Search This Blog

8.10.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -13

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (13)

சூத்திரன் கல்விக் கண்ணைக் குத்திய சூத்ரதாரி!


ராஜாஜிதான் நாட்டுக்குப் பெருந்தொண்டு ஆற்றியது போலவும், அவர்தான் தலைசிறந்த அறிவாளி போலவும் அவர் போல ஆளப்பிறந்தவர்கள் வேறு யாரும் இலர் என்பது போலவும், ஊடகங்களின் மூலம் காற்றடித்து ஊதிப் பெரிய பிம்பமாகக் காட்டத் துடிக்கின்றனர்.

அரசியல்வாதியான அவர் ஒரு முறை கூட தேர்தலில் நின்று, மக்களைச் சந்தித்து, வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திடும் செல்வாக்குப் பெற்ற தலைவராக இருந்ததில்லை.

கொல்லைப் புறமாக பதவி நாற்காலியைப் பிடித்த அவர் முழு காலமும் ஆட்சி செய்யும் திறமை உடையவராகவும் இருந்ததில்லை.

தன் ஆட்சித் திறனைப் பற்றி அவரே கூட வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நாடாள எனக்குத் தெரியாது!

நாங்கள் கஷ்டமான வேலையை மேல்போட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். தேச நிர்வாக அனுபவம் எனக்குக் கிடையாது. கோர்ட்டில் கேசு நடத்திட எனக்குக் கொஞ்சம் அனுபவம் உண்டு. அந்த அனுபவம் தேச நிர்வாகத்துக்கு உதவி புரியாது. ஒரு கட்சிக்காகப் பரிந்து பேசும் வழக்கம் நிர்வாக விஷயத்தில் பிரயோஜனப்படாது. 20 ஆண்டுகள் என் வக்கீல் தொழில் அனுபவம் எனக்கு இப்பொழுது பிரயோஜனப்படவில்லை.

அந்தப் பழக்கம் என் வேலைக்குத் தடையாக நிற்கிறது. ஒரு கட்சியில் சேர்ந்து கொண்டு ஓயாமல் பேசுவது எனது வாடிக்கையாகிவிட்டது. தேச நிர்வாகத்திற்கு நான் ஜவாப்தாரியாக இருக்கும்வரை அந்த வாடிக்கையை ஒழிக்க வேண்டியதுதான்

----------------(அனந்தப்பூரில் 12-7-1938 -இல் ராஜாஜி பேசியது).

இதற்கு எந்தவித பதவுரை பொழிப்புரை தேவைப் படாது. தன்னிலை விளக்கமே கொடுத்துவிட்டார் காந்தியாரின் சம்பந்தி.

இப்படிப்பட்டவரைத்தான் அக்கிரகாரம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறது.

ஆட்சித் திறன் இல்லாவிட்டாலும் இரண்டு முறை அவர் ஆட்சிக்கு வந்த போதெல்லாம் பார்ப்பனீயத்துக்குப் பால் வார்த்தார். பார்ப்பனர்களின் ஆதிக்கபுரியாக ஆட்சியை நடத்தினார்.

1937-38 அமைச்சரவையில் மொத்தம் 10 பேர் அமைச்சர்கள் என்றால் அதில் 4 பேர் பார்ப்பனர்கள். 3 சதவிகிதத்தினருக்கு 40 சதவிகித இடங்கள். 1952_54 இல் முதல் அமைச்சராக வந்தபோது மொத்தம் 13 பேர்களில் 3 பேர் பார்ப்பனர்கள். 3 சதவிகித பார்ப்பனர்களுக்கு 24 சதவிகித இடங்கள் அமைச்சரவையில்.

1937-39 இல் பிரதம அமைச்சராக இருந்தபோது 2500 தொடக்கப் பள்ளிகளை இழுத்து மூடினார். மது விலக்கினை அமல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்யவே பள்ளிகளை மூடுவதாகக் காரணம் சொன்னார். தென்னை மரத்தில் ஏன் ஏறினாய் என்று ஒரு திருடனைக் கேட்டபோது புல் பிடுங்க ஏறினேன் என்று சொன்னானாம். அந்தக் கதையாக அல்லவா இது இருக்கின்றது. ஆச்சாரியாரின் இந்தச் சூழ்ச்சியை விளக்கி மது விலக்கின் இரகசியம் என்று குடிஅரசு இதழில் (24-10-1937) தந்தை பெரியார் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1937-39 கால கட்டத்தில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையே குறைவு.

அந்த நேரத்தில் 2500 தொடக்கப் பள்ளிகளை மூடுகிறவர்க்குப் பெயர் தான் மூதறிஞரா? நிதியைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடிய ஆச்சாரியார் பார்ப் பனர்கள் படிக்க பல லட்சம் ரூபாய் செலவு செய்து சமஸ்கிருதக் கல்லூரியைத் திறந்தாரே!

நீதிக்கட்சியின் ஆட்சியின்போது ஏ.பி.பாத்ரோ அவர்களால் செயல்படுத் தப்பட்ட இலவசக் கல்வித் திட்டத்தை நிறுத்தினார். சேலம் ஜில்லா போர்டார் தங்கள் வட்டாரத்தில் அனைவருக்கும் கட்டாயமாக கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதற்காக ரூ 13,500 தொகையை ஒதுக்கி இருந்தார்கள். அதற்கான அனுமதியையும் அரசிடம் கேட்டார்கள். பிரதம அமைச்சர் ஆச்சாரியார் என்ன செய்தார் தெரியுமா?

நிதிநிலை இடம் தராது. அதனால் அனுமதி அளிக்க முடியாது என்று ஒரு வரியில் பதில் எழுதிவிட்டார்.

எல்லா செலவினங்களையும் கணக்கிட்டுதான் இந்தத் தொகையை கல்விக்காக ஒதுக்கி உள்ளோம் என்று மறுபடியும் அரசுக்கு எழுதினர். அந்த முறையீட்டையும் குப்பைக் கூடையில் வீசி எறிந்தார்.

ஈரோடு நகராட்சியார் வீட்டு வரியைக் குறைத்துக் கொள்ள நூற்றுக்கு 2 ரூபாய் - வரவு செலவுகளை சரிக் கட்டக் கொடுத்து அரசிடம் அனுமதி கேட்டனர் . மனுவாதி ஆச்சாரியார் என்ன பதில் எழுதினார்? வீட்டு வரியைக் குறைக்க முடியாது; வேண்டுமானால் கல்வி வரியைக் குறைத்துக் கொள்ளலாம் என்று பதில் எழுதினார்.

கல்வி ஒழிப்புக் கைங்கர்யத்தில் கைதேர்ந்தவர் இந்த ஆச்சாரியார்.

கிராமங்களில் இருந்து வந்த 60 பிள்ளைகளுக்கு குறைந்த மத்திய தர இங்கிலீஷ் பள்ளிகளும் 60 பிள்ளைகளுக்குக் குறைந்த உயர்தர இங்கிலீஷ் பள்ளிகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார்.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்ட காட்டுத்துறைக் கல்லூரியை (Forest College) இழுத்து மூடினார்.


நம் பிள்ளைகள் படிப்பதைத் தடுக்க பள்ளிக் கல்வி சம்பளத்தை ((Tuition Fees) உயர்த்தினார். முசுலிம்கள், கிறித்தவர்கள், தாழ்த்தப்பட்டோர் பெற்று வந்த உதவித் தொகையையும் (Stipend) நிறுத்தினார்.

ஏழு வயதானால்தான் பள்ளியில் சேரமுடியும் என்றார். பாடங்கள் ஏதாவது ஒரு கைத்தொழிலை அனுசரித்ததாக இருக்க வேண்டும் என்றார். அதன் மூலம் வரும்படி வருமாறு செய்து, அந்த வருமானத்தின் மூலமே பள்ளிக் கூடங்கள் நடத்த வேண்டும் என்றார்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறையையொட்டி தமிழர்களாகிய நமது பிள்ளைகள் கல்லூரிகளில் நுழைவதற் காக நீதிக்கட்சி ஆட்சியின்போது அறிமுகப் படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கைக்குழுவினை (College Selection Committee) ஒழித்துக் கட்டினார் ஆச்சாரியார். நேர்முகத் தேர்வுக்கு இருந்து வந்த 150 மதிப்பெண்களை 50 ஆகக் குறைத்த புண்ணியவான் இந்த ராஜாஜிதான்.

சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது என்பதிலே கண்குத்திப் பாம்பாக, கண்களில் விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு சதா அதே சிந்தனையிலும், செயலிலுமாக இருந்தார் என்பதுதான் சுருக்கமான கணிப்பாக இருக்க முடியும்.

இந்த அணுகுமுறைதான் தமக்கு நெருக்கமான நண்பராக இருந்த ஆச்சாரியாரை - வீழ்த்தும் நிலைக்கு தந்தை பெரியாரை வேகமாகத் தள்ளிவிட்டது. காமராசரைப் பச்சைத் தமிழராகப் பெரியார் ஆக்கியதும் இந்த அஸ்திவாரத்தின் மீதுதான்.

காமராசரை ஒரு காலகட்டத்தில் கருப்புக் காக்கை என்று சொல்லி, கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று ஆச்சாரியார் நிதானத்தை முற்றிலும் இழந்த ஆத்திரத்தின் புயலாக, அக்கிரகாரத்தின் அக்னிக் குழம்பாகச் சீறி எழுந்தவர். சூத்திரர், பஞ்சம மக்களின் கல்விக் கண்களைப் பிடுங்குவதற்கு நாம் போட்ட திட்டத்தையெல்லாம் இந்த நாயக்கரும், நாடாரும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார்களே என்ற ஆத்திரத்தில் காந்தாரி போல வயிற்றில் குத்திக் கொண்டார். அவரின் வாரிசுகள் தான் இந்த லட்சுமிநாராயணன், சோ ராமசாமி, குருமூர்த்தி கம்பெனிகள் - வகையறாக்கள்!

அரசுப் பணிகளை வழங்குவதிலும் ஆச்சாரியார் எப்படியெல்லாம் அப்பட்டமாக பூணூல் புத்திரராக சண்ட மாருதம் செய்தார் என்பதை அளந்து கொட்ட ஏடுகளும் போதாது - எழுத்தாணிகளாலும் ஆகாது!

உடல் நோயைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு துளி ரத்தத்தைத்தானே குத்தி எடுக்கிறார்கள். இதோ சில துளிகள். (தனியே பெட்டி செய்தி 6ஆம் பக்கம் காண்க). பார்ப்பனர்களுக்குப் பதவிகளை வாரி வழங்கும் வங்காளக் குடாக் கடலாக ஆச்சாரியார் இருக்கிறாரே, அவரின் அணுகுமுறை எப்படி இருக்கும்?

இந்த இடத்தில்தான் அவருக்குரிய வக்கீல் புத்தி வகை துகையாக, வாட்ட சாட்டமாக உதவி புரிந்திருக்கிறது!

பார்ப்பனர் ஒருவரை ஒரு பதவிக்கு நியமிக்க வேண்டும் என்றால் ராஜாஜி எந்த அணுகுமுறையை மேற்கொள்வார்?

ராஜாஜியின் ஆப்த நண்பரான பெரியார் அவர்களை விட்டே பதில் சொல்ல வைப்போம்.

இதோ ஒரு தமிழனுக்கு டாக்டர் தாயுமானசாமி டைரெக்டர் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (இயக்குநர், மக்கள் நலவாழ்வு) உத்தியோகம் போட்ட தற்குச் சுதேசமித்திரன் (நாளிதழ்) மிரட்டுகிறான். இப்போது நீ சந்தோஷப் படலாம்.

அவர்கள் கைக்கு அதிகாரம் வந்தால் உங்களை ஒழித்துக் கட்டிவிடுவோம் என்கிறானே? காமராசர் இதில் அக்கிரமாகக் குறுக்கிட்டிருக்கிறார் என்கிறான்; என்ன அக்கிரமமான குறுக்கீடு? முன்பு ராஜகோ பாலாச்சாரியார் காலத்தில் ஒரு பப்ளிக் பிராசிகியூட்டர் (அரசு வழக்குரைஞர்) நியமிக்க வேண்டியிருந்தது! திருச்சி கைலை அனந்தரை கலெக்டர் (மாவட்ட ஆட்சியர்) சிபாரிசு செய்து அனுப் பினார்.

இவர் 100-க்கு இத்தனை கிரிமினல் கேஸ்களில் (வழக்குகளில்) ஆஜராகி இருக்கிறார்.

ஆகையால் இவரைத் தவிர தகுதி உடையவர் யாரும் இல்லை என்று எழுதினார். ராஜாஜி அதைத் தூக்கி எறிந்துவிட்டு வேறொருவரை நியமித்துவிட்டார்! சட்டசபையில் கேள்வி வந்தது. அப்போது சொன்னார், தகுதி இருந்தால் போதுமா? சர்க்கார் (அரசு) தனக்கு நம்பிக்கையான வரைத்தானே நியமிக்கும்? உனக்கு ஒரு வக்கீல் வேண்டுமானால், உனக்கு நம்பிக்கையானவரைப் பார்ப்பாயா? இல்லை இவன் கெட்டிக்காரன் என்பதற்காக அவனிடம் போவாயா? என்றார்.

மேலும், ஏதாவது கேட்டால் கைலை அனந்தர் எதற்கும் லாயக்கில்லை என்றாகிவிடும். வாயை மூடிக்கொள் என்றார். இது போல ஒரு பார்ப்பானுக்கு வேலை வர வேண்டு மென்றால் தகுதி முக்கியமல்ல. நம்பிக்கைதான் முக்கியம் என்கிறார்கள். அந்த வேலை நமது ஆளுக்குக் கிடைப்பதாயிருந்தால் தகுதிதான் முக்கியம் என்கிறார்கள். இவற்றை யெல்லாம் நீங்கள் யோசிக்க வேண்டும்.

(21-9-1957 சேலத்தில் தந்தை பெரியார் சொற்பொழிவு: விடுதலை 12-10-1957)

இதன் பொருள் என்ன? பார்ப்பனர் ஒருவர் பார்ப்பனர் அல்லாத ஒருவர் போட்டிக்கு வந்தால் அந்தப் பார்ப் பான் தகுதி உள்ளவர் அதனால் பார்ப் பனரை நியமிக்கிறேன் என்பார். பார்ப்பனர் அல்லாத ஒருவர் தகுதி உடையவர் என்றால், தகுதி முக்கியமா? நம்பிக்கைதான் முக்கியம் என்று கூறி பார்ப்பனரை நியமிப்பார்.இதுதான் ராஜாஜியின் அணுகு முறை மட்டு மல்ல. எல்லாப் பார்ப்பனர்களின் அணுகுமுறையும் இன்று வரையும்கூட.

ராஜாஜியைப் பற்றி முக்கிய சான்று ஒன்று இருக்கிறது. அதுவும் மோதிரக் கை அது. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால்தான் குட்டுப்படவேண்டும். இதோ அந்தக் குட்டு!

காங்கிரஸ்காரர்களைக் கண்காணித்து வருமாறும் சோஷலிஸ்டுகளைக் கைது செய்யுமாறும் போலீசுக்கு உத்தர விட்டார். இந்திய சுதந்திர நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்வதன் மீது பிரிட்டீஷ் அரசாங்கம் பிறப்பித்திருந்த தடையைத் தொடர்ந்து கடைப்பிடித்தார். ஒரு சோஷலிசப் பத்திரிகை பிணைத் தொகைக் கட்டும் படி செய்தார். முந்தைய ஆண்டுகளில் காங்கிரசால் கடுமையாகக் கண்டனம் செய்யப்பட்டு வந்த கிரிமினல் சட்ட திருத்தத்தை இந்தி எதிர்ப்பு மறியல் செய்தவர்கள் மீது பயன்படுத்தினார்.

கடுமையான நடவடிக்கைகள் தான் இந்தியாவில் பலிக்கும் என்றும், சட்டமறுப்பு இயக்கங்களின்போது பிரிட்டிஷார் மிகவும் மென்மையாக நடந்து கொண்டனர் என்றும் ஆளுநர் எர்ஸ்கினிடம் கூறினார். ஆந்திர மாநிலம் ஏற்படுவதைத் தடுத்து தனது சொந்தக் கட்சிக்கு எதிராகவே ஆளுநருடன் சேர்ந்து சதி செய்தார். ஒரு மாத விடுமுறையில் செல்லும் போது தனது அரசாங்க அலுவலர்களில் பெரும்பாலானவற்றை ஆளுநரே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தனது அமைச்சரவை சகாக்களைக் காட்டிலும் எர்ஸ்கின் (ஆளுநர்) மீதுதான் தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றும் கூறினார். தனது ஆதரவாளர்கள் சிலருக்கு பிரிட்டிஷ் சக்கரவர்த்தி வழங்கும் சர் பட்டங்களும் இதர பட்டங்களும் வழங்கவேண்டும் என்று பரிந்துரைக்க விரும்பினார்.

ராஜாஜி பற்றி இப்படி எழுதியிருப்பவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அய்யர் அவர்களின் அருமருந்தன்ன புத்திரர் வரலாற்றாளர் சாட்சாத் சர்வபள்ளி கோபால்தான்! லட்சுமி நாராயணர்களுக்கு அக்குளில் தேள் கொட்டிய மாதிரி இருக்கிறதா? ஆப்பதனை அசைத்து விட்ட கதை யாகத் தோன்றுகிறதா? என்ன செய்வது? உப்புத் தின்ற அளவுக்குத் தண்ணீர் குடித்துத்தானே தீரவேண்டும்!

பேராசை நாயகர்

ஆச்சாரியாரைப் பெரும் தியாகி என்பார்கள். 1942ஆம் ஆண்டு போராட்டத்தின் போது காங்கிரசைக் காட்டிக் கொடுத்தவர். ஆகஸ்டு துரோகி என்று காங்கிரஸ்காரர்களே தூற்றினர்.

அப்படிப்பட்ட ராஜாஜிதான் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல். அவர் பேராசைக்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு: 1973-74ஆம் ஆண்டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்த கோப்புகளை கண்ணுறும் வாய்ப்புள்ள ஒருவர் கூறியது: ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான் நெடுங்காலம் வாழப் போவதாகவும் அக்காலம் முழுதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வுக்காலத் தொகைகளை கணக்கிட்டால் கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பை விடக் கூடுதலாக வரும் என்றும்; எனவே அரசு கிண்டி ராஜ்பவன் நிலம் முழுதும் தனக்குக் கொடுத்துவிட வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது
எப்படி இருக்கிறது?

(குங்குமம் 7.4.2000)

ஆச்சாரியாரின் ஆரிய தர்பார்

1. ஆச்சாரியார் பதவிக்கு வந்த வுடன், ஸ்தல ஸ்தாபனத் துறை முழுவ திலும் அப்போது அமுலில் இருந்த கம்யூனல் ஜி.ஓ.வைக் கொலை செய்யும் வகையில் தன் இனத்தாருக்கே எல்லாப் பதவிகளையும் தந்தார்.

2. சென்னை சர்க்கார் நியமித்த 25 மிருக வைத்தியர்களில் 19 பேரைப் பார்ப்பனர்களாகவே பொறுக்கி எடுத்துப் போட்டார்.

3. சென்னை கார்ப்பரேஷன் கல்வி அதிகாரியாக வருவதற்கு எல்லாத் தகுதிகளையும் பெற்ற திரு சிவசைலம் பிள்ளை என்ற ஒரே தமிழர் இருந்தும் கூட திரு ரகுநாத அய்யர் என்ற பார்ப்பனரையே நியமித்தார்.

4. கார்ப்பரேஷன் உயர்நிலைப் பள்ளிகளில் காலியான 10 தலைமை யாசிரியர்கள் உத்தியோகங்களுக்குப் பார்ப்பனர்களையே போட்டர்ர்.

5. சப்-ரிஜிஸ்தரார் பதவியிலிருந்து ஜில்லா ரிஜிஸ்தரார் பதவிக்கு உயர்த்தும் வேலைகள் 15 காலிகளுக்கு 11 பார்ப்பனர்களுக்கே வேலையளித்தார்.

6. திரு கே.எஸ்.கிருஷ்ணசாமி அய் யங்கார் என்ற பார்ப்பனரைக் காலியான இடத்தில் நிரப்ப, அய்க்கோர்ட் ஜட்ஜாக நியமிக்க ஏற்பாடு செய்தார். ஒரு பார்ப்பனர் அல்லாத நீதிபதி ரிட்டை யர்டு ஆன இடம் அது.

7. பப்ளிக் பிராசிக்கியூட்டர்களை வக்கீல்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். வக்கீல்கள் 100-க்கு 97 பேர் பார்ப்பனர்களாகவே இருப்பதால், அவர்களால் தேர்ந்தெடுக் கப்படுகின்ற முறையில் பார்ப்பனர் களைத் தவிர, மற்றவர்கள் பப்ளிக் பிராசிக்கியூட்டர்களாக வர முடியாது என்பதைத் தெரிந்துதான் திரு. ஆச் சாரியார் இந்த உத்தரவைப் போட்டார். திருநெல்வேலியில் 4 பப்ளிக் பிராசிக் கியூட்டர்கள் தேவைப்பட்டது. அந்த ஊர் பார்ப்பன வக்கீல்கள் ஒன்று சேர்ந்து கொண்டு, 4 பார்ப்பனர்களைப் பப்ளிக்பிராசிக்கியூட்டர்களாக சிபார்சு செய்தார்கள். இப்படி நடக்கப் போவதை, அறிந்த பார்ப்பனர் அல்லாத வக்கீல்கள் மேற்படிக் கூட்டத்தைப் பகிஷ்கரித் தார்கள்.

8. பிராசிக்கியூஷன் இன்ஸ்பெக்டர் கள், மாஜிஸ்திரேட்டுகள் - அவர்களை யும்கூட வக்கீல்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என உத்தரவு போட்டதன் மூலம் பார்ப்பனர்களேஅப்பதவிகளுக்கு வருவதற்கு வசதியாக வழிவகைகளைச் செய்தார்.

9. 1937_இல் பப்ளிக் பிராசிக்கியூட் டர்கள் மொத்தம் 7 பேர் நியமிக்கப் பட்டதில் 3 பேர் பார்ப்பனர்களுக்குத் தந்ததோடுஅல்லாமல், அடிஷனல் பப்ளிக் பிராசிகியூட்டர்கள் நியமிக்கப் பட்டதில் 3 பார்ப்பனர்களுக்கே தந்தார்.

10. சர்வீஸ் கமிஷன் ஒரு முஸ்லி முக்கு எஞ்சினீயர் வேலை கொடுத்தது. அதைத் திரு. ஆச்சாரியார் அப்போது தேவையில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால், அதற்கப்புறம் அந்த வேலை ஒரு பார்ப்பானுக்குக் கொடுப்பதற்காகத் தேவைப்பட்டு பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதுவும், ஒரு பார்ப் பனர், சட்டப்படி தகுதி இல்லாதவருக்குக் கொடுக்கப்பட்டது!

11. வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறைக் காகக் காயம் செய்யாமல் ஆக்டிங்காய் வைத்திருந்த 80, 90 ஸ்தானங்களை, அந்த வேலை பார்ப்பவர்கள் பெரிதும் பார்ப்பனர் என்பதற்காகவே காயமாக்கினார். இந்தச் சூழ்ச்சிகள் எல்லாம் வகுப்புவாரி முறையை ஒழிப்பதற்குச் செய்யப் பட்டதாகும்.89 பேருக்கு 11 பேர் தான் வகுப்புவாரி முறைப்படி வரமுடியும். ஆனால், மேற்படி 89 பேர்களில் 80 பேர் பார்ப்பனர்களாகவே இருந்ததால்தான் ஆச்சாரியாரின் இந்தக் கெட்டிக்கார ஏற்பாடு.

12. முஸ்லிம் மந்திரி திரு. யாகூப் ஹாசன் மந்திரியானதும் தனக்கொரு முஸ்லிமைப் பர்சனல் கிளார்க்காக ஏற் படுத்திக் கொண்டார். அந்தக் கிளார்க்கும் இரண்டு மூன்று நாள் வேலை பார்த்தார். திரு.ஆச்சாரியார் இந்த விஷயம் அறிந்தவுடன், ஒரு பார்ப்பனரைக் குமாஸ்தாவாக நியமித்து, அனுப்பி அவரை ஏற்றுக் கொள்ளும்படிச் செய்தார்.

13. சென்னை ஷெரீப் வேலை, பார்ப்பனர் அல்லாதாருக்கு அதாவது, ஒரு அய்ரோப்பியருக்குக் கிடைக்க வேண்டியது முறையாகும். ஆனால் திரு.ஆச்சாரியார் ஒரு பார்ப்பனரையே நியமித்தார். (ஜி.ஏ.நடேச அய்யர்).

14. திரு. ஆச்சாரியார் காலத்தில் செய் யப்பட்ட பதவி நியமனங்கள் எல்லாம் - ஜில்லா கலெக்டர்கள், ஜில்லா போலீஸ் அதிகாரிகள் போன்ற நியமனங்கள் - எல்லாம் பார்ப்பனர்களுக்கே தரப்பட்டன.

15. பார்ப்பனர் அல்லாத பெரும் பாலோர்களாக இருந்த உத்தியோகங் களின் சம்பளங்களை எல்லாம் குறைத்தார்.

16. சென்னை அய்க்கோர்ட்டில் காலி யான அபிஷியல் அசைனி (Official Assignee) என்ற ஒரு பதவிக்கு தமிழருக் குத் தரப்படாமல் திரு.வி.தியாகராஜ அய்யர் என்ற பார்ப்பனருக்கே அளிக்கப் பட்டது.

1937-39 ஆச்சாரியார் ஆட்சியில் உத்தியோகங்கள்

1939-ஆம் ஆண்டின் நிர்வாக அறிக்கையில் உள்ள உத்தியோகப் பட்டியலில் குறிப்பிட்ட புள்ளி விவரம்:

1. கெஜடட் ஆபீசர் என்னும் சற்றேறக் குறைய மாதம் ரூ 300-க்கு மேற்பட்டு 500 ரூபாய் வரை சம்பளமுள்ள நிர்வாக இலாகா பெரிய உத்தியோகங்களில்
பார்ப்பனரல்லாதார் 398
பார்ப்பனர் 609

2. மாதம் 100 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளம் உள்ள உத்தியோகங்களில்
பார்ப்பனரல்லாதார் 2,492
பார்ப்பனர் 3,667

3. மாதம் 35 ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளம் உள்ள குமாஸ்தா முதலிய உத்தியோகங்களில்
பார்ப்பனரல்லாதார் 8,042
பார்ப்பனர் 9,183

4. மாதம் 35 ரூபாய்க்குக் கீழ்ப்பட்ட சம்பளம் உள்ள கீழ்ப்பட்ட பியூன் பங்கா இழுத்தல், எடுபிடி வேலை ஆகிய உத்தியோகங்களில் மாத்திரம்
பார்ப்பனரல்லாதார் 33,662
பார்ப்பனர் 1,513

இந்தப் புள்ளி விவரத்திலிருந்து திரு.ஆச்சாரியார் நடத்திய இரண்டாண்டு கால ஆட்சியில் உத்தியோக மண்டலத்தையே சர்வமும் பூணூல் மயம் ஜகத் என ஆக்கியுள்ளார்.

பியூன்கள் எண்ணிக்கையில்தான் பார்ப்பனர் அல்லாதார் அதிகம் என்றால், எவ்வளவு கொடுமை இது?

வைத்திய உதவிக்கும் ஆபத்து

சர்க்கார் ஆஸ்பத்திரிகளுக்கு டாக்டர் கள் நியமிப்பதில் சம்பளமில்லாமல் வேலை செய்யும்படி டாக்டர் ராஜன் (அய்யங்கார்) சுகாதார மந்திரி ஏற்பாடு செய்ய முயற்சித்தார். இதற்கு முக்கிய காரணம் மதுவிலக்கு ஏற்படுத்தியதால் சர்க்காருக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 80 லட்சம் வரையில் வரும்படி குறைந்துவிட்டதால், அந்த நஷ்டத்தைச் சரிகட்ட வேண்டுமானால், வைத்திய இலாகாவிலுள்ள சம்பள டாக்டர்கள் பலரை எடுத்து விட்டு, படித்துவிட்டு வரும்படியில்லாமல் திரியும் பல டாக்டர்களை கவுரவ டாக்டர்களாக நியமித்துவிடுவதன் மூலமும், கல்வி, சுகாதார இலாகாவில் சில சிக்கனங்களைச் செய்துவிடுவதன் மூலமும் சரிப்படுத்தி ஆக வேண்டும் என்பதாகும்.

காயலாவில் சாகப்போகும் ஒரு மனிதனைப் பிழைக்க வைக்க, எப்படி வைத்திய இலாகா உதவக் கூடுமோ, அது போலவே, காயலாவிலிருந்து பிழைக்கப் போகும் ஒரு மனிதனை சாகடிக்கவும் பயன்படலாம். இப்படிப்பட்ட ஒரு முக்கியமான இலாகாவில் கவுரவ வைத்தியர்களை - சம்பளமில்லாத ஆட்களை வைத்தால் மக்கள் எப்படிக் காப்பாற்றப்படக்கூடும். இத்திட்டத்துக்கு உள்நோக்கம் எல்லாம் பல பார்ப்பனர் டாக்டர் பரீட்சையில் பாஸ் செய்துவிட்டு, வேலையில்லாமல் இருப்பதை மாற்றுவ தற்காகவே என்பதை 9-1-1938 குடிஅரசு இதழில் தெளிவாக விளக்கிக் காட்டி யிருக்கிறது.

பொதுமக்களின் இரு கண்கள் போன்ற கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டிலும் கைவைக்க திரு.ஆச்சாரியார் தவறவில்லை.

ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமையைப் பற்றி சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் சொல்லுகிறார் என்பது பற்றி காலஞ்சென்ற சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள் 1939 இல் விளக்கி இருக் கின்றதை அருள் கூர்ந்து கவனியுங்கள்.

. . .

திரு. பனகல் அரசர் காலத்தில் தான் மருத்துவ இலாக்காவை வெள்ளையர்களிடமிருந்து பிடுங்கித் தமிழர் கையில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அதன் பயன் என்ன ஆயிற்று என்றால், டாக்டர் ராஜன் (அய்யங்கார்) என்ற ஒரு பார்ப்பனர் வைத்திய இலாகா மந்திரியாக வந்தவுடன், கவுரவ டாக்டர்களை நியமிக்கிறேன் என்கின்ற பெயரால் ஒரு சில மாதங்களுக்குள் 225 பேர்களை கவுரவ டாக்டர்களாக நியமித்தார். இந்த 225 பதவிகளில் 125பதவிகளைப் பார்ப்பனர்களுக்குக் கொடுத்துவிட்டு,85 பதவிகளை மாத்திரம் தமிழருக்குக் கொடுத்துவிட்டு,15 பதவிகளை மாத்திரம் இந்துக்கள் அல்லாதவர்கள் என்பவர்களுக்குக் கொடுத்துவிட்டார்.

100க்கு 3 பேர் விகிதம் உள்ள பர்ப்பனர்களுக்கு 125 உத்தியோகங்களைக் கொடுத்திருக் கின்றார். இதில் ஒரு பெரிய அக்கிரமம் என்னவென்றால், ஜெனரல் ஆஸ்பத்திரி யில் பிரபல டாக்டராக இருந்த டாக்டர் சடகோபனை வெளியாக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக 3 பார்ப்பனர்களைத் திணித்து இருக்கின்றார். எப்படி இருக்கின்றது ஆட்சி? இவ்வித ஆட்சியை இனி நடத்த விடமாட்டோம் என்பதன் அறிகுறிதான் பெரியார் அவர்கள் கூறும் தமிழ்நாடு தமிழருக்கே என்பதாகும்.

நான் இப்படிச் சொல்வதை ஆச்சாரியார் (முதன் மந்திரி) பொடுமை என்கிறார். ஆனால், தமிழர்களை இப்படி நடத்துவது எங்களுக்குக் கொடுமையாக இல்லையா?

குறிப்பு: மேற்கண்ட விஷயங்கள் 1939_ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியில் திரு. ஆச்சாரியார் ஆட்சி பெரியாரை 3 ஆண்டு சிறைப் படுத்தியதற்காக சென்னை எழும்பூர் ஏரியில், கூட்டப்பட்ட பல்லாயிரக்கணக் கான பொதுமக்களைக் கொண்ட கண்டனப் பொதுக் கூட்டத்தில் சர்.ஏ.டி .பன்னீர்செல்வம் அவர்கள் பேசிய பேச்சாகும்.


-----(மேலும் உண்டு)


-------------- கலி.பூங்குன்றன் அவர்கள் 8-10-2011“விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை


5 comments:

thiyagarajan.s said...

நீ சொல்லுறீயே அந்த ஆச்சாரியார்.....அவரு கிட்டதான் ஒங்க ஆளு...மணியம்மையைப் பத்தி யோசனை கேட்டாரு... அந்த அம்மாவ வச்சிகலாமா இல்ல கட்டிகலாமான்னு..அந்த ஆச்சாரியாரு கட்டிகன்னு யோசனை சொல்ல்ல்லிலிலி... ஒங்க மணி....அதான்யா...வீ (ஈஈஈஈஈஈ) ரமணி தலைல மண்ணை வாரி போட்டாரு...அதுக்கப்புறம்....அதுக்கப்புறம்... என்ன நடந்ததுன்னு மணிய கேளு...கடலூருக்கு ஏன் ஓடிவந்தாருன்னும் கேளு...???அவரு சொல்லன்னா நாளன்னைக்கு..நான் சொல்லுறேன்...என்னா...???????

Sathiyanarayanan said...

ராசாசியின் சொம்பு தியாகராசன் சொல்வதை எல்லோரும் கையகட்டிக் கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

Sathiyanarayanan said...

ராசாசியின் சொம்பு தியாகராசன் சொல்வதை எல்லோரும் கையகட்டிக் கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.

Sathiyanarayanan said...

/* அதுக்கப்புறம்....அதுக்கப்புறம்... என்ன நடந்ததுன்னு மணிய கேளு...கடலூருக்கு ஏன் ஓடிவந்தாருன்னும் கேளு...???அவரு சொல்லன்னா நாளன்னைக்கு..நான் சொல்லுறேன்...என்னா...??????? */

இன்றைக்கு நேரம் நல்லயில்லையா?

நம்பி said...

//Blogger thiyagarajan. said...

நீ சொல்லுறீயே அந்த ஆச்சாரியார்.....அவரு கிட்டதான் ஒங்க ஆளு...மணியம்மையைப் பத்தி யோசனை கேட்டாரு...//

ராஜாஜியும் பெரியார்கிட்டே யோசனை கேட்டாரு! (அடிக்கடி பல அரசியல் யோசனைகளை, நட்பு ரீதியாக கேட்பது போல் இதையும்...பெரியாரிடம் கேட்டார்) எதுக்கு? அவருடைய (ராஜாஜி) சொத்தை ராஜாஜியின் சந்ததிகளுக்கு பங்கிட்டு எழுதி வைப்பதற்கு....

அந்த ஆலோசனைக்குப்பிறகு அவரவர்களுக்கு உயில் எழுதி ரகசியமாக வைக்கப்பட்டது.

இது பெரியாரைத்தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது!...அதாவது ராஜாஜியின் குடும்பத்தாருக்கே தெரியாது...அவர் மறைந்தபிறகுதான் அந்த சொத்து உயில் சமாச்சாரங்களை பெரியார், அவர் (ராஜாஜியின்) குடும்பத்தாரிடம் வெளியிட்டார்.

ராஜாஜி இறுதிச்சடங்கில், பெரியார் இறுதிவரை சுடுகாட்டில் இருந்து கலந்து கொண்டு, (வெயிலில் அமர்ந்து) நண்பரின் மறைவை நினைத்து குலுங்கி குலுங்கி அழுதது அனைவருக்கும் தெரியும்? ஏன்? துக்கடா துக்ளக் சோவுக்கும் தெரியும்! அதுவும் (சோ) மெய்சிலிர்த்து, பூரித்து போய் பாரபட்சமில்லாமல் பாராட்டியது. இது மாதிரி "சோ" எப்பவாவது அபூர்வமாக செய்யும்.

நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் தான் இந்த இருவரும்.....கொள்கைகளில் மாறுபட்டவர்கள் தான் இந்த இருவரும். (பெரியார், ராஜாஜி) நட்பில், பண்பாட்டில் ஒற்றுமை என்று நிருபித்தவர்கள்.