Search This Blog

4.4.15

பெண், ஆணின் சொத்தா?வள்ளுவனை விளம்பரப்படுத்தியவன் நான்-பெரியார்

பெண், ஆணின் சொத்தா?


தமிழனுக்குள் இல்லாத இந்த முறையினைப் பார்ப்பான் எதற்காகப் புகுத்தினான் என்றால், மனிதனை அடிமையாக்கவும், முட்டாளாக்குவதற்கும், ஜாதி இழிவை நிலை நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது தான் கல்யாணமாகும். இதைத் தான் வள்ளுவனும் சொன்னான். மற்றவனும் சொன்னான். எதற்காக அப்படிச் சொன்னானென்றால், பெண்ணடிமையை வலியுறுத்துவதற்காகவே யாகும். சீர்திருத்தத் திருமணம் செய்ய         வேண்டுமென்கின்ற ஆசையால், ரூ.200 கொடுத்து என்னைக் கூப்பிடுகின்றான். அவனும் நேரம் பார்த்து, நாள் பார்த்துத் தான் செய்கிறான். அப்படி நம் இரத்தத்தோடு ஊறிவிட்டது. அதைப் போக்குவது கஷ்டம் தான்; என்றாலும் போக்கித்தான் ஆக வேண்டியிருக்கிறது. அதைப் போக்காமல் நம் இழிவை, சூத்திரத்தன்மையை, மானமற்றத் தன்மையைப் போக்க முடியாது. என்ன கஷ்ட, நஷ்டம் வந்தாலும் அதையெல்லாம் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் இதை மாற்றியாக வேண்டும். 


எவன் ஒருவன் பெண் விடுதலையை விரும்புகிறானோ, மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டுமென்று நினைக்கின்றானோ அவன் இந்த முறையில் தான் வாழ்க்கை ஒப்பந்தத்தைச் செய்து கொள்ள வேண்டும். மற்ற முறைகள் அனைத்தும் பெண்ணடிமை - மூட நம்பிக்கை - ஜாதி இழிவு ஆகியவற்றை நிலைநிறுத்தக் கூடியவையேயாகும். நமக்கிருக்கிற புராணங்கள், கடவுள் கதைகள், இலக்கியங்கள் யாவும் பெண்ணடிமையை வலியுறுத்தக் கூடியவையேயாகும். பெண்களுக்கு நீதி சொன்னவர்கள் அத்தனைப் பேருமே, பெண்களென்றால் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்கின்ற தன்மையோடு கற்புடையவர்களாக இருக்க வேண்டுமென்று தான் சொல்லியிருக்கிறார்களே ஒழிய, ஒருவர் பெண் சுதந்திரத்தோடு இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. 


வள்ளுவரே பெண்ணடிமையை வலியுறுத்துகிறார். வள்ளுவனை விளம்பரப்படுத்தியவன் நான். திருகுறளைப் பரப்பியவன் நான். புலவர்களை விட அவர் கொஞ்சம் பரவாயில்லை என்பது தானேயொழிய, அவர் கருத்துகள் அத்தனையுமே ஏற்றுக் கொள்ளத்தக்கது என்பதல்ல. "தற்கொண்டான்பேணி" என்கின்றார். தற்கொண்டான் என்றால் தன்னைக் கொண்டவன். அதாவது தன்னை விலைக்கு வாங்கியவன் என்று தானே பொருள். அப்படியானால் பெண்கள் விலைக்கு வாங்குகிற பொருள் என்று தானே அர்த்தம். அதுபோன்று ஆணைச் சொல்லவில்லையே. எழுதியவன் இரண்டு பேரையும் ஒன்றாக வைத்து எழுதி இருந்தான் என்றால் சரி. பெண் பதிவிரதையாக இருக்க வேண்டுமென்று சொன்னவன் ஆண் சதிவிரதத்தோடு இருக்க வேண்டுமென்று சொல்லவில்லையே. நான் வள்ளுவனைக் குற்றம் சொல்லவில்லை. அவன் வாழ்ந்த காலம் பெண்ணடிமை மிகக் கொடுமையாக இருந்த காலம். அதற்கேற்றபடி எழுதி இருக்கிறார். அது இன்றைக்கு எப்படிப் பொருந்தக் கூடியதாக இருக்க முடியும்? 


தமிழ்நாட்டிலே குறளுக்கு அய்யாதான் சான்றாக இன்று இருக்கிறவர். அவரே சொல்லட்டுமே என்று அய்யா அவர்கள் சொன்னதும், திருக்குறளார் அவர்கள் "ஆண்களைப் பற்றியும் வள்ளுவர் சொல்லி இருக்கிறார்" என்று சொல்லி, ஒரு குறளை "பிறர்மனை நோக்கா சான்றாண்மை" என்பதை எடுத்துக் காட்டினார். 


உடனே தந்தை பெரியார் அவர்கள் குறுக்கிட்டு "பிறன் மனை என்று சொன்னால் அவள் இன்னொருத்தன் சொத்து என்பதால் பார்க்கக் கூடாது என்று சொன்னாரே தவிர, கல்யாணமாகாத பெண்களை நோக்கக் கூடாது என்று சொல்லவில்லையே." திருக்குறள் புத்தகத்தை எடுத்துக்காட்டி இந்த அதிகாரத்திலுள்ள 10-குறளும் பெண்ணைப் பற்றித் தான் சொல்கிறதே தவிர, ஆண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதைப் பற்றி ஒரு வரிகூட இல்லையே. அய்யா அவர்கள் எதையாவது எடுத்துக் காட்டினால் மன்னிப்போடு ஏற்றுக் கொள்கிறேன்" என்று சொன்னார்கள். திருக்குறளார் ஒன்றும் பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தார்கள். தந்தை பெரியார் அவர்கள் தொடர்ந்து பேசினார். 


பொதுவாகத் திருமணமென்றால் ஆண் - பெண்ணையோ பார்த்து ஏற்பாடு செய்வது கிடையாது. நீ பெண்ணுக்கு திருமணமென்றால் ஜாதகம் - ஜோசியம் - பொருத்தம் - நாள் - நட்சத்திரம் இவற்றைப் பார்க்கிறாய். நீ அன்னக்காவடி சீதையின் திருமணம் வசிஷ்டனை வைத்து ஜோசியம் பொருத்தம் பார்த்துச் செய்யப்பட்டது தானே. வசிஷ்டனை விட ஜோசியம் பொருத்தம் பார்க்கக் கூடியவர்கள் இல்லை. அப்படிப்பட்டவனை வைத்துப் பொருத்தம் பார்த்துச் செய்த திருமணத்தில் தான் சீதை இன்னொருவனுக்குச் சினையாகி கணவனால் அடித்து விரட்டப்பட்டிருக்கின்றாள். உண்மையாக நடக்கவில்லை என்றாலும், அவள் துன்பப்பட்டதாக எழுதி இருக்கின்றான். உண்மையாக நடந்தது என்று சொல்லவில்லை. இதற்காக எழுதிய கதையே இப்படி இருக்கிறது. ஜோசியம் பொருத்தம் இவை சக்தியுள்ளவையாக இருந்தால் இவ்வளவு (முண்டச்சி) விதவைகள் ஏன் இருக்கிறார்கள்? இதையெல்லாம் நம் மக்கள் சிந்திக்க வேண்டும். நம் இலக்கியங்கள், புலவர்கள் எல்லோருமே பொம்பளையைக் கெட்டுப் போனவள் என்பதற்கு 1000-சொற்கள் சொல்கிறான். ஆணைக் கெட்டுப் போனவன் என்று சொல்ல ஒரு சொல் கிடையாது. 


மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் வரவுக்கு உட்பட்டுச் செலவு செய்ய வேண்டும்; ஆடம்பரமான வாழ்வு வாழ வேண்டுமென்று ஆசைப்படக் கூடாது. சாதாரண எளிய வாழ்வு வாழ வேண்டும். பிள்ளைகள் பெறுவதில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மனிதன் ஒழுக்கம் கெடுவதற்குக் காரணம் இந்தப் பிள்ளைக் குட்டிகளைப் பெற்றுக் கொள்வதால் தான். அவர்களுக்குத் தேவையானவற்றைக் கவனிக்கவே அவன் வாழ்நாள் பூராவும் சரியாகி விடும். அவர்களைப் படிக்க வைக்க வேலை வாங்கிக் கொடுக்க, இதற்கே அவனுக்குச் சரியாகி விடும். கர்ப்பத்தைக் தடுக்காதே என்று சொல்கிறானே அவனெல்லாம் தீரன். லஞ்சம் வாங்குவதிலே! இயற்கையாக மனிதன் ஒழுக்கமாக இருக்க வேண்டுமானால் பிள்ளைக் குட்டிப் பெறுவதைக் கூடிய வரை குறைத்துக் கொள்ள வேண்டும். மூட நம்பிக்கையான காரியங்களில் ஈடுபடக் கூடாது. கண்டிப்பாய்க் கோயில்களுக்குப் போகக் கூடாது. பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டும்.


பெண்கள் வளர்ச்சி அடையாமல் போனதற்குக் காரணம், நாம் அவர்களை எதையும் செய்ய ஒட்டாமல் தட்டித் தட்டி அடக்கி வைத்திருப்பதேயாகும். 3.50 கோடி மக்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் என்றால், 1.45 கோடி பெண்கள் அடிமைகள் தானே! அவர்களால் சமுதாயத்திற்கு எந்தப் பலனும் கிடைக்க முடியாமல்  போய் விட்டது. ஜப்பானில் 100-க்கு 50-பேருக்குக் கணவன் இல்லை. அவர்கள் எல்லாம் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லையே! மலையாளத்திலே இன்றைக்கு அனேகம் பேருக்குக் கணவன் கிடையாது - அவர்களெல்லாம் கெட்டுப் போய்விட்டார்கள் என்று சொல்ல முடியாது.


------------------------------------ 18.08.1968 அன்று நடைபெற்ற கலியமூர்த்தி - இராசகுமாரி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 21.09.1968

13 comments:

தமிழ் ஓவியா said...

ஆதாரப்பூர்வ மறுப்பு

அவதூறு செய்யத் துடிக்கும் ஆரியம்

- கி.வீரமணி

அம்பேத்கரைப் போய் அரசமைப்புச் சட்ட மேதை; அரசமைப்புச் சட்டக் கர்த்தா என்று சொல்கின்றார்களே; இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவர்தான் உருவாக்கினாரா?

அவர் ஒன்றும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கவில்லையே. அவர் என்ன செய்தார்? ஒன்றும் செய்யவில்லையே என்று சொன்னார்கள்.

நண்பர்களே! இதற்குப் பதில் ஆதாரத்தோடு சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அம்பேத்கர் அவர்கள் அவருடைய உரையில் சுட்டிக் காட்டியிருக்கின்றார். அவர் எவ்வளவு பெரிய பேருள்ளம் படைத்தவர் என்பதை இதன்மூலம் நீங்கள் தெரிந்து-கொள்ளலாம்.

அவருடைய டிபேட்ஸ் எல்லா வால்யூம்-களும் என்னிடத்திலே இருக்கின்றன. அதிலே அவர் புரிந்த வாதங்களிலேயே மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார்.
அம்பேத்கர், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே.எம். முன்ஷி, கெய்த்தான், முகமது சாதுல்லா, இப்படி அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க ஏழு பேரைப் போடுகிறார்கள். அதிலே ஒருவர் அமெரிக்காவில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் விலகி விடுகிறார். ஆக, அந்த இடத்திற்கு டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் போடப்படுகின்றார். ஆகக் கடைசியில் அது ஆறு பேரோடு நிற்கின்றது.

அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவிலே கடைசியாக 6 பேர் இருந்தார்கள். அந்த 6 பேரில் டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஒருவர்; டி.டி.கிருஷ்ணமாச்சாரியாருடைய உரையோ என்னிடத்தில் இருக்கின்றது. இதுவே மிகப்பெரிய ஆதாரமாகும்.

டி.டி.கிருஷ்ணமாச்-சாரியார் என்ன சொன்னார் என்பதை உங்களுக்கு எடுத்துச் சொல்கின்றேன்.

நாங்கள் இத்துணைபேர் இருந்தாலும், எங்களால் இந்தப் பணிகளைச் சரிவரச் செய்ய முடியவில்லை. இதனை முழுமையாக அரசமைப்புச் சட்டத்தின் இத்துணைத் திருத்தங்களையும், இத்துணை வரைவுகளையும் செய்த பெருமை அம்பேத்கர் அவர்களையே சாரும் என்று மிகத் தெளிவாகச் சொன்னார்.

ஆனால், அம்பேத்கர் என்ன சொல்கின்றார்? அதைக் கவனியுங்கள். நான்தான் இதை எல்லாம் செய்தேன் என்று என்னைப் பாராட்டாதீர்கள். எனக்கு மிகப்பெரிய துணையாக இருந்தது பி.என். ராவ் என்று சொல்லுகின்றார்.

அவர்தான் அரசமைப்புச் சட்ட ஆலோசகர். அவருடைய அறிவுத்துணைதான் எனக்கு ரொம்ப அளவுக்குப் பயன்பட்டது. அவருக்கு நான் மிகுந்த நன்றி உடையவனாக இருப்பேன் என்று சொல்லுகின்றார்.

அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரைச் சொல்கின்றார். கடைசியில் டி.டி. கிருஷ்ணமாச்சாரியைச் சொல்லுகின்றார். தான் மட்டுமே இதை எல்லாம் செய்யவில்லை என்று மற்றவர்-களையும் பெருமைப்பட உயர்த்திச் சொல்லுகின்றார்.

நூல் : அம்பேத்கர்பற்றிய அருண்ஷோரி நூலுக்கு மறுப்பு

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மூடத்தனம்

சாமி சிலைகள் திருட்டு என்பது அன் றாடம் வெளிவரும் செய்தியாகும். இதற்கு மேலும் கோயில்களுக் குச் செல்லுவதும், கும் பிடுவதும், நேர்த்திக் கடன் கழிப்பதும், உண்டி யலில் பணம் போடுவதும், கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புவதும் முரட்டு மூடத்தனம் அல்லாமல் வேறு என்னவாம்?

Read more: http://viduthalai.in/e-paper/99161.html#ixzz3WQzdGLtC

தமிழ் ஓவியா said...

கிறிஸ்தவ ஆலயம் - கோவில் பூசாரி வீட்டில் கொள்ளை


சிறீவைகுண்டம், ஏப்.5 சிறீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் சாலையில் சி.எஸ்.அய். ஆலயம் உள்ளது. நேற்று முன்தினம் பிரார்த்தனை முடிந்ததும் அங்கு தங்கி யிருக்கும் பெண் ஊழியர் ஒருவர் கதவை லேசாக மூடிவிட்டு தூங்கினார். அப்போது ஆலயத்திற்குள் புகுந்த நபர்கள் உண்டி யலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி யுள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த அந்த பெண் கூச்சலிடவே அந்த நபர்கள் தப்பி சென்று விட்டனர். உண்டியல் பணத்தையும் எடுத்துச் சென்று விட்டனர். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி சோமசுந்தரம் வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி கொண்ட திருடர்கள் வீடு புகுந்து தங்கள் கைவரி சையை காட்டியுள்ளனர். அவர்கள் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மோதிரம் மற்றும் வெள்ளி பொருட் களை திருடி சென்றுள் ளனர். இந்த சம்பவங்கள் குறித்து செய்துங்கநல்லூர் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99160.html#ixzz3WQzlCoPl

தமிழ் ஓவியா said...

ஊடக விவாதமும், நடுநிலை நக்கிகளும்

-குடந்தை கருணா

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் முன் கூட்டியே தமிழகத்தில் தேர்தல் வந்தால் யாருக்கு சாதகம் என ஒரு விவாதம். அதிமுக சார்பில் ஒருவர், திமுக சார்பில் ஒருவர், இன்னொருவர் ஞானி, அடுத்தவர் மணி. இதில் ஞானி, ஆம் ஆத்மி கட்சியில் சென்ற தேர்தலுக்கு முதல் நாள் சேர்ந்து, அடுத்த நாள் தேர்தலில் நின்று, தோற்று, அதற்கு அடுத்த நாள், ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகியவர். அது அவர் சொந்த விருப்பம். அடுத்தவர் மணி. இவர் சமூக சிந்தனையாளராம்? எல்லாம் இவங்களே ஒரு பட்டத்தை வச்சிக்கிறாங்க.

முதல்ல முன்கூட்டியே தேர்தல் ஏன் வரணும்? 2014 தேர்தலில் அதிமுக பெரிய கட்சிகள் எதுவும் இல்லாம, சில சின்ன அமைப்புகளை சேர்த்துக் கொண்டு, 44% வாக்கு வாங்கியுள்ளது. சென்ற சட்டமன்ற தேர்தலில், விஜயகாந்த் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து மிக அதிகமான இடங்களை வைத்துள்ளது. பின்னர் அவர்களை அடித்து விரட்டிவிட்டது வேறு விஷயம். பண பலத்தைக் கொண்டும், ஊடகங்களை, விளம்பரம் என்ற தூண்டிலை வைத்து, மிரட்டியும், ஆசைகாட்டியும் தங்கள் ஆட்சிமீது எந்தவித எதிர்ப்பும் தோன்றாத வகையில் ஓர் எண்ணத்தை உருவாக்கி வைத்திருக் கிறது. இந்த நிலையில் இப்படி திடீர் என முன் கூட்டியே தேர்தல் என்கிற ஓர் பேச்சை ஏன் துவங்க வேண்டும்?

ஞானி சொல்கிறார்: ஜெயலலிதா மீதான வழக்கைப் பொறுத்து இது முடிவாகும் என்கிறார்; அத்துடன் நின்றால் பரவாயில்லை; 2ஜி வழக்கின் முடிவையும் சேர்த்து, அது திமுகவை பாதிக்கலாம் என்கிறார்.

மணி சொல்கிறார்: ஜெயலலிதாவின் அதிமுக வின் எதிர்ப்பை, திமுக சரியாக கொண்டு செல்ல வில்லை; ஆகவே, அதிமுகவிற்கு சாதகம் என்கிறார்.

ஆனால், அதிமுகவின் இந்த நான்காண்டு ஆட்சியில், மிகப் பெரும்பான்மையான என்பதை விட, மிருகபலம் கொண்ட ஓர் ஆட்சியில், நடந்த திட்டங்கள் எது? சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த கதியில் உள்ளன? மெட்ரோ ரயில் முதல் கொண்டு, இவர்கள் சொன்ன மோனோ ரயில் திட்டம் வரை என்ன நிலையில் உள்ளது? 2023 விஷன் என்று பிரம்மாண்டமாக அறிவித்த தொழிற்புரட்சி என்ன ஆனது? மைனாரிட்டி திமுக ஆட்சியில் பதிமூன்று விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்த தொழில் வளர்ச்சி, தற்போது மிருக பலம் கொண்ட அதிமுக ஆட்சியில் நான்கு சதவிகிதத்திற்கும் குறைவாக ஆனதே ஏன்?

இரண்டு மணி நேர மின்வெட்டிற்கு குதித்த ஜெயலலிதா, தற்போது இந்த நான்காண்டில் மின்சாரம் கிடைத்திட செய்த திட்டங்கள் என்ன?

இவற்றையெல்லாம் பட்டியலிட்டு என்றைக் காவது இந்த ஊடகங்கள் ஏதேனும் ஒரு விவாதம் நடத்தியது உண்டா?

மைனாரிட்டி திமுக ஆட்சியில் எதிர்க்கட்சி களுக்கு அய்ந்து ஆண்டுகளில் சட்டமன்றத்தில் பேசுவதற்கு எத்தனை மணி நேரம் ஒதுக்கப் பட்டது? எந்தெந்த பிரச்சினைகளில் வெளி நடப்பு நடந்தது? இப்போது, மிருகபலம் கொண்ட அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகளுக்கு இந்த நான்காண்டுகளில் பேசுவதற்கு எத்தனை மணி நேரம் கொடுக்கப்பட்டது; எந்தெந்த காரணத் திற்காக, எதிர்க்கட்சிகள் வெளியேற்றப்பட்டன என்ற விவரங்கள் எல்லாம் இந்த ஊடகங்கள் எங்கேயாவது ஒப்பிட்டது உண்டா?

சொத்துக் குவிப்பு வழக்கு என்று கூட சொல்லமுடியாமல், சொத்து வழக்கு என்று தொடர்ந்து சொல்லி, ஏதோ ஒரு சொத்து பிரிப்ப தில் தகராறு என்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கும் முயற்சிதானே நடந்து கொண் டிருக்கிறது.

சமூக சிந்தனையாளர் மணியும்? சரி, ஆக பெரும் அரசியல் விற்பன்னரான ஞானியும் சரி, அதிமுகவை விமர்சிப்பதைவிட, திமுகவிற்கு எந்த நிலையிலும் ஆதரவு இல்லை என்று சொல்வதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. கேட்டால், அவ்வப்போது அவர்களே, தாங்கள் நடுநிலையில்? நின்று பேசுவதாக அறிவித்துக் கொள்கிறார்கள்.

ஒரே ஒரு வருத்தம். இந்த நடுநிலை நக்கிகளுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக, மக்கள் கணிப்பில், இப்போது தேர்தல் வந்தால், திமுகவிற்கு சாதகம் என 47% மக்களும், அதிமுகவிற்கு சாதகம் என 36% விழுக்காடு மக்களும் சொல்லிவிட்டார்கள். அல்லது ஒருவேளை, இப்படி கணிப்பு சொல்லி, திமுகவினர் மகிழ்ச்சியடைந்து, மல்லாக்கப் படுத்துக்கிடப்பார்கள் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். விவாதத்தில் தெரிந்து அதிமுக சார்பில் ஒருவர், மறைமுகமாக இருவர், திமுக சார்பில் ஒருவர் என்று விவாதம் சுபமாக முடிந்தது

Read more: http://viduthalai.in/page-2/99165.html#ixzz3WR0bbV22

தமிழ் ஓவியா said...

வட்டார மாநாட்டின் கொடியினை வழக்குரைஞர் கி.தணிகாசலம் ஏற்றினார். கூட்ட நிகழ்வில் வாலாசா நகர திமுக நகரச் செயலாளர் த.க.பா.புகழேந்தி தலைமையில் இராணிப்பேட்டை நகரச் திமுக நகர செயலாளர் பிஞ்சி டி.பிரகாஷ் முன்னிலையில் கவிஞர் உள்பட கழகப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அவர்களுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் இயக்க நூல்களைப் பரிசாக வழங்கினார்.

கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை ஆற்றுவதற்கு முன்பாக அரக்கோணம் கழக மாவட்டத் துணைத்தலைவர் பொன்.வெங்கடேசன் இணையரின் பெண்ணடிமைச் சின்னமான தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியில் கழக துணைத் தலைவர் கவிஞர் தன் சிறப்புரையில், திராவிடர்களின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றை வரலாற்று ஆவணங்களோடு எடுத்துரைத்தார்.

பாசிச வெறிபிடித்த இந்து மதவெறியன் கோட்சே காந்தியாரை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியபோது மகாத்மா என்று போற்றப்பட்ட காந்தியார் அவர்கள் இறக்கும்போது ராம்! ராம் என்று கூறிக்கொண்டே இறந்தார்.

காந்தியார் அவர்கள் இறக்கும்போது ராம் ராம் என்று கூறியது அயோத்தி ராமனை அல்ல! இந்து மதத்தை தாக்கிப் பேசினால் உங்களை உயிரோடு விடமாட்டார்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் 1927 இல் பெங்களூரில் காந்தியாரிடமே நேருக்கு நேராகக் கூறியதை நினைத்து, இருந்த ராமசாமியைத்தான் ராம்! ராம் என்று கூறினார் காந்தியார். ராமசாமி கூறியதை நான் கேட்காமல் போயிட்டேனே என்று சாகும் போது காந்தி வருத்தப்பட்டுக் கூறியதாக நயமாக எடுத்துரைத்தார்.

Read more: http://viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/99140-2015-04-04-12-20-03.html#ixzz3WR2UlI9r

தமிழ் ஓவியா said...

அந்தச் சவாலை தொடர்ந்து செய்வோம்

- வே.மதிமாறன்

ஜாதி வெறியர்கள், சமூக விரோதிகள், கிறிஸ்துவ (தலித் அல்லாத) இந்து மத வெறியர்கள் போன்ற பிற்போக்காளர்களால் கடுமையாக நேரடியாக வெறுக்கப் படுகிறவரும், இந்தக் கும்பல் என்ன காரணங்களுக்காக வெறுக்கிறதோ, அதே காரணத்திற்காகவே பல முற்போக்காளர் களாலும் புறக்கணிக்கப்-படுகிறவர் அநேகமாக இந்தியாவில் டாக்டர் அம்பேத்கர் மட்டுமே.

தலித் விரோதம் கொண்ட, ஜாதி வெறியர்களின் அம்பேத்கர் மீதான வெறுப்பை, சிலை உடைப்பு போன்ற நடவடிக்கைகளால், நேரடியாக உணர முடிகிறது. ஆனால், இந்த முற்போக்காளர்களின், இலக்கியவாதிகளின் அம்பேத்கர் புறக்கணிப்புதான் மிக நுட்பமானதாக, அவர்களைவிட ஆபத்தானதாக இருக்கிறது.

அம்பேத்கரின் கருத்துக்களில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று அம்பேத்கரை விடத் தங்களை மிக முற்போக்கானவர்களாகச் சொல்கிறவர்கள், இன்னொருபுறம் கை தேர்ந்த சந்தர்ப்பவாதிகளையும், பிற்போக் காளர்-களையும், ஜாதி வெறியர்களையும் ஆதரித்துத் தங்களை அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள். தலித் அல்லாதவர்களிடமும் அம்பேத்கரை கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஒரு புறம் முயற்சி செய்து கொண்டு இருக்கும்போதே, இன்னொரு புறம் அம்பேத்கரை தலித் மக்களிடம் இருந்தே அப்புறபடுத்துகிற வேலையும் அதிகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பை போலவே, அவரின் கிறிஸ்துவப் புறக்கணிப்பும் மிக முக்கியமானது. இந்தியாவில் கிறிஸ்துவ மதமாற்றத்தில் தலித் மக்களின் பங்களிப்பு மிக அதிகமானது.

தலித் மக்களிடம் அம்பேத்கரின் எழுச்சி உருவாக்கி இருக்கிற அலை, அம் மக்களை இந்து மத எதிர்ப்புற்கும், கிறிஸ்துவப் புறக்கணிப்புக்கும் தான் கொண்டு செல்லும். இந்து மத எதிர்ப்பை ஆதரிக்கிற அல்லது ஒத்துக் கொள்கிற கிறிஸ்துவ நிறுவனங்கள் மற்றும் அவைகளிடம் பணம் வாங்கிச் சேவை செய்கிற என்.ஜி.ஓ அமைப்புகள் ஒரு போதும் தலித் மக்களின் கிறிஸ்துவப் புறக்கணிப்பை ஒத்துக் கொள்ளாது. பல தலித் அல்லாத கிறிஸ்துவ அறிவாளிகள்கூட அம்பேத்கரின் கிறிஸ்துவப் புறக்கணிப்பை பற்றியும் அவரின் பவுத்தம் குறித்தும் மவுனம்தான் காக்கிறார்கள். அவர்களின் அந்த மவுனத்திற்கு பின் சம்மதமாக மறைந்திருப்பது அம்பேத்கர் மீதான வெறுப்பே. தமிழர்களுக்கு எதிராக ராஜாபக்சே தலைமையில் சிங்கள இனவாதம் கொலை-வெறியில் செயல்பட்டபோது, அதோடு பவுத்தத்தை முடிச்சு போட்டு பவுத்த மதவெறி என்று சபித்த, தலித் அல்லாத கிறிஸ்துவ முற்போக்காளர்கள்; ஈராக் மக்களுக்கு எதிரான வன்முறையை நிகழ்த்திய புஷ், இது இஸ்லாமுக்கும் கிறிஸ்துவத்திற்குமான போர் என்று பகிரங்கமாக அறிவித்துத் தனது ஏகாதிபத்திய வெறிக்குக் கிறிஸ்துவர்களிடம் ஆதரவு திரட்ட முயற்சித்து, ஈராக் மக்கள் மீது கொலைவெறி தாக்குதலை செய்தான். ராஜபக்சேவோடு இணைத்துப் பவுத்தத்தைச் சபித்த, தலித் அல்லாத கிறிஸ்துவ அறிவாளிகள், கிறிஸ்துவத்துடன் முடிச்சு போட்டு, இது கிறிஸ்துவ மதவெறி என்று கொந்தளிக்கவில்லை.

அதை மட்டும் தெளிவாக, சரியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வன்முறையாக உணர்ந்துதான் அதைக் கண்டித்தார்கள். இந்த நடவடிக்கைகளில் அம்பலமானது தலித் அல்லாத கிறிஸ்துவர்களின் மதவெறி மட்டுமல்ல; பவுத்த வெறுப்பின் வழியாக அம்பேத்கரின் மீதான காழ்ப்புணர்ச்சியும்தான். இன்று இந்தியா முழுக்க இனவாதம் பேசுகிறவர்களின் ஒப்பற்ற முன் மாதிரி, மராட்டிய மண் மராட்டியர்களுக்கே என்று முழுங்கிய பால்தாக்கரே என்கிற பயங்கரவாதிதான்.

இன்றைய இனவாத தத்துவத்தின் தலைவர் பால்தாக்கரே, தமிழர்-களுக்கு எதிராக, இந்திக்காரர்களுக்கு எதிராகப் பல வன்முறைகளை நடத்தியிருக்கிறார். ஆனால், மராட்டிய மாநிலத்தையே பற்ற வைத்து, ஸ்தம்பிக்க வைத்த வன்முறையைப் பல ஆண்டுகளுக்கு முன் நடத்தினார். அது போன்ற வன்முறையை அதற்கு முன்னும் பின்னும் இப்போதும் நடத்தியது இல்லை. அது, மராட்டிய மண் மராட்டியர்களுக்கே என்பதற்கான போராட்டம் அல்ல; மராட்டியத்தில் உள்ள மரத்வாடா பல்கலை-கழகத்திற்கு, மராட்டிய மண்ணின் மைந்தன் உலகம் வியக்கும் அண்ணல் அம்பேத்கரின் பெயரை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறை. நெருக்கிப் பிடித்தால் மண்ணின் மைந்தர்கள் ஜாதியின் மைந்தர்-களாக, தலித் விரோதிகளாகத்-தான் பிதுங்குகிறார்கள்.

அப்பட்டமான ஜாதி வெறியர்களை மட்டுமல்ல, நுட்பமான ஜாதி உணர்வாளர்-களையும் அம்பலப்படுத்துவதற்கு அண்ணல் அம்பேத்கரைவிடக் கூரிய அறிவாயுதம் வேறு எது? டாக்டர் அம்பேத்கரின பிறந்த நாளை ஒட்டி அவரின் சிந்தனை வழிகளில் ஜாதி ஒழிப்பிற்கான போராட்டத்தைத் தொடர்ந்து செய்வோம். மிகக் குறிப்பாகத் தலித், தலித் அல்லாத முற்போக்காளர்கள், ஜாதி வெறியர்களிடம் டாக்டர் அம்பேத்கரை கொண்டு சேர்ப்பது மிக முக்கியமானது மட்டுமல்ல, சவாலானதும்கூட. அந்தச் சவாலை தொடர்ந்து செய்வோம்.

தமிழ் ஓவியா said...

ஆதிக் குடியிலிருந்து ஓர் அரு மருத்துவர்!

ஜாதியின் வெற்றிக்கான காரணம் அதன் படிக்கட்டு முறையில்தான் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் கண்டுணர்ந்து சொன்னவர் அண்ணல் அம்பேத்கர். இந்துமதத்தைப் பொருத்தளவில் எந்த இரண்டு ஜாதிகளும் இணையானவையல்ல; எல்லாமே மேல் அல்லது கீழ்தான்.

ஒன்றுக்குக் கீழ் ஒன்று என்ற இந்தப் படிக்கட்டு முறையின் காரணமாகத்தான், தனக்கு மேலே ஆயிரம் ஜாதிகள் இருந்தாலும், அவர்களால் தாம் நசுக்கப்பட்டாலும், நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்று நினைத்துப் பார்த்து நிம்மதி நாடுகிறார்கள்; அவர்களை அடக்கியாளத் துடிக்கிறார்கள். பார்ப்பனர்கள் பிற ஜாதிகளையும், அதற்கடுத்த சூத்திரர்கள் (ஷத்திரிய, வைசியப் பிரிவுகள் இணைந்தது) தாழ்த்தப்பட்டோராகிய பஞ்சமர்களையும் அடக்கி கொடுமைகளில் ஈடுபட்டாலும், அத்தனை ஜாதிகளுக்கும் கீழாக, தாழ்த்தப்பட்டவரினும், தாழ்த்தப் பட்டவர்களாக இருக்கும் நிலை அருந்ததியர் இன மக்களுக்கு!

காலம் முழுக்க இழிநிலையில் வைக்கப்பட்ட ஆதிக்குடிகளான அம் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை; இட ஒதுக்கீட்டின் பலனை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை என்ற சூழலில் தான் உள் ஒதுக்கீடு என்னும் கோரிக்கை எழுந்தது. போராட்டம் வெடித்தது.

அவசியமான இந்த ஏற்பாட்டைப் புரிந்து கொள்ளாமல், அதை எதிர்த்தவர்களும் உண்டு. வழக்கு மன்றம் சென்றவர்கள் உண்டு. தெளிவாக விளக்கம் தந்து உள் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை ஆதரித்தது திராவிடர் கழகம்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டிலேயே 3 விழுக்காட்டினை உள் ஒதுக்கீடாக வழங்க, அத்தனை தடைகளையும் தாண்டி, முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான 2006-2011 திமுக அரசில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உரிய வகையில் சட்டம் வகுக்கப்பட்டது. கடும் போராட்டத்திற்கிடையில் கிடைத்த இந்த உரிமையின் பலன் ஒன்று இப்போது கனிந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டின் மூலம் படித்து வந்த முதல் மருத்துவராகியிருக்கிறார் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ஆதித் தமிழர் பேரவையின் பொறுப்பாளராகவும் உள்ள தோழர் சுந்தரம் அவர்களின் மகள் இலக்கியா.

இரண்டாயிரமாண்டுக் கால அடிமைத்தனத்தை, ஒரு நூற்றாண்டுக்குள் கடக்கும் இந்த அளப்பரிய போராட்டத்தின் வித்துகளான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரை நன்றியோடும், அவர்களின் உழைப்பாலும், திராவிட இயக்கத்தாலும் செழித்து வளர்ந்துள்ள சமூகநீதி என்னும் பெருமரத்தை யாராலும் வீழ்த்தமுடியாது என்ற நம்பிக்கையோடும் ஒரு சேர நினைத்துப் பார்க்கிறோம். இன்னும் ஏராளமான இலக்கியாக்கள் உருவாகட்டும்! சமத்துவம் ஓங்கட்டும்!

-சமா.இளவரசன்

தமிழ் ஓவியா said...

இணையதளங்களில் கருத்துரிமையைத் தடுக்கும் சட்டப் பிரிவு ரத்து உச்ச நீதிமன்றத்தின் பாராட்டத்தக்க தீர்ப்பு


தகவல் புரட்சி யுகம் என்று அழைக்கப்படும் புதுமையான மின்னணுப் புரட்சியால், உலகத்தின் ஒரு கோடி அல்லது மூலையில் உள்ள செய்தி, அடுத்த சில நொடிகளில் மற்றொரு கோடிக்கோ, மூலைக்கோ பரவும் வண்ணம் வேகமான மின்னஞ்சல் வசதி -_ அதையொட்டிய முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் எத்தனை எத்தனையோ!

அவற்றின்மூலம் ஏராளமான கருத்துப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக நடைபெற்று வருகின்றன உலகெங்கும்!

ஆனால், ஆட்சியாளர்கள் - இந்தக் கருத்துரிமை வெளிப்பாட்டின் கழுத்தை நெரிக்கவே புதிய சட்டங்களையும், திருத்தங்களையும், தங்களுக்குள்ள ஆட்சி, அதிகார பலத்தின் காரணமாக மக்கள்மீது திணிக்கச் செய்கின்றனர்.

அப்படி வந்த ஒரு திருத்தச் சட்டம்தான் 66ஏ (தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் சட்டத்தின் பிரிவு) என்ற செக்ஷன்.

ஆட்சியாளர்கள் இதில் கூறப்படும் கருத்துக்காக எவரையும் கைது செய்யலாம், தண்டிக்கலாம்.

இதைக் காட்டி முன்பு மும்பையிலும், மேற்கு வங்கத்திலும் இன்னும் பல ஊர்களிலும் கூறப்பட்ட கருத்துக்காக இரவோடு இரவாக கைது; சிறையில் அடைப்பு என்ற பாசிசப் போக்குகள் மலிந்துவரும் வேளையில், இப்படி ஒரு 66ஏ பிரிவு செல்லாது; இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படையான கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரான சட்டம் என்று திட்டவட்டமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மார்ச் 24 அன்று அளித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில் கூறியுள்ளனர்!

இந்தச் சட்டத்தின் பிரிவை நாங்கள் ஆழ்ந்து ஆராய்ந்து தேவையான அளவுக்கே பயன்படுத்துவோம் - தவறாகப் பயன்படுத்தமாட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட கருத்தினை ஏற்கவில்லை உச்ச நீதிமன்றம்.

இந்த அம்சத்தை நாம் வெகுவாகப் பாராட்டுகிறோம்; காரணம், இதற்கு முன்பு ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அத்துணை கறுப்புச் சட்டங்கள் - கடுமைச் சட்டங்கள் (Draconian Laws ) அனைத்தையும் நுழைக்கும்போது, இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஆளுவோர் கூறுவதும், பிறகு நடைமுறையில் அவற்றைக் காற்றில் பறக்க விடுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வுகள் ஆகும்.

தவறாக எழுதப்படும் அவதூறு பரப்பும் செய்தி, கட்டுரைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சிவில், கிரிமினல் தேசப் பாதுகாப்பு முதலிய சட்டங்கள் ஏராளம் சட்டப் புத்தகங்களில் உள்ளபோது, இம்மாதிரி புதிய உற்பத்திகள் பாசிசத்தின் வெளிப்பாடுகளேயாகும்.

எனவே, இத்தீர்ப்பின்மூலம், ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானம் குலைக்கப்படாமல் _- கருத்துச் சுதந்திரமே அது -_ காப்பாற்றப்பட்டுள்ளது!
எனவே, இத்தீர்ப்பினை வரவேற்கிறோம்.

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கூவி அழைத்த வண்டிக்காரர்களும் தடைக்கற்கள் தகர்த்த தளகர்த்தர்களும்


நண்பர் ஒருவர் சென்னைக்குச் செல்ல வாடகைக் கார் ஒன்றை ஏற்பாடு செய்து தரச்சொல்லிக் கேட்டார். அவரை அழைத்துக் கொண்டு திண்டிவனம் டாக்சி ஸ்டாண்டு போனேன்.

நான் வர்றேன், நான் வர்றேன் நான் வர்றேன் என்று ஒரே போட்டி. மனதுக்குள் இன்றைய நிலைமையையும் அன்றைய நிலைமையையும், இன்றைய நிலைமை வருவதற்குக் காரணமானவர்களையும் நினைத்துப் பார்த்தேன்.

பச்சிளம் பாலகன் என்றும் பாராமல் அண்ணல் அம்பேத்கரை சிறுவயதில் மாட்டு வண்டிக்காரன் குடைசாய்த்துக் குப்புறத்தள்ளி விழ வைத்ததை நினைத்துப் பார்த்தேன்.

பிரசவ வலியால் துடித்த அருந்ததி இனப் பெண்ணை கலெக்டர் ஆஷ்துரை தன் குதிரை வண்டியில் ஏற்றிக் கொண்டு அக்ரகாரம் வழியே செல்ல முற்பட்ட போது வண்டி தடுக்கப்பட்டதையும் ஆஷ்துரையின் சாட்டை சுழன்றதையும் நினைத்துப் பார்த்தேன்.

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டத்தை நினைத்துப் பார்த்தேன்.

சௌதார் பொதுக்குளத்தில் ஜாதிவெறியர்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நீர் அருத்த பொதுமக்களோடு சென்ற போராட்டத்தை நினைத்துப் பார்த்தேன்.

அப்பப்பா... எத்தனைத் தடைகற்களைக் கடந்து வந்திருக்கிறோம்!

நான் வர்றேன் என்று கூவிய ஓட்டுநர்கள் எல்லாம் வெவ்வேறு ஜாதியினராக இருந்தும் எங்கும் எவரையும் அழைத்துச் செல்லத் தயாராக இருந்தனர்.

இந்த நிலைமைக்குக் காரணமான மகத்தான மாமனிதர்களையும், அவர்களின் போராட்டங்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

- முகநூலில் யுவான்சுவாங்

தமிழ் ஓவியா said...

திராவிடம் என்பது பொய்யா?


"நாம் நினைவிற் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். தமிழ் எனும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல்.

தமிழ் என்னும் மூலச்சொல் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்ற-போது 'தமிதா' என்று உச்சரிக்கப்பட்டது; பின்னர் 'தமில்லா' ஆகி முடிவில் 'திராவிடா' என்று உருத்திரிந்தது. 'திராவிடா' என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி, அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை. நாம் நினைவில் கொள்ள வேண்டிய மூன்றாவது செய்தி தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை; மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழியாகவும் இருந்தது.

அதாவது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும். உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டுவந்த மொழியாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தபடியாக நாம் கவனத்திற் கொள்ளவேண்டும்.

இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு தென் இந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டுவிட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை வரித்துக் கொண்டனர். ஆனால் தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை; தமிழையே தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர்; ஆரியர்களின் மொழியான சமஸ்கிருதத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக்கொள்ள-வில்லை. இந்த வேறுபாட்டை மனத்திற்-கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென் இந்தியாவின் நாகர்களைப் பொருத்தவரையில் திராவிட மொழியைத் தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர். அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு-விட்டதன் காரணமாக திராவிடமொழி பேசும் ஒரேமக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக்-கொள்வது மிக மிக அவசியமாயிற்று.

தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.
எனவே, தென் இந்திய மக்களுக்குத் திராவிடர் என்ற சொல் தனித்துவமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதானது நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர்களே என்ற உண்மையை மூடிமறைக்க அனுமதிக்கக் கூடாது. நாகர்கள் என்பது இன அல்லது பண்பாட்டுப் பெயர்; திராவிடர் என்பது மொழி அடிப்படையில் அமைந்த அவர்களது பெயர்.

தாசர்கள் என்பதும் நாகர்கள் என்பதும் ஒன்றுதான்; அதே போன்று நாகர்கள் என்பதும் திராவிடர்கள் என்பதும் ஒன்றுதான். வேறுவிதமாகச் சொன்னால் இந்தியாவின் இனங்களைப் பற்றிக் கூறுவதானால், இத்துறையில் அதிகபட்சம் இரண்டு இனங்கள்தான் உள்ளன. ஆரியர்களும் நாகர்களுமே அவர்கள்.

- டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 7, பக்கம்: 300

தமிழ் ஓவியா said...

புரட்சியாளர் பிறந்த நாளில் புரட்சிகர நிகழ்வுகள்

தாலி அகற்றும் விழா - மாட்டுக்கறி விருந்து

இந்த சென்னையிலே - ஒரு தொலைக் காட்சியிலே தாலிபற்றிய ஒளிபரப்பைக் காட்டக்கூடாது என்று சொல்கிறான்? மீறினால் டிபன்பாக்ஸ் குண்டு, வெடிகுண்டு என்கிறான்.

ஏப்ரல்-14 அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள். அந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை எங்களுடைய பெண்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள்.

ஒத்த கருத்து உள்ளவர்கள் வரலாம்.

அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய உடன், மாட்டுக்கறி விருந்து நடைபெறும். மாட்டுக்கறி விருந்துக்கு யார்யார் வருகிறீர்களோ இப்போதே ரிசர்வ் செய்து கொள்ளுங்கள்.

குறிப்பிட்ட அளவுக்கு மட்டும்தான் உண்டு.

ஏனென்றால், நான் என்ன சாப்பிடுவது என்பதை இராமகோபாலய்யர் முடிவு பண்ணுவதா?

எங்கள் வீட்டில் என்ன செய்வது, அல்லது இராமகிருஷ்ணன் வீட்டிலே, முத்தரசன் வீட்டிலே, பீட்டர் அல்போன்ஸ் வீட்டிலே என்ன சமைப்பது என்று இவர்கள் முடிவு செய்வார்களா?

எனக்கு டயாபடிசுங்க, தித்திப்பு வேண்டாம் என்றால், அது நியாயம்.

அதுமாதிரி சொல்லுங்கள்.

பசுவை மட்டும் பாதுகாப்பார்களாம். ஏன் எருமை மாடு என்னய்யா பாவம் பண்ணியது?

ஒரே விஷயம் கருப்புத் தோல் என்பதாலா? சிந்திக்க வேண்டாமா? என்று அறிவிப்பு தந்திருக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

களம் சூடுபிடித்திருக்கிறது.

சுவைக்க வாருங்கள் ஏப்ரல் 14இல்!

தமிழ் ஓவியா said...

லீக்வான்யூ மறைவு, உலகிற்கே பேரிழப்பு!

உலகின் தலைசிறந்த நிர்வாக மேதையும், சிறந்த அரசியல் ஞானியும், நவீன சிங்கப்பூரின் ஆற்றல் மிகு தந்தையுமான பேரறிஞர் லீக்வான்யூ அவர்கள் தனது 91ஆவது வயதில் (23.3.2015) அன்று காலை காலமானார் என்ற செய்தி சிங்கப்பூர் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல; உலகின் அறிவு சார் மனித குலத்திற்கே ஒரு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

பெரும்பான்மையினர் சீனர்கள்தான் என்றா லும், தமிழர் திராவிடர் அடங்கிய இந்தியர், மலாய்காரர்கள், யூரேசியர்கள் வெகு குறைவான எண்ணிக்கையினர்தான் என்றாலும், பெரும் பான்மை சிறுபான்மை என்ற பிளவுபடுத்திப் பார்க்க முடியாத வண்ணம், இந்த முப்பெரும் இனத்தவர்களும் கைகோர்த்து, சமூக நல்லிணக் கத்தோடு வாழ, அவரவர்தம் மொழி, கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு இவைகளை மதித்ததோடு, தமது அரசில் சமவாய்ப்பினையும் கொடுத்த்தவர்.

ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையில் கூட, தன் மனதில் பட்ட கருத்தை எடுத்துச் சொல்லி, இலங்கையில் தமிழர் இன அழிப்பு (Genocide) என்பதை தயங்காமல் கண்டித்தவர் அவர்.

அவர் என்றும் வாழுவார். சிங்கப்பூரின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அவர் வாழுகிறார்; அவர் தொடர்ந்து வாழ்வார். அவருக்கு நமது வீர வணக்கம்!

- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த இரங்கல் அறிக்கையிலிருந்து...

தமிழ் ஓவியா said...

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

ஊன்றிப் படிக்க : உண்மையை உணருக!

வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

ஆசை

இது ஆசா என்ற வடசொல்லின் திரிபு என்று கதைப்பர் பார்ப்பனரும், அவர் வால்பிடிக்கும் தமிழர் சிலரும்.

மனம் தன்னிலை நிற்றல் பொருள் அடையத் தக்க நிலை என்பர் அறிந்தோர். அஃதன்றி அம் மனம் வெளிப் பொருள் நோக்கி அசைதல் என்பது துன்பம் பயப்பது அன்றோ? எனவே அசைதல், அல்லது அசைவு என்பது மனத்தின் அசைவாயிற்று. அசைதல் தொழிற் பெயர். அசை முதனிலைத் தொழிற் பெயர். ஆசை முதனிலை திரிந்த தொழிற் பெயர். ஆசை தூய தமிழ்ச் சொல் என்க. மனம் பிறவற்றில் செல்லுதல் என்பது அதன் பொருள். உதவி என்பதற்கு ஒத்தாசை என்றது இழிவழக்காக வழங்கி வருகிறது. இந்த ஒத்தாசை என்பதில் அசை என்பதுதான் ஆசை என நீண்டது என அறிதல் வேண்டும். அசைதல் என்பதற்கு ஆசை என ஆனதற்குப் பேச்சு வழக்கில் வந்துள்ள இதையும் கண்டு நினைவுறுத்தினோம்.

பூசை

இது பூசா என்ற வடசொல்லின் சிதைவு என்று ஏமாற்றுவார் ஏமாற்றுவர்.

பூசு+ஐ என்பன தொழிற் பெயர் முதனிலையும் இறுதி நிலையுமாகும். பூசுதல் என்பதுதானே இது?

பூசுதல் என்றால் தூய்மை செய்தல், கழுவுதல் என்பது பொருள். இவ்வழக்கு இன்றும் திருநெல்வேலிப் பாங்கில் இருக்கக் காணலாம். இனிப் பூசு என்ற முதனிலை அன் சாரியை பெற்றுப் பூசனை என்றும் வரும். எனவே, பூசை, பூசனை தூய தமிழ்ச் சொற்கள் என முடிக்க.

நாடகம்

இது தூய தமிழ்ச் சொற்றொடர், வடமொழியன்று. நாடுகின்ற அகம் என விரியும் நிகழ்தி வினைத்தொகை நிலைத்தொடர் என்பர் தொல்காப்பியர்.

இனி அகம் என்ற சொல்லுக்கு
அகம், மனம், மனையே, பாவம்
அகவிடம் உள்ளும் ஆமே

என்ற நூற்பாவினால் பொருள் காண்க. நாடு அகம் என்பதில் வரும் அகத்துக்கு புகலிடம் என்று பொருள் கொண்டு (மன) உள்ளம் நாடுகின்ற அகன்ற இடம் எனக் கொள்க. இது நாடகமாகிய இடத்தைக் குறித்தது. இனி, நாடுகின்ற பாவம். அதாவது மெய் எனக் கொண்டு நாடுகின்ற ஆடல்நிலை எனப் பொருள் கொள்க.

எவ்வாறாயினும் நாடகம் என்றது தமிழ்ச் சொற்றொடர் என்பதில் தமிழர்க்கு ஓர் ஐயம் வேண்டா.

- (குயில், 28.6.58)