Search This Blog

4.3.11

ஏன் இந்து மதக் கடவுள்களை மட்டும் அழைக்கிறீர்கள்?


இந்தியாவில் வரும் காலத்தில் போதுமான அளவு மழை பெய்ய வேண்டுமென்று இந்திரனை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி வேண்டிக் கொண்டார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய பிரணாப் கடந்த ஆண்டு நாட்டிடை ஒரு பகுதியில் வறட்சியால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஒரு சில இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு பயிர்களை நாசப்படுத்தியது.

எனவே இந்த ஆண்டு நாட்டில் தேவையான அளவு மழை பெய்ய வேண்டுமென்று மழைக் கடவுளான இந்திரனை வேண்டிக் கொள்கிறேன்.

அப்போதுதான் இந்த ஆண்டில் சிறப்பான பொருளாதார வளர்ச்சி இருக்கும். மழையும் பொருளாதாரத்தைப் பாதிக்கும் காரணியாக உள்ளது என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோதும் குறிப்பிட்டார் (தினமணி 27.2.2010)

நடப்பு ஆண்டு நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோதும் (28.2.2011) அதே கதைதான். கூடுதலாக லட்சுமியையும் அழைத்துக் கொண்டார். இந்திரன் ஆசி வழங்க வேண்டும். சரியான நேரத்தில் மழை பொழிய,அவர் உதவ வேண்டும். அதேபோல், கடவுள் லட்சுமியை வணங்குகிறேன். அபாயமான சூழலில் இம்மாதிரி உத்திகள் பலன் தரும் (தினமலர் 1.3.2011) என்று கூறினார். ஒவ்வொரு ஆண்டும் நிதி அமைச்சர் இப்படி மதக் கடவுள்களை அழைத்துக் கொள்கிறாரே, வணங்குகிறாரே அவற்றால் காதொடிந்த ஊசி முனைக்காவது பலன் உண்டா? படித்த மக்களிடத்தில் கூட இத்தகைய மூடநம் பிக்கைகள் குடிகொண்டு இருக்குமாயின் மற்றவர்களைப்பற்றி என்ன சொல்ல! ஏன் இந்து மதக் கடவுள்களை மட்டும் அழைக்கிறீர்கள்? என்று பிஜேபி யைச் சேர்ந்த ஒரு உறுப்பினர்கூட நிதி அமைச்சரைக் கடாசியிருக்கிறார்.

அறிவுப் பூர்வமாக சிந்தனையைச் செலுத்த வேண் டிய ஒரு இடத்தில்கூட மத நம்பிக்கையைத் திணிப்பது சரியானதுதானா? தங்களின் பொருளாதாரத் தோல்வியை மக்களின் மதநம்பிக்கை என்னும் போர்வையின் பின்பக்கம் நின்று மறைத்துக் கொள்ளலாம் என்கிற யுக்தியாகக்கூட இருக்கலாமோ!

மழைக்குக் காரணம் இந்திரன்தான் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி யின் பேரனோ, பேத்தியோ பரீட்சைத் தாளில் எழுதினால் மதிப்பெண் சுழிதான் கிடைக் கும்.

நேரு போன்ற பகுத்தறிவு வாதிகள் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால், அந்த இடத்திலேயே பிரணாப்பை வம்புக்கு இழுத்திருப்பார். பீகார் பூகம்பத்துக்குக் கார ணம் கடவுளின் கோபம்தான் என்று காந்தியார் சொன்னபோது நேரு அதனைக் கேலி செய்யவில்லையா?

மும்பையில் மத்திய ரயில்வேயில் பணிபுரிந்த சுவாதிசிட்னிஸ், சுஜாதா ஷிண்டே ஆகியோர் பதவி உயர்வுக்காக எழுத்துத் தேர்வு எழுதினர். நன்றாக எழுதியும் தோல்வி அடைந்தனர் - என்ன காரணம் தெரியுமா? விடைத்தாளில் ஸ்ரீ சுவாமி சாம்ரத் மற்றும் ஓம் என எழுதியிருந்தனர். விடைத்தாளில் மதத்தைக் கலந்ததால் அந்த விடைத் தாளை ரத்து செய்து விட் டனர் (தினமலர் 8.7.2008).

இதே கண்ணோட்டம் இந்திரனையும், லட்சுமியையும் பட்ஜெட்டில் குறிப்பிடும் மத்திய நிதி அமைச்சருக்கும் பொருந்தும் தானே?

மழைக் கடவுள் இந்திரன் இருப்பதாகக் கூறப்படும் இந்நாட்டில்தான் வறட்சி வணக்கம் போட்டு வரவேற்கிறது. செல்வக் கடவுள் லட்சுமி என்று கதைக்கும் இந்நாட்டில் தான் வறுமைக் கோடுகள் வஸ்தாத் செய்கின்றன! ஆகா இதுவல் லவோ பாரதப் புண்ணியத் திருநாடு!

-------------- மயிலாடன் 3-3-2011 ”விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1 comments:

Anonymous said...

இப்படிக் கேள்விக் கேட்டதால் எனக்கும் என் குடும்பத்துக்கும் பெரும் சண்டையே வந்தது ... இங்கு பிரச்சனைக் கடவுளர்களால் அல்ல ! மாறாக இல்லாத கடவுளார்கள் எல்லாம் தரும் என நம்பி நாம் சும்மாய் இருக்கும் மனோபாவத்தை வளர்த்துவிட்டு இருக்கிறது நம் சனாதன மதங்கள் ..................