்கள்?

சோ போன்ற பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்ளாததாலேயோ, தினமணி வெளியிட்டுள்ள நாள்காட்டி வேறு விதமாகக் குறிப்பிடுவதாலேயோ தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு இல்லாததாக ஆகிவிடப் போவதில்லை.

தமிழர்கள் தை முதல் நாளை - தமிழ்ப் புத்தாண்டாக, தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளாக, பொங்கல் விழாவாக பெரும் ஆர்வத்தோடும், ஆரவாரத்துடனும், வெளிச்சமாகக் கொண்டாடுவதன் வழியாகத்தான் இந்தப் பார்ப்பனர்களுக்குப் பாடம் கற்பிக்க முடியும். தொடக்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளாத சோ ராமசாமி, பிறகு அதனை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட வில்லையா?

அதேபோல்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் அளவுக்குத் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாகவும், தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கலைப் பெரு விழாவாகவும் மிகமிகச் சிறப்பாகக் கொண்டாடுவோம். அதன்மூலம் ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பை துப்புரவாக வீழ்த்துவோம்!

வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!!

---------------"விடுதலை” தலையங்கம் 3-1-2011

0 comments: