Search This Blog

28.6.11

எது திராவிட இயக்கத்தின் கொள்கை?


திராவிட இயக்கக் கொள்கை எது தெரியுமா? (3)

எது திராவிட இயக்கத்தின் கொள்கை? தி.மு.க. என்பது திராவிடத்தைக் காப்பாற்ற வந்த இயக்கம் என்றால், திராவிடப் பகுதிகளான ஆந்திரம், கருநாடகம், கேரளம் இங்கெல்லாம் போய் தேர்தலில் நின்று ஓட்டுக் கேட்கத் தயாரா?

திராவிடம் திராவிடம் என்று சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிற இவர்களுக்கு, திராவிடம் என்ற சொல்லை அதன் உண்மையான அர்த்தத்தில் உச்சரிக்கிற தகுதி உண்டா? எங்கே இருக்கிறது திராவிடமும் அதன் கொள்கைகளும்? - என்று தீப்பொறி பறக்க எழுதுகிறது துக்ளக். ஆந்திரம், கருநாடகம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து சென்னை மாகாணமாக இருந்த கால கட்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்தான் திராவிடர் இயக்கம். மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட நிலையில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில், தமிழ்நாட்டு அளவில் திராவிடர் இயக்கம் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறது - பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது. எல்லைகள் மாறியதால் இனப் பெயர் மாறுமா? குற்றாலத்தில் குடியிருந்தவன் கும்பகோணத்திற்குக் குடிபெயர்ந்து விட்டதாலேயே அவன் அப்பா பெயரும், அம்மா பெயரும் மாறி விடுமா? அப்படி சொல்லப் போனால் இந்தியா முழுமையும் ஒருகாலத்தில் வாழ்ந்தவர்கள் - பரவியிருந்தவர்கள் திராவிடர்கள்தானே! அதற்காக பாகிஸ்தானில் இப்போது உள்ள அரப்பா பகுதியில் தேர்தலில் ஏன் நிற்கவில்லை என்று கேள்வி கேட்பார்களோ இந்த அ(ச)திபுத்திசாலிகள்?

ஆந்திரா உட்பட சென்னை மாநிலமும் இணைந்த மாநிலத்துக்கு பிரதமராக இருந்த பனகல் அரசர் (இராமராய நிங்கர்) காலத்தில்தான் மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்றிருந்த பார்ப்பன சதி, சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டது என்பது துக்ளக் பார்ப்பன வட்டாரம் அறியுமா? சென்னை மாநிலக் கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த குப்புசாமி சாஸ்திரிக்கு மாத சம்பளம் ரூபாய் 300 என்றும், தமிழ்ப் பேராசிரியராக இருந்த கா. நமசிவாய முதலியார் அவர்களுக்கு மாத சம்பளம் ரூ.81 என்றிருந்த வருணாசிரமப் பேதத்தை ஆணை போட்டு சமன்படுத்தியவரும் திராவிட இயக்கத்தின் தளகர்த்தர்களுள் ஒருவரான அதே பனகல் அரசர் என்ற சரித்திரத்தை அறிவார்களா சதுர்வருணக் கூட்டத்தார்? கோயிலில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை பொட்டுக் கட்டி தேவதாசிகள் என்று அவர்களுக்குப் பெயரிட்டு, கோயில் புரோகிதப் பார்ப்பனர்களுக்கும், ஊர் மைனர்களுக்கும் வைப்பாட்டியாக்கிய கேவலத்தைச் சட்டம் போட்டுத் தடுத்ததும் திராவிட இயக்க ஆட்சிதான் என்ற சேதி தெரியுமா இந்தச் சிண்டர்களுக்கு? அதை எதிர்த்த சத்தியமூர்த்தி அய்யரின் பரம்பரைதான் இந்தத் துக்ளக் கூட்டம் - நினைவில் வைக்கவும்.

பார்ப்பனர்களின் உக்கிராணமாக இருந்த கோயில்களை, அதன் திரண்ட சொத்துக்களைக் கொள்ளை அடித்துக் கொண்டிருந்த குடுமிகளின் கையிலிருந்த ஆதிக்கத்தை தனிச் சட்டம் போட்டுத் தடுத்து, இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்ததும் திராவிடராகிய பனகல் அரசர்தான் என்பதை நினைவூட்டுகிறோம். அந்தத் திராவிட இயக்கத் தொடர்ச்சியாக அய்ந்தாம் முறையாகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக வந்த மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்தான் தீட்சதர்களின் ஆனந்தத் தாண்டவ பூமியாக - சுரண்டல் சுரங்கமாக இருந்து வந்த சிதம்பரம் நடராசன் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்தார் என்பதும் - அந்த ஆத்திரம்தான் துக்ளக் கூட்டத்தை - நான்கு கால் பாய்ச்சலாகப் பாயச் செய்திருக்கிறது என்கிற பாடத்தையும் நாங்கள் அறிய மாட்டோமா? ஆண்டு ஒன்றுக்கு சிதம்பரம் கோயில் வருமானம் ரூ.33199 என்றும், அதில் செலவு ரூ.33 ஆயிரம் என்றும் மீதித் தொகை ரூ.199 என்றும் நீதிமன்றத்தில் இந்தத் தீட்சதர் கூட்டம் அறிவித்ததே! அதே நேரத்தில் சிதம்பரம் கோயில், தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறைக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் கோயில் வருமானம் ரூ. 25 லட்சத்து 12 ஆயிரத்து 485 ரூபாய் (டாலர்கள், தங்கம், வெள்ளி போன்ற காணிக்கைகள் நீங்கலாக இந்த வரவு) என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டதே! ஒருவரி துக்ளக் கும்பல் தீட்சதர்களின் மோசடியைப்பற்றி எழுதியதுண்டா? திராவிட இயக்கம் என்றால் என்ன என்று இப்பொழுது புரிகிறதா? கலைஞர்மீது காட்டுவிலங்காண்டித்தனமாகத் தாக்குவதன் தாத்பரியம் இதுதான். திராவிடம் என்ற சொல் அதன் உண்மையான அர்த்தத்தில் உச்சரிக்கத் தகுதி உண்டா என்று வினா தொடுக்கிறதே துக்ளக் அந்த வினாவுக்கு விடைதான் இந்தத் திராவிட இயக்க ஆட்சியின் சாதனைகள்!

திராவிடம் என்ற சொல்லை அதன் உண்மையான அர்த்தத்தில் உச்சரிக்க வேண்டும் என்ற உண்மையான கவலையில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
ஆரியர் - திராவிடர் என்பதெல்லாம் வெள்ளைக்காரன் கற்பனை என்று இதே கூட்டம் இன்னொரு இடத்தில் கூறுகிறது. மற்றொரு இடத்திலோ திராவிட இயக்கம் உண்மையான அர்த்தத்தில் அதனை உச்சரிக்கிறதா என்று கேள்வி கேட்கிறது?

பரிதாபம்! திராவிட இயக்கம் ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தின் ஆணிவேரையல்லவா அழித்திருக்கிறது! உச்சிக் குடுமியோடு, பூணூல் உடலோடு இன்று ஊரில் நடமாட முடியாது - கோலி விளையாடும் சிறுவன்கூட கேலி செய்யும் நிலையை ஏற்படுத்தியது திராவிடர் இயக்கமே!

ஆத்திரம் வராதா - அனலில் விழுந்த பூச்சிகளாகத் துடிக்க மாட்டார்களா? என்ன செய்வது, நமது மக்களுக்கு இன்னும் தெளிவும், புத்தியும் வரவில்லையே! தோல்வி, திராவிட இயக்கக் கொள்கைக்கு அல்ல என்று கலைஞர் அவர்கள் கூறியிருப்பது - மேலும் தீவிரமாக திராவிட இயக்கக் கொள்கையைப் பரப்ப வேண்டும் என்ற அர்த்தத்தில்தான்; இளைஞர் அணி, மாணவர் அணிகள் தீவிரமாகட்டும். அதுதான் துக்ளக் கும்பலுக்குக் கொடுக்கும் உண்மையான சவுக்கடி!

வாழ்க பெரியார்!

வளர்க திராவிட இயக்கக் கொள்கைகள்!

------------------”விடுதலை” தலையங்கம் 28-6-2011

0 comments: