Search This Blog

20.10.13

ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டில் பெரியார் சொற்பொழிவு

ஜமீன்தாரல்லாதார் மகாநாட்டில் சொற்பொழிவு

தோழர்களே! மொத்த விஸ்தீரணத்தில் மூன்றிலொரு பாக பரப்புக்கு மேல் ஜமீன் முறை ஆக்ஷியிலிருக்கும் இந்த சேலம் ஜில்லாவில் முதல் முதலாக இன்று இங்கு ஜமீன்தாரல்லாதார் மகாநாடு ஒன்று கூட்டப்பட்ட தானது எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும்.

நாம் உலக பொதுஜனங்களுக்குச் செய்யவேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் எல்லாம் இம்மாதிரியாக பல அல்லாதார்கள் மகாநாடுகள் கூட்டி அவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில் தான் பெரிதும் அடங்கியிருக்கின்றது. இன்னும் இதுபோலவே பல மகாநாடுகள் கூட்ட வேண்டியிருக்கிறது. சுயமரியாதை மகாநாடுகள் கூட்டப்படும் இடங் களில் இம்மாதிரி மகாநாடுகள் அடிக்கடி கூட்டப்படுமென்று எதிர்பார்க்கி றேன். உதாரணமாக லேவாதேவிக்கார்கள் அல்லாதார் மகாநாடு, முதலாளி கள் அல்லாதார் மாநாடு, தொழிற்சாலை சொந்தக்காரர்கள் அல்லாதார் மகா நாடு, வீடுகளின் சொந்தக் காரர்கள் அல்லாதார் மகாநாடு, நிலச்சுவான்தார் அல்லா தார் மகாநாடு, மேல்ஜாதிக்காரர்கள் அல்லாதார் மகாநாடு, பணக் காரர்கள் அல்லாதார் மகாநாடு என்பது போன்ற பல மகாநாடுகள் கூட்டி இவர்களின் அக்கிரமங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி அவைகளை ஒழிக்கச்செய்ய வேண் டியது நமது கடமையாகும்.

உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த தன்மைகளால், எந்த எந்த மனிதக் கூட்டங்களால் மனிதசமூகத்திற்கு இடஞ்சல்களும், சமத்துவத் திற்கும், முற்போக்குகளுக்கும் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக்கட்டைகளும் இருக்கின்றனவோ அவைகளெல்லாம் அழிந் தொழிந்து என்றும் தலை தூக்காமலும், இல்லாமலும் போகும்படி செய்ய வேண்டியது தான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லக்ஷியமாகும்.

மனித சமூகத்துக்கு உள்ள தரித்திரத்திற்குக் காரணம் செல்வவான் களேயாகும். செல்வவான்கள் இல்லாவிட்டால் தரித்திரவான்களே இருக்க மாட்டார்கள். மேல்வகுப்பார் இல்லாவிட்டால் கீழ்வகுப்பார் இருக்கவே மாட்டார்கள். ஆதலால் தான் இம்மாதிரி அல்லாதவர்கள் மகாநாடு கூட்ட வேண்டு மென்கின்றோம்.

இன்று ஏன் முதன்முதலாக ஜமீன்தார் அல்லாதார் மகாநாடு கூட்டி னோமென்றால் இன்றைய உலக ஆதிக்கம் அவர்கள் கையிலேயே இருந்து வருகின்றது. இதற்கு முன் இந்நாட்டு ஆதிக்கம் பார்ப்பனர்கள் கையிலேயே இருந்தது.

அதற்காகவே நமது இயக்கம் பல பார்ப்பனர் அல்லாதார் ஸ்தாபனங் களும், மகாநாடுகளும், வாலிபசங்கங்களும் புதிய முறையில் தோற்றுவித் தும் கூட்டுவித்தும் பார்ப்பனக் கொடுமைகளையும் மோசங்களையும் ஒரு வாறு பாமர மக்களுக்கு விளக்குவதில் முனைந்து நின்று வேலைசெய்ததின் பயனால் ஒரு அளவுக்குப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதில் வெற்றி பெற்றோம். ஆனால் அந்தப் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது என்கின்ற சந்தோஷத்தை அடைவதற்குள் அதற்குப்பதிலாக அதுபோன்ற கொடுமை யும் மோசமுமான ஜமீன்தார் ஆதிக்கம் தலைதூக்கி தாண்டவமாட ஏற்பட்டு விட்டது. முன்பிருந்த கெடுதியும் தொல்லையுமே பார்ப்பன ஆதிக்கம் என்னும் பேரால் இல்லாமல் ஜமீன்தார் ஆதிக்கம் என்னும் பேரால் இருந்து வருகின்றன.

பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் பிறவியின் காரண மாகவே பரம்பரை உயர்வுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளப்படு பவர்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் இன்றைய ஆட்சி முறைக்கு தூண்கள் போலவும் இருந்துவருகின்றவர்களாவார்கள். பார்ப்பனர் களைப் போலவே ஜமீன்தார்கள் என்பவர்கள் உலகத்துக்கு வேண்டாதவர் களும், உலக மக்கள் கஷ்டங்களுக் கெல்லாம் காரணமாயிருப்பவர்களுமா வார்கள்.

இந்த ஜமீன்தார்கள் எப்படி ஏற்பட்டார்கள்? எப்படியிருந்து வரு கின்றார்கள்? இவர்களது செல்வமும், மேன்மையும் எதற்குப் பயன்படுகின் றன? என்பவைகளை யோசித்துப்பார்த்தால் இவர்கள் உலகுக்கு வேண்டாத வர்கள் என்பதும், ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும் நன்றாய் விளங்கும்.

இன்றைய தினம் சாதாரணமாய் ஜமீன்தார்கள் என்றால் என்ன? என்று பார்ப்போமானால் ஒரு விஸ்தீரணமுள்ள பிரதேசத்தை சொந்தமாக உடைய வர்கள் என்றும், அந்த வீஸ்தீரணத்திலுள்ள பூமிகளுக்கு உள்ள வரி (கிஸ்தி) இந்த ஜமீன்தார்களுக்கே சேர்ந்தது என்றும் அதில் ஏதோ ஒரு பாகம் சர்க்கா ருக்குச் செலுத்தி விட்டு பாக்கியை தாங்களே அனுபவிப்பவர்கள் என்றும் தான் அருத்தமாய் இருந்து வருகின்றது.

பொதுவாக பூமிகளுக்குக் கிஸ்தி அதாவது நிலவரிகொடுப்பது என்பது எதற்காக வழக்கத்திலிருந்து வருகின்றது என்றால் பயிரிடும் மக்களின் நன்மைக்கும் பத்திரத்திற்குமான காரியங்களைச் செய்யவே பயிரில் ஒரு பங்கு கொடுக்கப் படுவதாகும். அது போலவே சர்க்கார் வாங்கும் நில வரிகளுக்கும் மற்றபடியான வரிகளுக்கும் சரியாகவோ, தப்பாகவோ ஒரு வரவு செலவுத்திட்டம் காட்டி அதன்படி படிப்பு, சுகாதாரம், நீதி, பத்திரம், போக்கு வரவு சாதனம் முதலிய காரியங்களுக்குப் பயன் படுத்தி வருவதாய்ச் சொல்லியும், கணக்கு காட்டியும் வருகிறார்கள். ஆனால் இந்த ஜமீன்தார்களால் குடிகளிடமிருந்து வாங்கும் நில வரிக்கும், வாரத்துக் கும் இது போல் குடி ஜனங்களுக்கு என்ன பிரதிப்பிரயோஜனம் இருந்து வருகின்றது? என்பதை நாம் முக்கியமாய் கவனிக்கவேண்டும். ஜமீன்தார் கள் தங்கள் வரும்படியில் சர்க்காருக்கு ஏதோ ஒரு சிறு பாகம் கொடுப்ப தாய்ச் சொல்லப்படுவதெல்லாம் குடிகளிடமிருந்து வரியை எப்படியாவது வசூலிப்பதற்கும், ஜமீன்தார்கள் என்ன அக்கிரமம் செய்தாலும் குடிகளால் ஜமீன்தாரர்களுக்கு ஆபத்து இல்லாமல் இருப்பதற்கும் கூலியாகவே ஒழிய மற்றபடி ஜமீன் குடி களுடைய நன்மைக்கு என்பதாக எண்ணங் கொண் டல்ல என்பதே என தபிப்பிராயம். இந்த ஜமீன்தாரர்களுக்கு இந்தப் பதவி வந்ததற்குக் காரணம் எல்லாம், ஆதியில் அன்னிய சர்க்கார் இத்தேசத்துக்கு வந்த போது அவர்களுக்கு வேண்டிய சௌகரியம் செய்து கொடுத்தும், இங்குள்ள எதிர்ப்புகளை அடக்கி ஒடுக்க உதவி செய்ததுமான காட்டிக் கொடுத்த காரியங் களுக்குத்தான் 'சன்மானமாய்' (லஞ்சமாய்) கொடுக்கப் பட்டதேயொழிய வேறில்லை.

இப்படிப்பட்ட இந்த ஜமீன்தாரர்களின் யோக்கியதையை நான் உங்களுக்கு அதிகமாய் சொல்லிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. அவர் களுடைய அருங் குணங்களில் எல்லாம் குடிப்பதும், கூத்திமார்கள் வைப் பதும், பந்தய சூது ஆடுவதும் தலை சிறந்த குணங்களாகும். மேலும் இப்பொ ழுது சிறிது காலமாய் அதாவது பார்ப்பன ஆதிக்கம் ஒடுங்க ஆரம்பித்த பின்பு அரசியல் தேர்தல்களை பணத்தின் மூலம் வியாபார முறையில் நடத்தி வெற்றி பெற்று ஆதிக்கமடைந்து பெருமை அடை வதையும், பணம் சம்பாதிப்பதையும் மற்றொரு அருங்குணமாய் கொண்டி ருக்கிறார்கள்.

மற்றபடி இவர்களிடம் என்ன யோக்கியதை இருக்கிறது? இவர்களால் தேசத்துக்கோ, மனிதசமூகத்துக்கோ என்ன பயன்? என்று பார்த்தால் ஒன்றும் இல்லை என்பது தெற்றென விளங்கும். இன்றைய ஜமீன்முறை நாளடைவில் எல்லா பூமியும் அவர்கள் கைக்கே போய்ச் சேரும்படியானதாகவும், எல்லா அதிகாரமும், பதவியும் அவர்கள் கைக்கே போய்ச் சேரும்படியான மாதிரி யிலும் தான் இருந்து வருகின்றது.

ஏனெனில் வரி கொடுக்க முடியாத பூமிகளும், வரிகொடுக்கவும், செலவுக்கும் வரும்படி போதாமல் இருந்துவரும் குடியானவனுடைய பூமிகள் முழுவதும், பணக்காரர்களாயிருக்கின்ற, ஜமீன்தாரர்களுக்குத் தான் நாளா வட்டத்தில் போய்ச் சேருகின்றதாய் இருக்கிறது. இந்தக் காரணத்தால் தான், ஒவ்வொரு ஜமீன்தாரர்களுக்கும் லக்ஷக்கணக்கான ஏக்கர் பூமிகள் இருந்து வருகின்றன. இதுபோலவே தேர்தல்களிலும், அது எப்படிப்பட்ட தேர்தலாய் இருந்தாலும், ஜமீன்தாரர்கள் தாராளமாய் 40000, 50000, ஒரு லட்சம் இரண்டு லட்சம், என்கின்ற கணக்கில் ரூபாய்களை வாரி இறைத்து எலக்ஷன்களில் வெற்றி பெற்றும், மற்றும் வேறு இடங்களில் வெற்றிபெற்ற வர்களுக்கு 1000, 5000 என்கின்ற கணக்கில் ரூபாய்களை கொடுத்து அவர் களை தங்கள் அடிமையாக்கியும், சகல பதவிகளையும், அதிகாரங்களையும் சுவாதீனப் படுத்திக் கொள்ளவும் முடிகின்றது. இந்த மாதிரி விலை கொடுத்து தங்களின் செல்வத்தின் பயனாயும் செல்வாக்கின் பயனாயும் பெற்ற பதவி யும் அதிகாரமும் ஆதிக்கமும் எந்த வழியில் உபயோகப்படுத்தினாலும் கேள்வி கேப்பாடு இல்லாமல் செலாவாணியாகி வருகின்றதைப் பார்க் கின்றோம்.

ஜமீன்தாரர்களின் நடவடிக்கைகளை நாம் சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இன்று யாரும் இல்லை என்றே நினைக் கின்றேன். சில ஜமீன்தாரர்கள் அவர்கள் எல்லைக்குள்பட்ட விஸ்தீரணத்தில் எந்தப் பெண் ருதுவானாலும் அவர்களே தான் முதலில் சாந்தி முகூர்த்தம் செய்ய வேண்டும் என்கின்ற (எழுதாத) சட்டம் அமுலில் இருந்து வருவது எனக்குத்தெரியும். இதில் ஒன்றும் அதிசயம் இருப்பதாக யாரும் நினைக்க வேண்டியதில்லை. இந்தச் சட்டம் சில மதகுருக்கள்மாருக்கும் இருந்து வருவது எனக்குத்தெரியும். இது தவிர தனது குடிஜனங்களிடம் இருக்கும் நல்லபெண், நல்லமாடு, குதிரை முதலியவைகள் ஜமீன்தாரர்களுக்கே சொந்தமானது என்கின்ற முறையும் சில இடங்களில் இருந்துவருவது எனக்குத் தெரியும்.

மற்றும் பல ஜமீன்தாரர்கள் சுகவாசமும், வெளிநாடு சுற்றுப் பிரயா ணமும் 100, 200 கணக்கான மனைவிகளும், வைப்பாட்டிகளும், ஆயிரம் இரண்டாயிரக் கணக்கான தாசிகள் விபசாரிகள் ஆகியவர்கள் சம்மந்தமும் வைத்துக் கொண்டிருப்பதுடன் 40, 50, 100, 200 குதிரைகளும் 10, 20, 30 மோட்டார் கார்களும், 10, 20 அய்யர்கள் என்று பெயர்வழங்கும் மாமாக் களையும் உடையவர்களாக இருந்துகொண்டு நெல்லு, மரத்தில் காய்க் கின்றதா? கொடியில் காய்க்கின்றதா? செடியில் காய்க்கின்றதா? என்றுகூட தெரியாதவர்களும் வேஷ்டிகள் செடியில் காய்க்கின்றதா? அல்லது தரியில் நெய்யப்படுகின்றதா? என்று தெரியாதவர்களும் ஏராளமாய் இருக்கிறார்கள். இவர்கள் வாழ்க்கை நிலையை அவர்களது பள்ளிக்கூட வாழ்வில் இருந்தே கவனித்தால் பெரும்பாலும் ஒவ்வொருவர்களுடைய யோக்கியதையும் விளங்கும். சாதாரணமாக சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டோ மேயானால் வருஷமொன்றுக்கு ஜமீன்தாரர்களுக்கு குடிகளிடமிருந்து சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் வரையில் கிஸ்தி (நிலவரி) கிடைக்கின்றது. இதில் அரைக்கோடி ரூபாய் மாத்திரமே இவர்கள் சர்க்காருக்கு செலுத்தி விட்டு பாக்கி இரண்டுகோடி ரூபாய்களை இந்த ஜமீன்தாரர்கள் அனுபவித்து வருகின்றார்கள். இந்த இரண்டு கோடி ரூபாயில் 100 க்கு 90 பாகம் ரூபாய்கள் நான் மேல் குறிப்பிட்ட வழியிலேயே பாழாக்கப்படுகின்றன.*

இந்த நிலவரியானது சென்னை அரசாங்கத்தாருக்கு மாகாணம் பூரா விலும் கிடைக்கும் நிலவரிக்கு 3-ல் ஒருபங்குக்கு மேலான தென்றே சொல்லுவேன். இந்தப்படி விளைவின் பயனாய் உண்டான செல்வம் அது வும் எத்தனை ஏழைக்குடியானவன், விவசாயக் கூலிக்காரன் ஆகியவர்கள் பெண்டு பிள்ளைகள் சகிதம் தங்கள் சரீரங்களை தினம் 8-மணி முதல் 15-மணி வரையில் வியர்வைப் பிழிந்து சொட்டு சொட்டாய் சேர்த்த ரத்தத்திற்கு சமானமான செல்வத்தை, ஒரு கஷ்டமும், ஒரு விபரமும் அறியாதவர்களும், ஒரு பொருப்பும் இல்லாதவர்களுமான ஜமீன்தார்கள் சர்க்காரில் லைசென்சு பெற்ற கொள்ளைக்கூட்டத்தார்கள் போல் இருந்து கொண்டு மக்கள் பதரப்பதர வயிறு வாய் எரிய எரிய கைப்பற்றி பாழாக்குவதென்றால் இப் படிப் பட்ட ஒரு கூட்டம் உலகில் இருக்கவேண்டுமா? என்றும் இவர் களின் தன்மையையும், ஆதிக்கத்தையும் இன்னம் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜன சமூகம் சுயமரியாதையை உணர்ந்த-ஜனசமூகமாகுமா? என்பதைப் பற்றியும் யோசித்துப்பார்க்கும்படி வேண்டிக் கொள்ளுகிறேன். சாதாரண மாக ஜமீன் என்கின்ற மேற்கண்ட தன்மை, நாட்டில் அடி யோடு இல்லாமல் இந்த லாபங்களையும் அதாவது இந்த 2 கோடி ரூபாய் களையும் சர்க்காரே நேராய் அடைவதாய் இருந்தால் அதனால் மக்களுக்கு எவ்வளவு பயன் ஏற்படுத்தலாம் என்பதையும் யோசிக்க வேண்டுகிறேன்.

ஆதலால் மேல்ஜாதி, கீழ்ஜாதி முறை கூடாதென்றும், குருக்கள் முறை கூடாதென்றும் எப்படி நாம் பல துறைகளில் வேலை செய்கின்றோமோ அது போலவேதான் ஜமீன்தாரன்-குடிகள் என்கின்ற தன்மையும், முறையும் கூடாதென்று வேலைசெய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம் என்ற இச்சிறு வார்த்தைகளோடு இந்தத்தீர்மானத்தை நான் பிரேரே பிக்கிறேன்.

தீர்மானங்கள்

1. உலக செல்வத்தை ஒரேபக்கம் சேர்க்கும் முறையை ஒழிப்பதற்கும், உலகப் பொருளதார, சமத்துவத்துக்கும் பாடுபடுகிற மக்கள் அதன் பயனை சரிவர அடையவேண்டும் என்பதற்கும், ஜமீன்தார் முறையானது பெருத்த கெடுதியாகவும், தடையாகவும் இருந்துவருவதால் ஜமீன்தார் தன்மையை அடியோடு ஒழிக்கப் பகுத்தறிவுக்கு ஏற்றவழியிலும், பொருளாதார சமத்துவ நியாய வழியிலும் சுயமரியாதை இயக்கம் பாடுபடவேண்டுமென்று இம் மகாநாடு தீர்மானிக்கிறது.

பிரேரேபித்தவர்:- ஈ.வெ.ராமசாமி

ஆமோதித்தவர்:-கே.வி.அழகர்சாமி

--------------------------------- 20.08.1933 இல் இராசிபுரத்தில் நடைபெற்ற சேலம் ஜில்லா ஜமீன்தாரால்லாதார் மாநாட்டில் மாநாட்டின் முதல் தீர்மானத்தை முன்மொழிந்து  ஈ.வெ.ராமசாமி அற்றிய உரை."குடி அரசு' - சொற்பொழிவு - 27.08.1933

12 comments:

தமிழ் ஓவியா said...


ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை


சென்னை, அக்.20-தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் பட்டாசு கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கை களை மேற்கொள்கின் றனர். இதனை மீறி ரயில் களில் பட்டாசு கொண்டு செல்பவர்களுக்கு அதிக பட்சம் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட லாம்.
ரயில்களில் பட்டாசு களை கொண்டு செல்வ தால் ஏற்படும் பிரச் சினைகள் குறித்து ரயில்வே காவலர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பொதுமக்க ளிடம் துண்டுப் பிரசுரங் கள் வழங்கியும், ஒலிப் பெருக்கி மூலமும் விழிப் புணர்வு பிரச்சாரங்கள் செய்வார்கள்.

மேலும் பயணிகளின் உடைமைகளை ஸ்கேனர் கருவிகள் மூலம் சோதனை செய்து பட்டாசுகள் இருந்தால் அவற்றைக் கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்படு கிறது. இதே போன்று பார்சல் பிரிவிலும் சந்தேகத்திற்கு இடமான பார்சல்களை காவல் துறையினர் சோதனை செய்து பட்டாசுகள் இருந்தால் அவற்றை அனுமதிப்பதில்லை.
இந்த பட்டாசு சோத னைகளில் காவல் மோப்ப நாய்களும் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றை மீறி ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பட் டாசுகளைக் கொண்டு செல்லும்போது, அதனை காவலர் கண்டுபிடித்து விட்டால், இந்திய ரயில்வே சட்டத்தின் படி, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஆயி ரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம்.

எனவே ரயில்களில் பயணம் செய்யும் பயணி கள், பட்டாசுகளை தங் களுடன் எடுத்துச் செல் லாமல் முன்னெச்சரிக் கையாக நடந்து கொள் வது அவர்களுக்கும் நல் லது, ரயிலில் பயணம் செய்யும் ஆயிரக்கணக் கான பயணிகளுக்கும் நல்லது.

தமிழ் ஓவியா said...


பார்ப்பான் அடிக்கும் கொள்ளை!

பிள்ளை பிறந்தது. ஜாதகம் கணிக்க வேண் டும். அய்யருக்கு தட் சணை கொடுக்க வேண் டும். பிறகு பிள்ளை பிறந்த தீட்டுப் போக்க வேண்டும். கூப்பிடு மேற்படியானை; வை தட்சணை! பிள்ளைக்கு அய்ந்து வயதாயிற்று; கூப்பிடு அய்யரை; கொடு பணத்தை.

பைய னுக்குக் கலியாணம்! அழை அய்யரை: சாந்தி முகூர்த்தம்; மேற்படி மேற்படி! பெண்டாட்டி ஏழு மாதக் கர்ப்பவதி மேற்படி மேற்படி பிள்ளை பிறந்தது; மேற்படி மேற்படி பிள்ளை செத்தது; அல்லது பெண்சாதி செத்தாள்; உடையவர் செத்தார், சாகுந்தறுவாயில் பாபம் போக்கத் தானம் கொடுக்க அழை அய்யரை! செத்தபின் அழை! கொடு: இதற்கிடையில் செத்துப் போனவரை நோக்கி இருப்பவர் திவசம் கொடுக்க வேண்டும்.

மேற்படி மேற்படி! இவையன்றி விதை நட, வீடு கட்ட, குடிபோக, பிற, பிற: அழை அய்யரை; கொட்டு பணத்தை! இவையெல்லாம் நாமே அழைக்கும் பகுதி. அழையா வீட்டில் நுழையுஞ் சம்பந்தியாக, கிரகண தோஷத்திற்குத் தர்ப்பைப்புல் கொண்டும், கரிநாள் தேடி எலுமிச்சைப்பழம் கொண்டும் சங்கராச்சாரியா சுவாமிகள் கட்டணமென்று ரசீது கொண்டும், அய்யர் தாமே வீடு தேடி விஜயம் செய்வதுண்டு.

- புரட்சிக்கவிஞர், (பாரதிதாசன் கதை) பக்கம்:42

தமிழ் ஓவியா said...


இதோ ஒரு பெரியார் உலகம்


திராவிடர் கழக வரலாற்றிலும், தமிழின வரலாற்றிலும் அக்டோபர் 20 (2013) மறக்க முடியாத மகத்தான பொன்னாள்.

இந்நாளில்தான் திண்டிவனத்தில் திராவிடர் கழகப் பொதுக்குழு நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 16 - முக்கியத்துவம் வாய்ந்தவை - இன்றைய கால கட்டத்தில் நாடு எதிர்நோக்கக் கூடிய சவால்கள்பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளன - தீர்வுகளை நோக்கி நம் மக்களை மேலாக உந்தித் தள்ளக் கூடியவையாகும்.

மிக முக்கியமாக பொன்னிழைகளால் அடிக்கோடிட் டுத் தெரிவிக்க வேண்டியது சிறப்புத் தீர்மானமாகும்.

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 95 அடி உயரமுள்ள தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவுவது என்பதுதான் அந்தச் சிறப்புத் தீர்மானமாகும்.

அந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்ட போது, மாநிலக் கழகப் பொறுப்பாளர்களும், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும், மண்டலக் கழகத் தலைவர்களும், செயலாளர்களும், மாவட்டக் கழகத் தலைவர்களும், செயலாளர்களும், பொதுக் குழு உறுப்பினர்களும், தோழர்களும் அடைந்த உணர்வும், உற்சாகமும், கரை புரண்டு ஓட அனைவரும் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று கையொலி எழுப்பி வரவேற்ற அந்தக் காட்சிதான் என்னே! என்னே!! என்றென்றும் பசுமையாக நம் நெஞ்சக் கண்ணாடியில் நிழலாகக் கூடிய அரிய காட்சியாகும். நமது கழகத் தலைவரின் எண்ணத்தில் உதித்த இந்தக் கருத்துரு - திட்டம் அவர்தம் சிந்தனையில் தந்தை பெரியார் பற்றியே சதா அசைபோட்டுக் கொண்டிருக்கும் விளைவின் விளைச்சல் ஆகும்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளில் (டிசம்பர் 2) முதற் கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான தொகையை வழங்குவது என்று சிறப்புத் தீர்மானம் கூறுகிறது.

வரலாற்றில் என்றும் நிலைக்கத் தக்க - நினைக்கத்தக்க பொன்னெழுத்துக்களால் பொறிக் கத்தக்க வரலாற்றுச் சாதனையை - தந்தை பெரியாருக்குத் தமிழர்கள் ஆற்றித் தீர வேண்டிய நன்றிக் கடனை வெற்றிகரமாகச் செய்து சாதித்துக் காட்டிட இப்பொதுக்குழு உறுதி கொள்கிறது! உறுதி கொள்கிறது!! என்ற சிறப்புத் தீர்மான வாசகம் என்றென்றும் பேசப்படக் கூடியது.

அந்த உறுதியை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அந்தத் தருணத்திலேயே கழகத் தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளிப்படுத்தியது சாதாரணமானதல்ல.

61 கழக மாவட்டங்கள் இருக்கின்றன. மாவட்டத்திற்கு 15 சவரனுக்கான தொகையைத் திரட்டினால்கூட ஆயிரம் சவரன் என்பது எளிதான இலக்கே!

தமிழர் சமுதாயமே தந்தை பெரியார் அவர்களின் தனிப் பெருந் தொண்டின் கருணை மழையால் செழித்துக் குலுங்குகிறது என்றாலும் நேரடியாகப் பயன் பெற்ற வர்கள் ஓராயிரம் பேர்களாவது இருக்க மாட்டார்களா?

நம் தோழர்கள் பட்டியலிட்டு அவர்களை அடையாளங் காண வேண்டியதுதான் முக்கியம். கழகத்திற்கு அப்பாற்பட்ட எத்தனையோ நன்றி உணர்வு மிக்க பெரு மக்கள் இருக்கத்தான் செய்வார்கள். பட்டியல் தயார் செய்து விட்டால் முயற்சி திருவினை ஆக்கும் என்பதில் அய்யமில்லை.

அத்தகையவர்களின் பட்டியலை தயார் செய்ய முன்கூட்டியே சூட்டோடு சூடாக அனைத்துக் கழக மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர். மாநில தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், இந்தக் கலந்துரையாடல் கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒரு தோழர்கூட விடுபடாமல் அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்னும் 40 நாட்கள் இடைவெளி இருக்கிறதே என்று எண்ண வேண்டாம் - ஒரே வாரத்தில் இந்த இலக்கை எட்டும் வகையில் வீதியில் இறங்கினாலே போதும் - நாங்களே எதிர்பார்க்கவில்லை - எளிதாக இந்தப் பணி நிறைவேறி விட்டதே என்று வியப்புக்குறியாக மாறும் அளவுக்கு - பெரியாருக்குப் பேருருவச் சிலை என்ற தகவலை நம் தமிழர்கள் கேட்ட அளவிலேயே அவர்கள் மத்தியில் ஆர்வப் பெருக்கு கரை புரண்டு ஓடுவதை நாம் அறிய முடியும்!

கழகத் தோழர்களே! நம் வாழ்வில் எத்தனை எத்தனையோ களங்களைக் கண்டுள்ளோம், பிரச்சாரக் களங்கள் உண்டு, போராட்டக் களங்களுக்கு பஞ்சமே யில்லை.

இந்தக் களமோ வரலாற்றுக் களம் - வருங்கால சந்ததியினருக்கு ஓர் உலகத் தலைவரை - உயர் எண்ணங்கள் மலரும் சோலையை - புத்துலகம் பூக்க புரட்சிக் கருத்துக்களை வாரி வாரி வழங்கிச் சென்றுள்ள வரலாற்று நாயகராம் உலகத் தலைவர் பெரியாருக்கு 95 அடி உயரத்தில் வெண்கலத்தால் சிலை செதுக்கி வைப்பதற்காக நாம் மேற்கொள்ளும் இந்தக் களம் - இன்பக் களம் - நம் வாழ்வில் நாம் ஆற்ற வேண்டிய கடமைக்களம் - நன்றிக்களம் - இந்த வரலாற்றுச் சாதனையில் நமது பங்கும் உண்டு என்று எண்ணிப் பார்க்கும் பொழுது இறும்பூதெய்தும் இணையற்ற களம் இது என்பதை மறவாதீர்! மறவாதீர்!!

தமிழ் ஓவியா said...


சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழு


திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம் 20.10.2013 ஞாயிறு காலை 11 மணிக்கு திண்டிவனம் எம்.ஆர்.எஸ். வண்ணமயில் திருமண மண்டபத்தில் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.

மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார் கடவுள் மறுப்புக் கூறினார். திண்டிவனம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கா.மு.தாஸ் அனைவரையும் வரவேற்று உரையாற் றினார்.

முதலாவதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் கடந்த திண்டுக்கல் பொதுக் குழுவுக்குப் பிறகு இதுவரை நடைபெற்ற கழகச் செயல்பாடுகளைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் தந்தை பெரியார் கருத்துக்கள் பரவி வரும் தன்மையை விளக்கினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார் (தீர்மானங்கள் நேற்று விடுதலையில் வெளி வந்து விட்டன).

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் 95 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை, பெரியார் அருங்காட்சியகம், நூலகம் - குழந்தைகள் பூங்கா, உள்ளிட்ட பெரியார் உலகம் உருவாக்குவது தொடர்பான சிறப்புத் தீர்மானத்தினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் முன்மொழிந்தார். பெரியார் உலகம் என்று கழகத் தலைவர் பெயர் சூட்டியுள்ளார்.

தமது குடும்பத்தின் சார்பில் ஒரு சவரனுக்கான ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கழகத் தலைவரிடம் துணைத் தலைவர் அளித்தார். அனைவரும் எழுந்து நின்று பலத்த கரஒலி எழுப்பி அத்தீர் மானத்தினை ஆதரித்து வரவேற்றனர்.

குறும்படம்

பெரியார் உலகம் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டக் குறும்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. எல்லோரும் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை ஆகியோர் உரையாற்றிய பிறகு நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை சந்தாக்களையும், 95 அடிஉயர முழு உருவப் பெரியார் வெண் கலச் சிலை அமைப்புக்கு நிதியையும் உற்சாகமாக வழங்கிய வண்ணமே இருந்தனர்.

மாவட்டக் கழகச் செயலாளர் நவா. ஏழுமலை நன்றி கூறிட, திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழு பெருஞ் சிறப்புடன் நிறைவுற்றது. அனைவருக்கும் சிறப்பான மதிய விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


உயர் தர்மம்!


இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்ம மாக அல்லவா கொண்டிருக்கிறார்கள்!
(விடுதலை, 11.9.1972)

தமிழ் ஓவியா said...


அத்தைக்கு மீசை முளைக்கட்டும் - பார்க்கலாம்

கேள்வி: பி.ஜே.பி.யுடன் தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டால் திராவிடர் கழகம் ஆதரிக்குமா?

பதில்: அத்தைக்கு மீசை முளைக்கட்டும் - அதன்பின் பார்க்கலாம்.

- திண்டிவனத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் கி.வீரமணி (20.10.2013)

தமிழ் ஓவியா said...

கடவுளை எதிர்த்து

செய்தி: திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மேலும் ஒரு கன்று சாவு. இந்து முன் னணி உண்ணாவிரதம்!

சிந்தனை: நியாய மாக அருணாசலேஸ்வரரை எதிர்த்து அல்லவா போராட வேண்டும்? உம் மிடம் காணிக்கையாக அளிக்கப்பட்ட கன்றைக் காப்பாற்றாத நீயும் ஒரு கடவுளா என்று அல்லவா கேட்க வேண்டும்?

தமிழ் ஓவியா said...


புருடா விட்ட சாமியார்


பொய் அம்பலமானதால் மொட்டை அடித்து கொண்ட பரிதாபம்!

லக்னோ, அக். 22- உ.பி.சாமியார் முதல் கனவுப்படி குறிப்பிட்ட கோவிலில் தங்கம் இல்லை என்பதால் அவர் மன முடைந்து மொட்டை அடித்து விட்டு ஆசிரமம் திரும்பினார். 2-ஆவது முறை கனவு கண்டதாக கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட் டுள்ளதை கனவில் கண்டதாக சாமியார் அறிவித்துள்ளார்.

உ.பி.மாநிலம் உண் னாவ் நகரில் தோண்டியா கேடா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத் தில் உள்ள ராஜாராவ் ராம் பக்ஸ்சிங் என்ற மன்னரின் கோட்டை யில் 1000 டன் தங்கம் புதைந்திருப்பதாக சோபன் சர்க்கார் என்ற சாமியார் கூறினார். தங் கம் புதைக்கப்பட்டிருப் பதை, தான் கனவில் கண்டதாக சாமியார் அறிவித்தார். இதனால் இந்திய தொல்லியல் துறை அதி காரிகள் அங்கு தங்க வேட்டைக்குச் சென் றனர். அவர்கள் அந்த கிராமத்தில் மண்ணைத் தோண்டும் பணியைத் தொடங்கினர். இந்த சம் பவம் இந்தியா முழு வதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தொல் பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் அந்த கோவி லில் எதிர்ப்பார்த்தப்படி தங்கம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப் படுகிறது. இதனால் மனம் நொந்த சாமியார் மொட்டை அடித்து விட்டு தன் ஆசிரமத் திற்கு திரும்பிவிட்டார். மேலும் தங்க வேட்டைப் பற்றி பத்திரி கைகளுக்கு சொல்வதற்காக அமைத்த குழுவையும் கலைத்துவிட்டார்.
தற்போது அவர் கான் பூரில் தங்கி யுள்ளார்.

இன்னொரு கனவாம்!

இந்நிலையில் சாமி யார் சோபன் சர்க்கார் தான் 2-ஆவது முறை கனவு கண்டதாகக் கூறியுள் ளார். உ.பி. மாநிலத்தில் உள்ள பதேபூர் மாவட் டத்தில் ஆதம்பூர் என்ற கிராமம் உள்ளது. சாமி யார் சோபன் சர்க் காரின் 2-ஆவது கனவு பற்றிய அவரது செய்தித் தொடர்பாளர் சுவாமி ஓம் அறிவிப்பினை வெளி யிட்டார். ஆதம்பூர் கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட்டி ருப்பதாக சாமியார் கனவில் கண்டுள்ளார் என சுவாமி ஓம் அறி வித்தார்.

ஆதம்பூர் கிராமம் கங்கை நதிக் கரையில் அமைந்துள்ளது. சாமி யாரின் செய்தித் தொடர் பாளர் சுவாமி ஓம் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள் ளார். சாமியார் கூறி யுள்ள இடத்தில் பூமியைத் தோண்டும் பணியைத் தொடங்கும் படி சுவாமி ஓம் கோரிக்கை விடுத் துள்ளார்.

மாவட்ட மாஜிஸ் திரேட் அபய் குமார் இதுபற்றி விளக்கம் அளித்தார். சாமியார் கனவில் கண்டு கூறி யதைப் போல் ஆதம்பூர் கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட் டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண் டும். இதற்காக இந்திய தொல்லியல் துறை அதி காரிகள் குழுவினையோ அல்லது மற்ற புவியியல் நிபுணர்களையோ அனுப் பும்படி மத்திய அரசுக்கு தான் கோரிக்கை விடுத் துள்ளதாக அபய்குமார் கூறினார்.

சாமியார் கூறியுள்ள இடத்தில் சமூக விரோ திகள் ஏதாவது தீமை புரியாமல் இருப்பதற் காக பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட் டுள்ளதாக அபய்குமார் தெரிவித்தார்.

சமூக விரோதிகள்

சாமியாரின் 2-ஆவது கனவு பற்றி தகவல் ஆதம்பூர் கிராமத்தில் வெளி யானவுடன் சில சமூக விரோதிகள் சட்ட விரோத செயலில் ஈடு பட்டனர். ஆதம்பூர் கிராமத்தில் கங்கை நதியின் முக்கிய படித் துறையில் பழங்கால சிவன் கோயில் உள்ளது. தங்கம் புதைக்கப்ட்டுள் ளதாக சாமியார் கூறிய தால் இந்த சமூக விரோ திகள் சிவன் கோயிலின் உறுதியான நடை மேடையை நேற்று முன்தினம் இரவு தோண்ட ஆரம்பித்து விட்டனராம்.

தமிழ் ஓவியா said...


ஜாதீய கூட்டணியை முறியடிப்போம்!

திண்டிவனத்தில் 20.10.2013 ஞாயிறு அன்று, நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத் தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றுள், மதவாதக் கூட்டணியையும், ஜாதீய கூட்டணியையும் முறியடிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜாதீய கூட்டணியை ஏன் எதிர்க்க வேண்டும்? என்பது குறித்து, திண்டிவனத்தில் அன்று மாலை நடைபெற்ற திராவிடர் கழக தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் விரிவாக எடுத்து வைத்தார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

சில வாரங்களுக்கு முன் சென்னையில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தவிர்த்து ஜாதீய கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. பார்ப்பனர் சங்கமும் இடம் பெற்றிருந்தது குறிப் பிடத்தக்கதாகும்.

தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிப்பு - பார்ப் பனர்கள் இணைப்பு என்பதன் மூலம் இந்தக் கூட்டணியின் ஆணி வேர் நாசகரமானது - பிற்போக்குத்தனமானது; முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக தந்தை பெரியார் அவர்களும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கமும் அரும்பாடுபட்டு உருவாக்கிய அடிப்படை சமூக நீதித் தத்துவத்துக்கு எதிரான பிற்போக்கு அமைப்பு இது என்பது வெளிப்படை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனர்களை உள்ளடக்கிய எந்த ஓர் அமைப்பும் தமிழ்நாட்டு மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டே தீரும் என்பது கடந்த கால வரலாறு உணர்த்தும் உண்மையான பாடமாகும்.

பல தேர்தல்களில் ஜாதிக் கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது உண்டு, அவற் றிற்குத் தமிழ் நாட்டு மக்கள் அளித்த தண்டனையை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது. மறந்தனர் என்றால், அவர்கள் மற்றுமொரு முறை மரண அடி வாங்கத் தயாராகி விட்டனர் என்று பொருள்.

தந்தை பெரியார் பெயரை அடிக்கடி உச்சரித்தும், தொண்டர்களைச் சில நேரங்களில் கறுப்புடை அணியச் செய்தும் நாங்கள்தான் பெரியார் வழி வந்தவர்கள் என்று மார் தட்டும் ஒரு கட்சியின் தலைவர் எங்கள் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்ப்பதில்லை என்றெல்லாம் பேசி வந்தவர்கள் இன்று ஜாதிகளைத் தேடி அலைகிறார்கள்; பார்ப்பனர்களின் அமைப்பு தங்களிடம் இணைந்து கொண்டது குறித்துப் புளகாங்கிதம் அடைகின்றனர் என்றால் இத்தகையவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் எளிதாக அடையாளம் காண்பார்கள் என்பதை, இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

ஜாதியின் பெயரில் அமைப்பை உண்டாக்கி, அது சரிப்பட்டு வராது என்று அனுபவத்தில் உணர்ந்து அரசியலில் எடுபடும் என்று ஜாதியை அடையாளம் காட்டாத பெயரைச் சூட்டிக் கொண்டவர்கள் மறுபடியும் ஜாதி அடையாளங்களைத் தேடி அலைவது அவர்களின் வீழ்ச்சியைப் பறைசாற்றக் கூடியதாகும்.

கொள்கைகளும், சித்தாந்தங்களும், இலட்சியங் களும் கைவிடப்பட்ட கையறு நிலையில், ஜாதியை ஆலிங்கனம் செய்வதானது அவர்களின் வெறு மையையே வெளிப்படுத்தும்.

இதற்குமேல் தமிழ் உணர்வு, இனவுணர்வு ஈழத் தமிழர் பிரச்சினை, பெரியார் கொள்கை பற்றிப் பேச முயன்றால் அதனை மிகப் பெரிய கேலியாகத்தான் தமிழினப் பெரு மக்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த முடிவு அனேகமாக அரசியலில் ஒரு முடிவு ரையைத் தங்களுக்குத் தாங்களே எழுதி முடித்துக் கொண்டார்கள் என்பதற்கான முன்னறிவிப்பாகும்.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான பார்ப்பனர்களைத் தங்கள் கூட்டில் இணைத்துக் கொண்டு சமூக நீதியைக் குறித்து வாய் திறக்க இயலாத நிலையைத் தங்களுக்குத் தாங்களே, உருவாக்கிக் கொண்டு விட்டனரே!

திண்டிவனம் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டினை, மிக உறுதியாக தெளிவாக திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

சமூகத்தில் மிகவும் கடுமையாக ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இழிவுப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து முன்னேற்றப் பாதையில் அழைத்து வருவது, நமது முதற் கடமை என்று பிரகடனப்படுத்தி விட்டார்.

எந்தத் தாழ்த்தப்பட்ட மக்களைத் தள்ளி வைக்க முனைகிறார்களோ அந்தத் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை கொடுத்து முதன்மையான இடத்துக்குக் கொண்டு வரவேண்டியதுதான். உண்மையான சமூக நீதி யாகும். அதனைத் திராவிடர் கழகம் செய்யும்.

தமிழ் ஓவியா said...


பெரிதாக்குகிறார்கள்

தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு கரையேற நினைப்பது போல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளிகளும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களை யும் பெரிதாக்குகிறார்கள்.
(விடுதலை, 12.7.1972)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் - காவல் துறையின் கடமை


மானமிகு ஆசிரியர் விடுதலை அவர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாட்டில் யாரும் செய்ய முன்வராத, பயப்படுகிற சமுதாயப் பெரும் பணியை துணிவுடன் செய்து, மனித சமத்துவம் இழிவு நீக்கம், கல்வி பொருளாதாரம், வேலை வாய்ப்பு, தமிழ் இன உணர்வு, சுயமரியாதை வாழ்வு ஆகியனவற்றை அளித்த வள்ளல் பெரியார் தமிழர்களுக்கு உத்தியோக உரிமை அரசு உரிமைகளும் பெறச் செய்தார்.

தனது 95 ஆண்டு கால வாழ்க்கை யில் தொடர்ந்து சுமார் 60 ஆண்டு காலம் பொது சேவையில் உடல் பொருள் தனது அறிவு ஆற்றல் யாவற்றையும் அளித்து பெரியார் தமிழர்களை நல்வாழ்வு பெறச்செய்ததார். அதே பெரும் பணியை திராவிடர் கழகத் தலைவர் பெரியார் காட்டிய வழியில் நேர்மையாகவும் அமைதியாகவும் வன் முறைக்கு இடங்கொடாது சமுதாயத் தொண்டு சுமார் 70 ஆண்டுகளாக செய்து வருகின்றார். தமிழ் நாட்டுக்கும் மக்களுக்கும் பல சாதனைகளை செய் துள்ளார் தலைவர் கி.வீரமணி அவர்கள். அவரை பார்ப்பனர் தூண்டுதலால் நம் தமிழ் மக்கள் சரியான புரிதல் அறிவில் லாமல் வன்முறை கொலைவெறித் தாக்குதலில் 28.92013 விருத்தாசலத் தில் ஈடுபட்டு இருக்கின்றனர். தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு சரியான பாதுகாப்பு அளிக்கக் காவல்துறையும் பாராமுகமாய் கண்டு கொள்ளவில்லை. பெரியார் யார்? திராவிட இயக்கக் கொள்கை எப்படிப்பட்டது. ஒரு உதாரணம் (மனித நேயம்) 10.8.1948-இல் இரண்டாம் இந்தி கிளர்ச்சியின் போது கும்பகோணத்தில் தி.க.தொண் டர்களுக்கு அறிவுரை கட்டுப்பாடு அமைதி தேவை, வன்முறைக்கு இடங் கொடுக்க கூடாது. காவலர்கள் உங்களை அடிக்க நேர்ந்தால் அவர் களுக்கு வசதியாக உடலைக் காட்ட வேண்டும் என்று கூறுகிறார். அதுவே தலைவர் கி.வீரமணி அவர்களின் கொள்கையாகும் திராவிடர் இன உணர்வு லட்சியமாகும்.

அதனாலேயே 1965 காங்கிரசு இயக்கம் பக்தவத்சலம் அவர்களின் ஆட்சியின் போது திமுக கிளர்ச்சி மிகவும் கடுமையாக மணப்பாறையிலி ருந்து அதனால் மிகவும் பாதிக்கப்பட்ட காவல்துறையினர் சுமார் 30 பேர் களுக்கு மேல் திராவிடர் கழக தோழர்கள் உதவியுடன் இடத்தெரு என் வீட்டிற்கு இரவில் காட்டுப் பாதையில் அழைத்து வரப்பட்டு அவ் விதமாகவே காட்டுப் பாதை வழியே இனஉணர்வுடன் அவர்களை பாது காப்பாக காவல் நிலையத்தில் சேர்த் தது, எங்கள் நினைவில் பசுமையாக உள்ளது. மேலும் மறுநாள் பெரும் அளவு காவல் துறையினர் பலப்படுத்தப்பட்டு கலவரம் முடிவுக்கு வந்தது மேலும் பெரியார் காமராசர் காங்கிரசை ஆதரித்த நேரம் தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உரிய பாதுகாப்பு அளிப்பது காவல்துறை கடமையாகும்.

- அ.இனியன் பத்மநாபன், ஈரோடு

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கலைஞர் வேண்டுகோள்


சென்னை, அக்.22- இலங்கையில் நடைபெற வுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:-

இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள அரசு மனிதாபிமானம் சிறிதுமின்றி தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை எதிர்த்தும், இலங்கை அரசின் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியும், 2009 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை கொன்று குவித்து இனப்படுகொலை நடத்திய தைக் கண்டித்தும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று டெசோ இயக்கத்தின் மூலமாக பேரழுத்தம் கொடுத்திடும் வகையில் கடுமையாகவே தெரிவித்திருக்கிறோம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

நம்மைப்போலவே தமிழகத்திலே வேறு சில முக்கியமான கட்சிகளும், மாணவர் இயக்கங் களும், குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 15.10.2013 அன்றும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 16.10.2013 அன்றும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த அறிக்கைகளில், இலங்கை யில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும், அந்த மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

தமிழக அரசின் சார்பிலும் 18.10.2013 அன்று முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு இதே வேண்டுகோளை கடிதத்தின் மூலம் தெரி வித்திருக்கிறார். ஏன் அதற்கு முன்பே 25.3.2013 அன்றும் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

கனடா இந்த மாநாட்டை புறக்கணித்து ஏற்கெனவே தகவல் தெரிவித்திருப்பதும், இங்கிலாந்து நாட்டிலே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையிலே இந்த மாநாடு நடைபெறுவதற்கு கண்டனம் தெரிவித்தி ருப்பதும் குறிப்பிடத்தக்க திருப்பங்களாகும்.

தோழர் தியாகு இதே வேண்டுகோளையும் இணைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு கடிதம் எழுதி இருந்தார்.

பிரதமர் எழுதிய கடிதத்தில், காமன்வெல்த் மாநாட்டில் நான் பங்கேற்பது குறித்து, உங்கள் கட்சி (தி.மு.க.) மற்றும் தமிழர்களின் உணர்வு களை மதித்தே இந்த விஷயத்தில் முடிவு எடுப் போம். தி.மு.க. தலைவர் கலைஞர் தலையிட்டு, தியாகு உண்ணாவிரதத்தை கைவிடவேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

சட்டசபையில் தீர்மானம்

அதன் அடிப்படையில் மீண்டும் ஒருமுறை இந்த பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழகத் தின் உணர்வும் ஒருமுகப்பட்டிருக்கிறது என் பதை தெரிவிக்கும் வகையிலும் - தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளும் மற்ற பிரச்சினை களில் வெவ்வேறு கருத்திலே இருந்தாலும், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபட்டிருக்கிறோம் என்பதை உலக சமூகத்திற்கு நிரூபிக்கும் வகையிலும் தமிழக சட்டமன்றத்தின் வாயிலாக ஏகமனதாக ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பது சிறப்புடையதாக இருக்கும்.

எனவே சட்டமன்றத்தில் அத்தகையதொரு தீர்மானத்தை நிறைவேற்றிட ஆளுங்கட்சி முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.