Search This Blog

28.4.15

திராவிடர் கழகத்தை எதிர்ப்போரே - இவற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இந்து மதத்தில் பெண்கள் நிலை



பெண்களின் அந்தஸ்து பற்றி

1.    நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக்காரனாகவாவது ஒரு ஸ்திரியாகவாவது, ஒரு நாலுகால் மிருகமாகவாவது பிறப்பான்.

2.    மனு (இந்துச் சட்டம் செய்தவராய், வேத முறைகளை முதன்முதலில் வெளியிட்டவராய், இன்றைக்கும் மக்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்களைச் செய்தவராய் உள்ளவர்) கூறுவது: ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு அடிமை ஆகியோர் சொத்துக்களை வைத்திருக்க யோக்கியதை அற்றவர்களாவார்கள். அவர்கள் என்ன சம்பாதித்தாலும் அதெல்லாம் அவர்கள் எவர்களுக்கு உரிமையுடையவர்களோ அவர்களைச் சேரும்.

3.    போதாயனர் கூறுவது _: எந்த மனிதனும் பெண்களுக்கு இரவலோ, கடனோ கொடுக்கக் கூடாது; அடிமைகட்கும், குழந்தைகட்கும்கூட ஒன்றும் இரவல் தரக்கூடாது.

4.    மத விதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும்.  _ (சுந்தர காண்டம் 5)
5.    மனு கூறுகிறார்: பகலும் இரவும் மாதர்கள் அவர்களுடைய சொந்தக் காரர்களை அண்டியே இருக்கும்படியாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைக் குழந்தைப் பருவத்தில் தகப்பன்மாரும், வாலிப காலத்தில் புருஷன்மாரும், வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளும் காப்பாற்றுகிறார்கள் _ ஒரு பெண் ஆனவள் ஒருபோதும் சுயேச்சையாயிருக்கத் தகுதியுடையவளல்லள். அவளுடைய வாழ்வு பூராவும் நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ, அலட்சியக் காரர்களாகவோ இருக்கும்படியான மற்றவர்களுடைய இரக்கத்தினால் வாழ்பவளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் அவ்வளவு அற்ப ஜீவர்களாகவே இருக்கிறார்கள்.

6.    உத்தமஸ்திரீக்கு மனுவுரைக்கும் யோக்கியதாம்சமென்னவெனில், அவளுடைய தகப்பன் அவளை எவனுக்குக் கொடுத்திருக்கின்றானோ அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அவனையே அவள் மரியாதை செய்யட்டும்... ஒரு புருஷன் துர்நடத்தையுடையவனாயினும், இன்னொரு மாதினிடம் அன்பு கொண்டவனாயினும், நல்ல தன்மைகளில்லாதவனாயினும், அவனைத் தெய்வம்போலவே கருதுகிறவள்தான் புண்ணிய ஸ்திரீயாவாள். (அத். 5, 154)

7.    மனு, ஒரு மாதானவள், எவ்வளவு நல்லவளாகவும், உத்தமமானவளாகவும் இருப்பினும், அவள் தன் கணவனுடைய குணங்களையுடையவளா கத்தான் இருப்பாள். மேலும் அவர் சொல்லுவது: ஒரு மங்கையானவள் தான் மணம் செய்துகொண்ட ஒரு புருஷன் என்ன குணங்களையுடை யவனாயிருக்கின்றானோ அதே குணங்களையே அவளும் அடை வாள் _ எதுபோலவெனில் கடலில் போய்க் கலக்கிற ஆற்றைப்போல்.
(அத்தியாயம் 9, 22)


8. போதாயனர் உரைப்பது: மாதர்கள் அறிவே இல்லாதவர்கள்: அவர்கள் சொத்துரிமை கொள்ளும் யோக்கியதையற்றவர்கள்.

திராவிடர் கழகத்தை எதிர்ப்போரே - இவற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா?
                      ----------------------------------”உண்மை” ஏப்ரல் 16 30 _2015

32 comments:

தமிழ் ஓவியா said...

தாலி அகற்றிய செயலுக்குப் பதிலடியாம்!

இன்றைய தினமலர் 11ஆம் பக்கத்தில் மேற்கண்ட தலைப்பில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது.

14ஆம் தேதி பெரியார் திடலில் நடந்த தாலியகற்றும் நிகழ்ச்சிக்கு பதிலடி கொடுக்கப் போகிறார்களாம், இதனை செய்யப் போவது அடி யார்கள், பக்தர்கள் கூட்டமைப்பாம்.

சரி... என்ன செய்யப் போகிறார் களாம்? சென்னையில் அடிமைத் தளையாம் தாலியை அகற்றிக் கொண்டவர்களின் கணவன்மார்கள் இறந்து விட்டதாகக் கருதி, வரும் 29ஆம் தேதி திருவண்ணாமலை ரமணாசிரமம் அருகே கருமகாரியம் செய்யப் போகிறார்களாம்.

ஆகா! என்ன பரந்த பெருந் தன்மையான குணம்! தாலியை அகற்றிக் கொண்டவர்களின் துணைவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் - தங்கள் துணைவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் தாலியை அகற்றினார்கள். அதற்கான காரணங் களையும் விளக்கிக் கூறினார்கள்.

தங்களுக்குப் பிடிக்கவில்லை அல்லது சீரணித்துக் கொள்ள முடிய வில்லை என்பதற்காக உயிரோடு இருக்கும் அந்தப் பெண்களின் துணைவர்களை செத்தவர்களாகக் கருதி கருமக் காரியங்களைச் செய் கிறார்களாம்?

உயிரோடு இருப்பவர்களை சாகடிக்கத் துடிக்கும் இந்தப் பக்த கே(கோ)டிகளின் பரந்த உள்ளத்தைக் கவனித் தீர்களா? ஆகா! அதில் எவ்வளவுப் பெரிய மனிதாபிமானம் குடிகொண்டு இருக்கிறது. நாத்திகர் களுக்கு வைத்தியம் பார்க்காதே என்று காஞ்சி சங்கராச்சாரியார், சந்திரசேக ரேந்திர சரஸ்வதி கூறவில்லையா - அத்தகையவர்களின் சீடர்கள் இப்படித் தான் குரூரமாக நடத்து கொள்வார்கள்.

நமக்கு ஒரு சந்தேகம்! இந்து மத சடங்குப்படி, இறந்து போன தந்தைக்கு மகன்தான் கரும காரியங்களைச் செய்வான். அப்படியானால் திருவண் ணாமலையில் கரும காரியங்களைச் செய்பவர்கள் இவர்களுக்குப் பிறந்த வர்களா? (ஆசை வெட்கமறியாது என்பது பழமொழி).

ஆத்மா, மோட்சம், நரகம், மறு பிறப்பு, பிதுர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன் என்று சொல்கிற கருஞ்சட்டைக்காரர்களுக் குக் கரும காரியம் செய்பவர்களை எந்தப் பட்டியிலில் தான் சேர்ப்பது? பக்தி மார்க்கத்தில் கிடந்து உழன்ற ரமண ரிஷியே புற்றுநோய் கண்டுதான் சித்திரவதைபட்டுச் செத்தார். இந்த நிலையில் ரமண ரிஷி ஆசிரமம் அருகில் கரும காரியங்களைச் செய்யப் போகிறார்களாம்.

சரி, கரும காரியங்களை எந்த வகையில் செய்யப் போகிறார்களாம்? 21 பசுக்களுக்கு 21 சாதுக்கள் கொண்ட குழுக்கள் மூலம் பிண்டதானம் வழங்கப்படுகிறதாம்.

எப்படியென்றாலும், பார்ப்பான் வயிற்றில் அறுத்துக் கொட்டும் வேலை மட்டும் தங்கு தடையின்றி நடந்தாக வேண்டும். உயிரோடு இருப்பவர்களுக் குக் கரும காரியம் செய்தால் அந்தப் பாவம் கரும காரியங்களைச் செய்ப வர்களுக்கு வந்து சேரும் என்று இந்து சாஸ்திரங்களில் சொல்லப்பட வில்லையா?

தாலியைப்பற்றி இப்படியெல்லாம் செய்தியை வெளியிடும் தினமலரின், அதே செய்தியில் இன்னொரு தகவ லும் இடம் பெற்றிருக்கிறது (வசதியாக மாட்டிக் கொண்டீர்களா?)

பெண்ணின் கற்புக்குப் பாதகம் ஏற்பட்டால் அவளைக் காப்பாற்றுவ தற்கு அடையாளமாக, காட்டுக்குச் சென்று கொடிய விலங்கைக் கொன்று, அதன் பற்களை எடுத்து வருவதுதான் என்று கூறப்பட்டுள்ளது.
தாலிக்காகத் தாண்டிக் குதிக்கும் த(அ)டியார்களே! நீங்கள் குறிப்பிட் டுள்ள இந்த நிபந்தனையை ஏற்கத் தயாரா?

காட்டுக்குச் சென்று புலியையோ, காட்டு விலங்கையோ கொன்று அதன் பல்லைக் கொண்டு வந்து தாலி கட்டி விட்டு அதற்குப் பிறகு கருப்புச் சட் டைக்காரனுக்குச் சவால் விடுங்கள் - அதுதான் யோக்கியமான செயல்! ஒழுக்கமான செயல்!

கல்யாணம் ஆனவர் பெண் ணென்று மட்டும்தான் தெரிய வேண் டுமா?

ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் என்பது அந்தப் பெண்ணின் தனிப் பட்ட பிரச்சினை; அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப் பதே வக்கிரப்புத்திதானே?

கல்யாணம் ஆகி விட்டது ஓர் ஆணுக்கு என்பதற்கு அடையாளம் வேண்டாமா? அதிகமாக ஊர் சுற்று பவன் பெண்களைவிட ஆண்கள் தானே!

பெண்ணே முன்வந்து தாலியை அகற்றிக் கொள்ளும்போது அதுபற்றிக் கருத்துச் சொல்ல ஆண்களுக்கு உரிமை ஏது? அப்படி சொல்லு கிறார்கள் என்றால் அதற்குப் பெயர் தான் ஆணின் எஜமானத்துவம் அதிகப் பிரசங்கித்தனம் என்பது!

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? ஜாண் பிள்ளையா னாலும் ஆண் பிள்ளை என்கிற ஆண் ஆதிக்கப் புத்தியெல்லாம் ஆழமான குழிக்குப் போய் வெகு நாட்கள் ஆகி விட்டன. ஆண்கள் ஆட்டம் போட வேண்டாம்.

தாலியைக் கட்டுவதே கணவன் இறந்த பிறகு அறுத்து அந்தப் பெண்ணை அவமானப்படுத்துவ தற்குத்தானே! முண்டச்சி என்று முத்திரை குத்தி மூலையில் உட்கார வைப்பதற்குத்தானே! பெத்த பிள்ளை கல்யாண காட்சிகளைக் கூடக் காணக் கூடாது அபசகுனம் என்று காட்டுவ தற்காகத்தானே!

திராவிடர் கழகத் தோழர்கள் வீட்டுத் திருமணங்களில் விதவையர் களை முன்னிறுத்தித் திருமணத்தை நடத்துவதுண்டு என்பது தெரியுமா? விதவையர்க்குப் பூச்சூட்டு விழா நடத்தி வருவதும் திராவிடர் கழகம் என்பது தெரியுமா? ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கொள்ள வேண்டாம் - எச்சரிக்கை

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...

விஜயகாந்துக்கு கி.வீரமணி பாராட்டு

கருநாடகத்தில் அணை கட்டுவதைத் தடுக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பிரதமரை சந்திப்பதற்கான முயற்சியில்

கேப்டன் விஜயகாந்த் ஈடுபட்டு இருப்பது வரவேற்கத்தக்கது

எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு இதுதான் அடையாளம்

தொடரட்டும் இத்தகைய சிறப்பான பணிகள்!

தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டு



கருநாடக மாநிலத்தில் தமிழ்நாட்டைப் பாதிக்கும் வகையில் அணை கட்டப்படுவதைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர் களையும் நேரில் சந்தித்து ஒருங்கிணைத்து பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்துள்ள தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மேற்கொண் டுள்ள முயற்சியைப் பாராட்டி, வரவேற்று இத்தகைய பணிகள் மேலும் தொடர வேண்டும் என்ற வேண்டு கோளையும் விடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், முயற்சி எடுத்து சில தமிழ்நாட்டு மக்கள் நலன், மற்றும் மனித உரிமைகள் பற்றிய பிரச்சினையில், மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு சார்பாக நம் உரிமைகளை வற்புறுத் திட, அரசியல் கட்சித் தலைவர்களை அவரவர்களின் அலுவலகம் (வீடு) முதலியவைகளில் நேரில் சென்று சந்தித்து, மேகதாது அணை கட்டுதல் போன்ற பல்வேறு முக்கிய தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமான முயற்சிகளை கருநாடக மாநிலம் கைவிட வேண்டும் - மக்களின் வாழ் வாதாரம் (மீனவ மக்கள்) உட்பட என்பதை வலியுறுத்து வதற்கு பிரதமரை நேரில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

ஆக்கப்பூர்வமான செயல்பாடு

இது ஒரு ஆக்கப்பூர்வமான நல்ல எடுத்துக்காட்டான செயல்பாடு!

பல்வேறு கட்சிகள், கொள்கைகளால் மாறுபடும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் அவ ருடன் சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. உட்பட அதில் கலந்து கொண்டு, சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒத்துழைத்ததும் வரவேற்க வேண்டிய ஒரு நல்ல முன் மாதிரியான எடுத்துக்காட்டு ஆகும்!

கருநாடகத்தில் முன்னாள் இந்நாள் முதல் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் ஓர் அணியில் - ஓர் குரலில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது; அனுமதி இல்லா மலேயே மேகதாது அணை கட்டுவோம் என்று ஒன்று சேரும்போது - தமிழ்நாட்டு (அ.தி.மு.க.) ஆளுங் கட்சி ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து, பொதுப் பிரச்சினைகளை வலியுறுத்திடுவதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறை என்று நம்மைப் போன்ற பலரும் பலமுறை தமிழக அரசுக்கு, முன்னாள், இந்நாள் முதல் அமைச்சர் களுக்குச் சுட்டிக் காட்டிய போது, அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே சென்றது.

எதற்கும்தானே தான் என்ற பெருமையை ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்ற பிடிவாத பேராசை காரணமாக, ஆளுங் கட்சி செய்யத் தவறியதை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்கள் செய்துள்ளார்.

எதிர்க்கட்சி என்பது என்ன?

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு என்பது ஜனநாயகத்தில் அவருடைய கட்சிக்கு மட்டுமல்லாமல், சட்டமன்றத் தில்கூட மற்ற அனைத்துக் கட்சிகளின் உரிமைக் குரலாய் செயல்பட வேண்டும் என்பதே ஜனநாயக அரிச்சுவடி (இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்ற மரபும் வழியும் தத்துவமும் ஆகும்).

பா.ஜ.க.வாக இருந்தாலும்...

இவரால் தூதுக்குழுவில் தயங்காமல் இடம் பெற்றுள்ள தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், த.மா.க., புதிய தமிழகம், அய்.ஜே.கே., புதிய நீதிக்கட்சி போன்றவைகளோடு பா.ஜ.க. கூட்டணியில் தற்போது உள்ள சில கட்சிகளும் (பத்து கட்சிகள்) கூட கலந்து கொண்டுள்ளனர்.

பா.ஜ.க.வினர்தான் இந்த ஏற்பாட்டுக்குப் பின்புலமாக உள்ளனர் என்று ஒரு செய்தி வந்துள்ளது.

அப்படியே அது உண்மையாகவே இருந்தாலும் தமிழ்நாட்டு உரிமைப் பிரச்சினைப் பாதுகாப்பில் அனைவரும் ஒன்று சேர்வதோ, முயற்சிப்பதோ, ஆதரவு தருவதோ வரவேற்கத்தக்கதே தவிர, அதில் அரசியல் கொள்கைப் பார்வை நமக்குள் தேவை இல்லை என்பது திராவிடர் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு ஆகும்!

அந்தக் கடமையை சற்று காலத் தாழ்ந்து செய்துள்ள கேப்டன் திரு. விஜயகாந்த் Better Late than Never
என்று ஒரு ஆங்கிலப் பழமொழியின் காலம் தாழ்ந்தாலும் பரவாயில்லை, சரியான முயற்சிதான்.

கேப்டனுக்கு ஒரு வேண்டுகோள்

அவருக்கு நமது அன்பான வேண்டுகோள்.

உங்களை சட்டமன்றத்திற்குள்ளேயும் வெளியும் பல வழிகளில் ஆத்திரமூட்டுவார்கள் பலர். அதற்குப் ஆட்பட்டு விட்டால், அது உங்களின் அரிய பணியின் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி மறைத்து விடும். எனவே, எதிரிகள் வெட்டும் குழியில் விழாமல் எச்சரிக்கை யாய் செயல்பட்டு இலக்கை அடைய இது போன்ற கூட்டு முயற்சிகள் எப்போது எல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அதில் தயங்காமல் ஈடுபடுங்கள். தங்கள் பணி காலத்தால் செய்யப்பட்ட பணி.

ஆளுங்கட்சி செய்யத் தவறியதை எதிர்க்கட்சித் தலைவர் செய்தார் என்ற பெருமை உங்களுக்கு ஏற்படும்; அன்பான வாழ்த்துக்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை,
28.4.2015

தமிழ் ஓவியா said...

நாணயமாய்


வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)



Read more: http://www.viduthalai.in/page-2/100485.html#ixzz3YbVp7cRA

தமிழ் ஓவியா said...

ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கு!

நேற்று நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானத்தை உள்ளிட்டு எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டுள்ளன. இதில் இரண்டாவது தீர்மானம் - இந்தியாவிலேயே மக்கள் கவனத்தை ஈர்த்த திராவிடர் கழகத்தின் கொள்கை தொடர்பான ஒன்றை மய்யப் புள்ளியாகக் கொண்டதாகும்.

முதலாவதாக தாலியை அடிமைச் சின்னமாகக் கருதும் பெண்கள் தாங்களாகவே முன்வந்து தாலியை அகற்றக் கூடியதாகும். இரண்டாவது மாட்டுக்கறி உண்ணும் உரிமையை நிலை நாட்டிக் கொள்வதாகும்.

இந்த இரண்டு செயல்களும் திராவிடர் கழகத்தின் கொள்கைப் படியும், சட்டப்படியும் மிகவும் சரியான தாகும்; இந்த இரண்டும்கூட - பொது இடத்தில் நடத்தப் பட்டவையும் அல்ல; பெரியார் திடலுக்குள் நடத்தப் பட்டதாகும். இதில் அரசோ, காவல்துறையோ தலை யிடுவதற்கு எந்தவித அடிப்படையும் கிடையாது, கிடையவே கிடையாது.

யாரோ சிலர் இந்த நிகழ்ச்சி நடைபெறக் கூடாது என்று புகார் மனு கொடுத்ததற்காக அதனை ஏற்று உயர்நீதிமன்றமும் காவல்துறையும் செயல்படுவதில் எங்கே இருக்கிறது நியாயம்?

திராவிடர் கழகத்தின் கொள்கைகள், செயல்பாடுகள் என்று எவற்றையுமே ஏற்றுக் கொள்ளாத ஓர் இந் துத்துவா அமைப்பு, நீதிமன்றத்திலோ, காவல்துறை யிலோ புகார் கூறுவது எந்த அடிப்படையில் என்பதை சம்பந்தப்பட்ட நிருவாகங்கள் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டாமா?

திராவிடர் கழகம் தன் கொள்கையின் அடிப்படை யில் செயல்படுகிறது - அதன் கொள்கையைப் பிடிக் காத, ஏற்றுக் கொள்ளாத ஓர் இந்துத்துவா அமைப்பு அதன் கொள்கைப்படி செயல்படுவதாகவே வைத்துக் கொள்வோம்.

நீதிமன்றமோ, காவல்துறையோ என்ன செய்திருக்க வேண்டும்? அவரவர் கொள்கையின் அடிப்படையில் பிரச்சாரம் செய்வதும், செயல்படுவதும் - அவரவர் களுக்கான உரிமை; இதில் ஒருவர் மற்றொருவர் செயலை நடத்தக் கூடாது என்று சொல்லுவதற்கு உரிமை கிடையாது என்ற நிலைப்பாட்டைத்தானே எடுத்திருக்க வேண்டும்?

அதனை விட்டு விட்டு, திராவிடர் கழகத்தின் கொள்கைப் பணியை - அதற்கு எதிர்ப்பான கொள்கை உடைய ஓர் அமைப்பின் புகாரை ஏற்றுத் தடை செய்வது என்றால், நாட்டில் கருத்துரிமையை வெளிப்படுத்துவதற்கு எங்கே இடம் இருக்கிறது?

தமிழ் ஓவியா said...

இந்தத் தவறான முன்னுதாரணம் அனுமதிக்கப்படு மேயானால் இந்த நாட்டில் எந்த ஒரு கட்சியும் ஒரு அமைப்பும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்திட முடியாது.

நாளைக்கே இந்துத்துவா அமைப்புகள் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்திட முன்வரும்போது அந்த நிகழ்ச் சியை நடத்தக் கூடாது என்று திராவிடர் கழகம் புகார் கொடுத்தால், அதனை நீதித்துறையும், காவல்துறையும் ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்?

இந்துத்துவா அமைப்பு நடத்தும் அந்த நிகழ்ச்சியைத் தடை செய்துதானே ஆக வேண்டும். அதே போல அரசியல் கட்சிகள் எதிரும் புதிருமாக இருக்கும் நிலை யில், அவரவர்களும் தங்களுக்கு எதிரான அமைப் புகள் ந;டத்தும் நிகழ்ச்சியைப் பற்றிக் குறை கூறி தடுக்கச் சொன்னால், அதனை நீதிமன்றமும், காவல்துறையும் ஏற்றுக் கொள்ளுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீதிமன்றமும், காவல் துறையும் பதில் சொல்லியாக வேண்டாமா?

இந்த வகையில் சிந்திக்கும் பொழுதுதான் திராவிடர் கழக விடயத்தில் நீதித்துறையும், காவல்துறையும் எப் படிப்பட்ட தவறினைச் செய்திருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்த நிலையில் தான் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு, இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலும், நீதிமன்றம் வாயிலாகவே தீர்வு காண முன்வந்துள்ளது.

திராவிடர் கழகம் மேற்கொள்ளும் அந்த அணுகு முறை திராவிடர் கழகத்துக்கு மட்டுமல்ல; பேச்சுரிமை, கருத்துரிமையை நேசிக்கும் அனைவருக்குமான பிரச்சினைக்குத் தீர்வு காணக் கூடியதாகும்!

திராவிடர் கழகம் கையில் எடுத்துக் கொண்டி ருக்கும் இந்தப் பிரச்சினை - இந்தியக் துணைக் கண்டம் முழுவதுமே எதிரொலித்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் சிங்கப்பூர், மலேசிய நாடுகளில் ஊடகங் களிலும் முக்கியமானதோர் இடத்தைப் பிடித்துள்ளது. தொலைக்காட்சிகளில் விவாதத்துக்கான கருப்பொரு ளாகவும் ஆகி விட்டது.

எந்த நோக்கத்தின் அடிப்படையில் நீதித்துறையோ, காவல்துறையோ திராவிடர் கழகத்தின் செயல்பாட் டுக்கு அனுமதியை மறுத்ததோ, அந்தப் பிரச்சினை உலக மக்களையே கவரும் அளவுக்கு, சர்ச்சை செய்யும் அளவுக்கு மிகப் பரந்த அளவில் அறிக்கைகளை, அதிர்வுகளை ஏற்படுத்தியிருப்பது திராவிடர் கழகத் திற்குக் கிடைத்த மகத்தான வெற்றியே!

திராவிடர் கழகத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தாங்களாகவே முன்வந்து திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஒரே நாளில் இணையதளத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருஞ்சட்டை அணிந்து திராவிடர் கழகத்தின் செயல்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துப் பதிவு செய்திருப்பது தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள், திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பேராதரவு பெற்றவை என்பதற்கான சான்றுகளாகும்;

தனியார் தொலைக்காட்சி ஒன்று எடுத்த கருத்துக் கணிப்பில்கூட 71 சதவீத மக்கள் கழகத்திற்கு ஆதரவாகப் பச்சைக் கொடியைக் காட்டியுள்ளனர்.

இந்துத்துவா சக்திகள் இதற்குப் பிறகாவது புத்திக் கொள் முதல் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கின் கதையாகி விட்டது -இந்துத்துவா சக்திகளுக்கு என்பதுமட்டும் உண்மை.



Read more: http://www.viduthalai.in/page-2/100486.html#ixzz3YbVyefvM

தமிழ் ஓவியா said...

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றும் நிகழ்ச்சி ஏன்?

ஏப்ரல் 14ஆம் தேதி பாபா சாகேப் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களது 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

அந்நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகிய இருபெரும் ஒப்பற்ற புரட்சியாளர்களின் சிந்தனைகளைச் செயலாக்கும் வகையில் விழா நடத்துவதே பொருத்தமாக இருக்கும் என்பதால், இரண்டு முக்கிய நிகழ்வுகளை திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

1. தங்களது கொள்கைக்கும், விருப்பத்திற்கும் மாறாக, திருமணத்தின்போது அணிவிக்கப்பட்ட தாலி என்ற பெண்ணடிமைச் சின்னத்தை, ஜாதியைப் பாதுகாக்கும் சின்னத்தை, தங்களுக்கு உண்டான விழிப்புணர்வு, துணிவு, தெளிவு, அச்சமின்மை காரணமாக, அன்றைய நாளில் பெரியார் திடலுக்கு வந்து, அந்நிகழ்வில் தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்வைப் பகிரங்கமாக, மக்கள் முன்னிலையில் நடத்திக் காட்டுவது, இதில் விருப்பமுள்ள தாய்மார்கள், திருமணமானவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற்று வந்து கலந்து கொள்ளலாம் என்று அறிவித்ததற்கிணங்க, ஏராளமான திருமணமான வாழ்விணையர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

எந்தவித நிர்ப்பந்தமோ, கட்டாயமோ அல்லது அவர்களுக்கான லாப நோக்கோ _- இந்த நிகழ்வில் இல்லை.

2. தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கரும், உண்மையான திராவிடர் இயக்கங்களும், கொள்கையாளர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் விரும்பும் புரட்சிகர பெண்ணடிமை ஒழிந்த ஒரு புதிய சமூகத்தின் விடிவெள்ளியாகவே இந்த நிகழ்வு.

இதுபோல தனித்தனியே திராவிடர் கழக மாநாடுகளிலும், கழகப் பிரச்சாரக் கூட்ட மேடைகளிலும் ஆங்காங்கே தாலி அகற்றும் நிகழ்ச்சி நடந்து வந்திருக்கிறது! இது புதுமையும் அல்ல; முதல் தடவையும் அல்ல!

3. இப்போது ஏன் நடத்தப்படுகிறது என்றால், சென்னையில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் தாலி அணிவது பொருத்தமா? என்பதுபற்றி விவாதம் நடைபெறும் என்று அறிவிப்புத் தரப்பட்ட நிலையில், அதற்கு மிரட்டல், எதிர்ப்புக் காட்டினர் ஹிந்துத்துவாவைப் பரப்பும் பல மதவெறிகள் _- காவி அணிந்த அமைப்பினர். பிறகு அடுத்த-கட்டமாக அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் டிபன்பாக்ஸ் வெடிகுண்டை எறிந்து, வெடித்தனர்.

நாங்கள்தான் செய்தோம்; இனியும் இதைவிட அதிகமாகவே செய்வோம் என்று பட்டாங்கமாய் அறிக்கையை அந்த அனாமதேய, பாசிச சமூக விரோதிகள் வெளியிட்டு வருகிறார்கள்.

அவர்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்க வேண்டாமா? தமிழ்நாட்டின் அமைதியைக் குலைத்து, சமூக நல்லிணக்கத்தைப் பாழாக்கிட முயல்கின்றவர்களிடம் அரசு எப்படி நடந்து கொள்கிறது? பாம்புக்கும் நோகாமல் பாம்படிக்கும் கோலுக்கும் நோகாமல் என்றபடி நடந்துகொள்கிறது!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை இத்தகைய அச்சுறுத்தல்களால் பலியாகலாமா?

இந்தக் கருத்து பரவக்கூடாது என்று மிரட்டப்பட்டதன் எதிர்வினையாகத்தான் 14ஆம் தேதி சென்னை, பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அது விருப்பமுள்ள பெண்களின் தனி உரிமை. மற்றவர்கள் கூச்சல் போட என்ன உரிமை உள்ளது?

தாலி என்பதற்கு இவர்கள் கூறும் ஹிந்து மதத்தின் எட்டு வகைக் கல்யாணங்களில் தாலி எங்காவது கட்டாயம் என்றோ, ஆதியில் இருந்த முறை என்றோ காட்ட முடியுமா?

சங்க இலக்கியத்தில்கூட அகநானூறு இலக்கியத்தின் இரண்டு பாடல்களில் அக்கால மணமுறைபற்றி உள்ளனவே, அந்த முறையில் இந்தத் தாலி கட்டும் பழக்கம் உண்டா? (அ) பழைமையில் இருந்தது என்றுகூட வாதத்திற்கு ஒப்புக்கொண்டால்கூட, முந்தைய பழைமை முறைகளை எல்லா ஹிந்துத்துவா வீட்டுப் பெண்களும், தூண்டிவிடும் பார்ப்பனர்களும் இன்று பின்பற்றுகிறார்களா?

பார்ப்பன விதவைகளை மொட்டைப் பாப்பாத்திகளாக்கி - வெள்ளைச் சேலையில் காட்சியளிக்க வைத்தனரே, அது இன்று உண்டா?

புனிதத்தைத் தேடும் இந்தப் புரட்டர்கள் அங்கே போய் எதிர்ப்புக் காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினரா?

தமிழ் ஓவியா said...

பொட்டும், பூவும் வைத்துக்கொள்ளும் கணவனை இழந்த பெண்களின் முற்போக்கு மனிதநேய சிந்தனைகளை, செயற்பாடுகளை எதிர்த்து கிளர்ச்சியா செய்தனர்?

சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதிய இரண்டு பார்ப்பன நீதிபதிகள், நாரதர், பராசரன், யாக்ஞவல்கியர் போன்றவர்களின் பல சுலோகங்களைக் காட்டி, சப்தபதிபற்றித்தான் கூறினார்களே தவிர, தாலி கட்டாயம் ஹிந்து திருமணத்திற்கு என்று கூறவில்லையே!

விதவை மறுமணம் வந்ததே, அதை எதிர்த்தனரா?

இன்னமும் பெண்களுக்கு 9 வயதுக்குள் திருமணம் பால்ய விவாகம் செய்துவிட வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார்கள் கூறுகிறார்களே, அதைப் பகிரங்கமாகச் செய்தால், தண்டனை கிரிமினல் குற்றம் என்று உள்ளதே!

அதை எதிர்த்து இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரிகள் குரல் கொடுப்பார்களா? சட்டத்தை எதிர்த்து புனிதம், மத ஆச்சாரம் கெட்டுவிட்டது என்று கூறுவார்களா?

இன்னும் சில அரைவேக்காடுகளும், புதிதாக தமிழ்த் தேசிய வியாதிகளும் தமிழன் வீரத்தின் அடையாளம் என்று கூறி, ஆகா, தாலியை எதிர்ப்பதா? என்று உளறுகிறார்களே, அந்த வீரர்கள் திருமணத்திற்குத் தாலியை நகைக் கடைகளில் வாங்குகிறார்களா? அல்லது காட்டிற்குச் சென்று புலியோடு போராடி, சாகடித்துப் புலிப் பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து வீரத்தின் அடையாளம் இதோ என்று கட்டுகிறார்களா?

அந்த நிபந்தனை இன்று வைக்கப்பட்டால், திருமணமே வேண்டாம் என்றுதானே ஆண்கள் ஓடி ஒளிவார்கள்.

எனவே, ஒத்த கருத்தாளர்கள் அனைவரும் வந்து கலந்துகொள்ள அழைப்பை விடுக்கிறோம்.

கருத்து மோதலுக்குத் தயாரா?

கருத்து மோதலுக்குத் தயார்! தயார்!! வேறு மோதலுக்குத்தான் தயார் என்றால், காவல்துறை பார்த்துக் கொள்ளும்; மீறி அவர்களால் முடியாத நிலை ஏற்பட்டால், மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

தயார்! தயார்!!

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

கர்வாப்’பசு’

இவ்விடம் அரசியல் பேசலாம் - கல்வெட்டான்

கர்வாப்’பசு’



தோழர் சந்தானம் தீவிர சிந்தனையில் இருந்தபோது அவரது சலூனுக்குள் தோழர் மகேந்திரன் நுழைந்தார்.

"என்ன தோழர், இந்தியா வேர்ல்டு கப்புல தோற்றதை நினைச்சுக்கிட்டிருக்கீங்களா?" என்று கேட்டுச் சிரித்தார் தோழர் மகேந்திரன்.
"அதை எதுக்கு நான் நினைக்கப்போறே ன். நம்ம மக்களே அதிலிருந்து ஒருவழியா மீண்டு வந்துட்டாங்களே தோழர்"

"அதான் தோழர் எனக்கும் ஆச்சர்யம்! முன்னல்லாம் வேர்ல்டு கப்புல தோத்துட்டு இந்தியா திரும்பினாலே வீட்டு மேல கல்லு விடுவாங்க... இப்பல்லாம் ரொம்பவே அமைதியாயிட்டாங்களே!"

"இப்படியெல்லாம் நடக்கும்னுதான முன்கூட்டியே அய்.பி.எல். போட்டியை வேர்ல்டு கப்பு முடிஞ்சதுமே கொண்டு வந்துட்டாங்க!"

"கிரிக்கெட்னதும்தான் நினைவுக்கு வருது, கிரிக்கெட் பந்து, எந்தத் தோலில் செஞ்சது?" முத்து இடைமறித்துக் கேட்க,

"அது தெரியாதுங்க தோழர், ஆனால் இவங்களுக்கு தோலில் செய்யற பந்தைப் பற்றியோ, பெல்ட்டைப் பற்றியோ, சட்டையைப் பற்றியோ, காலணிகளைப் பற்றியெல்லாம் கவலையில்லை... அதெல்லாம் பிசினெஸ்... இஸ்லாமியர்கள் மாட்டுக்கறி சாப்பிடுறதுதான் உறுத்துது... அதை நேரடியா சொல்ல முடியாமல் கோமாதான்னு சொல்லிட்டு இருந்தவிங்க இப்போ பாரதமாதான்னே சொல்லத் தொடங்கிட்டாங்க!" என நீண்ட விளக்கமளித்தார் தோழர் மகேந்திரன்.

"அதுசரி, நீங்க என்ன தீவிரமா சிந்திச்சுக்-கிட்டிருந்தீங்கன்னு சொல்லலயே? என தோழர் சந்தானத்திடம் கேட்க,

"மத்தியிலிருக்கும் பி.ஜே.பி.க்காரங்க கட்சி நடத்துறாங்களா இல்லை அழகிப் போட்டி நடத்துறாங்களான்னுதான் யோசிச்சுக்கிட்டிருந்தேன்!"

"ஏன் இப்போ திடீர் குழப்பம்?" என தோழர் மகேந்திரன் கேட்க,

"பின்ன என்னங்க, மத்தியிலிருக்கும் இணை அமைச்சர் ஒருத்தரே என்னவோ நாலாந்தர பேச்சாளர் மாதிரி சோனியாகாந்தியோட நிறத்தைப் பற்றிக் கிண்டலடிக்கிறாரு. அந்தக் கிண்டலில்கூட, முகப்பூச்சு கிரீம் விளம்பரக் கம்பெனிகள் சொல்ற அதே சிவப்பழகு கான்செப்ட்டைத்தான் சொல்றாரு! அந்தப் பக்கம் என்னடான்னா கோவா முதலமைச்சர், போராட்டம் பண்ற நர்சுங்களைப் பார்த்து, இப்படி வெயிலில் போராட்டம் பண்ணினால் நிறம் கறுத்திடுவீங்-கன்னு அட்வைஸ் பண்றாரு! பொறுப்பான பதவியிலிருந்துக்-கிட்டே பெண்களை இவ்ளோ கேவலமா கமெண்ட் பண்ற இவங்கதான் நம்ம எல்லோருக்கும் கலாச்சாரத்தைப் பற்றி கிளாஸ் எடுக்குறாங்க! ரொம்பக் கொடுமையா இல்ல?!"

தமிழ் ஓவியா said...

"சரியாச் சொன்னீங்க தோழர்! இதுல உச்சபட்சக் காமெடி என்னன்னா, நம்ம உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வங்காள தேசத்துக்கு மாடுகள் கடத்தப்படுவதைத் தடுக்கணும். அப்படித் தடுத்தால் வங்காளதேச மக்கள் மாட்டுக்கறி சாப்பிட முடியாமல் சைவத்துக்கு மாறிடுவாங்கன்னு கல்யாணத்த நிறுத்த சீப்பை ஒளிச்சு வச்ச கதையா பேசியிருக்கறதைப் பார்த்தீங்களா?"

"இப்படியெல்லாம் மாடுகளுக்கு மரியாதை தர்ற தேசம், மனிதர்களை மாட்டைவிடக் கேவலமா நினைக்குதே சார்" என்றார் முத்து.

"ஆமாம் தோழர். என்னவோ காக்கா குருவியைச் சுடுற மாதிரி செம்மரம் கடத்துனதா சொல்லி, நாடகமாடி, 20 தமிழர்களைச் சித்ரவதை செய்து கொன்னு போட்டிருக்காங்க. இன்னொரு பக்கம், போலீஸ் காவலில் இருந்த அய்ந்து இஸ்லாமியர்களை போலி என்கவுண்டர்ல போட்டுத் தள்ளியிருக்காங்க. ஆனால் இதைப் பத்தி மத்திய அரசு எதுவுமே சொல்லக் கிடையாது."

"உண்மைதான் தோழர். கொல்லப்பட்ட இருபது மனிதர்களோட சேர்த்து இரண்டு பசு மாட்டையும் கொன்னிருந்தால் வடநாட்டு ஊடகங்கள் அனைத்தும் இந்நேரம் கொந்தளிச்சிருக்கும்! சோறு தண்ணியில்லாமல் விடியவிடிய விவாதம் பண்ணியிருப்பாங்க! பிரதமர் மோடியே தன்னோட சுற்றுப்-பயணத்தை ஒத்திவச்சுட்டு அந்த இடத்தைப் பார்வையிட வந்தாலும் வந்திருப்பார். அட்லீஸ்ட் ப்ளூ கிராஸ் அமைப்பாவது கேள்வி எழுப்பியிருக்கும். மனிதனுக்கு ப்ளூ கிராஸ் என்ன, சமயத்துல ரெட் கிராஸ்கூட உருப்படியா ஒன்னும் பண்றதில்ல!"

தமிழ் ஓவியா said...

"இதுல நம்ம தமிழக அரசின் கள்ளமவுனம் தான் ரொம்பக் கொடுமை தோழர். ஆந்திர போலீசோட போலி என்கவுண்டர் பற்றிக் கேள்வியெழுப்பாமல், கொல்லப்பட்டவங்களுக்கு நிவாரணத்தை மட்டும் கொடுத்துட்டு பிரச்சினையை அப்படியே அமுக்கப் பார்க்குறாங்க."

"பின்ன, இந்த மாதிரி போலி என்கவுண்டர் பண்றதுல நம்ம தமிழ்நாடும் சளைச்சதா என்ன? திருடனுக்குத் தேள் கொட்டின கதைதான்"

"இன்னொரு பக்கம் என்னடான்னா மொத்த அமைச்சரவையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா புதுசுபுதுசா வேண்டுதல் வச்சு, முன்னாள் முதல்வரை விடுதலை செய்ய வைக்கிறதுக்காக இல்லாத கடவுளை டார்ச்சர் பண்ணிக்கிட்டிருக்காங்க!"

"மக்கள் இதையெல்லாம் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிட்டாங்க! ஜெயா டி.வி. முழுக்க முழுக்க வேண்டுதல் டி.வி.யாவே மாறிப்போயிடுச்சே!"

"ரொம்ப வேதனையான செய்திதான் தோழர். அதேபோல இப்பல்லாம் வடநாட்டு ஊடகங்களைப் போல நம்ம ஊர் ஊடகங்களும் மத்திய அரசுக்கும் இந்துத்துவாவிற்கும் ஜால்ரா அடிக்கப் பழகிடுச்சுங்க தோழர்!"

"அந்த தமிழ் தனியார் தொலைக்காட்சி பேட்டியைப் பத்திதான சொல்றீங்க? அரைகுறைகளை வைத்துக் கேள்வியெழுப்ப வைக்கிறதும், கேள்விகளுக்குச் சரியான பதிலடி கொடுத்ததும், வேறவழியில்லாமல், என்னவோ ஷகீலா படத்துல பிட்டு சேர்க்குற மாதிரி ஆதாரம்ங்கற பெயரில் தவறான செய்திகளைத் திரிச்சிச் சொல்றதுமா மீசையில் மண் ஒட்டாத கதைதான் போங்க!"

அப்போது இடைமறித்த முத்து, "சார், இந்தப் பசுமாட்டைக் கொல்லக்கூடாதுன்னு தடை பண்ணி வீம்பு பண்றதை முறியடிக்கணும்னா ஒரு சூப்பர் அய்டியா இருக்கு சார்! சொன்னால் சிரிக்கக்கூடாது!"

"சரி, தயங்காமல் சொல்லுங்க. சிரிப்பு வந்தால் சிரிப்போம். அதிலென்ன தப்பு!"

இந்தியப் பசு மாடுகளெல்லாம் வெளிநாட்டு மிலேச்ச மாடுகளோட கலந்ததனால, எல்லாமே மதம் மாறிடுச்சு. அதனால நீங்க கோபப்பட உரிமையில்லைனு சொல்லிட்டா என்ன? பசு மாடுகளையும் தாய்மதம் திருப்ப வர்றாங்களான்னு பார்ப்போம்!"

"ஹஹஹ! முத்து உங்களுக்கு செம நகைச்சுவை உணர்வுதான்! கர்வாப்சி _- யை கர்வாப்பசுனு பேரு வச்சி தாய்மதம் திருப்புற சடங்கு நடத்துறவங்களை ஓவர்டைம் வேலை பார்க்க வச்சிடுவீங்க போல!" எனச் சொல்லி அனைவரும் சிரித்தனர்.

"இப்போ வந்த பத்திரிகைகளின் கருத்துக்கணிப்பைப் பார்த்திங்களா? இந்த 300 நாள் ஆட்சியில மோடியோட செல்வாக்கு, மக்கள் மத்தியில சரிஞ்சிடுச்சாம்! விளம்பர டீம் சரியா வேலை செய்யல போல!"
"புதுசா கல்யாணமானவங்களுக்கு ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்னு சொல்ற மாதிரி, புது அரசாங்கத்திற்கு மோகம் முன்னூறு நாள் போல! ஹஹஹ" என்று சொல்லி தோழர் சந்தானம் சிரிக்க, அனைவரும் உடன் இணைந்து கொண்டார்கள்!

தமிழ் ஓவியா said...

ஊன்றிப் படிக்க உண்மையை உணருக!


வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்



தெய்வம் தெய்என் கிளவி கொள்ளலும் கோறலும் என்பதொரு நூற்பா பிங்கலந்தைப் பழம் பதிப்பில் காணப்பட்டது.

இதே நூற்பா தெய்யென் கிளவி கோறலும் தெய்வமும் என்று வேற்றுமையுடன் வேறு பதிப்பில் காணப்படுகின்றது. ஆதலின், தெய் என்பதற்குக் கொல்லுதல், தெய்வம் என்பன பொருளாகக் கொண்டால் இழுக்கில்லை. இதனால் நாம் அறியக் கிடக்கும் செய்தி என்ன எனில் கூறுவோம். அறிவு நிரம்பாத பண்டை நாளில், பெருங் காற்றையும், கனலையும், காட்டாற்றையும், துன்புறுத்தும் வெங்கதிரையும், பெருமழையையும், விலங்குகளின் எதிர்ப்பையும் தெய் என்று சொல்லி வந்தார்கள்.

அறிவு நிரம்ப நிரம்ப அவற்றின் பெரும் பயனை அறிந்து அவற்றைப் பயன்படுத்துவாராயினர். அறிவு நிரம்பாத போது வெறுப்புப் பொருளில் வழங்கப்பட்ட தெய் அறிவு நிரம்பிய பிறகு விருப்புப் பொருளில் வழங்கலாயிற்று. தெய் என்ற சொல் அம் இறுதி நிலையும் வ் என்ற இடைநிலையை பெற்றுத் தெய்வம் என்று சுருங்கிற்று.

(தெய்+வ்+அம்) அறிவு நிரம்பாதபோது வெப்புறுத்திய ஞாயிற்றையும், நிலவுறுத்திய திங்களையும், துன்புறுத்திய தீயினையும் அறிவு நிரம்பிய காலத்து எவ்வாறு போற்றினார் என்பது நோக்கத்தக்கது. கொடி நிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே. என்ற இந்தத் தொல்காப்பிய நூற்பாவால் ஞாயிறு, தீ, திங்கள் ஆகிய மூன்றையும் வடுநீங்கு சிறப்புடைய தெய்வங்கள் என்று வாழ்த்தியது புலனாகிறதன்றோ! மழையைத் தெய்வமாகக் கொண்டனர்; போற்றினர்.

புனலைத் தெய்வமாகக் கொண்டனர்; போற்றினர். இங்கு அறியத்தக்க மற்றோருண்மை என்னெனில், தெய்வம் என்ற சொல்லால் இந்நாள் சொல்லப்படுவன பயன் பொருள்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்ற பொருள்களும் ஆம். பசு தெய்வம், நிலம் தெய்வம், நீர் தெய்வம், சொல் தெய்வம், பெரியவர் அருளிய நூல் தெய்வம் பிறவும் தெய்வங்கள்.

சமயக் கணக்கர் இத் தெய்வங்களை எல்லாம் மேல் நின்று நடத்துவதோர் பெரிய பொருள் உண்டென்றும் அது கடவுள் இயவுள் என்றெல்லாம் பெயர் என்றும் கூறினாராக. அச் சமயக்கணக்கு முற்றிய வழித்தாம் தாம் கண்ட கடவுள் இப்படி இப்படி என்று கூறுவாராகி, உலகில் கலம் பல விளைத்து வருவாராயினர். தெய்வம் தூய தமிழ்ச்சொல் என்பதில் தமிழர்க்கு ஏதேனும் அய்யமிருக்க முடியுமா? முடியாதன்றோ! ஆனால், பார்ப்பனனும் அவன் வால் பிடித்துத் திரியும் சில தமிழர்களும், தெய்வம் வடசொல் என்று உளறி வருகிறார்கள்.

தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு வருமாறு: தொல்காப்பிய நூன்மரபு 29-வது நூற்பா, ய்,ர்,ழ், என்னும் மூன்று மெய்யின் முன், க,த,ந,ம,ச,வ,ஞ,ய,ப என்ற ஒன்பது எழுத்துகளும் தனித்தனி வந்து நிற்கும் என்று கூறுகையில் ய் முன் வா வருவதற்கு எடுத்துக்காட்டாக தெய்வம் என்ற சொல் காட்டப்பட்டுள்ளது. எனவே தெய்வம் தூய தமிழ்ச் சொல் என்பதை எவராலும் மறுக்க முடியாதன்றோ?

- (குயில், 17.6.58)

தமிழ் ஓவியா said...

கருத்து

Print Email


நம் நாட்டில் அறிவியல் துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதன் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதற்காக சிறந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் கருதி அரசு இதைச் செய்ய வேண்டும்.

- சி.என்.ஆர்.ராவ், அறிவியலறிஞர்



முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் இவர்கள் யாருக்கும் இந்திய சுதந்திர வரலாற்றில் இடமே இல்லையா? அம்பேத்கர், பெரியார், நாராயண குரு, கான் அப்துல் கஃபார் கான், சந்தால் இன மக்கள் எல்லாம் இந்திய வரலாற்றுப் பக்கங்களிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்படுவதற்கும் மறைக்கப்படுவதற்கும் என்ன காரணம்? இந்துத்துவம் என்பது சிறுபான்மையினரையும் அவர்களின் அடையாளங்களையும் அழித்தொழிப்பதா?

- தீஸ்டா செட்டில்வாட், மனித உரிமைப் போராளி



தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்கள் பணியாற்றத் தேவையான பணிச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுதவிர, தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்துவதன் மூலம் தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க முடியும். ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.

- எஸ்.கே.கௌல், தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.



தாய்லாந்தில் ராணுவ ஆட்சியை விலக்கும் முடிவை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இடைக்காலத் தலைவருக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறோம்.

- அல் ஹுசைன், அய்.நா.மனித உரிமை குழுத் தலைவர்.



நம் நாடு உலகளாவிய போட்டித் தன்மைப் பட்டியலில் 79ஆம் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியல்களில் நம் நாடு முதல் 10 இடங்களில் இடம் பெறுவதற்குப் படைப்பாற்றல் கல்வி, புத்தாக்கம், தொழில் முனைவு, கூட்டு முதலீட்டு முறை ஆகியவற்றைச் செயல்-படுத்துவதன் மூலம்தான் முடியும்.

- அப்துல்கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்.



ம.பி.யில் மணல் மாபியாக்களின் அநியாயம் தாங்க முடியவில்லை. பா.ஜ. அரசும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. குற்றவாளிகளும் போலீசாரும் கைகோர்த்துத் திரிந்தால் மாநிலம் எப்படி உருப்படும்? இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?

- ஜோதிராதித்யா சிந்தியா, மேனாள் மத்திய அமைச்சர்

தமிழ் ஓவியா said...

கழுதைக்கும் கழுதைக்கும் தாலி கட்டியபோது எங்கே சென்றார்கள்?


தாலி கட்டாத பல ஜாதிகள் குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ளனவே அங்கே போய் அவர்களிடம் புனிதம்பற்றிப் பேசுவார்களா? கழுதைக்கும், கழுதைக்கும், நாய்க்கும், நாய்க்கும் புரோகிதர்களைக் கூப்பிட்டு, (அதற்கும் தட்சணை வாங்குகிறார்களே!) காதலர் தினத்தில் நடத்தினார்களே, படங்களும் வெளிவந்தனவே!

கழுதைக்குத் திருமணம் நடத்தி, தாலி கட்டிப் படம் எடுத்துத் தங்கள் உறவை வெளிச்சம் போட்டனரே - அப்போது எங்கே போனது இந்தப் புனிதம்?

மார்வாரி வட்டிக் கடையில், டாஸ்மாக்கில் குடிப்பதற்கு மனைவியை அடித்து உதைத்துத் தாலியை அடமானம் வைத்துக் குடிக்கிறார்களே, அதைத் தடுக்க புனிதம், புடலங்காய்கள் எல்லாம் எங்கே போனார்களாம்? ஒன்றைக் கொடுத்து ஒன்பது பெறத் தயாரா?

தமிழ் ஓவியா said...

குட்டிக்கதை : உனக்கு ஆசைதான்!


- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்



கொட்டைப் பாக்கு அளவு தலை. கொய்யாக்காய் உடல் _ இந்தச் சிறிய கோழிக் குஞ்சு குப்பையில் மேய்ந்திருந்தது.

அது தனி; தாயுமில்லை, தகப்பனுமில்லை. உடன் பிறந்தாருமில்லை. தன்னந்தனியே மேய்கிறது. குப்பை சீய்க்கவும் தெரியவில்லை; இரை விழுங்கவும் முடியவில்லை.

காக்கை ஒன்று அதை அடித்துக் கொண்டுபோக அணுகிற்று; அதன் நிலையைக் கொஞ்சம் ஊன்றி நோக்கியது. காக்கையின் நெஞ்சம் இளகிற்று.

காக்கை, கோழிக்குஞ்சை நோக்கி: ஏன் குழந்தாய்! உன் தாய், தந்தை, கூடப் பிறந்தவர் எங்கே?

கோழிக்குஞ்சு சொல்லுகிறது: என் தகப்பனைச் சாமிக்கு விட்டிருந்தார்கள். அதனால் ஒரு நாள் சாமிக்கு அறுத்துவிட்டார்கள்.

புதையல் கிடைத்தது, ஒருவர்க்கு. அந்தப் புதையலைக் காத்திருந்த சாமிக்கு என் தாயை அறுத்தார்கள்.

சனிக்கிழமை ஒருத்தன் இறந்துவிட்டான். அந்தக் கண்மூடிச் சாமி துணைப்பிணம் தேடாதிருக்க என்னுடன் பிறந்த கோழிக்குஞ்சைப் பிணத்தோடு கட்டி அனுப்பி விட்டார்கள்.

நான் தனி, என்னைச் சாமிதான் காப்பாற்ற வேண்டும்.

காக்கைக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அது சொல்லுகிறது;

அட இழவே, உன் பெற்றோரையும் உடன் பிறப்பையும் வாயிற் போட்டுக் கொண்ட சாமியா உன்னைக் காப்பாற்றும்?

வந்துவிடு என் வயிற்றுக்குள், கோழிக் குஞ்சே என்று கூறிற்றுக் காக்கை!

குஞ்சு _ நான் பிழைத்திருக்க ஆசையாய் இருக்கிறது.

காக்கை _ உனக்கு ஆசைதான்! சாமிக்கு? நான் யார் தெரியுமா! சாமி! சனியன் சாமி, ஏறுஞ்சாமி.

காக்கைச் சாமி, ஏழைக் குஞ்சை ஒழித்துவிட்டது.

- குயில், 15.5.1948

தமிழ் ஓவியா said...

குருதி குடித்துச் சிவக்கும் செம்மரம்

Print Email


- கோவி.லெனின்

வறண்ட காடுகளில் விளையும் செம்மரங்கள் (தாவரவியல் பெயர் Pterocarpus santalinus) கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான ஆந்திர மாநிலம் திருப்பதி வனச்சரகத்தில் நிறைந்து காணப்படுகின்றன. இதற்குத் தண்ணீர்த் தேவை குறைவு. வெட்டினால் மீண்டும் துளிர்க்கும் தன்மையுடையது. அழிந்துவரும் அரிய வகைத் தாவர இனங்களின் பட்டியலில் செம்மரம் வைக்கப்பட்டிருப்பதால் இதன் வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.



கப்பல் கட்டுதல், சாயம் தயாரித்தல், மருந்தாகப் பயன்படுத்துதல், வழக்கமான மரச்சாமான்கள் தயாரித்தல் என செம்மரங்களினால் பலன் அதிகம் என்பதால் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தேவை அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒரு டன் 20 லட்சம் முதல் 40 லட்சம் வரை விலைபோகும் இம்மரங்கள் வெளிநாடுகளில் இதுபோல மும்மடங்கு விலை போகின்றன. இதுவே செம்மரக் கடத்தலுக்கு முக்கியக் காரணமாகும்.

தமிழகத்தின் வேலூர்-, திருவண்ணாமலை (பழைய வடஆற்காடு) மாவட்டங்களும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குட்பட்டவை. இந்த மலைப் பகுதிகளில் வாழும் உழைக்கும் மக்கள், காடு சார்ந்த தொழில்களில் அனுபவம் வாய்ந்தவர்கள். தற்போது அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், ஆந்திராவில் செம்மரம் வெட்டித் தந்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று தமிழகம்-ஆந்திரா என இரு மாநிலங்களைச் சேர்ந்த இடைத்தரகர்-களும் இவர்களை அழைத்துச் செல்கிறார்கள்.


தமிழ் ஓவியா said...


ஒருநாளைக்கு 7000 ரூபாய்கூட கூலி கொடுப்பது உண்டாம். அதனால்தான் ஆபத்து எனத் தெரிந்தும், சில நாட்களிலேயே நல்ல வருமானம் ஈட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் செம்மரம் வெட்டுவதற்கு இத்தொழிலாளர்கள் செல்கின்றனர். பக்கத்து வீட்டுத் தொழிலாளர் இவ்வளவு தொகை சம்பாதிக்கிறார் எனத் தெரிந்தால் அக்கம்பக்கத்தாரும் அதே வேலைக்குச் சென்று அதிகம் சம்பாதிக்க ஆசைப்படுவது இப்பகுதியில் ஒரு வாழ்க்கைமுறையாகிவிட்டது.

செம்மரக் கடத்தல் ஆந்திர அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு என்பது ஒரு பக்கம், இதில் தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள் என்ற கடுப்பு மறுபக்கம். இரண்டும் சேர்ந்துதான் ஆந்திர மாநிலத்தை ஆளும் சந்திரபாபு நாயுடு அரசின் காவல்-துறையைக் கொலைவெறியாட்டம் போட வைத்துள்ளது. 7.-4.-2015 அன்று திருப்பதி அருகே சேஷாசலம் மலையில் ஈத்தகுண்டா (ஸ்ரீவாரிமெட்டு) பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரைச் சுட்டுக் கொன்றது ஆந்திரக் காவல்துறை.

எச்சரிக்கை விடுத்து, பிடிக்க வந்த போலீசார் மீது தமிழகத் தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியதால்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்கிற வழக்கமான போலீசின் திரைக்கதை இப்போதும் சொல்லப்படுகிறது. நிகழ்விடத்தில் இருந்த கட்டைகள் பல. நாள்களுக்கு முன்பு வெட்டப்பட்டவை, கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கிடந்த நிலையும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதைக் காட்டுவதாகத் தெரியவில்லை. வழக்கமான என்கவுண்ட்டர்கள் போலவே பிடித்து வைத்து சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என்கிற சந்தேகம் பரவலாக உள்ளது. தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக இவ்விவ-காரத்தில் தலையிட்டிருப்பதிலிருந்து இந்த என்கவுண்ட்டர் கொடூரத்தின் தன்மையை உணரலாம். அடுத்தகட்ட விசாரணைகள் உண்மையை வெளிக்கொண்டு வருமா என உறுதியாகச் சொல்ல முடியாது.

தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள் யாவும் இதனை வழக்கம்போல உணர்ச்சிகர-மான நிகழ்வாகப் பார்க்கின்றன. பல முனைகளில் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ள-போதும் இங்குள்ள தொழிலாளர்கள் ஆந்திரா போன்ற மாநிலங்களுக்குத் தொடர்ச்சியாகச் சென்று மரம் வெட்டுவதும் சிக்கிக் கொள்வதும் சுட்டுக் கொல்லப்படுவதும் ஏன் என்பதற்கான அடிப்படைக் காரணங்களை அலசுவதற்கு அவற்றிற்கு நேரம் இல்லை. கடந்த ஓராண்டில் இதற்குமுன் தமிழகத் தொழிலாளர்கள் 7 பேர் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்-பட்டுள்ளனர். அப்போது இங்குள்ள யாரும் இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மொத்தமாக 20 பேரைக் கொன்றால்தான் நம்முடைய கவனம் இத்தகைய பிரச்சினைகள் மீது திரும்பும்போல.

பீஹார் போன்ற மாநிலங்களிலிருந்து கட்டடப் பணிகளுக்காகத் தமிழகத்திற்கு வரும் தொழிலாளர்களாக இருந்தாலும், தமிழகத்தி-லிருந்து ஆந்திராவுக்குச் செம்மரம் வெட்டச் செல்லும் தொழிலாளர்களாக இருந்தாலும் அவர்களின் பொருளாதாரத் தேவை-, ஆசை இவற்றைக் காரணமாக வைத்து உழைப்பைச் சுரண்டும் பணமுதலைகளும் இடைத்தரகர்-களும் மொழிபேதமின்றி செயல்பட்டு வருகிறார்கள். தொழிலாளர்களின் உயிர்கள் எளிதாகப் பறிக்கப்படுகின்றன. பணமுதலைகளும் இடைத்தரகர்களும் எளிதாகச் சிக்குவதில்லை. சிக்கினாலும் சில நாள்கள் சிறைவாசத்திற்குப் பின் வெளியே வந்துவிடுகிறார்கள். சட்டங்கள் இவர்களுக்குச் சாதகமாகவும், சட்டத்திற்குப் புறம்பான என்கவுண்ட்டர், தொழிலாளர்களின் உயிருக்கே எதிரானதாகவும் உள்ளது. அதனால்தான் குருதி குடித்து வளர்ந்து கொண்டிருக்கிறது செம்மரம்.

வெட்டப்பட்டாலும் மீண்டும் துளிர்த்து-விடும் தன்மை கொண்டவை செம்மரங்கள். மனித உயிர்களோ சுட்டுக் கொல்லப்பட்டால் திரும்பப் பெற முடியாதவை.

தமிழ் ஓவியா said...

தமிழ் வளர்ச்சி : நீங்கள் செய்தது என்ன?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

வெண்ணெய் வாழைதான் ஆனால் குலை தள்ள வேண்டும்



சட்டாம் பிள்ளைச் சண்முகம் எனது பாடசாலை நண்பர்.

நான் ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போனேன். அப்போது அவர் தமது வீட்டுக்குப் புறத்திலிருந்த தோட்டத்தில் இருந்தார். நான் வந்தது அவருக்குத் தெரிந்தது. என்னை அவர் தோட்டத்திற்கு அழைத்துப் போனார். மரம், செடி, கொடிகள் தோட்டத்தில் அடர்ந்திருந்தன. நான் அவைகளைச் சுற்றிப் பார்த்து வரும்போது நண்பர் என்னை ஓர் இடத்தில் நிறுத்திக் கீழ்வருமாறு சொன்னார் : பழம் ஒன்று முக்கால்முழ நீளமிருக்கும்; பச்சை நாடானை ஒத்த நிறம், வாட்டம். அதை வாழைப்பழமென்றே சொல்வதற்கில்லை. அதன் தோலை உரித்துக் கீழே போட்டபின் கையில் வெண்ணெய்தான் மீதியிருக்கும். அந்த உரித்த பழத்தைச் சுடு சோற்றில் போட்டால் உருகி விடும். இனிப்பில் தேன்; ஒருவித நறுமணம்!

பழுத்திருப்பதை நண்பர் அடுக்குப் பானையிலிருந்து எடுத்துவரப் போகிறார் என்றுதான் நான் நினைத்தேன். அவர் அந்த மரந்தான் இது என்று தரையைக் காட்டினார். நான் தரையைக் குனிந்து பார்த்தேன். அகலத்தில் மாவிலையையும் நீளத்தில் பலா இலையையும் ஒத்த அய்ந்தாறு வாழையிலைகள் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டிருந்தன. இதுதானா வெண்ணெய் வாழைமரம்!

என்ன நண்பரே! இதுதானா குலை தள்ளிற்று? அதுவும் பழுத்ததா? நீரும் தின்றீரா? என்று கேட்டேன். சண்முகம் சிரித்தார். வாழையைப் பற்றி நான் சொன்னதில் ஒன்றும் பொய்யில்லை; ஆனால் வளர வேண்டும் பழம் தரவேண்டும் என்று கேலி பேசினார்.

அந்த வெண்ணெய் வாழையைச் சண்முகம் சுண்ணாம்புக் கற்களுள்ள தரையில் நட்டிருந்தார். அதனால் அதை நட்டு ஒரு வருஷம் ஆகியும் அது வளரவில்லை. அதை நட்டபோது வேறிடத்தில் நட்ட வாழைகள் நல்ல பலன் அளித்தன. வெண்ணெய் வாழை வளர்ச்சியடைந்து நல்ல பலன் கொடுக்க வேண்டுமானால் அதைப் பெயர்த்து வேறு நல்ல இடத்தில் வைக்க வேண்டும்.

பல்லாவரத்தில் கூடியிருக்கும் பண்டிதர்களே, தமிழ் இனிமையானது, ஆக்ஷேபமில்லை. ஆனால் அது வளர்ச்சியடையவில்லை. குலை தள்ளவில்லை. மக்கட்கு நலன் அளிக்கவில்லை. அதை நீங்கள் நட்டிருக்கும் இடம் தீயது. ஜாதி மதம் மூடப் பழக்க வழக்கங்கள் ஆகிய சுண்ணாம்புக் கற்கள் உள்ள தரையில் நட்டிருக்கிறீர்கள். அவ்விடத்தினின்று அதைப் பெயர்த்தெடுங்கள். வேறு பொது இடத்தில் நடுங்கள்! அப்போது தமிழ் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டிராமல் வளர்ச்சியடையும். குலை தள்ளும். பழம் தரும். மக்கள் நலன் அடைவார்கள்.

தமிழ் தற்கால நிலையில் இனிக்கிறதென்று நீங்கள் சொல்லுகிறீர்களா? வளர்ச்சியடையாமல் கல்லுப் பிள்ளையார் போலிருக்கும் தமிழ் வளர்ச்சியடைந்து வரும் மக்களுக்கு இனிமை தருவதெப்படி? சொல்லுங்கள்! தமிழ் இனிக்கவில்லை யாதலால்தான் நீங்கள் அதை இனியது இனியது இனியது என்று எப்போது பார்த்தாலும் வேலையற்றுப் போய் உளறிய வண்ணமிருக்கிறீர்கள். அது வளர்ச்சியடையாத-தால்-தான், நீங்கள் பழைய விஷயத்தையே பணம் சம்பாதிக்கத் திரும்பத் திரும்பச் சொல்லுகிறீர்கள். அது குலை தள்ளாததால்-தான் நீங்கள் படித்ததாய்ச் சொல்லிக் கொண்டாலும் ஒன்றுமறியாத முட்டாள்கள் என்று பிற பாஷைச் சிறுவர்களால் இகழப்படுகிறீர்கள்.

நீங்கள் தமிழின் அதிகாரிகளாக ஆசைப்படுகிறீர்கள். சைவப் பெரியாராகவும் பிரியப்படுகிறீர்கள். சைவத்தோடு தமிழை ஒட்டி விடுகிறீர்கள்.

அதனால் சைவரல்லாத பிற மதத்தவர் உங்கள் சைவத்தை ஓச்சும் கோடாலி தமிழின் கிளைகளையும் குறைக்கின்றது. வைஷ்ணவத்துடன் தமிழ் ஒட்டப்-பட்டிருக்கிறது. அதனால் வைஷ்ணவத்தை நோக்கிப் பிற மதத்தினர் கொட்டும் நெருப்பானது தமிழின் வேரிலும் படுகிறது. புத்த மதத்தை அறுக்கப் போகும்போது அதனோடு ஒட்டிய தமிழ் அறுபடுகிறது. மதங்களுக்கு அப்பால் தமிழ் இல்லாதபடி செய்த _ செய்கின்ற தமிழ்ப் பண்டிதர்களே! தமிழுக்கு நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய வேலைகளில் ஒன்றாவது செய்ததுண்டா!

மத நூல்களைப் புகைப்படம் பிடிப்பதுண்டு; வெளியிடுவதுண்டு.

மதத்தின் அப்புறத்தில்தான் விசால எண்ணங்கள், விரிந்த தத்துவங்கள், அறிவு வளர்ச்சிக்குரிய திட்டங்கள், போகப் பொருள்களை விளைக்கும் நுட்பங்கள் உண்டு என்பதை நீங்கள் அறியவில்லையானால், உங்களை என்னவென்று சொல்லுவது? தமிழை அரிக்க வந்த பண்டிதச் செல்லுப் பூச்சிகளே! இந்தியனாகிய மகம்மதியனும், இந்தியனாகிய கிறிஸ்தவனும் தமிழை வெறுக்க வைத்தது எது தெரியுமா? அதனோடு சம்பந்தப்படுத்தி வைத்திருந்த மதம். மதக்காரர்கள் மூலபலஞ் சண்டையிடுகிறவர்கள்.

அதற்குள்ளே சிக்கலாகிக் கிடக்கும் தமிழும் அழிந்து போகிறது. வளர்ச்சி அடைவது எப்படி?

புது இலக்கணம், புது இலக்கியங்கள், புதிய நிகண்டுகள், அகராதிகள், தமிழின் நடையில் ஓர் புதுத்திறன்! இவ்வரிசையில் எதிலாகிலும் உங்கள் கவனம் சென்றதுண்டா? இன்னும் யோசியுங்கள்.

- புதுவை முரசு, 16.2.1931

தமிழ் ஓவியா said...

சிறுகதை - பகுத்தறிவுக்குத் தடை

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்



மேலூர் கிராமம் மிக்க வளமுள்ளது; மிக்க பணக்காரர் நிறைந்த ஊர். அவ்வூரில் பல சந்தர்ப்பங்களில் சரியாய் ஒரு வருடகாலத்தில் ஒரு லக்ஷத்து முப்பதினாயிரம் ரூபாய் திருட்டுப் போயிருக்கிறது. ரொக்க வகையிலும் நகை வகையிலும்.

இதற்கு மேலும் ஒருநாள் அதிகாலை முதற் கோழி கூவிற்று. கண்ணு ரெட்டியார் வீட்டு வேலைக்காரி தெருக்கதவைத் திறந்தாள். வீட்டிற்கெதிரிலிருக்கும் மாட்டுக் கொட்டகையில் சாணம் எடுக்கப் போனாள். அச்சமயம் வீட்டின் உள்ளிலிருந்து ஓர் ஆள் கையில் ஒரு சிறு மூட்டையோடு வெளிப்பட்டான்.



அவன் கிழக்கு வீதியை நோக்கி விரைவாக நடந்தான். வேலைக்காரி, வீட்டு ரெட்டியார் போகிறார் என்று நினைத்தாள். அடுத்த நிமிஷம் வீட்டு ரெட்டியார் வெளியில் வந்தார்! வேலைக்காரிக்குச் சந்தேகம். அதோ _ வீட்டிலிருந்து கீழ வீதியாக ஓர் ஆள் போகிறார். அவர் யார் பாருங்கள்!



இதைக் கேட்டதும் ரெட்டியார் திடுக்கிட்டார். ஆளைத் தொடர்ந்து ஓடினார். திருடன் பெத்த பெருமாள் ஆலயத்தில் நுழைந்தான். அவன் மூலஸ்தானத்தில் நுழைந்ததையும் ரெட்டியார் இரண்டு கண்களாலேயும் நன்றாய்ப் பார்த்தார். மூலஸ்தானம் திறந்திருந்தது. விளக்கும் எரிந்து கொண்டிருந்தது. பரபரப்போடு, அய்யரே, அய்யரே! மூலஸ்தானத்தில் திருடன் வந்து நுழைந்தான்.

அவனைப் பிடியுங்கள் என்றார். மூலஸ்தானத்தில் பார்ப்பனரல்லாதவர் போகக் கூடாதல்லவா?

அய்யர், என்ன ரெட்டியார்வாள்! நான்தான் இருக்கிறேன். பெருமாள்தான் இருக்கிறார்; தினம் இப்படித்தான் பலர் வந்து கேட்கிறார்கள். விஷயம் இன்னதென்று புரியவில்லை. காற்று சேஷ்டையாய் இருக்கலாம்; அந்தக் காற்றானது கோவில் மூலஸ்தானத்தில் நுழைவது விந்தை என்றார். ரெட்டியாரின் சந்தர்ப்பம் சாஸ்திரத்தை மீறச் செய்துவிட்டது.

அவர் உடனே மூலஸ்தானத்தில் நுழைந்து திருடனைத் தேடினார். திருடன் இல்லை. உள் நுழைந்தவன் தப்பியோட வேறு வழியுமில்லை. திகைப்படைந்த ரெட்டியார் வீட்டிற்குத் திரும்ப வேண்டியதுதான் பாக்கி. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மற்றும் அநேக ரெட்டிமார் - போலீஸ்காரர் அங்கு வந்து சேர்ந்தார்கள். மூலஸ்தானத்து அய்யர் வெளியிற் போகாமலும், வெளி மனிதர் மூலஸ்தானத்திற்குப் போகாமலும் காப்பு ஏற்படுத்தப்பட்டது. பிறகு மூலஸ்தானம் நன்றாய்ச் சோதிக்கப்பட்டது.

மேலும் ஆராய்ச்சி; மற்றும் நடவடிக்கை! ஒன்றும் பயனில்லை. திருடன் கோவிலின் மூலஸ்தானத்திற்குள் புகுந்தான் என்பதே சுத்தப் பொய் என்று ஏற்பட்டது. ஆனால் இம்முடிவு ஜனங்களுடையது, பறிகொடுத்த ரெட்டியாருக்கோ கெட்ட காற்றின்மேல் (பசாசின் மேல்) அதிக சந்தேகம். சில நாட்கள் சென்றன.

தமிழ் ஓவியா said...

பெத்த பெருமாள் என்ற தொடரில் பெத்த என்பது தெலுங்குப்பதம். பெரிய என்பது அதன் அர்த்தம். அந்தப் பெரிய பெருமாள் விக்ரகம் மிகப் பெரியதுதான். அது கிடந்த கோலமாய்ச் செய்யப்பட்டிருக்கிறது. 50 வருடங்கட்கு முன் அது பூமியில் கிடந்தது. அப்போது _ தற்கால அர்ச்சகப் பிராமணரின் தகப்பனார் இருந்தார். அவர் செத்துப் போன பின் தற்காலத்தார் அமைந்தார். பெரிய நாராயண அய்யங்கார்.

சனிக்கிழமை வந்தது. காலை 10 மணி, கோவிலில் கூட்டம். நாராயண அய்யங்கார் _ பெத்த பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணுகிறார். அய்யங்கார் வீட்டைப் பரிசோதனை செய்த சர்க்கார், கோவிலுக்குள் புகுந்தார்கள். வெள்ளைக்கார உத்தியோகஸ்தர் உட்பட! ஓர் உத்தியோகஸ்தர், அய்யங்கார் சுவாமிகளே! மூலஸ்தானத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்றார். இது பயனற்ற வார்த்தை அய்யர் சாத்திரம் படிக்கத் தொடங்கினார். சர்க்கார் உட்புகுந்து ஆராயத் தொடங்கினார்கள். பக்தர்கள் முணுமுணுத்தார்கள். அர்ச்சகர், அக்ரமம், அக்ரமம் என்றார். சர்க்கார் செய்கை அனைவராலும் கண்டிக்கப்படுகிறது. உண்மையறிவதே நோக்கமாக வந்த உத்தியோகஸ்தர்கள் மேலும் சொன்னதாவது: பெத்த பெருமாள் விக்ரகத்தின் உட்புறத்தை ஆராய வேண்டும்.

இதற்கு, பெத்த பெருமாள் கடவுள் என்று மாத்திரம் அறிந்துள்ள ஜனங்கள், சாமியை _ உடைப்பதோ! _ என்று சொல்லி வருந்தினர்.

பிறகு, பெத்த பெருமாளின் தலை திருகப்-பட்டது. திருவயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட சாமான்கள்; நோட்டுகள்; நகைகள்; கத்திரிக்கோல் ஒன்று; 6 தோட்டா போட்ட ரிவால்வர் ஒன்று; கடைசியாய்க் களவு போன ரெட்டியார் வீட்டுப் பணமுடிப்பு. இதன் பின் பக்தர்களின் கோபத்திலிருந்து அய்யங்காரைக் காப்பாற்றுவது அருமையாகிவிட்டது.

இத்தனை நாள் கடவுள் _ சாமி _ தெய்வம் _ என்ற பெயர் மயக்கத்தால் அப்பெயர்-களையுடைய மனிதன் _ பொருள் _செயல் _இவைகளின் உட்புறத்தை அலசிப் பார்க்க இந்திய மக்கள் கருதவில்லை. பகுத்தறிவு செத்துப் போனதற்கு கடவுட் கொள்கை காரணம் என்க.

பூமியை பூமிதேவியென்றும், ஆகாயத்தை ஆகாய வாணியென்றும், ஜலத்தை வருணபகவான் என்றும், நெருப்பை அக்கினி பகவான் என்றும், காற்றை வாயு பகவான் என்றும் கொண்டாடும் இந்திய மக்கள் அப்பஞ்ச பூதங்களின் தத்துவத்தை உட்புகுந்து ஆராய, அவர்கள் கருத்தைச் செலுத்த முயன்றதேயில்லை. பஞ்சபூதங்களுக்குத் தொண்டர் ஆனார்கள். ஆனால் பகுத்துப் பகுத்துப் பொருளின் உண்மையறியும் கூட்டத்தினருக்கு அப்பஞ்ச பூதங்கள் வேலை செய்யும் விதத்தைக் காண்கிறோம்.

தந்தித் தபால், புகைவண்டி, ஆகாய விமானம், தூர தரிசனம், போலி மனிதன், இமயமலை ஆராய்ச்சி, செயற்கை மழை, செயற்கை வெயில் ஆகிய இன்றைய அபூர்வ வாழ்க்கை விநோதங்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களின் உள்ளும் புறமும் ஆராய்ந்து அவைகளை அடிமையாக்கியவர்களால் ஏற்பட்டவை.

திருடன் தான் திருடிய பணம் வைக்கும் பெட்டிக்குப் பெத்த பெருமாள் என்று பெயர் இருந்தால் பகுத்தறிவுள்ளவன் பெத்த பெருமாளின் தலையைத் திருக வேண்டியது ஞாயம். ஊரிற் கொள்ளை போன பொருள்கள் உடையவர்களிடம் கணக்குப் பார்த்து ஒப்புவிக்கப்பட்டது.

- புதுவை முரசு, 2.2.1931

தமிழ் ஓவியா said...

தாலி பற்றி அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லுகிறார்?



அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா என்று சிலர் கேட்பது புரிகிறது. ஒரு புரட்சியாளரின் பிறந்த நாளைப் புரட்சிகரமாகக் கொண்டாடுவதுதான் _ அந்தப் புரட்சியாளருக்குக் கொள்கைரீதியாக நாம் காட்டும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.
இதோ பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார் :

மலபார் மற்றும் அஞ்செங்ரோ கெஜட் டீரின் ஆசிரியரான திரு.சி.ஏ.இன்னஸ் சென்னை அரசாங்கத்தின் அனுமதியோடு பின்வருமாறு கூறுகிறார்: மருமக்கள்தாயம் என்னும் முறையைப் பின்பற்றும் எல்லா வகுப்பினரிடையேயும் அதேபோன்று மக்கள்தாயத்தைக் கடைப்பிடிப்போரில் பலரிடையேயும் தாலிகட்டும் திருமணம் என்னும் மற்றொரு ஏற்பாடு நடை முறையில் இருந்து வருகிறது. மலையாளி களின் திருமணப் பழக்க வழக்கங்க ளிலேயே இது நூதனமானது, தனித்தன்மை வாய்ந்தது என வருணிக்கப்படுகிறது. இதன் படி, ஒரு யுவதி பூப்புப் பருவம் எய்துவதற்கு முன்னர் அவள் கழுத்தில் தாலி (தங்கத்தாலோ அல்லது வேறு ஏதேனும் உலோகத்தாலோ செய்யப்பட்ட பதக்கம் போன்ற ஒரு சிறு ஆபரணம் நூல்கயிற்றில் கட்டப்படுவது) கட்டப்படுகிறது. அதே ஜாதியை அல்லது உயர் ஜாதியைச் சேர்ந்த ஒருவனால் இவ்வாறு தாலி கட்டப்படு கிறது.

இவ்வாறு செய்த பிறகுதான் அந்த இளம் பெண் சம்பந்தம் செய்துகொள்ள முடியும். தாலி கட்டுபவனுக்கு அல்லது மணவாளனுக்கு (மணமகன்) அந்தப் பெண் ணுடன் கூடி வாழும் உரிமை அளிப்பதற் காகவே இந்தச் சடங்கு செய்யப்படுவதாக பொதுவாகக் கருதப்படுகிறது.

கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்கு பூதேவர்களும் (அதாவது பிராமணர்களும்), சத்திரியர்களும் உரிமை கொண்டாடி வந்ததிலிருந்தும் இந்த வழக்கம் தோன்றியிருக்கக் கூடும். (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி 16, பக்கம் 333.)

செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

புரட்சிக்கவிஞரின் நகைச்சுவை




- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

ஜனோபகாரிகள்

மேல்நாட்டில் பிறந்து வளர்ந்த ஓர் இந்தியர்: (தோட்டியைக் காட்டி) இவர் யார்?

உள்ளூரார்: இவர் வீட்டிலுள்ள அசுத்தங்களை எடுத்துப் போகிறார்.

மே.இந்: (வண்ணானைக் காட்டி) இவர் யார்?

உள்: இவர் வீட்டிலுள்ள அழுக்குத் துணிகளையெல்லாம் எடுத்துப் போகிறார்.

மே.இந்: திரும்பவும் சலவை செய்துவந்து கொடுப்பாரா?

உள்: ஆமா!

மே.இந்: (புரோகிதரைக் காட்டி) இவர் யார்?

உள்: இவர், வீட்டிலுள்ள அரிசி, பருப்பு முதலியவைகளை மூட்டை கட்டிக்கொண்டு போகிறார்.



மே.இந்: சமையல் செய்து கொண்டுவந்து கொடுப்பாரா?

உள்: திரும்பக் கொடுப்பதில்லை.

மே.இந்: அடித்துக்கொண்டா போகிறான்?

உள்: ஆம்.

மே.இந்: அடித்துக் கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டா இருப்பார்கள்?

உள்: ஆம், ஆம்!

மே.இந்: அடித்துக் கொண்டா......

உள்: ஓய், எத்தனை தரம் சொல்லுவது! அடித்துக் கொண்டுதான் போகிறான்! அடித்துக்கொண்டுதான் போகிறான்! ஆயிரம் வருடமாக இப்படி!

ராகு காலப் பயன்



ஒருவன்: நான் ராகு காலத்தில் வெளிக் கிளம்பினதால்தான், பத்து ரூபாய் நோட்டு விழுந்துவிட்டது.

மற்றவன்: நான் ராகு காலத்தில்தான் அந்தப் பத்து ரூபாய் நோட்டைக் கண்டெடுத்தேன்!

வேடத்தின் பயன்



சு.ம.காரன்: பண்டித அய்யர்வாள்! உலோகம் என்றால் என்ன?

அய்யர்: பூமிக்குப் பெயர்_பொன், வெள்ளி இவைகளுக்கும் பெயர்.

சு.ம.: உலோக குரு என்பதிலுள்ள உலோகத்திற்குப் பின்னைய அர்த்தமே பொருத்தம்.

அய்யர்: அவைகளுக்காகத்தானே......

பயனற்றதால் வணங்கப்படுகிறது



ஒருவன்: எல்லாப் பக்ஷிகளும் இருக்க, ஆழ்வார் (பருந்து) மாத்திரம் வணங்கப்படுவதற்குக் காரணம் தெரியுமா?

பிறன்: தெரியும்! அது கறிக்கு உதவாது.

ஒரு விஷயம் புரிந்தது



சோமசுந்தரக் கடவுள் மதுரையில் கல் யானையைக் கரும்பு தின்னச் செய்தார். இப்போதும் பார்ப்பனர் கல் சாமிகளைச் சோறு தின்னச் செய்கிறார்கள். இவ்விரு விஷயத்தில் ஒரு விஷயம் புரிந்து போயிற்று. இந்த அய்யர், சாமி தின்பதாகத் தாமே அடித்துக் கொண்டு போகிறார் _ அந்த அய்யர், கரும்பைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு போனதை யாரும் பார்த்ததில்லை.

சர்வம் விஷ்ணுமயம்



பாகவதர்: அப்பா, சர்வம் விஷ்ணுமயம் ஜகத் அல்லவா?
சிஷ்யன்: பன்றி மலந்தின்னுவதை, நான் வராகவதாரம் பூமியைப்

பெயர்த்தெடுப்பதாகவே காண்கிறேன். மச்சாவதாரத்தைத்தான், என் வயிற்றில் செலுத்துகிறேன்!

சாமிக்குக் காது செவிடு



அன்பர்: செட்டிமேல் சாமி வந்திருக்கிறது. நீ நினைத்திருப்பதைக் கேள்.

கேட்க வந்தவர்: சுவாமி! நான் ஒன்றை நினைத்து வந்திருக்கிறேன்.

சாமி: என்ன?

கேட்க வந்தவர்: பணம் காணாமல் போயிற்று. எப்போது அகப்படும்?

சாமி: சீக்கிரம் சௌக்யமாய்விடும்.

கேட்க வந்தவர்: இதென்ன அய்யா, சாமி இப்படிச் சொல்லுகிறதே?

அன்பர்: அவருக்குக் காது செவிடு! நீ கூவிக் கேட்கவில்லை.

தமிழ் ஓவியா said...

மாட்டுக்கறி - எங்கள் வாழ்வு

கவிதை - கோகு ஷியாமளா

மாட்டுக்கறி - எங்கள் வாழ்வு



(ஆந்திராவின் முக்கியமான தற்கால தலித் பெண் கவிஞர், சிறுகதையாசிரியர், பெண்ணிய ஆய்வாளர், செயற்பாட்டாளர். ஜாதி எதிர்ப்பு, தெலுங்கானா போராட்டங்களில் தொடர்ந்து செயலாற்றி வருபவர். அவரின் மாட்டுக்கறி எங்கள் வாழ்வு தெலுங்குக் கவிதையிலிருந்து சில வரிகள்)

மாட்டுக்கறி எங்கள் பண்பாடு
மாட்டுக்கறி - எங்களது வாழும் பசுமை
வாழ்க்கையின் பன்முகம்
எங்கள் உயிரின் மூச்சு!
மாட்டுக் கறி உண்ணாதீர்கள் ஆனால் எப்படி?
நான் எதை உண்பது அல்லது மறுப்பது என்று கூற நீ யார்? எங்கிருந்து வந்தவன்?
எனக்கும் உனக்கும் என்ன உறவு?
நான் கேட்கிறேன்.

இன்று வரைக்கும் நீ
ஒரு ஜோடி காளை மாடுளை வளர்த்திருப்பாயா?
ஒரு ஜோடி ஆடுகளையாவது?
ஓரிரண்டு எருமைகளை?
அவைகளை மேய்த்த அனுபவமுண்டா?
குறைந்தபட்சம் கோழியாவது வளர்த்ததுண்டா?

இவைகளுடன் ஆற்றில் இறங்கி
அவற்றைத் தேய்த்துக் குளிப்பாட்டியதுண்டா?
காளையின் காதை
அறுத்துத் துளையிட்டதுண்டா?
இல்லை, அவற்றின் பற்களைப் பிடித்துப் பார்த்திருக்கிறாயா?
அவற்றுக்குப் பல்வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?
அவற்றின் கால் குளம்புகள் புண்ணானால்?
உண்மையில் உனக்கு என்னதான் தெரியும்?
"மாட்டுக் கறி உண்ணாதே" என்று சொல்வதைத் தவிர?

பாலூட்டும் தனது மகளுக்கு, பிள்ளை பெற்று கொஞ்சநாட்கள் கூட ஆகாத
அவளுக்கு எப்படியாவது
நன்கு பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சித் துண்டுகளைச்
சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று
கவலையுடன் அலைகிறாள் யெல்லம்மா.
மாட்டின் ஈரல் சுரக்கும் சாறு - அது லேசில் கிடைக்காது
அதைப் பெற மாலா செட்டம்மாவின் கூரைப் பலகை
மாடிகா எல்லம்மாவின் எறவானம்
என்று வீடுவீடாகத் தேடிச் செல்வாள்.

தமிழ் ஓவியா said...

குழந்தையின் வயிற்றுக் கடுப்பைத் தணிக்க
பெரியவர்களின் கைகால் வலியைப் போக்க
மாட்டீரல் சுரக்கும் கடுஞ்சாற்றையே
அவர்கள் நம்பி இருப்பர்.
அப்படிப்பட்டவர்களைப் பார்த்து
"மாட்டுக் கறி உண்ணாதே" என்று சொல்ல
உனக்கு எத்தனை துணிச்சல்?
ஜாக்கிரதை
அவர்கள் செருப்பாலேயே அடிப்பார்கள்.
ஓடு, அவர்கள் வருவதற்குள்...

மாலா மக்களும் மாடிகா மக்களும்
மாட்டுக் கறி உண்பவர்கள் மட்டுமல்ல தம்பி.
மண்ணை உழுவதற்காக
காடுகளைப் பராமரிப்பவர்கள்.
எருமைகளை, ஏர்ஓட்டிச் செல்லும் எருதுகளைப் பழக்குபவர்கள்
யுகயுகமாக அவர்கள் இந்தப் பசும் வயல்களை உழுதுள்ளனர்
தலைமுறை தலைமுறையாக கன்றுகளை வளர்த்து வந்துள்ளனர்.

நாங்கள் மேய்த்துக் கொண்டிருந்த மாடுகளை பிறர் ஓட்டிச் சென்றது பற்றி
வளர்த்த கைகளிலிருந்து மாடுகள் வலுக்கட்டாயமாகப் பிடுங்கப்பட்ட சம்பவங்கள் -
பற்றியெல்லாம் தெரியுமா, தெரியாதா?
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை,
எருது பூட்டிய வண்டிகள் போய்
குதிரைகள் பூட்டப்பட்ட வண்டிகள் வந்த நாளை
எங்களால் மறக்க முடியுமா என்ன?

பசுக்களை, காளைகளை
நாங்கள் காடு, கரைகளில் ஓட்டிச் செல்வோம்
மண்ணை அவை உழுது போடவேண்டுமானால்
உணவு வேண்டுமே -
எங்களுக்கு இதைச் செய்யத் தெரியும் -
ஒன்றை மறந்துவிடாதே
மண்ணை உழுவதற்கே மாடுகளை வளர்க்கிறோம்.

மண்ணை விட்டு, மந்தைவெளியை விட்டு நீங்கியும்
மாட்டுக் கறி தின்னும் கூட்டம் என்று எங்களை ஏசுகிறாய் - பழைய பாட்டையே திரும்பத் திரும்பப் பாடுகிறாய்
உனது ஊத்தைப் பற்களைக் காட்டி காட்டி.

இப்படி அங்கலாய்க்கும் நீ, நீ என்னதான் செய்கிறாய்?
கோமாதா என்று கும்பிடுகிறாய்
பாலைக் கறந்து கறந்து பலகாரம் செய்கிறாய்.
நாங்கள் பசுவைக் கறப்பதில்லை.
கோமாதா என்று வணங்குவதுமில்லை
கோமூத்திரத்தைக் குடிப்பதுமில்லை.
கன்றைக் கட்டி வைத்து
பசுவைக் கறக்கும் ஆட்கள் அல்ல நாங்கள்.

பசுவின் மடியில் கன்று - அது குடித்து
நன்றாக வளர வேண்டும்
மண்ணை உழுவதற்கு அதற்கு வலிமை தேவை
வேளாண்மை செழிக்க எங்களுடைய மாடுகள்
யானைகள் போல் குன்றுகளாக
நிற்க வேண்டும்.

காளை ஈனும் பசுவை மதிப்பவர்கள் நாங்கள்.
பச்சை புற்கட்டுகள், சோளத் தட்டு, அரிய புண்ணாக்கு -
கன்று ஈன்ற பசுவுக்கு இவற்றை நாங்கள் அளிப்போம்
அதனை வேலை வாங்கமாட்டோம் -
பசுக்களை உன் வீட்டுக்குக் கூட்டி வந்து
வாசலில் நிறுத்தி வித்தைக் காட்டிப்
பிழைப்பவர்கள் இல்லை நாங்கள்.
அவற்றை நன்றாக மேய்த்து வளர்ப்போம்
அவை நல்ல கன்றுகளை ஈன்றளிக்க,
மண் செழிக்க அவற்றைப் பராமரிப்போம்.

அவ்வப்போது நாங்கள் இளைப்பாறி
ஆனந்தமாக இருக்கையில் -
இந்த நாளைக் கொண்டாடினால் என்ன என்று பணம் வசூல் செய்து
சந்தைக்குச் செல்வோம்.
ஆரோக்கியமான, நல்ல பசுவைத் தேர்ந்தெடுத்து வருவோம்
அதை வெட்டி, கறியாக்கி பகிர்ந்துண்ண! -
நாங்கள் விருந்துண்ணும்
அந்த மாலை வேளையில்
எங்கள் ஊரை
களிப்பின் வாடை குளிப்பாட்டும்.

தலைமகனுக்குத் தரப்படும் மரியாதையும் பொறுப்பும்
எங்கள் வீட்டு எருதுகளுக்கும்! அவற்றுக்குப் பிடித்தமான பெயர்கள் சூட்டி மகிழ்வோம்
ராமகாரு, அர்ஜூனகாரு, தருமகாரு...
பசுக்கள், எருமைகள், கன்றுகள் - இவற்றுடன் குடும்பமாக வாழ்வோம்
அழகுப் பெயரிட்டு அழைப்போம் -
ரங்கசானி, தம்மரமோக, மல்லெச்செண்டு...
ஏன் மாடுகளுக்காக திருவிழா எடுப்போம் - யெரோன்கா கேள்விப்பட்டதுண்டா?
தெரியுமா உனக்கு -

****

நீ எப்போதும் பசுவைப் பற்றி மட்டும் பேசுகிறாய்.
உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?
எருதுகளைப் பற்றிப் பேசுவதில்லை. - அவை மண்ணை உழுவதைப் பற்றிப் பேசுவதில்லை
களிமண் குவியல்களை மிதித்து மிதித்து
எங்கள் வீட்டுச் சுவர்களைப் பூசத் தேவையான மண்ணை
எங்களுக்குப் பதமாக ஆக்கித் தருவதைக் குறித்துப் பேசுவதில்லை.
ஒரு காலத்தில் கோட்டைகளைக் கட்டத் தேவைப்படும் களிமண்ணைக்கூட
இவைதான் மிதித்தளித்ததாக வரலாறு உண்டு -
யார் தந்த அதிகாரத்தில் "மாட்டுக் கறி உண்ணாதே?" என்று கூறுகிறாய்?

***

"எருதுகளைக் கொல்லாதே" என்கிறாய்,
ஆனால் செத்த மாட்டை உண்ணச் செய்கிறாய்-
எங்களைத் தீண்டத்தகாதவர்கள் என்கிறாய்
நிலமற்றவராக வைத்திருக்கிறாய்
நீ செய்யத் தயங்கும் அழுக்கான வேலைகளை
எங்களைச் செய்யச் சொல்கிறாய்
ஊர்த் தெருக்களில் விழுந்து கிடக்கும் செத்த மாடுகளை
அகற்றச் சொல்கிறாய்.

நன்றி: "பூவுலகு

தமிழ் ஓவியா said...

பெரியாரின் அதிர்ச்சி வைத்தியம்


மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே?

தேசியக் கட்சிகள் எனச் சொல்லப்படுகிற காங்கிரஸ், பா.ஜ.க., பொதுவுடைமைக் கட்சிகள் ஆகியவை, மாநிலங்களின் தனித்தன்மையை மறுக்கக் கூடியவையாக உள்ளன. அதுதான் இந்தத் தேசம் வளராமல் போனதற்கும் அந்தக் கட்சிகள் வளராமல் போனதற்கும் காரணம். தேசிய இனங்களின் சிக்கலை அவை அங்கீகரிக்காமல், அதற்கான தீர்வையும் அலட்சியப்படுத்துகின்றன. மாட்டு இறைச்சியைப் பயன்படுத்தத் தடை விதிப்பது இந்திய தேசத்தின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது போன்றது. கொழுப்பா தின்ற கூர்ம்படை மழவர் என, சங்க இலக்கியப் பாடல் சொல்கிறது.

கொழுப்பான பசு மாட்டைத் தின்றதற்கான சாட்சி வார்த்தைகள் இவை. இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கான புரதம், மாட்டு இறைச்சியில் இருந்துதான் கிடைக்கிறது. அதற்குத் தடைவிதிப்பது, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கை.

ஜாதிக் கட்டமைப்பின் பலம் என்ன...

அது ஒழிய என்ன செய்ய வேண்டும்? ஜாதி என்பது என்ன?

எதுவரை நீங்கள் திருமண உறவு வைத்துக் கொள்ளலாமோ... அதுதான் உங்கள் ஜாதி எல்லை. அந்தத் திருமண உறவுக்கான கட்டமைப்புதான் ஜாதியின் பலம். ஜாதிகள் ஒழிய வேண்டும் என்பது நமது விருப்பம். ஆனால், அது அவ்வளவு எளிது அல்ல என்பதுதான் அடிமட்ட யதார்த்தம். நம்பிக்கையான, சுயநலமற்ற தலைவர்கள் நம்மைத் தொடர்ந்து வழிநடத்தாதது ஒரு குறை. ஜாதியை ஒழிக்க, தொடர்ச்சியான போராட்டம் தேவை. பெரியாரின் அதிர்ச்சி மதிப்பீடுகள் அதைச் செய்தன. ஆண்தான் தாலி கட்ட வேண்டுமா? ஆணுக்கு, பெண் தாலி கட்டட்டும் என்றார். அப்படித்தான் சில திருமணங்-களை அவர் நடத்திவைத்தார். அவருடைய உறுதி, அவர் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை எல்லாம் அவரை ஏற்றுக்-கொண்டு, அவரைப் பின்தொடரவைத்தன. மன உறுதிமிக்கவராக இருந்தார்.

அவருடைய அதிர்ச்சி வைத்தியங்களுக்கு ஆதரவு இருந்தது. பெரியாரின் கட்டளையை ஏற்று, தேவதாசிப் பெண்களை பல பெரிய மனிதர்கள் மணந்தனர்.

குத்தூசி குருசாமி, பூவாலூர் பொன்னம்-பலனார், நெ.து.சுந்தரவடிவேலு போன்ற பெரியவர்கள் எல்லாம் தேவதாசிஇனப் பெண்களை மணந்தனர். திருமண உறவுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஒரு ஜாதியை, திருமண உறவுக்குள் மாற்றியதில் பெரியாருடைய பங்களிப்பு எத்தகையது என்பதைப் பாருங்கள். அப்படியான தொடர்ச்சியான அதிர்ச்சி மதிப்பீடுகளை முன்னெடுத்துச் செல்வதில், நம் தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, ஓட்டுக்காக ஜாதியை வளர்த்தார்கள்.

நன்றி: ஆனந்தவிகடன், 8.4.2015

தமிழ் ஓவியா said...

மான்கறி சாப்பிட்ட ராமனும், சீதையும்


- கோவி.லெனின்



நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் கறி சாப்பிடக் கூடாதுன்னு தடை இருக்கே, அப்போது எங்கே போனார்கள் இவர்கள். வீரமணி போன்றவர்கள் மான்கறி விருந்து நடத்துவார்களா? என்று கேட்டிருக்கிறார் ஒரு அக்கிரகாரத்து அரை வேக்காடு.

இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களான ஏழை, எளிய மக்களின் உணவான மாட்டுக்கறியை, மத வெறியின் அடிப்படையில் தடைசெய்யும் போக்கையும், அரிய உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மான்கறி தடை செய்யப்பட்டிருப்பதையும் ஒன்று போல காட்டும் புரட்டு இது என்பது சற்றேனும் சிந்திப்போருக்குத் தெரியும்.

எளிய மக்களின் சத்தான உணவு தடுக்கப்படுகிறதே என்ற கவலை நமக்கு! அதனால் மாட்டுக்கறியைத் தடை செய்யக் கூடாது என்கிறோம். எதிர்த்துக் குரல் கொடுக்கிறோம். போராடுகிறோம்!

ஆனால், அப்படி என்ன மான் கறியில் இவர்களுக்குப் பற்று என்று சிந்தித்தால், அப்போது வெளிப்படுகிறது குட்டு!

இந்துத்துவா கும்பலின் இஷ்ட தெய்வங்களான ராமனும், சீதையும் மான் கறியை எப்படியெல்லாம் விரும்பிப் புசித்தார்கள் என்பதை விவரிக்கிறது வால்மீகி ராமாயணம். மாரீசன் என்னும் மாய மானை விரும்பிக் கேட்டாரே வைதேகி. எதற்கென்று நினைக்கிறீர்கள்? தமிழ்ப்பட கதாநாயகிகள் போல கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கவா? அல்ல... அல்ல... அள்ளி எடுத்து அதன் கறியைச் சுவைப்பதற்காக!

கங்கைக் கரையிலும், யமுனைக் கரையிலும் ஏராளமாக மது உண்டும், புலால் புசித்தும் வாழ்ந்த சீதை விரும்பிய மான் கறியைக் கொண்டு வருவதற்காகத் (அதனால் பின் விளைவுகள் வரும் என்று தெரிந்தும்) தான் மானைத் தேடிச் சென்றான் ராமன் என்று வால்மீகி ராமாயணத்திலிருந்து (3.42.21) ஆதாரம் காட்டுகிறார் The Righteous Rama நூலின் ஆசிரியர் ப்ராக்கிண்டன்.

அது மட்டுமா, ராமனும் லட்சுமணனும் எந்தெந்த வகை மான்களைப் புசித்தனர் என்று வால்மீகி காட்டுகிறார் தெரியுமா? முதன்மையான நான்கு மான் இனங்களிலிருந்து ஒவ்வொன்றையும் வேட்டையாடிப் புசித்தனர். (அயோத்தியா காண்டம் 2 _- 52 _- 102).



Having hunted there four deer, namely Varaaha, Rishya, Prisata; and Mahaaruru (the four principal species of deer) and taking quickly the portions that were pure, being hungry as they were, Rama and Lakshmana reached a tree to take rest in the evening.

Alternative translation: Being famished, Rama, Lakshmana hunted and killed a boar, a Rishya animal (a white footed male antelope), a spotted deer and a great deer with black stripes and quickly partaking the pure meat reached a tree by the evening to spend the night.

யமுனை நதிக்கரையில் ராமனும் லட்சுமணனும் மான் கறி சுவைத்ததைச் சொல்லுகிறது அயோத்தியா காண்டம் (2 - _55_-32/33)



Translation: Thereafter having travelled only a couple of miles the two brothers Rama and Lakshmana killed many consecrated deer and ate in the river-forest of Yamuna.

Alternative translation: After travelling a distance of two miles further in the forest on the bank of Yamuna, those two brothers slew deers worthy for sacrifice for food and ate them. Ayodhya Kanda 2-55-32/33

காட்டியிருப்பது ஒரு சில எடுத்துக்-காட்டுகள் மட்டுமே! அவர்கள் குடித்துக் களித்த மது வகைகள் பற்றியும், உண்டு மகிழ்ந்த கறி வகைகள் பற்றியும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.

இப்படி காவிக்கூட்டம் போற்றும் கடவுளர் சாப்பிட்ட மான் கறியைத் தடை செய்தால் அவர்களுக்குக் கோபம் வருவது இயற்கைதானே!

மான் கறி தடை செய்யப்பட்டிருப்பதில் மாற்றுக் கருத்து அக்கிரகாரத்தில் இருக்குமாயின் அவர்கள்தானே அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

கடவுளின் உணவு தடுக்கப்படுமானால் அதற்காகக் கொந்தளித்து அவர்தானே மான் கறி விருந்து நடத்த வேண்டும்? எதிர்பார்க்கிறோம்....

ஹெச்.ராஜா நடத்தும் மான் கறி விருந்து அறிவிப்பை!

தமிழ் ஓவியா said...

வாழ்வில் உயர்வுகொள்!


- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்



சுயமரியாதைகொள் தோழா! - நீ
துயர்கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே! - (சுய)
உயர்வென்று பார்ப்பனன் சொன்னால், - நீ
உலகினில் மக்கள் எலாம்சமம் என்பாய்; துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் என்று
சொல்லிடுந் தீயரைத் தூவென்று உமிழ்வாய்!
அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்
ஆட்பட்டிருப்பவர் என்று சொல்வோரைப்
பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர் பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு! (சுய)

சேசு முகம்மது என்றும்! - மற்றும்
சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்த னென் றும்,
பேசி வளர்க்கின்ற போரில் - உன்
பெயரையும் கூட்டுவர் நீஒப்ப வேண்டாம்! காசைப் பிடுங்கிடுதற்கே - பலர்
கடவுளென் பார்! இரு காதையும் மூடு!
கூசி நடுங்கிடு தம்பி! - கெட்ட
கோவிலென்றால்ஒரு காதத்தில் ஓடு! (சுய)

கோவில் திருப்பணி என்பர் - அந்தக் கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு
வாயிலில் வந்துனைக் காசு கேட்கும்
வஞ்சக மூடரை மனிதர் என்னாதே!
வாயைத் திறக்கவும் சக்தி இன்றி
வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட் கேநீ தாயென்ற பாவனை யோடும் - உன்
சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும். (சுய)
கடவுள் துவக்கிக் கொடுத்த - பல
கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள்,
கடவுள் புவிக்கவ தாரம், - அந்தக் கடவுளின் தொண்டர்கள், லோக குருக்கள்,
கடவுள் நிகர் தம்பிரான்கள் - ஜீயர்,
கழுகொத்த பூசுரர், பரமாத்து, மாக்கள்
கடவுள் அனுப்பிய தூதர் - வேறு
கதைகளி னாலும் சுகங்கண்டதுண்டா? (சுய) அடிமை தவிர்ந்ததும் உண்டோ? - அன்றி
ஆதிமுதல் இந்தத் தேதி வரைக்கும்,
மிடிமை தவிர்த்ததும் உண்டோ? - அன்றி
மேல்நிலை என்பதைக் கண்டதும் உண்டோ?
குடிக்கவும் நீரற் றிருக்கும் - ஏழைக் கூட்டத்தை எண்ணாமல்; கொடுந்தடி யர்க்கு
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி!
வசம்கெட்டுப் போனது நமதுநன்னாடு. (சுய)

உழைக்காத வஞ்சகர் தம்மை - மிக
உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ? விழித்திருக் கும்போதி லேயே - நாட்டில்
விளையாடும் திருடரைச் 'சாமி'என் கின்றார்!
அழியாத மூடத் தனத்தை - ஏட்டில்
அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை
முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர் முதலெழுத்தோதினும் மதியிருட் டாகும்! (சுய)

--------------------------

40,600 பாடல் வரிகள்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மொத்தம் 40 ஆயிரத்து 600 பாடல் வரிகள் பாடியுள்ளார். அவை கீழ்க்காணும் வகையின என்று ஆய்வாளர்கள் ஆய்ந்து அறிவித்துள்ளனர்.

அகவல் பாக்கள் - 12,808 அடிகள்
விருத்தப் பாக்கள் - 12,283 அடிகள்
சிந்து இசைப்பாக்கள் - 8,705 அடிகள்
வெண்பாக்கள் - 6,086 அடிகள்
பிறவகைப் பாக்கள் - 718 அடிகள்
_ _ _ _ _ _ _ _ _

40,600 அடிகள்
_ _ _ _ _ _ _ _ _

(தகவல்: சு.அறிவுக்கரசு எழுதிய இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார் நூலிலிருந்து...)

தமிழ் ஓவியா said...

அது என்ன வீரத் துறவி?

குடந்தை கருணா

அது என்ன வீரத் துறவி? ஒன்று வீரனா இருக்க வேண்டும் இல்லையென்றால் துறவியாக இருக்க வேண்டும்; இரண்டும் சேர்ந்தா எப்படி துறவியாக இருக்க முடியும்?

சரி; அப்படி என்னத்தை இந்த ராம கோபாலன் செஞ்சார்னு இவருக்கு இப்படி ஒரு பட்டம்?

அன்னைக்கு, விடுதலை ஆசிரியர் வீரமணியை பேட்டி எடுத்த தந்தி தொலைக்காட்சி ரங்கராஜ் பாண்டே, தன்னோட முன்னுரையில், பெரியார், அண்ணா, கலைஞர் அப்படின்னு பட்டம் கொடுத்துக்கறது திராவிடர் இயக்கத்தோட வேலை, அப்படின்னு சொன்னாரே.

அப்ப இந்த ராமகோபாலய்யருக்கு வீரத்துறவின்னு பட்டம் இருக்குதே; அதை யாருய்யா கொடுத்தது: அப்புறம், இந்த காஞ்சி மடத்திலேர்ந்து ஓடிப்போய், அப்புறம் கொலை வழக்குலே மாட்டிக்கிட்டு, ஜெயிலுக்கும், பெயி லுக்கும் அல்லாடுன, ஜெயேந்திர சரஸ்வதிக்கு, லோக குருன்னு எவன்யா பட்டம் கொடுத்தான்?

இன்னொரு கார்ப்பரேட் பிராடு சாமியார் ரவி சங்கர், அந்தாளுக்கு சிறீ சிறீ சிறீ அப்படின்னு மூணு தடவை போட்டுக்கிறானே, அது என்ன அர்த்தம்?

சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த ராம கோபாலன், சவால் விடுறார். யாருக்கு, 97 சதவிகிதம் உள்ள மக்களுக்கு. வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி பெரியார் திடலில் தாலி அகற்றும் நிகழ்வும், மாட்டிறைச்சி விருந்தும் ஏற்பாடு செய் ததை எதிர்த்து வீராவேசமா அறிக்கையெல்லாம் விடுறார்.

என்னய்யா செய்ய போறன்னு கேட்டா? இப்ப சொல்ல மாட்டேங்கிறார். இது தான் வீரத் துறவி?

ராம கோபாலய்யர், அறிக்கையிலே, மாட் டிறைச்சி பத்தியே பேச மாட்டேங்கிறார். தாலி அகற்றுவதை பற்றித்தான் பேசுறார். ஏன்னா, மாட்டிறைச்சி எப்படி சாப்பிடலாம்னு கேட்டா, இவா கோஷ்டி, அய்ந்து நட்சத்திர ஹோட்டல்ல போய் எப்படி கறி சாப்பிடறாள்னு மூஞ்சியை கிழிச்சிடுவா;

அப்புறமா, இவாளுக்கு ஆதரவா விவரம் தெரியாத சூத்திர முண்டங்கள் ரகளை பண்ணனுங்கறதுக்கு கிடைக்காம போயிடும். அதான், மாட்டுக்கறி விஷயத்தை கம்கமா வச்சுக் கிட்டு, தாலி அகற்றல் நிகழ்ச்சியை பேசினா, நம்ம சூத்திரர்கள், கொஞ்சம் பேர் கிடைப்பாங்க.

இவ்வளவு தான் மேட்டர். மற்றபடி ராம கோபாலய்யரைப் பார்த்து அவங்க வீட்டிலேயே யாரும் மதிக்கிறது இல்லை. அது ஒரு காமெடித் துறவி.



Read more: http://www.viduthalai.in/page1/99589.html#ixzz3YbhsB5Fu

தமிழ் ஓவியா said...

ஏப்.14- அம்பேத்கர் விழாவுக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுப்பு உரிய முறையில் நீதி கோரி சட்டப் பரிகாரம் தேடப்படும்

ஏப்.14- அம்பேத்கர் விழாவுக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுப்பு

உரிய முறையில் நீதி கோரி சட்டப் பரிகாரம் தேடப்படும்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிக்கை

இரயில்வே நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்!

சென்னை பெரியார் திடலில் வரும் 14ஆம் தேதி திராவிடர் கழகத்தில் சார்பில் நடத்தப்பட உள்ள அண்ணல் அம்பேத்கர் விழாவுக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து உரிய முறையில் சட்டப் பரிகாரம் தேடப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார்.

உதவி ஆணையரின் ஆணை

சென்னை மாநகர காவல் வேப்பேரி சரக காவல் உதவி ஆணையாளரின் செயல்முறை ஆணை முன்னிலை:- ஜெ. அய்யப்பன்.

ந.க.எண்.15/உ.ஆ.(வேப்பேரி) முகாம் /2015 நாள்: 12.4.2015

சிறுதலைப்பு: திராவிடர் கழகம் - 14.4.2015 அன்று மாட்டுக் கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப் படுகிறது - தொடர்பாக.

பார்வை: திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம், பெரியார் திடல், எண்.84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை -7 அவரது 29.3.2015 நாளிட்ட மனு.

***

ஆணை:

சென்னை காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை நகரில் தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன் படி, 9.4.2015 அன்று காலை 8.00 மணி முதல் 24.4.2015 அன்று காலை 8 மணி வரை (இரு நாட்களும் உட்பட), சென்னை நகரில் நடைபெறும் பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள், உண்ணாவிரதம், மனித சங்கிலி உள்ளிட்ட அனைத்து போராட்டங்களையும், சட்டம், ஒழுங்கு பொது அமைதி மற்றும் போக்குவரத்தை கருத்திற்கொண்டு 15 நாட்களுக்கு தடை செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. எனினும், தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-உட்பிரிவு 3(அ)ன் படி இந்நிகழ்ச்சிகளை நடத்த விரும்புவோர், 5 நாட்களுக்கு முன்னதாக முறைப்படி அனுமதி கோரி விண்ணப்பித்தால், உட்பிரிவு (ஆ)-வின்படி அம்மனுவை பரிசீலனை செய்து அனுமதி/மறுப்பு ஆணை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் 18.3.2015 அன்று காவல் அனுமதி பெற்று நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது திரு. கே. வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) அவர்கள் கீழ்க்கண்டவாறு அழைப்பு விடுத்துள்ளார்.

பெரியார் திடலில் தாலி அகற்றுகின்ற விழாவை பெண்கள், எங்கள் பெண்கள் நிகழ்த்தி முன்னாலே நடத்துவார்கள், வந்து பார், ஒத்தக் கருத்துள்ளவர்கள் வரலாம். அன்றைக்கு மாலையிலேயே தாலியை அகற்றிய வுடன் மாட்டுக்கறி விருந்து நடைபெறும். யார் யார் வரனும்னா இப்பவே ரிசர்வ் பண்ணிக்குங்க இடம் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும்தான் உண்டு. ஏன்னா நான் என்ன சாப்பிடனும்கிறத இராம கோபாலன் அய்யர் முடிவு பண்றதா?

தமிழ் ஓவியா said...

3. மேலும், 14.4.2015 அன்று மாலை, சென்னை, பெரியார் திடலில் மாட்டுக் கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகக் பத்திரிகைகள் மூலமாக வும், தொலைக்காட்சி மூலமாகவும் அறிவிப்புகள் வெளி யிடப்பட்டுள்ளதை கண்டித்தும், இப்போராட்டத்தினால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்பதுடன், பொது அமைதி கெடவும், தாலியை தமிழ்நாட்டு பெண்கள் புனிதமாக கருதும் வழக்கம் உள்ள நிலையிலும், பசுவை தெய்வமாக கருதி வழிபடும் நிலையிலும், மேற்படி நிகழ்ச்சியை நடத்தினால், மத நல்லிணத்திற்கு குந்தகம் ஏற்படவும் வாய்ப்புள்ளது எனவும் குறிப்பிட்டு, மேற்படி நிகழ்ச்சியை தடை செய்யவும், திராவிட கழகத் தலைவர் திரு. கே. வீரமணியை கைது செய்யவும் கோரி, இந்து அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் (25), தனி நபர்களும் மனு அளித்துள்ளனர்.

4. மேலும், அகில இந்திய இந்து மகாசபாவின் மாநில துணைத் தலைவர், பி.எஸ். தனசேகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திராவிடர் கழகத்தின் தலைவர் கீ.வீரமணி, 14.4.2015 அன்று மாலை பெரியார் திடலில் மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து அவரை கைது செய்ய காவல் ஆணை யாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரிடம் மனு கொடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருந்தால், லலிதாகுமாரி, வழக்கில் சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதன் பேரில் ஜி.1 வேப்பேரி காவல் நிலைய கு.எண்.634/2015 ச/பி 153(A), 295(A), 505 (i) (b) (c) & 505 (2) இதச-வின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மனுதாரர் மேற்படி நிகழ்ச்சியை நடத்த காவல் ஆணையாளர் தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு (W.P.No. 10585/2015) நிலுவையில் உள்ளது.

தமிழ் ஓவியா said...

5. திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம், பெரியார் திடல், எண். 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை - 7 அவரது 29.3.2015 நாளிட்ட மனுவில், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 14.4.2015 அன்று மாலை, சென்னை, பெரியார் திடலில், மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும், இதைக் கொச்சைப்படுத்தியும், எதிர்த்து போராடுபவர்கள்மீதும், பெரியார் சிலையை உடைப்போம் என்று சொல்வோர்மீதும் நடவடிக்கை எடுக்கும்படி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

6. மனுதாரர் அமைப்பினர் தங்களது நிகழ்ச்சிக்கு பொது மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், சென்னை நகரில் அமலில் உள்ள தமிழ்நாடு நகர காவல் சட்டம் விதி 41-ன் படி இதுவரை அனுமதி பெறப்படவில்லை.

7. இத்தகைய சூழலில், மேற்படி நிகழ்ச்சி, இதர தரப்பினரின் வெறுப்புணர்வை தூண்டி, சட்டம், ஒழுங்கு, பொது அமைதி மற்றும் மத நல்லிணத்திற்கு குந்தகம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாலும், மேலும், இந்நிகழ்ச்சிக்கு முறைப்படி காவல் துறை அனுமதி பெறாததாலும், மனுதாரர் 14.4.2015 அன்று மாலை பெரியார் திடலில், நடத்த உத்தேசித்துள்ள மாட்டு கறி விருந்து மற்றும் தாலி அகற்றும் நிகழ்ச்சி நடத்துவதற்கு தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41 (2)-ன்படி சென்னை மாநகர காவல் ஆணையாளரின் ஆணைக்குட்பட்டு இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

காவல் உதவி ஆணையாளர்
வேப்பேரி, சரகம், சென்னை - 7

பெறுநர்:

திரு. கலி. பூங்குன்றன், துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்,
பெரியார் திடல், எண். 84/1(50),
ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-7

தகவலுக்காக

காவல்துணை ஆணையாளர்கள், கீழ்ப்பாக்கம் மாவட்டம் மற்றும் போக்குவரத்து (கிழக்கு).

காவல் இணை ஆணையாளர்கள், கிழக்கு மண்டலம், நுண்ணறிவுப் பிரிவு மற்றும் போக்குவரத்து (தெற்கு)

காவல்கூடுதல் ஆணையாளர்கள், தெற்கு, வடக்கு மண்டலம் மற்றும் போக்குவரத்து, சென்னை காவல்.

காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை காவல்.

இவ்வாறு அந்த ஆணை கூறுகிறது.

இந்த ஆணையை எதிர்த்து சட்டப்படியான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதைக் கழகத் தோழர்களுக்கும் பொது மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
12.4.2015



Read more: http://www.viduthalai.in/page1/99576.html#ixzz3YbjJ1hMh

தமிழ் ஓவியா said...

அன்பார்ந்த பெண்ணுலகமே



ஆபத்து நெருங்குகிறது. மதவாதி களின் பிடியிலே மக்களாட்சி. ஒட்டுமொத்த மக்களின் கருத்துரிமை மறுக்கப்படுகிறது. பேச்சுரிமை ஒடுக்கப் படுகிறது. எழுத்துரிமை நசுக்கப் படுகிறது. தனிமனிதனின் சுயமரியாதை தாக்கப்படுகிறது.

மதத்தின் ஆட்சியிலே ஆரம்ப கட்ட நிலைதான் இது. இன்னும் வளர்ந்தால் பேராபத்தை சந்திக்க வேண்டி வரும். குறிப்பாக பெண்கள் மிகமிக எச்சரிக்கையாகவும், விழிப் போடும் இருக்கவேண்டிய காலமிது. உடல்ரீதியான தாக்குதல்கள் ஒருபுறம், மதரீதியான தாக்குதல்கள் மறுபுறம்.

இரண்டையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் பெண்ணுலகம். இதில் மதரீதியான தாக்குதல்களை பெண்கள் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது

ஏற்கெனவே மதத்தின் பெயராலும் முடை நாற்றமெடுக்கும் மூடத்தனத்தின் மொத்த உருவமாய் பெண்கள். எனவே மதரீதியான தாக்குதலில் பலியாக்கப்படுவோரும் பெண்களே. படித்த பெண் களும் பாமரர்களுக்கு இணையாய் மூடநம்பிக்கை யிலே. எச்சில் இலைமீது உருளுவதும் ,காலில் அணிய வேண்டிய செருப்பை உடல்மீது வைத்துக் கொண்டு தரையில் வீழ்ந்து கிடக்கும் அவலத்தின் உச்சியிலே இன்னமும் பெண்கள்.

கழுதைக்கு திருமணம் செய்ய வேண்டி முன்ன ணியில் பெண்கள்.கழுதையின் கழுத்திலேயும் தாலி ,பெண்கள் கழுத்திலேயும் தாலி.சூடு சுரணையற்ற நிலையில் பெண்ணுலகம். தாலி அணிவதும் ,அணியாமல் இருப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை.அதைப்பற்றி விவாதம் செய்யவும் விமர்சிக் கவும் பெண்களுக்கு முழு உரிமை உண்டு என்பதை அனைத்து பெண்களும் உணர வேண்டும்.

அதை சமூகத்திற்கு உணர்த்தவேண்டிய கடமை பெண் களிடம் தான் உள்ளது.கழுதையின் கழுத்தையும் நாயின் கழுத்தையும் அலங்கரிக்கும் தாலி பெண்களுக்கு தேவையா? சிந்தித்து பாருங்கள். பகுத்தறிவுக் கொள்கையை ஏற்று உள்ளவர்களும், மூடநம்பிக்கை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துடைய வர்களும் பெருந்திரளாக போராட களம் இறங்கவேண்டிய நேரமிது.

இல்லையென்றால் எத்தனையோ போராளிகளும் புரட்சியாளர்களும் பாடுபட்டு கிடைத்த பெண்ணுரிமை களை மதத்தின் கீழே தொலைக்க வேண்டி வரும். மதவாதிகள் ஆன்மீகத்தின் மீதான பாசிசத்தை பலமாக எழுப்ப துடித்துக் கொண்டுள் ளனர். அதை அனுமதித்தால் முதலில் பாதிக்கப் படுவது பெண்கள் தான் என்பதை பெண்கள் உணர வேண்டும்.

சமூகத்தில் சரிபாதியாய் உள்ள பெண் இனத்தை ஒரு பார்வையாள ராக வைத்துக் கொண்டு ஒரு போராட்டத்தில் ஈடுபட்டால் அந்த போராட்டம் வெற்றி பெறாதுஎன்ற தந்தை பெரியாரின் கூற்றை நினைவுகொள்வோம். நாடு தழுவிய வட்டார மாநாடுகளை தமிழர் தலைவர் அறிவித்துள்ளார்.

பெண்கள் பெருந் திரளாக பங்கேற்போம். ஒவ்வொரு மேடையிலும் பகுத்தறிவு பரப்ப பெண்களின் பங்கேற்பு இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களுக்கு எதிராக பெண்களே போராட வேண்டும்.இது நம் அடுத்த தலைமுறைக்கான ஒரு பாதுகாப்புப்பணி.

ஆரோக்கியமான வாழ்வோடு மத ஆளுமை யில்லாத ஒரு உண்மையான ஒரு சுதந்திரத்தை நம் அடுத்த தலைமுறை அனுபவிக்க போராட வேண்டியது நம் கடமை.

- ந.தேன்மொழி, குடியாத்தம்



Read more: http://www.viduthalai.in/page1/99587.html#ixzz3YbkW2tT5