Search This Blog

5.1.11

கோயிலும் வியாபார நிலையம்தானே?


இந்தியா

இந்தியாவில் 77 விழுக்காடு மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் கூட செலவழிக்க இயலாதவர்களாக இருப்பதாக இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அர் ஜுன் சென்குப்தா அறிக்கை கூறுகிறது.


அதே நேரத்தில் இந்தியாவின் கோயில்களில் சொத்துகள் குவிந்து கிடக்கின்றன. நகைகளின் மதிப்பு சொல்லியடங்காது. நேற்று ஒரு தகவல். ஜனவரி முதல் தேதி திருப்பதியில் கூடிய பக்தர்களின் எண் ணிக்கை ஒன்றேகால் லட்சமாம். அவர்களின் மூலம் கிடைத்த உண்டியல் வசூல் மட்டும் 3.80 கோடி ரூபாயாம். இது அல்லாமல் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளன. திருப்பதி கோயிலுக்குச் சொந்தமான தங்கக் கட்டிகளும் வங்கிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த வருமானம் போதாது என்று வேறு மாநிலங்களிலும் திருப்பதி கோயிலுக்குக் கிளைகள் உண்டாக்கப் பட்டு வருகின்றன.


முதலாளிகளில் பெரிய ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் போன்றவற்றுக்குப் பல ஊர்களிலும் கிளைக் கடைகள் (Branches) வைப்பது இல்லையா? கோயிலும் வியாபார நிலையம்தானே? அதனால்தான் கிளைக்கடைகளை நடத்தி வருகின்றனர்.


ஊட்டச் சத்துக் குறைவால் அவதிப்படும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்தியாவில் 46 விழுக்காடு. கிழக்கு - ஆப்பிரிக்காவைச் சேர்ந்த குழந்தைகளின் விகிதத்தை விட இது அதிகம் (அங்கு 35-40 விழுக்காடுதான்)


அய்.நா.வின் யுனி செஃப் அமைப்பும், இந்தியாவின் சுகாதார அமைச்சகமும் இணைந்து தந்த புள்ளி விவரம் இது.


மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜாம்புவார் மாவட்டத்தில் மட்டும் கடந்த இரு மாதங்களில் ஊட்டச் சத்துக் குறைவு காரணமாக 28 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனவாம்.


1997-2001 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் கடன் தொல்லையால், விவசாயிகள் 1,99,132 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.


1991-2001 ஆம் ஆண்டுகளில் 80 லட்சம் விவசாயிகள் இந்தியாவில் விவசா யத்தை விட்டு வெளியேறியுள்ளனர்- என்று பன்னாட்டு உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


உண்மையிலே இந்தியா வறுமை நாடா? இயற்கை வளங்கள் இல்லாத நாடா? என்றுகேட்டால், இல்லை என்பதுதான் அழுத்தமான பதிலாக இருக்க முடியும்.
கோயில்களில் முடங்கிக் கிடக்கும் தங்கங்களையும், வைரங்களையும் பறிமுதல் செய்து ரிசர்வ் வங்கிக்குக் கொண்டு வர வேண்டும். கோயில்களுக்கு வைப்பு நிதி ஏன்? கோயில் சாமிகள் சாப்பிடுகின்றனவா? - அசைகின்றனவா? அவற்றிற்கு எதற்காக இந்தத் திரண்ட சொத்துகள்? அவற்றை அரசுடைமை ஆக்கி மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தினால் தலை கீழான பொருளாதார மாற்றம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுமே! அரசு செய்யுமா?

------------------- மயிலாடன் அவர்கள் 3-1-11 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: