Search This Blog

29.12.12

இரட்டை நாக்குக்குப் பெயர்தான் டாக்டர் இராமதாஸ்- உரசிப் பார்க்க ஆசைப்படுகிறாரா - மருத்துவர் இராமதாஸ்?


உரசிப் பார்க்க ஆசைப்படுகிறாரா - மருத்துவர்? கலி.பூங்குன்றன்
துக்ளக் இதழுக்கு (2.1.2013) மருத்துவர் திரு.ச. இராமதாஸ் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்த - அவதூறு சொல்ல பார்ப்பனரல்லாதார்களில் யாரேனும் கிடைத்தால் பார்ப்பன ஏடுகள் அவர்களுக்கு தலைப்பாகை கட்டி விடும்.

இதே துக்ளக்கில் திரு.ச. இராமதாஸ் அவர்கள் தந்தை பெரியார் அவர்களை காட்டிக் கொடுத்து பேட்டிக் கொடுத்ததுண்டு. (15.4.1988)

துக்ளக் கேள்வி: பெரியார் ஜாதியை ஒழிக்க போராடினார் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அவர் ஆரம்பித்த நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து என்ன செய்தது?

டாக்டர் ச.இராமதாஸ் பதில்: எல்லோருமே சேர்ந்துதான் எங்களை ஏமாற்றினார்கள். பிராமணர், பிராமணரல்லாதார் என்ற கோஷத்தை கொண்டு வந்தார்கள். பிராமணரல்லாதார் என்று சொல்லும் பொழுது நாங்கள் எல்லாம் முன்னுக்கு வருவது போல் இருந்தது என்று நினைத்தோம். ஆனால் ஏமாந்தோம் 

என்று தந்தை பெரியாரை இன எதிரியான பார்ப்பனரிடம் - அதுவும் சோ.இராமசாமியிடம் காட்டிக் கொடுத்து பேட்டிக் கொடுத்தவர்தான் இவர்.
பார்ப்பனர் எதிர்ப்பு என்று ஒன்று இல்லையானால் ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம்தானே நடைமுறைக்கு வந்திருக்கும்?

அந்த நிலை என்றால் மருத்துவர் திரு.ச.இராமதாசு கழுத்தில் ஸ்டெதாஸ் கோப்பா தொங்கும்? ஒரு கணம் மனச்சான்றுடன் நினைத்துப் பார்க்க வேண்டும் - அப்படி ஒன்று இருந்தால்.

நன்றி உணர்ச்சியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும் - அப்படியொரு உணர்ச்சி இருந்தால். பார்ப்பனர் எதிர்ப்பு உணர்ச்சியின் அடிப்படையில் பிறந்ததுதானே சமூக நீதி உணர்ச்சி?

இந்த சமுதாய சீர்திருத்தம் முதற்படி பார்ப்பன ஆதிக்கத்தில் இருக்கும் பதவி உத்தியோகங்களை விகிதாச்சாரம் கைப்பற்ற வேண்டியது என்பதைதான் A,B,C,D யாக கொண்டோம் - கொள்கிறோம்.

ஆனதாலேயே தான் நான் வகுப்புவாதி என்று சொல்லப்பட்டேன் என்பதல்லாமல் நானும் வகுப்பு வாத உருவமாகவே இருந்து வருகிறேன். நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டிருக்கலாம் என்றாலும் சமுதாயத்துறையில் பார்ப்பனீய வெறுப்பு உள்ளவன் நான். அதுதான் என்னை பகுத்தறிவு வாதியாக (நாத்திகனாக) ஆக்கியது (விடுதலை, 5.3.1968) என்றாரே தந்தை பெரியார்.

தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்தை புரிந்து கொண்டவராக இருந்தால் பெரியார் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் இந்த A,B,C,D யை இராமதாஸ் கற்றிருந்தால் பார்ப்பன எதிர்ப்பை கொச்சைப்படுத்தி (அதுவும் ஒரு பார்ப்பனரிடம்) சபாஷ் பட்டம் வாங்கியிருப்பாரா?
திராவிட இயக்கத்தினருக்கு எதிர்ப்பானவர்கள் என்றால் அவர்களை கொஞ்சம் மூக்கு சொறிந்து காற்றடித்து பலூனை பறக்க விடுவார்கள் பார்ப்பனர்கள்.
அன்றைய இராவணனை காட்டிக் கொடுத்த விபீஷணனுக்கு தானே ஆழ்வார் பட்டம் கிடைத்தது. விசுவாசியாகிய கும்பகர்ணனுக்கு கிடைக்கவில்லை அல்லவா!

இந்த பேட்டியில் கூட தோழர் திருமாவளவன் மீது குற்றப்பத்திரிகை படித்துள்ளார். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் உயர்ஜாதி பெண்களை காதல் செய்து பிறகு பேரம் பேசுகிறார்கள் என்று திருப்பித் திருப்பி சொல்கிறார்.
ஒரே ஒரு கேள்விக்கு மருத்துவர் பதில் சொல்ல வேண்டும். எந்தத் தேதியில் இருந்து இந்தக் கருத்து இவருக்கு உதித்தது? கடந்த சட்டமன்ற பேரவை தேர்தலுக்குப் பிறகு என்று கூட சொல்ல முடியாதே!

இந்த ஆண்டு ஜனவரி மாததத்தில் கூட (22.1.2012) தேவ நேயப் பாவாணர் நூலக அரங்கில் அனைத்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின, பழங்குடி இன சிறுபான்மை சமுதாயங்களைச் சேர்ந்த தலைவர்களைக் கூட்டி ஜாதி வாரி கணக்கெடுப்பு உட்பட பல தீர்மானங்களை நிறைவேற்றவில்லையா? (பா.ம.க.வின் ஏடான தமிழ் ஓசை 23.1.2012, பக்கம் 4) இந்த பத்து மாத இடைவெளியில் தான் தலித்கள் மேல்ஜாதி பெண்களைத் திடீரென்று காதல் செய்யத் தொடங்கி விட்டனரா? தொடர்ந்து நாடாளுமன்றம், சட்டமன்றத் தேர்தல்களில் சந்தித்த கடும் தோல்வி - அவரை விரக்தியின் எல்லைக்கு விரட்டிய நிலையில் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு ஆளாகி, கடைசியில் இந்த ஜாதி என்னும் - தமிழ்நாட்டில் செல்லுபடியாகாத மணற்கயிறை பிடித்துத் தொங்க ஆரம்பித்துள்ளார் என்பதுதான் உண்மை.

தர்மபுரியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையோ, அங்குள்ள பிற சமுதாயத்தினரையோ சந்திக்காமல், தலித் பகுதிக்கு மட்டுமே சென்று மூக்கை சிந்திவிட்டு வந்த லெட்டர்பேட் தலைவர்களோ, இராமதாஸ் ஜாதி அரசியல் நடத்துவதாகக் கூறும் மற்றவர்களோ, ஜாதி மறுப்புத் திருமணம் நடத்த புறப்பட்டுள்ள வீரமணி வகையறாவோ, திமுகவோ, கம்யூனிஸ்டுகளோ, முதலில் தங்கள் குடும்பத்தில் ஜாதியை விட்டு ஜாதி மாறி பெண்கொடுப்பது வழக்கமாக கொள்ளட்டும்.

தலித களுடன் கொள்வினை, கொடுப்பினை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஜாதி ஒழியும். இதுதான் எங்கள் கொள்கை என்று இந்தத் தலைவர்கள் அறிவிக்கத் தயாரா என்று கேட்கிறேன் என்று சவால் விட்டுள்ளார் மருத்துவர்.

தருமபுரியில் பாதிக்கப்பட்டவர்களையும் பாதிப்புக்குக் காரணமானவர்களையும் சம அளவில் பார்க்க வேண்டும் என்று திரு.ச.இராமதாஸ் விரும்புவதிலிருந்தே அவரது நேர்மை சறுக்கி விழுந்து விட்டது.

மேல் ஜாதியில் பாதிக்கப்பட்டவர் என்று யாரைச் சொல்லுகிறார்? தற்கொலை செய்து கொண்ட நாகராஜன் என்பவர் பாதிக்கப்பட்டவர் என்று சொல்ல முன்வருகிறாரா?

திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து தற்கொலை செய்து கொண்டவர் பாதிப்புக்கு ஆளானவர் என்று சொல்லுகிறாரா? இதில் பார்க்கப்படவேண்டியது - இளங்கோவின் மகன் இளவரசன் என்ற தோழனை காதலித்து விரும்பி திருமணம் செய்து கொண்டார் நாகராசனின் மகள் திவ்யா என்பது நீதிமன்றத் திலேயே மணமகளின் வாக்குமூலம் உறுதிபடுத்தப் பட்டதே - அதற்குப் பின் இதில் தலையிட பெற்றோர்களுக்கும் உரிமை கிடையாது. ஜாதிக் கொள்ளிக் கண்களுடன் பார்ப்பவர்களுக்கு சட்டப்படியும் நியாயப்படியும் இடமில்லையே!
உண்மை இவ்வாறு இருக்கும் போது பாதிக்கப்பட்ட மேல்ஜாதி மக்கள் வசிக்கும் பகுதிக்குப் போனார்களா? போனார்களா? என்று புலம்பி அனுதாபம் தேடிக் கொள்ள முயற்சிப்பதைக் கண்டு வேண்டுமானால் அனுதாபப் படலாம்.

வீரமணி வகையறாவாம்! மருத்துவர் ராமதாசு அய்யா அவர்கள் கூறும் வீரமணி வகையறா என்பதற்கு என்ன பொருள்?

வீரமணி பாரம்பரியம் என்பது தந்தை பெரியார் அவர்களின் பாரம்பரியம். எண்பது வயதில் 70 ஆண்டு பொது வாழ்க்கைக்கு சொந்தமான பாரம்பரியம்.
40 முறைகளுக்கு மேல் சிறை சென்ற பாரம்பரியம். (சிறைக்குள் இருந்த தன்னை விடுவிக்குமாறு முதலமைச் சரிடம் தூது போகச் சொன்ன பாரம்பரியம் அல்ல) மருத்துவர் வீட்டுத் திருமணத்துக்குக்கூட திருக்குறளாருடன் வீரமணி அவர்கள் வருவதுதான் பெருமை  என்று கருதப்படக்கூடிய வகையறா!

அந்த வகையறா - தோல்வியில் துவண்டவர்களுக்கான துன்பப் பாடலின் தொகையறாவாக மாறிவிட்டது போலும்!

வீரமணி வகையறாவின் விடுதலையின் தலையங்கங்களும், அறிக்கைகளும் தான் மருத்துவர் ராமதாசு உட்பட பலருக்கு சமூகநீதிப்பாடம் சொல்லிக் கொடுப்பவை என்பதை மறந்து விடலாமா?

பார்ப்பனர்கள் கூட பயன்படுத்தத் தயங்கும் வார்த்தையை அவர்களின் தொங்கு சதையாகி விட்டவர்கள் பயன்படுத்து கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. (கோவையில் மருத்துவர் கூட்டிய அனைத்து ஜாதி சங்க கூட்டத்தில் வாழ்த்து தெரிவித்திருந்த பார்ப்பன சங்கத்தின் வாழ்த்து மடலை மருத்துவர் படிக்க, பலத்த கரவொலியாம்) அடடே! பார்ப்பன எதிர்ப்பை ஒரு கட்டத்தில் எப்படியெல்லாம் முழங்கியவர்! தன் தொண்டர்களை கருப்புச் சட்டை போட சொன்னவர், கேவலம் ஒரு தேர்தல் தோல்வியால் எல்லா மானத்தையும் மூட்டைக் கட்டி பார்ப்பனர்களின் பாதார விந்தங்களில் சமர்ப்பிக்க தயாராகி விட்டனர்- பார்த்தீர்களா?

இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது எங்கள் கட்சி உட்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணு தான் அடிப்படை என்று பச்சையாக ஆனந்த விகடனுக்கு (13.9.1998) ஒப்புதல் வாக்குமூலம்  கொடுத்தவர். வீரமணி அவர்களைப் பற்றி பேச அடிப்படை தகுதி உண்டா?
இன்றைக்குத் தடித்த நாக்குடன் பேசும் மருத்துவரின் இன்னொரு ஒப்புதல் வாக்குமூலம் இதோ!

திராவிடர் கழகத்திற்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இது ஓட்டு பொறுக்குகிற கட்சி அவ்வளவுதான். ஓட்டுப் பொறுக்குகிற வேலையையும் சற்று ஒதுக்கி வைத்து விட்டு திராவிடர் கழகத்தின் பின்னாலே வருவதற்கு நாங்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறோம் என்று சொன்ன வரும் சாட்சாத் இந்த திண்டிவனத்தார்தான். (6.11.1993 அன்று சென்னை பெரியார் திடலில் சமூக நீதி ஆதரவு - மதவெறி ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டில் மருத்துவர் ஆற்றிய உரை)

திராவிடர் கழகத்தின் பின்னாலே எப்பொழுதும் வரத் தயாராக இருப்பவர் தான் நமது மருத்துவர். இப்பொழுது ஏதோ விரக்தியால் தடுமாறுகிறார். நாளையோ நாளை மறுநாளோ மானமிகு வீரமணி அவர்களின் தலைமையேற்று திராவிடர் கழகத்தின் பின்னால் வரக்கூடியவர் என்று நம்புவோமாக!
இன்னொரு அணுகுண்டு கேள்வியைப் போட்டு அப்படி யே அதிர வைத்து விட்டார் போங்கள்.

வீரமணி வீட்டில் ஜாதி மறுப்பு திருமணம் உண்டா என்பது தான் அந்த அணுகுண்டுக் கேள்வி. வீரமணி அவர்களின் அத்தனை பிள்ளைகளுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம்தான். மானமிகு வீரமணி அவர்கள் திருமணம் செய்து கொண் டதும் கூட ஜாதி மறுப்பு (விதவையரை) மணந்து கொண் டவர்களின் மகளைத்தான். கலைஞரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளாரே மருத்துவர் - அவர் வீட்டிலும்கூட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மருமகள் வரை உண்டே!
சவால் விடும் மருத்துவரை நோக்கி வினா எழுப்பும் நேரம் இப்பொழுது எங்களுக்கு.

பெரியாரை நூற்றுக்கு நூறு பின்பற்றுவதாக முரசு கொட்டும் அய்யா மருத்துவரே - உங்கள் வீட்டில் ஒரே ஒரு பிள்ளைக்காவது ஜாதி மறுப்புத் திருமணம் செய்தது உண்டா? உங்கள் பேரப் பிள்ளைக்காவது அப்படி செய்ய உத்தேசம் உண்டா? சவால் விட்டே கேட்கிறோம்!

ஆம், நான் ஜாதி வெறியன்தான் என்று உளுந்தூர் பேட்டையில் (6.12.2012) ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த வராயிற்றே! இந்தக் கேள்விக்கு ஏது விடை அவரிடம்....?

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த கதைபோல தந்தை பெரியார் கருத்துக்கு வியாக்கியானம் செய்ய வேறு ஆரம்பித்து விட்டார்.

இவர்கள் பெரியாரை பற்றி குறிப்பிடுகிறார்கள். பெரியார் பல பிரச்சினைகளுக்காகப் போராடினார். அவற்றில் ஜாதி மறுப்பும் ஒன்று என்று பேட்டிக் கொடுத்துள்ளார். இது உண்மையா, பெரியார் பாடுபட்டவற்றுள் ஏதோ ஒன்றுதான் ஜாதி ஒழிப்பே?

தந்தை பெரியார் அவர்களின் அடிப்படைக் கொள்கை ஜாதி ஒழிப்பு. பேதமற்ற இடமே மேலான திருப்தியான இடமாகும் (குடிஅரசு, 11.11.1944) என்றார் தந்தை பெரியார்.

அந்த பேதத்தில் முதன்மையானது பிறப்பின் அடிப்படை யிலான ஜாதி. அதனை ஒழிக்க புறப்பட்டபோது கடவுள், மதம், வேதம், இதிகாசங்கள், புராணங்கள் குறுக்கே வந்து படுத்தபோது காவல் நாய்களாக அவை குரைத்த போது அத்தனையையும் ஒழிக்க முற்பட்ட மாபெரும் ஜாதி ஒழிப்பு வீரர்தான் தந்தை பெரியார்.

இன்னும் சொல்லப்போனால் ஜாதியை பாதுகாக்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம் என்றபொழுது அதனைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை நடத்தி (26.11.1957) பத்தாயிரம்  கருஞ்சட்டை தொண்டர்கள் ஆறுமாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை வெஞ்சிறை சென்ற வரலாறெல்லாம் மருத்துவருக்குத் தெரியுமா?

தந்தை பெரியாரை விமர்சிக்கும் பொழுது நிதானம் வேண்டும். அவசரப்பட்டு விடக்கூடாதென்பார் பா.ஜீவானந்தம். அந்த அறிவுரையையே மருத்துவருக்கு கூற விரும்புகிறோம். பெரியார் என்ற வார்த்தையை உச்சரித்து விடுவதாலேயே பெரியாரைத் தெரிந்து கொண்டதாக மனப்பால் குடிக்க வேண்டாம்.

தமிழ் ஓசை நாளேட்டை நடத்தி வந்தாரே பா.ம.க நிறுவனர் திரு.இராமதாஸ். அதையாவது அவர் ஒழுங்காகப் படித்தாரா என்று தெரியவில்லை. பெரியாரின் அடிப்படைக் கொள்கை என்ன என்பது அதில் வெளியாகி உள்ளதே.
சமதர்மம் என்ற வார்த்தைக்கு சமூகத்துறையிலும், பொருளாதார துறையிலும் மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாக வாழவேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு சமதர்மம் என்ற வார்த்தையை பிரயோகிக்கிறேன்.... நம் நாட்டிற்கு முதலில் சாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்பதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டி இருக்கிறது.

சாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாக வாழ முடியும் என்று கூறினார் தந்தை பெரியார். (தமிழ் ஓசை, 9.2.2012, பக்கம் 4)

தந்தை பெரியார் அவர்கள் முதலில் ஒழிய வேண்டியது சாதியே என்று பா.ம.க. நிறுவனர் ஏட்டிலேயே வெளி வந்துள்ளதே - இது கூட புரியாமல் பெரியார் எத்தனையோ பிரச்சினைகளுக்காக பாடுபட்டார்.

அதில் ஒன்று சாதி என்று தன்னுடைய கருத்தை பெரியார் மீது ஏற்றிக் கூறுவது ஏற்புடையதுதானா?

காதல் என்று கூறப்படுவதை கடுமையாக விமர்சித்து நிறைய பேசி இருக்கிறார் பெரியார். அதுபற்றி இவர்கள் எதுவும் பேசமாட்டார்கள் என்று  வேறு குற்றப்பத்திரிகை படித்திருக்கிறார். விமர்சனம் என்பது வேறு - கருத்து என்பது வேறு - இரண்டும் ஒன்றல்ல. காதலை பற்றி தந்தைபெரியார் தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.

சுதந்திர காதலுக்கு இடமிருந்தால்தான் ஒரு நாடோ, ஒரு சமூகமோ அறிவு, அன்பு, நாகரீகம், தாட்சண்யம் முதலியவைகளில் பெருக்கமடையும். நிர்பந்த காதல் இருக்குமிடத்தில் மிருகத் தன்மையும், அடிமைத்தன்மையும் தான் பெருகும் (குடிஅரசு, 30.11.1929) என்று இன்றைக்கு 83 ஆண்டுகளுக்கு முன்பே காதல் பற்றி கருத்துச் சொன்னவர் பெரியார் ஆயிற்றே!!

கேள்வி: நீங்கள் தலித் அல்லாத பிற ஜாதியினர் கூட்டமைப்பை ஏற்படுத்தியிருப்பதின் நோக்கம் என்ன?

மருத்துவர் பதில்: தமிழகத்தில் எந்த வகையிலும் தீண்டாமை இல்லை, ஆனால் என்னை ஜாதியைச் சொல்லி திட்டினார் என்று புகார் கொடுத்தால் உடனே வழக்கு பதிவு செய்வது, கைது என்று நடவடிக்கைகள் தொடர்கிறார். இந்த பி.சி.ஆர் சட்டத்தில் பதிவாகும் வழக்குகளில் இரண்டு சதவிகிதம் தான் நிரூபிக்கப்படுகின்றன. தலித் அல் லாத பல சமுதாயத்தினர் இந்த பிரிவால் பாதிக்கப்பட்டுள் ளனர் என்பது மருத்துவரின் இன்னொரு குற்றச்சாற்று.
எடுத்த எடுப்பிலேயே தமிழகத்தில் எந்த வகையிலும் தீண்டாமை இல்லையென்று கூறும் மருத்துவர் இதே பேட்டியில் பிற்பகுதியில் என்ன சொல்லுகிறார்?

கும்பகோணம் அருகே குடிதாங்கி என்ற ஊரின் வழியாக தலித் மக்களின் பிணத்தை எடுத்துச் செல்ல முடியாத நிலை இருந்ததை அறிந்து நானே அங்கு போய் தலித் சமூகத்தை சேர்ந்தவரின் பிணத்தை அந்தப் பகுதி வழியாக சுமந்து சென்றேன் என்று சொல்லியிருக்கிறார்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் தீண்டாமை இருக்கிறது என்று ஒப்புக் கொள்ளவில்லையா? ஏன் இந்த முரண்பாடு?

இன்னும் பல கிராமங்களில் தேநீர்க் கடைகளில் இரண்டு கிளாஸ்கள் இருக்கவில்லையா? சுடுகாட்டுப் பிரச்சினை தீர்ந்துவிட்டதா?
கீரிப்பட்டி, பாப்பாரப்பட்டி, கொட்டாங்கஞ்சி ஏந்தல் என்ற ஊராட்சிகளில் ஊராட்சி தேர்தலே பலமுறை நடத்த முடியாத சூழ்நிலை இருந்ததை மருத்துவர் அறியமாட்டாதவரா? கலைஞர் ஆட்சியில்தானே அதற்கு தீர்வு காணப்பட்டது?

அதற்காக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி அவர்கள் கலைஞரைப் பாராட்டி பேசவில்லையா? வசதியாக இவற்றையெல்லாம் மருத்துவர் மறந்து விட்டாரோ?

மருத்துவர் ராமதாசு அவர்கள் பொதுவாழ்க்கைக்கு எப்போது வந்தார் என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும். மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக நாம் களம் கண்ட நேரங்களில் எல்லாம் இவர் எங்கிருந்தார்?

மண்டல் நாயகர் வி.பி.சிங்கை எப்படி வர்ணித்தார்? மேல் ஜாதி (ராஜ புத்திரர்) வெறி பிடித்த விபிசிங் அழுகிக் கொண்டிருக்கும் இந்திய அரசியல் பழத்தில் அழுகாதது போல் தோற்றமளிக்கும் பகுதிதான், செல்லாத நாணயத்தில் ராஜிவ் ஒரு பக்கம் என்றால் விபிசிங் மறுபக்கம் ஆவார் என்று தினப்புரட்சி ஏடு தலையங்கம் தீட்டவில்லையா?

இன்றைய சூழ்நிலையில் எதிர்வரும் 7,8,9 ஆகிய நாள்களில் கருணாநிதியுடன் விபிசிங் பங்கேற்கும் தமிழ்நாட்டின் நிகழ்ச்சிகளின் போது பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் விலகியே நிற்க வேண்டும். வேடிக்கை பார்க்கக் கூட வீதிக்கு வரக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் (1.2.1990) என்று அறிக்கை விட்டவர்தானே இந்த பாட்டாளி?

அந்த விபிசிங் இல்லையென்றால், திராவிடர் கழகம் இல்லையானால் (42 மாநாடுகளையும், 16 போராட்டங் களையும் அதற்காக நடத்தியது) மத்திய அரசில் பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு கிடைத்திருக்குமா?
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு ஆணை யை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோதும் எங்கிருந்தார் டாக்டர்?

69 சதவிகித இட ஒதுக்கீடு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் முயற்சியால் (31சி சட்டத்தையே எழுதிக் கொடுத்தவர் இவர்தானே) பாது காக்கப்பட்ட போது அம்பாசங்கர் தலைமையில் அமைக்கப் பட்ட குழு துரோகம் செய்த நேரத்தில் அதனை எதிர்த்து போர்க்கொடி தூக்கியது யார்?

மாநாடு நடத்தியது யார்? அம்பாசங்கர் வன்னியர் என்பதால் அவர் செய்த துரோகத்தை கண்டும் காணாமல் இருந்தவர் யார்? இதற்காக திராவிடர் கழகம் சென்னை பெரியார் திடலில் கூட்டிய மாநாட்டில் பன்மொழிப் புலவர் அப்துல் லத்தீப் மருத்துவர் ராமதாசு அவர்களை உரச வில்லையா? யார் மறந்தாலும் கருஞ்சட்டைக்காரன் இந்த வரலாறுகளையெல் லாம் மறக்க மாட்டான்.
மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்து இருக்க வேண்டும் என்ற தடையை திராவிடர் இயக்க ஆட்சி நீக்காமல் இருந்தால் டாக்டராகி இருப்பாரா திரு.இராமதாசு அவர்கள்? இதை எல்லாம் மறந்து இப்பொழுது திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப் படுத்துகிறார். இதில் இன்னொரு பார்ப்பனத் தன்மை என்ன என்றால் பெரியாரை பாராட்டுவது போல் பேசுவதுதான்.

இரட்டை நாக்குடை....யார்?

இது 1991 இல்

கருணாநிதியின் இந்த இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் தன்னாட்சி, ஈழப் பிரச்சினை, இடஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு, தமிழ் வழிக் கல்வி இவற்றில் சரியான தீர்வு எடுக்கவில்லை.

அவரது அரசு தந்திட்ட 20 சதவிகித இடஒதுக்கீடு (மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு) ஒரு மோசடி என்பதை நாம் புள்ளி விவரங்களோடு எடுத்துச் சொல்லியும், அதுபற்றிக் கவலைப்படாமல் ஏதோ வன்னியர்களுக்கு மட்டும் அதிகம் செய்துவிட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்வதில் முனைப்பாகச் செயல்பட்டார்

                    -------------------  டாக்டர் ச. இராமதாஸ் அறிக்கை 31.1.1991

இது 1999இல்

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலேயும் அது மத்திய அரசனாலும் சரி மாநில அரசாக இருந்தாலும் சரி, பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இருக்கின்றதா? ஆனால் இந்தியா வில் எந்த மாநிலத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட் டோருக்கென்று ஒருபிரிவு இல்லை அந்தப் பிரிவை மிக மிக பின்தங்கிய மக்களுக்காக இடஒதுக் கீட்டை அள்ளித் தந்த கலைஞர் அவர்களை சிறுபான்மை சமுதாயமான 107 சமுதாயமும் மறக்க முடியுமா? அப்படி மறந்தால் அவர்கள் நன்றி கெட்டவர்களாவார்கள்

                    ----------------அரியலூரில் பா.ம.க., சார்பில் நடத்தப்பட்ட சமய நல்லிணக்க மாநாட்டில் டாக்டர் இராமதாஸ் - 9.7.1999



1991இல் குற்றப் பத்திரிகை
1999இல் நன்றி அறிவிப்பு

- இந்த இரட்டை நாக்குக்குப் பெயர்தான் டாக்டர் இராமதாஸ்.


                           ---------------------------” 28-12-2012”விடுதலை”யில் கலி.பூங்குன்றன்அவர்கள்  எழுதிய கட்டுரை

13 comments:

தமிழ் ஓவியா said...


பெண்கள் போகப் பொருள்களா? பொங்கி எழுவீர், தோழர்களே!


டில்லியில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் கூட பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளாகும் கொடுமைகள் நாளும் வளர்ந்து கொண்டுள்ளன. ஆனால், டில்லி நிகழ்ச்சி பெரிதாகப் பேசப்பட்ட அளவுக்கு தமிழ்நாட்டில் நடைபெற்ற கொடுமைகள் பேசப்படவில்லை - இது ஊடகங்களின் கைங்கர்யமாக இருக்கக் கூடும்.

எங்கு நடந்தாலும் கொடுமை கொடுமையே! பெண்கள் என்றால் பலகீனமான ஜீவன்கள் என்று மனப்பால் குடித்துக் கொண்டு இருக்கிறது ஆடவர் கூட்டம்.

இது ஏதோ பெண்களைப் பொறுத்த பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டு மொத்தமான சமூகநீதிப் பிரச்சினை.

பொங்கி எழுக தோழர்காள்!

புயலெனச் சீறுக சகோதரிகாள்!

நாளை (29.12.2012) சனி காலை 10.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

கண்டன உரை நிகழ்த்துகிறார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், தலைமை தாங்குகிறார். கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி முன்னிலை வகிக்கிறார்கள். மகளிர் பாசறை செயலாளர் டெய்சி மணியம்மை மற்றும் மேரி அட் சீலா , பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் திரண்டு வருக! வருக!!

இது திராவிடர் கழகத்தின் கொள்கை அழைப்பு, வாரீர்! வாரீர்!!

- தலைமை நிலையம்
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


டில்லியில் முதலமைச்சர் அவமதிக்கப்பட்டாரா? கலைஞர் கருத்து


கேள்வி: டில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட் டத்தில் கலந்து கொள் ளச் சென்ற தமிழக முதலமைச்சர், அங்கே பேசுவதற்குப் போது மான நேரம் தரப்பட வில்லை என்றும், தமிழக அரசை அவமானப்படுத்தி விட்டதாகவும் குறை கூறி வெளி நடப்பு செய்திருக்கிறார்களே?

கலைஞர்: அவமானப்படுத்தியிருந்தால் அதை நான் கண்டிக்கிறேன். ஆனால் நடந்தது என்ன என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக நான் பல முதலமைச்சர்கள் மாநாடுகளுக் கும், தேசிய வளர்ச்சிக் குழு கூட்டங்களுக்கும் சென்றிருக்கிறேன். குறிப்பாக அந்தக் கூட்டங்களில் முதலமைச்சர்கள் தங்களுடைய பேச்சுக்களை விரிவாக அச்சடித்து புத்தகமாக மேஜைகளில் முன்பாகவே வைத்து விடுவார்கள். அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நேரம் வரையில் படிப்பார்கள். மீதமுள்ள பகுதிகளை பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்வார்கள். அப்படித்தான் முதலமைச்சர் கள் மாநாட்டில் பழக்கம். நானும் அய்ந்து முறை முதல மைச்சராக இருந்து அந்தப் பழக்கத்தை டெல்லியில் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் வித்தியாசமாக நடந்து கொண்டிருக்கிறார்.

முதலில் தான் பேச வேண்டுமென்றும், சென்னைக்குத் திரும்ப வேண்டு மென்றும் நம்முடைய முதல் அமைச்சர் சொன்னதின் பேரில் முதலில் பேசுமாறு அனுமதிக்கப்பட்டிருக் கிறார். எல்லா முதல் அமைச்சர்களுக்கும் பத்து நிமிடம் என்று எப்போதும் போல சொல்லப்பட்டிருக்கிறது. பத்து நிமிடம் முடிந்த பிறகு இது போன்ற கூட்டங்களில் பேசும்போது ஒரு அடையாள மணி அடிப்பார்கள். அவ்வாறு மணி அடித்தவுடன் பேச்சினை முடித்து விட வேண்டும் என்று கருதக் கூடாது. அதற்குமேல் அய்ந்து நிமிடம் இன்னும் சொல்லப் போனால் பத்து நிமிடம்கூட முதலமைச் சர்கள் பேசுவது உண்டு. நானும் அப்படிப் பேசி யிருக்கிறேன். நேரம் இருக் கிறவரை பேசிவிட்டு, மீதப் பகுதிகளை பதிவேட்டில் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக் கொண்டு, பத்திரிகைகளுக்கு முழு பேச்சினையும் அளித்து விடலாம். இதுதான் நடைமுறை.

தமிழ் ஓவியா said...


இவைதான் புண்ணிய நதிகளா?


குளிப்பதற்குக்கூட லாயக்கில்லாத சாக்கடைகள்
ஹெங்கோ நிறுவனத்தின் ஆய்வு முடிவு

புதுடில்லி, டிச.28- இந்தி யாவின் வடமாநிலங்களில் பாயும் கங்கை, யமுனை உள் ளிட்ட நதிகள், குளிப்பதற்கு ஏற்ற தகுதி கூட இல்லாத அளவிற்கு மாசடைந்துள்ள தாக அரசு சாரா அமைப்பு மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பத்மஸ்ரீ விருது வென்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் அனில் ஜோஷி தலைமையில், டேராடூனில் இயங்கி வரும் ஹெஸ்கோ என்ற அரசுசாரா அமைப்பு, இந்தியா வின் வடக்கு மாநிலங்களான உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் ஓடும் நதிகள் குறித்து ஆய்வு நடத்தும் பொருட்டு, அப்பகுதிகளில் சுற் றுப்பயணம் மேற்கொண்டது. 27 நாள்கள் இவர்கள் மேற் கொண்ட சுற்றுப்பயணத்தின் போது, இக்குழு, 1,800 கி.மீ அளவிலான தூரத்தை கடந்து அங்கு ஆய்வை மேற்கொண் டது.

தாங்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணம் குறித்து அனில் ஜோஷி கூறியதாவது, நாங்கள் உத்தரபிரேதசம், பீகார் உள் ளிட்ட மாநிலங்களில் உள்ள 24 நதிகளில் ஆய்வுகளை மேற் கொண்டோம். இம்மாநிலங் களில் ஒடும் நதிகள், மக்கள் குளிப்பதற்கு உண்டான தகுதி கூட இல்லாமல் உள்ளது தெரியவந்துள்ளது. இந்நதி களில் பெருமளவு சாக்கடை நீரே ஓடுகிறது. இதன்மூலம், அதனை சார்ந்து வரும் வாழும் மனிதன் உள்ளிட்ட உயிரினங் களின் எதிர்காலம் கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட் டுள்ளது. இதில் யமுனை, வருணா, கண்டாக் உள்ளிட்ட நதிகள் அதிக மாசடைந்துள் ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நதிகள் ஓடும் பகுதி களில், தொடர்ந்து மாசு அதி கரித்து வருவதன் மூலம், நீர் மற்றும் நில சுற்றுப்புறச் சூழ் நிலைகளில் அசாதாரண மாற் றங்கள் ஏற்படும் நிலை உரு வாகியுள்ளதாக அவர் கூறினார்.

தீர்வு : பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வழிகோலுகிறதோ, அதேபோல,இயற்கை நீர் வளங்களான இத்தகைய நதிகள் உள்ளிட்ட நீர்நிலை களை காக்கும் பொருட்டு, ஜி.இ.பி எனப்படும் மொத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற திட்டத்தை அரசு வகுத்து, நீர்நிலைகளை பாதுகாக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அக்குழு தெரிவித்துள்ளது.

தாங்கள் மேற்கொண்ட ஆய்வின் சாராம்சங்களை ஒரு அறிக்கையாக தயாரித்து பிரத மர் அலுவலகம் மற்றும் அனைத்து மாநில முதல்வர் களுக்கும் விரைவில் அனுப்ப உள்ளதாக ஜோஷி கூறினார்.

தமிழ் ஓவியா said...


அய்யோ ஆத்தா ஆத்தா இப்படியா செய்வது?


-ஊசி மிளகாய்-

கோவை மாவட்டம் கோபிச்செட்டிப் பாளை யம் அருகில் உள்ள ஒரு கிராமம் மொடச்சூர் என்பது; தண்டாரி அம்மன் கோயில் திருவிழா நேற்று காலை நடைபெற்றது. (27.12.2012) அதில் தீ மிதி - நெருப்பில் பக்தர்கள் - பக்தை கள் இறங்கி ஓடும் நிகழ்ச்சி நடந்துள்ளது!

இதற்கு நெருப்பில் இறங்குவது என்று அவர்கள் சொல்வதில்லை; பூக்குழியில் இறங்குதல், பூக்குழி திருவிழா என்று சொல்லி ஏமாற்றுவது வாடிக்கையான வேடிக்கையாகும்!

உண்மையான பூக்குழியில் விழுந்தால் உடலில் காயமா ஏற்படும்? மாறாக சுகமே மிஞ்சும்; ஆனால் அங்கே நடந்தது என்ன தெரியுமா?
குழந்தை குட்டிகளோடு சுமார் 25 பேர் அங்கே நெருப்பில் இறங்கி விழுந்து, சூடு தாங்க முடியாமல் தீப்புண்கள், தீக்காயங்கள் பெற்று மருத்துவமனையில் சேர்ந்து உயிருக்குப் போராடும் அபாயத்தில் உள்ளார்களாம்!

என்னே கொடுமை! என்னே அறியாமை! பக்தி வெறி - இதைச் செய்தியாக தந்த ஒரு ஆங்கில நாளேடு பயிற்சி பெற்றவர்களை இறக்குவதுதான் வழமை - இவர்கள் முன் கூட்டியே இறங்கி சூடு தாங்க முடியாமல் கதறி அழுதார்கள் என்று கூறுகிறது!

பயிற்சி பெற்றவர்கள் மட்டும் தான் இறங்குவது வருஷா வருஷம் வாடிக்கையாகும் என்ற உண்மை இப்போது வெளியே வந்து விட்டது. இப்படி இருக்கையில், ஆத்தாவின் கருணை யாருக்கு? பயிற்சி பெற்றவர்களுக்கு மட்டும்தான் என்னும்போது பக்தியின் மகிமை அடிபட்டு விட்டதே!
இதை நம்புவோர் பலருக்கும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவே பல ஊர்களில் பகுத்தறி வாளர்களும், திராவிடர் கழகத்தவர்களும் நெருப்புக் குண்டத்தில் இறங்கியும் அறி வுறுத்துகின்றனர்.

இந்திய அரசியல் சட்டத்தின் 51A(h)பிரிவின்படி, ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று அது வரையறுத்து, நிர்ணயித்துள்ளது.
ஆனால், திராவிடர் கழகத்தவரை - கருஞ் சட்டையினரைத் தவிர, வேறு எவரும் இப்படி செய்து அறிவு கொளுத்த முன்வருவதில்லை.
அதற்குத் தடைபோடும் புத்திசாலி போலீஸ்காரர்கள் சில ஊர்களில் அனுமதி மறுக்கிறார்கள்.

யாரும் ஓடத்தான் (நடை என்ற பெயரில்) முடியுமே தவிர 5 நிமிடம் எவ்வளவு கடவுள் பக்தனாக இருந்தாலும் நின்று காட்ட முடியாதே!
காய்ச்சி கட்டையின்மேல்தான் ஓட முடியும்; இரும்புத் தகடு மேல் ஓட முடியாது.

காயம்பட்ட நம் பக்தர், பிஞ்சு குழந்தைகள் விரைவில் நலம் பெறவும், அறிவு பெறவும் விரும்புவோமாக!

தமிழ் ஓவியா said...

இளையோரே, இதோ ஓர் ஆபத்து!


நம்முடைய பிள்ளைகள் - ஒவ்வொரு நடுத்தரக் குடும்பங்களிடம் கைப்பேசி இல்லாதவர்களே இல்லை. மின்னணுவியல் மூலம் தகவல் புரட்சியுகம் - மிகவும் பயனுள்ள பல செய்திகள் கேட்டவுடன் உடனே விரல் நுனியில் கிடைத்துவிடுகிறதே! அதில் இந்த கூகுள் (Google) ஆண்டவர் திருவிளையாடல் - இப்படி நவீன கடவுளாக இன்னுங் கொஞ்ச நாளில் ஆக்கி, 11ஆவது 12ஆவது அவதார மாக ஆக்குவதற்கும்கூட நம் மக்கள் பலர் தயாராக இருப்பார்களே!

தமிழ் ஓவியா said...

இல்லையென்றால் டிசம்பர் 21ஆம் தேதியோடு உலகம் அழிந்து விடப் போகிறது என்று ஒரு வாரத்திற்கு முன் கப்சா விட்டு கதையளந்திருப் பார்களா?

கணினிப் புரட்சி, டிஜிட்டல் புரட்சி, கிராபிக்ஸ் மூலம் ஈரேழு பதினாலு லோகம் என்ற கற்பனை புராண உலகங்களையும் தாண்டி எத்தனை உலகத்தை உருவாக்கிட முடியுமோ அதனால் மனிதர்களின் ஆக்கத் திறன் - ஆற்றல் (Credibility) மிகவும் அற்புத மானது; ஆறாவது அறிவின் பயன் - அதையே சரியாகப் பயன்படுத்தி மனித குலத்தை மூடத்தனத்தின் முடை நாற்றத்திலிருந்து வெளியேற்றும் வாய்ப்பும் - இன்னோன்ன பிற நன்மை களும் ஏராளம் உண்டு - உண்மை தான்.

ஆனால் எல்லாவற்றிலும் மறுபக்கம் உண்டே!

கணினியினால் ஏற்படும் நன்மை கள் அனைவரும் அறிந்ததே!

தீய விளைவுகளை பற்றிக் கொஞ் சம் இளைய தலைமுறைக்கும் உணர்த்திட வேண்டும்.

நம் வீட்டில் உள்ள இளசுகள் அனைவர் கையிலும் கைப்பேசி அதில் எல்லாவசதிகளும் ஏராளம் உண்டு. இதை முழுமையாக அறிந்தவர்கள் இளம் சிறார்களும் இளைஞர்களுமே!

எப்போதும் கையில் வைத்து சதா விரல்களில் வீணை வாசிப்பதைவிட வேகமாக அதனைத் தட்டிக் கொண்டே இருக்கிறார்களே, அப்படி என்ன தான் உள்ளது? வயதான நம்மைப் போன்றவர்களுக்குப் புரிவதில்லை - அது மட்டுமல்ல நம்மில் பலர் அழைப்புகள் வந்தால் மட்டுமே பேசுவோம். அல்லது அழைக்கத் தெரிந்தவர்களாகப் பயிற்சி பெற்றிருப்போம் - அதற்கு மேல் அதில் உள்ள Two in One 5,6,7 அம்சங்களை ஒரே அடியாக அடக்கியுள்ளவற்றைப் பயன்படுத்தும் வழிமுறை நுணுக்கத்தை நாம் பலரும் அறியோம்.

பொடிசுகள் தான் இதில் எக்ஸ்பர்ட் இதன் வேண்டாத விளைவு விபரீத விளைவு என்னதெரியுமா? நேற்று ஒரு செய்தி வல்லுநர்களால் சொல்லப்பட் டுள்ளது. இதனை சதா அதிகமாகப் பயன்படுத் துவோருக்கு மூளைச் சாவு (Brain Death) ஏற்படும் அபாயம் உள்ளது என்பதே அது!

பொதுவாக கேட்கும் தகவலை நொடிப் பொழுதில் ஜீபூம்பா போல் கூகுள் தந்து விடுகிறது என்பது - வியப்பும் சிறப்பும் என்றாலும், தனியே சிந்தித்து, முயற்சித்து, அகராதியோ, அது சம்பந்தப்பட்ட நூலை எடுத்து தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியோ இதன் மூலம் இல்லாமல் ஆக்கப்பட்டு விடுகிறது. இதன் மூலம் மூளைக்கு வேலை கொடுக்கும் வாய்ப்பு வேக வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறதே!

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூரில் கணினித் துறையில் மிக நீண்ட அனுபவம் பெற்ற ஒருவரிடம் இச்செய்திபற்றி பேசிக் கொண்டிருந்தபோது அவர் மேலும் திடுக்கிடக் கூடிய விளக்கத்தைச் சொன்னார்!

தமிழ் ஓவியா said...

முன்பு எல்லாம் நம் வகுப்புகளில் வாய்ப்பாடு படிப்போம் - 16 X 16 என்றால் உடனே 256 என்று பட் என்று வாய்ப்பாடு படித்ததினால் கூறுவோம். இப்போ வளர்ந்துள்ள அமெரிக்கா, அய்ரோப்பா மற்ற நாடுகளிலும் சரி சீனா, ஜப்பான், தைவான், கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் உள்ள மாணவர்களைக் கேட்டால், கால்குலேட்டர் இல்லாமல் கூற முடியாதே; எனவேதான் தேர்வின்போதே கால்குலேட்டர்கள் அனுமதிக்கப்படுகின்றன.

அதுவன்றி (கணக்கில்) இப்போது ஓரணுவும் அசையாதே! அது மட்டுமா அவர் சொன்னார்? எனக்கே பிரச்சினை களைப் பற்றி சிந்திக்கும் இயல்புத் திறன் நாளுக்கு நாள் குறைந்து வருகிறதே என்று கூறினார்!

எப்போதும் பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையை விரும்பாதீர்கள்; அது வாழைப் பழத்தை உரித்து வாயைத் திறக்கச் சொல்லி கனிவுடன் விழுங்க வைக்கும் வெட்கக்கேடானது.

மாறாக பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்று மனிதர்கள் தங்கள் பகுத்தறிவுக்கு வேலை கொடுத்து அறிவு, ஆராய்ச்சி, அனுபவங்களை சீர்தூக்கிப் பார்த்து, தீர்வு கண்டறிவதுதான் மனிதர்களை, இரும்பைக் காய்ச்சி பட்டறையில் பதப்படுத்துவதாகும்; பொன்னை உருக்கி அணிமணிகள் செய்யும் வியப்பாக ஆக்கிட முடியும்.

எனவே மூளையைப் பயன்படுத்த முந்த வேண்டும். எதையும் பயன்படுத் தாவிட்டால் துருப்பிடித்து விடும். பய னற்றுப் போகும். எனவே பயன்படுத்திட முனைப்பு காட்ட வேண்டும்.

ஆதி பருவத்தில் வேட்டையாடி, மிருகங்களின் தோலை எடுத்து, தோளில் இடுப்பில் கட்டிய மனிதன் - நடந்தபோது வெப்பம் தாங்காதபோது திடீரென்று எடுத்து தரையில் போட்டு சுகங் கண்டதிலிருந்து கண்டுபிடித் ததுதானே செருப்பு- அந்த காலணி களில்தான் எத்தனை வளர்ச்சி! எனவே மூளைக்கு வேலை கொடுப்பீர்!

டி.வி. கணினி முன்பு அமர்ந்திருந்த குழந்தைகள் தங்கள் கற்பனை வளமை - படைப்பாற்றலை மிகவும் இழந்து வருகின்றனர் என்று - - wwdup radio வைக் கண்டுபிடித்த டிரிவோர் பேலிஸ் (Trevor Baglis) என்ற அறிஞர் கூறுகிறார்!

75 வயது ஆன டிக்வென்ஹாம் என்பவர் (லண்டனைச் சார்ந்தவர்) அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர் களை (Inventors) இழந்த தலை முறையாகி விடும் என்று அபாயமணி அடித்துள்ளார்!

மெக்கானோ போன்ற பொம்மை களை பள்ளிகளில் கொடுத்து விளையாடப் பழக்குங்கள்! கையால் செய்யப்படும்; மூளையில் சிந்திக்கும் வாய்ப்பை ஏறபடுத்துங்கள்.

கணினி கைப்பேசி - இவைகளை அதிகமாகப் பள்ளிப் பிள்ளைகளைப் பயன்படுத்துவதை மாற்றி ஒரு சிந் தனை - கல்வி சிந்தனை காலத்தின் தேவையாகும்!
மூளை செத்துவிட்டால் பிறகு சமூக வளர்ச்சி முன்னேற்றம் தடைப்பட்டு விடாதா?

சிந்தியுங்கள், இளையோரே!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


ஆருத்ரா தரிசனம்!


மாதங்களில் மார்கழி என்று பெருமையாகப் பாடுவார்கள். சைவர்கள் திருவெம்பாவை பாடுவதும், வைணவர்கள் திருப்பாவை பாடுவதும் உண்டு.

அதே நேரத்தில் இந்த மார்கழியைப் பீடை மாதம் என்று சொல்பவர்களும் இந்த ஆன்மிக சிரோன்மணி கள்தாம்.

வைணவர்கள் திருமாலைத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள் என்றால் அதற்குப் போட்டிக் கடையாக சைவர்கள் சிவனை சிரசில் வைத்துக் கூத்தாடுவார்கள்.

மாதங்களில் நான் மார்கழியாகவும், நாள்களில் திருவாதிரையாகவும் விளங்குகிறேன் என்று பகவான் கண்ணன் கீதையிலே சொல்லியிருக்கிறாராம்.

விடுவார்களா சைவ மெய்யன்பர்கள்? ஆருத்ரா தரிசனம் என்று நடராசனின் நடனப் பொழிவைப் பெரிதுபடுத்தியுள்ளனர்.

சிவ பெருமானுக்குரிய நட்சத்திரம் திருவாதி ரையாம். இந்நாளில் சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் தடபுடலாக நடத்துவர்.

மக்கள் பணத்தை எதையாவது சொல்லிச் சுரண்டுவதும், கடவுள் நம்பிக்கையை ஏதாவது சொல்லிப் புதுப்பிப்பதும் - அதிலும் இவற்றின் மூலம் பார்ப்பனர்கள் தாங்கள்தான் கடவுளுக்கு அருகில் இருக்கக் கூடியவர்கள் என்பதை நிலை நிறுத்து வதும்தான் இத்தகு நிகழ்ச்சிகளுக்கான உள்நோக் கமாகும். பக்திப் போதை ஏறிக் கிடக்கும் மக்கள் இது பற்றி எல்லாம் சிந்திக்க மாட்டார்கள் என்பதுதான் பார்ப்பனர்களுக்கு மிகப் பெரிய பலமாகும்.

தமிழ் ஓவியா said...

தாருகாவனத்து முனிவர்களின் கர்வத்தை அடக்கிட சிவன் நடனம் ஆடினானாம்!

கர்வத்தை அடக்க நடனம்தான் உபாயமா? எப்படி அடக்கினானாம்? அந்தத் தாருகாவனத்து ரிஷி களின் மனைவிமார்களை சிவன் கற்பழித்தானாம் - இதுதான் ரிஷிகளின் ஆணவத்தை அடக்க சிவன் மேற்கொண்ட வழி.

ரிஷிகள் சும்மா விடுவார்களா? எங்கள் மனைவி மார்களின் கற்பை அழிப்பதற்குக் காரணமாக இருந்த சிவனின் சிசுனம் (ஆண் உறுப்பு) அறுந்து விழுவது என்று சாபமிட்டார்களாம். அப்படி அறுந்து விழுந்த உறுப்பை பார்வதி தேவியார் தன் உறுப்பால் தாங்கிப் பிடித்தாளாம். அதுதான் கோயில்களில் இருக்கக் கூடிய சிவலிங்க வடிவம் என்பது.

காட்டு விலங்காண்டிக் காலத்தில் இப்படி எல்லாம் கற்பிக்கப்பட்ட ஆபாசத்தைத்தான் ஆன்மிகம் என்றும், பக்தி என்றும் மக்களின் புத்தியையும் ஒழுக்கத்தையும் பாழ்படுத்தி வந்துள்ளனர்.

தாருகாவனத்தில் ஆடிய அந்த சிவ நடனத்தை தில்லையில் (சிதம்பரத்தில்) திருவாதிரை நாளில் ஆடுமாறு பதஞ்சலி முனிவர் கேட்டுக் கொண்ட தற்காக சிவன் நடனம் ஆடிய நாள்தான் இந்நாள். சிவன் நடராஜன் ஆனது இப்படித்தான்.

சித் என்றால் அறிவு - அம்பலம் என்றால் ஆகாயம் அறிவு வெளியில் இறைவன் நடனம் ஆடியதால் இத்தலம் சிற்றம்பலம் சிதம்பரம் ஆனதாம்.

இந்த நடராஜ பெருமான் தன்னை மறந்து ஆடிக் கொண்டு இருந்தபோது, அவரது உடுக்கிலிருந்து ஹயவரடு-ஹல் முதலிய 14 வேறு வேறான சப்தங்கள் வெளிவந்தன. அவற்றை முறைப்படுத்தி பாணினி ரிஷி சமஸ்கிருதத்தை உண்டாக்கினானாம் (கல்கி 25.6.1972).

எப்படி எல்லாம் பித்தலாட்டம் செய்து வைத்துள் ளனர் பார்ப்பனர்கள்! ஒரு கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

அப்படி சிவன் உடுக்கிலிருந்து பிறந்த அந்தத் தெய்வ மொழி இன்று ஏன் செத்த மொழியாக - பேச்சு வழக்கிலிருந்து ஒழிந்த மொழியாக (Dead Language) ஆயிற்றாம்? கடவுளைக் காப்பாற்றப் போகிறார்களா? அல்லது சமஸ்கிருதத்தைக் காப்பாற்றப் போகிறார்களா?

இவ்வளவு ஆற்றல் சிதம்பரம் நடராசனுக்கு உண்டு என உதார் விடுகிறார்களே, அந்த சிதம்பரம் நடராஜன் சிலை முப்பத்தேழாண்டு பத்து மாதம் இருபது நாட்கள் (24.12.1648 முதல் 14.11.1686 வரை) இந்தச் சிதம்பரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு காப்பாற்றப் பட்டது ஏன் தெரியுமா?

பிஜப்பூர் சுல்தானின் படை எடுப்புக்கு அஞ்சியே இது நடைபெற்றுள்ளது. (தஞ்சை - தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியீடு)

சிறீரங்கம், மதுரை கோயில் கடவுள்களுக்கும் இந்தக் கதி ஏற்பட்டுள்ளது. இவர்கள் கூறும் கடவுள் சக்தியெல்லாம் எங்கே போனது?

ஆருத்ரா தரிசனம் நடைபெறும் இந்தக் கால கட்டத்தில் பக்தர்கள் இவற்றையும் கவனத்தில் கொண்டு கருத்து வெளிச்சம் பெறுவார்களா?

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்



பார்ப்பனர்கள் இந்நாடு எவ்விதச் சமுதாய மாறுதலும் அடையக் கூடாது என்ற தன்மையினையே தங்கள் மூலாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.
(விடுதலை, 30.12.1972)

தமிழ் ஓவியா said...


நாத்திகர்கள் சங்கம்

1000, 2000 ஆண்டுகளுக்கு முன்பாக மனிதனுக்கு எந்த அளவு அறிவு இருந்திருக்க முடியும்? அதிசய அற்புதங்களைச் சிந்திக்க அவனுக்கு எப்படி வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும்? என்று கேட்டால் எவனும் பதில் சொல்ல முடியாது.

நமது பாட்டன் கட்டை வண்டியில் போனான்; குச்சு வீட்டில் இருந்தான். ஆகவே நானும் கட்டை வண்டியில்தான் போவேன்; குச்சு வீட்டில்தான் இருப்பேன். மோட்டாரோ, ரயிலோ, மச்சு வீடோ வேண்டாம் என்று எவன் சொல்லுகின்றான்?

தோழர்களே மேல்நாடுகளில் 50, 60 ஆண்டுகளுக்கு முன்பே - நாத்திகர்கள் சங்கம், சிந்தனையாளர்கள் சங்கம், தாராள நோக்காளர்கள் சங்கம், கடவுள் மறுப்பாளர்கள் சங்கம் என்ற பல பெயர்களில் பல சங்கங்கள் தோன்றி வேலை செய்து வருகின்றன.

நான் பாரிசில் ஒரு பகுத்தறிவு பத்திரிகையை பார்த்தேன். அதில் சிலுவையை ஒரு காலில் மிதித்துக் கொண்டு இரண்டாக பிளப்பதாகப் போடப்பட்டு இருந்ததை கண்டேன். தோழர்களே! இந்த பகுத்தறிவு, சிந்தனை வளர்ச்சி எங்கு கொண்டு விடுமோ சொல்லவே முடியாது 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் விளையாட்டுப் போல சொல்லி உள்ளேன்.


விடுதலை 16.11.1971 - தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...


ஆன்மா பற்றி மொக்கலவாதக் கருத்து


சேலம் ர.ஒந்தாட்சி


கடவுளை உண்டு பண்ணினவனை விட ஆன் மாவை உண்டு பண்ணினவனே அயோக்கியன் என தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பவுத்தத்தைச் சார்ந்த மொக்கலவாதக் கருத்தும் (நைராத்ம வாதம் அல்லது ஆன்மா இல்லை என்கின்ற வாதம்) அமைந்திருப்பதை நீலகேசி என்னும் நூலில் மொக்கலவாதசருக்கத்தில் காணலாம்.

ஆன்மா அடங்காத ஒன்றா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங்களும், (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரியங் களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தானாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?

ஆன்மா ரூபமுடையது என்பீரேல்; சரீர பிரமாணத் ததா? அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!

ரூபம் அற்றது என்றாலோ? ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ இரு வகைத்தும் குற்றமே என்றறிக!

(நீலகேசி மொக்கலவாதச்சருக்கம், பக்கம்-3)

இதிலிருந்து ஆன்மா என்பதே ஒரு பொய்க் கற்பனை என்பதும், உடலுக்குள் புகுவதும், பிறகு உடல் செயலற்றுப் பிணம் என்றாகி விட்டால் அந்த உடலை விட்டு வெளியேறிவிடுகிறதென்பதும், மீண்டும் வேறு உடலை ஏற்றுக் கொள்கிறதென் பதும் சுத்தப் புரட்டு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.



மதத்தின் பெயரால் விபச்சாரம்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாழும் வில்பர். இவர் மனைவி மேரி கெலன்ட்ரெஸி இவர்கள் இருவரும் எகிப்து நாட்டில் பழைமையான மதம் ஒன்றை சேர்ந்தவர்கள். வில்பர் தன் மனைவி ஒரு பெண் சாமியார் என்றும், பாவத்தை தீர்க்கும் மந்திர சக்தி அவளிடம் இருப்பதாகவும் கூறினார்.

இதன் மூலம் அந்த தம்பதிகளுக்கு அமெரிக்காவில் பக்தர்கள் உருவானார்கள். இந்த பக்தர்கள், மேரிக்கு ஆயிரக்கணக்கில் நன்கொடைகள் கொடுத்தனர். இவர்களில் அதிக நன்கொடை கொடுத்த ஆண்களுடன் மேரி செக்ஸ் தொடர்பு கொண்டால் அந்த ஆண்களின் பாவம் நீங்கி விடும் என இத்தம்பதிகள் பிரச்சாரம் செய்தனர்.

இதனால் ஏராளமான ஆண்கள் தினமும் மேரியிடம் வந்து ஏராளமான பரிசுகளை கொடுத்து, தாங்கள் ஏராளமாக பாவம் செய்துள்ளதாக கூறி அவளிடம் செக்ஸ் உறவு கொண்டு பாவ மன்னிப்பு பெற்றனர். ஆனால் இதை ஊர்மக்கள் காவல்துறையிடம் புகார் செய்தனர்.

விபச்சார சட்டத்தின் படி கைது செய்யப்பட்ட மேரி பின்வரும்படி கூறினார். பக்தர்கள் கொடுக்கும் காணிக்கையாகவே அவர்களது நன்கொடைகளை நினைக்கிறேன்.

அவர்களது பாவத்தை போக்க அவர்களுடன் தொடர்பு கொள்ளும்படி என்மதம் சொல்லுகிறது அதனால் இதுவரை சுமார் இரண்டாயிரம் ஆண்களிடம் செக்ஸ் தொடர்பு கொண்டுள்ளேன்.

தமிழ் ஓவியா said...


தீட்டாயிடுத்து!


1946ல் திருவையாற்றில் நடை பெற்ற தியாகராஜ அய்யர் உற் சவத்தில், இசையரசு தண்டபாணி தேசிகர் ஆரம்பத்தில் சித்தி விநாய கனே என்ற பாடினாராம். அடுத்தப் படி கச்சேரி செய்ய வந்த அரியக்குடி ராமானு அய்யங்கார் தேசிகர் தமிழ் பாடி சன்னிதானத்தைத் தீட்டுப் படுத்தி விட்டார். நான் இந்த மேடை யில் பாட மாட்டேன். என்று கூச்ச லிட்டு தாம்தோம் எனத் தாண்டிக் குதித்தாராம்.

இது இன்றுநேற்றல்ல, மனுமந் தாதா காலத்திலிருந்து தமிழ் பாஷை நீச்ச பாஷை என்றும் பிராமணாள் ஸ்நானம் செய்து விட்டு சாப்பிடும் வரை தமிழ் பேசக் கூடாது என்றும், வீட்டில் விசேஷ காலங்களில் தமிழ் வாயில் நுழையக் கூடாதென்றும் கூறி வந்ததோடு அனுஷ்டானத்திலும் இருந்து வருகிறது. அகத்திலும், அக்கிரகாரத்திலும் இருந்து வந்த இந்த அகம்பாவம் அய்யர்வாள் உற்சவத்திலும் புகுந்து விட்டது.

தமிழ்நாட்டிலே - தமிழர்கள் உயிரோடு வாழும் நாட்டிலே - தமிழர்களுடைய மொழிக்குத் தடையுத்தரவு ஆங்கில அரசாங்கமல்ல - ஆரிய அரசாங்கத்தின் ஆணை! தமிழ் மொழியில் பாடியதால் மேடை தீட்டாகி விட்டது என்ற ஆணவப் பேச்சு கிளம்பியதற்குக் காரணம் தமிழர்கள் அடிமைகளாக - அனுமார்களாக வாழ்வதுதான், தமிழர் இனம் சூத்திர இனமாகவும், தமிழர் மொழி தீட்டுப்பட்ட மொழியாகவும் போய்விட்டது.

தியாகராஜர் திருநாளுக்கு நன்கொடை வழங்கும் முட்டாள் தமிழர்களும், தொண்டர்க்குத் தொண்டராம் சிஷ்யகோடிகளின் வரிசையிலுள்ள அழகப்ப செட்டியார் போன்ற விபீஷணர்களும் உள்ளவரை அரியக்குடிவர்க்கம் அகம்பாவத்தோடு தான் வாழும். அரியக்குடிகள் அங்கலாய்ப்புக்கு அவர் இனபந்து காந்தி மகாத்மா(?)வின் விஜயமும் ஒரு காரணமாகும்.

நம்ப வேண்டாம்

பெரியார் அவர்கள் சொற்பொழிவுகள் தேசிய தினசரிகளில் பெரும்பாலும் திரித்தும் மறைத்தும் கண்டபடி பிரசுரிக்கப்படுகின்றன.

எங்கும் பார்ப்பனர்களே நிருபர்களாயிருப்பதே இதற்கு காரணம். ஆகையால் அவைகளை நம்பவேண்டாம் என்று எச்சரிக்கிறோம். ஒவ்வொன்றுக்கும் சமாதானம் எழுதிக் கொண்டிருக்க முடியாததால் இதை எழுத நேர்ந்தது.


(குடிஅரசு, 9.2.1946)