Search This Blog

3.5.11

பெரியாரும் - பெண்களும்


ஜாதியைப் பற்றியாவது, எவனாவது ஒருவன் இருவன் பேசி இருப்பான். எதற்காக உயர்ந்த ஜாதி, கீழ் ஜாதி இருக்க வேண்டுமென்று பேசி இருப்பான். ஆனால், பரிதாபத்திற்குரிய நம் பெண்களின் - தாய்மார்களின் இழிவை நீக்க வேண்டுமென்று எங்களைத் தவிர, வேறு எவரும் தோன்றித் தொண்டாற்றவில்லை. நாங்கள்தான் அவர்களின் இழிவினைப் போக்கப் பாடுபட்டு வருகின்றோம். நமது இலக்கியங்கள் யாவும் நம் பெண்களை அடிமைகளாக இருக்க வேண்டுமென்றே வலியுறுத்துகின்றன.

நமக்கு நீதி சொன்னவர்கள் அத்தனை பேரும் பெண்கள் ஒழுக்கமாகக் கற்போடு, அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டுமென்று அறிவுரை கூறி இருக்கின்றார்களே ஒழிய, ஆண்கள் கற்பைப் பற்றி எவனும் ஒரு வரி கூடச் சொன்னது கிடையாது. மனித ஜீவனில் ஆண், பெண் என்று பேதப்படுத்திக் காட்டும்படியாக இருப்பது சில உறுப்புகளே தவிர, மற்றப்படி ஆண் செய்கிற அத்தனை காரியங்களையும் பெண் செய்யக் கூடியவளாகவே இருக்கிறாள். பெண்களுக்கும், ஆண்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், பெண்களால் பிள்ளை பெறக் கூடும். ஆண்களால் அது முடியாது. இதைத் தவிர, ஆணுக்கும், பெண்ணுக்கும் எதிலும் வித்தியாசமே கிடையாது.

மனித சமுதாயத்தில் சரிக்குச் சரியாக (பகுதியாக) இருக்கும் பெண் சமுதாயமானது, மனித சமுதாயத்திற்கு எந்த வகையிலும் பயன்படாத சமுதாயமாகவே இருப்பதால், நம் நாட்டில் நடைபெற வேண்டிய முன்னேற்றங்களில் பகுதிக்கு மேல் நடைபெற முடியாமல் போனதோடு, அடைய வேண்டிய வளர்ச்சியடையாமல் உலக நாடுகளில் மிகவும் பின்தங்கிய நாடாக நம்நாடு இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இருக்க வேண்டியதாயிற்று. நம் நாடு முன்னேற்றமடையவும், வளர்ச்சியடையவும் பெண்கள் சமுதாயமானது விடுதலை பெற்று ஆண்களைப் போலச் சகல துறைகளிலும் சுதந்திரமாக ஈடுபட வேண்டும். அப்போதுதான் நம் நாடு முழு வளர்ச்சியினைப் பெற முடியும் என்பதால்தான் பெண் விடுதலையை முதன்மையாகக் கொண்டு இக்காரியத்தில் இறங்கி இருக்கின்றோம். நான் சொல்வது ஆண்களுக்குச் சற்று கஷ்டமாக இருக்கலாம். இனி பெண்கள் சோறாக்கக் கூடாது. ஆண்களைச் சோறாக்கச் சொல்ல வேண்டும். பெண்கள் சோறாக்க வேண்டியது தங்கள் கடமை என்று தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆணும், பெண்ணும் நன்றாகப் படித்து உத்தியோகங்களுக்குப் போக வேண்டும்.

மற்ற நாடுகளில் உள்ள பெண்களை எல்லாம் பார்த்திருக்கின்றேன். அங்குள்ள பெண்கள் யாவரும் சோறு சமைப்பதில்லை. குழந்தைக் குட்டிகளோடு ரெஸ்டாரன்ட்டு (உணவு விடுதி)க்குப் போய், தங்கள் உணவினை முடித்துக் கொள்கின்றனர். அதனால் பெண்களுக்கு உணவு சமைக்க வேண்டிய நேரம் மிச்சமாவதோடு உணவிற்காக ஆகும் செலவும் மிச்சமாகின்றது. ஆண்களைப் போல அவர்களும் வேலைக்குச் செல்கின்றனர், சம்பாதிக்கின்றனர். மகிழ்ச்சியோடு வாழ்வை நடத்துகின்றனர். அதுபோன்று நம் பெண்களும் வாழ வேண்டுமென்பதுதான் எங்களுடைய ஆசை.

தாய்மார்கள் தங்கள் பெண்களை நன்கு படிக்க வைக்க வேண்டும். தாங்கள் பட்டினி கிடந்தாவது அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும். பெரிய வித்வானாக்காவிட்டாலும், அது வாழ்க்கைக்குச் சம்பாதித்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு அதைப் படிக்க வைக்க வேண்டும். பிறத்தியார் கையை எதிர்பார்த்துப் பெண்கள் வாழக் கூடாது. கணவன் நம்மைத் தள்ளி விட்டால் என்ன செய்வது என்கிற பயம் பெண்களுக்கு இருக்கக் கூடாது. மேல்நாடுகளில் எல்லாம் பெண்கள் பிறர் கையை எதிர்பார்த்து வாழ்வது கிடையாது என்பதோடு, அப்படி வாழ்வதை மிகக் கேவலமாகவும் கருதுகின்றனர். அதுபோன்று நம் பெண்களும் கருதும்படியான நிலை நம் நாட்டிற்கு வந்தால்தான் நம் சமுதாயம் முன்னேற்றமடையும்.

இந்தத் திருமண முறையே தேவை இல்லை என்பது எனது கருத்து. யோக்கியமான அரசாங்கமாக இருந்தால், இதைக் கிரிமினல் குற்றமாக்கி இருக்கும். என்ன காரணத்திற்காக ஒரு பெண்ணானவள் ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டும்? இந்தத் திருமண முறையே ஆரியன் நம் நாட்டிற்கு வந்தபின்தான் ஏற்பட்டது. ஆரியன் இங்கு வரும்போது பெண்களோடு வரவில்லை. இங்குள்ள பெண்களைச் சரிப்படுத்தி வாழ்ந்து கொண்டிருந்தான். பெண்கள் அவனுக்கு அடங்காமல் போகவே, அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டி, தனது உரிமைப் பொருளாக்க வேண்டி, சடங்குகள் சம்பிரதாயங்களை ஏற்படுத்தினான். இதைத் தொல்காப்பியத்திலேயே சொல்லி இருக்கிறான். பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப என்று பார்ப்பனரிடையே ஒழுக்கம் கெட்டபின் பார்ப்பனர்களால் செய்யப்பட்டதுதான் இந்தச் சடங்காகும்.

நம் புலவர்கள் அயோக்கியர்களானதால் அய்யர் என்றால் நம் புலவர்கள் பெரியவர்கள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பார்கள். அதற்காகவே வேறொரு சூத்திரத்தில், மேலோர் மூவர்க்கும் யாத்த கரணங்கள் கீழோர்க்காகிய காலமும் உண்டே. பார்ப்பனர்களான மேல்ஜாதிக்காரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சடங்குகள் கீழ் ஜாதிக்காரர்களுக்கு (சூத்திரர்களுக்கு) ஆன காலமும் உண்டு என்று குறிப்பிட்டிருக்கிறார்; நம் புலவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக எதையும் விற்கக் கூடியவர்களாக இருப்பதாலும், மானமற்றவர்களாக இருப்பதாலும் இந்த உண்மைகளையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்வது கிடையாது.

--------------------13.6.1968 அன்று சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில், தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரையிலிருந்து - "விடுதலை" 4.7.1968

0 comments: