Search This Blog

19.10.11

தீபாவளியும் - அவதாரங்களும்!


மகாவிஷ்ணு எனும் இந்துக் கடவுள் திருமால் எனவும் கூறப்படுகிறது. இந்தக் கடவுளை இந்து மதத்தின் மற்றொரு பிரிவினரான சைவர் ஏற்றுக் கொள்வது கிடையாது. பல கடவுள் மதம் என்பதால் இந்தக் கோளாறு. விஷ்ணு பத்து அவதாரங்கள் எடுத்தது. - ஒன்பது முடிந்து விட்டது.- ஒன்று மீதி உள்ளது. - அது கல்கி அவதாரம் - என்றெல்லாம் புராணங்களில் எழுதப்பட்டுள்ளன என்கிறார்கள்.

நாம்தான் வேதங்களைப் படிக்கக்கூடாது. நாம் படிப்பதற்காகத்தான் புராணங்களே எழுதப்பட்டன. அப்படி 18 புராணங்கள் எழுதப்பட்டன. இவை தவிர துணைப் புராணங்கள் 18 உள்ளன. இவற்றில் கருட புராணம் என்பது மெயின் புராணங்களில் ஒன்று. அதன்படி திருமால் இதுவரை 21 அவதாரங்கள் எடுத்திருக்கிறது. 22 ஆம் அவதாரத்தை இனிமேல்தான் எடுக்க வேண்டும். அதுதான் கல்கி அவதாரம். யாரோ ஒரு எத்தன் கல்கி அவதாரம் தான் என்று கூறிப் பெண்களையும், பெற்றோரையும் ஏமாற்றிப் பிழைத்து வருகிறான். ஆந்திரா, மராட்டியம் உள்பட பல மாநிலங்களில் பல வழக்குகள் அவன் மீது.

முதல் அவதாரம் மச்சாவதாரம். - முதல் முதலில் நீரில்தான் ஜீவராசிகள் (உயிரிகள்) தோன்றின என அறிவியல் கூறுகிறது.- இரண்டாம் அவதாரம் ஆமை.- இது நீரிலும், நிலத்திலும் வாழக் கூடியது. மூன்றாம் அவதாரம் பன்றி. இது விலங்கு. - நான்காம் அவதாரம் நரசிம்மம். -பாதி விலங்கு, பாதி மனிதன் - பின்னர் வாமன அவதாரம் - (குள்ளப் பார்ப்பனன்) என்று வரிசைப்படுத்தி அறிவியலோடு தொடர்புபடுத்தித் தம் மூடக் கற்பனையை நியாயப்படுத்த பக்திக் குமுதம், பக்தி விகடன், காமகோடி, ஆன்மீகம் அருள்சோதி என்றெல்லாம் பார்ப்பனர் ஏடுகளில் எழுதி வருகிறார்களே! அவை பொய்.

கருட புராணப்படி முதல் அவதாரம் குமாரன், பிரம்மச்சாரி, தவம் செய்தார். இரண்டாம் அவதாரம் வராகம்,- மூன்றாம் அவதாரம் தேவ ரிஷி, நான்காம் அவதாரம் நரநாராயணன் - இப்படியே போய்... பத்தாம் அவதாரம்தான் மீன் - பதினொன்றாம் அவதாரம்தான் ஆமை 14 ஆம் அவதாரம் நரசிம்மம் 15 ஆம் அவதாரம் வாமனன் 16 ஆம் அவதாரம் பரசுராமன். 19 ஆம் அவதாரம் இராமன் - 20 ஆம் அவதாரம் கிருஷ்ணன் 21 ஆம் அவதாரம் புத்தர் 22 ஆம் அவதாரம் கல்கி (எதிர்காலத்தில் எடுக்குமாம்) என ஆகிறது.

பூவுலகை மீட்கத்தான் வராக (பன்றி) அவதாரமாம். நியாயப்படி பார்த்தால் விஷ்ணு புராணத்தில்தான் அதன் அவதாரங்கள் பற்றி எழுதியிருக்க வேண்டும். மாறாகக் கருட புராணத்தில் எழுதப்பட்டுள்ளது. ஏன்? சரி, விட்டுவிட்டுப் பன்றியின் கதையைப் பார்ப்போம். அதுதானே தீபாவளியின் கதை!

பன்றியின் கதைதான் வராக புராணம். பன்றியே விஷ்ணுவே பூமாதேவிக்குச் சொன்னதாம். பிரளய முடிவில் இருட்டில் மூழ்கி இருந்த உலகை வராகம் உயர்த்தி வெளிக் கொண்டு வந்ததாம். பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி ரிஷிகளில் காஷ்யபன், அதிதி தம்பதிகளின் புத்திரன், விசுவாஸ்வனன். அவன்தான் சூரியன் என்கிறது பிரம்ம புராணம். முதல் புராணத்திலேயே சூரியனை அறிமுகப்படுத்திவிட்டு 15 ஆம் புராணத்தில் பூமி இருட்டில் இருந்தது என எழுதினால்... என்னய்யா முரண்பாடு?

இதே வராக (பன்றி) அவதாரத்தைப் பற்றி விஷ்ணு புராணத்தில் என்ன எழுதி-யிருக்கிறார்கள், தெரியுமா? நீரின் மேல் தாமரை இலை மட்டும் மிதக்கக் கண்டதாம் விஷ்ணு. உடனே நீரில் குதித்து பூமிதேவியை எடுத்ததாம். அதன் வேண்டுகோளின்படி, வராக ரூபம் கொண்டு தனது கொம்பு நுனியில் பூமியை உயர எடுத்து (பாதாளத்திலிருந்து) அருளியதாம். (வெளிநாடுகளில் நீரில் குதித்து மூழ்கித் தன் மூக்கால் பந்தை உருட்டித் தள்ளி வேடிக்கை காட்டும், டால்ஃபின் மீன். புராணத்தில் இதே வேடிக்கையைப் பன்றி காட்டியுள்ளது).

யோகிகள் எல்லாம் பன்றியைக் கும்பிட்டு பூமியை உத்தரித்து சுகத்தினைக் கொடுத்து அருள் புரிய வேண்டும் எனக் கேட்டார்களாம். உடனே பன்றி, பூமியைப் பழையபடியே நீரின் மீது நிறுத்தி அருள் புரிந்ததாம். இதை பெரிய திருமொழிப் பாசுரம்
ஏனாகி உலகிடந்து அன்று இருநிலனும்
பெருவிசும்பும் தாளாய பெருமான்

எனப் பாடுகிறது. பிறகு நரகாசுரன் எங்கே வருகிறான்?

கேசவதுதி பாடியதால் பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று பன்றி உரு எடுத்து கடலுக்குள் நுழைந்தார். இரண்யாட்சதனுடன் சண்டை போட்டு, அவனைக் கொன்று, பூமியை வெளிக் கொணர்ந்து விரித்தார் என்றுதான் வராக புராணம் கூறுகிறது.

பூமி தட்டை எனக்கூறிய முட்டாள்களால் எல்லாப் புராணங்களுமே எழுதப்பட்டன. ஆகவே பூமியைச் சுருட்டினான் என்றும், கடலில் புகுந்தான் என்றும், பன்றி மீட்டது என்றும் கதை எழுதி வைத்துவிட்டார்கள்.

ஒவ்வொரு அவதாரம் எடுக்கும் போதும் மகாலட்சுமி எனும் விஷ்ணுவின் மனைவியும் உடன் தோன்றி ஒரு கல்யாணம் செய்து கொள்ளுமாம். இதனால்தான் விளையாட்டு எனும் பொருள் கொண்ட கல்யாணம் என்ற சொல் சூட்டப்பட்டதோ?

ஒரு மாநிலத்தில் வாமன அவதாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.

ஒரு மாநிலத்தில் இராம அவதாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.

ஒரு மாநிலத்தில் இராமன் ஜெயித்த நாள் எனக் கதை. ஒரு மாநிலத்தில் சீதையுடன் நாடு திரும்பும் நாள் எனக் கதை.

ஒரு மாநிலத்தில் கூர்ம (ஆமை) அவதாரத்துடன் தொடர்புபடுத்தி விஷ்ணுவும் லட்சுமியும் கல்யாணம் செய்து கொண்ட நாள் எனக் கதை.

இந்து மதம் ஒன்றுதானே! ஏன் இந்து மதத்தின் விழாக்களின் கதைகள் ஒரே மாதிரி இல்லை? அவரவர் கற்பனைப்படி கதையளந்து கொண்டு விழா நடத்துவது என்றால்...

புராணம் எழுதியவர்களுக்குப் புத்தி இல்லை என்றுதான் பொருள். பொய் சொல்வதற்கும் கூடப் புத்திசாலித்தனம் தேவைப்படுமே! பலப்பல நபர்கள் பலப்பல காலங்களில் எழுதிச் சேர்த்த கதைகள்தான் புராணங்கள்! அத்தனையும் பொய்ப் புளுகு மூட்டைகள். அம்மட்டே!

-----------------------"விடுதலை", 19.10.2006

0 comments: