Search This Blog

26.5.08

ஆரியத்தை அழிப்போம்

துப்பாக்கிக்கும் ஈட்டிக்கும், தடியடிக்கும் மார்பு காட்டியே, மேதின விழாவின் காரணகர்த்தர்கள்; மேதினியில், இந்நாள் தோன்றிடச் செய்தனர். 16, 12, 10 மணி நேரங்கள் செக்கு மாடுகள் போல் உழைத்து அலுத்த தோழர்கள், நாளொன்றுக்கு 8 மணி நேரமே வேலை செய்வோம் என்று உறுதியுடன் கூறினர். 1880ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி, இச் சூள் உரைத்த, அமெரிக்கத் தொழிலாளர் கூட்டம் கிளர்ச்சி நடத்திற்று. கிளர்ச்சியை அடக்கக் கடுமையான தண்டனைகள் தரப்பட்டன. கஷ்ட நஷ்டம் அதிகம். ஆனால், தோழர்கள் துளியும் அஞ்சாது கிளர்ச்சியில் உறுதியுடன் நின்றனர். வென்றனர், அவர்கள் அன்று சிந்திய இரத்தத்தை ஆண்டுதோறும் மேதின விழாவில், பாட்டாளி மக்கள் தமது நினைவினில் இருத்துவர். அதனால் உண்டாகும் உணர்ச்சியே கவைகளை உண்மைக் காட்சி களாக்கும். இவ்வாண்டு மே விழாவில் ஸ்டாலின் பேசுகையிலே இதுபோது உலகுக்கும், சோவியத் நாட்டுக்கும் ஏற்பட்டுள்ள இடுக்கணைத் தீர்க்கத் தீரமாகப் போரிட வேண்டும் என்பதனை வலியுறுத்திச் செஞ்சேனையின் வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டியதுபோல, மேதின விழாவன்று, பொதுவான இலட்சியத்தை பற்றி அறிந்து கொள்வதுடன், திராவிடத் திருநாட்டினைக் கெடுத்துவரும் ஆரியத்தை அழிப்போம், என சூள் உரைத்து சோர்வின்றி உழைக்கத் திராவிடத் தோழர்கள் முன் வேண்டுகிறோம். ஏனெனில், ஆரியம் அழிந்தாலன்றி இங்கு அபேதவாதம் ஏற்படாது. புகுத்தப்படினும் நிலைக்காது. எனவே மே தின விழா முழக்கமாகத் திராவிடர் தோழர்கள்,

ஆரியம் அழிக,
அபேதவாதம் வாழ்க
சனாதனம் வீழ்க
சமதர்மம் வாழ்க


என்ற சூளுரைகளைக் கொள்ள வேண்டு கிறோம்.

---------- மே தினம் குறித்து அறிஞர் அண்ணா, 9.5.1943

0 comments: