Search This Blog

25.3.11

காங்கிரசிற்குள்ளேயே ஒரு திராவிடர் கழகம்



(அதிகம் அறியப்படாத ஓமந்தூர் ராமசாமி (ரெட்டியார்) பற்றிய நூல் இது. அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை என செயல்பட்ட, உயர்ந்த மனிதரான ஓமந்தூராரின் அரசியல் வாழ்க்கையை ஆரியம் எப்படி வீழ்த்தியது என்பதை இந்த நூல் விவரிக்கிறது. ஓமந்தூராரின் ஆட்சிக் காலத்தையும் அக்காலத்தில் அண்ணா, திராவிட நாடு இதழில் எழுதிய தலையங்கம் குறித்தும் வரலாற்றுச் சுவடுகளை நம் கண்முன்னே நிறுத்துகிறது.)

இனி நூலிலிருந்து...

ஒழுங்கீனத்தையும், முறையற்ற பரிந்துரையையும் அனுமதிக்கவே கூடாது என்பதில் ராமசாமி முடிவாக இருந்தார். அதுவே அவருக்கு பிரச்னை ஆனது.
இது பற்றி முன்னாள் தலைமை நீதிபதி ராஜமன்னார், முத்துலிங்க ரெட்டியார் ஆகியோர் தன்னிடம் சொன்னதாக சோமலே ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் 1948இல் ஒரு நீதிபதி பதவி, காலியாக இருந்தது. அந்த இடத்திற்குப் புகழ்பெற்ற கிரிமினல் வழக்கறிஞர் என்.சோமசுந்தரம் பெயரைத் தலைமை நீதிபதி (ராஜமன்னார்) சிபாரிசு செய்தார். முதலமைச்சர் ஓ.பி.ஆர். அதை ஏற்றுக் கொண்டார்.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரும் நேருவின் இனிய நண்பருமான என்.கோபாலசாமி அய்யங்கார் தம் மருமகன் வி.கே.-திருவேங்கடாச்சாரிக்கு நீதிபதி பதவி கிடைக்கவில்லை என்று கவலைப்பட்டார் நேருவிடம் குறை கூறினார். நேரு, ஓமந்தூராரை சந்தித்த போது, பட்டேல் முன்னிலையில், நீங்கள் பிராமணரல்லாதார் அரசாங்கத்தை சாதி அடிப்படையில் நடத்தப் பார்க்கிறீர்கள் என்றார். சொன்னதை வாபஸ் வாங்குங்கள் அல்லது என்னுடைய ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். ஓ.பி.ஆர். ஓ.பி.ஆர். ராஜினாமா செய்தால் பல புதிய அரசியல் விளைவுகள் இருக்கும். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்று சொல்லி, சர்தார் படேல் அந்த அளவில் பிரச்னைக்கு முற்றுப்-புள்ளி வைத்தார்.

இது குறித்து பி.வி.ராசமன்னார் பின்வருமாறு கூறுகிறார்:

சோமசுந்தரத்தை நியமித்ததில் பிராமணர்களுக்குக் கோபம். யாராவது ஒரு பிராமணரைப் போட்டிருக்கலாமே என்று. அதற்கு ஓ.பி.ஆர். பொறுப்பு இல்லை. அவர் தலையிடவில்லை. சிபார்சு செய்தவன் நான் தான். ஓ.பி.ஆர். பிராமணர் விரோதி இல்லை. ஆனால் சட்ட விரோதமாக நீதிக்குப் புறம்பாகப் பிராமணர்-களுக்குச் சலுகை காட்டமாட்டார்.

இதேபோல் பீ.ஏ.வர்கீஸ் அய்.சி.எஸ். தன்னிடம் சொன்னதாக சோமலே இன்னொரு செய்தி தருகிறார்.

ஹிந்து நாளிதழ் ஓமந்தூரார் சாதி உணர்ச்சியுடையவர் என்று எழுதியிருந்தது. உடனே அந்த இதழின் ஆசிரியர் கஸ்தூரி சீனிவாசனைத் தலைமைச் செயலகத்துக்கு அழைத்தார்.

உங்கள் பத்திரிகையில் எவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள்? எத்தனை பேர் என்ன என்ன சாதியினர்? பிராமணர்கள் எத்தனை பேர்? என்று நேருக்கு நேராக கேட்டார்.

உலகப்புகழ் பெற்ற பத்திரிகை ஆசிரியர் கே.சீனிவாசன் ஒரு பதிலும் சொல்லவில்லை. அப்படியிருக்க நான் சாதி உணர்ச்சியுடையவன் என்று எழுதியிருக்கிறீர்களே? என்றும் ஓ.பி.ஆர். கேட்டார்.

************************
அறநிலைய பாதுகாப்பு சட்டத்தை ஆதரித்து சென்னை ஐலன்ட் மைதானத்தில் கூட்டம் (13.2.1949) நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். நான் இந்தக் கூட்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் என்னைக் கண்டு விசித்திரமான ஒரு கேள்வி கேட்டார். நீ ஏதோ இந்த மட மசோதாவை ஆதரிக்கிறாய். அது சரியோ தப்போ அது உன் விருப்பம். ஆனால் இந்த மசோதாவை ஆதரித்துப் பேச உனக்கு காங்கிரஸ் மேடை எதுவும் இல்லையா? கேவலம் கருப்புச் சட்டைக்காரர்கள் மேடைதானா அகப்பட்டது? இதுதான் அவர் கேட்ட கேள்வி.

இந்தக் கேள்விக்கு நான் ஒரு பதில் கேள்வி போட்டேன். நண்பரே, கன்னங்கரேல் என்று இருக்கிற நாவல் பழத்திற்குள்ளே எவ்வளவு ருசி இருக்கிறது தெரியுமா? இந்தப் பதிலை நான் தந்தவுடனே அந்த நண்பர் திகைத்தே போய்விட்டார்.
என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.எஸ்.-வேலுச்சாமி பேசினார். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கோகலே மன்றத்தில் நடந்த கூட்டத்தில், வைத்திய நாதய்யர் தும்மினால் கூட உடனே பத்திரிகையில் வருகிறது. அவர் மூச்சுவிட்டால் கூட அவர் இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டு பத்திரிகை நிருபர்கள் வருகிறார்கள். அவர் பேசியதைவிட அதிகம் கூறுகிறார் பேசியதாக. அந்த அதிகப் பிரசங்கத்துக்கும் கண் காது மூக்கு வைத்து, பேசியது 75 பகுதியானால் செய்தி வெளியாவது 100 பகுதி என்றாக்கி விடுகிறார்கள். இந்தப் பத்திரிகைக்காரர்கள். ஆனால் நாங்கள் பேசினாலோ ஒத்தைவரிகூட வருவதில்லை. இது ஏன்? இதற்கெல்லாம் காரணம், தினசரிகள் எல்லாம் ஒரு சிறு கூட்டத்தார் கையில் சிக்கிக் கொண்டிருப்பது தானா அல்லவா, இந்தப் பத்திரிகைகள் ஒழிந்தால் ஒழிய நாம் நல்வாழ்வு பெறுவது என்பது ஆகிற காரியமா?

தேங்காய் பழம் வாங்கிக் கொண்டு கோயில் கட்டிய நாம் தமிழர்கள், கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே நிற்க, பிராமணர்கள், உள்ளே இருந்து கொண்டு, நம்மை உள்ளே நுழையாதே என்கிறார்களே இது ஆணவமா அல்லவா?

உண்மையிலேயே இந்த இந்து மதம் காண்பவர் கைகொட்டி நகைக்கும் அளவுக்கு இன்று கேவல நிலை அடைந்திருப்பதற்குக் காரணம் இந்த வைத்தியநாதய்யர் பரம்பரைதானே - என்று காங்கிரஸ் எம்எல்ஏ ராஜராமும்,
இந்த மசோதாவால் இந்து மதத்தின் அடிப்படை உரிமைகள் பறிபோகின்றன என்று கற்றறிந்த பார்ப்பனர்களும் கதறுகின்றனரே? இந்த அடிப்படை உரிமைகள் யாவை? ஐந்து சதவிகிதமுள்ள ஒரு கூட்டம் மிச்சம் 95 சதவிகிதமுள்ள மக்கள் மீது ஆதிக்கம் புரிவது தானே இந்த அடிப்படை உரிமைகளின் அடிப்படை? இது நியாயமா? இந்த 95 சதவிகித மக்கள் கடவுள் பெயராலும் மதத்தின் பெயராலும் 5 சதவிகித மக்களில் சுரண்டப்பட்டும் வருகின்றனர். அதே நேரத்தில் எழுத்து வாசனை அற்றவர்களாகவும் வைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இன்று நடப்பில் இருந்துவரும் இந்துமதம் இதுதானே? இந்த இந்துமதத்தைக் காப்பாற்றுவதற்குத் தானா வைத்தியநாதய்யர்கள் இப்படி அலறித் துடிக்கின்றனர்.

என்று எம்.எல்.ஏ.ஈஸ்வரனும்.

இந்து மதக் கோயில்களும் மடங்களும் இன்று இருக்கும் கேவல நிலைமை நம்மை இந்து மதத்தை விட்டு விரட்டுவதாகவும், அல்லாவிட்டால் எந்த மதமும் தேவையில்லை என்ற முடிவுக்குத் துரத்துவதாகவும் இருக்கிறதே என்பதைக் காணக்கான சிறந்த சமயப் பற்றுதல் படைத்த என் உள்ளம் துடிக்கிறதே என்று எம்.எல்.ஏ. லட்சுமி அம்மையாரும் பேசினார்கள்.

திராவிட இன எழுச்சி வெள்ளம் காங்கிரஸ் பாலத்தின் கீழ் எவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றும், திராவிடர் கழகமே இனி அழிந்தாலும் கவலையில்லை, பெரியாரும் அண்ணாவும் பாரதிதாசனும் புவியிலிருந்து மறைந்தாலும் கவலையில்லை, நெடுஞ்செழியன்களையும் அன்பழகன்களையும் ஜனார்த்தனங்களையும் நாம் இனி இழந்து விட்டாலும் கவலையில்லை, காங்கிரசிற்குள்ளேயே ஒரு திராவிடர் கழகம் தோன்றிவிடும். இனி ஜெயமுண்டு பயமில்லை மனமே என்றும் போர்வாள் (19.2.1949) எழுதுமளவுக்கு காங்கிரசுக்குள் திராவிடர் கழக கருத்துக்கள் தலைதூக்க ஓமந்தூரார் காரணமானார்.

---------------ப.திருமாவேலன்- நூல்:-"காந்திராமசாமியும் பெரியார் ராமசாமியும்"

0 comments: