Search This Blog

27.4.15

பகவான் சோதிக்கிறார்!-பெரியார்

பகவான் சோதிக்கிறார்!

(சுயமரியாதை தொண்டனுக்கும் - பிள்ளைவரத்துக்கு இராமேஸ்வரம் செல்லும் மிராஸ்தாரனுக்கும் சொல்லாடல்)


 சுயமரியாதைக்காரன்:-   

மிராசுதார்வாள்! உங்கள் வீட்டில் இன்று தடபுடல் சமாராதனை பலமாக இருக்கிறதே! என்ன விசேஷம்? எதற்காக உங்கள் வீட்டில் இத்தனைப் பார்ப்பனர் கூட்டம்?

 மிராசுதார்:-   

வாங்க தம்பி, உங்களுக்கும் சொல்லி அனுப்பினேனே, யாரும் சொல்லவில்லையா? உங்கள் வீடு நம்ம ஆளுக்குத் தெரியவில்லைபோல் இருக்கிறது.

 சுயமரியாதைக்காரன்:-  
 
 இல்லை, பரவாயில்லை! நான் இந்த ஊருக்குப் புதியவன் தானே! என்ன விசேஷம்?

 மிராசுதார்:-   

நான் இராமேஸ்வர யாத்திரை போகிறேன். அதற்காக பிராமண சமாராதனை செய்கிறேன்.

 சுயமரியாதைக்காரன்:-   

நீங்கள் இராமேஸ்வரத்திற்கு உங்கள் பணச் செலவில் போகிறீர்களா? பிராமணர்கள் செலவில் போகிறீர்களா?

 மிராசுதார்:-   

நல்லா சொன்னிங்கோ தம்பி! எங்காவது பிராமணாள் நமக்குக் கொடுப்பாங்களா? என் செலவில் தான் போகிறேன்.

 சுயமரியாதைக்காரன்:-  
 
உங்கள் செலவில் நீங்கள் ஊர்ப்பயணம் போவதானால் இந்தப் பார்ப்பான்களுக்கு எதற்காகச் சோறு போடுவது?

 மிராசுதார்:-   

இப்பேர்ப்பட்ட இடங்களுக்குப் போவதனால் பிராமணாள் ஆசீர்வாதம் பெற்றுப் போவது நல்லது. ஆதலால் பெரியோர்கள் அப்படி நியமனம் செய்திருக்கிறார்கள்.

 சுயமரியாதைக்காரன்:-   

நல்ல பெரியோர்கள்; அடிமுட்டாள் பெரியோர்கள், சோம்பேறிகளுக்குச் சோறு போடச் சொன்ன பெரியோர்கள்!

 மிராசுதார்:-   

சேச்சே, அப்படியெல்லாம் சொல்லாதிங்கோ தம்பி! அவர்கள் காதிலே கேட்டால் நாம் சமாராதனை செய்த பலன் வீணாகிவிடும். தவிரவும் எந்தப் பிராமணர் பல்லிலாவது விஷம் இருக்கும். அவர்கள் ஏதாவது சொன்னால் பலித்துவிடும்.

 சுயமரியாதைக்காரன்:-   

 எந்தப் பார்ப்பனர் வாயிலாவது என்ன, எல்லாப் பார்ப்பனர் வாயிலும் தான் விஷம் இருக்கும். ஆனால் அது நம்மிடம் பலிக்காது. அந்த விஷம் நம்மை ஒன்றும் செய்யாது. நாம் ஒருநாளும் அவர்கள் எச்சில் சாப்பிடப் போவதில்லை. அதுக்கிடக்கட்டும்; இராமேஸ்வரத்துக்கு எதற்காகப் போகிறீர்கள்?

 மிராசுதார்:-   

நாம் செத்தால் நாளைக்கு நமக்கு எள்ளும், தண்ணீரும் இறைக்கிறதற்கு ஒரு பிள்ளை வேண்டாமா? நான் 3-சம்சாரம் கட்டியாய்விட்டது, நாகப் பிரதிஷ்டை என்ன, அரசமரம், வேப்பமரம், கல்யாணமென்ன, பல ஸ்தல யாத்திரை என்ன, சாந்தி என்ன, வரடி கல் சுற்றுவது என்ன, என்னமோ சாஸ்திரங்கள் சொன்னதையும், பிராமணாள் சொன்னதையும், பெரியவாள் சொன்னதையும் எல்லாம் செய்து பார்த்து ஆய்விட்டது. பகவான் சோதிக்கிறார். ஆதலால் கடைசி முயற்சியாக இராமேஸ்வரம் போய் அங்கு நாகபிரதிஷ்டை செய்து கோதானம் முதலிய எல்லா காரியங்களையும் செய்து பார்ப்பது என்பதாகச் செல்லுகிறேன்.

 சுயமரியாதைக்காரன்:-  
 
மூன்று சம்சாரம் (பொண்டாட்டி) கட்டியும் பிள்ளை இல்லை என்றால் இனி இந்தக் காரியங்களால் குழந்தை எப்படி வரும்?

 மிராசுதார்:-   

நீங்கள் குழந்தை இல்லாமல் போவதைப் பற்றிய சாஸ்திரம் பாருங்கள். ஏதோ தோஷம் காரணமாக இருக்கும்; அது நிர்வத்தியானால் பாக்கியமுண்டாகும். ஆதலால் தோஷ நிவர்த்திக்காக இதெல்லாம் செய்ய வேண்டும்.

 சுயமரியாதைக்காரன்:- 
  
என்ன தோஷமிருக்கப் போகிறது? உங்கள் முதல் தாரம் மனைவி எங்கே?

 மிராசுதார்:-  
 
அவளை வெகுநாள்களுக்கு முன்பாகவே உதைத்து அவள் தாயார் வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்.

 சுயமரியாதைக்காரன்:-   

அய்யய்யோ! ஏன் அப்படிச் செய்தீர்கள்?

 மிராசுதார்:-   

கல்யாணமாகி 12-வருஷமாக நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். அவள் ஒரு குழந்தைகூட பெறவில்லை. அதனால் எனக்கென்னமோ அந்த மூதேவியைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. ஒரு நாள் என்னமோ நான் கவலையாக இருக்கும் போது அவள் "நான் தூரமாய் விட்டேன்" (வீட்டுக்கு விலக்கு) என்று சொல்லிக் கொண்டு அதோ அந்த தாழ்வாரத் திண்ணையில் போய் உட்கார்ந்தாள். என்னமோ எனக்கு அவளைப் பார்த்ததும் என்னை அறியாமல் கோபம் வந்தது. "இன்னுமாடீ நீ தூரமாகிறாய்" என்று விறகு கட்டையை எடுத்து மண்டையில் அடித்து, இனிமேல் இந்த வீட்டுப்பக்கம் வர வேண்டாம் என்று விரட்டி விட்டேன். அன்று போனவள் தான் தகப்பன் வீட்டுக்கு; பிறகு அவள் முகத்திலேயே விழிக்கவில்லை.

 சுயமரியாதைக்காரன்:-   

அட பாவமே! அப்புறம்...?

 மிராசுதார்:-   

அப்புறம் என்ன? அப்புறம் உடனே போய் வேறு ஒரு கழுதையைக் கட்டிக் கொண்டு வந்தேன்.

 சுயமரியாதைக்காரன்:-  
 
அதென்ன, கழுதையைக் கட்டிக் கொண்டு வந்தேன் என்கிறீர்களே?

 மிராசுதார்:-   
ஆமாம்! அது கழுதைதான். ஒரு சின்னச்சாதி பெண்ணைக் கட்டிக் கொண்டு வந்தேன்.

 சுயமரியாதைக்காரன்:-   

சின்னச்சாதி பெண்ணா, அவுங்க எங்கே?

 மிராசுதார்:-   

அவுங்க ஒரு பட்டமாக்கும்? அந்த தொண்டுக்கு அந்தக் கழுதை 5000-ரூபா நகையோடு நம்ம வண்டிக்காரப் பையன் ஒருத்தன் "கள்ள"ப் பையன் அவனை இழுத்துக்கிட்டு ஒடி பினாங்கெல்லாம் கெட்டலைஞ்சு 4, 5- பிள்ளைகளை பன்னிக்குட்டிகளாட்டமா பெத்துக்கிட்டு வந்து, இப்போது ஆலங்குடியிலே கூலிவேலை செய்துகிட்டுத் திரிகிறாள்.

 சுயமரியாதைக்காரன்:-   

அந்த அம்மாவுக்கு 4, 5-பிள்ளைகளா?

 மிராசுதார்:-   

ஆமா! கழுதைக்கு; இப்பகூட செனையாய் இருக்கிறாள் என்று சொன்னாள் நம்ம வீட்டு வேலைக்காரி.

 சுயமரியாதைக்காரன்:- 
  
அப்படிப் "பன்னிக்குட்டி போடுவது போல" பிள்ளைபெறுகிற அம்மாளுக்கு உங்களிடம் இருக்கும் போது ஏன் பிள்ளை உண்டாகவில்லை?

 மிராசுதார்:- 
  
 அதுதான் தம்பி நான் முன்னையே சொன்னேனே, பகவான் நம்மை சோதிக்கிறார் என்று.

 சுயமரியாதைக்காரன்:-   
"பகவான் சோதிக்கிறார்." அப்புறம் என்ன செய்தீர்கள்.

 மிராசுதார்:-   

கொஞ்சம் நாள் பொறுத்து ஜோசியம் பார்த்து இப்போது 2, 3- வருஷத்துக்கு முன் வேறு ஒரு பெண்ணை கலியாணம் செய்து கொண்டேன். அது நல்ல பொண்ணு; மூடின கதவு மூடினாப்பிலே, போட்டதாள் போட்டாபிலே வீட்டுக்குள்ளாக வைத்திருக்கிறேன். அப்படி இருந்தும் இந்த 2, 3-வருஷமாக பகவான் கண் விழிக்கவில்லை.

 சுயமரியாதைக்காரன்:-   

உங்கள் கதை நன்றாக இருக்கிறதே. முதல் பெண்டாட்டியை அவர்கள் தூரமாகிறார்கள் என்று (பிள்ளை பெறவில்லை என்று) அடித்து விரட்டி விட்டீர்கள்.

"2-வது பெண்டாட்டி "வண்டிக்காரப் பையனுடன் உங்களை விட்டு ஓடிப் போய்விட்டார்கள்."

மூன்றாவது பெண்டாட்டியை ஜெயில் கைதி மாதிரி காவலில் வைத்திருப்பது போல் சிறை வைத்திருக்கிறீர்கள்.

இந்த நிலைமையில் "பகவான் சோதிக்கிறார்" என்று இராமேஸ்வரம் போகிறேன் - பிள்ளை வரத்துக்கு என்கிறீர்களே! உங்களுக்கு சொத்து இருக்கிறதே ஒழிய, யோசனை இல்லை.

 மிராசுதார்:-   

ஏந்தம்பி இப்படி சொல்றீங்களே!

 சுயமரியாதைக்காரன்:-  
 
பிள்ளை இல்லை என்றால், ஏன் பிள்ளை இல்லை என்று டாக்டரை கேட்க வேண்டாமா?

 மிராசுதார்:-   

அவன் கெட்டான் மடப்பயல்கள்! நானும் அதையும் பார்க்கலாம் என்று இரண்டு டாக்டரைக் கேட்டேன். அவன் உங்களுக்குப் "பிள்ளை பிறக்காது" என்று சொன்னான்கள். காரணம் என்னான்னா வாத சரீரமாம்;

254-பவுண்டு எடையாம். நாடியிலே கோளாறு இருக்குதாம். அந்த எண்ணத்தை அதாவது பிள்ளை எண்ணத்தை விட்டு விட வேண்டுமாம். இது சொல்றதுக்குத்தானே இந்தப் பசங்களுக்கு காலேஜ் வெச்சிப் படிப்பு சொல்லிக் கொடுக்கிறது? பார்த்து சொல்றதுக்கு 20, 30-கொடுக்கிறது?

 சுயமரியாதைக்காரன்:- 
  
 அய்யா கோபித்துக் கொள்ளாதீர்கள்; டாக்டர்கள் சொன்னது சரியாகத்தானே இருக்கிறது!

 மிராசுதார்:-  
 
என்ன தம்பி நீங்களும் அவன்களாட்டமா பேசிறிங்ககோ?

 சுயமரியாதைக்காரன்:- 
  
அவங்க சொன்னதிலே தப்பு என்னாங்கோ, நீங்கள்
254-பவுண்டு எடை இல்லையா?

அன்றியும் முதல் மனைவிக்கும் உங்களால் குழந்தை கொடுக்க முடியவில்லை. அதனால் தானே அவுங்க தூரமானாங்க.

இரண்டாவது மனைவி உங்கள் நிலையை அறிந்து நீங்கள் பிடிக்காததால் ஓடிவிட்டார்கள். ஓடின பிறகு வேறு ஒருவருடன் கூடி வாழ்ந்து 4, 5- பிள்ளைகள் பெற்று இருக்கிறார்கள்.

மூன்றாவது மனைவி விஷயத்தில் நீங்கள் சந்தேகம் கொண்டு சிறை வைத்து இருக்கிறீர்கள். அவர்களுக்கும் பிள்ளை கொடுக்க உங்களால் ஆகவில்லை. பெண்களுக்குப் பிள்ளை புருஷன்தான் கொடுக்க வேண்டுமா அல்லது அவர்கள் தானே பெற்றுக் கொள்வதா?

அப்படியானால் இன்றைய பெண்கள் சமுதாயத்தில் 100–க்கு 20–வீதம் உள்ள (கணவனை இழந்த) விதவைகள் எல்லாம் ஏராளமாகப் பிள்ளைப் பெற்றுக் கொள்வார்களே. புருஷன் இல்லாதததால்தானே அவர்கள் பாவம் பிள்ளைபெற முடியாமல் இருக்கிறார்கள். இதுகூடவா உங்களுக்குத் தெரியாது! டாக்டர்கள் உங்களுக்கு மருந்து ஒன்றும் சொல்லவில்லையா?


 மிராசுதார்:-   

 அப்படி ஏதாவது மருந்து சொன்னாலும் பரவாயில்லையே. "உங்களுக்கு அதுவே இல்லை, அந்த எண்ணத்தையே விட்டு விடுங்கள்" என்கிறான்களே அயோக்கியப் பயல்கள்.

 சுயமரியாதைக்காரன்:-   

நாட்டு வைத்தியர்கள் இடம் கேட்டுப் பார்க்கிறதுதானே!

 மிராசுதார்:-   

அவன்களும் தங்கபஸ்பம், தாம்பர பஸ்பம், தாது விருத்தி லேகியம், கண்டது கழுதைகள் என்ன என்னமோ செய்து கொடுத்தான்கள். கொடுத்துவிட்டு, "எங்களால் இவ்வளவு தான் முடியும். இனி பகவான் பார்த்து ஏதாவது செய்தால் தான் உண்டு" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்கள்?

 சுயமரியாதைக்காரன்:-   

கோவிச்சிக் கொள்ளாதீர்கள். நான் ஒன்று கேட்கிறேன். உங்கள் மனைவிகளில் ஒரு அம்மா ஏன் ஓடிப்போய்விட்டார்கள்?

 மிராசுதார்:-   

அந்தக் கொழுத்த சிறுக்கி பையனைத் தேடிகிட்டு ஓடிப்போயிட்டா!

 சுயமரியாதைக்காரன்:-   
அதுதான் போகட்டும். இந்த அம்மாளை ஏன் பூட்டி வைத்திருக்கிறீர்கள்?

 மிராசுதார்:-   

இவளும் அப்படி ஓடிவிட்டா என்ன பண்றது என்று நகை, நல்ல துணி ஒன்னும் கொடுக்காமே வைத்திருக்கிறேன்.

 சுயமரியாதைக்காரன்:-   

சோறு போட்றீங்களா? நகை, துணி கொடுக்கிறீங்களா?

 மிராசுதார்:-   

அதுக்கென்ன கேடு. நல்லா திண்ணு ஓவ்வொருத்தியும் குதிருபோல ஆனாளுங்கோ. நகை துணிக்கும் குறைச்சலில்லேங்கோ. ஆனால் ஓடீட்டா என்ன பண்ணறது என்று கழட்டி வைத்திருக்கிறேன்!

 சுயமரியாதைக்காரன்:-   

சோறு போட்டு, நகையும் போட்டு, நல்ல துணியும் கொடுத்து இருந்தும், ஏன் உங்கள் மனைவிகள் ஓடுகிறார்கள். இதைப் பார்த்தால் டாக்டர் உங்களுக்கு "அது இல்லை" என்பது வாஸ்தவம்தானே. நீங்கள் மிகவும் பெருத்துவிட்டீர்கள். 254-பவுண்டு; எடை. உங்கள் வயிறு மேடு போல் ஒரு முழம் முன்னுக்கு வந்துவிட்டது. உங்களால் நடக்கவே முடிவதில்லை. உட்கார்ந்தால் எழுந்திருக்க ஆள் தூக்கிவிட வேண்டும். எழுந்தால் உட்கார ஆள் பிடித்து உட்கார வைக்க வேண்டும். வயது கிட்டத்தட்ட அறுபது ஆகிறது? இந்த நிலையில் சிறைச்சாலைக் கைதிகள் போல் மனைவியை அடைத்து வைக்கிறீர்கள்!

ஆகவே உங்களுக்கே தெரிகிறதே, உங்களுக்கு அந்தச்சக்தி இல்லை என்பது. வீணா ஏன் கஷ்டப்படுகிறீர்கள்? பார்ப்பனர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஏன் கண்ட பக்கம் செல்லுகிறீர்கள்? வீணாக ஏன் உங்கள் பணத்தை பதினாயிரக்கணக்கில் செலவு செய்கிறீர்கள்? எந்தக் கடவுளாலும் நேரிடையாய் வந்து பிள்ளை கொடுக்க முடியாது. உங்கள் மூலம் தான் கொடுக்க வேண்டும். உங்களுக்கோ அதே இல்லை என்பது டாக்டர்களாலும், உங்கள் மனைவிமார்களாலும் ருஜூவாகிவிட்டது.

உங்களுக்கும் அது தெரிந்திருக்கலாம். அப்படி இருக்க இந்தக் காலத்தில் - அதாவது பரிசுத்த ஆவியினால் பிள்ளை உண்டாகிற காலமல்ல இது. அல்லது விரத மகிமையினால் கர்ப்பம் உண்டாகிற காலமல்ல இது. இப்படிப்பட்ட காலத்தில் பகவான் பிள்ளை கொடுப்பார் என்றால் என்ன அருத்தம்? உடல் கூறுகளில் ஆண் மலடு, பெண் மலடு என்று இரண்டு உண்டு. ஓடிவிட்ட உங்கள் மனைவி கதையைப் பார்த்தால் அந்த அம்மாள் மலடு அல்ல, நீங்கள் தான் மலடு என்பதை அந்தம்மாள் ருஜூ செய்துவிட்டார்கள் என்று தான் கொள்ள வேண்டும். ஏனெனில் உங்களை விட்டுப் போனபிறகு 4, 5- குழந்தைகளைப் பெற்று இருக்கிறார்கள்.

ஆரிய சாஸ்திரங்களில் "பெண் மலடானால் வேறு மனைவியைக் கட்டிக் கொள்ளலாம்" என்றும், "ஆண் மலடானால் அந்த மலடன் - புருஷன் தன் மனைவியைப் பங்காளி உறவு உள்ளவர்களிடம் ஒப்புவித்துக் கர்ப்பம் உண்டாக்கிக் கொள்ளலாம்" என்றும் இருக்கிறது. இப்படி நடந்ததாக ஆதாரங்கள் இருக்கின்றன. பல மிராசு, ஜமீன், பிரபு குடும்பங்களில் இப்படி நடந்தும் இருக்கின்றன. உங்கள் மனைவியை அடித்துக் கொண்டு ஓடிவிட்ட அந்தப் பையனுக்கு நீங்கள் சற்று ஜாடை மாடையாய் இடம் கொடுத்து உங்கள் வீட்டிலேயே பிள்ளையை உண்டாக்கிக் கொண்டிருக்கலாம்; தவறி விட்டீர்கள். போனது போகட்டும். அந்த முறை உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் பிள்ளை ஆசையை விட்டுவிடுங்கள்.
இந்த மனைவியாவது ஓடிவிடாதபடி அன்பாய் அவர்கள் இஷ்டப்படி இருக்க விடுங்கள். அதனால் ஒரு சமயம் உங்களுக்குக் குழந்தை உண்டாகலாம். வீணாக ராமேஸ்வரம் யாத்திரைக்கு 5,000, 10,000- பார்ப்பனர்களுக்கு அழுகாதீர்கள். நீங்கள் தினம் ஒரு வேளை மாத்திரம் சாப்பிட்டு 6-மாதத்தில் உங்கள் எடையில் 100- பவுண்டை குறையுங்கள்.

இல்லாவிட்டால் ஒரு நல்ல குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளுங்கள். பகவான் உங்களை சோதிக்கிறார் என்று கருதி நீங்கள் பகவானை சோதித்து முட்டாளாகாதீர்கள். இந்தப் பார்ப்பனர்கள் உங்களை மொட்டை அடித்து விடுவார்கள்!

 மிராசுதார்:-
   
தம்பி உங்களுக்கு அனுபவம் போதாது. என்னைவிட வயதானவர்கள் எல்லாம் பிள்ளை பெற்று இருக்கிறார்கள். பகவான் மனது வைத்தால் பிள்ளை உண்டாவது அதிசயமல்ல. ஏன் வாய்ப்பட்டி மிராசுதார் பெரிய பண்ணை அவருக்கு வயது 65, அவருடைய 4–வது மனைவிக்கு வயது 20. மாணிக்கம் போல் குழந்தை பெற்று இருக்கிறார்கள். இத்தனைக்கும் அவரும் கறுப்பு, குழந்தை பிராமண குழந்தை போல் செக்கச்செவேர் என்று மூக்கும், மூளியும்; யார் பார்த்தாலும் அவர்கள் குழந்தை என்றே சொல்லமாட்டார்கள். அப்படி அழகு! கோயில் குளங்கள் 2-வருஷம் சுத்தாச்சுற்றி அந்தம்மாளே தனியாக அவர்கள் வீட்டு புரோகிதர் சொன்ன இடங்களுக்கெல்லாம் அவருடனேயே சுற்றிச்சுற்றி அவர் சொன்னபடியெல்லாம் பக்தியோடு கேட்டு கடைசியாக பகவானால் அப்படிப்பட்ட மாணிக்கம் போன்ற குழந்தையை அடைந்து விட்டார்கள். பகவான் பார்த்து மனது வைத்தால் ஆகாத காரியம் உண்டா? நாம் செய்வதைச் செய்வோம். நம்ம புரோகிதர் அய்யர் சொன்னார். ராமேஸ்வரத்தில் ஒரு சாஸ்திரியார் இருக்கிறாராம். அவர் எல்லா தர்மங்களையும் சரியாக செய்வாராம். இதுவரை அவரிடம் தானாதி கர்மம் செய்து சாந்தி செய்து கொண்டவர்களுக்கு ஒருவர் தவறாமல் புத்திர சந்தானம் கிடைத்திருக்கிறதாம். நம்ம புரோகிதர், அவருக்கு வயது 70-ஆகப் போகிறது. அவர் என் மாதிரி பெருத்த உடல்தான்! என்ன என்னமோ செய்து நல்ல புத்திர பாக்கியம் பெற்று இருக்கிறார். அந்தக் குழந்தைக்கு இப்போது வயது 5. அவர் என்னைவிட ஆள் ஆஜானுபாவாக இருப்பார்! (என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே புரோகிதர் வந்துவிட்டார்)

 மிராசுதார்:-   

வரணும், வரணும், சுவாமி வரணும். நல்ல சமயத்துக்கு பகவான் கொண்டு வந்து விட்டார் உங்களை.


 புரோகிதர்:-   

 (இடது கையை முகர்ந்து பார்ப்பது போல் இடது கையை முக்களவு வளைத்துத் தூக்கி) "ஆசிர்வாதம், ஆசிர்வாதம்! நல்ல புத்திர பாக்கிய சம்பத்து உண்டாக வேண்டும்."

 மிராசுதார்:- 
  
 அப்படி சொல்லுங்கள் ஸ்வாமி!

 புரோகிதர்:-   

 மிராசுதார்வாள். பயணம் எல்லாம் தயாராகி விட்டதோ? நாளை காலை வண்டிக்கே புறப்பட வேண்டியது தானே?

 மிராசுதார்:-   

அதிலென்ன ஆட்சேபம்! எல்லாம் தயாராகி விட்டது. நம்ம சமாராதனை நன்றாக நடந்ததல்லவா? தாங்கள் சொன்னால் சரி.

 புரோகிதர்:-  
 
 ஆஹா தாங்கள் செய்வதில் என்ன குறை இருக்க முடியும்? சில பிராமணாள் தட்சனை சராசரி 2-ரூபாய் வீதம் கொடுத்தது பற்றி திருப்திப்படாமல் முகம் கோணினார்கள்.

மிராசுதார்:-   

அப்படியா? ஆனால் யாத்திரை போய் வந்த பிறகு தாராளமாகச் செய்துவிடலாம்.

 புரோகிதர்:-   

 அந்தக் கஷ்டம் கூட தங்களுக்கு வேண்டாம். இப்போதே பெரியவாளுக்கு மாத்திரம் ஏதாவது சேர்த்துக் கொடுத்து விட்டால் போகிறது. ஏனெனில் நம்ம யாத்திரைக்கு அவர்கள் மனம் குளிர்ந்து ஆசிர்வாதம் செய்வார்கள்.

 மிராசுதார்:-   

 சரி! ஓய் ராமனாதம் பிள்ளை, நம்ம சாமி சொன்னபடி பெரியவர்களுக்கு ஆள் 1–க்கு இன்னம் 2-ரூபாய் வீதம் சேர்த்துக் கொடுத்து விட்டு வாரும்.

 புரோகிதர்:-   

 அப்படிச் சொல்லுங்கள் மகாராஜா! தாங்களா சொல்லுகிறீர்கள்? தங்கள் நாக்கிலே தர்ம தேவதை இருந்தல்லவா சொல்லச் செய்கிறது என்ன பாக்கியம்! என்ன பாக்கியம் தங்களுக்கு!

 சுயமரியாதைக்காரன்:-   

 அய்யா புரோகித அய்யரே! மிராசுதார் பணம் கொடுக்கிறார். பிராமணர்கள் வாங்கிக் கொள்ளுகிறார்கள்! அப்படி இருக்க நீங்கள் மிராசுதாருக்கு "என்ன பாக்கியம் என்ன பாக்கியம்" என்கிறீர்களே! இதன் அர்த்தம் என்ன?

 புரோகிதர்:-   

 தம்பி நீங்கள் சிறுபிள்ளை, உங்களுக்கு அது புரியாது. இந்த பிராமணர்களுக்குக் கொடுத்து அவர்களுடைய ஆசீர்வாதமும், கிரேயசும் பெரும்படியான பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்குமா? கொடுப்பதற்கு
1000–ம் பேருண்டு. வாங்குவதற்கு இப்படிப்பட்ட ஆத்மாக்கள் கிடைக்க வேண்டுமே! எங்கு கிடைக்கும்?

 மிராசுதார்:-   

சாமி! அந்தத் தம்பிக்கு அனுபவம் போதாது. சாமி வாரத்துக்கு செத்தே முந்தி என்னக்கூட இப்படித்தான் கேட்டார், அந்தத் தம்பி. சாமியே வந்துடுத்து.

 புரோகிதர்:-   

என்ன கேட்டார்?

 மிராசுதார்:-     

எனக்கு வயதாகி விட்டதாம். உடல் பெருத்து விட்டதாம். எனக்கு அதில்லையாம், குழந்தை பிறக்காதாம், ஏன் இராமேஸ்வரம் போகிறாய் என்று கேட்டார்.

 புரோக்கர்:-   
  
அடடா அப்படியா கேட்டார்? அப்படி கேட்பது பெரிய தோஷமாச்சுதே! அவருக்கு என்ன தெரியும் - சிறுபிள்ளை! என்னை விடவா உங்களுக்கு வயசு ஆயிடுத்து? என்னை விடவா நீங்கள் பெருத்து இருக்கிறீர்கள்? என்னைவிடவா உங்களுக்கு அதில்லை என்று சொல்ல முடியும்? என் மூத்த மனைவி எனக்கு அதில்லை என்று நோட்டீஸ் கொடுத்து விட்டு ஓடிப்போய் வேறு ஒருவனுடன் கூடி ஓட்டல் காப்பிக்கடை வைத்துக் கொண்டு இருக்காள் ஸ்ரீரங்கத்தில்! அப்படி இருந்தும் இப்போது நான் 60–க்கு மேல் கல்யாணம் பண்ணிக் கொண்டு என் பரியாள் இரண்டு குழந்தை பெற்றிருக்கிறாளே! பகவான் பெருமையை இதுகள் எப்படி அறிய முடியும்? நீங்கள் புறப்படுங்கள் இராமேஸ்வரம். அங்கு சரியானபடி தானம், பிரதிஷ்டை, ஓம யாகம், சமாராதனை செய்துவிட்டு இராமநாதஸ்வாமிக்கு ஒரு மண்டல் அர்ச்சனை செய்து 48-நாள் அங்கிருந்து மண்டலாபிஷேகம் செய்து பாருங்கள். அதற்கு தாங்கள் கூட அங்கு இருக்க வேண்டியதில்லை. அம்மாள் மாத்திரம் இருந்தால் போதும். பிள்ளை பிறக்காவிட்டால் என்னைக் கேளுங்கள்.

 சுயமரியாதைக்காரன்:-  
 
ஓய் புரோகிதரே! நீர் சும்மா அளக்காதேயும்! இங்கே உம்ம சம்சாரம் 2, 3-தடவை உம்ம வீட்டை விட்டு ஓடி ஓடி, நீர் போய் இழுத்துக் கொண்டு வந்து வைத்து வாழுகிறீரா இல்லையா? அந்த ராமேஸ்வர சுவாமி சாட்சியாய் சொல்லும், அந்தப் பிள்ளைகள் இரண்டும் உமக்குப் பிறந்ததா?

உம்ம மூத்த சம்சாரம் உங்க வீட்டுக்கு நகை செய்து கொடுத்த ஒரு ஆசாரி மகனுடன் கூட ஓடப் போய், நீர் அவன் மீது பிராது போட்டு அந்தம்மாள் உமக்கு அதில்லை என்று டாக்டரை விட்டுப் பரிட்சை செய்யச் சொல்ல நீர் கேசை வாபஸ் வாங்கிக் கொண்டு இருப்பதும், இதெல்லாம் எனக்குத் தெரியாதா? பகவான் பிள்ளை கொடுத்தாரா? வேறே மனுஷ ரூபத்தில் வந்து உம்ம மனைவியை அடித்துக் கொண்டு போய் கொடுத்தாராக்கும்!

 புரோகிதர்:-   

 தம்பி இதெல்லாம் உலக சகஜம்தான்! அதிலும் எங்களுக்கு இது எல்லாம் குற்றமாகாது, குறையுமாகாது. ஏன் என்றால் நாங்கள் எல்லாவற்றையும் பகவான் செயல் என்று எண்ணுகிற ஆஸ்திக சிரேஷ்டர்கள். அவனன்றி ஓரணுவும் அசையாது, ஆகையால் பகவான் செய்கையை பரிகாசம் செய்யாதேயும்! அவர் நம்மை பலவிதமாய் சோதிப்பார். அப்படியெல்லாம் பார்த்தால் உலகம் ஒரு நொடி நடக்காது. வேண்டுமானால் பாரும் மிராசுதார் நான் சொன்னபடி நடக்கட்டும், புத்திரபாக்கியம் கிடைக்கிறதா இல்லையா பாரும்!

 சுயமரியாதைக்காரன்:-   

நீர் சொன்னபடி மிராசுதார் நடப்பதானால் அதற்கு ராமேஸ்வரம் போவானேன்? அந்த சாஸ்திரி இடம் கர்மம் செய்து கொண்டு அவர் வீட்டில் 48-நாள் அந்தம்மாள் தனியாய் இருப்பானேன்? அதற்கு 4,000, 5,000- செலவு ஏன்? இங்கேயே நல்ல பிள்ளைகுட்டி இருக்கிறவன் வீடு பார்த்து மிராசுதார் மனைவியை ஒரு இரண்டு மாதத்திற்கு விட்டு வைத்தால் போகிறது. போமய்யா போம். இப்படி எதற்கு ஆக அய்யா பிள்ளை? இதில் உங்களுக்கு எதற்கு சமாராதனை தட்சனை? ராமேஸ்வரம் புரோகிதருக்கு 1000, 2000-எதற்காக அய்யா அழுவது? அதில் உங்களுக்கு தரகு!

 மிராசுதார்:-   

 தம்பி ஜாஸ்தி பேசாதிங்கோ! நான் இப்போது ராமேஸ்வரம் போகவில்லை. மற்றொரு சமயம் பார்க்கிறேன். இப்போது நேரமும், நாளும் நன்றாக இல்லை போல் இருக்கிறது. இந்தப் பேச்சு ஒன்றும் வெளியில் தெரியக் கூடாது.

சாமி, நீங்களும் போய்விட்டுப் பின்னால் சாவகாசமாய் வாருங்கள்; தம்பி சொன்னதைப் பற்றி கோபம் வேண்டாம். பிறகு பேசிக் கொள்ளலாம். எல்லாம் பகவான் சோதனைதான்.

புரோகிதர்:-   

எனக்கு ஒன்றும் கோபம் இல்லை! தம்பி சொல்லுவதெல்லாம் உண்மைதான். இது உலக சுபாவம்தான். உலக நடப்புதான்! பகவான் சாதாரணப்பட்டவர் அல்ல. அவர் திருவிளையாடல்கள் இவர்களுக்குப் புரியாது. ஆதலால் நீங்கள் பயணத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள். கண்டிப்பாய் பகவான் கிருபை செய்வார். நான் போய் வருகிறேன்.

 மிராசுதார்:-  
 
சரி போய் வாருங்கள்! இராமநாதம் பிள்ளை, சாமிக்கு 5-ரூபாய் கொடுத்தனுப்பும்.

 புரோகிதர்:-   

 (ரூபா வாங்கிக் கொண்டு) இராமநாதா! எல்லாம் உம்ம கிருபை! (என்று சொல்லிக் கொண்டு போய் விட்டார்)


- ---------------------12.03.1950- 'விடுதலை' இதழில் "சித்திரபுத்திரன்" என்ற புனைப்பெயரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை

19 comments:

stalin wesley said...

எழுத்துக்கள் சரியாக தெரிய வில்லை

தமிழ் ஓவியா said...

தாலி அகற்றிய செயலுக்குப் பதிலடியாம்!

இன்றைய தினமலர் 11ஆம் பக்கத்தில் மேற்கண்ட தலைப்பில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது.

14ஆம் தேதி பெரியார் திடலில் நடந்த தாலியகற்றும் நிகழ்ச்சிக்கு பதிலடி கொடுக்கப் போகிறார்களாம், இதனை செய்யப் போவது அடி யார்கள், பக்தர்கள் கூட்டமைப்பாம்.

சரி... என்ன செய்யப் போகிறார் களாம்? சென்னையில் அடிமைத் தளையாம் தாலியை அகற்றிக் கொண்டவர்களின் கணவன்மார்கள் இறந்து விட்டதாகக் கருதி, வரும் 29ஆம் தேதி திருவண்ணாமலை ரமணாசிரமம் அருகே கருமகாரியம் செய்யப் போகிறார்களாம்.

ஆகா! என்ன பரந்த பெருந் தன்மையான குணம்! தாலியை அகற்றிக் கொண்டவர்களின் துணைவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் - தங்கள் துணைவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் தாலியை அகற்றினார்கள். அதற்கான காரணங் களையும் விளக்கிக் கூறினார்கள்.

தங்களுக்குப் பிடிக்கவில்லை அல்லது சீரணித்துக் கொள்ள முடிய வில்லை என்பதற்காக உயிரோடு இருக்கும் அந்தப் பெண்களின் துணைவர்களை செத்தவர்களாகக் கருதி கருமக் காரியங்களைச் செய் கிறார்களாம்?

உயிரோடு இருப்பவர்களை சாகடிக்கத் துடிக்கும் இந்தப் பக்த கே(கோ)டிகளின் பரந்த உள்ளத்தைக் கவனித் தீர்களா? ஆகா! அதில் எவ்வளவுப் பெரிய மனிதாபிமானம் குடிகொண்டு இருக்கிறது. நாத்திகர் களுக்கு வைத்தியம் பார்க்காதே என்று காஞ்சி சங்கராச்சாரியார், சந்திரசேக ரேந்திர சரஸ்வதி கூறவில்லையா - அத்தகையவர்களின் சீடர்கள் இப்படித் தான் குரூரமாக நடத்து கொள்வார்கள்.

நமக்கு ஒரு சந்தேகம்! இந்து மத சடங்குப்படி, இறந்து போன தந்தைக்கு மகன்தான் கரும காரியங்களைச் செய்வான். அப்படியானால் திருவண் ணாமலையில் கரும காரியங்களைச் செய்பவர்கள் இவர்களுக்குப் பிறந்த வர்களா? (ஆசை வெட்கமறியாது என்பது பழமொழி).

ஆத்மா, மோட்சம், நரகம், மறு பிறப்பு, பிதுர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன் என்று சொல்கிற கருஞ்சட்டைக்காரர்களுக் குக் கரும காரியம் செய்பவர்களை எந்தப் பட்டியிலில் தான் சேர்ப்பது? பக்தி மார்க்கத்தில் கிடந்து உழன்ற ரமண ரிஷியே புற்றுநோய் கண்டுதான் சித்திரவதைபட்டுச் செத்தார். இந்த நிலையில் ரமண ரிஷி ஆசிரமம் அருகில் கரும காரியங்களைச் செய்யப் போகிறார்களாம்.

சரி, கரும காரியங்களை எந்த வகையில் செய்யப் போகிறார்களாம்? 21 பசுக்களுக்கு 21 சாதுக்கள் கொண்ட குழுக்கள் மூலம் பிண்டதானம் வழங்கப்படுகிறதாம்.

எப்படியென்றாலும், பார்ப்பான் வயிற்றில் அறுத்துக் கொட்டும் வேலை மட்டும் தங்கு தடையின்றி நடந்தாக வேண்டும். உயிரோடு இருப்பவர்களுக் குக் கரும காரியம் செய்தால் அந்தப் பாவம் கரும காரியங்களைச் செய்ப வர்களுக்கு வந்து சேரும் என்று இந்து சாஸ்திரங்களில் சொல்லப்பட வில்லையா?

தாலியைப்பற்றி இப்படியெல்லாம் செய்தியை வெளியிடும் தினமலரின், அதே செய்தியில் இன்னொரு தகவ லும் இடம் பெற்றிருக்கிறது (வசதியாக மாட்டிக் கொண்டீர்களா?)

பெண்ணின் கற்புக்குப் பாதகம் ஏற்பட்டால் அவளைக் காப்பாற்றுவ தற்கு அடையாளமாக, காட்டுக்குச் சென்று கொடிய விலங்கைக் கொன்று, அதன் பற்களை எடுத்து வருவதுதான் என்று கூறப்பட்டுள்ளது.
தாலிக்காகத் தாண்டிக் குதிக்கும் த(அ)டியார்களே! நீங்கள் குறிப்பிட் டுள்ள இந்த நிபந்தனையை ஏற்கத் தயாரா?

காட்டுக்குச் சென்று புலியையோ, காட்டு விலங்கையோ கொன்று அதன் பல்லைக் கொண்டு வந்து தாலி கட்டி விட்டு அதற்குப் பிறகு கருப்புச் சட் டைக்காரனுக்குச் சவால் விடுங்கள் - அதுதான் யோக்கியமான செயல்! ஒழுக்கமான செயல்!

கல்யாணம் ஆனவர் பெண் ணென்று மட்டும்தான் தெரிய வேண் டுமா?

ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் என்பது அந்தப் பெண்ணின் தனிப் பட்ட பிரச்சினை; அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப் பதே வக்கிரப்புத்திதானே?

கல்யாணம் ஆகி விட்டது ஓர் ஆணுக்கு என்பதற்கு அடையாளம் வேண்டாமா? அதிகமாக ஊர் சுற்று பவன் பெண்களைவிட ஆண்கள் தானே!

பெண்ணே முன்வந்து தாலியை அகற்றிக் கொள்ளும்போது அதுபற்றிக் கருத்துச் சொல்ல ஆண்களுக்கு உரிமை ஏது? அப்படி சொல்லு கிறார்கள் என்றால் அதற்குப் பெயர் தான் ஆணின் எஜமானத்துவம் அதிகப் பிரசங்கித்தனம் என்பது!

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? ஜாண் பிள்ளையா னாலும் ஆண் பிள்ளை என்கிற ஆண் ஆதிக்கப் புத்தியெல்லாம் ஆழமான குழிக்குப் போய் வெகு நாட்கள் ஆகி விட்டன. ஆண்கள் ஆட்டம் போட வேண்டாம்.

தாலியைக் கட்டுவதே கணவன் இறந்த பிறகு அறுத்து அந்தப் பெண்ணை அவமானப்படுத்துவ தற்குத்தானே! முண்டச்சி என்று முத்திரை குத்தி மூலையில் உட்கார வைப்பதற்குத்தானே! பெத்த பிள்ளை கல்யாண காட்சிகளைக் கூடக் காணக் கூடாது அபசகுனம் என்று காட்டுவ தற்காகத்தானே!

திராவிடர் கழகத் தோழர்கள் வீட்டுத் திருமணங்களில் விதவையர் களை முன்னிறுத்தித் திருமணத்தை நடத்துவதுண்டு என்பது தெரியுமா? விதவையர்க்குப் பூச்சூட்டு விழா நடத்தி வருவதும் திராவிடர் கழகம் என்பது தெரியுமா? ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கொள்ள வேண்டாம் - எச்சரிக்கை

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...

விஜயகாந்துக்கு கி.வீரமணி பாராட்டு

கருநாடகத்தில் அணை கட்டுவதைத் தடுக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பிரதமரை சந்திப்பதற்கான முயற்சியில்

கேப்டன் விஜயகாந்த் ஈடுபட்டு இருப்பது வரவேற்கத்தக்கது

எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு இதுதான் அடையாளம்

தொடரட்டும் இத்தகைய சிறப்பான பணிகள்!

தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டு



கருநாடக மாநிலத்தில் தமிழ்நாட்டைப் பாதிக்கும் வகையில் அணை கட்டப்படுவதைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர் களையும் நேரில் சந்தித்து ஒருங்கிணைத்து பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்துள்ள தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மேற்கொண் டுள்ள முயற்சியைப் பாராட்டி, வரவேற்று இத்தகைய பணிகள் மேலும் தொடர வேண்டும் என்ற வேண்டு கோளையும் விடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், முயற்சி எடுத்து சில தமிழ்நாட்டு மக்கள் நலன், மற்றும் மனித உரிமைகள் பற்றிய பிரச்சினையில், மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு சார்பாக நம் உரிமைகளை வற்புறுத் திட, அரசியல் கட்சித் தலைவர்களை அவரவர்களின் அலுவலகம் (வீடு) முதலியவைகளில் நேரில் சென்று சந்தித்து, மேகதாது அணை கட்டுதல் போன்ற பல்வேறு முக்கிய தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமான முயற்சிகளை கருநாடக மாநிலம் கைவிட வேண்டும் - மக்களின் வாழ் வாதாரம் (மீனவ மக்கள்) உட்பட என்பதை வலியுறுத்து வதற்கு பிரதமரை நேரில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆக்கப்பூர்வமான செயல்பாடு

இது ஒரு ஆக்கப்பூர்வமான நல்ல எடுத்துக்காட்டான செயல்பாடு!

தமிழ் ஓவியா said...

பல்வேறு கட்சிகள், கொள்கைகளால் மாறுபடும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் அவ ருடன் சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. உட்பட அதில் கலந்து கொண்டு, சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒத்துழைத்ததும் வரவேற்க வேண்டிய ஒரு நல்ல முன் மாதிரியான எடுத்துக்காட்டு ஆகும்!

கருநாடகத்தில் முன்னாள் இந்நாள் முதல் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் ஓர் அணியில் - ஓர் குரலில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது; அனுமதி இல்லா மலேயே மேகதாது அணை கட்டுவோம் என்று ஒன்று சேரும்போது - தமிழ்நாட்டு (அ.தி.மு.க.) ஆளுங் கட்சி ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து, பொதுப் பிரச்சினைகளை வலியுறுத்திடுவதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறை என்று நம்மைப் போன்ற பலரும் பலமுறை தமிழக அரசுக்கு, முன்னாள், இந்நாள் முதல் அமைச்சர் களுக்குச் சுட்டிக் காட்டிய போது, அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே சென்றது.

எதற்கும்தானே தான் என்ற பெருமையை ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்ற பிடிவாத பேராசை காரணமாக, ஆளுங் கட்சி செய்யத் தவறியதை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்கள் செய்துள்ளார்.

எதிர்க்கட்சி என்பது என்ன?

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு என்பது ஜனநாயகத்தில் அவருடைய கட்சிக்கு மட்டுமல்லாமல், சட்டமன்றத் தில்கூட மற்ற அனைத்துக் கட்சிகளின் உரிமைக் குரலாய் செயல்பட வேண்டும் என்பதே ஜனநாயக அரிச்சுவடி (இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்ற மரபும் வழியும் தத்துவமும் ஆகும்).

பா.ஜ.க.வாக இருந்தாலும்...

இவரால் தூதுக்குழுவில் தயங்காமல் இடம் பெற்றுள்ள தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், த.மா.க., புதிய தமிழகம், அய்.ஜே.கே., புதிய நீதிக்கட்சி போன்றவைகளோடு பா.ஜ.க. கூட்டணியில் தற்போது உள்ள சில கட்சிகளும் (பத்து கட்சிகள்) கூட கலந்து கொண்டுள்ளனர்.

பா.ஜ.க.வினர்தான் இந்த ஏற்பாட்டுக்குப் பின்புலமாக உள்ளனர் என்று ஒரு செய்தி வந்துள்ளது.

அப்படியே அது உண்மையாகவே இருந்தாலும் தமிழ்நாட்டு உரிமைப் பிரச்சினைப் பாதுகாப்பில் அனைவரும் ஒன்று சேர்வதோ, முயற்சிப்பதோ, ஆதரவு தருவதோ வரவேற்கத்தக்கதே தவிர, அதில் அரசியல் கொள்கைப் பார்வை நமக்குள் தேவை இல்லை என்பது திராவிடர் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு ஆகும்!

அந்தக் கடமையை சற்று காலத் தாழ்ந்து செய்துள்ள கேப்டன் திரு. விஜயகாந்த் Better Late than Never
என்று ஒரு ஆங்கிலப் பழமொழியின் காலம் தாழ்ந்தாலும் பரவாயில்லை, சரியான முயற்சிதான்.

கேப்டனுக்கு ஒரு வேண்டுகோள்

அவருக்கு நமது அன்பான வேண்டுகோள்.

உங்களை சட்டமன்றத்திற்குள்ளேயும் வெளியும் பல வழிகளில் ஆத்திரமூட்டுவார்கள் பலர். அதற்குப் ஆட்பட்டு விட்டால், அது உங்களின் அரிய பணியின் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி மறைத்து விடும். எனவே, எதிரிகள் வெட்டும் குழியில் விழாமல் எச்சரிக்கை யாய் செயல்பட்டு இலக்கை அடைய இது போன்ற கூட்டு முயற்சிகள் எப்போது எல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அதில் தயங்காமல் ஈடுபடுங்கள். தங்கள் பணி காலத்தால் செய்யப்பட்ட பணி.

ஆளுங்கட்சி செய்யத் தவறியதை எதிர்க்கட்சித் தலைவர் செய்தார் என்ற பெருமை உங்களுக்கு ஏற்படும்; அன்பான வாழ்த்துக்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை,
28.4.2015



Read more: http://www.viduthalai.in/e-paper/100497.html#ixzz3YbUlCVb0

தமிழ் ஓவியா said...

நாணயமாய்


வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)



Read more: http://www.viduthalai.in/page-2/100485.html#ixzz3YbVp7cRA

தமிழ் ஓவியா said...

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றும் நிகழ்ச்சி ஏன்?



ஏப்ரல் 14ஆம் தேதி பாபா சாகேப் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களது 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

அந்நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகிய இருபெரும் ஒப்பற்ற புரட்சியாளர்களின் சிந்தனைகளைச் செயலாக்கும் வகையில் விழா நடத்துவதே பொருத்தமாக இருக்கும் என்பதால், இரண்டு முக்கிய நிகழ்வுகளை திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

1. தங்களது கொள்கைக்கும், விருப்பத்திற்கும் மாறாக, திருமணத்தின்போது அணிவிக்கப்பட்ட தாலி என்ற பெண்ணடிமைச் சின்னத்தை, ஜாதியைப் பாதுகாக்கும் சின்னத்தை, தங்களுக்கு உண்டான விழிப்புணர்வு, துணிவு, தெளிவு, அச்சமின்மை காரணமாக, அன்றைய நாளில் பெரியார் திடலுக்கு வந்து, அந்நிகழ்வில் தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்வைப் பகிரங்கமாக, மக்கள் முன்னிலையில் நடத்திக் காட்டுவது, இதில் விருப்பமுள்ள தாய்மார்கள், திருமணமானவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற்று வந்து கலந்து கொள்ளலாம் என்று அறிவித்ததற்கிணங்க, ஏராளமான திருமணமான வாழ்விணையர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

எந்தவித நிர்ப்பந்தமோ, கட்டாயமோ அல்லது அவர்களுக்கான லாப நோக்கோ _- இந்த நிகழ்வில் இல்லை.

2. தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கரும், உண்மையான திராவிடர் இயக்கங்களும், கொள்கையாளர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் விரும்பும் புரட்சிகர பெண்ணடிமை ஒழிந்த ஒரு புதிய சமூகத்தின் விடிவெள்ளியாகவே இந்த நிகழ்வு.

இதுபோல தனித்தனியே திராவிடர் கழக மாநாடுகளிலும், கழகப் பிரச்சாரக் கூட்ட மேடைகளிலும் ஆங்காங்கே தாலி அகற்றும் நிகழ்ச்சி நடந்து வந்திருக்கிறது! இது புதுமையும் அல்ல; முதல் தடவையும் அல்ல!

3. இப்போது ஏன் நடத்தப்படுகிறது என்றால், சென்னையில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் தாலி அணிவது பொருத்தமா? என்பதுபற்றி விவாதம் நடைபெறும் என்று அறிவிப்புத் தரப்பட்ட நிலையில், அதற்கு மிரட்டல், எதிர்ப்புக் காட்டினர் ஹிந்துத்துவாவைப் பரப்பும் பல மதவெறிகள் _- காவி அணிந்த அமைப்பினர். பிறகு அடுத்த-கட்டமாக அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் டிபன்பாக்ஸ் வெடிகுண்டை எறிந்து, வெடித்தனர்.

நாங்கள்தான் செய்தோம்; இனியும் இதைவிட அதிகமாகவே செய்வோம் என்று பட்டாங்கமாய் அறிக்கையை அந்த அனாமதேய, பாசிச சமூக விரோதிகள் வெளியிட்டு வருகிறார்கள்.

அவர்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்க வேண்டாமா? தமிழ்நாட்டின் அமைதியைக் குலைத்து, சமூக நல்லிணக்கத்தைப் பாழாக்கிட முயல்கின்றவர்களிடம் அரசு எப்படி நடந்து கொள்கிறது? பாம்புக்கும் நோகாமல் பாம்படிக்கும் கோலுக்கும் நோகாமல் என்றபடி நடந்துகொள்கிறது!

தமிழ் ஓவியா said...

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை இத்தகைய அச்சுறுத்தல்களால் பலியாகலாமா?

இந்தக் கருத்து பரவக்கூடாது என்று மிரட்டப்பட்டதன் எதிர்வினையாகத்தான் 14ஆம் தேதி சென்னை, பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அது விருப்பமுள்ள பெண்களின் தனி உரிமை. மற்றவர்கள் கூச்சல் போட என்ன உரிமை உள்ளது?

தாலி என்பதற்கு இவர்கள் கூறும் ஹிந்து மதத்தின் எட்டு வகைக் கல்யாணங்களில் தாலி எங்காவது கட்டாயம் என்றோ, ஆதியில் இருந்த முறை என்றோ காட்ட முடியுமா?

சங்க இலக்கியத்தில்கூட அகநானூறு இலக்கியத்தின் இரண்டு பாடல்களில் அக்கால மணமுறைபற்றி உள்ளனவே, அந்த முறையில் இந்தத் தாலி கட்டும் பழக்கம் உண்டா? (அ) பழைமையில் இருந்தது என்றுகூட வாதத்திற்கு ஒப்புக்கொண்டால்கூட, முந்தைய பழைமை முறைகளை எல்லா ஹிந்துத்துவா வீட்டுப் பெண்களும், தூண்டிவிடும் பார்ப்பனர்களும் இன்று பின்பற்றுகிறார்களா?

பார்ப்பன விதவைகளை மொட்டைப் பாப்பாத்திகளாக்கி - வெள்ளைச் சேலையில் காட்சியளிக்க வைத்தனரே, அது இன்று உண்டா?

புனிதத்தைத் தேடும் இந்தப் புரட்டர்கள் அங்கே போய் எதிர்ப்புக் காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினரா?

பொட்டும், பூவும் வைத்துக்கொள்ளும் கணவனை இழந்த பெண்களின் முற்போக்கு மனிதநேய சிந்தனைகளை, செயற்பாடுகளை எதிர்த்து கிளர்ச்சியா செய்தனர்?

சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதிய இரண்டு பார்ப்பன நீதிபதிகள், நாரதர், பராசரன், யாக்ஞவல்கியர் போன்றவர்களின் பல சுலோகங்களைக் காட்டி, சப்தபதிபற்றித்தான் கூறினார்களே தவிர, தாலி கட்டாயம் ஹிந்து திருமணத்திற்கு என்று கூறவில்லையே!

விதவை மறுமணம் வந்ததே, அதை எதிர்த்தனரா?

இன்னமும் பெண்களுக்கு 9 வயதுக்குள் திருமணம் பால்ய விவாகம் செய்துவிட வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார்கள் கூறுகிறார்களே, அதைப் பகிரங்கமாகச் செய்தால், தண்டனை கிரிமினல் குற்றம் என்று உள்ளதே!

அதை எதிர்த்து இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரிகள் குரல் கொடுப்பார்களா? சட்டத்தை எதிர்த்து புனிதம், மத ஆச்சாரம் கெட்டுவிட்டது என்று கூறுவார்களா?

இன்னும் சில அரைவேக்காடுகளும், புதிதாக தமிழ்த் தேசிய வியாதிகளும் தமிழன் வீரத்தின் அடையாளம் என்று கூறி, ஆகா, தாலியை எதிர்ப்பதா? என்று உளறுகிறார்களே, அந்த வீரர்கள் திருமணத்திற்குத் தாலியை நகைக் கடைகளில் வாங்குகிறார்களா? அல்லது காட்டிற்குச் சென்று புலியோடு போராடி, சாகடித்துப் புலிப் பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து வீரத்தின் அடையாளம் இதோ என்று கட்டுகிறார்களா?

அந்த நிபந்தனை இன்று வைக்கப்பட்டால், திருமணமே வேண்டாம் என்றுதானே ஆண்கள் ஓடி ஒளிவார்கள்.

எனவே, ஒத்த கருத்தாளர்கள் அனைவரும் வந்து கலந்துகொள்ள அழைப்பை விடுக்கிறோம்.

கருத்து மோதலுக்குத் தயாரா?

கருத்து மோதலுக்குத் தயார்! தயார்!! வேறு மோதலுக்குத்தான் தயார் என்றால், காவல்துறை பார்த்துக் கொள்ளும்; மீறி அவர்களால் முடியாத நிலை ஏற்பட்டால், மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

தயார்! தயார்!!

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

ஊன்றிப் படிக்க உண்மையை உணருக!


வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்



தெய்வம் தெய்என் கிளவி கொள்ளலும் கோறலும் என்பதொரு நூற்பா பிங்கலந்தைப் பழம் பதிப்பில் காணப்பட்டது.

இதே நூற்பா தெய்யென் கிளவி கோறலும் தெய்வமும் என்று வேற்றுமையுடன் வேறு பதிப்பில் காணப்படுகின்றது. ஆதலின், தெய் என்பதற்குக் கொல்லுதல், தெய்வம் என்பன பொருளாகக் கொண்டால் இழுக்கில்லை. இதனால் நாம் அறியக் கிடக்கும் செய்தி என்ன எனில் கூறுவோம். அறிவு நிரம்பாத பண்டை நாளில், பெருங் காற்றையும், கனலையும், காட்டாற்றையும், துன்புறுத்தும் வெங்கதிரையும், பெருமழையையும், விலங்குகளின் எதிர்ப்பையும் தெய் என்று சொல்லி வந்தார்கள்.

அறிவு நிரம்ப நிரம்ப அவற்றின் பெரும் பயனை அறிந்து அவற்றைப் பயன்படுத்துவாராயினர். அறிவு நிரம்பாத போது வெறுப்புப் பொருளில் வழங்கப்பட்ட தெய் அறிவு நிரம்பிய பிறகு விருப்புப் பொருளில் வழங்கலாயிற்று. தெய் என்ற சொல் அம் இறுதி நிலையும் வ் என்ற இடைநிலையை பெற்றுத் தெய்வம் என்று சுருங்கிற்று.

(தெய்+வ்+அம்) அறிவு நிரம்பாதபோது வெப்புறுத்திய ஞாயிற்றையும், நிலவுறுத்திய திங்களையும், துன்புறுத்திய தீயினையும் அறிவு நிரம்பிய காலத்து எவ்வாறு போற்றினார் என்பது நோக்கத்தக்கது. கொடி நிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே. என்ற இந்தத் தொல்காப்பிய நூற்பாவால் ஞாயிறு, தீ, திங்கள் ஆகிய மூன்றையும் வடுநீங்கு சிறப்புடைய தெய்வங்கள் என்று வாழ்த்தியது புலனாகிறதன்றோ! மழையைத் தெய்வமாகக் கொண்டனர்; போற்றினர்.

புனலைத் தெய்வமாகக் கொண்டனர்; போற்றினர். இங்கு அறியத்தக்க மற்றோருண்மை என்னெனில், தெய்வம் என்ற சொல்லால் இந்நாள் சொல்லப்படுவன பயன் பொருள்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்ற பொருள்களும் ஆம். பசு தெய்வம், நிலம் தெய்வம், நீர் தெய்வம், சொல் தெய்வம், பெரியவர் அருளிய நூல் தெய்வம் பிறவும் தெய்வங்கள்.

சமயக் கணக்கர் இத் தெய்வங்களை எல்லாம் மேல் நின்று நடத்துவதோர் பெரிய பொருள் உண்டென்றும் அது கடவுள் இயவுள் என்றெல்லாம் பெயர் என்றும் கூறினாராக. அச் சமயக்கணக்கு முற்றிய வழித்தாம் தாம் கண்ட கடவுள் இப்படி இப்படி என்று கூறுவாராகி, உலகில் கலம் பல விளைத்து வருவாராயினர். தெய்வம் தூய தமிழ்ச்சொல் என்பதில் தமிழர்க்கு ஏதேனும் அய்யமிருக்க முடியுமா? முடியாதன்றோ! ஆனால், பார்ப்பனனும் அவன் வால் பிடித்துத் திரியும் சில தமிழர்களும், தெய்வம் வடசொல் என்று உளறி வருகிறார்கள்.

தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு வருமாறு: தொல்காப்பிய நூன்மரபு 29-வது நூற்பா, ய்,ர்,ழ், என்னும் மூன்று மெய்யின் முன், க,த,ந,ம,ச,வ,ஞ,ய,ப என்ற ஒன்பது எழுத்துகளும் தனித்தனி வந்து நிற்கும் என்று கூறுகையில் ய் முன் வா வருவதற்கு எடுத்துக்காட்டாக தெய்வம் என்ற சொல் காட்டப்பட்டுள்ளது. எனவே தெய்வம் தூய தமிழ்ச் சொல் என்பதை எவராலும் மறுக்க முடியாதன்றோ?

- (குயில், 17.6.58)

தமிழ் ஓவியா said...

கருத்து

Print Email


நம் நாட்டில் அறிவியல் துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதன் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதற்காக சிறந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் கருதி அரசு இதைச் செய்ய வேண்டும்.

- சி.என்.ஆர்.ராவ், அறிவியலறிஞர்



முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் இவர்கள் யாருக்கும் இந்திய சுதந்திர வரலாற்றில் இடமே இல்லையா? அம்பேத்கர், பெரியார், நாராயண குரு, கான் அப்துல் கஃபார் கான், சந்தால் இன மக்கள் எல்லாம் இந்திய வரலாற்றுப் பக்கங்களிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்படுவதற்கும் மறைக்கப்படுவதற்கும் என்ன காரணம்? இந்துத்துவம் என்பது சிறுபான்மையினரையும் அவர்களின் அடையாளங்களையும் அழித்தொழிப்பதா?

- தீஸ்டா செட்டில்வாட், மனித உரிமைப் போராளி



தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்கள் பணியாற்றத் தேவையான பணிச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுதவிர, தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்துவதன் மூலம் தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க முடியும். ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.

- எஸ்.கே.கௌல், தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.



தாய்லாந்தில் ராணுவ ஆட்சியை விலக்கும் முடிவை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இடைக்காலத் தலைவருக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறோம்.

- அல் ஹுசைன், அய்.நா.மனித உரிமை குழுத் தலைவர்.



நம் நாடு உலகளாவிய போட்டித் தன்மைப் பட்டியலில் 79ஆம் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியல்களில் நம் நாடு முதல் 10 இடங்களில் இடம் பெறுவதற்குப் படைப்பாற்றல் கல்வி, புத்தாக்கம், தொழில் முனைவு, கூட்டு முதலீட்டு முறை ஆகியவற்றைச் செயல்-படுத்துவதன் மூலம்தான் முடியும்.

- அப்துல்கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்.



ம.பி.யில் மணல் மாபியாக்களின் அநியாயம் தாங்க முடியவில்லை. பா.ஜ. அரசும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. குற்றவாளிகளும் போலீசாரும் கைகோர்த்துத் திரிந்தால் மாநிலம் எப்படி உருப்படும்? இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?

- ஜோதிராதித்யா சிந்தியா, மேனாள் மத்திய அமைச்சர்

தமிழ் ஓவியா said...

கழுதைக்கும் கழுதைக்கும் தாலி கட்டியபோது எங்கே சென்றார்கள்?


தாலி கட்டாத பல ஜாதிகள் குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ளனவே அங்கே போய் அவர்களிடம் புனிதம்பற்றிப் பேசுவார்களா? கழுதைக்கும், கழுதைக்கும், நாய்க்கும், நாய்க்கும் புரோகிதர்களைக் கூப்பிட்டு, (அதற்கும் தட்சணை வாங்குகிறார்களே!) காதலர் தினத்தில் நடத்தினார்களே, படங்களும் வெளிவந்தனவே!

கழுதைக்குத் திருமணம் நடத்தி, தாலி கட்டிப் படம் எடுத்துத் தங்கள் உறவை வெளிச்சம் போட்டனரே - அப்போது எங்கே போனது இந்தப் புனிதம்?

மார்வாரி வட்டிக் கடையில், டாஸ்மாக்கில் குடிப்பதற்கு மனைவியை அடித்து உதைத்துத் தாலியை அடமானம் வைத்துக் குடிக்கிறார்களே, அதைத் தடுக்க புனிதம், புடலங்காய்கள் எல்லாம் எங்கே போனார்களாம்? ஒன்றைக் கொடுத்து ஒன்பது பெறத் தயாரா?

தமிழ் ஓவியா said...

குட்டிக்கதை : உனக்கு ஆசைதான்!


- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்



கொட்டைப் பாக்கு அளவு தலை. கொய்யாக்காய் உடல் _ இந்தச் சிறிய கோழிக் குஞ்சு குப்பையில் மேய்ந்திருந்தது.

அது தனி; தாயுமில்லை, தகப்பனுமில்லை. உடன் பிறந்தாருமில்லை. தன்னந்தனியே மேய்கிறது. குப்பை சீய்க்கவும் தெரியவில்லை; இரை விழுங்கவும் முடியவில்லை.

காக்கை ஒன்று அதை அடித்துக் கொண்டுபோக அணுகிற்று; அதன் நிலையைக் கொஞ்சம் ஊன்றி நோக்கியது. காக்கையின் நெஞ்சம் இளகிற்று.

காக்கை, கோழிக்குஞ்சை நோக்கி: ஏன் குழந்தாய்! உன் தாய், தந்தை, கூடப் பிறந்தவர் எங்கே?

கோழிக்குஞ்சு சொல்லுகிறது: என் தகப்பனைச் சாமிக்கு விட்டிருந்தார்கள். அதனால் ஒரு நாள் சாமிக்கு அறுத்துவிட்டார்கள்.

புதையல் கிடைத்தது, ஒருவர்க்கு. அந்தப் புதையலைக் காத்திருந்த சாமிக்கு என் தாயை அறுத்தார்கள்.

சனிக்கிழமை ஒருத்தன் இறந்துவிட்டான். அந்தக் கண்மூடிச் சாமி துணைப்பிணம் தேடாதிருக்க என்னுடன் பிறந்த கோழிக்குஞ்சைப் பிணத்தோடு கட்டி அனுப்பி விட்டார்கள்.

நான் தனி, என்னைச் சாமிதான் காப்பாற்ற வேண்டும்.

காக்கைக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அது சொல்லுகிறது;

அட இழவே, உன் பெற்றோரையும் உடன் பிறப்பையும் வாயிற் போட்டுக் கொண்ட சாமியா உன்னைக் காப்பாற்றும்?

வந்துவிடு என் வயிற்றுக்குள், கோழிக் குஞ்சே என்று கூறிற்றுக் காக்கை!

குஞ்சு _ நான் பிழைத்திருக்க ஆசையாய் இருக்கிறது.

காக்கை _ உனக்கு ஆசைதான்! சாமிக்கு? நான் யார் தெரியுமா! சாமி! சனியன் சாமி, ஏறுஞ்சாமி.

காக்கைச் சாமி, ஏழைக் குஞ்சை ஒழித்துவிட்டது.

- குயில், 15.5.1948

தமிழ் ஓவியா said...

தமிழ் வளர்ச்சி : நீங்கள் செய்தது என்ன?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

வெண்ணெய் வாழைதான் ஆனால் குலை தள்ள வேண்டும்



சட்டாம் பிள்ளைச் சண்முகம் எனது பாடசாலை நண்பர்.

நான் ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போனேன். அப்போது அவர் தமது வீட்டுக்குப் புறத்திலிருந்த தோட்டத்தில் இருந்தார். நான் வந்தது அவருக்குத் தெரிந்தது. என்னை அவர் தோட்டத்திற்கு அழைத்துப் போனார். மரம், செடி, கொடிகள் தோட்டத்தில் அடர்ந்திருந்தன. நான் அவைகளைச் சுற்றிப் பார்த்து வரும்போது நண்பர் என்னை ஓர் இடத்தில் நிறுத்திக் கீழ்வருமாறு சொன்னார் : பழம் ஒன்று முக்கால்முழ நீளமிருக்கும்; பச்சை நாடானை ஒத்த நிறம், வாட்டம். அதை வாழைப்பழமென்றே சொல்வதற்கில்லை. அதன் தோலை உரித்துக் கீழே போட்டபின் கையில் வெண்ணெய்தான் மீதியிருக்கும். அந்த உரித்த பழத்தைச் சுடு சோற்றில் போட்டால் உருகி விடும். இனிப்பில் தேன்; ஒருவித நறுமணம்!

பழுத்திருப்பதை நண்பர் அடுக்குப் பானையிலிருந்து எடுத்துவரப் போகிறார் என்றுதான் நான் நினைத்தேன். அவர் அந்த மரந்தான் இது என்று தரையைக் காட்டினார். நான் தரையைக் குனிந்து பார்த்தேன். அகலத்தில் மாவிலையையும் நீளத்தில் பலா இலையையும் ஒத்த அய்ந்தாறு வாழையிலைகள் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டிருந்தன. இதுதானா வெண்ணெய் வாழைமரம்!

என்ன நண்பரே! இதுதானா குலை தள்ளிற்று? அதுவும் பழுத்ததா? நீரும் தின்றீரா? என்று கேட்டேன். சண்முகம் சிரித்தார். வாழையைப் பற்றி நான் சொன்னதில் ஒன்றும் பொய்யில்லை; ஆனால் வளர வேண்டும் பழம் தரவேண்டும் என்று கேலி பேசினார்.

அந்த வெண்ணெய் வாழையைச் சண்முகம் சுண்ணாம்புக் கற்களுள்ள தரையில் நட்டிருந்தார். அதனால் அதை நட்டு ஒரு வருஷம் ஆகியும் அது வளரவில்லை. அதை நட்டபோது வேறிடத்தில் நட்ட வாழைகள் நல்ல பலன் அளித்தன. வெண்ணெய் வாழை வளர்ச்சியடைந்து நல்ல பலன் கொடுக்க வேண்டுமானால் அதைப் பெயர்த்து வேறு நல்ல இடத்தில் வைக்க வேண்டும்.

பல்லாவரத்தில் கூடியிருக்கும் பண்டிதர்களே, தமிழ் இனிமையானது, ஆக்ஷேபமில்லை. ஆனால் அது வளர்ச்சியடையவில்லை. குலை தள்ளவில்லை. மக்கட்கு நலன் அளிக்கவில்லை. அதை நீங்கள் நட்டிருக்கும் இடம் தீயது. ஜாதி மதம் மூடப் பழக்க வழக்கங்கள் ஆகிய சுண்ணாம்புக் கற்கள் உள்ள தரையில் நட்டிருக்கிறீர்கள். அவ்விடத்தினின்று அதைப் பெயர்த்தெடுங்கள். வேறு பொது இடத்தில் நடுங்கள்! அப்போது தமிழ் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டிராமல் வளர்ச்சியடையும். குலை தள்ளும். பழம் தரும். மக்கள் நலன் அடைவார்கள்.

தமிழ் தற்கால நிலையில் இனிக்கிறதென்று நீங்கள் சொல்லுகிறீர்களா? வளர்ச்சியடையாமல் கல்லுப் பிள்ளையார் போலிருக்கும் தமிழ் வளர்ச்சியடைந்து வரும் மக்களுக்கு இனிமை தருவதெப்படி? சொல்லுங்கள்! தமிழ் இனிக்கவில்லை யாதலால்தான் நீங்கள் அதை இனியது இனியது இனியது என்று எப்போது பார்த்தாலும் வேலையற்றுப் போய் உளறிய வண்ணமிருக்கிறீர்கள். அது வளர்ச்சியடையாத-தால்-தான், நீங்கள் பழைய விஷயத்தையே பணம் சம்பாதிக்கத் திரும்பத் திரும்பச் சொல்லுகிறீர்கள். அது குலை தள்ளாததால்-தான் நீங்கள் படித்ததாய்ச் சொல்லிக் கொண்டாலும் ஒன்றுமறியாத முட்டாள்கள் என்று பிற பாஷைச் சிறுவர்களால் இகழப்படுகிறீர்கள்.

நீங்கள் தமிழின் அதிகாரிகளாக ஆசைப்படுகிறீர்கள். சைவப் பெரியாராகவும் பிரியப்படுகிறீர்கள். சைவத்தோடு தமிழை ஒட்டி விடுகிறீர்கள்.

அதனால் சைவரல்லாத பிற மதத்தவர் உங்கள் சைவத்தை ஓச்சும் கோடாலி தமிழின் கிளைகளையும் குறைக்கின்றது. வைஷ்ணவத்துடன் தமிழ் ஒட்டப்-பட்டிருக்கிறது. அதனால் வைஷ்ணவத்தை நோக்கிப் பிற மதத்தினர் கொட்டும் நெருப்பானது தமிழின் வேரிலும் படுகிறது. புத்த மதத்தை அறுக்கப் போகும்போது அதனோடு ஒட்டிய தமிழ் அறுபடுகிறது. மதங்களுக்கு அப்பால் தமிழ் இல்லாதபடி செய்த _ செய்கின்ற தமிழ்ப் பண்டிதர்களே! தமிழுக்கு நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய வேலைகளில் ஒன்றாவது செய்ததுண்டா!

மத நூல்களைப் புகைப்படம் பிடிப்பதுண்டு; வெளியிடுவதுண்டு.

மதத்தின் அப்புறத்தில்தான் விசால எண்ணங்கள், விரிந்த தத்துவங்கள், அறிவு வளர்ச்சிக்குரிய திட்டங்கள், போகப் பொருள்களை விளைக்கும் நுட்பங்கள் உண்டு என்பதை நீங்கள் அறியவில்லையானால், உங்களை என்னவென்று சொல்லுவது? தமிழை அரிக்க வந்த பண்டிதச் செல்லுப் பூச்சிகளே! இந்தியனாகிய மகம்மதியனும், இந்தியனாகிய கிறிஸ்தவனும் தமிழை வெறுக்க வைத்தது எது தெரியுமா? அதனோடு சம்பந்தப்படுத்தி வைத்திருந்த மதம். மதக்காரர்கள் மூலபலஞ் சண்டையிடுகிறவர்கள்.

அதற்குள்ளே சிக்கலாகிக் கிடக்கும் தமிழும் அழிந்து போகிறது. வளர்ச்சி அடைவது எப்படி?

புது இலக்கணம், புது இலக்கியங்கள், புதிய நிகண்டுகள், அகராதிகள், தமிழின் நடையில் ஓர் புதுத்திறன்! இவ்வரிசையில் எதிலாகிலும் உங்கள் கவனம் சென்றதுண்டா? இன்னும் யோசியுங்கள்.

- புதுவை முரசு, 16.2.1931

தமிழ் ஓவியா said...

தாலி பற்றி அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லுகிறார்?



அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா என்று சிலர் கேட்பது புரிகிறது. ஒரு புரட்சியாளரின் பிறந்த நாளைப் புரட்சிகரமாகக் கொண்டாடுவதுதான் _ அந்தப் புரட்சியாளருக்குக் கொள்கைரீதியாக நாம் காட்டும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.
இதோ பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார் :

மலபார் மற்றும் அஞ்செங்ரோ கெஜட் டீரின் ஆசிரியரான திரு.சி.ஏ.இன்னஸ் சென்னை அரசாங்கத்தின் அனுமதியோடு பின்வருமாறு கூறுகிறார்: மருமக்கள்தாயம் என்னும் முறையைப் பின்பற்றும் எல்லா வகுப்பினரிடையேயும் அதேபோன்று மக்கள்தாயத்தைக் கடைப்பிடிப்போரில் பலரிடையேயும் தாலிகட்டும் திருமணம் என்னும் மற்றொரு ஏற்பாடு நடை முறையில் இருந்து வருகிறது. மலையாளி களின் திருமணப் பழக்க வழக்கங்க ளிலேயே இது நூதனமானது, தனித்தன்மை வாய்ந்தது என வருணிக்கப்படுகிறது. இதன் படி, ஒரு யுவதி பூப்புப் பருவம் எய்துவதற்கு முன்னர் அவள் கழுத்தில் தாலி (தங்கத்தாலோ அல்லது வேறு ஏதேனும் உலோகத்தாலோ செய்யப்பட்ட பதக்கம் போன்ற ஒரு சிறு ஆபரணம் நூல்கயிற்றில் கட்டப்படுவது) கட்டப்படுகிறது. அதே ஜாதியை அல்லது உயர் ஜாதியைச் சேர்ந்த ஒருவனால் இவ்வாறு தாலி கட்டப்படு கிறது.

இவ்வாறு செய்த பிறகுதான் அந்த இளம் பெண் சம்பந்தம் செய்துகொள்ள முடியும். தாலி கட்டுபவனுக்கு அல்லது மணவாளனுக்கு (மணமகன்) அந்தப் பெண் ணுடன் கூடி வாழும் உரிமை அளிப்பதற் காகவே இந்தச் சடங்கு செய்யப்படுவதாக பொதுவாகக் கருதப்படுகிறது.

கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்கு பூதேவர்களும் (அதாவது பிராமணர்களும்), சத்திரியர்களும் உரிமை கொண்டாடி வந்ததிலிருந்தும் இந்த வழக்கம் தோன்றியிருக்கக் கூடும். (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி 16, பக்கம் 333.)

செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

புரட்சிக்கவிஞரின் நகைச்சுவை




- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

ஜனோபகாரிகள்

மேல்நாட்டில் பிறந்து வளர்ந்த ஓர் இந்தியர்: (தோட்டியைக் காட்டி) இவர் யார்?

உள்ளூரார்: இவர் வீட்டிலுள்ள அசுத்தங்களை எடுத்துப் போகிறார்.

மே.இந்: (வண்ணானைக் காட்டி) இவர் யார்?

உள்: இவர் வீட்டிலுள்ள அழுக்குத் துணிகளையெல்லாம் எடுத்துப் போகிறார்.

மே.இந்: திரும்பவும் சலவை செய்துவந்து கொடுப்பாரா?

உள்: ஆமா!

மே.இந்: (புரோகிதரைக் காட்டி) இவர் யார்?

உள்: இவர், வீட்டிலுள்ள அரிசி, பருப்பு முதலியவைகளை மூட்டை கட்டிக்கொண்டு போகிறார்.



மே.இந்: சமையல் செய்து கொண்டுவந்து கொடுப்பாரா?

உள்: திரும்பக் கொடுப்பதில்லை.

மே.இந்: அடித்துக்கொண்டா போகிறான்?

உள்: ஆம்.

மே.இந்: அடித்துக் கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டா இருப்பார்கள்?

உள்: ஆம், ஆம்!

மே.இந்: அடித்துக் கொண்டா......

உள்: ஓய், எத்தனை தரம் சொல்லுவது! அடித்துக் கொண்டுதான் போகிறான்! அடித்துக்கொண்டுதான் போகிறான்! ஆயிரம் வருடமாக இப்படி!

ராகு காலப் பயன்



ஒருவன்: நான் ராகு காலத்தில் வெளிக் கிளம்பினதால்தான், பத்து ரூபாய் நோட்டு விழுந்துவிட்டது.

மற்றவன்: நான் ராகு காலத்தில்தான் அந்தப் பத்து ரூபாய் நோட்டைக் கண்டெடுத்தேன்!

வேடத்தின் பயன்



சு.ம.காரன்: பண்டித அய்யர்வாள்! உலோகம் என்றால் என்ன?

அய்யர்: பூமிக்குப் பெயர்_பொன், வெள்ளி இவைகளுக்கும் பெயர்.

சு.ம.: உலோக குரு என்பதிலுள்ள உலோகத்திற்குப் பின்னைய அர்த்தமே பொருத்தம்.

அய்யர்: அவைகளுக்காகத்தானே......

பயனற்றதால் வணங்கப்படுகிறது



ஒருவன்: எல்லாப் பக்ஷிகளும் இருக்க, ஆழ்வார் (பருந்து) மாத்திரம் வணங்கப்படுவதற்குக் காரணம் தெரியுமா?

பிறன்: தெரியும்! அது கறிக்கு உதவாது.

ஒரு விஷயம் புரிந்தது



சோமசுந்தரக் கடவுள் மதுரையில் கல் யானையைக் கரும்பு தின்னச் செய்தார். இப்போதும் பார்ப்பனர் கல் சாமிகளைச் சோறு தின்னச் செய்கிறார்கள். இவ்விரு விஷயத்தில் ஒரு விஷயம் புரிந்து போயிற்று. இந்த அய்யர், சாமி தின்பதாகத் தாமே அடித்துக் கொண்டு போகிறார் _ அந்த அய்யர், கரும்பைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு போனதை யாரும் பார்த்ததில்லை.

சர்வம் விஷ்ணுமயம்



பாகவதர்: அப்பா, சர்வம் விஷ்ணுமயம் ஜகத் அல்லவா?
சிஷ்யன்: பன்றி மலந்தின்னுவதை, நான் வராகவதாரம் பூமியைப்

பெயர்த்தெடுப்பதாகவே காண்கிறேன். மச்சாவதாரத்தைத்தான், என் வயிற்றில் செலுத்துகிறேன்!

சாமிக்குக் காது செவிடு



அன்பர்: செட்டிமேல் சாமி வந்திருக்கிறது. நீ நினைத்திருப்பதைக் கேள்.

கேட்க வந்தவர்: சுவாமி! நான் ஒன்றை நினைத்து வந்திருக்கிறேன்.

சாமி: என்ன?

கேட்க வந்தவர்: பணம் காணாமல் போயிற்று. எப்போது அகப்படும்?

சாமி: சீக்கிரம் சௌக்யமாய்விடும்.

கேட்க வந்தவர்: இதென்ன அய்யா, சாமி இப்படிச் சொல்லுகிறதே?

அன்பர்: அவருக்குக் காது செவிடு! நீ கூவிக் கேட்கவில்லை.

தமிழ் ஓவியா said...

பெரியாரின் அதிர்ச்சி வைத்தியம்


மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே?

தேசியக் கட்சிகள் எனச் சொல்லப்படுகிற காங்கிரஸ், பா.ஜ.க., பொதுவுடைமைக் கட்சிகள் ஆகியவை, மாநிலங்களின் தனித்தன்மையை மறுக்கக் கூடியவையாக உள்ளன. அதுதான் இந்தத் தேசம் வளராமல் போனதற்கும் அந்தக் கட்சிகள் வளராமல் போனதற்கும் காரணம். தேசிய இனங்களின் சிக்கலை அவை அங்கீகரிக்காமல், அதற்கான தீர்வையும் அலட்சியப்படுத்துகின்றன. மாட்டு இறைச்சியைப் பயன்படுத்தத் தடை விதிப்பது இந்திய தேசத்தின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது போன்றது. கொழுப்பா தின்ற கூர்ம்படை மழவர் என, சங்க இலக்கியப் பாடல் சொல்கிறது.

கொழுப்பான பசு மாட்டைத் தின்றதற்கான சாட்சி வார்த்தைகள் இவை. இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கான புரதம், மாட்டு இறைச்சியில் இருந்துதான் கிடைக்கிறது. அதற்குத் தடைவிதிப்பது, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கை.

ஜாதிக் கட்டமைப்பின் பலம் என்ன...

அது ஒழிய என்ன செய்ய வேண்டும்? ஜாதி என்பது என்ன?

எதுவரை நீங்கள் திருமண உறவு வைத்துக் கொள்ளலாமோ... அதுதான் உங்கள் ஜாதி எல்லை. அந்தத் திருமண உறவுக்கான கட்டமைப்புதான் ஜாதியின் பலம். ஜாதிகள் ஒழிய வேண்டும் என்பது நமது விருப்பம். ஆனால், அது அவ்வளவு எளிது அல்ல என்பதுதான் அடிமட்ட யதார்த்தம். நம்பிக்கையான, சுயநலமற்ற தலைவர்கள் நம்மைத் தொடர்ந்து வழிநடத்தாதது ஒரு குறை. ஜாதியை ஒழிக்க, தொடர்ச்சியான போராட்டம் தேவை. பெரியாரின் அதிர்ச்சி மதிப்பீடுகள் அதைச் செய்தன. ஆண்தான் தாலி கட்ட வேண்டுமா? ஆணுக்கு, பெண் தாலி கட்டட்டும் என்றார். அப்படித்தான் சில திருமணங்-களை அவர் நடத்திவைத்தார். அவருடைய உறுதி, அவர் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை எல்லாம் அவரை ஏற்றுக்-கொண்டு, அவரைப் பின்தொடரவைத்தன. மன உறுதிமிக்கவராக இருந்தார்.

அவருடைய அதிர்ச்சி வைத்தியங்களுக்கு ஆதரவு இருந்தது. பெரியாரின் கட்டளையை ஏற்று, தேவதாசிப் பெண்களை பல பெரிய மனிதர்கள் மணந்தனர்.

குத்தூசி குருசாமி, பூவாலூர் பொன்னம்-பலனார், நெ.து.சுந்தரவடிவேலு போன்ற பெரியவர்கள் எல்லாம் தேவதாசிஇனப் பெண்களை மணந்தனர். திருமண உறவுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஒரு ஜாதியை, திருமண உறவுக்குள் மாற்றியதில் பெரியாருடைய பங்களிப்பு எத்தகையது என்பதைப் பாருங்கள். அப்படியான தொடர்ச்சியான அதிர்ச்சி மதிப்பீடுகளை முன்னெடுத்துச் செல்வதில், நம் தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, ஓட்டுக்காக ஜாதியை வளர்த்தார்கள்.

நன்றி: ஆனந்தவிகடன், 8.4.2015

தமிழ் ஓவியா said...

மான்கறி சாப்பிட்ட ராமனும், சீதையும்


- கோவி.லெனின்



நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் கறி சாப்பிடக் கூடாதுன்னு தடை இருக்கே, அப்போது எங்கே போனார்கள் இவர்கள். வீரமணி போன்றவர்கள் மான்கறி விருந்து நடத்துவார்களா? என்று கேட்டிருக்கிறார் ஒரு அக்கிரகாரத்து அரை வேக்காடு.

இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களான ஏழை, எளிய மக்களின் உணவான மாட்டுக்கறியை, மத வெறியின் அடிப்படையில் தடைசெய்யும் போக்கையும், அரிய உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மான்கறி தடை செய்யப்பட்டிருப்பதையும் ஒன்று போல காட்டும் புரட்டு இது என்பது சற்றேனும் சிந்திப்போருக்குத் தெரியும்.

எளிய மக்களின் சத்தான உணவு தடுக்கப்படுகிறதே என்ற கவலை நமக்கு! அதனால் மாட்டுக்கறியைத் தடை செய்யக் கூடாது என்கிறோம். எதிர்த்துக் குரல் கொடுக்கிறோம். போராடுகிறோம்!

ஆனால், அப்படி என்ன மான் கறியில் இவர்களுக்குப் பற்று என்று சிந்தித்தால், அப்போது வெளிப்படுகிறது குட்டு!

இந்துத்துவா கும்பலின் இஷ்ட தெய்வங்களான ராமனும், சீதையும் மான் கறியை எப்படியெல்லாம் விரும்பிப் புசித்தார்கள் என்பதை விவரிக்கிறது வால்மீகி ராமாயணம். மாரீசன் என்னும் மாய மானை விரும்பிக் கேட்டாரே வைதேகி. எதற்கென்று நினைக்கிறீர்கள்? தமிழ்ப்பட கதாநாயகிகள் போல கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கவா? அல்ல... அல்ல... அள்ளி எடுத்து அதன் கறியைச் சுவைப்பதற்காக!

கங்கைக் கரையிலும், யமுனைக் கரையிலும் ஏராளமாக மது உண்டும், புலால் புசித்தும் வாழ்ந்த சீதை விரும்பிய மான் கறியைக் கொண்டு வருவதற்காகத் (அதனால் பின் விளைவுகள் வரும் என்று தெரிந்தும்) தான் மானைத் தேடிச் சென்றான் ராமன் என்று வால்மீகி ராமாயணத்திலிருந்து (3.42.21) ஆதாரம் காட்டுகிறார் The Righteous Rama நூலின் ஆசிரியர் ப்ராக்கிண்டன்.

அது மட்டுமா, ராமனும் லட்சுமணனும் எந்தெந்த வகை மான்களைப் புசித்தனர் என்று வால்மீகி காட்டுகிறார் தெரியுமா? முதன்மையான நான்கு மான் இனங்களிலிருந்து ஒவ்வொன்றையும் வேட்டையாடிப் புசித்தனர். (அயோத்தியா காண்டம் 2 _- 52 _- 102).



Having hunted there four deer, namely Varaaha, Rishya, Prisata; and Mahaaruru (the four principal species of deer) and taking quickly the portions that were pure, being hungry as they were, Rama and Lakshmana reached a tree to take rest in the evening.

Alternative translation: Being famished, Rama, Lakshmana hunted and killed a boar, a Rishya animal (a white footed male antelope), a spotted deer and a great deer with black stripes and quickly partaking the pure meat reached a tree by the evening to spend the night.

யமுனை நதிக்கரையில் ராமனும் லட்சுமணனும் மான் கறி சுவைத்ததைச் சொல்லுகிறது அயோத்தியா காண்டம் (2 - _55_-32/33)



Translation: Thereafter having travelled only a couple of miles the two brothers Rama and Lakshmana killed many consecrated deer and ate in the river-forest of Yamuna.

Alternative translation: After travelling a distance of two miles further in the forest on the bank of Yamuna, those two brothers slew deers worthy for sacrifice for food and ate them. Ayodhya Kanda 2-55-32/33

காட்டியிருப்பது ஒரு சில எடுத்துக்-காட்டுகள் மட்டுமே! அவர்கள் குடித்துக் களித்த மது வகைகள் பற்றியும், உண்டு மகிழ்ந்த கறி வகைகள் பற்றியும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.

இப்படி காவிக்கூட்டம் போற்றும் கடவுளர் சாப்பிட்ட மான் கறியைத் தடை செய்தால் அவர்களுக்குக் கோபம் வருவது இயற்கைதானே!

மான் கறி தடை செய்யப்பட்டிருப்பதில் மாற்றுக் கருத்து அக்கிரகாரத்தில் இருக்குமாயின் அவர்கள்தானே அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

கடவுளின் உணவு தடுக்கப்படுமானால் அதற்காகக் கொந்தளித்து அவர்தானே மான் கறி விருந்து நடத்த வேண்டும்? எதிர்பார்க்கிறோம்....

ஹெச்.ராஜா நடத்தும் மான் கறி விருந்து அறிவிப்பை!

தமிழ் ஓவியா said...

வாழ்வில் உயர்வுகொள்!


- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்



சுயமரியாதைகொள் தோழா! - நீ
துயர்கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே! - (சுய)
உயர்வென்று பார்ப்பனன் சொன்னால், - நீ
உலகினில் மக்கள் எலாம்சமம் என்பாய்; துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் என்று
சொல்லிடுந் தீயரைத் தூவென்று உமிழ்வாய்!
அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்
ஆட்பட்டிருப்பவர் என்று சொல்வோரைப்
பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர் பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு! (சுய)

சேசு முகம்மது என்றும்! - மற்றும்
சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்த னென் றும்,
பேசி வளர்க்கின்ற போரில் - உன்
பெயரையும் கூட்டுவர் நீஒப்ப வேண்டாம்! காசைப் பிடுங்கிடுதற்கே - பலர்
கடவுளென் பார்! இரு காதையும் மூடு!
கூசி நடுங்கிடு தம்பி! - கெட்ட
கோவிலென்றால்ஒரு காதத்தில் ஓடு! (சுய)

கோவில் திருப்பணி என்பர் - அந்தக் கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு
வாயிலில் வந்துனைக் காசு கேட்கும்
வஞ்சக மூடரை மனிதர் என்னாதே!
வாயைத் திறக்கவும் சக்தி இன்றி
வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட் கேநீ தாயென்ற பாவனை யோடும் - உன்
சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும். (சுய)
கடவுள் துவக்கிக் கொடுத்த - பல
கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள்,
கடவுள் புவிக்கவ தாரம், - அந்தக் கடவுளின் தொண்டர்கள், லோக குருக்கள்,
கடவுள் நிகர் தம்பிரான்கள் - ஜீயர்,
கழுகொத்த பூசுரர், பரமாத்து, மாக்கள்
கடவுள் அனுப்பிய தூதர் - வேறு
கதைகளி னாலும் சுகங்கண்டதுண்டா? (சுய) அடிமை தவிர்ந்ததும் உண்டோ? - அன்றி
ஆதிமுதல் இந்தத் தேதி வரைக்கும்,
மிடிமை தவிர்த்ததும் உண்டோ? - அன்றி
மேல்நிலை என்பதைக் கண்டதும் உண்டோ?
குடிக்கவும் நீரற் றிருக்கும் - ஏழைக் கூட்டத்தை எண்ணாமல்; கொடுந்தடி யர்க்கு
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி!
வசம்கெட்டுப் போனது நமதுநன்னாடு. (சுய)

உழைக்காத வஞ்சகர் தம்மை - மிக
உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ? விழித்திருக் கும்போதி லேயே - நாட்டில்
விளையாடும் திருடரைச் 'சாமி'என் கின்றார்!
அழியாத மூடத் தனத்தை - ஏட்டில்
அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை
முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர் முதலெழுத்தோதினும் மதியிருட் டாகும்! (சுய)

--------------------------

40,600 பாடல் வரிகள்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மொத்தம் 40 ஆயிரத்து 600 பாடல் வரிகள் பாடியுள்ளார். அவை கீழ்க்காணும் வகையின என்று ஆய்வாளர்கள் ஆய்ந்து அறிவித்துள்ளனர்.

அகவல் பாக்கள் - 12,808 அடிகள்
விருத்தப் பாக்கள் - 12,283 அடிகள்
சிந்து இசைப்பாக்கள் - 8,705 அடிகள்
வெண்பாக்கள் - 6,086 அடிகள்
பிறவகைப் பாக்கள் - 718 அடிகள்
_ _ _ _ _ _ _ _ _

40,600 அடிகள்
_ _ _ _ _ _ _ _ _

(தகவல்: சு.அறிவுக்கரசு எழுதிய இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார் நூலிலிருந்து...)

தமிழ் ஓவியா said...

அது என்ன வீரத் துறவி?

குடந்தை கருணா

அது என்ன வீரத் துறவி? ஒன்று வீரனா இருக்க வேண்டும் இல்லையென்றால் துறவியாக இருக்க வேண்டும்; இரண்டும் சேர்ந்தா எப்படி துறவியாக இருக்க முடியும்?

சரி; அப்படி என்னத்தை இந்த ராம கோபாலன் செஞ்சார்னு இவருக்கு இப்படி ஒரு பட்டம்?

அன்னைக்கு, விடுதலை ஆசிரியர் வீரமணியை பேட்டி எடுத்த தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே, தன்னோட முன்னுரையில், பெரியார், அண்ணா, கலைஞர் அப்படின்னு பட்டம் கொடுத்துக்கறது திராவிடர் இயக்கத்தோட வேலை, அப்படின்னு சொன்னாரே.

அப்ப இந்த ராமகோபாலய்யருக்கு வீரத்துறவின்னு பட்டம் இருக்குதே; அதை யாருய்யா கொடுத்தது: அப்புறம், இந்த காஞ்சி மடத்திலேர்ந்து ஓடிப்போய், அப்புறம் கொலை வழக்குலே மாட்டிக்கிட்டு, ஜெயிலுக்கும், பெயி லுக்கும் அல்லாடுன, ஜெயேந்திர சரஸ்வதிக்கு, லோக குருன்னு எவன்யா பட்டம் கொடுத்தான்?

இன்னொரு கார்ப்பரேட் பிராடு சாமியார் ரவி சங்கர், அந்தாளுக்கு சிறீ சிறீ சிறீ அப்படின்னு மூணு தடவை போட்டுக்கிறானே, அது என்ன அர்த்தம்?

சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த ராம கோபாலன், சவால் விடுறார். யாருக்கு, 97 சதவிகிதம் உள்ள மக்களுக்கு. வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்வும், மாட்டிறைச்சி விருந்தும் ஏற்பாடு செய் ததை எதிர்த்து வீராவேசமா அறிக்கையெல்லாம் விடுறார்.

என்னய்யா செய்ய போறன்னு கேட்டா? இப்ப சொல்ல மாட்டேங்கிறார். இது தான் வீரத் துறவி?

ராம கோபாலய்யர், அறிக்கையிலே, மாட் டிறைச்சி பத்தியே பேச மாட்டேங்கிறார். தாலி அகற்றுவதை பற்றித்தான் பேசுறார். ஏன்னா, மாட்டிறைச்சி எப்படி சாப்பிடலாம்னு கேட்டா, இவா கோஷ்டி, அய்ந்து நட்சத்திர ஹோட்டல்ல போய் எப்படி கறி சாப்பிடறாள்னு மூஞ்சியை கிழிச்சிடுவா;

அப்புறமா, இவாளுக்கு ஆதரவா விவரம் தெரியாத சூத்திர முண்டங்கள் ரகளை பண்ணனுங்கறதுக்கு கிடைக்காம போயிடும். அதான், மாட்டுக்கறி விஷயத்தை கம்கமா வச்சுக் கிட்டு, தாலி அகற்றல் நிகழ்ச்சியை பேசினா, நம்ம சூத்திரர்கள், கொஞ்சம் பேர் கிடைப்பாங்க.

இவ்வளவு தான் மேட்டர். மற்றபடி ராம கோபாலய்யரைப் பார்த்து அவங்க வீட்டிலேயே யாரும் மதிக்கிறது இல்லை. அது ஒரு காமெடித் துறவி.



Read more: http://www.viduthalai.in/page1/99589.html#ixzz3YbhsB5Fu

தமிழ் ஓவியா said...

அன்பார்ந்த பெண்ணுலகமே



ஆபத்து நெருங்குகிறது. மதவாதி களின் பிடியிலே மக்களாட்சி. ஒட்டுமொத்த மக்களின் கருத்துரிமை மறுக்கப்படுகிறது. பேச்சுரிமை ஒடுக்கப் படுகிறது. எழுத்துரிமை நசுக்கப் படுகிறது. தனிமனிதனின் சுயமரியாதை தாக்கப்படுகிறது.

மதத்தின் ஆட்சியிலே ஆரம்ப கட்ட நிலைதான் இது. இன்னும் வளர்ந்தால் பேராபத்தை சந்திக்க வேண்டி வரும். குறிப்பாக பெண்கள் மிகமிக எச்சரிக்கையாகவும், விழிப் போடும் இருக்கவேண்டிய காலமிது. உடல்ரீதியான தாக்குதல்கள் ஒருபுறம், மதரீதியான தாக்குதல்கள் மறுபுறம்.

இரண்டையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் பெண்ணுலகம். இதில் மதரீதியான தாக்குதல்களை பெண்கள் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது

ஏற்கெனவே மதத்தின் பெயராலும் முடை நாற்றமெடுக்கும் மூடத்தனத்தின் மொத்த உருவமாய் பெண்கள். எனவே மதரீதியான தாக்குதலில் பலியாக்கப்படுவோரும் பெண்களே. படித்த பெண் களும் பாமரர்களுக்கு இணையாய் மூடநம்பிக்கை யிலே. எச்சில் இலைமீது உருளுவதும் ,காலில் அணிய வேண்டிய செருப்பை உடல்மீது வைத்துக் கொண்டு தரையில் வீழ்ந்து கிடக்கும் அவலத்தின் உச்சியிலே இன்னமும் பெண்கள்.

கழுதைக்கு திருமணம் செய்ய வேண்டி முன்ன ணியில் பெண்கள்.கழுதையின் கழுத்திலேயும் தாலி ,பெண்கள் கழுத்திலேயும் தாலி.சூடு சுரணையற்ற நிலையில் பெண்ணுலகம். தாலி அணிவதும் ,அணியாமல் இருப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை.அதைப்பற்றி விவாதம் செய்யவும் விமர்சிக் கவும் பெண்களுக்கு முழு உரிமை உண்டு என்பதை அனைத்து பெண்களும் உணர வேண்டும்.

அதை சமூகத்திற்கு உணர்த்தவேண்டிய கடமை பெண் களிடம் தான் உள்ளது.கழுதையின் கழுத்தையும் நாயின் கழுத்தையும் அலங்கரிக்கும் தாலி பெண்களுக்கு தேவையா? சிந்தித்து பாருங்கள். பகுத்தறிவுக் கொள்கையை ஏற்று உள்ளவர்களும், மூடநம்பிக்கை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துடைய வர்களும் பெருந்திரளாக போராட களம் இறங்கவேண்டிய நேரமிது.

இல்லையென்றால் எத்தனையோ போராளிகளும் புரட்சியாளர்களும் பாடுபட்டு கிடைத்த பெண்ணுரிமை களை மதத்தின் கீழே தொலைக்க வேண்டி வரும். மதவாதிகள் ஆன்மீகத்தின் மீதான பாசிசத்தை பலமாக எழுப்ப துடித்துக் கொண்டுள் ளனர். அதை அனுமதித்தால் முதலில் பாதிக்கப் படுவது பெண்கள் தான் என்பதை பெண்கள் உணர வேண்டும்.

சமூகத்தில் சரிபாதியாய் உள்ள பெண் இனத்தை ஒரு பார்வையாள ராக வைத்துக் கொண்டு ஒரு போராட்டத்தில் ஈடுபட்டால் அந்த போராட்டம் வெற்றி பெறாதுஎன்ற தந்தை பெரியாரின் கூற்றை நினைவுகொள்வோம். நாடு தழுவிய வட்டார மாநாடுகளை தமிழர் தலைவர் அறிவித்துள்ளார்.

பெண்கள் பெருந் திரளாக பங்கேற்போம். ஒவ்வொரு மேடையிலும் பகுத்தறிவு பரப்ப பெண்களின் பங்கேற்பு இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களுக்கு எதிராக பெண்களே போராட வேண்டும்.இது நம் அடுத்த தலைமுறைக்கான ஒரு பாதுகாப்புப்பணி.

ஆரோக்கியமான வாழ்வோடு மத ஆளுமை யில்லாத ஒரு உண்மையான ஒரு சுதந்திரத்தை நம் அடுத்த தலைமுறை அனுபவிக்க போராட வேண்டியது நம் கடமை.

- ந.தேன்மொழி, குடியாத்தம்



Read more: http://www.viduthalai.in/page1/99587.html#ixzz3YbkW2tT5