Search This Blog

6.10.11

பெரியாரும் -பொதுவுடமையும்


மார்க்ஸ், ஏங்கல்சு அறிக்கையை முதன்முதலில் வெளியிட்டவர் தந்தை பெரியார். முதல் இதழ் குடிஅரசு (4.10.1931).

இது தந்தை பெரியார் பொதுவுடைமைப் பூமியான ருசியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே என்பதுதான் அடிக்கோடிட்டுச் சுட்டிக் காட்டத் தகுந்ததாகும். (தந்தைபெரியார் ரஷ்யாவிற்கு புறப்பட்ட நாள் - 13.12.1931).

1927ஆம் ஆண்டு திரு நெல்வேலி மாநாட்டிலேயே பொதுவுடைமைக் கருத்து களைப் பேசியவர் பெரியார்.

விருதுநகர் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசினார்: தோழர்களே! எனது அய்ரோப்பிய யாத்திரையிலோ, குறிப்பாக ராஷ்ய யாத்திரையிலோ நான் கற்றுக் கொண்டு வரத்தக்க விஷயம் ஒன்றும் எனக்குக் காணப்பட வில்லை. ஆனால் நமது சுயமரியாதை இயக்கக் கொள்கைகள் மிகவும் சரியானவை என்றும், அக்கொள்கைளால்தான் உலக விடுதலையும், சாந்தியும் சமாதானமும் அடையக் கூடும் என்றும் தெரிந்தேன். இதுதான் உங்களுக்கு அய் ரோப்பாவுக்குச் சென்று வந்தவன் என்கிற முறை யில் சொல்லும் சேதியாகும்.

- (குடிஅரசு 12.3.1933)

பார்ப்பான் மேல் ஜாதி, பறையன் கீழ் ஜாதி என்பதற்கு எது ஆதாரமோ அதுதான் இந்த ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி என்கிற பழக்கத் திற்கும், நடப்புக்கும் ஆதாரமாய் இருக்கின்றது என்று அதே விருதுநகர் பொதுக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்த வரையில் இங்கு ஜாதி (Caste) தான் வர்க்கமாக (Caste) இருந்து வருகிறது.

அந்த வகையில் பார்க்கப் போனால் தந்தை பெரியார் அவர்களின் சுயமரியாதைத் தத்துவம்தான் இந்நாட்டுக் கான பொதுவுடைமையாக இருக்கிறது என்பது யதார்த் தமாகும்.

நாம் யாரை விரோதித்தாலும், யாரை நேசித்தாலும் நமது கருத்து ஒன்றேயாகும். அதாவது படித்தவர்கள் என்றும், பணக்காரர்கள் என்றும் அரசாங்கத்தார் என்றும் சொல்லிக் கொண்டு ஏழைகளின் இரத்தத்தை எவரும் உறிஞ்சக் கூடாது என்பதேயாகும் என்று எளிதிற் புரியும் படியான சமதர்மத்தைப் போதித்துள்ளார்.

ஜாதி, மதம், தெய்வம், தனம் என்கின்ற நான்கு தத்துவமும் அழிந்தாக வேண்டும். அவை அழியாமல் மனித சமூகத்துக்கு சாந்தியும், சுகமும் கிடை யாது. அந்த நிலையை அடைந்துதான் ஆக வேண் டும். அதுவே என் கொள்கை (குடிஅரசு 10.5.1936).

இதற்கு மேல் எங்கிருக்கிறது பொதுவுடைமைச் சீலம்?

தந்தை பெரியார் ருசியா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற் கொண்டு வந்த பிறகு, குழந்தைகளுக்கு அவர் பெயர் சூட்டிய விதம் இருக்கிறதே - அதற்கு யாரும் முன்மாதிரி கிடையாது.

குழந்தைகளுக்கு ரஷ்யா என்றும், லெனின் என்றும், ஸ்டாலின் என்றும் பெயர் சூட்டி இந்நாட்டு மக்களிடத் தில் அந்தப் பொதுவுடைமைச் சிந்தனைக்கான வாயிலைத் திறந்து விட்டவிதம் மிகவும் வித்தியாசமானது.

கம்யூனிஸ்டுகள் ஆண்ட கேரள மாநிலத்தில், மகர ஜோதி மோசடி சுரண்டல்பற்றி உண்மையான கருத்துத் தெரிவிக்கக் கூடத் தயாராக இல்லையே!

பெரியாரியலின் வீச்சும், உரமும் எவ்வளவுத் தேவை என்பதை இது துல்லியமாக உணர்த்தவில்லையா?

-------------- மயிலாடன் அவர்கள் 4-10-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: