Search This Blog

6.9.14

விகடன் மேடை - கி.வீரமணி பதில்கள்

"துல்லியமாக கணித்தார் பிரபாகரன்!”
விகடன் மேடை - கி.வீரமணி பதில்கள்
**************************************************************************************
வாசகர் கேள்விகள்

கா.சரவணன், உடன்குடி.

''பிரபாகரன் உள்ளிட்ட ஈழப் போராளித் தலைவர்களுடனான திராவிடர் கழகத்தின் பிணைப்பு என்ன?''

''விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன் அவர்களின் நலம்விரும்பிகளான சகோதரர் பழ.நெடுமாறன் மற்றும் என்னைப் போன்ற வர்களிடம் கலந்து கருத்து அறியத் தவற மாட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஒப்புவமையற்ற ஆற்றலைத் தொடக்கத்தில் இருந்தே சரியாகக் கணித்த இயக்கம் திராவிடர் கழகம் என்பதால், அவருக்கு அவ்வளவு நம்பிக்கை எங்களிடம்.

1986-ம் ஆண்டு நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள பெங்களூரு வந்திருந்தார் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே. அவரை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சந்தித்து, ஈழப் பிரச்னை தொடர்பாக சுமுகமான உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி விரும்பினார். தன் விருப்பத்தை தமிழக முதல்வர்  எம்.ஜி.ஆரிடமும் தெரிவித்து, ஆவன செய்யும்படி கேட்டுக் கொண்டார் ராஜீவ். எம்.ஜி.ஆர் தமது உளவுத் துறை அதிகாரிகள் மூலம் தமிழ்நாடு முழுக்கத் தேடியும் பிரபாகரனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது உடல் நலம் சரியில்லாமல் நான் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அங்கே வந்து தமிழக காவல் துறையின் உயர் அதிகாரி ஒருவர், என்னைச் சந்தித்தார். ''எப்படியாவது பிரபாகரனை பெங்களூருக்கு அனுப்பி, ஜெயவர்த்தனேவைச் சந்திக்கச் செய்யுங்கள்’ என்று முதல்வர்  உங்களிடம் தகவல் சொல்லச் சொன் னார்’ என்றார். அந்த அதிகாரிக்கு எங்களைப் பற்றி தெரியும். அப்போது பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்று உண்மையாகவே எனக்குத் தெரியாது. 'தகவல் அனுப்ப முடிந்தால், அவசியம் சொல்லி அவரை பெங்களூருக்கு அனுப்ப முயற்சிக்கிறேன்’ என்றேன்.



ஆச்சர்யமாக, அதே நாளில் எனது உடல்நிலையை விசாரிக்க மருத்துவமனைக்கு திடீரென்று வந்து நின்றார் தம்பி பிரபாகரன்! என்னால் நம்பவே முடியவில்லை. பிரபாகரனிடம் எம்.ஜி.ஆரின் ஆலோசனையைப் பற்றி சொல்லி, அவரை பெங்களூருக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். அவர் அதில் ஆர்வம் காட்டவே இல்லை. ஆனால் 'நீங்கள் செல்லாவிட்டால், ஈழத் தமிழர்களுக்கு நல்விளைவு ஏற்படுவதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்கிற பேச்சு உருவாகும்’ என்றெல்லாம் அவரைச் சமாதானப்படுத்த முயற்சித்தேன். இறுதியில், 'அந்தச் சந்திப்பினால் எந்த விளைவும் ஏற்படாது. ஆனாலும், தமிழக முதல்வர் மற்றும் உங்களைப் போன்றவர்கள் சொல்வதால் ஒப்புக்கொள்கிறேன்’ என்றார். அவரது கணிப்புதான் பிறகு சரி என்று ஆனது!
பின்னர், புலிகளின் தொலைத்தொடர்புக் கருவிகளை தமிழக அரசு பறிமுதல் செய்ததை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார் பிரபாகரன்.

'உண்ணாவிரதத்தைக் கைவிட்டுவிட்டுப் போராடுங்கள்’ என்று அறிக்கை விடுத்தேன். அதை ஏற்று உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள முன்வந்தனர் புலிகள். சென்னை இந்திரா நகரில் நடந்த உண்ணாவிரதத்தை பழரசம் கொடுத்து நாங்கள் முடித்துவைத்தோம். ஆயுதங்களையும் திரும்பத் தரும் நிலை உடன் வந்தது.

புலிகள் இயக்கத்தின் தளபதி கிட்டு ஆற்றலும் அறிவும் பண்பும் நிறைந்தவர். ஆன்டன் பாலசிங்கமும் எங்களிடம் பல நேரங்களில் அறிவார்ந்த ஆலோசனைகளைப் பெறுவார். பேபி (சுப்பிரமணியம்), எப்போதும் அன்புடன் பழகிய அதிகம் பேசாத தம்பியின் தளகர்த்தர். இப்படி பலரும் அன்புடன் பழகியவர்கள். இதையெல்லாம் நினைவுகூர்ந்து எழுதும்போது என்னை அறியாமல் கண்கள் பனிக்கின்றன!''
******************************************************************************************
கி.முருகேசபாண்டியன், சேத்தியாத்தோப்பு.

''நீங்களும் சரி, கலைஞரும் சரி, உங்களைப் பற்றி விமர்சித்தால், 'பார்ப்பனப் பத்திரிகை’ என்று சாடுகிறீர்கள். ஆனால், உங்களுக்குச் சாதகமான செய்திகள் அதே பத்திரிகைகளில் வந்தால், தவறாமல் அவற்றை மேற்கோள் காட்டுகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?''

''அது ஒன்றும் தவறு அல்லவே! பார்ப்பன ஏட்டை, 'பார்ப்பனப் பத்திரிகை’ என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது? எதிரிகளே நம் கருத்துகளை ஏற்கும்போது அதைச் சுட்டிக்காட்டி, 'நியாயங்கள் எப்போதும் தோற்காது’ என்று நிறுவுவது எப்படித் தவறாகும்?''
****************************************************************************************


அழகுமணி, தர்மபுரி.

''தேர்தலில் நிற்காத திராவிடர் கழகம், தேவை இல்லாமல் அரசியல் கட்சிகளோடு ஐக்கியமாகி இருப்பதும், தேர்தல் பிரசாரம் செய்வதும் அவசியமா?''

''தேர்தலில் நிற்காத திராவிடர் கழகம், அரசியல் கட்சிகளோடு ஐக்கியமாகி இருக்கிறது என்பது சரியான பார்வை அல்ல. எங்கள் தனித்தன்மையை எப்போதும், எதிலும் காப்பாற்றியே இருக்கிறோம்.

தந்தை பெரியார் இறந்த பிறகு அவரது உடல் ராஜாஜி மண்டபத்தில் கிடத்திவைக்கப்பட்டிருந்த அந்த நேரத்தில் என்னிடம் செய்தியாளர்கள், 'ஒரே ஒரு கேள்வி’ என்று துளைத்தனர். 'தி.க இனி இருக்காது; தி.மு.க-வில் இணையும் என்று கூறுகிறார்களே... அதுபற்றி உங்கள் பதில்?’  என்று கேட்டனர்.

அதற்கு நான், 'தி.க ஒருபோதும் கலையாது; எந்தக் கட்சியுடனும் இணையாது. அதனுடைய தனித்தன்மையோடு இயங்கும்’ என்றேன். அதே நிலைதான் இன்றும்; இனி என்றும்.

தேர்தல் நேரத்தில் பிரசாரம் செய்வது என்பது, தந்தை பெரியார் காலம்தொட்டுச் செய்யப்படுவதே தவிர புதிது அல்ல. காரணம், 'ராமன் ஆண்டால் என்ன... ராவணன் ஆண்டால் என்ன?’ என்று எங்களால் இருக்க முடியாது. எங்களைப் பொறுத்தவரை 'சூத்திரச் சம்பூகன் தலையை வெட்டிய ராம ராஜ்ஜியத்தை மக்கள் ஆதரிக்கக் கூடாது. சீதையைப் பத்திரமாகக் காவலில் வைத்த ராவணனின் ஆட்சியைப் போன்றது வர வேண்டும்’ என்பதை மக்களுக்குக் கூறுவோம்!''

 ****************************************************************************************
பாலமுருகன், எழும்பூர்.

''அட, தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கு மேல் கறுப்புச் சட்டை அணிந்துகொண்டு இருப்பது போரடிக்கவில்லையா? மற்ற நிற ஆடைகள் அணியத் தோன்றியதே இல்லையா?''

''தொடர்ந்து மூச்சுவிட்டுக்கொண்டு இருக்கிறோம் என்பதால், அது போரடித்துவிடுமா என்ன? நிறத்தை விரும்பி நான் கறுப்புச் சட்டை அணிந்திருந்தால், ஒருவேளை போரடித்து இருக்கும். ஆனால் கொள்கைக்காக, லட்சியத்துக்காக அணிந்துள்ளபோது எப்படி அலுக்கும் நண்பரே? வீட்டில் உள்ளபோது சில நேரங்களில் வெள்ளை நிறச் சட்டை அணிவதும் உண்டு. மருத்துவப் பரிசோதனை சமயங்களில்  கட்டாயப்படுத்தி வேறு நிற ஆடைகளை அணிவிப்பார்கள்!''

*************************************************************************************
குமரன் வளவன், சிங்கப்பூர்.

''தற்போதைய நிலையில் திராவிட இயக்கங்களின் சாதனைகள், வேதனைகள்... என்னென்ன?''

''திராவிட இயக்கங்கள் இல்லையெனில் தன்மான (சுயமரியாதை) உணர்வு மக்களுக்கு வந்திருக்குமா, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் உரிமையின் காற்றைச் சுவாசித்திருப்பார்களா, கல்வி, வேலைவாய்ப்புகளில் பரவலாக ஒடுக்கப்பட்ட மக்கள், வாய்ப்புகளைப் பெற்றிருப்பார்களா, தமிழ் உணர்வு- இன உணர்வு போன்றவை வெடித்துக் கிளம்பியிருக்குமா, இல்லை தமிழன் மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகள் முறியடிக்கப்பட்டிருக்குமா, பெண் உரிமை சமத்துவம் வந்திருக்குமா, வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமை மீட்புகள் நடந்திருக்குமா? இப்படி இன்னும் சாதனைகளை ஏகமாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

வேதனைகள், இல்லாமல் இல்லை! பதவி காரணமாகப் போட்டிகளும் கட்டுப்பாடற்ற தன்மையும் தலையெடுத்தது முக்கியமானது. ஒருவருக்கொருவர் பொதுவாக உறவாடும் பண்புகூட இல்லாமல்போய்விட்டதே. துக்க வீட்டில்கூட ஒன்றாக அமர்ந்து பேசத் தயங்கும் நிலையே இன்று உள்ளது. தனிமனித விமர்சனங்களுக்கு இடம் தந்தது சகிக்கமுடியாத இன்னொரு விஷயம்!''

*****************************************************************************************
செந்தமிழ்ச் செல்வன், சேலம்.

''அரசியல் கட்சிகள்தான் பிளவுபடுகின்றன என்றால், திராவிடர் கழகம் போன்ற சமுதாய இயக்கங்களும் பிளவுபடுகின்றனவே... என்ன காரணம்?''
'' 'திராவிடர் கழகம்’ பிளவுபடவில்லை. சிலர் வெளியேற்றப்பட்டவர்கள். வெளியேறியவர்கள் என்பதால் சில அணிகள் உள்ளன... அவ்வளவுதான். கட்டுப்பாடு காக்கும் சமூகப் புரட்சி இயக்கங் களில் இந்த நிலை தவிர்க்க இயலாத ஒன்றே. களைகளையும் பயிர்களையும் உழவன் ஒன்றாகக் கருதிட முடியுமா?''

 **************************************************************************************
பிரபாகரன் சேரன், பழநி.
''சுயமரியாதை இயக்கக் காலகட்டத்தில் குஞ்சிதம் குருசாமி, மூவலூர் ராமாமிர்தம், நீலாம்பிகை, நீலாவதி, மீனாம்பாள் சிவராஜ், பினாங்கு ஜானகி... என ஏராளமான பெண்கள் இருந்தனர். ஆனால், இப்போது உங்கள் இயக்கத்தில் மட்டும் அல்ல, பொதுவாகவே சமூக மாற்றத்துக் கான எந்த அமைப்புகளிலும் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறதே... ஏன்?''

''எனக்கு அப்படித் தோன்றவில்லையே! அன்றைக்கு உள்ளதுபோலவே இன்றும் ஏகமான மகளிர், சமூக மாற்றத் துக்கு தங்களின் சேவையை அளிக்கத் தவறுவது இல்லை!

அன்றைய காலகட்டத்தில், மகளிர் பொதுவெளியில் வந்து சேவை ஆற்றுவது வியப்புடன் பார்க்கப்பட்டது. 'திராவிடர் கழகம்’ என்ற சமூகப் புரட்சி இயக்கத்துக்கே தலைமை தாங்கி, வழிநடத்தி, ராவண லீலா நடத்தி, இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தவர் அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார். எங்கள் இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றி ஏ.பி.ஜெ. மனோரஞ்சிதம் ஒரு நூலே எழுதி வெளியிட்டுள்ளாரே! திராவிடர் கழகத்தில்தானே பொருளாளர் என்ற முக்கியப் பொறுப்பில் ஒரு பெண் (மருத்துவர் பிறைநுதல் செல்வி) பொறுப்பு வகித்து வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்.

இப்போதும் பல்வேறு இயக்கங்களில் மகளிர் பங்களிப்பு அபரிமிதமாகவே இருக்கின்றன. ஆனால், ஊடகங்களில் அவை குறித்து விளம்பரம் போதிய அளவில் கிடைப்பது இல்லை... அவ்வளவுதான்!''

***********************************************************************************
கே.சுந்தரமூர்த்தி, அரவக்குறிச்சி.

''சமூக நீதிக்காகப் போராடும் இயக்கங்கள், சாதிக் கொடுமைகளுக்கு, கௌரவக் கொலைகளுக்கு, மனிதனே மனிதக் கழிவை அகற்றுவதற்கு எதிராகப் போராடாமல் இருப்பது ஏன்?''

'' 'கௌரவக் கொலை’ என்ற பெயரில் சாதிக்கு முட்டுக்கொடுக்கும் முயற்சி நம் சமூகத்தின் சாபக்கேடு; மனிதக் கழிவை மனிதனே சுமப்பது தேசிய அவமானம். மனிதனே மனிதக் கழிவைச் சுமப்பதை எதிர்க்கும், கௌரவக் கொலையைத் தடுக்கும் அறப்போராட்டத்துக்குத் தலைமை ஏற்று ஒருமித்த கருத்துள்ளவர்களை இணைத்து திராவிடர் கழகம் போராடும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளோம். இதற்கெல்லாம் அடிப்படை, சாதி. அதை ஒழிக்கும் அடிப்படைப் பணிகளைப் பல வகைகளில் செய்துகொண்டுதான் இருக்கிறோம்!''

---------------------------- பகுத்தறிவோம்...ஆனந்த விகடன்  10 Sep, 2014

''திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதைத் திருமணங்களில் நடந்த குதூகலக் களேபரங்கள் குறித்துச் சொல்லுங்களேன்?''
'' 'பெரியார் ஒரு கன்னடர். திராவிட இயக்கமே தமிழர்களை அழுத்தி, தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்துக்காக உருவானது’ என்று சில தமிழ்த் தேசியவாதிகள் முன்வைக்கும் விமர்சனங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?'' 

 ''உங்களோடு கொள்கை ரீதியில் நெருக்கமானவர் நடிகர் கமல்ஹாசன். அவருடன் உங்களுக்கு இருக்கும் நெருக்கம் குறித்து சொல்லுங்களேன்?''
                  ------------------ அடுத்த வாரம்...நன்றி-”ஆனந்த விகடன்”

22 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?


ஆயுள்
நம் ஆயுளை நிர்ண யிப்பது நாம் அல்ல - பிறக்கும் பொழுதே நமக்கு மேலே இருக்கக் கூடியவன் எழுதி வைத்த ஒன்று அது - அதனை மாற்ற யாராலும் முடியாது - முடியவே முடியாதாம்.

அப்படியென்றால் 50 ஆண்டுகளுக்குமுன் நம் மக்களின் சராசரி வயதை விட இப்பொழுது மிகவும் உயர்ந்துள்ளதே! இது ஆண்டவன் எழுதி வைத்ததாலா அறிவியல் - மருத்துவ சாதனையாலா?

Read more: http://viduthalai.in/e-paper/87171.html#ixzz3CXx6HxiZ

தமிழ் ஓவியா said...

தண்டனைக் காலத்தில் பாதிக்குமேல் சிறையில் அனுபவித்த விசாரணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்


உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு மனிதநேயம் மிக்க வரலாறு படைக்கும் தீர்ப்பாகும்

தண்டனை காலத்தில் பாதிக்குமேல் சிறையில் தண்டனை காலத்தில் பாதிக்குமேல் சிறையில் அனுபவித்த விசாரணை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும், 2 மாதங்களுக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மனிதநேயம் மிக்க வரலாறு படைக்கும் தீர்ப்பை வரவேற்றும், உச்சநீதிமன்றத்தைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நேற்று (5.9.2014) உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பு மனிதநேயம் மிக்க, வரலாறு படைக்கும் ஒரு தீர்ப்பாகும். இதற்காக உச்சநீதிமன்றத்தைப் பாராட்டுகிறோம்.

நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ள முழு விசாரணை - அல்லது விசாரணையே நடைபெறாது ரிமாண்டை - தற்காலிகக் காவலை - நீட்டித்துக் கொண்டே பல ஆண்டுகள் சிறையில் கழிக்கும் இள வயதுடைய வர்கள் (பெரிதும்) எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாகும் என்பது நம் நாட்டு ஆட்சியாளர்களுக்கோ, நீதிபரிபாலனம் நடத்தும் அமைப்புகளுக்கோ பெருமை தரும் ஒன்றாக ஆகாது.

அக்கைதிகள் - விசாரணைக் கைதிகள் என்று அழைக்கப்படும்(Undertrial Prisoners) பலரும், குற்றங்கள் ஏதும் செய்யாமல் சிக்கிக் கொண்டவர்கள் அல்லது சிக்க வைக்கப்பட்ட பகடைக் காய்களே ஆவர்.

சிறைச்சாலைகளுக்குச் சென்று நிலவரத்தை அறிந்த வர்களும் அதனை ஆய்வு செய்தவர்களும்தான் இது ஒரு முக்கிய சமூகப் பிரச்சினை என்பதைப் புரிந்து கொண்டு, இதற்கு ஒரு நல்ல தீர்வு காணுவது அவசியம் என்று கருத முடியும்.

விசாரணையின்றி இருக்கக் கூடியவர்கள் பலரையும் சந்தேகக்கேஸ் என்ற பெயரிலும், வீட்டை விட்டு ஓடி வருபவர்கள், புதிதாகத் திருட்டு போன்ற குற்றங்களிலும் அனுபவபட்டவர்களின் ஆயுதங்களாகப் பயன்படுத்தப் பட்ட அப்பாவிகள், இவர்கள் திருந்தி வாழ உதவிட முடியாத அளவுக்கு சிறைக்குள்ளே நடக்கும் பல்வேறு நடத்தைகளும், ஒழுங்கீனங்களும் அவர்களை ஆக்கி விடுகின்றன.

ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்கள்தான் சிறைக்குள் மூத்த முன்னோடிகளும், செல்வாக்கு உள்ளவர்களும் ஆவார்கள். அவர்கள் இந்த சிறு இளைஞர்களை உள்ளே வந்தவுடன் மிரட்டி, தங்கள் எடுபிடிகளாக்கிக் கொள்வதோடு அவர்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒழுக்கத் தவறுகளும்(Sodamise) சர்வ சாதாரணமாக்கும் வெட்ககரமான நிலைதான்! சிறைக்குள்ளே பணப் புழக்கம், போதை (கஞ்சா) போன்றவை உள்ளதால், இந்த இளவயது விசாரணைக் கைதிகளை அத்தீய வழக்கத்திற்கு அடிமையாகும் சூழ்நிலை திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது.

விடுதலை ஆகிச் செல்லவிருக்கும் இளைஞர்கள் பலர், நான் திரும்பி வந்து விடுவேனுங்க, இங்கே கிடைக்கிற வாழ்வும், வாய்ப்பும் எங்களுக்கு வெளியே கிட்டுமா என்பது சந்தேகம் என்றுகூட, வெளிப்படையாக (மிசா காலத்தில் எங்களுக்கு பணி செய்த இந்த விசாரணைக் கைதிகள், அல்லது குறைந்த தண்டனை பெற்றவர்கள்), கூறியதை நேரில் கேட்டு அதிர்ந்து போனோம்.

இவர்களை விடுதலை செய்தால் சிறையில் கூட்டமும், குறையும்; சிறை நிர்வாகமும் செம்மையான அளவில் நடக்க வாய்ப்பு ஏற்படும்.
இவர்களை வெளியே அனுப்பினால் மட்டும் போதாது. இது ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையானபடியால், அத்தகையவர்களுக்குரிய தொழில் கற்றுத் தருதல், அல்லது வேலை வாய்ப்புத் தந்து, வெளியே வந்த அவர்கள் கண்ணியமான முறையில் வாழுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் திட்டங்களைப் பற்றியும் ஆராய்ந்து செயல்படுத்த முன் வர வேண்டும்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. பிரதமர் மோடி அவர்கள் ‘Corporate Social Responsibility’ பெரிய கம்பெனிகள் சமூகப் பொறுப்பாளர்களாக மாறிடும் திட்டம் என்று கூறுகிறாரே, அதில்கூட இதனையும் இணைத்து அத்தகைய இளைஞர்களை மனிதம் பூத்துக் குலுங்கும் நல்ல மனிதர்களாகவும் மாற்றிட யோசிக்க வேண்டும்.



சென்னை
6.9.2014

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/e-paper/87186.html#ixzz3CXxHzuVg

தமிழ் ஓவியா said...

கருப்புச்சட்டை ஏன்?

- தந்தை பெரியார்

இனி நான் இறந்தாலும் ஏனையத் திராவிடத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். எனது வேலையை அப்படியே விட்டுவிடமாட்டார்கள். தொடர்ந்து போராடி, வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது. நமது கொள்கைகள் ஒரு அளவுக்குப் பொது மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் நம் இஷ்டம் போல் நடக்காத மந்திரிகளுக்கு மந்திரிசபை நாற்காலி இடம் கொடுக்காது, நம் இஷ்டப்படி நடக்காத அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடைக்காது.

நம் இஷ்டப்படி நடக்காத சட்டசபை மெம்பர்களுக்கு சட்டசபை இடங்கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலை வெகு சீக்கிரமே ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்களாக வேண்டும். நீங்கள் என்ன சட்டைக்காரர்களோ என்று நம்மைச் சிலர் கேட்கக் கூடும். நம் நாட்டில் சட்டைக்காரர்கள் என்றொரு கூட்டம் இருந்து வருவது உண்மைதான். அவர்கள் பல ஜாதிக்குப் பிறந்தவர்கள், ஆகவே வெறும் சட்டைக்காரர்கள் என்று மட்டும் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

நாம் அப்படிக்கல்ல, நாம் ஒரே ஜாதிக்குப் பிறந்தவர்கள். ஆகவே கருப்புச்சட்டைக்காரர்கள் என்று நம்மை அழைத்துக் கொள்கிறோம். கருப்புச் சட்டை ஒரு படையமைப்பின் சின்னமல்ல. அது இழிவின் அறிகுறி, இழிவிற்காக அவமானப்படுகிறோம், துக்கப்படுகிறோம், அதைப் போக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டோம் என்பதன் அறிகுறி. பாடுபட்டுப் படி அளந்துவிட்டுப் பட்டினி கிடக்கும் நானா பஞ்சமன்? என் பாட்டின் பலனால் நோகாமல் உண்டு வாழும் நீயா பார்ப்பனன் இது நியாயமா?

கேள்விகளின் அறிகுறி கருப்புச்சட்டை

பாடுபடும் எங்களுக்கெல்லாம் இழிவான வேலைகள், பாடுபடாத உங்களுக்கெல்லாம் மந்திரி வேலையா? இது நியாயமா? பாடுபடாத நீங்கள் எல்லாம் அய்.சி.எஸ். படிப்பதா? கலெக்டர் ஆவதா? இது நியாயமா? நாங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், எவ்வளவுதான் உங்களுக்கு வாரிக் கொடுத்தாலும், எவ்வளவுதான் சுத்தமாய் இருந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்கமாய் நடந்து கொண்டாலும் நாங்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள்?

நீங்கள் எவ்வளவுதான் பாடுபடாத சோம்பேறி வாழ்வு நடத்தினாலும், எவ்வளவோ எங்களை மோசம் செய்து எங்களிடம் பிச்சை எடுத்துப் பிழைத்தாலும், நீங்கள் எவ்வளவுதான் அழுக்குப் பிடித்து, சொறி பிடித்துக் குஷ்டரோகியாகக் கிடந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்க ஈனர்களாக திருடர்களாக, கொலைக்காரர்களாக, கொள்ளைக்காரர்களாக, தூது செல்பவர்களாக இருந்தாலும் நீங்கள் உயர் ஜாதிப் பார்ப்பனர்களா? இது நியாயமா? என்ற கேள்விகளின் அறிகுறிதான் இந்தக் கருப்புச் சட்டை?

தோழர்களே! நீங்கள் விரும்பி அணியுங்கள் இதை! அடுத்த மாநாட்டிற்குள்ளாவது நம் சூத்திரப்பட்டம் ஒழிந்து போகும். அடுத்த மாநாட்டிற்குள் இந்த இழி ஜாதிப் பட்டம் கட்டாயம் ஒழிக்கப்பட்டேயாக வேண்டும். அதற்காக ஒரு 2000, 3000 பேர்களாவது பார்ப்பனர்களின் பலி பீடத்தில் தம் உயிரை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.

நானா சூத்திரன்? என் தாய்மார்களா சூத்திரச்சிகள்? இனி இந்நிலை ஒரு நிமிட நேரமேனும் இருக்க இடங்கொடேன்? இதோ என் உயிரை இதற்காக அர்ப்பணிக்கவும் துணிந்து விட்டேன் என்கிற உணர்ச்சி ஒவ்வொரு திராவிடனுக்கும் ஏற்படவேண்டும்.

இழிஜாதிபட்டத்தை ஒழிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்றாலும் உலக அறிவு முன்னேற்றம், ஜாதி உயர்வு தாழ்வுகளே இனி இருக்க கூடாது. ஆகவே உறுதி பெற்றெழுங்கள், செத்தாலும் சரி இழிவு நீக்கம்தான் முக்கியம் என்று. சாகாமலே கூட வெற்றி பெற்று விடலாம்.

ஆதாரம்: குடிஅரசு 5.6.1948

Read more: http://viduthalai.in/page-1/87235.html#ixzz3CXxTLEFb

தமிழ் ஓவியா said...

ஒரு கொலை நூல்தான் பரிசுக்குத் தகுதியானதா?

ஜப்பான் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுப் பிரதமருக்குக் கீதையை அளித்து, அதன் மூலம் ஒரு சர்ச்சைக்கு அடியெடுத்துக் கொடுத்துள்ளார்.

கீதை - பகவான் கிருஷ்ணனால் அருளப்பட்டது என்று கதைக்கிறார்கள். இந்து மதத்தை அமெரிக்கா வரை கொண்டு சென்ற விவேகானந்தர்கூட ஒரு கேள்வியை எழுப்பியதுண்டு ஒரு யுத்தக்களத்திலே கீதா உபதேசம் நிகழ்த்த முடியுமா?

அது இயலக் கூடியதுதானா? கிருஷ்ணன் சொல்லச் சொல்ல அவற்றையெல்லாம் சுருக்கெழுத்து மூலம் எழுதியவர் யார் என்ற கேள்வியோடு மட்டும் அவர் முடிக்கவில்லை; கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவது நல்லது என்கிற அளவுக்குச்சென்று இருக்கிறார்.

உலகத்தில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? கடவுள் என்று சொல்லக்கூடிய ஒருவர் யுத்தம் செய் - மனிதர்களைக் கொலை செய்! கொன்று குவி! என்று உத்தரவிட்டதாகக் கேள்விப்பட்டதுண்டா?

தன் எதிரே இருக்கும் உற்றார் உறவினர்களோடு போர்தொடுக்க அர்ச்சுனன் தயங்கியபோது, கிருஷ்ணன் என்ன சொல்கிறான்?
இந்த உடலில் வாலிபப் பருவமும், யவனப் பருவமும் எவ்வாறு வந்து சேருகின்றனவோ அம் மாதிரியே, ஆத்மாவுக்கு பேச உடலும் வருகிறது. அறிவாளி இதைப் பார்த்து மயங்க மாட்டான்.

எந்த ஆத்மாவானது எங்கும் பரவியுள்ளதோ அது அழிவற்றது என்று அறிவாயாக! இவ்வாறு அழிவற்ற இந்த ஆத்மாவுக்கு எவரும் அழிவை ஏற்படுத்த முடியாது; ஓ, பரதவம்சத்தவனே! என்றென்றும் இருப்பதும், அழிவற்றதும், அளவிற்கு அடங்காததுமான ஆத்மாவால் தாங்கப்படுகின்ற இந்த உடல்கள் அழிவுள்ளவை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன ஆகவே இதனை நன்கறிந்து போர் செய்வாயாக? என்று அர்ச்சுனனுக்கு ஆணையிடுகிறார் அவர்கள் கூறும் பகவான் கிருஷ்ணா!

உலகத்திலேயே இவ்வளவுப் பச்சையாகக் கொலையைத் தூண்டுகிற, நியாயப்படுத்துகின்ற ஒருவன்தான் இந்துத்துவாவாதிகள் போற்றுகின்ற பகவான் கிருஷ்ணன், அதைச் சொல்லுவதுதான் கீதை. புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் கீதை என்பது ஒரு கொலைகார நூலே!

காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேகூட தனது படுகொலையை நியாயப்படுத்து கிற வகையில் இந்தக் கீதையைத்தான் எடுத்துக் காட்டினான்.

தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு அதர்மத்தையும் செய்யலாம்; அப்படி செய்வதும் தருமமே! என்று கீதை சொல்லுவதை எடுத்துக்காட்டி கொலைக்கு நியாயம் கற்பிக்கும் கொடுமையை என்னென்று சொல்லுவது?

இந்தச் கீதையை இந்தக் கொலைகார நூலைத்தான் ஜப்பான் பிரதமருக்கு இந்தியப் பிரதமர் மகிழ்ச்சியோடு பரிசாக அளித்துள்ளார்.
ஒரு வகையில் நரேந்திரமோடி கீதையைப் போற்றுவதற்கு வழிகாட்டியாகக் கொள்ளுவதற்கு நியாயம் இருக்கிறது.

மோடி முதல் அமைச்சராக இருந்தபோதுதானே சிறுபான்மை மக்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். எனவே மோடி கீதையைப் போற்றுவதில் ஓர் அர்த்தம்கூட இருக்கிறது.

ஆனால் ஜப்பான் பிரதமருக்குக் கீதையைப்பற்றி தெரிந்திருக்குமா என்பது கேள்விக் குறியே! அது கொலை நூல் என்று தெரிந்திருந்தால், அந்தக் கணமே இந்தியப் பிரதமரிடம் திருப்பியே கொடுத்திருப்பார்.

இது ஒருபுறம் இருக்க, கிருஷ்ணன் என்ற கடவுளே இந்து மதத்தில் கற்பிக்கப்பட்டதே கவுதமப் புத்தர் தோன்றி நாட்டு மக்கள் மத்தியில் வைதிக ஆரியப் பார்ப்பன வருணாசிரமத்தை எதிர்த்து மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்திய பிறகுதான்.

இதுகுறித்துப் பிரபல வரலாற்று ஆசிரியர் ராம்சரண் சர்மா 11ஆவது வகுப்புக்கான என்.சி.ஆர்.பி. வெளியிட்டுள்ள தொன்மை இந்திய வரலாறு (கிஸீநீவீமீஸீ மிஸீபீவீணீஸீ பிவீஷீக்ஷீஹ்) எனும் நூலை எழுதியவர் அந்த நூலில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

கிருஷ்ணன் மகாபாரதத்தில் முக்கியப் பங்கு ஆற்றியதாகக் கூறப்பட்டிருந்தாலும், மதுரா நகரில் கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை கிடைக்கப் பெறும் சிற்பத் துண்டுகள் கிருஷ்ணன் பற்றிய தகவலைத் தரவில்லை.

இதன் காரணமாக இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் அடிப்படையில் இதிகாச காலம் எனும் கருத்தைப் பற்றிப் பேசுவதைக் கைவிட வேண்டும் என எழுதப் பட்டுள்ளது.

ஒரு பொய்யான கதைப் பாத்திரத்தை உண்டாக்கி, அதையும் கொலையைத் தூண்டும் ஒன்றாகச் சித்தரித்து இருப்பது எல்லாம் அசல் கழிசடைத்தனம் அல்லவா?

125 கோடி மக்களின் பிரதமர் இந்த வேலையைச் செய்யலாமா? இந்தியா என்றால் பாம்புகளின் நாடு என்பது போய், பொய்யர்களின் கூடாரம் என்ற புது நாமகரணம் இந்தியப் பிரதமரால் கிடைக்கும் போல் தோன்றுகிறது - இன்னும் 4 ஆண்டு 9 மாதம் எப்படித்தான் கழியுமோ என்று தெரியவில்லை.

Read more: http://viduthalai.in/page-2/87192.html#ixzz3CXxhYBeG

தமிழ் ஓவியா said...

திருக்குறள்


நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும்.
(விடுதலை,3.10.1958)

Read more: http://viduthalai.in/page-2/87191.html#ixzz3CXxtSyfA

தமிழ் ஓவியா said...

விநாயகர் பொம்மைகளுக்குத் திருட்டு மின்சாரம்!


பெரியார் பிஞ்சு அன்புச்செல்வனின் பிறந்த நாள் விழாவில் கழகத் துணைத் தலைவர் அதிர்ச்சித் தகவல்!


காஞ்சிபுரம், செப். 6_ ஒழுக்கத்தை கற்றுத் தருகிறது என்று சொல்லப்படுகிற கடவுளர்கள் எப்படிப்பட்ட ஒழுக்கம் கெட்ட காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது என்பதைச்சுட்டி காட்டி, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற விநாயகர் சதுர்த்தி பண்டிகையில் விநாயகர் பொம்மைகளுக்கு திருட்டுத் தனமாக மின்சாரம் எடுக்கப்படுகிறது என்பதை கவலையோடு கழகத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் இறுதியில் அதாவது 28.8.2014 அன்று பூவிருந்தமல்லியை அடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் உள்ள காமாட்சி திருமண மண்டபத்தில் போரூர் காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த திராவிடர் கழகத்தோழர் தனது மகன் அன்புச்செல்வனின் முதலாமாண்டு பிறந்த நாளை வெகு சிறப்பான ஏற்பாடுகளைச் செயது கொண்டாடினார்.
நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு நடராஜன் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று வருகை தந்திருந்த துணைத் தலைவரை தென்சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன் தலைமையில் சிறப்பாக வரவேற்றனர். திராவிடர் கழகத்தின் தோழர்களும் நடராஜனின் உறவினர்களும் கூடியிருந்த கூட்டத்தில் தென் சென்னை மாவட்டத் தலைவர் வில்வநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதைத்தொடர்ந்து தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தோழர் செங்குட்டுவன், அன்புச்செல்வனை வாழ்த்திப் பேசினார்.
கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்றினார். அவர் தமதுரையில்:_ எடுத்த எடுப்பிலேயே ஒரு பிறந்த நாளுக்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்று கேட்டு பார்வையாளர்களை திகைக்க வைத்தார். பிறகு கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியாரின் சிக்கனத்தைப்பற்றி கோடிட்டுக்காட்டி விட்டு, பெரியார் தொண்டரான நடராஜன் செலவு செய்து இந்த விழாவை விழாவை ஏற்பாடு செய்திருப்பது பெரியாரின் கொள்கையை பின் பற்றியவர்கள் ஒருநாளும் வீழ்ந்ததில்லை வாழ்ந்துதான் இருக்கிறார்கள் என்பதை உறவினர்களான உங்களுக்கு உணர்த்தத்தான் என்று கூறினார்.
மேலும் அவர் பெரியாரியம் என்பது ஒரு வாழ்க்கை நெறி. அதில் ஒழுக்கத்திற்கு சிறப்பான இடம் உண்டு என்று கூறிவிட்டு அதனால்தான் பக்தி என்பது தனிச்சொத்து, ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து என்று பெரியார் குறிப்பிட்டார் என்பதையும் சேர்த்துச் சொல்லி, ஆனால் கடவுள்களால் ஒழுக்கம் வளர்கிறதா என்று கேள்வி கேட்டு தற்போது நடைபெற்றுக் கொண் டிருக்கும் விநாயகர் சதுர்த்தி தொடர்பான நிகழ்வுகளை எடுத்துக்காட்டிப் பேசினார்.
அதாவது ஊரெங்கும் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் பொம்மைகளுக்கு மின்சாரம் திருட்டுத் தனமாக எடுக்கப்படுவதை எடுத்துக் கூறினார். இப்படி இருந்தால் பக்தர்களிடையே ஒழுக்கம் எப்படி வளரும் என்று கேள்வியை எழுப்பினார். கூடியிருந்தோரும் அதை ஆமோதிப்பதுபோல் தலையாட்டினர்.
தொடர்ந்து நடராஜனின் உழைப்பையும் அதனால் அவர் பெற்ற உயர்வையும் பாராட்டி பெரியார் பிஞ்சு அன்புச்செல்வனையும் வாழ்த்திவிட்டு மழையைத் தொடர்ந்து பொழியும் தூரலைப்போல தற்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பொருளே தெரியாத பெயர்களை வைத்து, மொழி மானத்தை மிதிக்கிற தன்மையையும் கவலையோடு சுட்டிக்காட்டி னார்.
அதைத்தொடர்ந்து கேக் வெட்டப்பட்டு குழந்தை அன்புச்செல்வனுக்கு ஊட்டி அனைவரும் மகிழ்ந்தனர். வருகை தந்திருந்த அனைவருக்கும் இரவு இறைச்சி விருந்து வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பூவிருந்தவல்லி பகுதியைச் சேர்ந்த பெரியார் மாணாக்கன், செல்வி ஆகியோர், உடுமலை வடிவேல், வேலவன் தொண்டறம் மற்றும் தாம்பரம் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Read more: http://viduthalai.in/page-3/87213.html#ixzz3CXymyFD8

தமிழ் ஓவியா said...

கே.பி.கே.மேனனுக்கு ஜே! பார்ப்பனத் தொல்லைக்கு உதாரணம்

உயர்திரு பாரிஸ்டர் கே.பி.கேசவமேனனவர்கள் இந்தியாவில் சிறப்பாகத் தென்னிந்தியாவில் ஒரு பிரபல வக்கீலாகவும், ஒரு பெரிய தேச பக்தராகவும் தியாகி யாகவும் இருந்து வந்ததும் அவரது தேசபக்தி காரணமாக மாதம் 1000 கணக்கான ரூபாய்கள் வரும்படி உள்ள தமது வக்கீல் தொழிலை நிறுத்தி தனது செல்வமெல்லா வற்றையும் இழந்து, மனைவியையும் இழந்து மிக்க கஷ்டமான பரிசோதனைக்கெல்லாம் ஆளான ஒரு உண்மை தேசபக்தர் என்பதும், திரு. காந்தியவர்களுக்கும் மிகவும் நம்பிக்கை உள்ள சகாவாகவும், கேரள காங்கிரசு தாபனத்தின் டிக்டேட்டராகவும் இருந்த ஒரு யோக்கியமும், கீர்த்தியும் வாய்ந்தவர்.

அஹிம்சையில் மிக்க நம்பிக்கை யுடையவர். சமுதாய சீர்திருத்த விஷயத்தில் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் தமது சமுகத்திற்கே விரோதமாக வைக்கம் கோவில் தெருவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்க தீர்மானித்து மற்றும் சில பாரிஸ் டருடனும், பி. எ. பி. எல். வக்கீல்களுடனும் சத்தியாக்கிரகம் துவக்கி அவ்வரசாங்கத்தாரால் 6 மாதம் காவலில் வைக்கப் பட்டாலும் சிறையில் மிக்க கௌரவமாய் நடத்தப்பட்டு தண்டனை காலம் தீருவதற்கு முன்பாகவே விடு தலை செய்யப்பட்டு அவர் கோரிய படியே திருவாங்கூர் அரசாங்கம் இணங்கி வந்து வைக்கம் தெருக் களைப் பொது ஜன நடமாட்டத் திற்கு எல் லோருக்கும் பொதுவாய் விட்டு விட்டதுடன் மற்றும் பல ரோட்டு களையும் எல்லா ஜாதி யாருக்கும் பொதுவாக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

ஆகவே இவைகளிலிருந்து திரு. கே.பி. கேசவ மேனன் அவர்களின் யோக்கியமும், முயற்சியும் எப்படிப்பட்ட தென்பது யாரும் நன்றாய் உணரலாம். அன்றியும் அவர் தென்னிந்தியாவிலுள்ள கௌரவமான கனவான்களில் ஒருவராகவும், எல்லா கௌரவமான கனவான்களின் சிநேகிதராகவும், அய்கோர்ட் ஜட்ஜ், திவான். நிர்வாக சபை மெம்பர்கள் முதலியவர்களுடன் நெருங்கிப் பழகினவராக வுமிருந்து வந்ததும் இம்மாகாணத்தாருக்கு நன்றாய்த் தெரியும்.

இந்தப்படி உள்ள இவர் இங்கு வக்கீல் தொழில் நடத்துவது என்பது பிடிக்காமல் ஏனெனில், இவ்விடத்திய நியாயாதிபதிகள் பெரிதும் பார்ப்பனர்களாக ஏற்பட்டு வருகின்ற படியாலும், அவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனச் சலுகையிருப்பதாகவும் மற்றும் பல காரணங்களாலும் அவருக்கு ஏற்பட்ட சில குடும்ப துக்கத்தாலும் இந்தியாவிலிருக்க மனமில்லாமல் மலேயா நாட்டுக்குப் போய் தனது தொழிலை கண்ணியமாய் நடத்திவரலாமென்று கருதி அங்குள்ள நியாயாதிபதிகளின் நேர்மை குணத்தை நம்பி மலேயா நாட்டுக்குச் சென்றால் அங்கும் இவ்விடத்திய பார்ப்பனர்களே தொல்லை கொடுக்க ஆரம்பித்து அவருக்குப் பல உபத்திரவம் செய்து வருவ தாகத் தெரிகிறது. இதைப்பற்றி முன்னோரு தடவையும் குறிப்பிட்டிருக்கின்றோம்.

அதாவது திரு. கே. பி. கேசவமேனனவர்கள் மீது மலாய் நாட்டு வக்கீல்களில் சிலர் பொறாமை காரணமாக குறிப் பாய் சொல்ல வேண்டு மானால் ஒரு பார்ப்பனரின் கிருத்திரிமம் மீது அவரை F.M.S. கோர்டு களின் வக்கீல்கள் சங்கத்தில் சேர்க்கக் கூடாதென்று பல முயற்சிகள் செய்யப்பட்டன.

அதென்னவெனில் திரு. கே. பி. கே. மேனன் ராஜத்துரோகி என்றும் அவர் சிறை சென்றவர் என்றும் வக்கீலாயிருக்க லாயக் கற்றவரென்றும் தொழிலாளர் களை தூண்டிவிட்டு கலகம் செய்பவரென்றும் பல மாதிரி யான விஷமப் பிரசாரங்கள் செய்து அவரை அங்கு அனு மதிக்காமல் இருக்கும்படியாகச் செய்யப் பல விதத்திலும் பலமாக முயற்சித்தார்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்தும் கடைசியாக திரு. மேனன் அவர்கள் ஆதியில் எதிர்ப் பார்த்தது போலவே மலாய் நாட்டு ஜட்ஜிகளின் நேர்மை குணத்தால் வெற்றி பெற்று அந்த நாட்டு நீதிவாத வக்கீலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார் என்ற சேதி கேட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

திரு. கே.பி.கே. மேனன் அவர்களையும் பாராட்டுவ தோடு மலாய் நாட்டுத் தலைமை நீதிபதி அவர்கள் பார்ப்பது போலவே நாமும் அவர் மலாய் நாட்டுத் திலகமாய் விளங்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 14.12.1930

Read more: http://viduthalai.in/page-7/87187.html#ixzz3CXziCM6D

தமிழ் ஓவியா said...

கார்த்திகை தீபம்


கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப்போகின்றது. இதற்காக அருணாசல மென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும் அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள்.

இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்யை டின் டின்னாய் கல் பூரத்தைக் கலந்து நெருப்பில் கொட்டி எரிப்பார்கள். சில இடங்களில் கட்டைகளை அடுக்கி அல்லது தட்டுகளைப் போராகப் போட்டு நெருப்பு வைத்து சட்டிசட்டியாக வெண்ணைகளை அந்த நெருப்பில் கொட்டுவார்கள்.

இவைகள் தவிர வீடுகளிலும், கோவில்களிலும் 10, 50, 100, 1000, 10000, 100000 என்கின்ற கணக்கில் விளக்குகள் போட்டு நெய், தேங்காய்எண்ணெய், நல்ல எண்ணெய், இலுப்பை எண்ணை முதலியவைகளை ஊற்றியும், எள்ளுபொட்டணம், பருத்திவிதை பொட்டணம் ஆகியவைகளை கட்டியும், பெரும் பெரும் திரிகள் போட்டும் விளக்குகள் எரிப்பார்கள்.

இந்த சடங்குகள் செய்வதே மேற்படி பண்டிகையின் முக்கிய சடங்காகும். ஆகவே இந்தச் சடங்குகளுக்கு எத்தனை லட்சம் ரூபாய் செலவு என்பதையும் இதற்காக செல்லும் மக்களின் ரயில் செலவு, மற்ற வீண் செலவு, நேரச்செலவு ஆகியவைகளால் எத்தனை லட்சம் ரூபாய் செலவாகும் என்பதையும் கவனித்துப் பார்த்து பிறகு இப்படிப்பட்ட இந்த பெருந் தொகைச்செலவில் நாட்டுக்கோ, மக்க ளுக்கோ, அல்லது மதத்திற்கோ, மக்களின் அறிவிற்கோ சுகாதாரத்திற்கோ அல்லது வேறு எதற்காவது ஒரு அம்மன் காசு பெறுமான பிரயோஜனமாவதுமுண்டா என்பதையும் யோசித்துப் பார்த்தால் நமது மக்களின் பாரம்பரியமான முட்டாள் தனம் விளங்காமற்போகாது.

அர்த்தமற்ற தன்மையில் நமது செல்வம் கொள்ளை போகின்றதே, கொள்ளை போகின்றதே என்று கூச்சல் போடுகின்றோம். ஜவுளிக்கடையில் போய் மறியல் செய்து ஜெயிலுக்குப் போவதைப் பெரிய தேசபக்தியாய்க் கருதுகிறோம். ஆனால் இந்த மாதிரி நமது செல்வம் நாசம் போவதைப் பற்றி நமக்கு சிறிதும் கவலையில்லை.

அதைப் பற்றி நினைப்பது மில்லை. அதைப் பற்றிப் பேசுவதே மதத் துரோகமாகவும், நாத்திகமாகவும் சொல்லப்படு கின்றது. இம்மாதிரி செல்வம் நாசமாவதை விட்டுக் கொண்டு வருவதால் எத்தனை பத்து லட்சக்கணக்கான மக்கள் தலைமுறை தலைமுறையாக முட்டாள்களாகிக் கொண்டு வருகின்றார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை.

ஆகவே ஆங்காங்குள்ள சுயமரியாதைத் தொண் டர்கள் இதை கவனித்து இம்மாதிரியான மூடத்தனங்களும், நாசகார வேலைகளும் சிறிதாவது குறையும்படியாக வேலை செய்வார்களானால் அது மற்ற எல்லா முயற்சி களையும் விட எத்தனையோ மடங்கு பயன் தரக்கூடியதும் பல வழிகளிலும் அவசியமானதுமான முயற்சிகளாகும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.11.19

Read more: http://viduthalai.in/page-7/87189.html#ixzz3CXztzQma

தமிழ் ஓவியா said...

வறுமையில் வாடிய ஸ்டாலின்!


சோவியத் ஒன்றி யத்தின் அதிபராகப் பல்லாண்டுகள் ஆட்சி செய்தவர் ஜோசப் ஸ்டாலின். இவருடைய இயற் பெயர் இயோசிப் விஸ்ஸாரி யோனோவின் டிலுகாஷ் விலி என்பதாகும். இவர் 1879ஆம் ஆண்டில் ஜார்ஜியாவில் கோரி என்னும் நகரில் பிறந்தார்.

இவருடைய தாய்மொழியாகிய ஜார்ஜியன் மொழி ரஷிய மொழியி லிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனினும், ரஷிய மொழியை இவர் பின்னர் கற்றுக் கொண்டார். ரஷிய மொழியை இவர் ஜார்ஜிய மொழிச் சாயலுடனேயே எப்போதும் பேசி வந்தார்.

ஸ்டாலின் கொடிய வறுமையில் வளர்ந்தார். இவருடைய தந்தை ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி. அவர் எப்பொழுதும் அளவுக்கு மீறிக் குடித்துவிட்டு, மகனை முரட்டுத்தனமாக அடிப்பார். இயோசிப் 11 வயதாக இருக்கும்போது அவருடைய தந்தை இறந்தார். இளமையில் கோரி நகரில் ஒரு மடாலயப் பள்ளியில் இவர் கல்வி கற்றார்,

வாலிப பருவத்தில் டிரிப்ளிசில் ஓர் இறையியல் கல்விக் கூடத்தில் கல்வி பயின்றார். எனினும் 1899-ஆம் ஆண்டில், புரட்சிக் கருத்துகளைப் பரப்பியதற்காக கல்விக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதன்பின் இவர் தலைமறைவு மார்ச்சி இயக்கத்தில் சேர்ந்தார். சாதாரணப் பின்னணியில் வாழ்க் கையைத் தொடங்கிய ஸ்டாலின், உல கின் பெரிய நாடு ஒன்றின் அதிகார மிக்க தலைவராக உயர்ந்தார். அதற்குப் பொருத்தமாக, இரும்பு மனிதன் என்று பொருள்படும் வகையில் தனக்கு ஸ்டாலின் என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார்.

Read more: http://viduthalai.in/page2/87234.html#ixzz3CY0E0lK2

தமிழ் ஓவியா said...

பெண்களை கருத்தரிக்க விடாமல் ஆண்களின் உயிரணுக்களே செயல்படலாம்!


தம்பதியரின் நெருக்கத்தைப் பற்றிப் பேசும் போது ஈருடல், ஓருயிர் என்கி றோம். நீ பாதி, நான் பாதி என்கிறோம். அதையெல்லாம் மெய்யாக்கும் வகையில்தான், ஆணில் பாதியும் பெண்ணில் பாதியுமாகச் சேர்ந்து புதிய உயிர் உலகத்துக்கு வருகிறது. இதுதான் உலக நியதி. பெண்ணின் உடலில் உயிராகி வளர வேண்டிய கருவுக்கு, காரணமாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டிய ஆண் அணுக்களே அதற்கு எதிரியானால்? அப்படிக்கூட நடக் குமா என்பதே எல்லோரின் கேள்வி யாகவும் இருக்கும்.

நடக்கும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன். பெண் உடலில் கரு வளர விடாமல் செய்ய, அவளது கணவரின் ரத்தமும், மரபணுக்களுமே எதிராகச் செயல் படுகிற அந்தப் பின்னணி பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அவர். சில பெண்களுக்குக் கருத்தரிப்பதில் சிக்கல் இருக்காது. ஆனால், கருவானது, கருப்பையில் ஒட்டி வளர்வதில்தான் பிரச்சினை இருக்கும். நல்ல கரு வந்து, தங்காதவர்களுக்கும், குழந்தை இல்லாததற்காக அய்.வி.எஃப் சிகிச்சை மேற்கொண்டு, அதிலும் தொடர்ந்து தோல்வியை சந்திக்கிறவர்களுக்கும் மேலே சொன்ன விஷயம்தான் பிரச்சினையாக இருக்கும்.

காரணமே தெரியாமல், மறுபடி, மறுபடி சிகிச்சையைத் தொடர்வதும், சிகிச்சை வெற்றி பெறவில்லையே என்கிற விரக்தியில் வாழ்க்கையை வெறுப்பதுமாக துயரத்தின் உச்சத்தில் இருப்பார்கள். கரு என்பது, கணவன் -மனைவி இரண்டு பேரின் ரத்தம் மற்றும் மரபணுக்கள் சேர்ந்தது. சில பெண்களின் உடல், கணவனின் ரத்தத்தையும், மரபணுக்களையும் அந் நியப் பொருள்களாக நினைத்துக் கொண்டு, கருவை ஒட்ட விடாமல் செய்து விடும். அதைப் பரிசோதனை யில் கண்டுபிடித்து, கணவனின் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக் களை எடுத்து, சில மருந்துகள் கலந்து, மனைவியின் உடலில் ஊசி மூலம் செலுத்தப்படும்.

அதாவது, அந்த வெள்ளை அணுக்கள், மனைவியின் உடலில் ஊறி, எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். சில வகை நோய்கள் வரும் முன், எச்சரிக்கை நடவடிக்கையாக முன்கூட்டியே தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம் இல்லையா? அதே டெக்னிக்தான் இதிலும். இதற்கு ஹஸ்பென்ட் லூகோசைட் டிரான்ஸ்ஃபர், அதாவது, ஹெச்.எல்.டி. என்று பெயர். இந்த ஊசியை பெண்களின் சருமத்தின் வழியே செலுத்த வேண்டும்.

வாரம் ஒரு ஊசி வீதம், 8 முதல் 12 ஊசிகள் போட வேண்டியிருக்கும். ஒரு ஊசிக்கு ரூ. 5 ஆயிரம் செலவாகும். இந்த சிகிச்சை முடிந்த பிறகு குழந்தை இல்லாத பெண்களுக்கு அய்.வி.எஃப். செய்தால், கரு தங்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். சென்னைக்கு மிகவும் புதுசான இந்த சிகிச்சை, குழந்தை இல்லாத தம்பதியருக்கு ஆறுதலையும், தீர்வையும் கொடுக்கிறது... என்கிறார் மகப்பேறு மருத்துவர் மகாலட்சுமி சரவணன்.

- ஆர்.வைதேகி
நன்றி: வசந்தம் 23.6.2013

Read more: http://viduthalai.in/page2/87233.html#ixzz3CY0MQg4h

தமிழ் ஓவியா said...

கலிலியோவின் முக்கியக் கண்டுபிடிப்பு!

கலிலியோ தலைசிறந்த இத்தாலிய விஞ்ஞானி தனது காலத்தில் வேறெந்த விஞ்ஞானியையும் விட மிகச் சிறந்த அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்ததற்காக இவர் உலகப் புகழ் பெற்றார். இவர் பைசா நகரில் 1564-இல் பிறந்தார். இளமையில் பைசா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார்.

ஆனால், வறுமையால் பாதியிலேயே படிப்பை விடடார். எனினும் அதே பல்கலைக் கழகத்தில் 1589இல் இவருக்கு ஆசிரியப் பணி கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர் படுவர் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்து 1610 வரையில் அங்கு பணிபுரிந்தார். இந்தக் காலத்தின்போது தான் இவர் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடித்தார்.

இவருடைய முக்கியக் கண்டுபிடிப்புகளில் முதலாவது, எந்திரவியல் தொடர்புடையதாகும். லேசான பொருள்களைவிடக் கனமான பொருள்கள் வேகமாக கீழே விழும் என அரிஸ்டாட்டில் கூறியிருந்தார். அந்தக் கிரேக்கத் தத்துவஞானியின் இக்கூற்றை தலைமுறை தலைமுறையாக அறிஞர்கள் நம்பிவந்தார்கள். ஆனால், கலிலியோ இந்தக் கூற்றைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார்.

பல தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் அரிஸ்டாட்டிலின் இந்தக் கூற்று தவறானது என்பதை கலிலியோ விரைவிலேயே கண்டுபிடித்தார். காற்றின் உராய்வினால் வேகம் சற்று குறையலாம் என்பதைத் தவிர, கனமான பொருள்கள், லேசான பொருள்கள் இரண்டுமே ஒரே வேக வீதத்தில்தான் கீழே விழுகின்றன என்று அவர் கூறினார்.

இதைக் கண்டுபிடித்த பின்னர் கலிலியோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார். ஒரு குறிப்பிட்ட கால அளவின்போது பொருள்கள் எவ்வளவு தூரம் விழுகின்றன என்பதை மிகக் கவனமாக அளவீடு செய்த இவர். கீழே விழும் ஒரு பொருள் செல்லும் தொலைவானது, அது கீழே விழுகின்ற வினாடிகளின் எண்ணிக்கையில் இருபடி வர்க்கத்துக்குச் சரிசம வீத அளவில் இருக்கும் என்பதைக் கண்டுபிடித்தார். இது வேக வளர்ச்சி வீதம் ஒரே சீராக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

கலிலியோவின் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. இவர் தமது பரிசோதனைகளின் முடிவுகளைக் காண, கணிதச் சூத்திரங்களையும், கணித முறைகளையும் விரிவாகப் பயன்படுத்தியது நவீன அறிவியலின் முக்கிய அம்சமாகும்.

Read more: http://viduthalai.in/page6/87226.html#ixzz3CY1ZJpyd

தமிழ் ஓவியா said...

சொல்லுவது தினமலர் மன அமைதிக்காக சென்று நிம்மதி இழக்கும் பக்தர்கள் திரிசுதந்திரர்கள் பிடியில் சிக்கித்தவிக்கும் திருச்செந்தூர்


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆவது படை வீடு திருச்செந்தூர். இங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருவதால் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். திருச்செந்தூர் ஸ்தலம் குரு பரிகார ஸ்தலமாக இருப்பதால் அங்குவரும் பக்தர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள மிகப்பெரிய 5 கோவில்களில் இதுவும் ஒன்று.

திருச்செந்தூர் மூலவரான பால சுப்பிரமணிய சுவாமியை தொட்டு பூஜை செய்பவர்கள் போத்திகள் இவர்கள் மூலவரைத் தவிர்த்து வேறு எந்த கடவுளுக்கும் பூஜை செய்ய மாட்டார்கள். கோவிலுக்குள் இருக்கும் சண்முகர் மற்றும் பரிவார தேவதை களுக்கு பூஜை செய்பவர்கள் சிவாச் சாரியார்கள்.

இவர்களைத் தவிர்த்து கோவிலில் தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செப்வர்கள் திரிசுதந்திரர்கள். இவர்கள் தான் கோவிலுக்குள் நடத்தப்படும் யாகசாலை பூஜையை செய்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் பரிகார பூஜையையும் இவர்கள் தான் செய் கிறார்கள்.

கைங்கரியம் செய்பவர்கள் என்று அழைக்கப்படும் திரிசுதந்திரர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் முறைகேடாக, அளவுக்கதிகமாக கட்டாய வசூலில் ஈடுபடுவது பக்தர்களை அதிருப்தி அடையச்செய்கிறது.

திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பொது தரிசனம் தவிர 2 விதமான கட்டண தரிசனம் உள்ளது. அதில் ஒன்று அமர்வு தரிசனம். இதற்கு ரூ. 250 கட்டணம். மற்றொன்று சிறப்பு தரிசனம். இதற்கு ரூ. 100 கட்டணம். இந்த கட்டண தரிசனத்தில் அரசியல் வாதிகளையே மிஞ்சும் அளவுக்கு திரிசுதந்திரர்கள் மோசடி செய்வதால் கோவிலின் வருமானத்தில் தினமும் ரூ. 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.

கோவிலுக்குள் நடக்கும் தங்கத்தேர் மற்றும் பிற தேர்த்திருவிழாவின் போது உற்சவர் ஜெயந்திநாதரை தூக்கி வருபவர்கள் சீர் பாதம், என அழைக்கப்படுகிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பாக தங்கத்தேர் இழுக்க கட்டணமாக 1,500 ரூ.பாய் இருந்தது. இந்த தொகையை சில மாதங்களுக்கு முன்பு கோவில் நிர்வாகம் ரூ.2,500ஆக அதிகரித்துள்ளது.

அவ்வளவு... சீர்பாதத்தினர் அதி கரிக்கப்பட்ட கட்டணத் தொகையில் தங்களுக்கும் பங்குதர வேண்டும் என கொடி பிடித்தனர். அதற்கு நிர்வாகமே எதிர்ப்பு தெரிவித்ததால் தங்கத்தேருக்கு ஜெயந்தி நாதரை எழுந்தருளச் செய்ய மறுப்புத் தெரிவித்தனர். விளைவு தங்கத்தேர் ஓடவில்லை. கோவில் நிர்வாகத்துகும், சீர்பாதத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சமரசம் ஏற்பட அதன்பின் உற்சவரை, தேருக்கு எழுந்தருளச் செய்தனர் என்பது தனிக்கதை.

கோவில் தக்காராக திரிசுதந்திரர்கள் தரப்பினரே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிப்பதில் மட்டுமே குறியாக இருப்பதால் மன ஆறுதலுக்காக சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இருக்கும் நிம்மதி யையும் பறிகொடுத்துவிட்டு செல்லும் நிலையே தொடர்கிறது.

தகவல்: கு.பஞ்சாட்சரம் பொதுக்குழு உறுப்பினர்,திருவண்ணாமலை, தினமலர் 30.6.2014

Read more: http://viduthalai.in/page7/87223.html#ixzz3CY1l3W92

தமிழ் ஓவியா said...

பழங்களின் பயன்கள்

வாழைப்பழம்: மலச்சிக்கல் இருப் பவர்கள், மூல நோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப் பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.

இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் ஏ உயிர் சத்திற்கு தொற்றுக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

ஆரஞ்சுப்பழம்: ஆரஞ்சில் வைட்டமின் ஏ அதிகமாகவும், வைட்டமின் சி-யும், பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.

இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

Read more: http://viduthalai.in/page7/87222.html#ixzz3CY1yh0LQ

தமிழ் ஓவியா said...

மத்திய அமைச்சரவையில் மாமிசம் கூடாது!



மிகவும் அமைதியாக ஒரு மாற்றம் டில்லியில் நடந்ததிருக்கிறது, அமைச்சரவை நிகழ்ச்சிகளில் இனிமேல் அசைவம் கிடையாது என்பதுதான் அது. இந்தச் செய்தி பலருக்குத் தெரியாது. அமைச்சரவைக் கூட்டம் என்பது பார்ப்பனர்களின் யாகமேடை கிடையாது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல்வேறு மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்வார்கள். அவர்களின் உணவு முறை அசைவத்துடன் சேர்ந்ததாக இருக்கலாம். மேற்கு வங்கப் பார்ப்பனர்கள்கூட மீன் இல்லாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படி இருக்க அமைச்சரவை நிகழ்ச்சிகளில் அசைவ உணவை நிறுத்தியது ஏன்? இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வருவோம். இங்கு என்ன நடக்கிறது? ஒரு பத்திரிகை அலுவலகம் அசைவ உணவு கொண்டு வருவதால் சைவம் சாப்பிடும் மற்றவர்களுக்கு அருவருப்பாக இருக்கிறதாம். ஆகையால் இனிமேல் அலுவலகத்திற்கு யாரும் அசைவ சாப்பாடு கொண்டுவர வேண்டாம் என்று கூறி அனைத்துப் பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை விட்டு, அலுவலக தகவல்பலகையிலும் ஒட்டிவிட்டனர். பொதுவாக ஊடக அலுவலகங்களில் அசைவம் கொண்டுவருவதை பல பத்திரிகை நிறுவனங்கள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாகத் தடுக்கின்றன. புதிதாகச் சேர்ந்தவர்கள் அசைவம் கொண்டுவந்தால் உடனே நாசுக்காக சரஸ்வதி வசிக்கும் இடம் என்று மறைமுகமாகக் கூறிவிடுவார்கள். அப்படி இருந்தும் கொண்டுவந்தால் உடனே தூக்கிவிடுவார்கள். திடீரென இந்த அசைவ எதிர்ப்பு ஏன் கிளம்பியது என்று தெரிகிறதா? இதற்கு உணவு முறையை நன்கு கவனித்தால் தெரியும். பார்ப்பனர்களின் அன்றாட உணவில் அதிக அளவு புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் இருக்கும். மிகக்குறைந்த அளவே மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் இருக்கும். அவர்கள் சேர்க்கும் கொழுப்பு உணவு மிகவும் எளிதில் உடலில் ஆற்றலாக மாற்றமடையும் தாவரக்கொழுப்பு உணவுதான். பார்ப்பனர்களுக்கு அதிகம் உடலுழைப்பு கிடையாது. ஆனால், பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களுக்குத் தேவையான உணவு. அதுவும் இந்த மண்ணின் பாரம்பரிய உணவு என்பது, அசைவ உணவு வகையைச் சார்ந்ததே. இது விவசாய நாடு. பெரும்பான்மை மக்களின் உணவுத்தேவையை நிறைவு செய்ய மாமிசம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. மனித குல வரலாற்றைப் பார்த்தாலே உணவுச் சங்கிலிமுறை நமக்குத் தெரியவரும். மாட்டை மனிதன் உணவிற்காகத் தேர்ந்தெடுத்தது என்பது அதிகமான மக்கள் பங்கிட்டு உண்ணக்கூடியதும் அதே நேரத்தில் அவனது உடலுழைப்பிற்குத் தேவையான அனைத்து ஆற்றலும் மாட்டு மாமிசத்திலிருந்து கிடைக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை குடும்ப வாழ்க்கை அமைப்பில் ஆடு, கோழி மற்றும் மாட்டு மாமிசம் பொதுவாக இருந்தது. விழா நாட்களில் மாட்டை உணவிற்காக அறுப்பது, விருந்தினர் வரும்போது கோழி, ஆடுகளை அறுப்பது என்பது காலம் காலமாகத் தொடர்வதாகும்.

கோமத யாகம், அசுவமேத யாகம், நரமேத யாகம் என்ற பெயர்களில் உயிரினங்களைத் தீயில் இட்டுப் பொசுக்கிய பார்ப்பனர்கள் இன்று மாமிசம் கொண்டுவராதே என்று கூறுகின்றனர். சரி உங்கள் ஆட்சி உங்கள் அலுவலகம் என்று விட்டால் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் கருவாடு விற்க தடை விதித்துவிட்டார்கள். கேட்டால் கருவாட்டு நாற்றம் அங்குவரும் வியாபாரத் தரகர்களுக்குப் பிடிக்கவில்லையாம். கருவாட்டு விற்பனையாளர்களை எல்லாம் கடையைக் காலிசெய்துவிடச் சொல்லிவிட்டார்களாம். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மட்டுமல்ல... மோடி பதவியேற்பு விழாவிலேயே இந்த முயற்சி செய்யப்பட்டு பின்னர் பன்னாட்டுத் தலைவர்களுக்காக மாற்றடப்பட்டதும் அது கிண்டலுக்கு உள்ளானதையும் நாம் அறிவோம். இப்போது நடந்தேவிட்டது அவ்வளவுதான்.

ஏதேது இனிமேல் மாமிசம் சாப்பிடுபவர்கள் எல்லாம் இந்தியர்களே அல்ல என்று சட்டமியற்றிவிடுவார்கள் போலும்! விழிப்பாய் இரு தமிழா! இனி உனது உணவைக்கூட பார்ப்பானைக் கேட்டுத்தான் சாப்பிடும் நிலை வரப்போகிறது!

- சரவணா ராஜேந்திரன்

தமிழ் ஓவியா said...

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்களின் பங்கு


பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது கடந்த ஆண்டு 13.2 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான குற்றங்கள் 70.5 விழுக்காடும் பாலியல் குற்றங்கள் 60.3 விழுக்காடும் அதிகரித்துள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் 66.3 விழுக்காட்டினர் 16 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.

பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2013ஆம் ஆண்டு சிறுவர்கள்மீது மொத்தம் 31,725 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது, 2012ஆம் ஆண்டு 27,936ஆக இருந்துள்ளது. திருட்டு வழக்குகளில் 7,969 சிறுவர்களும், தாக்குதல் சம்பவங்களில் 6,043 சிறுவர்களும் கொள்ளை வழக்குகளில் 3,784 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்டு வருமானம் 25 ஆயிரம் ரூபாய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 விழுக்காட்டுச் சிறுவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

புனைப்பெயரில் திரியும் ஜனநாயகம்


அழுதுகொண்டிருந்தான் அவன்.
யாரும் கவனிக்கவில்லை!
பரட்டைத் தலை
அழுக்கான முகம்
வருவார் போவோரெல்லாம்
அடித்த வாசனைத் திரவியம்
ஆறியும் ஆறாமலும்
உடல் முழுவதும் தீப்புண்கள்
சிகரெட்டால் சுட்ட வடுக்கள்
அங்கங்கே வெட்டுக் காயங்கள்

சில சமயம்
புதுச் சட்டையோடு அரண்மனையிலிருப்பான்
பல சமயம்
கிழிந்த சட்டையோடு தெருவிலிருந்தான்

பிச்சைக்காரனுக்குப் பிச்சையிட்டான்
அதே தெருவில் அவனே பிச்சையெடுத்தான்
அவன் ஊமையென்று சந்தேகித்தார்கள்
அவன் வாய் தைக்கப்பட்டிருந்தது
கையை யாரோ முறித்திருந்தார்கள்

பரிதாபப்பட்டவர்கள் கூட்டிச் செல்வார்கள் வீட்டிற்கு
அடுத்த நாள்
தெருவில் தென்படுவான்.
அவனோடு புகைப்படம்
எடுத்துக்கொண்டார்கள்

பெயரைக் கேட்டேன்
சிரித்துக்கொண்டே நின்றான்
சர்வாதிகாரம் தன்னை
ஜனநாயகமென்பதால்
அடக்கு முறை பாசிசம்
ஜனநாயகமென்று சொல்லிக்கொண்டு திரிவதால்
மத வன்முறை அடிப்படைவாதம்
ஜனநாயகமென்று சொல்லிக்கொள்வதால்
தன் நிஜப்பெயரை தலைமறைவு வாழ்வுக்குக் கொடுத்துவிட்டு
புனைப்பெயரில் திரிகின்றான் ஜனநாயகம்.



- கோசின்ரா

தமிழ் ஓவியா said...

இன்றைக்கு 'ஓணம்' கதையை பார்ப்போமா?

சோழ நாட்டில் திருமரைக்காடு (வேதாரண்யம்); அங்கு ஒரு சிவன் கோயில். அங்குள்ள சிவனின் மனைவிக்குப் பெயர் ஞானம் பழுத்த நாயகி என்பதாகும்.

ஒரு நாள் தன் மனைவியோடு சிவன் புணர்ந்து கொண்டு இருந்தானாம்.(அர்த்தமுள்ள இந்து மதம்.....ம்)

அந்த நேரத்தில் எரிந்து கொண்டிருந்த தீபம் ஒளி குன்றி எரிந்து கொண்டிருந்ததாம். அந்த சமயத்தில் அங்கு வந்த எலி விளக்கில் இருந்த நெய்யைக் குடித்துவிட்டு, எலியின் வால் திரியின் மேல் பட்டதால், தூண்டப்பட்டு ஒளி பிரகாசமாகிவிட்டதாம்.

உடனே எலியைப் பார்த்து சிவன், நீ மூவுலகையும் அரசாட்சி செய்வாய்! என்று வரம் கொடுத்தானாம்.

அந்த எலி,
மாவலி என்னும் பெயரோடு பிறந்த அசுர குல அரசன் மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம் மூன்றையும் கட்டி ஆண்டானாம்.

விண்ணுலகையும் மாவலி ஆண்டதால், இந்திர லோகத்தின் அதிபதியாகிய இந்திரன் கூட மாவலிக்குக் கட்டுப்பட்டவனாகிவிட்டான். பொறுக்குமா அவர்களுக்கு?

அதே நேரத்தில் யாருக்கும் எந்த கேட்டையும் செய்யாமல் நல்லாட்சி புரிந்து, நல்ல பெயர் எடுத்தான் மாவலி!
அசுர குலத்தவன் நல்லாட்சி செய்வதாவது! நல்ல பெயர் எடுப்பதாவது! விட்டுவிடுவார்களா? இந்திரனின் தகப்பனாகிய காசிப முனிவன், விஷ்ணுவிடம் மனு போட்டானாம். கடும் தவமிருந்து விஷ்ணுவிடம் வரம் வேண் டினானாம். விஷ்ணு தமக்கு மகனாகப் பிறந்து மாவலியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மன்றாடினானாம். அதன்படியே வரமும் கிடைத்தது.

(மூன்று உலகத்தையும் மாவலி கட்டி ஆள வேண் டும் என்று சிவன் கொடுத்த வரம் என்னவாயிற்று? சிவனை விட வைணவக் கடவுளுக்குச் சக்தி அதிகம் என்று காட்டுவதற்கு இதுபோன்ற கதைகள் போலும்!)

ஒருமுறை யாகம் செய்த மாவலி தான தருமங்களைச் செய்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி காசிப முனிவருக்குப் பிறந்த வாமனன் (குள்ளப் பார்ப்பான் - சூழ்ச்சி என்று வந்தால் புராணங்கள் கூட பார்ப்பானைத்தான் தேடிப் பிடிக்கின்றன.) பிச்சைக்காரனாக (யாசகம் புருஷ லட்சணம் என்பதே பார்ப்பன தருமம் ஆயிற்றே!) சென்று மூன்று அடி மண்ணைக் கேட்டானாம். கேட்பாருக்கு இல்லை என்று சொல்லிப் பழக்க மில்லாத அந்தத் தர்மப்பிரபுவாகிய மாவலி எனும் அசுர அரசன் சம்மதித்தான்.

சூழ்ச்சிக்காரக் குள்ளப் பார்ப்பனனாகிய வாமனன் பேருரு எடுத்து (விசுவரூபம்) ஓரடியை மண்ணுலகத்திலும் மற்றொரு அடியை விண்ணு லகத்திலும் வைத்து, மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்டானாம். என் தலையில் வை! என்றானாம் அந்த அப்பாவி; அவ்வளவுதான். தலையில் காலை வைத்து மிதித்து சிறையிலும் அடைத்தானாம்.
இந்த நாளில் மாவலி வீட்டுக்கு வீடு வருகி றானாம். கேரளத்தில் அப்படி ஒரு நம்பிக்கை. வீட்டு வாசலில் கோலம் போட்டு வைக்கிறார்கள்- மாவலியின் வருகைக்காக. ஓணம் பண்டிகை என்பது இதுதான்.

இந்தக் கதை மூடத்தனத்தின் மொத்தக் குத்தகை என்பது ஒருபுறம். இந்து மதத்தில் விஷ்ணு அவதாரம் எடுப்பதெல்லாம் அசுரர்களை அழிக்கத் தான் என்பதை மறந்துவிடவேண்டாம்.

தீபாவளிக் கதையும் இந்த ரகத்தைச் சேர்ந்ததே!

நல்லவனாக இருந்தாலும் அவன் அசுர குலத்தவன் என்றால் - சூத்திரன் என்றால் அவனை ஆளவிடாதே- அழித்துவிடு! என்கிற ஆரிய தத்துவம்தான் இந்த வாமன அவதாரக் கதை!

இங்கு மதம், கடவுள், பக்தி என்பதெல்லாம் நம்மை ஒழிப்பதற்கே! இந்தச் சூழ்ச்சி புரியாமல் கடவுள், காடாத்து என்று அலைவது பரிதாபமே!

(நன்றி: விடுதலை 29.08.2012)

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஜாதகம்

திருமணத்தின்போது பொருளாதாரம், ஜாதகப் பொருத்தம் குடும்ப கவுரவம் - இதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்ற கேள் விக்கு ஓர் ஆன்மிக இதழ் தந்துள்ள பதில் இது. முதலில் பெண்ணுக்கும், பையனுக்கும் மனப் பொருத்தம் பார்க்க வேண்டும்.

அடுத்து ஜாத கப் பொருத்தம் பாருங் கள் என்கிறது - ஆன்மிக இதழ். ஆக ஜாதகப் பொருத்தத்தில் மணமக் களின் மனப்பொருத்தத் துக்கு இடம் இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறதா இல்லையா? முக்கியமான விஷயத் திலேயே கோட்டை விட் டபின் அப்புறம் என்ன ஜாதகம் - வெங்காயம்?

Read more: http://viduthalai.in/e-paper/87322.html#ixzz3Ck7VvJdb

தமிழ் ஓவியா said...

பெரியார் 1000 வினா - விடைப் போட்டி


என் பெயர் ஸி.ணி.லி. ஜான்சிராணி. நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன். 31.08.2014 அன்று நான் தென் சென்னையில் அரும்பாக்கத்தில் நடைபெற்ற பெரியார் 1000 வினா விடைப் போட்டியில் கலந்து கொண்டேன்.

கடந்த 10 நாட்களாக பெரியார் 1000 வினா - விடைப் புத்தகத்தை முழுவதும் படித்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் நிறைய தெரிந்துக் கொண்டேன். அதில் சில.

பெண்ணடிமை ஒழிப்பு
ஜாதி ஒழிப்பு
வகுப்புரிமைக்கான போராட்டம்
இனிவரும் உலகம்
மூடநம்பிக்கை ஒழிப்பு
தந்தை பெரியாரின் கடுமையான உழைப்பு
பெண்களுக்கான கல்வி நிறுவனங்கள்
பெரியாரின் வாழ்க்கை வரலாறு
பெரியாரின் இலட்சியங்கள், சிந்தனை.
இந்தப் போட்டியை நடத்திய திராவிடர் கழகத்திற்கு நன்றி.

- ஜான்சிராணி, சைதாப்பேட்டை, மேற்கு, சென்னை-15

Read more: http://viduthalai.in/page-2/87330.html#ixzz3Ck86eoGX

தமிழ் ஓவியா said...

வயிற்றுப்புண் நோயை குணப்படுத்தும் இளநீர்


வயிற்றுப்புண் நோய்(அல்சர்) என்பது நமது உடலில் உள்ள சிறுகுடலில் ஏற்படுவது. நேரம் தவறி சாப்பிடுவது, நீண்ட நேரம் சாப்பிடாமல் இருப்பது, அதிக காரமான தின்பண்டங்களை சாப்பிடுவது போன்ற பல காரணங்களால் அல்சர் உருவாகிறது.

வயிற்றுப்புண் உருவாகி இருந்தால் சாப்பிடும்போது வயிற்றில் எரிச்சல், நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி உள்ளிட்டவைமூலம் நாம் அறிந்து கொள்ளலாம். வயிற்று புண் நோய் இருப்பவர்கள் சாக்லெட், குளிர் பானங்கள், மது, பெப்பர்மிண்ட், காபி, கருப்பு தேநீர், ஆரஞ்சு, திராட்சை, பூண்டு, மிளகாய், பால் உணவுகள், காரம், வெங்காயம், தக்காளி விழுது, தக்காளி பொருட்கள் உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்புண் ஏற்பட்டிருந்தால் கோதுமை,கோழி,மீன், பீன்ஸ், முட்டை,தயிர், அத்திப்பழம் உள்ளிட்டவைகளை கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.அத்துடன் புளிப்பான, பழங்கள் மற்றும் காரமான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்புண் நோய் குணமாக முக்கிய இயற்கை மருந்தாக விளங்குவது இளநீர். இதில் உள்ள தண்ணீர்,வழுக்கை உள்ளிட்டவைகள் நம் உடலில் உண்டாக்கும் நோயை தடுக்கும் இயற்கை மருந்தாக பயன்படுகிறது. இதில் நாட்டு இளநீர், செவ்விளநீர், பச்சை இளநீர் என பல வகைகள் உண்டு.

இதனை தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் நோய் விரைவில் குணமடையும். மேலும் உடல் சூட்டை தணிப்பதோடு, கண்களுக்கு குளிர்ச்சி, அதிக உணவு சாப்பிட்ட பிறகு செரிமானமாகும், செரிமானக் கோளாறு களை சரிசெய்யும்.

மேலும், இதனை தினமும் மதியம் நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தி, ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை வெளியேற்று வதுடன், ரத்த சோகையை போக்குகிறது. அத்துடன் ரத்த கொதிப்பு குறைக்க, இரத்த அழுத்தம், மஞ்சள்காமாலை, காலரா, அம்மை நோய்,கல்லீரல் பாதிப்பு, நாவறட்சி, தொண்டை வலி ஆகியவற்றையும் நீக்குவதுடன், உடல் பருமனையும் அதிகரிக்க செய்யும்.

மேலும் வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையில் ஏற்படும் தடிப்புகளை குணப்படுத்தவும் இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.

Read more: http://viduthalai.in/page-7/87346.html#ixzz3Ck9wFvou

தமிழ் ஓவியா said...

ஆடு, கோழி பலியிட்டு காவல் நிலையங்களில் பரிகாரமாம்!


நாமக்கல், செப்.8-_ இடமாற்றம், மோசமான சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் அதிர்ச்சியடைந்த வேல கவுண்டம்பட்டி காவல்துறையினர் ஆடு, கோழி பலியிட்டு காவல் நிலையத்தில் ரத்தத்தைத் தெளித்து பரிகாரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தொடர்ச்சியாக வேறு இடங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.

இங்கு ஆய்வாளர் பணியிடமும் காலியாகவே உள்ளது. தற்போது ஒரு துணை ஆய்வாளர் மற்றும் சில காவல் துறையினரே பணியில் உள்ளனர்.

அதிருப்தியிலும், மன உளைச்சலிலும்...

இந்தக் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருட்டு, சாலை விபத்து போன்ற மோசமான காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு மாதத்திற்கு முன், காவல் நிலையத்திற்கு அருகிலேயே, காவல்துறையினரைக் கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் இங்கு பணியாற்றும் காவல்துறையினர் மிகுந்த அதிருப்தியிலும், மன உளைச்சலிலும் உள்ளனர். இது போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் நேற்று இரவு நடத்திய ரகசிய பூஜை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடு, கோழிகளை பலியிட்டு ரகசிய பூஜை
காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் பிரச்சினைகள் நிகழாமல் இருக்கவேண்டும் என்பதற் காகவும், இடமாற்றத்தால் அலைக்கழிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவும், காவல்துறையினர் நேற்று இரவு காவல் நிலையத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில், ஆடு, கோழிகளை பலியிட்டு ரகசிய பூஜை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த ரத்தத்தை காவல் நிலையத்தில் தெளித்துள்ளனர்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில்,

கடந்த வாரம் நடந்த சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். அந்த வாகனங்கள் காவல் நிலையத்தில்தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதில் படிந்துள்ள ரத்தக்கறையால் இரவு நேரங்களில், ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழுமோ என்ற அச்சம் உள்ளதாம். செய்தியாளர்கள் படம் எடுக்க முடியாதவாறு...

எனவே, அதில் இருந்து விடுபடும் நோக்கில் தினமும் எலுமிச்சம் பழத்தை அறுத்து அதன் சாறை காவல் நிலையம் முழுவதும் தெளித்து வருகிறோம். இதனால் மன நிம்மதி ஏற்படுகிறது. மற்றபடி ஆடு, கோழிகளை பலியிடவில்லை? என்றனர்.

விவரம் அறிந்து செய்தியாளர்கள் படம் எடுக்க முடியாதவாறு அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்தியும் உள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Read more: http://viduthalai.in/page-8/87359.html#ixzz3CkAfdTKT

தமிழ் ஓவியா said...

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிலாளர் பிரச்சினை!




நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே 13,000 தொழிலாளர்களின் குடும்பங்கள் வாடிக் கொண்டு வறுமையோடு போராடுவதை நெய்வேலி நிர்வாகமும், மத்திய அரசும் மனிதநேய அடிப்படையில் அணுகி, அவர்களை உடனடியாக நிரந்தரப்படுத்த முன் வர வேண்டுமென திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்வதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் ஒப்பந்தத் தொழி லாளர்களாகவே (Contract Labourers)
வைத்து, அவர்களை வழமையான ஊழியர்களாகவோ, நிரந்தரத் தொழிலாளர்களாகவோ ஆக்காமல் இருக்கும் அவலத்தையும் அநியாயத்தையும் கண்டித்து (இதேபோல திருச்சி B.H.E.L. என்ற கனரகத் தொழிற்சாலையிலும்கூட அநீதி தொடர்ந்த வண்ணம் உள்ளது) அங்கே பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து வந்தனர்; இதனை எதிர்த்து வேலை நிறுத்தத்திற்குத் தடையாணையை பெற்றுள்ளனர்.

மனிதநேய அடிப்படையில் அணுக வேண்டிய பிரச்சினை இது.

நெய்வேலி நிறுவனம், நல்ல லாபத்தில் இயங்கும் நிறுவனம். இதற்கு அடிப்படைக் காரணம் உழைக்கும் தொழிலாளி வர்க்கம் அல்லவா? அவர்களது உழைப்பை - பணி நிரந்தரம் செய்யாது வெறும் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே பல ஆண்டுகள் நீடிக்க வைப்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா?

காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் - அவன்
காணத் தகுந்தது வறுமையோ?
பூணத் தகுந்தது பொறுமையோ? என்று கேட்டார் புரட்சிக் கவிஞர்.

நல்ல சமூக பொருளாதார நீதியை நிலை நாட்டும் அரசானால், அது தந்தை பெரியார் அவர்கள் அறிவுறுத்தியது போல - தொழிலாளர்களை, லாபத்தில் பங்கு பெற்ற பங்காளிகளாக ஆக்கிட முன் வர வேண்டும். மூலதனம் என்பது இவர்களுடைய உழைப்பும் தானே!
13,000 தொழிலாளர்களின் குடும்பங்கள் வாடிக் கொண்டு வறுமையோடு போராடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறதா அரசு?

நல்ல லாபத்தில் இயங்கும் இந்த நிறுவனம் இவர்களை நிரந்தரமாக்கி, வாழ்வளிப்பதனால் உற்பத்தி பெருகும் - காரணம் தொழிலாளர்கள் மேலும் உற்சாகத்துடன் பணி புரிவார்களே!

பெரிய அதிகாரிகள் அரிசி வாங்கும் கடையும் இந்த பரிதாபத்திற்குரிய தொழிலாளர்கள் வாங்கும் கடையும் ஒரே கடைதானே!
பசியும் இருவருக்கும் பொதுவானதுதானே! (வேண்டு மானால் அதிக சம்பளம் பெறுவோர்க்கு பசி சற்று குறைவாகக்கூட இருக்கும் என்பதே உண்மை).

எனவே, சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டால், இப்பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண முடியாது.
மனமிருந்தால் மார்க்கமுண்டு. தலைமை அதிகாரிகள் இதில் மனிதநேய உணர்வுடன் இப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, அந்த 13,000 குடும்பங்களுக்கு நல்வாழ்வு அளித்து, பெருமை தேடிக் கொள்ள முன்வர வேண்டும்.

நெய்வேலி நிறுவனம், B.H.E.L. போன்ற நவரத் தினங்கள் - தொழிலாளர் பிரச்சினையிலும் எடுத்துக் காட்டாக முன்னணியில் நிற்பது, அனைத்துத் தரப்பி னருக்கும் நல்லதல்லவா?

எனவே, காலந் தாழ்த்தாது உடனடித் தீர்வு காண முயன்று இரு சாராருக்கும் (Win-Win) வெற்றி என்ற நிலையில் நிர்வாகம் விட்டுக் கொடுத்து, ஒரு குடும்பத்தில் தன்முனைப்புக்கு எப்படி இடந்தரக் கூடாதோ அதே போல இப்பிரச்சினையில் அணுகு முறையை - நடைமுறைக்கு உகந்ததாக ஆக்கிட முன்வர வேண்டுமென நிர்வாகத் தினை - மத்திய அரசினை திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.


சென்னை

7.9.2014

கி.வீரமணி

தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page1/87246.html#ixzz3CkBQiWl5