Search This Blog

26.10.13

மதம், சாமி, கோவில் என்றால் முட்டாள்தனம், அயோக்கியத்தனம், ஆபாசம்! - பெரியார்

மேல்நாட்டின் ஜோதியும் கீழ்நாட்டின் பீதியும்

தலைவரவர்களே! நண்பர்களே!! மேல்நாட்டின் ஜோதியும், கீழ் நாட்டின் பீதியும் என்னும் விஷயமாய் இன்று மறுபடியும் நான் பேச வேண்டு மென்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த தலைப்பைக் குறிப்பிட்டவர்கள் என்ன கருத்தைக்கொண்டு - நான் இத்தலைப்பில் என்ன பேசவேண்டுமென்று கருதி ஏற்பாடு செய்தார்களென்பது எனக்குத் தெரியாது. ஒருசமயம் மேல் நாட்டின் பெருமையையும் கீழ் நாட்டின் சிறுமையையும் பற்றி நான் பேசவேண்டு மென்று கருதினார்களோ என்னமோ தெரியவில்லை. ஆன போதிலும் இந்தத் தலைப்பை நான் காலையில் பார்த்தவுடன் சில விஷயங்கள் சொல்ல லாமென்பதாகக் கருதி சில குறிப்பு வைத்திருந்தேன். ஆனால் இப்போது எனக்கு முன் பேசிய மன்னார்குடி ஜனாப் யூசுப் பாவலர் அவர்கள் சமாதி வணக்கம், கொடி, பஞ்சா முதலிய உற்சவங்கள் இஸ்லாமார்க்க ஆதாரங்களில் கிடையாதென்றும், அவையெல்லாம் புரோகிதக் கூட்டத்தாரால் புகுத்தப்பட்டு மக்கள் மூட நம்பிக்கையால் பின்பற்றுவதாகுமென்றும் சொன்னபோது இங்குகூட்டத்திலிருந்த இரண்டொருவர் ஏதோ பிரமாதமாய் முழுகிப் போய் விட்டது போல் கருதி கூக்குரலிட்டதையும், கோபத்துடன் ஆnக்ஷபித்த தையும் பார்த்தவுடன் நான் முன் குறிப்பிட்டு வைத்தவைகளையெல்லாம் தூரத் தள்ளிவிட்டு அவருக்கேற்பட்ட பீதியையும், இன்னும் அதுபோலவே இந்துக்களென்பவர்களுக்கு ஏற்பட்ட பீதியையும் பற்றியே பேசவேண்டியது அவசியம் என்று கருதிவிட்டேன். அதாவது இம்மாதிரி கீழ் நாட்டின் பீதியை ஒழிக்க வேண்டியது நமது முதற்கடமை யென்பதைப் பற்றியே பேசுகிறேன்.

நண்பர்களே! ஏதாவதொரு விஷயத்திற்கு ஆதாரமில்லை யென்றோ அது அறிவுக்குப் பொருத்தமில்லை யென்றோ, அதனால் பயனில்லை யென்றோ, அல்லது அதனால் இன்னின்ன கெடுதி என்றோ யாராவதொருவர் எடுத்துச் சொன்னால் அதற்கு மாறுபட்டவர்கள் அறிவுள்ளவர்களாயிருந்தால் அல்லது தங்கள் கருத்தில் உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய யோக்கியமான வேலை யென்ன வென்றால் தைரியமாய்த் தக்க சமாதானம் சொல்லி தங்கள் கொள்கைகளை-தாங்கள் நடந்து வருவதற்கேற்ற ஆதாரங்களைக் காட்டி அறிவு அனுபவம் ஆகியவைகளுக்கு பொருத்தி மெய்ப்பித்துக் காட்டவேண்டியது யோக்கியமான கடமையாகும். அந்தப்படியான காரியம் ஒன்றும் செய்யாமல் எடுத்ததற்கெல்லாம் கடவுள் போச்சு, மதம் போச்சு, மார்க்கம் போச்சு, ஆண்டவனின் நம்பிக்கை போச்சு, ஆண்டவன் வார்த்தைக்கு விரோதமாச்சு என்று வெறும் கூப்பாடு போடுவதானால் என்ன பயன் விளையக்கூடும். மக்கள் மூடர்களாயிருக்கும் வரை இம்மாதிரி கூப்பாடுகளை மதித்து அவர்களும் எதோ முழுகிப் போய் விட்டது போல் ஆத்திரப்படக்கூடும். பிறகு அவர்களுக்கும் விபரம் தெரிந்து விட்டால் இந்தமாதிரி கூப்பாடு போட்டவர்களை வட்டியோடு அவமானம் செய்து விடுவார்கள். விஷமப் பிரசாரமும் சுயநலப் பிரசாரமும் வெகு நாளைக்கு இருக்க முடியாது. எந்த மக்களுக்கும் பகுத்தறிவு செல்வாக்குப் பெறும் போது ஏமாற்றினவர்கள் மீதுதான் முதலில் அவர்களது ஆத்திரமெல்லாம் திரும்பும். பிறகு தான் தங்கள் தங்கள் முட்டாள்தனத்தைப்பற்றி வருந்துவார்கள். ஆகையால் தான் விஷம பிரசாரங்களைப்பற்றி நான் எப்போதுமே பயப்படுவதில்லை. ஆனால் சொல்லுபவர்கள் சொன்னால் கேட்பவர்களுக்கு மதி வேண்டாமா என்பது தான் எனது கேள்வி.

நண்பர்களே! என்னைப்போல் ஒரு சாதாரண மனிதன் பேசுவதி னாலோ, தனக்குத் தோன்றியதை எழுதுவதினாலோ கடவுள் போய் விடும்- மார்க்கம் போய் விடும் - சமயம் போய்விடும் என்று நீங்கள் பீதி அடைவீர் களானால் உங்கள் கடவுளுக்கும் மார்க்கத்திற்கும் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதை யோசித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் கடவுளை உறுதி யானவரல்ல, உண்மையானவரல்ல என்றும், உங்கள் சமயம் உறுதி யானது அல்ல, உண்மையானது அல்ல என்றும், நீங்களே கருதியிருக்கின்றவர் களாகிறீர்கள். நாங்கள் உங்கள் கடவுளையோ, சமயத்தையோ இல்லையென்று சொல்லுவதற்காக இங்கு வரவில்லை யென்பதை உறுதியாய் நம்புங்கள். அவைகளைப்பற்றி உண்டு இல்லை என்று சொல்லிக்கொண்டு திரிவதல்ல எனது வேலை. நீங்கள் சொல்லுவதற்கு, நீங்கள் பின்பற்றுவதற்கு ஆதார மென்ன? அது உங்கள் பகுத்தறிவிற்குப் பொருத்தமாயிருக்கின்றதா? அனுபவத்திற்கு ஒத்து வருகின்றதா? என்று யோசித்துப் பாருங்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்வது தான் எனது வேலையாகும். அவைகளுக்கு இடம் கொடுப்பதாலேயே உங்கள் கடவுளோ, மதமோ, ஆதாரமோ போய்விடுமென்று நினைத்தீர்களானால் அவைகளைப்பற்றி மறுபடியும் வெளியில் பேசுவது வெட்கக்கேடான காரியமல்லவா வென்று கேட்கின்றேன்.

இந்தப்படி ஆராய்ச்சி செய்து பார்ப்பதாலேயே மறைந்து போகும் மார்க்கமும், ஆண்டவனும் பிறகு என்ன காரியத்திற்குத்தான் பயன்படக் கூடும் என்பதை நீங்களே ஆத்திரப்படாமல் யோசித்துப் பாருங்கள். “எங்கள் கடவுள் சர்வ சக்தி, சர்வ வியாபகமாயிருக்கக்கூடியவர்” என்று கருதிக் கொண்டு, “அவரால் ஏற்பட்டது எங்கள் மார்க்கம்” என்று சொல்லிக் கொண்டு இருக்கின்ற நீங்கள், “அப்படியானால் சற்று ஆராய்ச்சி செய்து அறிவிற்குப் பொருத்தமாயிருக்கின்றதா வென்று பார்க்கலாமா” என யாராவது கேட்டால் உடனே இந்த மாதிரி பயந்தால் அப்பொழுது இந்தப் பயப்படுகின்ற ஆட்களுக்கு கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்கின்ற விஷயத்திலும், அவர் சர்வ வியாபகமுள்ளவர் என்கின்ற விஷயத்திலும் தங்களது மார்க்கம் அவரால் தான் ஏற்பட்டது என்கின்ற விஷயத்திலும் நம்பிக்கையிருக்கின்றதா வென்பதை சற்று யோசித்துப் பாருங்கள். மனிதனுடைய அறிவிற்குப் பயப்படும் கடவுளும், அவனது ஆராய்ச்சிக்குப் பயப்படும் மார்க்கமும், உலகத்தில் யாருக்கென்ன பயனை அளிக்கக்கூடும்? அறிவையும் ஆராய்ச்சி யையும் கண்டால் ஏன் இப்படிப் பயந்து ஓடுகின்றீர்கள்? ஆராய்ச்சிக்கு மதிப்புக் கொடுக்காத காரணமே இன்று இந்தியா, உலகிலுள்ள நாடுகளி ளெல்லாம் அடிமையான நாடாகவும், இந்தியர்கள் உலகிலுள்ள மக்களி ளெல்லாம் இழிவான மக்களாகவுமிருக்க வேண்டியதாகி விட்டது. கடவுள் என்றால் குருட்டு நம்பிக்கை, மதம் என்றால் மூடநம்பிக்கை யென்கின்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. இந்த நிலையைத் தவிர கடவுளுக்கும் மதத் திற்கும் வேறு அவமானம் வேண்டியதேயில்லை. இந்த மாதிரி அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் பயந்த கடவுளையும், மதத்தையும் வைத்திருக்கின்றவனை விட கடவுளையும், மதத்தையும் பற்றி கவலைப்படாதவனோ, இல்லையென்று கருதிக் கொண்டிருக்கின்றவனோ வீரனென்றே நான் சொல்லுவேன். ஏனெனில் கவலைப்பட்டுக் கொண்டு உண்டு என்று சொல்லிக்கொண்டு மெய்பிக்க திண்டாடிக் கொண்டும் நடுங்கிக்கொண்டும் திரிவது பயங்காளித் தனமென்றே சொல்லுவேன்.

சகோதரர்களே! நாங்கள் வேலையில்லா வெட்டி ஆள்களா? அல்லது ஏதாவது பூசாரி புரோகிதர் கூட்டத்தைச் சேர்ந்தவர்களா? அல்லது ஏதாவது பண்டிதபுராண காலட்ஷேபக் கூட்டத்தார்களா? எங்களுக்கு இந்த வேலையில் ஏதாவது ஜீவனத்திற்கோ பெருமைக்கோ சிறிதாவது இதில் வழியுண்டா? நாங்கள் ஏன் எங்கள் சொந்த காசையும் நேரத்தையும் செலவு செய்து கொண்டு இந்த மாதிரி ஊர் ஊராய்ச் சுற்றிக்கொண்டு காசுக்குதவாத வெரும் ஆட்கள் எல்லாம் எங்களை வையும் படியாகவும் “சாபம்” கொடுக்கும்படி யாகவும், வெட்டுகின்றேன், குத்துகின்றேன் என்று மிரட்டவும், அவ்வள வையும் லட்சியம் செய்யாமலும், வந்ததுவரட்டும் நாம் செத்துப் போனால் நமக்குத்தானாகட்டும் மற்றும் யாருக்குத்தானாகட்டும் என்ன முழுகிப் போகும் என்கின்ற துணிவின் பேரில் வீட்டிலுள்ள வர்களிடம் கடைசிப் பயணம் சொல்லிக்கொண்டு வந்து, இந்த மாதிரி அலைவதற்குக் காரணம் என்ன? என்பதை யோசித்துப் பாருங்கள். இக் கூட்டத்திற்கு தலைமை வகித் திருக்கும் தலைவர் ஜனாப் தாவுத்ஷா பி.ஏ. அவர்கள் இஸ்லாம் மதத்திற்கு எவ்வளவோ பாடுபடுகின்றவர். அவர் சப் மேஜிஸ் திரேட் உத்தியோகத்தை ராஜிநாமா கொடுத்தவர். ராஜிநாமாக் கொடுக்காமல் இப்போது அவர் உத்தியோகத்திலேயே இருந்திருப்பாரேயானால் இன்றையதினம் ஏதாவது ஒரு பெரிய பதவியில் இருப்பார். மாதம் 4000, 5000 சம்பளமுள்ள உத்தி யோகத்தில் இல்லாவிட்டாலும் மாதம் 900, 1000 ரூ. உத்தியோகத்திலாவது இருந்திருப்பார். அப்படிப்பட்டவர் ஏன் இந்த மாதிரி பாடுபடுகிறார் என்பதை யோசித்துப்பாருங்கள்.

இன்று உலகம் போகின்ற போக்கில் உலகமக்கள் அடைந்திருக்கின்ற முற்போக்கில் - நாகரீகத்தில் நாம் எந்த நிலையிலிருக்கின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

நம் “அறிவாளிகள்” இன்று சாமி போச்சு, சமயம் போச்சு, சைவம் போச்சு, சாமியும் சைவமும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றது என்ப தாக சிறிதும் வெட்கமில்லாமல் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். நம்மைக் காப்பாற்ற ஏற்பட்ட சர்வ சக்தியுள்ள கடவுளை, நம்மை வாழ்விக்க ஏற்பட்ட பரிசுத்த சமயத்தை, நாம் காப்பாற்ற வேண்டிய அளவு நெருக்கடி யான சமயம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்ல ஆரம்பித்தால், அது கடவுளுடையவும், சமயத்தினுடையவும் பலக்குறைவா? அல்லது அந்த மாதிரி சொல்லுகின்ற மக்களின் அறிவுக்குறைவா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். மனிதனுக்கு எப்படிச் சுயமரியாதை பிரதானமோ, அப்படியே கடவுளுக்கும், மார்க்கத்திற்கும்கூட சுயமரியாதை அவசியம் என்பதை நீங்கள் உணருங்கள். அப்படியானால் தங்களைக் காப்பாற்ற இந்த மாதிரி இத்தனை வக்காலத்து கொடுத்திருக்கும் அவைகளுக்கு சுயமரியாதை இருக்கின்றதா என்று யோசித்துப்பாருங்கள்.

சகோதரர்களே! ஐரோப்பாவின் “நோயாளியான” துருக்கியானது, ஆண்டவனுக்கும் மார்க்கத்திற்கும் வந்த நெருக்கடியைக் காப்பாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டிருந்திருக்குமானால் இன்று அது இன்றைய மாதிரியில் இருந்திருக்க முடியுமா என்பதை யோசித்துப்பாருங்கள். கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் இருந்த ருஷீயா இன்று ஆண்ட வனையும், மார்க்கத் தையும், ஆதாரத்தையும் காப்பாற்றுகின்ற வேலையில் ஈடுபட்டிருந்தால் அது இன்றைய நிலையை எந்தக்காலத்திற்காவது அடைய முடியுமா வென்பதை யோசித்துப்பாருங்கள்.

அதுபோலவே, சீனாவையும், ஜப்பானையும், பிரஞ்சையும், இங்கி லாந்தையும், அமெரிக்காவையும் நினைத்துப்பாருங்கள். எந்த நாட்டுக் கார னாவது அவனுடைய வாழ்நாளையும், சொத்தையும், நேரத்தையும், இந்த மாதிரிக் கடவுளையும், மதத்தையும் காப்பாற்றுகின்ற முட்டாள் தனமானதும், பயனற்றதும், நாசவேலையானதுமான வேலையில் ஈடுபடுத்தியிருக்கின் றார்களா வென்பதை நடு நிலையிலிருந்து யோசித்துப்பாருங்கள்.

கடவுள் போய் விடும் என்று பயந்த மக்களால் வேறு என்ன வேலை யாகும்? என்று நினைக்கிறீர்கள். அவர்களை விட பயங்காளிகள், அறிவிலி கள் வேறு யார் இருக்கக்கூடும்? என்று எண்ணுகின்றீர்கள். கடவுளுக்கும், சமயத்திற்கும் அடிமையான நாடு ஒரு நாளும் சுதந்திரத்திற்கு அருகதையு டையதாகவே ஆகாது.

ஆகவே நீங்கள் முதலில் அந்த பயத்தை ஒழியுங்கள். “சமாதை வணங்க வேண்டாம்” அதற்கு “பூசை செய்யவேண்டாம்” என்றால் உங்கள் மார்க்கம் போய்விடுமா? அப்படியானால், இந்து மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் வித்தியாசமென்ன? இந்துமத சம்மந்தமான கோவில்களெல்லாம் பெரிதும் சமாதுதான். அந்தக் கடவுள்களெல்லாம் அநேகமாய் அந்த செத்துப் போன ஆள்களேதான் என்பதே எங்கள் ஆராய்ச்சிக்காரர்கள் துணிபு. அதனால்தான் பல புண்ணிய ஸ்தலங்களும் பல கடவுள்களும் ஏற்பட வேண்டியதாயிற்று. அதையொழிப்பதற்கு தோன்றியதுதான் இஸ்லாம் மார்க்க மாகும். இஸ்லாம் மார்க்கத்தில்தான் ஒரே ஒரு கடவுள் என்பதும், அதற்கும் உருவமில்லை என்பதும், அதைத் தவிர வேறொன்றையும் வணங்கக் கூடாதென்பதுமான கொள்கைகள் சொல்லப்படுகிறது. அதற்கு நேர் விரோத மாக நீங்கள் சமாதுகளை யெல்லாம் வணங்கவும் பூசிக்கவும், ஆரம்பித்து விட்டீர்களானால் நீங்கள் எப்படி மற்றவர்களை குற்றம் சொல்ல யோக்கியதை யுடையவர்களாவீர்கள்? அதுமாத்திரமல்லாமல், அல்லாசாமி பண்டிகை யிலும், கூண்டு முதலிய திருவிழாக்களிலும் இஸ்லாமானவர்கள் சிலர் நடந்து கொள்வது மிகவும் வெருக்கத்தகுந்ததாகும். இப்படிப்பட்டவர்களைக் கொண்ட மார்க்கம் எப்படி பகுத்தறிவு மார்க்கமென்றும், இயற்கை மார்க்க மென்றும் சொல்லிக் கொள்ளக்கூடும்? என்பதை யோசித்துப்பாருங்கள்.

 இவைகளையெல்லாம் ஒரு மார்க்கக் கட்டளை என்று சொல்லுவதானால் அந்த மார்க்கம் ஒரு நாளும் அறிவுமார்க்கமாகவோ உண்மையில் நன்மை பயக்கும் மார்க்கமாகவோ இருக்கமுடியவே முடியாது. அதோடு மாத்திர மல்லாமல் மார்க்கத் தலைவருக்கும், மார்க்க வழிகாட்டியாருக்கும் கூட இது அவமானமும் வசைச்சொல்லுமாகும் என்றே சொல்லுவேன். இன்று இந்து வும், கிருஸ்தவரும் பகுத்தறிவைக்கண்டால் பயப்படுகின்றார்கள். இஸ்லாம் மார்க்கத்தில் தான் தங்கள் மார்க்கம் பகுத்தறிவுக்கு ஏற்றது என்று ரூபிக்க பந்தயம் கட்ட வருகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட அதாவது சமாது வணக்கமும், பஞ்சா வணக்கமும், கொடி வணக்கமும், கூண்டு உற்சவமும், அல்லாசாமி பண்டிகையும் கொண்ட மக்களை ஏராளமாய் வைதுக்கொண்டு அவற்றையும் மார்க்கக் கொள்கைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கின்றவர் களையும் வைத்துக்கொண்டு இஸ்லாம் மார்க்கம், பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படி சொல்லிக்கொள்வதென்பது எனக்குத்தெரியவில்லை.

நீங்களே சொல்லுங்கள், இவைகளைக் கொண்ட இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்க மாகுமா? கோபிப்பதில் பயனில்லை. இந்து மதம் என்பதை விட, கிருஸ்துமதம் என்பதை விட இஸ்லாம் மதம் என்பது மேலானது என்பது எனதபிப்பிராயம் என்று எங்கும் சொல்லுவேன். ஆனால் அதில் இனி சிறிது கூட சீர் திருத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்பவர்களுடன் நான் சிறிது பலமாக முரண்பட்டவனே யாவேன். ஏனெனில் நான் கண்களில் பார்ப்பதைக் கொண்டுதான் சொல்லுகின்றேன். அதுவும் இன்று இஸ்லாம் மார்க்கத்தார் என்பவர்களில் பெரும்பான்மையான மக்கள் அனுஷ்டித்து வரும்- நடந்து வரும் கொள்கைகள் இஸ்லாம் மார்க்க கொள்கைகள் என்றால் ஆண் பெண் இரு துறையிலும் சீர்திருத்தம் செய்யவேண்டிய சங்கதி பல இருக்கின்ற தென்று தைரியமாய்ச் சொல்லுவேன். நீங்களும் அவற்றை சீர்திருத்த வழி தேடுங்கள். அவற்றை நிலைக்க வைக்க ஆதாரத்தை தேடாதேயுங்கள். மனிதனின் நன்மைக்கும் சௌகரியத்திற்கும் மார்க்கம் ஏற்பட்டதென்று கருதி தற்கால அறிவுக்கும், நிலைமைக்கும் ஒத்திட்டுப் பாருங்கள். எக்காலத்திற்கும் ஏற்ற மதமென்றால் காலத்திற்கு ஏற்றபடி தானாகவே மாறவோ, மாற்றிக் கொள்ளவோ சௌகரிய மிருக்கும் என்பதில் பயமோ, அவநம்பிக்கையோ கொள்ளாதீர்கள். இருட்டானால் விளக்கைப்பற்ற வைத்துக் கொள்ளுங்கள், பகலானால் விளக்கை அணைத்து விடுங்கள் என்றுதான் பகுத்தறிவுள்ள மார்க்கம் சொல்லி இருக்கும். எப்போதும் விளக்கு வைத்திருங்கள் என்றோ, எப்போதும் விளக்கு வைத்திருக்காதீர்கள் என்றோ, சொல்லி இருக்க முடியாது. ஆகவே, காலப் போக்குடன் கலந்து கொள்ள பயப்படாதீர்கள். இந்தியாவுக்கு இரண்டுமதம் சொந்தமாய்விட்டது. அதாவது இந்துமதம் இஸ்லாமிய மதம் இரண்டும் ஒன்றுபட்டாலொழிய இந்தியாவுக்கு விடுதலை இல்லை. ஒருவர் மதத்திற்கு ஒருவர் வர வேண்டுமென்றால் ஒரு நாளும் முடிவு பெறாது. இருவரும் பகுத்தறிவுப்படி நடந்துகொள்ளலாம் என்றால், யாருக்கும் ஆnக்ஷபனை இருக்க வழியிருக்காது. தங்கள் மதம் பகுத்த றிவுக்கு ஏற்றதாய்தான் இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் கண்டிப்பாய் இந்த ராஜிக்கு ஒப்புக்கொள்ளலாம். அப்படிக்கு நம்பிக்கை இல்லாதவர்கள் எடக்குப்பேசித்தான் தீருவார்கள். அவர்கள் அதன் பயனை அடைந்துதான் தீருவார்கள். இந்த நிலையில் என்ன சுயராஜ்யம் வந்தாலும், பூரண விடுதலை வந்தாலும் அவை நமக்குள் உதை போட்டுக்கொள்ளத்தான் உதவும்.

 இதுவரை பொதுவாகப் பேசினேன், கடைசியாக இந்துகளுக்கென்று சில வார்த்தை பேசுகின்றேன். ஏனெனில் நானும் சில நண்பர்களும் சாப்பிட்ட தற்குப் பிறகு ஒரு நண்பர் இந்தஊர் கோவில் தேரையும், கோபுரத்தையும் வந்து பார்க்கும்படி கூப்பிட்டார். நாங்கள் பார்ப்பதற்காக அங்கு சென்றோம். பிறகு அங்கு பார்த்த ஆபாசங்களை அப்படியே சொல்ல வெட்கப்பட வேண்டியதாகவே இருக்கின்றது. காட்டு மிராண்டிகள் காலத்தில்தான் சாமி களும் கோவில்களும் ஏற்பட்டதென்று சொன்னால் யாராலும் மறுக்கமுடியாத படி அவைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.

முதலாவது நாங்கள் இந்த ஊர்தேரைப் பார்த்தோம். அதில் சித்தரித்து வைக்கப்பட்டிருக்கும் உருவங்கள் மிகமிக ஆபாசமானவையாய் காணப் பட்டன. அவைகளுக்கு என்னதான் தத்துவார்த்தம் சொல்லுவதானாலும், மனிதப்பெண்ணை கழுதை சம்போகம் பண்ணுவது போலும் இது போன்ற மற்றும் பல உருவங்களை சித்தரித்து வைத்திருப்பதை எப்படி ஒப்புக் கொள்வது என்பது எனக்கு விளங்கவில்லை. கோபுரங்களைப் பார்த்ததைப் பற்றிச் சொல்லலாம் என்றாலோ அவற்றைப்பற்றி இன்னும் ஒரு தடவை நினைப்பதற்குக்கூட கஷ்டமாய் இருக்கின்றது. பெண்களை அதில் படுத்துகின்ற பாடும், காம விகாரங்களை அதில் எடுத்துக்காட்டி இருக்கும் முறையும் அநியாயம், அநியாயம். இவைகளையெல்லாம் நெருப்புவைத்துக் கொளுத்தி இடித்து எறிந்து, இவற்றிற்கு ஆதாரமான சாத்திரங்களையெல் லாம் பொசுக்கி சமுத்திரத்தில் கரைத்துவிட்டாலொழிய இதைச் சேர்ந்த மனிதர்கள் மனிதர்களாகக் கருதப்பட முடியவே முடியாது.

“சுயமரியாதைகாரர்கள் புராணக் குப்பைகளைக் கிளரிக்கிளரி வெரும் ஆபாசங்களைப் பேசுகின்றார்கள், எழுதுகின்றார்கள்” என்று பேசு கின்றீர்கள். எங்கள்மீது சில சமயத்தில் வெறுப்பும் கொள்ளுகின்றீர்கள்.

ஆனால் இந்த கோவில்களுக்குப்போய், தேங்காய் பழம் உடைத்து வைத்து காசும் கொடுத்து இந்த உருவங்களைப்பார்க்க வந்துகொண்டி ருப்பவர்கள் மனிதர்களா? என்பதைப் பற்றி நீங்கள் சிறிதுகூட சிந்திப்ப தில்லை. நாங்கள் எழுதுவதையும் பேசுவதையும் பார்த்து வெறுப்புக் கொண்டு என்ன செய்வது? இவ்வளவு பேசியும், எழுதியும் இந்த நடவடிக் கைகள் நின்றதா? நிருத்த யாராவது பாடுபட்டீர்களா? காரமடைத்தேரில் இதைவிட அசிங்கமாகப்பார்த்தேன். திருவொற்றியூரில் வெகு ஆபாச மாய்ப் பார்த்தேன். மதுரை முதலிய இடம் சொல்லவே வேண்டியதில்லை. ஆனால் இந்த ஊர் கோபுரம் எல்லாவற்றையும் மீறி விட்டது. இதுவரை நாங்கள் எழுதாத, பேசாத நினைக்கவே முடியாத விஷயங்கள் எல்லாம் இதில் இருக்கின்றன. எல்லாம் சாமிகளாகவும் ரிஷிகளாகவும், முனிவர் களாகவுமே காணப்படுவது இன்னும் மோசமாய் இருக்கின்றன. இதையெல்லாம் பற்றி அன்னிய மதக்காரர்கள் பரிகாசம் பண்ணமாட்டார்களா? கேவலமாய் நினைக்க மாட்டார்களா? என்கின்ற மான அவமானமே இல்லாமல் போய் விட்டது. இதை நிறுத்தவேண்டுமா, வேண்டாமா? நிறுத்த வேண்டுமானால் என்ன செய்வது? இதுவரை சமயதிருத்தக்காரரும் சமூக திருத்தக்காரரும் இந்த ஆபாசங்களின் பக்கம் திரும்பியாவது பார்த்தார்களா? போதாக் குறைக்கு பணம் படைத்த மூடர்களும் யோக்கியப் பொருப்பற்றவர்களும் இந்த சித்திரங்களுக்கு சாயம் அடித்து ரிப்பேர் செய் கின்றார்களே. அவர் களை என்னவென்றுதான் சொல்லுவது என்பது விளங்கவில்லை.

 சிறிதும் ஈவு இரக்கமில்லாமல் ஊரார் பணத்தை ஏழைகள் பணத்தை கொள்ளை அடித்து அவர்களைப் பட்டினிபோட்டுவிட்டு இந்த மாதிரி மிருக மனிதப் புணர்ச்சிகளுக்கு பொம்மைகள் செய்து சாயம் அடித்து பூசை செய்வது என்பது எவ்வளவு இழிவானதும், திமிர் பிடித்ததுமான காரியமாகும் என்பதை யோசித்துப்பாருங்கள். இந்த லக்ஷணத்தில் நாங்கள் இந்த கோவிலுக்குள் புகுந்துவிடுவோமென்று இப்போது போலீசு காவல் போடப்பட்டிருக்கின்ற தாம். நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள கோவில்காரர்கள் எல்லாம் இப்படியேதான் செய்கின்றார்கள். ஆகவே இந்துக்கள், சமயவாதி கள், சைவர்கள், வைணவர்கள் என்பவர்கள் இவற்றிற்கெல்லாம் என்ன பதில் சொல்லுகின்றார்கள் என்று கேட்கின்றேன் - இந்த இந்துமதத்தை இன்னமும் எத்தனை நாளைக்குத்தான் காப்பாற்றப் போகின்றீர்கள்? என்று கேட்கின் றேன்.

 மதம், சாமி, கோவில் என்றால் முட்டாள்தனம், அயோக்கியத்தனம், ஆபாசம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. வருத்தப்பட்டுப் பயனில்லை, வெட்கப்பட வேண்டும். அப்போதுதான் அறிவு, ஒழுக்கம், நாகரீகம் விளங்கும். ஆகவே சகோதரர்களே! இவ்விஷயங்களை நன்றாய் ஆலோசித்துப்பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பொருளற்ற கூப்பாடு போடுவதால் பயன் விளையாது. இனியும் இந்தமாதிரி குஷ்டவியாதி வந்த சரீரமாதிரி இந்த சமுகம் நாறி அழுந்திக் கொண்டிருப்பதில் பயனில்லை என்பதை வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

--------------------திருநெல்வேலி மாவட்ட களக்காட்டில் நடைபெற்ற ஐக்கிய முஸ்லீம் சங்க மாநாட்டின் இரண்டாம் நாளில் ஆற்றிய உரை.-"குடி அரசு" - சொற்பொழிவு - 01.02.1931

37 comments:

தமிழ் ஓவியா said...

இடி விழுந்தது எனும் பொய்க்கதை

போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார். அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச் சந்தித்து உங்கள் வெற்றிச் சின்னங்கள் எதற்கு எங்களுடன் வாதாடி வென்ற பிறகு அல்லவா அவற்றை முடிக்க வேண்டும்? எங்களுடன் வாதாடத் தயாரா? என்று வினா தொடுத்தனர்.

வினாவை விவேகத்துடன் சந்திக்க முடியாத திருஞான சம்பந்தனோ, ஒரு பாடல் பாடினாராம். புத்தர்சமண் கழுக்கையர் பொய்கொளாச்

சித்தத்தவர்கள் தெளிந்து தேறின

வித்தக நீறணிவார் வினைப்பகைக்கு

அத்திரமாவன அஞ்செழுத்துமே

இந்தப் பாடலை திருஞான சம்பந்தன் பாடியதுதான் தாமதமாம்; புத்த நந்தி என்ற தலைவன்மீது இடி விழுந்ததாம்; பவுத்தர்கள் நிலை கலங்கி ஓடினராம்.

இப்படியெல்லாம் ஏராளமான கதை கட்டி பவுத்தர்களை வென்றதாக கூறுகிறார்கள். அவர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும் கூட, விவாதம் செய்து வெல்ல வக்கு இல்லாமல், வேறு கொல்லைப்புற வழிகளில் சூழ்ச்சிகள் செய்து பவுத்த நெறியாளர்களைப் பச்சைப் படுகொலை செய்து பரவசம் அடைந்திருக்கிறார்கள்.

கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதிய நூல்:

மனித வாழ்க்கைக்குத் தேவை நாத்திகமா? ஆத்திகமா?

தமிழ் ஓவியா said...

பக்தி - ஒழுக்கம்

கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் - பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய் விட்டுப் போகிறேன். நான் கடவுளை நம்பவில்லை, அதைக் கொழுக்கட்டை என்று சொல்லுகிறேன்; நஷ்டமில்லை பாருங்கள். அதனாலே எனக்குப் பக்தி இல்லை என்பதனாலே, உங்களுக்கென்ன நஷ்டம்?

ஆனால் ஒழுக்கமில்லையென்றால் என்னவாகும் பாருங்கள்? நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாதது இன்னொரு மனிதனுக்குச் செய்கிற கெடுதிக்கு பேர்தானே?

ஒழுக்கமாக இல்லை என்றால், எங்கெங்கேயோ ஒழுக்கக் கேடாக நடந்து இல்லை தொல்லை பண்ணிக் கொண்டிருக்கின்றான்; நாணயமாக இல்லையெனில், யாரையோ ஏமாற்றி வேதனையை உண்டாக்கி இருக்கின்றான்; உண்மையாக இல்லையென்றால் என்னத்தையோ எவனையோ ஏமாற்றிப் பொய் பேசித் தப்பிக்க இன்னொரு தவறைக் கொண்டிருக்கிறான் என்றுதானே பொருள்? ஆகவே ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாக இருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களில் குற்றவாளியாக இருந்தானானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குக் கேடு விளைந்திருக்கும். இது முக்கியமில்லை. பக்தி கடவுள் நம்பிக்கை மதக் கோட்பாட்டின்படி நடக்கிறது. இவைதான் முக்கியமென்றால், மக்களுக்கு என்ன பிரயோஜனம் அதனாலே?

-தந்தை பெரியார், 24.11.1964 பச்சையப்பன் கல்லூரிப் பேருரை

தமிழ் ஓவியா said...

பிரார்த்தனை

பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால், ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமான வைகள்தாம் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கிறது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.

அதாவது, கடவுளுக்கு இன்னது இன்னது செய்வதாக நேர்ந்து கொள்வது, ஜீவப்பலி கொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படுவனவாகும்.

ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறுபெயர் சொல்ல வேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்...

பேராசையும், சேம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமில்லை

தந்தை பெரியார் பகுத்தறிவு மலர்-1, இதழ் 9, 1935

தமிழ் ஓவியா said...



விடுதலை மின்சாரம்- விடுகதை மின்சாரம் ஆன கதை

மின்சாரம் எழுதுகின்ற தலையங்கமோ! ஒற்றைப்பத்தியோ! பெட்டிச் செய்தியோ! எதுவோ அது தாக்க வேண்டிய இலக்கை சரியாக சென்றடைந்து விடும். அதற்கு அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவரும் ஒன்றுதான். அதிகாரமே இல்லாத பாமரனும் ஒன்றுதான். அல்லது செய்யின் தட்டிக் கேட்பதும், நல்லது செய்யின் தட்டிக் கொடுப்பதும் அவர் வழக்கம்.

அப்படிப்பட்ட மின்சாரம் தஞ்சை வல்லத்தில் அமைந் துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பழகு முகாம் 2010இல் விடுதலை மின்சாரம் விடுகதை மின்சாரமாக மாறி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி னார். பழகு முகாமின் முதல் நாளிலிருந்து பிஞ்சுகளிடம் பேசும்போது பெரியாரியல் கருத்துகளுக்கு இடை இடையே விடுகதைகளையும், வெடிச் சிரிப்பு துணுக்குகளையும், அறிவியல் கேள்விகளையும் கூறி பிஞ்சுகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அது மட்டுமல்ல, விடுகதைகளையும், துணுக்குகளையும் கேட்ட பிஞ்சுகளுக்கு மிகுந்த உள்ளக் கிளர்ச்சி ஏற்பட்டு, நான், நீ என்று முந்திக் கொண்டு தங்களுக்கு தெரிந்தவற்றை கூற அனுமதி கேட்டதும், அனுமதி தந்து அவர்களையும் பேச வைத்து ரசித்து மகிழ்ந்தார். மேடையேறி பேசிய பிஞ்சுகளுக்கு தாங்கள் ஏதோ ஒன்றை சாதித்துவிட்டு மன நிறைவுடன் தங்கள் இருக்கை களுக்குத் திரும்பினர். அத்தோடு மின்சாரம் பிஞ்சுகளை விட்டுவிடவில்லை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கருத்துகளை அழுத்தம் திருத்தமாக அவர்கள் மனதில் பதிய வைக்கத் தவறவில்லை. அத்தோடு பிஞ்சுகள் கட்டுப்பாட்டை இலேசாக மீற முற்படும் போதெல்லாம் இதமாக கண்டிக்கவும் தவறவில்லை. இதற்காகவே மின்சாரம் ஏராளமான குறிப்புகளைத் திரட்டி (ஹோம்ஒர்க்) வைத்துக் கொண்டு பேசி வருகிறார். ஆக, பிஞ்சுகளோடு உரையாடும் போது அவரும் பிஞ்சுகளின் நிலைக்கு இறங்கி வந்து - விடுதலை மின்சாரம் விடுகதை மின்சாரமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


மரண தண்டனை


பிறந்த அடுத்தகணமே
மரண தண்டனை
பெற்றது!
அம்மனுக்கு
நேர்ந்து விடப்பட்ட
ஆட்டுக்குட்டி!

கணபதி ஹோமம்

வீட்டை கழுவி
சுத்தம் செய்தாள் அம்மா!
கோமியத்தை
தெளித்து அசுத்தம்
செய்தார் அய்யர்!

- த. செண்பகம், அய்யம்பாளையம்

தமிழ் ஓவியா said...


வன்முறையால் பகுத்தறிவு இயக்கத்தை அழிக்க இயலாது


தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 28.9.2013 அன்று விருத்தாசலத்தில் திராவிடர் கழக மாண வர் அணியின் கடலூர் மண்டல மாநாட்டில் சிறப்புரை ஆற்ற வருகை தந்த போது சில பிற் போக்குவாதிகள் அவர் காரை மறித்துத் தாக்க வந்த செய்தி கழகத் தொண்டர்களின் உள் ளத்தைக் குமுறும் எரிமலையாக ஆக்கியிருக்கும். தமிழர் தலைவருக்கு இதைப்போன்ற தாக்குதல்கள் புதிதல்ல. தமிழர் தலைவரே அவற்றை வெளிப் படுத்தி இருக்கிறார். 1981-இல் பழனியில் என்னைப் போல் உருவம் செய்து பாடையில் வைத்துத் தூக்கிச் சென்றவர்கள் பார்ப்பனர்கள் அல்லவா? வீரமணி ஒழிக என்று முழக்கமிட்டார்கள் (விடுதலை நாள்: 5.11.2012)

எனது கொள்கைப் பயணத்தில் எனது வாழ்வை முடிக்க கொள்கை எதிரிகள் மூன்று முறை முயன்று தோல்வியுற்றனர். திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள மம்சாபுரம் அருகிலும் (1982), வடசென்னை, வண்ணாரப்பேட்டைப் பகுதியிலும் (1985), சேலம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம் பட்டியிலும் (1987) தடம் புரளாது பயணிக்கிறேன் என்று நான் சான்றிதழ் பெற்ற நிகழ்வுகள் அவை (விடுதலை நாள் 2.12.2012)

தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனத்தால் விருது வழங்கப்பட்ட தந்தை பெரியாரை நோக்கிக் கடலூர் பொதுக் கூட்டத்தில் எதிரிகள் செருப்பு வீசவில்லையா? இன்று அதே இடத்தில் பெரியாருக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பகுத்தறிவு மேதை ஆர்.ஜி.இங்கர்சாலுக்கும், கிறித்தவ மத வெறியர்களிடமிருந்து பல அச்சுறுத்தல் கடிதங்கள் வந்துள்ளன. முட்டாளே! நாளை முதல் நீ மேடை ஏறினால் உன் தலை அட்லாண்டிக் பெருங்கடலில் மிதக்கும்.

ஆஸ்திகர்களான எங்கள் கோபத்திற்கு ஆளா னால் பைபிளை ஏந்தும் கைகள் தீப்பந்தத்தை ஏந்தி உன் வீட்டிற்குத் தீ வைத்து உன்னையும் உன் குடும்பத்தையும் கொளுத்தி விடுவோம்.

இந்த இழிவான அச்சுறுத்தல்களையெல்லாம் மீறி இங்கர்சால் கிறித்தவ மத நூல்களின் மூடக் கருத்துக்களை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

தமிழ் நாட்டு இங்கர்சால் தமிழர் தலைவர் மாணவப் பருவத்திலிருந்து கடந்த எழுபது ஆண்டு களாக பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறார். இங்கர்சாலுக்குப் பின்னால் ஓர் இயக்கம் இருந்த தில்லை. ஆனால் தமிழர் தலைவருக்குப் பின்னால் குமரிமுனையிலிருந்து திருத்தணி வரை பல இலட்சம் தொண்டர்களையும், ஆதரவாளர்களை யும் கொண்ட இயக்கம் செயல்படுகிறது என்பதை அவரைத் தாக்கத் துணிந்த பிற்போக்குவாதிகள் மறந்து விடவேண்டாம்.

மூடப் பழக்கங்கள் தமிழ் நாட்டில் இருக்கும் வரை தமிழர் தலைவரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் தொடரும் எந்தப் பார்ப்பானாவது பக்தியின் பெய ரால் முதுகில் அலகு குத்திக்கொண்டு லாரியை இழுக்கிறானா? நெருப்பு மிதிக்கிறானா? நேர்த்திக் கடன் என்று சொல்லி உடம்பைக் கத்தியால் கீறிக் கொள்கிறானா? எந்தப் பார்ப்பனப் பெண்ணாவது பேய் பிடித்தது என்று பூசாரியால் சாட்டை அடி வாங்குகிறாளா? இந்த மூடத்தனங்களையெல்லாம் எதிர்த்துதான் நாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை, சேது கால்வாய் திட்டம், தமிழக மீனவர்கள் இலங் கைக் கடற்படையால் தாக்கப்படுதல், கச்சத்தீவைத் தமிழகத்தோடு இணைத்தல் இவற்றைப் போன்ற பிரச்சினைகளில் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக்கழகமும் தீவிர அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையென்றால் வேறு நாதி ஏது? திராவிடர் கழகம் தமிழக மீனவர்களின் நலனைப் பாதுகாக்கவும், கச்சத்தீவை மீட்கவும் 15.10.2013 அன்று தமிழகம் முழுவதும் அறப்போர் நடத்தி யதைப் போல் காங்கிரசோ, கம்யூனிஸ்ட்டோ, பி.ஜே. பி.யோ இதுவரை போராட்டம் நடத்தியதுண்டா?

ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமு தாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத் தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாய மாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன் என்று தந்தை பெரியார் தன் வாழ்க்கை இலட்சியத்தை வெளி யிட்டிருக்கிறார். பெரியார் விட்டுச் சென்ற தொண்டை அல்லும் பகலும் ஆற்றிவருபவர் நம் தமிழர் தலைவர், அவருக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டியது அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை ஆகும்.

- இர.செங்கல்வராயன் (முன்னாள் துணைத் தலைவர், ப.க. செய்யாறு)

தமிழ் ஓவியா said...


என்னதான் சொன்னார் பெரியார்?


கருத்துரிமை: ஒருவனுடைய எந்தக்கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்ப தற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

பேராசை - நாணயம்: பேராசை யில்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும், அனுபவத்துக்கும் ஒவ்வாததை ஒருகாலமும் நம்ப மாட்டான்; பின்பற்றமாட்டான்.

வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பார்கள்.

அறிவுக்கு முதலிடம்: உன் சொந்தப் புத்திதான் உனக்கு வழி காட்டி; அதை நல்ல முறையில் பயன் படுத்து, பிறரிடமுள்ள அவநம்பிக் கையைக் கைவிடு. உன் பகுத்தறிவுக்கே வேலி போட்டதால்தான் அறிவு வெள்ளாமை கருகிப்போயிற்று. முன் னோர் சொல்லிப் போனது அற்புத மல்ல, அதிசயமுமல்ல, அதை அவர் களிடமே விட்டுவிடு. அதில் நீ சம்பந் தப்படாமல் நீயே செய்ய, கண்டுபிடிக்க, முயற்சி செய், அறிவுக்கே முதலிடம் கொடு.

நமக்கு வேண்டியது என்ன? : தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்புமட்டும் அல்ல, அறிவும் வேண்டும், சுயமரியாதையும் வேண்டும், தன்மான உணர்ச்சியும், எதையும் பகுத்துணரும் திறனும், ஆராய்ந்து அறியும் அறிவும் தான் மிகவும் தேவை.

படிப்பு எப்படி இருக்க வேண்டும்? : நமது கல்விமுறை மாற வேண்டும், படிக்கும்போதே அத்துடன் தொழிலும் பயில வேண்டும். எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை நிறுத்தி னாலும் அவன் தொழில் செய்து பிழைக்கக்கூடியவனாக இருக்க வேண்டும். மக்கள் அத்தனை பேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும்.

பெண் அடிமையாவது ஏன்? : ஒவ்வொரு பெண்ணும் - தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதி பெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக் குப் போதுமான அளவாவது சம் பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால் எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது.

வாலிபர்கள் கவனிக்க : வாலி பர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாக புத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை, தீமையை அறியும் குணமும், சாத்தி யம், அசாத்தியம், அறியும் குணமும், ஆய்ந்து ஓர்ந்து பார்க்கும் தன் மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக்கூடியவர்கள் ஆவார்கள்.

சேவை என்றால் என்ன? : சேவை என்பது கூலியை உத்தே சித்தோ தனது சுயநலத்தை உத்தே சித்தோ செய்வதல்ல, மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவ தற்கு ஆகவே செய்யப்படும் காரியம்தான்.

ஜாதியும் - ஒழுக்கமும் : மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான், இவனை மக்கள் இகழ்வதில்லை. சாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால், சாதியை விட்டுச் சாதியில் சாப்பிட்டால் கல்யாணம் செய்தால், சாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம் - நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.

வெளியீடு: கும்முடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!


நெற்றியிலே சாம்பலைநீ பூச வேண்டாம்
திருக்கோயில் வாசலையே மிதிக்கவேண்டாம்
புற்றினிலே பூசைநீ செய்யவேண்டாம்
பிள்ளைகளைத் தேரோட்டத்துக் கனுப்பவேண்டாம்
கற்கையிலே திருக்குறளை மறக்கவேண்டாம்
கழிசடைகள் விரதம்கடைப் பிடிக்கவேண்டாம்
சற்றேனும் மூடத்தனம் பரப்பாத
தன்மானப் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!

புத்திதரும் விடுதலையை ஒதுக்க வேண்டாம்
பூப்பெய்தின பேரில்விழா எடுக்கவேண்டாம்
பித்தசா மியார்வலையில் வீழ வேண்டாம்
பேயோட்டும் பூசாரியை நம்பவேண்டாம்
சத்திரத்தில் சோம்பேறி வளர்க்கவேண்டாம்
சாமிசரண மென்பானைச் சேர்க்கவேண்டாம்
வித்தகனாய் வேலையிலே விகிதாசாரம்
வேண்டுமென்ற பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!

உரிமைகளை உணராதார் போற்றவேண்டாம்
ஒத்தாசை செய்வாரைத் தூற்ற வேண்டாம்
கரிசனத்தை அறிவினிலே காட்ட வேண்டாம்
கப்பல்கவிழ்ந் தாலும் இறை தேட வேண்டாம்
நரபலியின் யோகத்தைக் கேட்க வேண்டாம்
நான்மறைகள் வேதத்தைப் புதுக்க வேண்டாம்
மருவிலாத சிந்தனையின் பெரியாரை
வாழ்நாளில் மறவாமல் வாழ்த்தாய் நெஞ்சே!

குலம்பேசித் திரிவாரை மதிக்கவேண்டாம்
குணங்கெட்ட மதமுடன் சேர வேண்டாம்
சிலைகோவில் சேவிப்பான் நாடவேண்டாம்
சிந்திக்க மறுப்பானுக் குதவவேண்டாம்
கலைஇசையில் மடத்தனமும் வளர்க்கவேண்டாம்
கர்மபலன் என்பாரைக் கூடவேண்டாம்
பலமரத்தை வாழ்நாளில் கண்டதச்சன்
வழுவில்லாப் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!

கருமாதி திவசத்தைக் கருதவேண்டாம்
கடவுளுக்காய் மொட்டைநீ போட வேண்டாம்
பிரதோசப் பலன்களைநீ நம்பவேண்டாம்
கோயில்குளம் யாத்திரைக்குப் போகவேண்டாம்
அரோகரா கோஷத்தில் குதிக்கவேண்டாம்
ஆரியன்வரு மானத்தைக் கூட்டவேண்டாம்
நேருக்கு நேர்நின்று வாதில்வென்ற
நிகரில்லாப் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!

- பட்டுக்கோட்டை தமிழ்அன்பன்

தமிழ் ஓவியா said...


அறிவியல்


அசோகன் இந்தியாவை ஆண்ட சில காலத்துக்கெல்லாம் (கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகள் முன்பு) ஏராஸ்தனஸ் (Erosthenes) எனும் கிரேக்க பூகோள அறிஞர் இருந்தார். அலெக்சாண்டிரியாவில், தன் ஆராய்ச்சிக் கூடத்தை அமைத் திருந்தார். அவர் பூமியின் சுற் றளவு என்ன என்பதைக் கணக் கிட்டார்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இதை எப்படிச் செய்தார் என்று வியப்பே தோன்றும். எகிப்து நாட்டிலுள்ள இரண்டு ஊர் களை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த இரண்டு ஊர்களிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில், சூரியனுடைய நிழல் எப்படி விழுகிறது என்பதைக் கணக் கெடுத்தார்.

அ, ஆ எனும் இரண்டு கல் தூண்கள். ஆ தூணை அலக் சாண்டிரியாவில் நட்டார் அ தூணை செயன் எனும் ஊரில் நிறுத்தினார். இரண்டும் ஒரே அளவில் ஒரே மாதிரியாக நிறுத் தப்பட்டன. இரண்டு ஊருக்கும் இடையிலிருந்த தூரம் கிரேக்கக் கணக்குப்படி 5000 ஸ்டேடியா (551 மைல்கள் ஆகும்) நண் பகலில், சூரியன் உச்சியிலிருக் கும்போது செயனில், நிழல் விழாததைக் கண்டார், அதே நேரத்தில், அலெக்சாண்டிரியா வில் நாட்டப்பட்ட தூணில் நிழல் விழுவதை இன்னொரு நாள் கணக்கெடுத்தார்.

எவ் வளவு சாய்வு இருக்கிறதென் பதை நிழலைக் கொண்டு அளந்து தெரிந்து கொண்டார். சூரியகிரணம் 7/50 சாய்வாக வருவதை உணர்ந்தார். உலகம் உருண்டையானது என்பதையும் அப்போதே கிரேக்க விஞ் ஞானிகள் அறுதியிட்டிருந்தனர். அதனால், உருண்டையின் சுற்றளவு 360 டிகிரி என்பதும் பகுக்கப் பட்டிருந்தது.

அதனால்:
அ, ஆ, பூமியின் சுற்றளவு: 7 1/5 0:360
அதாவது,

பூமியின் சுற்றளவு: 551 X 36D X 5/36

அதாவது

27,500 மைல்கள் என்று கணக் கிடப்பட்டது. இந்தக் கணக்குச் சரியென்று 2000 ஆண்டுகளுக் குப் பிறகே கண்டு பிடிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


நடையை மாற்று!


பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்! என்பதுபோல மனிதர்களும் பலவிதம். என்ன காந்தியைச் சுட்டுக் கொன்னூட்டாங்களா? எனக் கேட்பார்கள் சிலர். அதுபோல நாட்டில் எவ்வளவோ மாற்றம் வந்து, பகுத் தறிவும் வளர்ந்துவிட்டது. பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பல நூறு ஆண்டு கள் ஆகிவிட்டன. ஆனாலும் அதுகூடத் தெரியாமல் பலர் வாழ்கிறார்கள்.

அது எப்படி என நீங்கள் ஆச்சரியப் படலாம். திருச்சி-வேளாங்கண்ணி, திருச்சி - சபரிமலை, திருச்சி- சமயபுரம், திருச்சி - பழனி இப்படி எண்ணற்ற வழித் தடங்களில் இன்னமும் மக்கள் நடந்தே பயணம் செய்கிறார்கள். இடைநில்லா பேருந்து, இடைநிற்கும் பேருந்து, சொகுசுப் பேருந்து, குளிர் சாதனப் பேருந்து என வகை, வகையாய் பேருந்துகள் வந்துவிட்டாலும், அதுகுறித்து எதுவும் அறியாமல் இருக்கிறார்கள் இம்மக்கள்!

திருச்சியில் இருந்து மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எல்லா ஊர்களில இருந்தும் இப்படி நடைப் பயணம் மேற்கொள்வோர் அதிகம். நாடு வளர்ந்து விட்டது, பேருந்து கண்டு பிடித்து விட்டார்கள் என்று நாம் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வருகிறது. எங்களுக்கு எல்லாம் தெரியும்(?) நாங்கள் வேண்டுதலுடன் கோவிலுக்குப் பக்தியாய் நடக்கிறோம், என்கிறார்கள் சரி! நீங்கள் வேண்டு மானால் கால நடை போங்கள்.

சின்னஞ்சிறு குழந்தைகளை ஏன் நடக்க வைத்துக் கொடுமைப்படுத்துகிறீர்கள்? என்றால், கோவிலுக்கு நடப்பதால் குழந்தைகளுக்கு கால் வலி வராது என மனம் வலிக்காமல் கூறுகிறார்கள்.

இது இப்படியிருக்க சில நாட்களுக்கு முன்னர் திருச்சியிலிருந்து வேளாங் கண்ணிக்குப் பலர் நடந்து சென்றனர். அச் சமயம் வல்லம் பேருந்து நிலையத் தில் கண்ட காட்சி நமக்கு மட்டுமல்ல, பலருக்கும் வேடிக்கையாகவும், விலா நோகச் சிரிக்க வைப்பதாகவும் இருந்தது.

அது என்னவெனில், 30 வயது மதிக் கத்தக்க மூன்று இளைஞர்கள், வேளாங்கண்ணிச் சீருடையுடன் (!!) வல்லம் பேருந்து நிலையம் நோக்கி வந்தனர். பேருந்து நிலையம் வந்ததும் அங்கிருந்த மர நிழலில் சிறிது இளைப் பாறினர். பின்னர் ஒரு விதப் பதற்றத் துடன் சுற்றும், முற்றும் பார்த்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்து நின்ற தஞ்சாவூர் பேருந்தில் வீர்ரென்று ஏறி உட்கார்ந்து கொண்டனர்.

அவர்கள் பதற்றத்துடன் சுற்றும் முற்றும் பார்க்கக் காரணம், தங்களோடு நடந்து வருகிறவர்கள் தங்களைப் பார்த்துவிடக் கூடாதே என்கிற பதற்றம். இவர்கள் பதறவே தேவையில்லை. ஏனெனில் இவர்களோடு வந்தவர்கள் செங்கிப் பட்டியில் வேறொரு பேருந் தில் ஏறிப் போய்க் கொண்டிருப்பார்கள்.

ஆக, அறிவியலையும், பயன்படுத்தா மல், அறிவையும் பயன்படுத்தாமல் இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவில் லாமல் போகிறது. வாழ்க்கையின் நடையை மாற்றினால், இவர்களுக்கு நல்ல விடை கிடைக்கும் என்பதை நாம் தொடர்ந்து சொல்வோம்.

- வி.சி. வில்வம்

தமிழ் ஓவியா said...


ஆத்திகர்களுக்கு சமயபுரம் என்றால் நாத்திகர்களுக்கு விடயபுரம்


ஆத்திகர்களுக்கு சமயபுரம் என்றால் நாத்திகர்களுக்கு விடயபுரம் அறிவுலக பேராசான் தலைவர் தந்தை பெரியார் எனும் மாபெரும் நோய் தீர்க்கும் பச்சிலை மருந்து தயாரிக்கப்பட்ட இடம்தான் "விடயபுரம்".ஆம்.உலகில் எத்தனையோ பெரிய புரட்சியாளர்கள் தோன்றிய வரலாறுகளை நாம் படித் திருக்கின்றோம்!

ஆனால் ஒரே ஒருவராவது தன் மக்களின் இந்த இழி நிலைக்கு காரணம் நீ தெய்வமாக நினைத்து வழிபடும் இந்த கல்தான் காரணம் என்று மண்டையில் அடித்தாற்போல் சொன்னவர் உண்டா?தந்தை பெரியாருக்கு சிறு வயதிலேயே கடவுள் மறுப்பு சிந்தனைகள் தோன்றி இருந்தாலும் அதை முழு வீச்சுடன் பிரகடனபடுத்தியது என்னவோ இந்த விடயபுரத்தில்தான்.

அந்த விடயபுரத்தைக் காண ஆவலாய் ஒரு நாள் சென்றேன்.அங்கே நான் கண்டது வெறும் கருவை முள் செடிகள் நிறைந்த அடர்ந்த பகுதி.24.05.1967 அன்று தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இந்த இடத்தில் நின்றுதான் கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை!!, கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை பரப்பியவன் அயோக்கியன்!! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!!! என்ற வரலாற்று சிறப்புமிக்க வாசகங்களை போர் பிரகடனம் செய்தார்.

இன்றைக்கு 80 வயது இளைஞர், எனது தாத்தா சுயமரியாதை சுடரொளிமறைந்த காரைக்குடி என்.ஆர்.சாமி. அவர்கள் எப்போதும் சொல்லும் "இரண்டாம் பெரியார்"நமக்கு மட்டுமல்ல இந்த இனத்திற்கு என்றென்றும் ஆசிரியராய் திகழும் தமிழர் தலைவர் அய்யா அவர்கள் விடயபுரத்தில் நினைவு சின்னம் அமைக்க உத்தர விட்டுள்ளார்கள். இனி ஒவ்வொரு கழக குடும்பத்தினரும் ஆண்டுக்கொரு முறை செல்லும் சுற்றுலாவில் இந்தவிடயபுரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நமது குழந்தைகளை அழைத்து சென்று காட்ட வேண்டிய இடங்களில் இந்த விடயபுரமும் ஒன்றாகும். பக்தர்கள் வேண்டுமானால் கால்கள் வலிக்க கற்சிலையை காண கால்நடையாக சமயபுரம் செல்லட்டும்.பகுத்தறிவாளர்கள் நாம் சொகுசான வாகனங்களில் குடும்பத்தினரோடு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு விடயபுரம் செல்வோம்.

நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு கோடானுகோடி பகுத்தறிவாளர்களின் நன்றி.நன்றி வாழ்க தந்தை பெரியார்! வாழ்க தமிழர் தலைவர் வீரமணி!!

- தி.என்னாரெஸ் பிராட்லா, காரைக்குடி

தமிழ் ஓவியா said...


மனு (அ) தர்மம்


பார்ப்பானுடைய தர்மம் உடல் வியர்க்கப் பாடுபடக்கூடாது.

பிச்சை எடுத்தே புசிக்க வேண்டும்.

பார்ப்பான் கேட்டால் எந்தப் பொருளையும் உடனே கொடுக்க வேண்டியது நம்முடைய (சூத்திரன்) தர்மம்.

பார்ப்பான் யாரிடம் பிச்சை கேட்டாலும், தன் பொருளையே - சொத்தையே வாங்கிக் கொள்ளுகிறான்.

பூமி, பணம் எல்லாம் பார்ப்பானுடையது. அதைக் கொடுக்காவிட்டால் உதைத்து வாங்கலாம் என்பது பார்ப்பான் தர்மம்.

ஏர், கலப்பை, வட கயிற்றை பார்ப்பான் கையால் தொட்டாலே பாவம்.

நாம் தான் உழைக்க வேண்டும்.

அதன் உணவை எல்லாம் பார்ப்பான் உண்டு களிக்க வேண்டும்.

சூத்திரன் படிக்கக் கூடாது என்பது அவன் தர்மம்.

இதனால்தான் அவன் படித்து மேலே போகவும் நாம் கீழே இறங்கவுமான நிலைமை ஏற்பட்டது.

இதை எல்லாம் நான் சும்மா சொல்லவில்லை பி.ஏ., எம்.ஏ., படிப்பதை விட அதிகம் படித்தே சொல்லுகிறேன்.

பார்ப்பான் உயர் வாழ்வுக்கே மதமும் கடவுளும். நாம் பாடுபடுகிறோம்

கல் உடைக்கிறோம்;

மரம் வெட்டுகிறோம்; வண்டி இழுக்கிறோம்.

இவ்வளவு கடின வேலைகள் செய்யும் நாம் கூரை வீட்டில் தான் குடி இருப்போம்.

நம் வீட்டுக் கருமாதிக்கு வந்து பிச்சை வாங்கிப் பிழைப் பவனுக்கெல்லாம் மாளிகை வாசம், கார், பங்களா மற்றும் பல வசதிகள் என்றால், நாம் அந்த வாழ்வு வாழ வேண்டும் என்கின்ற ஆசை இருக்காதா?

(நூல்: ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்)
- க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


உடலுக்கு வலிமை தரும் முளைக்கீரை


நாம் உண்ணும் உணவில் தினமும் ஒரு கீரையை சேர்த்துக் கொண்டால் நோயின்றி வாழலாம் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முளைக்கீரை உடல் வலிமை தரும் கீரையாகும். இதனை சிறுவர் முதல் பெரியவர் வரை உண்ணலாம். தண்டுக் கீரை யின் இளம் செடியே முளைக் கீரையாகும். இதனால் இளங்கீரை என்ற மற்ற பெயரும் இதற்கு உண்டு.

முளைக்கீரை உணவுச் சத்துக்கள் மிகுந்த ஒரு கீரையாகும். இக்கீரையை சமையல் செய்துண்ண நாவுக்கு ருசியைத்தரும். வருடம் முழுவதும் வளரக்கூடிய முளைக்கீரை அனைத் துப் பகுதிகளிலும் தடையின்றி வளரும் தன்மை கொண்டது. கால்சியம் சத்து நிறைந்துள்ள இந்த கீரையில் ஏ,பி, வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன..

எலும்புகள் வலுவடையும்: முளைக் கீரையில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கும், வாலிபர்களுக்கும் அதிகம் கொடுக்கலாம். இதனால் எலும்பு வலுவடைவதோடு உடல் வளர்ச்சி அதிகரிக்கும். வயதானவர்கள் இந்தக் கீரையை தினசரி உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. நரம்பு களுக்கும், எலும்பு களுக்கும் தேவை யான சக்தியை அளிக்கும்.

மாலைக்கண் நோய் குண மடையும்: முளைக்கீரை ஒன்றே எல்லா வகையான தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது. இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சி மற்றும் எலும்பினுள்ளே ஊண் அல்லது மேதஸ் என்னும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. நூறு கிராம் முளைக் கீரையில் 9000 (அகில உலக அலகு ) வைட்டமின் உள்ளது.

இது மாலைக் கண்நோய்க்கு சிறந்த மருந்தாகும். முளைக் கீரை சாப்பிடுவ தால் சொறி சிரங்கு மறையும், மூக்கு தொடர்புடைய வியாதிகள் குணமடை யும்., பல்நோய் குணமடையும். நரம்புத் தளர்ச்சி பலமடையும். பலவீனத்தை போக்கி பலம் உண்டாகும். பசியைத் தூண்டும். வயிற்றுப் புண்ணை ஆற் றும். கண்பார்வையைத் தெளிவு படுத்தும். சோம்பலை ஒழித்து சுறு சுறுப்பை உண்டு பண்ணும். அறிவைக் கூர்மையாக்கும்.

தமிழ் ஓவியா said...


மாதுளைபழம்

உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடிய பழங்களில் ஒன்று மாதுளை. அனைவரும் விரும்பி சாப்பிடும் மாதுளையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. உடலுக்கு நல்ல எனர்ஜியை தரக்கூடியது மாதுளை. மேலும், இதய நோய்கள், புற்று நோய் போன்றவை வராமல் தடுக்கிறது. கொழுப்பை குறைக்கும் தன்மை உடையது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும்.

மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். தோலில் ஏற்படும் எரிச்சல், தொண்டையில் பிரச்சினை போன்றவற்றிற்கு சிறந்தது. பிளட் சர்குலேசனுக்கு ஏற்றது மாதுளை. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை கொண்ட மாதுளம் பழத்தை நாமும் சாப்பிடலாமே.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்பந்தமான அனைத்து உடல்நலக் குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வரலாம்.

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகம் தோழர்களின் வெள்ளமென உற்சாகம் பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது முதற் கட்டப் பணியை உடனே முடித்திடுவீர்!


கழகப் பொறுப்பாளர்களே, கழகக் குடும்பத்தவர்களே, பகுத்தறிவாளர்களே, பெரியார் பற்றாளர்களே,

அன்பு வணக்கம்.

பெரியார் உலகம் என்று (திருச்சி - சென்னை நெடுஞ் சாலையில் சிறுகனூரில்) உருவாக்க பலரும் முனைப்புடன் நிதி திரட்டும் அரிய பணியில் - தொண்டில் திளைத்து வருகிறீர்கள்!

ஆங்காங்கு தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட மாவட்டக் கலந்துரையாடலில் உற்சாகம் கரை புரண்ட வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது என்பதை அறிய பெரு மகிழ்ச்சியும், புத்தாக்கமும் கிடைக்கின்றன.

எனவே விரைந்து டிசம்பரில் முதல் கட்டப் பணியை முடித்து, செயல் திறனை உறுதிப்படுத்துங்கள்!

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது
வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!

சென்னை
26.10.2013

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


போப் கூறிய உயர்ந்த உண்மை!


கடவுளும்கூட சிறைக் கைதியே! அவரும் சிறை அறைக்குள்ளே அடை பட்டுத்தான் கிடக்கிறார். - போப் பிரான்சிஸ், வாட்டிகன் ராஜ்ய அதிபர் - உலக அநீதி பற்றிக் குறிப்பிடுகையில் கூறியுள்ளார்!

எப்படிப்பட்ட அருமையான உண்மை!

எவரிடமிருந்து வெளியாகவேண்டுமோ அவரிடமிருந்து முகிலைக் கிழித்த முழு மதிபோல வெளிச்சத்திற்கு வந்துவிட்டது பார்த்தீர்களா?

எந்தக் கடவுளையும் சுதந்திரமாக உலவ விடுவதில்லையே - கடவுளைக் கண்டு பிடித்து இந்த சிறையில் தள்ளிய சீலர்கள்!

கடவுள் என்ற பெரிய பிள்ளைகளின் விளையாட்டு என்பது குறிப்பிட்ட இடத் திற்குள் அடக்கிவிட்டு கதவுகளைப் பூட்டி வைத்து தானே கும்பிடுவது, வணங்குவது முதற்கொண்டு எல்லா கடவுள்களின் பக்தர்களும் செய்கிறார்கள். பிறகு இறுகப் பூட்டு போட்டுக் கதவுகளைச் சாத்தி விடுகின்றனரே!

கடவுள் மட்டுமா? சொர்க்கம் கூட, நரகம் கூடத்தான்!

இவை இரண்டும்கூட கதவில்லாச் சுதந் திரத்தைப் பெற்றதாக அந்த கற்பனைப் புராணங்களிலும் மத நூல்களிலும் கூடச் சொல்லப்படவில்லையே!

போப் அவர்கள் இப்போது சொன்னது படி, மனிதனுக்குச் சுதந்திரம் பெற்றுத் தருவதற்குப் போராடுவதற்குப் பதில் முதலில் கடவுள்களுக்கு அல்லவா விடுதலை - சுதந்திரம் - வாங்கித் தரவேண்டும்!

மகாசந்நிதானம் தவத்திரு.குன்றக்குடி அடிகளார் அவர்கள் கூட, பல கூட்டங்களில் கடவுளும் கைதியும் ஒன்றுதான் என்று மிக அழகாக வர்ணிப்பார்!

கைதிக்குப் பரோல் கொடுப்பதுபோலத் தான் திருவிழாக்களில் அக்கடவுள், கடவுளச்சிகளை வெளியில் சுமந்து வந்து ஊரை உலகத்தைக் காட்டி விட்டு, மறுபடியும் பரோல் முடிந்து, சிறைக்குத் திரும்பும் கைதிகளைப் போல் கோயில்களுக்குள்ளே சென்று மீண்டும் அடைக்கப்படுகிறார்கள்!

கைதிகளுக்கும் வேளாவேளைக்குச் சோறு போடுவதுபோல, கடவுளுக்கும் ஆறுகால பூஜை என்று காட்டி இரண்டு கால் மனிதர்கள் அதை ருசிபார்க்கின்றனர்! அதனால்தான் கோவில்களில் கழிப்பறை (கூடிடைநவ) கட்டப்படவே இல்லை!

தப்பி ஓடுகிற கைதிகளைப்போல தப்பிச் செல்லும் சிவபுரம் நடராஜன் முதல் பல கடவுள்களையும் பிடித்துக் கொண்டு - மீட்டெடுக்க தனிப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் உண்டே!

என்ன வினோதம் பாரு!
எவ்வளவு ஜோக் பாரு!

இன்னும் இந்தப் பிள்ளை விளையாட்டு, இதற்கு ஊடகங்கள் பாடும் தாலாட்டோ, சொல்லி - எழுதி மாளாது; மாளவே மாளாது!

போப் பீடத்தில் உள்ளவர்கள், அண்மைக் காலத்தில் அறிவியல் உண்மைகளை ஏற்கத் தயங்குவதில்லை; விளம்பரப்படுத் துவதிலும் யோசிக்காமல் பேசுகிறார்கள். இது ஒரு நல்லபோக்கு.

அறிவியல் - நாத்திகம் பெற்றுள்ள வெற்றிகள் இவை. உலகம் உருண்டை என்ற கலிலியோவும், மனித உற்பத்தி பற்றி டார்வினும் கூட ஏற்கப்பட்டு விட்டார்களே - இந்த மத உலகில் போப்புகளால் அது வெற்றி அல்லவா?

தமிழ் ஓவியா said...


முட்டாள்தனம்


மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத்திலேயே மாறும். அவன் சந்ததிக் காலத்திலும் மாறும். ஆகவே, அதைச் சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள்தனம்.

(விடுதலை, 28.4.1943)

தமிழ் ஓவியா said...


இருவகை துண்டறிக்கைகள்


தோழர்களே, தலைமைக் கழகத்தில் இரு வகைத் துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

விருத்தாசலத்தில், திராவிடர் கழகம் நடத்திய கடலூர் மண்டல மாணவர் கழக மாநாட்டின்போது, மதவெறியர்களும், ஜாதி வெறியர்களும் தமிழர் தலைவர்மீது மேற்கொண்ட வன்முறை முயற்சி பற்றியது ஒன்று.

தமிழ்நாட்டின் தலைவர்கள் கண்டன அறிக்கை களை வெளியிட்ட பின்பும், தமிழ்நாடு தழுவிய அளவில், திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடத்திய சூழ்நிலையில் இரண்டு பேர்களை மட்டும் காவல்துறை கைது செய்தது.

ஒருவர் பிஜேபிகாரர், இன்னொருவர் இந்து முன்னணிக்காரர். மீதி 28 பேர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காவல்துறையின் இத்தகு ஒரு சார்பான போக்குதான் நாட்டில் அன்றாடம் குற்றங்கள் பெருகி வழிந்து ஓடுவதற்கு முக்கிய காரணமாகும்.

தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் நாட்டில் குடிமக்களுக்குப் பாதுகாப்பு எந்த கதியில் இருக்கும்?

நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போயிற்று என்பதை அதே விருத்தாசலம் மாநாட்டுத் தீர்மானமும் சுட்டிக் காட்டியதை, இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவதும், இடித்துக் காட்டுவதும் பொருத்தமாகும்.

இரண்டாவது துண்டறிக்கை - தீபாவளி மூடத்தனத்தை விளக்கி பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டும் துண்டறிக்கையாகும்.

தீபாவளிபற்றிக் கூறப்படும் நரகாசுரன் கதை அறிவுக்குப் பொருத்தமற்றது என்பது ஒருபுறம் இருந்தாலும் ஆரியப் பார்ப்பனர்கள், திராவிடர்களை, அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் இழிவுபடுத்திக் கொன்றொழித்த தத்துவத்தை உள்ளடக்கிக் கொண்டதாகும்.

இதை தந்தை பெரியாரும், அவர் வழி வந்த திராவிடர் கழகத்தவர்களும் கூறுகின்றார்கள் என்று கூறிட முடியாது; வரலாற்றுப் பேராசிரியர்களே குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி எல்லாம், கழகம் வெளியிட்டுள்ள துண்டறிக்கையில், ஆதார பூர்வமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

வெகு காலத்திற்கு முன்புகூடப் போக வேண்டாம்; மத்தியில் பிஜேபி ஆண்ட காலத்தில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள், வட மாநிலங்களில். மை நாதுராம் கோட்சே போல்தே - என்பது அந்த நாடகத்தின் பெயர். நான்தான் கோட்சே பேசுகிறேன் என்பது அதன் பொருளாகும்.

அந்த நாடகத்தின் கருப்பொருள் என்ன தெரியுமா? காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சே கடவுள் அவதாரம் என்றும், காந்தியார் ஓர் அரக்கன் என்றும் அந்த நாடகத்தில் சித்தரிக்கப் பட்டு இருந்தது.

காந்தியார், தங்களுக்குப் பயன்பட்ட வரை அவரை மகாத்மா என்று போற்றிப் புகழ்ந்தனர். இன்னொரு கட்டத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்க உணர்வைப் புரிந்து கொண்ட நிலையில், இந்துத்துவாவாதிகளின் நச்சு மனப்பான்மையை அவர் அறிந்த தன்மையில், அவர் போக்கில் சற்று மாறுதல் தெரிகிறது என்பதை நுகர்ந்து, அக்கணமே அவரைத் தீர்த்துக் கட்டி விட்டனர்.

அப்பொழுது ஒரு முறை கொன்றனர் என்றால் பிஜேபி ஆட்சியில் இன்னொரு முறை அவரை அரக்கன் என்று கூறி அவரைக் கொச்சைப்படுத்திக் கொன்றுள்ளனர்.

ஆரியப் பார்ப்பனர்களை எதிர்த்தால், அவர்கள் கையில் வைத்திருக்கும் அக்மார்க் முத்திரை அரக்கர்கள் என்பதுதான்.

அந்த ஆரிய ராஜ்ஜியத்தை மீண்டும் உயிரூட்டத் தான் - ஹிந்துராஷ்டிரம் என்ற குரலை முன்னெடுக்க முனைந்துள்ளனர்.

பிஜேபியின் குரலில் சற்று மந்தமாக இது ஒலித்தாலும் அவர்களின் ஆர்.எஸ்.எஸ். குருநாத ரான மோகன் பகத் தெளிவாகவே கூறிவிட்டார் -ஹிந்து ராஷ்டிரக் கொள்கையில் மாற்றம் சமரசம் இல்லை என்று. தீபாவளி வரும் இந்தக் கால கட்டத்தில் இதைப் பற்றிய சிந்தனை தேவை. நாம் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கைகளை வீட்டுக்கு வீடு - கடைக்குக் கடை பரப்புவீர்! பரப்புவீர்!!

தமிழ் ஓவியா said...


நீதிப் போதனையா?


விடுதலை வெளியூர் 15.10.2013 இதழில் நீதிப் போதனையா? என்ற அற்புதமான தலையங்கத்தைப் பலமுறை படித்துப் பார்த்து மகிழ்வுடன் இம்மடலைத் தீட்டுகிறேன்.
மாணவர்களை மட்டும் தனியே பிரித்துக் குற்றப்பத்திரிகை படிப்பதில் பயனில்லை. ஒட்டு மொத்த சமூகத்தின் சுற்றுச் சூழலேக் கூட ஒரு வகையில் பொறுப்புத்தான் என்று கேட்டதோடு நிற்காமல்

ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள்?

வழக்குரைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்?

மருத்துவர்கள் எப்படி இருக்கிறார்கள்?

அரசியல்வாதிகள் எப்படி இருக்கிறார்கள்?

ஏன் சில நீதிபதிகளே கூட எப்படி நடந்துக்கொள்கிறார்கள்?. மதவாதிகள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? காவிவேடதாரிகள் - சாமி யார்கள் தேவநாதன், சங்கராச்சாரியார் எப்படியெல்லாம் நடந்திருக் கிறார்கள் என்று கேட்பதோடு நிற்காமல் இன்னும் மேலே போய்

கற்பழிக்காத கடவுள் உண்டா?

சண்டை செய்யாத கடவுள் உண்டா?

திருமங்கை ஆழ்வாரே திருடியவர்தானே. என்றெல்லாம் ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்து - புராணப் புளுகுகளைப் புகட்டும் பாடத்திட்டம் இருக்கும்வரை குறுக்கே போய் சேறு பூசிக்கொள்ள வேண்டிதான் இருக்கும் என்று சாட்டையடி கொடுத்துள்ளீர்கள்.

1946-ஆம் ஆண்டு முதல் விடுதலையோடு தொடர்பு கொண்டவன் என்ற முறையிலேயே ஆண்டு தவறாது தசரா தீபாவளி சமயங்களில் புராணக் குப்பைக் கதைகளை வெளியிட்டு தமிழ் சமுதாயத்தைக் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி வருவது மேலும் இன்றைய முதல்வரின் அறிக்கையும் - அண்ணா அவர்கள் கூறியது பற்றிய (திராவிடநாடு 26.10.1947) செய்தியையும் எடுத்துக்காட்டி வெளியிட்டுள்ள விடுதலையின் பங்கு மகத்தானது.

அறிஞர் அண்ணா அவர்கள் எத்தகு மேற்கோளுடன் சாமான்யரும் விளங்கிக் கொள்ளும்படியாக எடுத்தியம்பியுள்ள பாங்கு இன்றைய மாணவர், இளைஞர் சமூகம் அறியாத ஒன்று அந்தப்பணியை விடுதலை நிறைவாக அவ்வப்போது செய்தே வருகிறது.

யான் இதைப்படித்த பின் என் இனிய நண்பர் - நாகரசம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் உடன் பிறப்பு க.சின்னகாடி அவர்களிடம் (முரசொலி இதழின் ஆயுள் சந்தாதாரர்) கொடுத்து படிக்கச் செய்தேன்.

அவர் அந்த விடுதலை செய்தியை படித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு நூறு (ஜெராக்ஸ்) நகல் எடுத்து அவரே முன்னின்று மாணவர்கள். இளைஞர்களுக்கு வழங்கி மேலும் பகுத்தறிவுக் கருத்துக்களை விளக்கி உள்ளார். இதற்கு எங்கள் எல்லா ஊரிலும் நிகழ்தல் நலம் பயக்கும் என நம்புகிறேன் என்றும் பகுத்தறிவு கருத்துக்கு நிச்சயம் வரவேற்பு இருந்தே தீரும் என்பதையும் உணர்ந்தேன்.

- பொற்கோவன், வேலம்பட்டி

தமிழ் ஓவியா said...


காங்கிரஸ் தலைவர் பதவி விநியோகம்


இவ்வருடக் கோடியில் சென்னையில் கூடும் காங்கிரஸ் என்னும் கூட்டத்திற்கு தலைவராக நமது பார்ப்பனர்கள் டாக்டர் அன்சாரி அவர்களைத் தெரிந்தெடுத்திருக் கிறார்கள் என அறிகிறோம்.

சென்ற வருடக் காங்கிரசுக்குத் தெரிந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் அப்பதவி பெறுவதற்குச் செலவு செய்தது போல் பணம் கொடுக்கா விட்டாலும், டாக்டர் அன்சாரி அவர்களிடம் அதற்கும் மேற்பட்டதான பெரிய மதிப்புள்ள விலை பெற்றுக் கொண்ட பிறகு தான் நமது பார்ப்பன தேச பக்தர்கள் என்போர்கள் டாக்ட ரைத் தெரிந்தெடுத்திருக்கிறார்கள்.

அந்த விலை எது என்றால் அது தான் மகமதியர் களுக்குத் தனித்தொகுதி வேண்டியதில்லை என்று சொன்னதாகும். டாக்டர் அன்சாரி அவர்கள் மகமதிய சமூகத்திற்காக ஒப்புக்கொண்டதாகச் சொல் வதை மற்ற மகமதியர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா இல்லையா என்பதைப்பற்றி நமது பார்ப்பனர்களுக்கு அவசிய மில்லை. எப்படியாவது அவர்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள ஒரு சந்து கிடைத்தால் போதும்.

இப்போது ஸ்ரீமான்கள் கந்தசாமி செட்டியாரையும், முத்துரங்க முதலியாரையும், குப்புசாமி முதலியாரையும் பிடித்துக் கொண்டு அவர்களையே பார்ப்பனரல்லாதார் பிரதிநிதிகள் என்பதாக ஊர் ஊராய் கூட்டிக் கொண்டு போய் காட்டி எப்படித் தங்கள் காரியத்தைச் சாதிக் கிறார்களோ, அது போல் டாக்டர் அன்சாரி அவர்கள் மகமதியர்களுக்குத் தனித்தொகுதி வேண்டாம் என்றால் அதுவே மகமதிய சமூக பிரதிநிதித்துவம் என்பதாகச் சொல்லி வரப் போகும் கமிஷனில் சரிப்படுத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தின் பேரிலேயே இந்தப் பதவி கொடுத்திருக்கிறார்கள்.

பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு விரோதமாய்ப் பேசினதினாலும், பார்ப்பன ரல்லாதார் சமுகத்தை வைததினாலுமே ஸ்ரீமான் முத்துரங்க முதலியாருக்குச் சட்டசபை வேலை சம்பாதித்துக் கொடுத்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு உப தலைவராக் கினதும், வரப்போகும் காங்கிரசுக்குத் தற்கால வரவேற்பு கமிட்டி தலைவராக்கினதும் யாவரும் அறிவார்கள். டாக்டர் அன்சாரி அவர்களை காங்கிரஸ் தலைமையில் இருந்து கொண்டு மகமதிய சமூகத்திற்கு தனித்தொகுதி வேண்டியதில்லை என்று சொல்லும்படி செய்தாலும்கூட,

நமது மகமதிய சகோதரர்கள் ஏமாந்து விடமாட்டார்கள் என்பதே நமது உறுதி. இப்பொழு திருந்தே அதற்கு வேண்டிய வேலைகள் செய்து கொண்டு வருவதையும் நாம் அறிவோம். ஆனாலும், இப்பதவிகளைப் பார்ப்பனர்கள் தங்களுக்கு எப்படி அனுகூலப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதற்கே இதைக் குறிப்பிட்டோம்.

- குடிஅரசு - கட்டுரை - 24.07.1927
காங்கிரஸ் தலைவர் பதவி விநியோகம்

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரல்லாதவர்க்கு


நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப் பட்டிருக்கிறது. உங்கள் லௌகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில் சிலர் ஆட்சேபித்து வருவதும் உங்களுக்குத் தெரியும்.

தஞ்சை ஜில்லா துவார் என்ற கிராமத்தில் பார்ப்பனர்கள் ஒன்றுகூடி அங்கு கூடின சபையில், நீங்கள் எல்லோரும் சூத்திரர்கள் என்றே தீர்மானமும் செய்துவிட்டார்கள். இத்தீர்மானம் ராஜ்யவாதிகளாக நடிக்கும் பார்ப்பனர்களுக்கும், திருப்தியாக சம்மதந் தான் என்பதற்கு உங்களால் பிழைத்து வரும் சுதேச மித்திரன் இந்து முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் கண்டிக்காமல் இருப்பதே போதுமான சாட்சியாகும்.

ஆராய்ச்சிக் குறைவினால் உண்டான குருட்டுத் தனமான மூடக் கொள்கைகளின் பாசத்தால், கட்டுப் பட்டிருக்கும் உங்களை உள்ளே ரம்பப் பொடியை நிறைத்து வெளியே பொன்முலாம் பூசின நயவஞ்சகப் பேச்சால் இதுவரை ஏமாற்றி வந்த தைரியமும் குலத்தைக் கெடுக்கும் கோடரிக் காம்பு போன்றும் கோழை களான உங்களில் சிலர் அப்பார்ப்பனர்களுடன் சேர்ந்திருக்கும் தைரியமும், உங்களின் இழிவை நிலைநிறுத்தக் காரணமாய் இருந்தது.

நான்கு ஜாதியான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற நான்கு பதத்திற்கும் அவர்களின் இந்து சாஸ்திரத்தில் அர்த்தமெழுதப்பட்டிருக்கிறது. அதில் சூத்திரன் என்ற பதத்தின் அர்த்தம் அநேகருக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந் திருக்கு மென்று பார்ப்பனர்களுக்குத் தெரிந்திருந்தால் இத்தனை தைரியமாக நீங்களெல்லாம் சூத்திரர்கள் என்று தீர்மானம் செய் திருக்கமாட்டார்கள்.

சூத்திரன் என்னும் பதத்திற்குக் கிலேசமுடையவன், துக்கி, வேசிமகன், ஆசார மில்லாதவன், தேஜசில் லாதான், ஒழுக்க மில்லாதவன், ஏவற்றொழில் செய் வோன், சுத்தி இல்லாதவன், கண்டதைப் புசிப்போன், அடிமை என்று இதே இந்து சாஸ்திரத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இந்த அர்த்தத்தையுடையவர்கள் நீங்களானால் எங்களுக்குப் பார்ப்பாரிடம் இனிச் சண்டையேயில்லை.

இந்த இழிவான பட்டத்தை ஏற்றுக் கொள்ள உங்களுக்கு இஷ்டமில்லை என்பதுண்மை யானால் உங்களின் வைதீகச் சடங்குகளைப் பூர்வீக உங்கள் வழக்கத்திற்குக் கொண்டு வந்துப் பார்ப்பாரப் புரோகிதர்களை நீக்கி விடுங்கள்.

- குடிஅரசு - கட்டுரை - 03.07.1927

தமிழ் ஓவியா said...


பாவிடயர்


பஞ்சாபில் நடந்த படுகொலைக்கு காரணஸ்தர்களில் ஒருவரான ஜெனரல் டயர் துரை செத்துப்போனதற்கு அனேகப் பத்திரிகைகள் சந்தோஷம் கொண்டாடுவதன் மூலமாய் டயரை பலவாறாக கண்டபடி வைது எழுதி வருகின்றன. செத்துப்போன ஜெனரல் டயர் துரையைவிட கொடுமையானவர்கள் நம் நாட்டில் உயிரோடு இருந்து கொண்டு, பிள்ளை குட்டிகள் பெற்றுக்கொண்டு சுகமாய் வாழ்கிறார்கள்.

இந்த டயர் களைப்பற்றி எந்த பத்திரிகை யாவது எழுதுகின்றார்களா? ஒன்றுமேயில்லை. காரணம் என்ன? (நமது பத்திரிகைகளுக்கு பெரும்பாலும் சுயபுத்தி கிடையாது. ஒரு பார்ப்பனப் பத்திரிகை வழி காட்டினால் அதைக் குரங்குப்பிடியாய் பிடித்துக் கொண்டு கங்காதரா மாண்டாயோ? கங்காதரா மாண்டாயோ? என்று கத்த வேண்டியதுதான்).

பாவி டயராவது அவரது வகுப்புப் பெண்மீது கல் போட்டார்கள் என்கிற காரணத்தைச் சொல்லி அந்த வீதியில் வயிற்றினால் ஊர்ந்து கொண்டுபோ, மூக்கி னால் உரைத்துக் கொண்டுபோ என்பதான நிபந்தனைகள் போட்டாவது அவர் களுக்கு இஷ்டமான தெருவில் போகும்படி இடம் கொடுத்தார். நமது நாட்டில் இருக்கும் படுபாவி டயர்கள் நாம் ஒரு குற்றமும் செய்யாமல், ஒருவன் மீதும் கல் போடாமல் இருப்பதுடன், அவர் கூட்டத்திற்கும் நாம் நன்றாகச் சோறு போட்டும், பணம் கொடுத்தும் வரும் போதே, அடியோடு தெருவிலே போகக் கூடாது, கிட்டத்திலே வரக் கூடாது என்கிறார்களே,

இதைப்பற்றி யாருக்காவது உரைக்கிறதா, இதனால் நமக்கு அவமானமாக இருக்கிறதே என்று படுகிறதா? எந்தப் பத்திரிகையாவது இம்மாதிரி நடவடிக்கைகள் படுபாவி டயர்கள்தான் என்று எழுதுகிறதா என்று பார்த்தால் இல்லவேயில்லை. பாவி டயர் தன்னுடைய பிறந்த நாட்டிற்காக நன்மை செய்கிறோம் என்கிற எண்ணத்தின் பேரில் கொடுமை செய்தான். நம்முடைய நாட்டுப் படுபாவி டயர்கள் நம்மை தங்கள் நாட்டையும் காட்டிக் கொடுத்து,

தங்கள் நாட்டாரையும் வயிற்றுப் பிழைப்புக்கு மாத்திரம் கொடுமை செய்கிறார்கள். அதோடு நம் நாட்டுப் படுபாவி டயர் கூட்டத்தார் பாவி டயர் செய்த காரியத்தையும் தாங்கிப்பேசி பெரிய பெரிய உத்தியோகமும் பெறுகிறார்கள். அதைப்பற்றியும் பேசுவாரைக் காணோம். எழுதுவாரைக் காணோம். தவிரவும் ஒருவர் செத்துப் போனபிறகு பாவி செத்தான் என்பது அவ் வளவு மனிதத் தன்மையாகாது.

அதிலும், உயிருடன் இருந்துகொண்டு அதைவிட எத்தனையோ மடங்கு அதிகமான கொடுமைகளைச் செய்கிறவர்களை மூடிவைத்துக் கொண்டிருப்பவர்கள் இப்படிச் சொல்வது மிகமிக அக்கிரமமானது என்றே சொல்லுவோம்.

- குடிஅரசு - கட்டுரை - 21.08.1927

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் காலத்தில் வளர்ச்சி! வளர்ச்சி! வளர்ச்சிதான்!

காஞ்சிபுரம் கலந்துரையாடலில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

காஞ்சிபுரம், அக். 26- தந்தைபெரியாருக்கு தமிழர் தலைவர் கிடைத்ததினால்தான் இப்படிப் பட்ட சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. தமிழர் தலைவர் காலத்தில் எங்கு நோக்கினும் வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி தான் என்று திரா விடர் கழ கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:-

திண்டிவனம் திராவிடர் கழகப்பொதுக் குழுவின் தீர்மானங்களை விளக்கும் கலந் துரையாடல் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடை பெற்றது. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் காஞ்சி மாவட்ட செயலாளர் செ.ரா.முகிலன் வரவேற்றுப் பேசினார்.

மாநில மாணவரணி துணைச் செய லாளர் நம்பியூர் மு.சென்னியப்பன் தொடக்க உரையாற்றினார். இதில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்து உரையாற்றினார்.

அவரது உரையில்..

தந்தை பெரியாரால் பயனடைந்தவர்களில் குறைந்த பட்சம் ஆயிரம் பேர் இருக்கமாட் டோமா? நாடே பயன்பெற்றிருக்கிறது என்பது வேறு, தந்தை பெரியாரைப்பற்றி ராமசந்திரா குகா எழுதுகையில் இந்தியாவில் 19 சிந்தனை யாளர்களில் தென்னாட்டில் தந்தை பெரியாரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டார். காரணம் ஈடு இணை யற்ற சுய சிந்தனையாளர் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தை விட இப்போதுதான் அதிகம் பேசப்படுகிறார். அவர் காலத்தில் அவர் பேசாத பகுதிகளில்கூட இன்றைக்கு இயக்கம் வளர்ந்தோங்கி நிற்கிறது. இந்தியா எதிர்கொண்டுள்ள இந்துத்துவா பிரச் சினையை எதிர்கொள்ள தந்தை பெரியாரின் கருத்துகள் தான் மிகச்சிறந்த ஆயுதம்.

வடக்கில் உள்ள சமூகநீதி ஆர்வலர்கள் கூட இதனையே வழிமொழிகிறார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பே ராமன் என்பதை அம்பலப்படுத்தினார். இன்று ராமராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்கிறது இந்துத்துவா.

டில்லியில் பெரியார் மய்யத்தை உருவாக்கி வடக்கிலும் பெரியாரின் கருத்துகள் பரவி வரு கின்றன. இந்தியாவில் தோன்றிய சமூக சிந்த னையாளர்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு தந்தை பெரியாருக்கு இருக்கிறது. காரணம், அவர்கள் உருவாக்கிய இயக்கங்கள் இன்று இல்லை.

காரணம் தமிழர் தலைவரைப் போன்ற சீடர்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அத னால் தான் அவர்களின் இயக்கங்கள் இல் லாமல் போயின, நம்முடைய தலைவர் காலத்தில் எங்கு நோக்கினும் வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி தான். பெரியார் காலத்தில் ஒன்றிரண்டு சிறிய கல்வி நிலையங்கள், இன்று அதனை 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பெரிய பல்கலைக் கழகத்தையே உருவாக்கி இருக்கிறார்.

விடுதலை ஏடு நவீன அச்சு இயந்திரத்தைக் கொண்டு பல வண்ணங்களில் வெளிவருகிறது. நாம் எந்தத் திட்டத்தைத் தொடங்கினாலும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு தொடங் குவதில்லை. ஆனால் நாம் தொடங்கிய எத்திட் டமும் கைவிடப்பட்டதில்லை.

அது போலவே எதிர்வரும் டிசம்பர் 2 இல் தமிழர் தலைவர் பிறந்த நாளில் 1000 பவுன் வழங்கியே தீருவோம் முதற்கட்டமாக தமிழர் தலைவரின் தொலை நோக்குத் திட்டம் வெற்றிபெறும். அய்யாவின் கொள்கை உலகையே ஆளும். இவ்வாறு பேசினார்.

தொடக்கத்தில் கழகத்தோழர்கள் தந்தை பெரியாரின் 95 அடி உயர வெண்கலச்சிலையை அமைக்க பெரிதும் ஆர்வத்துடன் போட்டி போட் டுக் கொண்டு நிதிஅளிப்பதாக அறிவித்தனர்.

கழக தோழர்கள் மத்தியில் உற்சாகம் கரை புரண்டதை நேரடியாகக் காண முடிந்தது. தமிழர் தலைவருக்கு பெரிதும் நன்றி சொல்ல வேண்டும் இவ்வாய்ப்பை அளித்தமைக்கு என்று கழகத் தோழர்கள் உணர்ச்சிப் பொங்கக் கூறினர்.

தமிழ் ஓவியா said...

கூடாதென்று...

தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியலில் ஒரு கொள்கையாய் உள்ளதே தவிர, முதலாளி இவ்வளவு இலாபத்திற்குமேல் சம்பாதிக்கக் கூடாதென்று யாராவது திட்டம் போடுகிறார்களா?

(விடுதலை, 26.7.1950

தமிழ் ஓவியா said...



இராமன்தான் மிகப்பெரிய பயங்கரவாதி
மக்களவையில் தொல். திருமாவளவன் உரை

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே நேற்றும் இன்றும் லிபரான் அறிக்கை தொடர்பாக நடைபெற்றுக்-கொண்டிருக்கிற விவாதங்களை நாடே உன்னிப்பாகக் கவனித்து கொண்டிருக்-கிறது. இந்த விவாதங்களுக்குப்பின்னர் ,அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்றும் நடுநிலையான அரசியல் ஆர்வலர்கள் மிகுந்த ஆவ-லுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்-கிறார்கள் வழக்கமான கமிஷன் அறிக்கைகளைப் போல இதுவும் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டு-விடுமோ என்கிற அய்யமும் பொது மக்களிடையே உள்ளது. எனவே அரசு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்-பட்டுள்ள, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்து-கிறேன்.

ஊருக்குத் தெரிந்த உலகத்திற்கே தெரிந்த உண்மையைத்தான் 17 ஆண்டுகளுக்குப்பிறகு ,லிபரான் இந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார் .இதில் புதிய உண்மைகளையோ அதிர்ச்-சியடையக்கூடிய புதிய சதிகளையோ கூறிவிடவில்லை இந்த அறிக்கையில் எமக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. எனினும் துணிவாக சில உண்மைகளை லிபரான் பதிவு செய்துள்ளார்.அதற்காக அவரைப் பாராட்டுகிறேன் .குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்புக்குக் காரண-மானவர்கள் என்றும் ஆர்எஸ்எஸ், சிவசேனா, பாரதிய ஜனதா ஆகிய அமைப்புகளைச்சார்ந்தவர்களும் திட்டமிட்டே மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளனனர் என்றும் அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் லிபரான் கூறியுள்ளார்.

இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு இஸ்லாமியர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகை யிலாவது ,இந்த அரசு தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் இது முஸ்லிம்களுக்கு காங்கிரசு கட்சி துரோகமிழைத்ததாக அமையும், இந்த மண்ணில் ராமனின் பெயரால், பாபர் மசூதியை மட்டுமல்ல பௌத்த ,சமண மடங்களையும் காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக வன்முறையின் மூலம் இடித்துத் தள்ளி ,அங்கே இந்து கோயில்களை எழுப்பி யுள்ளனர் .ராமனின்பெயரால் சிவபக் தனான இராவணனையே அழித்திருக் கிறார்கள் என்பதை இராமாயணம் என்கிற புராணத்தின் மூலம் அறிய முடிகிறது. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் இராமன் தான் மிகப்பெரிய பயங்கரவாதி என்று தெரிய வருகிறது.

அந்த வகையில் இராமனின் வாரிசுகளாகத்தங்களைச் சொல்-லிக்கொள்ளும் வாஜ்பேயி ,அத்வானி, ஜோஷி போன்ற இந்துத்துவப் பயங்கரவாதிகள் அனைவரையும் அரசு உடனே கைதுசெய்ய வேண்டும்.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுர கட்டடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்கிறபோது, பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா? அதனால் தான் லிபரான் தனது அறிக்கையில் வாஜ்பேயி, அத்வானி போன்றவர்களை போலி மிதவாதிகள் என்கிறார். அப்படியென்றால் பயங்கரவாதிகள் என்று தான் மறைமுகமாக கூறுகிறார்.

எனவேஇந்துத்துவப்பயங்கரவாதிகள் 68 பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மத-வெறியர்களுக்கு இதன்மூலம் ஒரு பாடம் புகட்டவேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன். இவ்வாறு கூறி-னார்..

தமிழ் ஓவியா said...

தந்தைபெரியார்தம் தகுதிமிகு வழித்தோன்றல்!

கலைமாமணி அ. மறைமலையான்

தந்தை பெரியார்தம் தகுதிமிகு வழித்தோன்றல்
சிந்தை ஒளிவீச்சுச் செயல்தலைவர் வீரமணி!
பத்தாம் அகவைமுதல் பகுத்தறிவுச் சொற்பொழிவால்
புத்தம் புதுக்கருத்து பொழிகின்ற தேன்மழையே!

பீரங்கிப் பேச்சாளர் டார்ப்பிடோ/ சனார்த்தனமே
வீரமணி தமைமுதலில் பெரியார்முன் பேச வைத்தார்
ஆசான்ஆ திராவிடமணி அளித்ததூய தமிழ்ப்பெயரால்
வீசுபுகழ் முடிபுனைந்தார் வீரமணி மாணவரே!

பேரறிஞர் அண்ணாவே ஞானசம் பந்தர்என
வீரமணி சிறுவரையே வியந்தந்நாள் போற்றினரே!
இந்தியினை எதிர்த்தேதான் இளைஞரேறு வீரமணி
செந்தமிழின் காவலராய்ச் சிறைச்சாலை ஏகினரே!

சாதியெனும் ஆரியரின் சதிநாகப் பல்லுடைத்தே
வேதஇந்து மதம்வீழ்த்தும் வெடிகுண்டே வீரமணி!
இடஒதுக்கீட் டுரிமையினால் ஏற்றமுற திராவிடரே!
தடவைபல சிறைசென்ற வேங்கையே வீரமணி!

விடுதலை நாளிதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார்;
இடியெனவே ஆரியரை எழுத்தாலே நடுங்கவைத்தார்!
செயலாக்க வல்லுநராய்த் திராவிடர் கழகத்தை
உயிராக மதித்ததற்கே உழைக்கின்ற மாத்தலைவர்!

உலகமெங்கும் பெரியார்பேர் ஓங்கிடவே அவர்பெயரால்
பொலிவுமிகு மய்யங்கள் பூக்கவைத்த சிற்பிஇவர்!
ஆழ்கடல்போல் உலகத்தின் அறிவுநூல்கள் பலபடித்தே
வாழ்வியல் சிந்தனைகள் வடித்துவரும் வழிகாட்டி!

எழுத்தாற்றல் பேச்சாற்றல் செயலாற்றல் மூன்றிலுமே
பழுத்தபடைத் தளபதியாய்ப் பார்போற்றப் பணிபுரிவார்!
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமதை
உருவாக்கி வேந்தர்என ஓங்கிநின்றார் வீரமணி!

ஆருயிர் இளவல்என முதலமைச்சர் கலைஞருமே
பேரன்பால் அழைக்கும்உயர் பெருமையுற்றார் வீரமணி!
எழுபத்தே ழாம் அகவை எட்டுகின்றார்; இளைஞரைப்போல்
எழில்தோற்றம் தரும்தலைவர் நூறாண்டு வாழியவே!

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் மீதான தாக்குதல் புதுவை மாநில சி.பி.அய். செயலாளர் கண்டனம்


புதுச்சேரி, அக். 27- சமூக நீதிக்காக பாடுபட்டு வருபவரும், தந்தை பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளை நாடெங்கிலும் பரப்பி வருபவருமான திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கடந்த 28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் மாணவர் கழக மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற சென்ற பொழுது சில மதவாத சக்திகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி உயிருக்கு சேதம் ஏற்படுத்த முயற்சித்ததை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு சார்பில் வன்மையாக கண்டிக் கின்றோம்.

தமிழக காவல்துறை, இச்சம்பவத்தில் தொடர் புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுகிறோம். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கருத்து பிரச்சாரம் செய்த நரேந்திர தபோல்கர் என்பவர் மதவெறி சக்திகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையும் தமிழக அரசு கவனத்தில் கொண்டு பொது வாழ்க்கையில் ஈடுபட்டு 80 வயதை கடந்த நிலையிலும் அயராது சமூகபணியில் ஈடுபட்டு வருபவரும், கல்விப்பணியில் ஈடுபட்டு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தராக பணியாற்றக்கூடியவருமான இத்தகைய சமூக பொறுப்புமிக்க தலைவர்களை, மதவெறி சக்திகள் மற்றும் ஜாதி வெறி சக்திகளின் தாக்கு தலில் இருந்து பாதுகாத்திட உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...

7 கோள்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு

லண்டன், அக் 27- அய்ரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர். அதில் 7 கோள்கள் உள்ளன. அவற்றில் 5 கோள்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கோள் போன்ற தோற்றத்தில் உள்ளது.

இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கோள்களும் உள்ளன. இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

கோவில் ஆலமரம் சாய்ந்து இருவர் பலி

நிலக்கோட்டை, அக்.27- திண்டுக்கல், அணைப்பட்டி அருகே, பழமையான ஆலமரம் சாய்ந்து, இருவர் பலியாயினர்; 12 பேர் காயமடைந் தனர். அணைப்பட்டி வைகை ஆற்றங்கரையில் உள்ள, வீர ஆஞ்சநேயர் கோவில் முன், நூறு ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது. ஆல மரத்தின் கீழ் சிலர், கடைகள் நடத்தி வருகின்றனர்.

மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால், நேற்று காலை, ஆலமரம், இரண்டாக பிளந்து சாய்ந்தது. மரம் முறியும் சப்தம் கேட்டு, கடை வைத்திருந்தவர்கள் ஓடி தப்பிய நிலையில், மூக்கம் மாள், 80, தாதன், 35, ஆகியோர் சிக்கினர். மூக்கம் மாள் அதே இடத்திலும், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில், தாதனும் இறந்தனர். கோவில் காவலாளி உட்பட, 12 பேர் காயமடைந்தனர்.

தமிழ் ஓவியா said...


இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் வறிய நிலை ஜாதிக்கும் - வறுமைக்கும் உள்ள தொடர்புகள் கவனிக்கத்தக்கவை

11ஆவது அய்ந்தாண்டுத் திட்ட அறிக்கையில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

புதுடில்லி, அக்.27- ஜாதிக்கும் வறுமைக் கும் உள்ள தொடர்பு கள் குறித்து 11ஆவது அய்ந்தாண்டுத் திட் டத்தில் வெளியான தகவல்கள் மிக முக்கிய மானவை. அது குறித்து தகவல்கள் வருமாறு:

தலித் மக்களின் வீடு களில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 83 குழந் தைகள் ஒரு வயது முடி வதற்குள் இறக்கின்றன. தலித் அல்லாதோர் வீடு களில் இந்த விகிதாச் சாரம் 1,000: 61.

அய்ந்து வயதுக்கு உட்பட்ட தலித் குழந் தைகள் 1,000-இல் 39 இறந்து விடுகின்றன. தலித் அல் லாத குழந்தைகளில் இந்த விகிதாச்சாரம் 1,000:22.

தலித் குழந்தைகளில் 75 நோஞ்சானாக இருக் கின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இது 49 .

2000 ஆண்டு கணக் குப்படி 66 தலித் குடும் பங்கள் நிலமில்லாதவை. தலித் அல்லாத குடும்பங் களில் இது 33 .

முக்கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளர்கள்

தலித் மக்களில் முக் கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளிகள். இதர ஜாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே இந்த விகிதாச்சாரம் கால் வாசியாக உள்ளது.

- இந்திய ஜாதிய சமூகம் என்கிற ஒரு பானை சோற்றில், மேலே சொல் லப்பட்ட புள்ளி விவ ரங்கள் ஒரு சோறு பதம்.

மொத்தப் பானையை யும் நீங்கள் பார்வையிட வேண்டுமா? அதற்கு முதலில் பேராசிரியர் சுகதேவ் தோரட்டுக்கு நன்றி சொல்ல வேண் டும். அவர் தலைமையில் 11-ஆவது அய்ந்தாண்டு திட்டக் காலத்தில் (2007-12) மத்திய அரசு அமைத்த பட்டியல் ஜாதியினர் திறன் வளர்ப்புக்கான பணிக் குழுவின் ஆவ ணங்கள்தான் அந்தப் பானை.

கருவில் உருவாவது முதல் கல்லறை வரை தலித் மக்களின் வாழ்க் கைச் சூழல், மற்ற ஜாதி யினரைவிடக் கூடுதல் வறுமையில் வாடுவதை இந்த ஆவணங்கள் படம் பிடிக்கின்றன.

ஜாதி ரீதியான பொருளாதார ஆய்வுகள் தேவை

பொதுவாக, இந்திய சமூகத்தில் ஜாதி ரீதியான பொருளாதார ஆய்வு கள் அதிகமாக வருவ தில்லை. அத்தகைய கருத்துகள் விவாதிக்கப் படுவதைத் தவிர்க்கவே முயல்கின்றனர். அத்த கைய சூழலை மீறி வந்தி ருக்கும் இத்தகைய ஆதா ரங்கள் இந்தியாவில் உள்ள வறுமை பழங்குடி வறுமை, தலித் வறுமை, பிற்படுத்தப்பட்டோர் வறுமை,உயர் ஜாதியினர் வறுமை எனப் படிநிலை ஏற்றத்தாழ்வோடு இருப் பதை வெளிப்படுத்து கின்றன.

அம்பேத்கர் உருவாக் கியதால் இந்திய அரசி யல் சாசனம் இந்திய மக்களிடையே உள்ள படிநிலை ஏற்றத் தாழ்வை அக்கறையோடு பார்க்கிறது. அதனால் தான் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை அனைத்துக் குடிமக்க ளுக்கும் சமூகரீதியிலான, பொருளாதாரரீதியிலான, அரசியல்ரீதியிலான நீதி வழங்குவது என்பது தான் முதல் குறிக்கோள் என்று கூறுகிறது. தலித் மக்களின் மீது பிற்படுத் தப்பட்ட நிலையும், சமூகரீதியான இயலா மையும் திணிக்கப்பட் டுள்ளதை அரசியல் சாச னம் இனம் கண்டிருக் கிறது. அதனால், அரசி யல் சாசனத்தில் சிறப் பான பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட் டுள்ளன.

ஆனால், அரசியல் சாசனத்தின் சமூகநீதி, அரசின் செயல்பாடு களில் வர மாட்டேன் என்கிறது. அரசு இயந் திரத்தில் ஆதிக்க ஜாதி உணர்வுகள் ஆழமாக வேரோடியிருப்பதுதான் அதற்குக் காரணம். அத னால், தலித் மக்களுக் கான, நல்ல பயன்களைத் தரும் திட்டங்கள் நத் தையைத் தோற்கடிக்கும் வேகத்தில் நகர்கின்றன. அரசுக்கு வெளியே இருந்து வருகிற நெருக் குதல்களும் போதுமான அளவு வலுவானதாக இல்லை.

தலித் மக்கள் முன்னேற்றம்

ஜாதி அடுக்குகளைத் தக்கவைத்துக்கொண்டே பொருளாதார வளர்ச்சி அடைய இந்திய சமூகம் முயல்கிறது. ஜாதிய மேல் அடுக்கில் உள்ளவர்க ளுக்கு மேலும் மேலும் சிறந்த வாய்ப்புகள் கிடைத்து முன்னேறிச் செல்லும்போது, அவர் களால் கைவிடப்படுகிற இடங்களைப் பிடித்து தலித் மக்கள் முன்னேற லாம்.

அதனால் பிரச் சினை வராது. ஆனால், மேல்தட்டில் உள்ளோ ருக்குச் சமமாக முன் னேற முயன்றாலோ, அது ஜாதியின் படி நிலையை மீறுவதாகக் கருதி, தலித் மக்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பது பொதுவான போக்காக இருக்கிறது.

சமூகத்தில் பொரு ளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலை யில் தலித் மக்கள் உள் ளனர். எனவே, அவர் களுக்கு மற்றவர்களை விடக் கூடுதல் பயன்கள் அளிக்கப்பட வேண்டும். முதலில் அவர்களின் வறுமை மற்றவர்களின் வறுமையோடு சமப் படுத்தப்பட வேண்டும். அதன் பிறகுதான் வறுமை ஒழிப்பைப் பற் றிய விவாதம் அர்த்த முள்ளதாக இருக்கும். இது தலித் மக்களின் பிரச்சினை அல்ல. இந் திய சமூகத்தின் ஜன நாயகப் பிரச்சினை.

தமிழ் ஓவியா said...


இலங்கையின் தவறுகளை நேரடியாக கண்டிப்பேன்! இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவிப்பு!!

கொழும்பு, அக். 27- இலங்கைத் தமிழர் பகுதிகளை பார்வையிட இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முடிவு செய்துள்ளார். அத்து டன் இலங்கை அரசு செய்துள்ள தவறுகளை தயவு தாட்சண்யமின்றி சுட்டிக் காட்டப்போவ தாகவும் தெரிவித்துள் ளார்.

விடுதலை புலி களுக்கு எதிராக நடந்த சண்டை நடந்த தமிழர் பெரும்பான்மை மிக்க வடக்குப் பகுதிகளுக்குச் செல்லும் முதல் வெளி நாட்டு பிரதமர் கேம ரூன்தான் போரின் போது அப்பாவி மக் களையும், விடுதலை புலி களையும் கொடூரமாக நடத்தி இலங்கை அரசு மனித உரிமையை மீறிய தாக கூறப்படும் புகார் களை காமன்வெல்த் மாநாட்டில் தயவு தாட் சண்யமின்றி எழுப்ப உறுதியாக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் உறுதிப்பட தெரிவித் துள்ளார்.

போரால் பாதிப்புக் குள்ளான தமிழர்களின் வடக்கு பகுதிக்குச் சென்று நிலைமையை நேரில் பார்வையிடவும் அவர்களிடம் கேட்டறி யவும் அவர் முடிவு செய் துள்ளார். இது தொடர் பாக அவர் கூறியதாவது: கொழும்பில் நடக் கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது என நான் எடுத்த முடிவு சரியானதே. போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள், பிற அத்துமீறல்கள் பற்றி தயவு தாட்சண்யமின்றி இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப தயங்கப் போவதில்லை.

விடுதலை புலிகளு டான சண்டைக்குப் பிறகு செய்திருக்க வேண் டிய சில பணிகளை அவர்கள் செய்யத்தவறி விட்டனர். இதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. இது பற்றி இலங்கை அரசி டம் நிச்சயம் கேள்வி எழுப்புவேன். தமிழர் வாழும் வடக்குப்பகு திக்கு இந்த பயணத்தின் போது சென்று பார்வை யிடுவேன்.

தமிழ் ஓவியா said...


குடும்பத்தினரை நாத்திக நெறியில் ஈடுபடுத்திய பெரியார் பெருந்தொண்டர் இராசாசி படத்திறப்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உரை


சென்னை, அக். 27- கவியரசு கண்ண தாசன் நகரை சேர்ந்த பெரியார் பெருந் தொண்டர் இராசாசி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி வியாசர்பாடி குருட்ஷேத்ரா திருமண மண்டபத்தில் 15.10.2013 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. பெரியார் சமூக காப்பணியின் துணை இயக்குநர் தே.பொய்யாமொழி வரவேற்புரை யாற்றினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்து பகுத்தறிவாளர் இராசாசி அவர் களைப் பற்றியும், அவரது குடும்பத்தினரின் இயக்கப்பணிகளைப் பற்றியும் குறிப்பிட்டு உரையாற்றினார். ஆவடி மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் பா.தென்னரசு, நாத்திக கேசவன், சவுரிராசன், திராவிடர் கழக தஞ்சை மாவட்ட அமைப்பாளர் தேசிங்கு ஆகியோர் நினைவு ரையாற்றினர்.

இறுதியாக படத்தினை திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார். அவர் தமதுரையில் குறிப்பிட்டதாவது.

தந்தை பெரியாருக்குப்பின்னும் இந்த இயக்கம் சிறப்பாக இயங்கக் காரணம், தந்தை பெரியார் அவர்கள் தெளிவாக சிந்தித்து தொலைநோக்கோடு இதன் கொள்கைகளை உருவாக்கினார். எனவே தான் இந்த இயக்கம் தலைமுறை தலைமுறையாக குடும்பம் குடும்பமாக தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. அந்த அடிப்படையில் இராசாசி குடும்பம் ஒரு சிறப்பான குடும்பமாகும்.

தனது பேரக்குழந்தைகள் உட்பட அனை வரையும் நாத்திக நெறியில் ஈடுபடுத்தி தமது குடும்பத்தை ஒரு கொள்கை குடும்பமாக உருவாக்கியுள்ளார்.

தமது அனைத்து பிள்ளைகளுக்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத் துள்ளார்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்து மாபெரும் சமூகப் புரட்சிக்கு வித்திட்டார். பெரியார் நிகழ்த்திய போர் கருத்துப்போர்; மூடநம்பிக்கைகள், ஜாதி, பெண்ணடிமை ஆகியவற்றை ஒழிக்க நடைபெற்ற சமூக நீதிப்போர்.

அந்த போர் பல்வேறு எதிர்ப்பு களைத் தாண்டி அய்யா அவர்களின் காலத் திற்குப் பின்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது இன்று உலகளாவிய நிலையில் நடைபெறுகிறது. தந்தை பெரியார் துவக்கிய போரின் வியூகத்தின் முக்கியத் தத்துவம் சமரசம் செய்து கொள்ளாமையாகும். அவ்வழியை பின்பற்றிய இராசாசி அவர்களும் இறுதிவரை கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தவர் என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பி.ஜி.சேகர், இளஞ்செழியன், இளவரசி, இனியவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள் இறையன், வட சென்னை மாவட்டத் செயலாளர் வெ. மோகன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் சத்திய நாராயணசிங், கி.இராமலிங்கம், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் துணைத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும் மற்றும் உறவினர்களும் பங்கேற்றனர்.

இறுதியாக பகுத்தறிவாளர் கழக வட்டச் செயலாளர் கோவி.கோபால் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...


வன்முறை இருபுறம் கூர்மைகொண்ட கத்தி!


பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் இப்பொழுதே, பிரதமராக வந்து விட்டதாகத் துள்ளிக் குதிக்கிறார். மேடையில் அவர் பேச்சில் வெற்று ஆரவாரமும், சண்டியர்த்தனமும் கைகோர்த்துக் குதிக்கின்றன.

ஆத்திரமும், அனாவசியமான வெறுப்பும், பண்பற்ற சொற்களும் அவர் திருவாயிலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கின்றன.

இட்லரின் இறுமாப்பு, கோட்சேயின் குரூரம் ஆகியவற்றின் கலவைகளாகக் காட்சியளிக் கின்றன. இப்பொழுதே இப்படி ஆவேச அக்னிப் புயலாக, வெறுப்புச் சுனாமியாகக் கொந்தளிக் கிறாரே - இவர் பிரதமராக ஆகிவிட்டால், நம் கெதி என்ன என்று சிறுபான்மை மக்கள் மத்தியில், பேரச்சம் உலுக்குகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் மோடிக்கு விசா கொடுக்க மறுத்து வருகின்றன. உள்நாட்டிலிருந்து வெளிநாடு வரை மோடியைப் பற்றி மோசமான பிம்பம் உருக் கொண்டுள்ளது.

உள்நாட்டு மக்கள் மத்தியில், ஒரு பொதுவான மதிப்பு, வெளிநாடுகளிடம் இங்கிதமான எதிர்பார்ப்பு என்கிற இந்த இரண்டு தளங்களிலும் மோடி மோசமான ஒரு பிம்பம் என்ற கருத்து நிலவுகிறது. இவற்றையெல்லாம் கடந்து மக்கள் மத்தியில் மாயப் பிம்பத்தை ஒரு செயற்கையான முறையில் உருவாக்கி வருகின்றனர். பொய்யான தகவலைப் பரப்பி வருகின்றனர். இணைய தளங்களில் உருட்டல், புரட்டல் வேலைகளில் திட்டமிட்டு இறங்கியுள்ளனர். 18 வயது நிரம்பிய இளைஞர் களிடம் இனந் தெரியாத வரவேற்பை உருவாக்கிக் கொண்டுள்ளனர். மதச் சார்பற்ற சக்திகள் இதில் கவனமாக இருந்து முறியடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்படியொரு சூழ்நிலையில் பி.ஜே.பி. மற்றும் மோடிமீது அனுதாபம் உண்டாக்கும் வகையில் எந்த நிகழ்வும் நடைபெறுவது விரும்பத்தக்கதல்ல.

பிகாரில் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள மோடி சென்றபோது சில இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு, உடன் தண்டனை அளிக்கப்பட வேண்டும். இந்தியன் முஜாகிதின் அமைப்பு இதற்குப் பொறுப்பு ஏற்றிருப்பதாக ஒரு தகவல்; யார் இதனைச் செய்திருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்படவும் வேண்டும். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இவர்களின் ஆத்திரச் செயல்கள் அறிவுக்குச் சத்ருதான். இதன்மூலம் இந்துத்துவா வெறியர்களுக்கு உதவி செய்த வர்கள் என்றே பொருள்.

அதே நேரத்தில் மோடியோ பி.ஜே.பி.யோ சங்பரிவார்க் கூட்டத்தைச் சேர்ந்தவர்களோ வன்முறையைச் சிறுபான்மை இனத்தவர்மீது சுமத்துவதற்கு எந்த வகையிலும் தகுதி உடையவர்கள் அல்லர்.

1992 டிசம்பர் 6ஆம் தேதி, பாபர் மசூதியை ஒரு பெருங்கூட்டம் பிஜேபி சங்பரிவார்ப் பெருந் தலைவர்களின் வழிகாட்டுதலோடு, எப்பொழுது இடித்துத் தரை மட்டமாக்கினார்களோ - அன் றைக்கே இந்தியாவில் மதவெறிக்கும், வன் முறைக்கும் தீவிரமாக நச்சு விதையை விதைத்து விட்டனர் என்று பொருள்.

வன்முறை என்பது இரு பக்கமும் கூர் கொண்ட கத்தி என்பதை மறந்து விடக் கூடாது.

பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள், இதுவரை தண்டிக்கப்படாததும்கூட, மக்கள் மத்தியில் வன் முறை மீதான ஈர்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக் கிறது.

எது எப்படியாக இருப்பினும், இந்துத்துவா கும்பலின்மீது பொது மக்களிடத்தில் அனுதாபம் ஏற்படும் வகையில், யார் நடந்து கொண்டாலும் அவர்கள் தங்களை அறியாமலேயே, தங்களுக்குத் தாங்களே தீங்கு செய்து கொண்டவர்கள் ஆவார்கள்.

சிறுபான்மை மக்களின் தலைவர்கள் வெளிப்படையாக இதுபற்றி கருத்துக்களை பதிவு செய்வதும்கூட அவசியமே!

தமிழ் ஓவியா said...


கடவுளின் சக்தி இவ்வளவுதான்!


கோயிலுக்கு சென்ற பெண் மயங்கி விழுந்து மரணம்

தண்டையார் பேட்டை, அக்.28- கொருக்குப் பேட்டை அண்ணாநகர் அன்பழகன் தெருவைச் சேர்ந்தவர் ரவிசந்திரன். இவரது மனைவி சாய்லட்சுமி (42). நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு சாய்லட்சுமி சென்றார். கோயிலில் தரிசனம் முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். வெளியே வந்ததும், அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள், பக்தர்கள் திரண்டனர். சாய்லட்சுமியை தண்ணீர் தெளித்து எழுப்பினர். அவர் மயக்க நிலையில் இருந்ததால், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப் பினர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத் துவர்கள் சாய்லட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். கோயி லுக்கு சென்ற பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...


திராவிடர் இனம் காக்கும் கழகத் தலைவரை பேணிக்காத்து பெரியாருக்குச் சிலை வடிப்போம்!


திருப்பூர் கலந்தாய்வில் பொதுச்செயலாளர் பிறைநுதல்செல்வி உரை

திருப்பூர், அக். 28- திராவிடர் இனம் அழிந்து போகாமல் பாதுகாக்கப்பட தமிழர் தலைவரைப் பாதுகாத்து, பெரியாருக்கு 95 அடி உயர சிலையை நிறுவுவோம் என்று தி.க. பொதுச்செயலாளர் மருத் துவர் பிறைநுதல் செல்வி உரையாற்றினார்.

24.10.2013 வியாழன் மாலை 6 மணியளவில் திருப்பூர் பழைய பேருந்து நிலையம், பெரியார் புத்தக நிலையத்தில் திருப்பூர் மாவட்ட தி.க. கலந்துரையாடல் கூட்டம் துவங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை வகித்து உரை நிகழ்த் திய தி.க. பொதுச்செயலாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி குறிப்பிட்டதாவது;

மனுநீதியைக் கட்டாயப்பாடமாகக் கொண்ட குஜராத்தின் முதல்வர் மோடியை முன்னிறுத்தி இந்து ராஷ்ட்டிரம், இந்து நாடு என்பன போன்ற காட்டுமிராண்டித் தனமான அடிப்படை வாதங் களைச் செயலாக்க பா.ஜ.க.முயன்று வருகிறது. இதற்கு தக்கதொரு பதிலடியைக் கொடுக்கும் மாநாடு தான் வருகிற நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் திராவிடர் எழுச்சி மாநாடு. இதில் கழகத் தோழர்கள் பெருவாரியாக குடும்பத் தோடு பங்கேற்க வேண்டும். நம்மின மக்களையும் பெருமளவு கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

மேலும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத, ஜாதீய கட்சிகளுக்கு ஒரே எதிர் இலக்கு திராவிடர் கழகமும், திராவிடர் கழகத் தலைவரும் தான். ஏனென்றால் நமக்கு எதிரான திட்டம் மத வாத, ஜாதீய கட்சிகளின் திட்டமாகும்.

எனவே எதிரிகளால் குறிவைக்கப்பட்ட நம் முடைய குடும்பத் தலைவரான தமிழர் தலைவரைப் பேணிக் காப்பதும், அந்தத் தலைவரின் ஆசைப்படி திருச்சி சிறுகனூரில் 95 அடியில் அறிவுப் பேராசான் தந்தை பெரியாருக்கு வானளாவிய சிலையை அமைப்பதும் நம் தலையாய கடமையாகும்.

காலா காலத்திற்கும் பேசப்படும் இந்த சிலை அமைப்பு நிகழ்வுக்கு அனைத்து தரப்பு மக்களி டமும் தாராளமாக உதவிகள் கேட்டுப் பெறலாம். இந்த மண், பெரியாரால் பயன்பெற்ற மண்தானே!

விரைவில் தலைமைக் கழகத்திலிருந்து நன் கொடை புத்தகங்களும், துண்டறிக்கைகளும் வர விருக்கின்றன. இப்பணியை செவ்வனே முடித்தால் நாம் நம் இனத்தையும், நம் தலைவரையும் பாது காத்தவர்களாவோம் இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...

சென்னை, அக்.28- தந்தை பெரியார் அவர் களுக்கு 95 அடி உயரத்தில் சிலை அமைக் கும் திட்டத்திற்குக் கழகத் தோழர்கள் தத்தம் மாவட்டக் கழகங்களின் சார்பில் தங்கத்திற்குப் பதிலாக நிதி அளிப்பதில் போட்டிப் போட்டுக்கொண்டு அறிவிப்பு களைச் செய்தனர்.

தாம்பரம்

அய்யாவின் 95 அடி உயர வெண்கலச் சிலை நம் கண்முன்னே நிற்கிறது. கேட்ட பொழுது உடலெல்லாம் சிலிர்க்கிறது என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன். தாம்பரம் மாவட்ட கலந்துரையாடலில் இவ்வாறு பேசினார். இதன் விவரம் வருமாறு.

திண்டிவனம் பொதுக்குழு கூட்ட தீர் மானங்களை விளக்கி நடைபெற்றுவரும் கலந்துரையாடல் கூட்டம் தாம்பரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதற்கு கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் தலைமை வகித்தார்.

மாநில மாண வரணி துணைச்செயலாளர் மு.சென்னியப் பன், அமைப்புச் செயலாளர் வெ.ஞான சேகரன், மண்டல செயலாளர் வி.பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்டு தலைமை உரை யாற்றிய கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசியதாவது:-

சென்னையில் ஒரு பெரிய விடுதியில் அண்மையில் ஒரு கலந்துரையாடல் நடை பெற்றது. மதச் சார்பின்மை கொள்கை யுடைய மக்களின் பிரதிநிதிகளை ஒருங் கிணைத்த அக்கூட்டத்தில் இந்துத்துவா பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. அகில இந்திய அளவில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

இதில் தமிழ் நாட்டில் எந்த அரசியல் கட்சியையும் அழைக்கவில்லை. திராவிடர் கழகம் மட்டுமே பங்கேற்றது. அதில் தமிழர் தலைவர் சார்பில் நான் கலந்து கொண்டு பேசினேன். அப்போது அங்கு பேசிய வடபுலத்து அறிஞர் பெருமக்கள் குறிப்பாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பேசியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அவர்கள் பேசியபோது இந்துத்துவாவை எதிர்க்க வலுவான ஆயுதம் பெரியாரின் கருத்துகள் தான். இந்தளவிற்கு அறிவு பூர்வமாக, சிந் தாந்த ரீதியாக இந்துமதத்தை, மதவாதத்தை பெரியார் தோலுரித்துக் காட்டினார். எனவே பெரியார் கருத்துகள் இந்தியா முழுவதும தேவைப்படுகின்றன என்று குறிப்பிட்டனர்.

இது இக்காலகட்டத்தில் மிகமுக்கியப் பிரச்சினையாகும். பிள்ளை யார் சிலையையும், இராமன் படத்தையும் பெரியார் எதிர்த்து இயக்கம் நடத்திய தற்குக் காரணம் அப்போது புரியாதவர்கள். இப்போது புரிந்து கொண்டார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக் கோடு அடையாளம் காட்டியவர் பெரி யார். இன்றுதான் இந்துத்துவாவின் ஆபத்தை உண்ர்ந்து இருக்கின்றனர்.

நமக்கு வாழ்வளித்த தந்தை பெரியா ருக்கு நாம் செலுத்தப்போகும் நன்றி என்ன? நீண்ட காலமாக தமிழர் தலைவர் எண் ணத்தில் மலர்ந்த திட்டமான தந்தை பெரியாருக்கு மிக உயரமான சிலை 95 அடி உயரத்தில் வைக்க வேண்டும் என்பதை இன்று செயலாக்கம் செய்து மகிழ இருக் கிறோம்.

திண்டிவனத்தில் அறிவித்தபோதே தோழர்கள் காட்டிய உற்சாகம் நம்மை பெருமையடைய வைத்தது, நினைக்கும் நேரத்திலேயே நம் மனக்கண் முன்னால் அய்யாசிலை நிற்கிறது. உடலெல்லாம் சிலிர்க்கிறது. அத்துடன் அருங்காட்சியகம், புத்தக விற்பனை நிலையம், சிறுவர் பூங்கா என பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைய உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.

பல லட்சக்கணக்கான மக்கள் பார்க்கப் போகிறார்கள். இப்படிப் பட்ட பெரிய சாதனை நம் தமிழர் தலைவ ரால் மட்டுமே நிகழ்த்த முடியும். தந்தை பெரியார் தன் இயக்கத்திற்கு ஏற்படுத்திய பாதுகாப்பை - ஒரு ஏற்பாட்டை இப்போது உலகத்தால் உணர முடிகிறது அல்லவா?

தந்தை பெரியாருக்கு அன்னை மணியம் மையாரும், தமிழர் தலைவரும் கிடைத்த தினால் நடைபெற்ற சாதனை இது. இவ்வாறு பேசினார்.

தமிழ் ஓவியா said...

நரகாசுரன்

========

நரகாசுரப் படுகொலை என்னும் இப்புத்தகத்திற்கு நான் முகவுரை எழுத வேண்டும் என்று, எனது நண்பர் ஒருவர் வேண்டிக்கொண்டார். மகிழ்ச்சியோடு சம்மதித்து எழுதுகிறேன். நரகாசுரன் என்பதாக என்பதாக ஒருவன் இருந்தானோ, இல்லையோ என்பதும், நரகாசுரன் வதை சம்பந்தமான கதை, பொய்யோ, மெய்யோ என்பதும் பற்றி, நான் கவலை எடுத்துக் கொள்ளவில்லை. இப்படிப்பட்ட கற்பனைகளைச் செய்து, ஆரியர்கள் அவற்றை நம் தலையில் சுமத்தி, நம்மை அதற்கு ஆளாக்கி தங்கள் உயர்வுக்கும், நமது இழிவுக்கும்; தங்கள், வாழ்வுக்கும், நமது தாழ்வுக்கும்; அவர்கள் நலத்திற்கும், நம் முட்டாள் தனத்துக்கும், நிரந்தர ஆதரவாக்கிக் கொண்டு, பாடும், கவலையுமில்லாமல் சுகபோகிகளாய் இருந்து, நம்மைச்சுரண்டி வருகிறார்களே என்பதற்காகவே, நான் கவலைப்பட்டு இதன் தன்மையை, நம் திராவிட மக்களுக்கு உணர்த்துவதற்கு ஆக பொதுவாகவே, ஆரிய சாஸ்திர புராண இதிகாசங்களின் ஆபாசங்களையும், காட்டுமிராண்டித் தனங்களையும், விளக்கும் தொண்டை எனது வாழ்வின் முக்கிய தொண்டுகளில் ஒன்றாகக் கொண்டு, பணியாற்றி வருகிறேன். அதனாலேயே இப்படிப்பட்ட புத்தகத்திற்கு என்னை முகவுரை எழுதக் கேட்டார்கள் என்பதாகக் கருதியே, எழுதச் சம்மதித்தேன்.

திராவிட மக்கள் அருள்கூர்ந்து, நரகாசுரன் வதைப் புராணத்தை, சற்று, பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும். கதையின் சுருக்கம் என்னவென்றால்; நரகாசுரன் என்கிற அசுரன், அயோக்கியனாக இருந்தான்; கடவுளால் கொல்லப்பட்டான்; பொதுமக்கள் அவனுடைய சாவுக்காக, மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்பதேயாகும்.

ஆனால், இதற்காக சித்திரித்த கதையின் தன்மை எப்படிப்பட்டது? அதன் உள் கருத்து எப்படிப்பட்டதாய் இருக்கும்? இந்த 20-ஆம் நூற்றாண்டாகிய விஞ்ஞான காலத்தில், இதை நம்பி இக்கருத்துக்கு ஆளாகலாமா? என்பதைச் சிந்திக்கத்தான், இந்த நரகாசுரப் படுகொலை என்கின்ற புத்தகம், அருப்புக்கோட்டை தோழர் வி.ஷி. இராமசாமி அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது. இந்த மூலக்கதைக்கு, நரகாசுரன் தேவையே இல்லை என்றாலும், திராவிடர்களை இழிவுபடுத்துவதற்கு என்று, எழுதப் புகுந்த கற்பனையில், ஆரியர்களது நிலை, தன்மை, ஆகியவை எவ்வளவு இழிவாகக் கூடியதாயிருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், இக்காரியத்தில் புகுந்திருக்கிறார்கள். இதற்கு ஒரு சமாதானம் என்னவாக இருக்குமென்றால், இக்கதை தொகுத்த காலத்தில், ஆரியர்கள், அவ்வளவு காட்டுமிராண்டிகளாகவும், அவ்வளவு மானாவமானக் கவலையற்ற மிருக வாழ்வு வாழ்ந்தவர்களாகவும், இருந்திருக்கலாம் என்பதாகக் கொள்ளலாம். என்றாலும், இக்காலத்திலுள்ள ஆரியர்களும்; அதாவது, எவ்வளவு விஞ்ஞான அறிவு, பகுத்தறிவு, மான உணர்ச்சி கொண்ட இக்கால ஆரியர்களும், இந்த, இது போன்ற ஆபாசக் கதைகளைக் காப்பாற்றி பிரசாரம் செய்து, மக்களையும் அவற்றை நம்பி நடக்கும்படி செய்கிறார்கள் என்றால், நம் மக்கள் நிலை அதைவிட காட்டுமிராண்டித் தனமானதும், மானாவமான லட்சியமற்றதும், மிருகப்பிராயத்திலிருப்பதும், அல்லது அப்படியெல்லாம் இருப்பதாக அவர்கள் கருதி இருப்பதாகவாவது இருக்கலாம்.

எப்படி இருந்தாலும், இனியாவது பகுத்தறிவோடு, மான உணர்ச்சியோடு, சிந்திக்க வேண்டியது திராவிடர் கடமையாகும். ஆரியக் கற்பனையாகிய இக்கதையில் உள்ள முக்கிய சில குறிப்புகளை மாத்திரம் குறிப்பிடுகிறேன் :

1. இரணியாட்சன் என்கிற இராக்கதன், பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு சமுத்திரத்திற்குள் போய் பாதாளத்தில் ஒளிந்துகொண்டது.

2. மகாவிஷ்ணு என்கின்ற கடவுள், பன்றி உருவம் எடுத்து, சமுத்திரத்திற்குள் புகுந்து, இராக்கதனைக் கொன்று, பூமியை எடுத்துக்கொண்டு வந்து விரித்துவிட்டது.

3. இந்த விஷ்ணுப் பன்றியைக் கண்டு, பூமிதேவி காம விகாரப்பட்டுப் போகித்துக் கலவி செய்தது.

4. இக் கலவியின் பயனாய் ஒரு பிள்ளை பிறந்து, அப்பிள்ளை ஒரு அசுரனாக ஆகி, ஒரு இராஜ்ஜியத்தை ஆளும், அரக்கனாகி, தேவர்களுக்கு (ஆரியர்களுக்கும், தன் தாய் தந்தையான கடவுளுக்கும்) கேடு செய்தது.

5. பிறகு, அந்த நரகாசுரனைக் கடவுளும் கடவுள் மனைவியும் கொன்றது.

6. அந்தக் கொலைக்கு, மக்கள் மகிழ்வது.

7. அந்த மகிழ்ச்சிக்குப் பேர்தான் தீபாவளி கொண்டாட்டம்.

என்பனவாகிய இந்த ஏழு விஷயங்களை திராவிட மக்கள் மனித புத்தி கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதே, இப் புத்தகம் எழுதியவருடைய ஆவல்.

ஆதலால், பொதுமக்கள் இதை இந்தப் புத்தகத்தின் உதவியைக்கொண்டு நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தீபாவளி கொண்டாட வேண்டியது அவசியம் என்று பட்டால் அந்தப்படி செய்யுங்கள். அதுவே ஆசிரியருக்கு மக்கள் கைம்மாறு ஆகும்.

இப்புத்தகம் எழுதியதற்காக தோழர் M.S. இராமசாமிக்கு திராவிடர் சார்பாக எனது நன்றி உரித்தாகுக.

* தந்தை பெரியார்