Search This Blog

31.3.08

"கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி"

"நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்" என்ற தலைப்பில் "உண்மை" மூன்றாவது இதழ் முதல் கட்டுரையில் "கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்' என்ற கருத்திற்கு விளக்கமும், நான்காவது இதழ் இரண்டாவது கட்டுரையில் "கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன்" என்ற கருத்திற்கு விளக்கமும் எழுதியிருந்தேன் . இந்த மூன்றாவது கட்டுரையில் "கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி" என்ற கருத்திற்கு விளக்கம் எழுத ப்படுகிறேன்.

பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? குணம்என்ன? என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ, அல்லது உணர்ந்ததன் படியோ வணங்குவதே இல்லை ; மற்றெப்படியென்றால் "கடவுளை" மனிதனாகவே கருதிக்கொண்டு மனிதகுணங்களையே அதற்கு ஏற்றிக்கொண்டு , தான் எப்படி நடந்து கொண்டான், தான் எப்படி நடந்து கொள்ளுகிறான், தான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் தான் நடந்துகொண்ட கூடாத்தன்மைகளுக்குப் பரிகாரம் (பாவ மன்னிப்பு) தேடும் முறையிலும், நியாயமோ பொருத்தமோ விகிதமோ இல்லாமல் தனக்கு வாழ்வில் எல்லாத் துறைகளிலும் உயர் நிலையே வேண்டுமென்கின்ற பேராசையுடனுந்தாம் கடவுளை வணங்குகிறான்.

இப்படிப்பட்டவனை அயோக்கியன் என்று சொல்லாவிட்டாலும் அறிவாளி என்று சொல்ல முடியுமா?

இப்படிப்பட்ட இவர்கள் வணங்கும் கடவுளை, இவர்களை, இன்றைய நம் ஜனநாயக ஆட்சிக்கும், ஆட்சிப் பிரஜைகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் ஒப்பிட்டுச்சொல்ல வேண்டுமே ஒழிய யோக்கியர் கள், அறிவாளிகள் என்று எப்படிச் சொல்லமுடியும்? இம்மாதிரியான கடவுள் வணக்கம் உலகில் ஏற்பட்டபின் இதன் பயனாக இயற்கையான யோக்கியமான மனிதன் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதனாவது தோன்ற முடிந்ததா? இருக்க முடிந்ததா? பொதுமக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? அல்லது கடவுள்களோ, கடவுள்கள் வீடுவாசல் சொத்துக்களாவது மக்கள் பயமில்லாமல் வாழமுடிந்ததா? இது பொது விளக்கமாகும்.

இனி நமது மக்கள் கடவுளை வணங்குவதன் மூலம் எவ்வளவு காட்டுமிராண்டிகள், மடையர்கள் என்பதைப் பற்றி ளக்குகிறேன்.

நான் பந்தயம் கட்டிச் சொல்லுவேன், நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர்கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை ! இல்லை !! இல்லவே இல்லை!!! என்று கூறுவேன்.

ஏனெனில் எப்படிப்பட்ட கடவுள் பக்தனும் கடவுள் என்று கல்லைத் தான் , மனித உருவத்தைத்தான்,மாடு, குரங்கு, மீன், ஆமை, பன்றி, கழுகு, யானை முதலிய உருவங்கள் கொண்ட கல்லைத்தான் வணங்குகிறான். அவற்றிலும், மிகமிக முட்டாள்தனமாக வணங்கப் படும்போக்கு என்னவென்றால் ஒருதலை, இரண்டு தலை, மூன்று தலை, நான்குதலை, அய்ந்து தலை, ஆறுதலை, ஆயிரம் தலையும் அவைபோன்ற கைகளும் உடைய மனித உருவங்களையும், மற்றும் தலை மனிதன், உடல், மிருகம், முதலிய உருவங்கள் கொண்ட லைகளையும் வணங்குகின்றான் என்பதே.

கடவுள் இருப்பதற்கு இப்படிப்பட்ட தோற்றங்கள் எங்கு இருக்கின்றன? ஒவ்வொரு அயோக்கியனும் ஒவ்வொரு கூற்றைக் கற்பித்தால், பலப்பல முட்டாள்கள் இதை ஏற்பது என்றால், இதை வணங்குவது என்றால் இது முட்டாள் காட்டுமிராண்டித்தனமா அல்லவா என்று தான் கேட்கிறேன்.

மற்றும் கடவுள்களுக்குப் பெண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி முதலியவைகளுடன் பூசை செய்து வணங்குவது முதலிய காரியங்களும், கடவுள் மற்றவன் (மனிதனின்) மனைவியைக் கெடுத்தான், மற்றவனைக் கொன்றான், மற்றவனை ஏய்த்து மோசம் பண்ணினான், திருடினான், பதினாயிரம் பெண்டாட்டி, பதினாயிரம் காதல் என்றெல்லாம் கதை கட்டி, அதைத் திருவிழாவாக்கி வணங்குவதும் காட்டுமிராண்டித்தனமா? அறிவுடைமையா? என்று கேட்கிறேன்.

மற்றும் பலர் ஒரு வேளை உணவுக்கும் திண்டாட, தலைக்கு எண்ணெய் இல்லாமல் வருந்த , தினம் அய்ந்து வேளை ஆறுவேளை பொங்கல் அக்கார வடிசில் முதலியன படைத்தல், பால் நெய் தேன் தயிர் இளநீர் எண்ணெய் அபிஷேகம் என்னும்பெயரால் கல்லுகளின் தலையில் கொட்டிச் சாக்கடைக்கு அனுப்புதல் வடிகட்டிய முட்டாள்தனமா? கடவுள் வணக்கமா ? என்று அழுத்திக் கேட்கிறேன். இவற்றால் , இந்த முட்டாள் தனமான கடவுள் வணக்கத்தால் நலம் பார்ப்பனர்க்கு அல்லாமல் (மற்ற யாருக்கும் முட்டாள் பட்டம் அல்லாமல்) பயன் உண்டா? என்று கேட்கின்றேன்.

மேலும் இதற்காக ஏற்படும்பொருள் செலவு , நேரச் செலவு எவ்வளவு? இந்த நிலை ஒருபுறமிருந்தாலும் நம் மக்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தால் நமது பின் சந்ததிகளின் நிலை என்ன ஆவது? என்று கேட்டு இதை முடிக்கிறேன்.

--------------------- தந்தைபெரியார்- "உண்மை" 14-5-70

0 comments: