Search This Blog

21.5.11

என் ஆலோசனையைக் கேட்டு யாரும் உருப்பட்டதில்லை! - சோ ராமசாமி

ராஜகுருவா சோ ராமசாமி?


2011 சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அ.இ.அ.தி.மு.க. செல்வி ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. அமைச்சரவைக்கு ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். (16.5.2011)

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப் பினர்கள், பல்வேறு கட்சிகளின் தலை வர்கள், அதிகாரிகள், பிரமுகர்கள் பங்கேற் றனர்.

முதல் வரிசையில் துக்ளக் ஆசிரியர் திருவாளர் சோ ராமசாமி அமர்ந்து கொண்டு செய்த அட்டகாசங்கள் சாதாரணமானவையல்ல. லூட்டி அடித்தார் என்றே கூறவேண்டும். அட்டாணிக் கால் போட்டுக் கொண்டு,அடிக்கடி கைகளைத் தட்டிக் கொண்டு, அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டு ஒரேயடியாகத்தான் கும்மாளம் போட்டார்.

தொலைக்காட்சியில் இதனைப் பொதுமக்கள் பார்த்துக் கொண்டுதான் இருந்தனர்.

செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்துள்ள அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்குத் தான்தான் சூத்திரதாரி என்பது போலவும், தான்தான் ராஜகுரு என்பது போலவும் காட்டிக் கொண்டார். மக்களை நம்ப வைக்க இப்படி ஒரு ஏற்பாட்டைத் தனக்குத் தானே செய்து கொண்டு, திட்டமிட்ட வகையில் தான் அப்படி நடந்து கொண்டார் என்றே தெரிகிறது.

1971 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இதே பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் அமைச்சரவை பதவி ஏற்றது. (15.3.1971).

ஒருவர்கூட ஆண்டவன் பெயரால் உறுதிமொழி ஏற்கவில்லை.

அந்த நிகழ்ச்சியிலேயே தந்தை பெரியார் அவர்கள் சிறப்பாக அழைக்கப்பட்டு, முதல் அமைச்சர் கலைஞர் முதல் அத்தனை அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு ஒவ்வொருவரும் தந்தை பெரியார் அவர்களின் அருகில் வந்து வணக்கம் தெரிவித்த காட்சியெல்லாம் மனக் கண் முன் நிழலாடுகிறது.

அப்பொழுது கனம் ராஜாஜி அவர்கள் இவ்வாறு எழுதினார். மதம், சம்பிரதாயக் கட்டுப்பாடுகள், தெய்வ பக்தி இவற்றின் முழு எதிரி என்று தம்மை முழு மூச்சுடன் பகிரங்கப்படுத்திக் கொள்பவரின் ஆசியும்.

அனுக்கிரகமும் பெற்றுப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறது (கல்கி 4.4.1971) தமிழக மந்திரி சபை என்று ஆத்திரம் அடைக்க எழுதினார் ஆச்சாரியார் ராஜாஜி.

அந்த நிலை எங்கே? இந்த நிலை எங்கே?

முதல் அமைச்சர் ஜெயலலிதாவைச் சுற்றி ஒரு பார்ப்பன ஒளிவட்டம் என்னும் தோற்றத்தை உருவாக்குவார்

சோ- இவர் நெஞ்சம் என்பது பூணூல் மஞ்சம் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஜெயலலிதா அவர்கள் கூட தனிப்பட்ட எந்த ஒருவர் வீட்டுக்கும் செல்வது கிடையாது -சோ ராமசாமி வீட்டைத் தவிர. இந்த அந்நியோன்னியத்தைக் கூட தம் இனத்துக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்ப்பார் சோ.

மக்கள் ஆதரவு என்றால் ஜாதி ரீதியான வலை வீச்சு என்று கலைஞரைக் குற்றம் சாற்றி இவ்வார துக்ளக்கில் (25-5-2011) தலை யங்கம் தீட்டியுள்ளார். அதே நேரத்தில் செல்வி ஜெயலலிதா அவர்கள் ஏன் சீரங்கம் தொகுதியைத் தேர்ந்தெடுத்தார் என்பது பற்றி எழுத வேண்டியது தானே?

சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்குக் கையாளாக இருந்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைப் பேட்டி கண்டார். சங்கராச்சாரியார் கேட்கச் சொன்ன கேள்விகளையெல்லாம் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் கேட்டவர் இந்த சோ. எம்.ஜி.ஆருக்குக் கையாளாக இருந்து அ.தி.மு.க. பொருளாளராக இருந்த சவுந்தர பாண்டியன்பற்றி உளவு பார்த்தார். எவ்வளவு பெரிய பார்ப்பன வெறியர் இவர் என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.

கேள்வி: சட்டசபையில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் பிராமண பாஷையில் பேசுவது யாரைக் கிண்டல் செய்ய?

சோவின் பதில்: தெரியவில்லை. இதையே தி.மு.க.வினர் யாராவது செய்திருந் தால் கடுமையாகக் கண்டித்திருப்பேன். இப்பொழுது ஏன் இப்படிச் செய்தார்? என்ற கேள்விதான் என் மனதில் எழுகிறது. விடை தெரியவில்லை.

(துக்ளக் 22-7-2009 பக்கம் 14)

இதற்கு விளக்கம் தேவையா? இங்குப் பேசுவது குமுறுவது சோவின் பூணூல் தானே!

தமிழர்களின் கல்விக் கண்ணில் மண்ணை அள்ளிப் போடுவதில் முதல் ஆளாக இருக்கக் கூடியவர்தான் இந்த சோ. அதனால்தான் 1952 இல் ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை - அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற மனுதர்மத் திட்டத்தை இப்பொழுதும் ஆதரித்து எழுதுகிறார் என்றால் தெரிந்து கொள்ளலாமே.

(துக்ளக் 15-7-1988)

எதற்காக செல்விஜெயலலிதா அவர்களை இவர் ஆதரிக்கிறார்? ஜெயலலிதா பற்றி சோவின் கணிப்பு என்ன?

திராவிடப் பாரம்பரியம் என்றால் என்ன பொருள் என்பது, அந்தப் பாரம்பரியத்தினர் வெளிப்படையாக நம்பாத தெய்வத்திற்குத்தான் வெளிச்சம். அப்படி ஒரு விளக்க முடியாத பாரம்பரியமுள்ள இரண்டு அரசியல் கட்சிகளில் ஒன்றுக்குத் தலைமையேற்ற ஜெயலலிதா யார்? அந்தப் பொருளற்ற பாரம்பரியத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாதவர். அந்தப் பாரம்பரியத்தினால் எந்த ஒரு சமூகம் மிகக் கடுமையாகவும், கேவலமாகவும் எதிர்க்கப் பட்டதோ, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்.

சரி, இப்படிப்பட்ட பாரம்பரியத்திற்குத் தலைமை ஏற்பதற்காக அவர் தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொண்டாரா என்று கேட்டால் கிடையாது.

கோவில், அர்ச்சனை, பிரசாதம் ஒரு புறம்; தீவிரவாதம் தமிழைப் பற்றியதாக இருந்தாலும், அதை நசுக்கவே முயற்சிப்பேன் என்ற முனைப்பு ஒரு புறம்; தொழிலாளிகளுக்கும் கடமைகளும், பொறுப்புகளும் உண்டு என்பதை நிலை நாட்டத் தயங்கமாட்டேன் என்ற தீர்மானம் மற்றொரு புறம்; மைனாரிட்டி மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்றாலும், அதற்காக மெஜாரிட்டி மக்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என்ற நிலைப்பாடு இன்னொரு புறம்.

இப்படி எந்தப் பக்கம் நோக்கினாலும் சரி, பொருளற்ற திராவிடப் பாரம்பரியத்தின் கோஷங்களை ஜெயலலிதா ஏற்கவில்லை. தன்னுடைய நம்பிக்கைகளை அந்தப் பாரம்பரியம் ஏற்கும்படி செய்தார். இது சமீப காலஅரசியல் அற்புதம்!

(துக்ளக்: 21-_-9_-2005) என்று விலாவாரியாக செல்வி ஜெயலலிதா பற்றி திருவாளர் சோ ராமசாமி எழுதித் தள்ளியுள்ளார்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்?

ஜெயலலிதா திராவிட பாரம்பரியத்துக் குச் சம்பந்தமே இல்லாதவர். அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர். அவரது நம்பிக்கை திராவிட பாரம்பரியத்துக்கு எதிரானது. மாறாக தனது நம்பிக்கைகளை திராவிட பாரம்பரியத்தினை ஏற்கச் செய்தவர் என்று பச்சையாக - பார்ப்பனத்தனமாக செதிர்காயாக உடைத்துச் சொல்லிவிட்டார்.

இது - செல்வி ஜெயலலிதாவுக்குப் பாராட்டா _ இகழ்ச்சியா? என்பதை சம்பந் தப்பட்ட வர்கள்தான் தெரிந்துகொள்ள வேண்டும். சோ, ஜெயலலிதாவை ஆதரிப் பதற்குக் காரணமே இந்தக் கண்ணோட்டம் தான். இதனை மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் புரிந்து கொள்வாரா என்று தெரியவில்லை.

உண்மையான திராவிடப் பாரம்பரியத்தாரும், அய்யா, அண்ணா கொள்கை புரிந்தோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழர்களும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

கடைசி செய்தி:

என் ஆலோசனையைக் கேட்டு யாரும் உருப்பட்டதில்லை! -- சோ ராமசாமி.

ரஜினிபற்றிய ஆங்கில நூல் வெளியீட்டு விழாவில்தான் இப்படிப் பேசினார். (சென்னை 2008 மார்ச்சு).

முதல்வர் ஜெயலலிதா இவரிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

-------------------- மின்சாரம் அவர்கள் 21-5-2011 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: