Search This Blog

31.3.08

"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்"

"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்" என்பதற்கு இவ்விளக்கம் எழுதப்படுகிறது. கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே "கடவுள்தத்துவத்திற்கு" ஏற்பக் கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்பு கிறவன், அல்லது பிரசாரம் செய்பவன், அல்லது கற்பித்துக்கொள்பவன், அல்லது கடவுளுக்காகவென்று கதைகள் புராணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் எழுதினவன்கள் மற்றும் அதற்கு ஆகக்கோவில்கள் கட்டி அவற்றுள் உருவங்கள் வைத்தவன்கள், கடவுளுக்காகவென்று பூசைகள் உற்சவங்கள் பண்டிகைகள் முதலியவைகளை நடத்து கிறவன்கள் செய்கிறவன்கள் யாவருமே நாணயத்தையோ , யோக்கியத் தையோ, ஒழுக்கத்தையோ ஆதாரமாக வைத்துக் கடவுளைப் பரப்புவதில்லை, நடத்துவது இல்லை.

"கடவுளுக்கு உருவமில்லை குணமில்லை" என்று ஆரம்பித்துக் "கடவுள் சர்வவல்லமையுடையவர், சர்வத்தையும் அறியக்கூடிய சக்தி (சர்வஞ்ஞத்துவம்) கொண்டவர்" "கருணையே வடிவானவர்" "அன்பு மயமானவர் " "அவரின்றி அணுவும் அசையாது" என்பன போன்ற கடவுளின் எல்லாக் குணங்களையும் சக்திகளையும் , தன்மைகளையும் அடுக்கடுக்காகக் கடவுளுக்குக் கற்பித்து மக்களை நம்பச் செய்விட்டு இந்தக் குணங்களுக்கும் தன்மைக்கும் மாறான குணங்களை, தன்மை களை அதற்கு ஏற்றி அதற்காகக் கோவில்கள் கட்டியும், உருவங்கள் உண்டாக்கி வைத்தும், நடவடிக்கைகளை ஏற்றியும், அவைகளை ஆதாரமாய்க் கொண்டு பூசை, உற்சவம், பண்டிகை முதலியவைகளைக் கொண்டாடச் செய்வதன் மூலம் கடவுளைப் பரப்புவதென்றால் இக்காரிய முயற்சியில் ஈடுபட்ட மக்கள் அயோக்கியர்களா அல்லவா என்று சிந்தித்துப் பார்க்கும்படி கேட்கிறேன்.

இக்கூட்டத்தார் மக்களை ஏய்க்க வல்லாமல் வேறு எக்காரியத்திற்காக இக்காரியங்களில் ஈடுபடுகிறார்கள், ஈடுபடவேண்டியவர்களானார்கள் என்று சொல்லமுடியுமா? இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக , தங்கள் பிழைப்பிற்காக இக்காரியங்களைச் செய்யும் அயோக்கியர்களாக முட்டாள்களாக இருந்து வருகிறார்கள் என்பதல்லாமல் வேறு கருத்து, காரணம் என்ன சொல்லமுடியும்?

இன்று இந்தப்படியான அயோக்கியர்களால் பரப்பப்பட்டிருக்கும் எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வீடு,உணவு, பெண்டாட்டி, வைப்பாட்டி, குழந்தை குட்டிகள் , நகைகள் , சொத்துக்கள், கல்யாணம், உற்சவம், ஊர்வலம் முதலியவை செய்து கூட்டத்தை கூட்டி ஆயிரம், பல ஆயிரம், இலட்சம், பல லட்சம், ரூபாய்கள் செலவு ஏற்படும்படியும் அதுபோலவே மக்களுக்கும் நாள் கணக்கில் மெனக்கேடு ஏற்படும்படியும் செய்வதோடு கோடிக்கணக்கான மக்களை இழிசாதி மக்கள்களாகவும் இருக்கும்படி செய்கின்றனர்.

" அன்பும் கருணையும்,ஒழுக்கமும் உள்ள கடவுள்கள்" யுத்தம் செய்ததாகவும் கோடிக்கணக்கான, மக்களை ஆண்களை, பெண்களை கொன்று குவித்ததாகவும், வெட்டி வீழ்த்திச் சித்திரவதை செய்து நாசமாக்கியதாகவும் விபசாரம் செய்ததாகவும் , நடப்பில் நடத்திக் காட்டிப் பரப்புவதென்றால் இப்படிப் பரப்புகிறவர்கள் அயோக்கியர் களா அல்லவா என்று மறுபடியும் கேட்பதோடு இதற்கு இரையாகிற வர்களை முட்டாள்களாக மானமற்றவர்களாக ஆக்கு கிறார்கள் அல்லவா என்று திரும்பவும் கேட்கிறேன். இப்படிக் கடவுளைப் பரப்பும் அயோக்கியர்களால் எத்தனை எத்தனை கோடி மக்கள் மடையர் களாகிறார்கள் என்பதை அறிவாளிகள் முதலில் சிந்திக்க வேண்டும்.

சாதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் சிறப்பாக இந்துக்களை எடுத்துக்கொண்டால் சுமார் 40 கோடி மக்களும் இந்த விஞ்ஞான காலத்தில் டாக்டர் எம்.ஏ. பி.ஏ. ( ஈச்ஷஞ்ச்சு, ங.அ., ஆ.அ.,) படித்த மக்களும் புலவர்கள் வித்வான்கள், மகாமேதாவிகள் என்று கூறப்படும், கூறிக்கொள்ளும் மக்களும் இக்காரியங்களில் பரம முட்டாள்களாக இருப்பதற்குக் கடவுளைப் பரப்பினவர்களும், பரப்பிவருபவர்களும் இப்படிப்பட்ட கடவுள் கதை எழுதினவர்களும் இந்தக் கடவுள் களுக்குக் கோவில் கட்டி உருவம், உற்சவம், நடப்பு தேர், திருவிழா நடத்தும் அயோக்கியர்களுமல்லாமல் வேறு யாராய்இருக்க முடியும்?

இந்த மடையர்கள் எவ்வளவு துணிவோடு ஆண் பெண் கடவுள் களைக் கற்பித்து அவற்றிற்கு விபசாரத் தன்மைகளை (ஒழுக்க ஈனங்களை)க் கற்பித்துப் பரப்புகிறார்கள்! என்றால் இவர்களை எத்தனை முறை அயோக்கியர்கள் என்று கூறவேண்டும்! என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகிறேன்.

இப்படி நான் எழுதுவதில் சிலர் மனம் புண்படாதா? என்று கேட்கலாம். அயோக்கியர்கள் மனம், மடையர்கள் மனம் புண்படுமே என்று பார்த்தால் ஒரு சிலரால் முட்டாள்களாக ஆக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களை அறிவாளிகளாக ஆக்க வேறு வழி யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்!

" கோவில்கள் கள்ளர் குகை " என்று கூறிய கிறிஸ்து கொல்லப் பட்டாலும் இன்று அவரை நூற்றுக்கணக்கான கோடிமக்கள் "கடவுளுக்கு" மேலாகக் கருதுகிறார்கள். " கடவுளுக்கு உருவம் கற்பித்து வணங்குகிறவர்கள் முட்டாள்கள் மடையர்கள்" என்று கூறிய முகம்மது நபியைச் சிலர் துன்புறுத்தினார்கள் என்றாலும் இன்று அவரைப் பல பத்துக்கோடி மக்கள் கடவுளைவிட மேலாக கருதுகிறார்கள் , இவ்வளவு ஏன்? நம் கண் முன்னால் " கோவில்கள் குச்சுக்காரிகள் விடுதி" என்று கூறிய காந்தியை இன்று பார்ப்பனர் உட்பட ஏராளமான மக்கள் மகாத்மா என்கிறார்கள்.

உயிருக்குத் துணிந்து உண்மையை எடுத்துக்கூற மக்கள் இல்லாததால் இன்று நம் நாட்டில் இவ்வளவு முட்டாள்களும், அயோக்கியர்களும், காட்டுமிராண்டிகளும் தோன்றி இந்த விஞ்ஞான காலத்திலும் இருந்து வர இடம் ஏற்பட்டதே தவிர வேறு காரணம் என்ன? சிந்தியுங்கள் மற்றும் இந்தப்படியான நம்மை உலகம் - அறிவுலகம் எப்படிப்பட்டவர்கள் என்று கருதும் என்பதையும்

சிந்தியுங்கள்.

எவ்வளவோ பொறுமைக்கு மேல்தான் இந்த விளக்கத்திற்கு வந்திருக்கிறேன்.

---------------------- தந்தைபெரியார்- "உண்மை" 14-4-70

0 comments: