Search This Blog

3.10.11

தீண்டாமைக்குக் கட்டியங்கூறும் சின்னம் கோபுரங்கள்!


கிருஷ்ண தேவராய மன்னரால் 500 ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டது ஆந்திர மாநிலத்தில் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோவில்.

இந்தக் கோவிலின் கோபுரம் 2011 மே மாதம் 26ஆம் தேதியன்று இடிந்து தலைகுப்புற விழுந்தது.

நேற்று முதல் நாள் கலசமும் இடிந்து விழுந்தது. இந்தக் கோவிலுக்கு ஏகப்பட்ட தல புராணக் கதைகள் உண்டு (இந்தக் காலத்து டி.வி. விளம்பரம் போல)

இந்தக் கோவில் கருவறையில் உள்ள திருமேனி சூட்சுமலிங்கமாம். கோபுரமோ ஸ்தூல லிங்கமாம். கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாதாம் - தூரத்தில் இருந்தே கோபுரத்தைப் பார்த்து ஒரு கும்பிடு போட்டாலே புண்ணியமும், கடவுளின் ஆசியும் கிடைத்து விடுமாம்.

ஆனால் அது உண்மையல்ல - அதன் கதையே வேறு.

வருணாசிரமத் தர்மங்களைக் கடைப்பிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார் கோவிலுக்குள் பிரவேசித்து, இறைவன் உருவினைக் கண்டு தொழுவதற்கு இயலாதவராய் இருத்தலின், அன்னார் நெடுநிலைக் கோபுரங்களைக் கண்டு தொழுது நற்பிறப் பெய்துந்திருப்பெறவே வானளாவுங் கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன

(ஆதாரம் நூல்: இராஜராஜ சோழன் ஆசிரியர் இரா. சிவ. சாம்பசிவ சர்மா - பக்கம் 93).

பக்திமான் கண்ணோட் டத்தில் கோபுரம்பற்றி என்ன எண்ணம் இருந்தாலும், மானுடப் பார்வையில் தீண்டாமைக்குக் கட்டியங்கூறும் கேவலத்தின் சின்னம்தான் இந்தக் கோபுரங்கள் என்பதை மறக்க வேண்டாம்.

கோபுரம் இடிந்து விழுந்தது; கலசம் நொறுங்கி விழுந்துவிட்டதே - அந்தக் காளத்தியப்பன் கடவுளின் சக்தி இதுதானா என்ற கேள்வியை எழுப்புவதற்கோ சந்தேகிப்பதற்கோ விட மாட்டார்கள். மாறாக வேறு ஒரு மவுடிகத்தைத் தயாராக வைத்து இருப்பார்கள். ஏதோ குற்றம், ஏதோ தோஷம் அதனால்தான் இது நடந்திருக்கிறது என்று திசை திருப்பி விடுவார்கள். நவக்கிரக ஸ்தலங்களில் இந்தக் கோயிலும் ஒன்றாம். கால சர்ப்பதோஷப் பரிகாரம் என்று டிக்கெட் போட்டு பணம் சம்பாதிக்கும் கோயிலாயிற்றே - எப்படியும் பண வரவு பாதிக்கப்படக் கூடாது என்பதற்கான சில கதைகள் உண்டு. கோபுரம் இடிந்து விழுந்ததால் ராகு, கேது தோஷம் உடையவர்களுக்கு திருமணத் தடை நீடிக்குமாம். குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை இருந்தால் அந்தக் குழந்தையின் உயிருக்கு ஆபத்தாம். இதற்கு என்ன செய்ய வேண்டுமாம்? நெய் விளக்கு ஏற்ற வேண்டும் பிராயச்சித்த சாந்தி ஹோமம் நடத்த வேண்டும் என்று புரோகிதப் பார்ப்பானுக்கு வரும்படிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு விடும். ஆக, கோபுரம் இருந்தா லும் லாபம் - இடிந்தாலும் லாபம் - இந்தப் புரோகித கூட்டத்துக்கு. எவ்வளவுத் தகிடுதத்த மான சுரண்டல் ஏற்பாடு! முதலில்லா லாபம் விதைக்காது விளையும் கழனி என்று அறிஞர் அண்ணா சொன்னதை இப் பொழுது நினைத்துக் கொள்க!

------------ மயிலாடன் அவர்கள் 3-10-2011 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

0 comments: