Search This Blog

26.9.14

நவராத்திரியால் கண்ட பலன் என்ன?





 
மாதம் தவறினாலும் பண்டிகை தவறாது இந்து மதத்தில் - மக்களின் அறிவையும், காலத்தையும், பொருளையும் எந்த வகையிலாவது சுரண்டவேண்டும் என்பதுதான் இதன் தத்துவம்.


ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு வகையான புராணக் கதையிருக்கும் - புத்திக்கும், ஒழுக்கத்துக்கும் கொஞ்சம்கூட பொருந்தா புழுதிக் குப்பை மேடாகத்தான் இருக்கும்.

அதிலும் குறிப்பாக அசுரன் என்ற ஒருவன் கண்டிப் பாகவே வருவான் அந்தக் கதையில்; அந்த அசுரனைக் கொன்ற வைபவமும் கண்டிப்பாகவே இடம்பெறும்.


வேதங்களில், இதிகாசங்களில், புராணங்களில் கூறப்படும் அசுரன், அரக்கன், இராட்சதன், கறுப்பன் என்ற கதாபாத்திரங்கள் எல்லாமே திராவிடர்களைத்தான் குறிக்கும் என்று வரலாற்று அறிஞர்கள் ஆதாரங்களோடு குறிப்பிட்டுள்ளனர்.


பி.டி.சீனிவாசய்யங்கார் போன்றவர்களேகூட, இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பிரச்சாரம் செய்த விவேகானந்தர் போன்றவர்களேகூட இந்தக் கருத்தில் மாறவேயில்லை.

நவராத்திரி, நவராத்திரி என்று கொண்டாட இருக் கிறார்களே (இன்றுமுதல்) அதன் பின்னணியும் இதேதான்.


முன்னொரு காலத்தில் மகிஷாசுரன் என்ற எருமை வடிவமான அசுரனும், அவன் பரிவாரங்களும் விருத்தி யாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால், இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்தி பெற்று, ஒன்பதாம் நாள் மகிஷாசுரனைக் கொன்று, பரிவாரங்களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசுரனைக் கொன்றதனால், பார்வதிக்கு மகிஷாசுரமர்த்தினி என்ற பெயரும் வந்ததாம். இதன் அடிப்படையில் பார்வதி தவமிருந்து விழித்திட்ட ஒன்பதாம் நாளில் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்ற நம்பிக்கையிலேயே இந்த நவராத்திரியைக் கொண்டாடு கிறார்களாம்.


இந்தக் கதையைப் படிக்கும் எவருக்கும் கடுகளவு புத்தி இருந்தாலும், சில கேள்விகள் கண்டிப்பாகக் கிளர்ந்து எழத்தான் செய்யும்.


மகிஷாசுரன் மோசமானவன் என்பது உண்மையா னால், கடவுள் அவனுக்கு சிறந்த பதவியை அடைவதற் கான வரத்தை ஏன் கொடுக்கவேண்டும்? கடவுளுக்கு முன்புத்தி, யோசனை கிடையாதா? என்பது ஒரு கேள்வி.
கடவுளிடம் தவம் இருந்து சிறந்த பதவியை அடைந்த வனுக்கு ஏன் கெட்ட புத்தி வந்தது? தவத்துக்கும், பதவிக்கும் உள்ள சிறப்பு இதுதானா?


இந்தப் புராணங்களில் சொல்லப்படும் தேவர்கள் என்பவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் என்றுதான் வரலாற்று ஆசிரியர்களும் கூறுகிறார்கள்.
இதன்மூலம் ஒன்று தெரிகிறது அல்லவா? ஆரியப் பார்ப்பனர்களான தேவர்களுக்கும், அசுரர்கள் என்று சொல்லப்படும் திராவிடர்களுக்குமிடையே நடைபெற்று வந்த சண்டைச் சச்சரவுகளை மய்யப்படுத்தியே இவற்றை சோடித்து, புராணங்களைக் கற்பித்து, பண்டிகைகளை ஏற்படுத்தி, கொலை செய்யப்பட்ட அசுரர்களையே பண்டிகைகளைக் கொண்டாடச் செய்த சூழ்ச்சியை என்னவென்று சொல்லுவது?


இன்னொரு கேள்வியும் உண்டு. இவர்கள் சொல்லும் இந்த அசுரர்கள் இப்பொழுது இருக்கிறார்களா? இல் லையா? அந்தத் தேவர்களும்தான் எங்கே போனார்களாம்?


பார்வதி தேவி யாராக இருக்கட்டும்; இந்து மதத்தில் மற்ற கடவுள்களாகத்தான் ஆகட்டும் - இவற்றின் நடவடிக் கைகள் எல்லாம் கடந்த காலத்தில்தானா? இறந்த காலத்தில்தானா? நிகழ்காலத்தில் ஏன் நடப்பதில்லை?


இந்தக் கேள்விகளை தந்தை பெரியார் கேட்டார்; தொடர்ந்து கருஞ்சட்டைக்காரர்களும் கேள்விகளை எழுப்பிக் கொண்டுதானிருக்கிறார்கள். சங்கராச்சாரியார் களும் சொல்வதில்லை; புராணங்களைக் கரைத்துக் குடித்த வாரியார்களும் வாய் திறந்தது கிடையாது.
கடந்த காலத்தில் மக்கள் பெருமாள் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டு இருந்தார்கள் - நம்பினால் தான் நடராஜன், நம்பாவிட்டால் எமராஜன் என்ற அச்சத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.


இது பெரியார் சகாப்தம்! பகுத்தறிவைத் தங்கு தடையின்றிப் பயன்படுத்தும் புத்துலகம் இது; இத்தகு காரணங்களால் கடவுளைப்பற்றிய அற்புதங்களைக் கிளப்ப முடியவில்லை.


தப்பித்தவறி ஒரு சில இடங்களில் அற்புத சமாச்சாரங் களைக் கிளப்பினால், அந்த இடத்திற்கே நேரில் சென்று கறுப்புச் சட்டையினர் தங்கள் பகுத்தறிவு வினாக்களை எழுப்புகின்றனர்; அற்புதக் கட்டுக் கதைகளை நோக்கி எதிர்வாதங்களை வைக்கின்றனர்; மக்களிடம் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளை, அச்ச உணர்வுகளை வெளியேற்றுகின்றனர்.


இருந்தாலும் இத்தகைய பண்டிகைகள் நடந்துகொண்டு தானே இருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பலாம். கடவுள் சக்தி, பக்தி என்பதைவிட ஏதோ ஒரு பொழுது போக்காகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இதில் வியாபார யுக்திகள் புழுத்துக் கிளம்பிவிட்டன.


நவராத்திரிப் பண்டிகை கொண்டாடுவதால், ஒன்பது நாள்கள் கொலு வைத்துப் பூஜை நடத்துவதால், மக்கள் கண்ட பலன் என்ன?


நோய் நொடிகள் தீர்ந்தனவா? பொருளாதார இழப்புகள் தவிர்க்கப்பட்டனவா? வறுமை ஒழிந்ததா? வாழ்க்கையில் என்னென்ன கஷ்டங்கள் விலகி ஓடின என்று பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா?

நவராத்திரி பண்டிகைகளால் நல்ல வரம் கிடைக்கும்; அதனைக் கொண்டு வளம் பெறலாம் என்றால், அரசு எதற்கு? அரசுத் துறைகள் எதற்கு? திட்டங்கள் எதற்கு? செயல்பாடுகள்தான் எதற்கு? பக்தி நோய்க்கு ஆளாகும் மக்கள் சிந்திக்கட்டும்!

                     ----------------------”விடுதலை” தலையங்கம்  25-09-2014
Read more: http://viduthalai.in/page-2/88212.html#ixzz3EPk1TSzN

12 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அதர்மம்

கிருஷ்ணன் மகா விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாம். உலகில் எப்பொழுதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ அப் பொழுதெல்லாம் பகவான் கிருஷ்ணன் அவதரிக்கிறார். சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளு டன் அவதரிப்பாராம்.

சரி... இப்பொழுது அதர்மம் தலைதூக்கவில் லையா? கொலைகளும், கொள்ளைகளும், யுத்தங் களும் தலைதூக்கி நிற் கின்றனவே! கிருஷ்ணன் ஏன் இவற்றை நிக்ரகம் செய்ய அவதாரம் எடுக்க வில்லை? அப்படி ஒருவன் இருந்தால் அல்லவா வரு வான்?

Read more: http://viduthalai.in/e-paper/88265.html#ixzz3ETSdbO13

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரும் அல்லாதாரும்


ஆண்களும் பெண்களும் கோயில் களுக்குச் சென்று தலை மொட்டை அடித்துக் கொள்வதும், காவடிக் கட்டையைத் தூக்கிக் கொண்டு தெருவில் குதிப்பதும் புண்ணியக் காரியம் என்கிறார்கள். எந்தப் பார்ப் பனராவது பார்ப்பனப் பெண்ணாவது மொட்டை அடித்துக் கொள்ளவோ, தெருவில் குதிக்கவோ வருகிறார்களா?
(விடுதலை, 29.8.1950)

Read more: http://viduthalai.in/page-2/88271.html#ixzz3ETT6UqnB

தமிழ் ஓவியா said...

திருவாசகத்தில் திரளும் காமச்சுவை!


திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என ஆத்தீக நண்பர்கள் மிக்க பெருமையுடன் கூறிக் கொள்வதும், சைவப் பற்றாளர்கள் இறைவனின் சிறப்பையும், அடியார்களின் உள்ளத்தை உருக்கி இறைப்பணிக்கு ஏற்புடையதாக்கியும் நிற்கும் பெருநூல் என்றும் கூறுவர்.

சைவ குரவர் நால்வரில் பாண்டி மாமன்னனிடம் அமைச்சராகப் பணியாற்றி, அரசுப் பணத்தை பக்திப் பரவசத்தால் திருப்பணிக்குச் செலவிட்டு அதன் காரணமாக மன்னன் தண்டனை வழங்க, இறைவனின் அருளால் பெருமை கொண்டதாகக் கூறப்படும் மாணிக்கவாசகர் பாடிய நூல் பக்திச் சுவையைப் பரப்புவதை விட பாமரரும் படிப்பதைப் பக்கம் நின்று கேட்பதால் மயங்கும் காமச்சுவையை அதிகம் பரப்பி நிற்கிறது.

மயக்கம் தரும் அபின் என்ற போதைப் பொருள் சீன நாட்டிற்குள் விற்கக்கூடாது என்பதற்காக நடைபெற்ற போரைப் போல, இந்த மயக்கம் தரும் காமச்சுவையை ஆரியம் பயன்படுத்தி தமிழினத்தை அடிமை கொண்டது. அதைப் போலவே நுண்கலைகளையும் கருவிகளாகப் பயன்படுத்தி ஆரியம் ஆட்சி மன்றம் ஏறியது. அந்த மயக்கத்தைப் போக்குவதுதான் நமது நோக்கமே தவிர, காமச்சுவையின் பால் கொண்ட காதலால் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

ஆத்திகத்தின் மோசடி வேலை

ஆத்திகத்தின் பெயரால் எத்தனையோ மோசடிகள் நடைபெறுவதைப் போலவே காமச்சுவையும் ஒன்று என்பதை விளக்கும் போது விரசம் ஏற்படுவதை உணர்ந்தாலும், உள்ளதை உள்ளபடி உரைப்பது இன நலத்திற்கு ஏற்புடையது என்பதால் எழுதுகிறோம்.

காமம் என்பது திருக்குறளிலும் கையாளப்பட்ட சொல் என்றாலும் காமத்து பாலில் உணவிற்கு உப்பைப் போல் பயன்படுத்தப்பட்ட காமம் ஆண்டவனின் பெருமையை - உயர்வை உரைக்க எழுந்ததாகக் கூறப்படும் திருவாசகத்தில் காமச்சுவை ஆறெனப் பெருகி, பெருவெள்ளமாகப் பெருக்கெடுத்தோடுவதை காண் கிறோம்.

எனவே ஆண்டவன் பெயரால் ஆரியர்களும், ஆரிய அடிவருடிகளும் நடத்தும் காமச்சுவை மிகுந்த நாடகத்தில் பல காட்சிகள் உண்டு. அவைகளில் ஒன்று இவண் காட்சிக்கு வருகிறது. காட்சி மாணிக்கவாசகரின் மணிமொழிகள் என்று பக்தகோடிகள் கூறும் திருவாசகத்திலிருந்து-

காமத்தைப் பரப்பும் கருவி

அணங்குகளின் அழகிற்கு அணி செய்வது கருங்கூந்தல் அதற்கு மெருகூட்டுவது செவ்வாய். கார்காலத்து ஆண்மயில் நடையினையும் கூறி பெண்ணினத்தைப் போற்றிய மாணிக்கவாசகர் போதும் என்று நிறைவு கொண்டாரா? இல்லையே பக்தர்களின் உள்ளத்தை உருக்க வேண்டுமல்லவா? ஆகவே, மேலும் பெருக்குகிறார் பாருங்கள். ஒன்றோடொன்று நெருங்கி, இறுமாப்புக் கொண்டு உள்ளே களிப்புக் கொண்டு, பட்டிகையறும் படாமிகைத்து, இணைத்து எழுந்து ஒளிவீசி எதிரே பருத்து, இடுப்பானது இளைப்புற்று வருந்தி நிற்கும் அளவிற்கு எழுந்து கொங்கைகளின் நடுவே ஈர்க்கும் கூட நுழைய முடியாத அளவிற்கு வாரித்து, விம்மிப் புடைத்து எழுந்து நிற்கும் கொங்கைகளையுடைய பெண்கள் என்று எழுத்தோவியத்தால் இறைவன் புகழ்பாடி இறையடி யார்களின் நெஞ்சில் இன்பப் பெருக்கைத் தாராளமாகப் பாயவிட்ட திருவாசகத்தைப் போல் வாழ்க்கைக்கு ஒரு வாசகம் உண்டா?

இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக திருவாசகப் பாடலையே தருகிறோம். படித்துப் பயன்பெறுங்கள்.

கருங்குழற் செவ்வாய்

வெண்ணகைக் கார்மயில்

ஒருங்கிய சாயல் நெருங்கிஉள் மதர்த்துக்

கச்சற நிமிர்ந்து கதிர்த்துமுன் பணைத்(து)

எய்திடை விருந்த எழுந்து புடைபாத்(து)

ஈர்க்கிடை போகா இளமுலை மாதர்தம்

மாணிக்கவாசகர், திருவாசகம் அடியார்கள் ஆண்டவனுக்கு புனைந்த பாமாலையில் பாவையர்களின் உறுப்பு நலம் பாராட்டி புனையப்பட்ட பாமாலைகள் ஆண்டவனைக் காட்டுவதற்கு பதில் ஆரணங்குகளின் மீது மோகங்கொள்ளச் செய்வதற்குக் காரணமாக அமைந்து விட்டது.

எனவே! ஆண்டவனும் இல்லை! அவன் புகழ்பாட எழுதப்பட்ட பாமாலைகள் ஒழுக்கத்தைக் கொடுக்ககவுமில்லை. தமிழனத்தைக் கெடுத்த குற்றவாளிகளில் மாணிக்க வாசகரும் ஒருவர், அவர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகிறார். மக்கள் மன்றம் கூறும் தீர்ப்பிற்குக் காத்திருப்போமாக!

-தஞ்சை ஆடலரசன்

Read more: http://viduthalai.in/page-7/88253.html#ixzz3ETTqv1Wi

தமிழ் ஓவியா said...

மகாமகத்தின் வரலாறு


ஆதிகாலத்தில் உலகப் பிரளயம் நேரிடுவதற்கு முன்பு, பிரம்மதேவர் அப்பிரளயத்தினால் சகல சிருஷ்டிகளும் அழிந்து போகக் கூடிய நிலைமையைக் குறித்து கவலையுற்று, அதைத் தவிர்க்க கருதி, கைலாசநாதனான சிவபெருமானைக் குறித்து துதித்தார்.

அவரும் பிரம்மதேவனின் வேண்டுகோளுக்கிணங்கி அவ்வித அழிவை நிவர்த்திக்கும் பொருட்டு, சிருஷ்டி பீஜத்தை அமிர்தத்துடன் கலந்து அமிர்தம் நிறைந்த ஒரு குடத்திற்குள் வைத்து குடத்தைத் தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் இவைகளால் அலங்கரித்து மூடி, மகா பிரளயத்தில் விட்டு விடும்படி பிரம்மதேவரிடம் சொன்னார்.

அவ்வாறே பிரம்மதேவரும் பிரளயகாலத்தில் அந்த அமிர்த குடத்தை மிதக்க விட்டதாகவும், அக்கும்பம் இந்த சேத்திரத்தில் மிதந்து வந்து தங்கலுற்றதாகவும், பிரளய முடிவில் பிரம்மதேவர் முதலியோர் அக்குடத்தைக் கண்டு மறுமுறை சிவபிரானைத் துதிக்கவும், அவர் அச்சமயம் வேடரூபத்துடன் பிரசன்னமாகி, ஓர் பாணத்தை எய்து, அவ்வமிர்த கும்பத்தை உடைக்கவே, அதனுள்ளிருந்த அமிர்தம் இப்பிரதேசத்தில் பரவியது பற்றி இச்சேத் திரத்திற்கு கும்பகோணம் எனப் பெயர் வழங்கலாயிற் றென்பது புராண வரலாறு.

அக்குடத்தினின்றும் வெளிப்பட்ட அமிர்தமானது இருகூபங்களாக (கிண றுகள்) தங்கலுற்றது. அவைகளில் ஒன்று மகாமகக் குளம் என்றும், மற்றொன்று ஹேம புஷ்கரணி (பொற்றாமரை) என்று வழங்கப் பெற்று வருகின்றன.

முன்பு விவரித்தபடி சிவபெருமானால் உடைக்கப்பட்ட குடத்தின் பாகங்கள் அதிலிருந்த அமிர்தத்தைக் கொண் டே பிசையப் பெற்று, ஓர் லிங்கபூர்வமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டதாகவும், அவரே கும்பேஸ்வரர் என்று வழங்கப் பெற்றதாகவும் புராணம் சொல்லுகிறது.

அமிர்த குடத்தின் மேல் மூடப்பட்ட அலங்கார சாமான்களான தேங்காய், மாவிலை, வில்வம், பூணூல் முதலியவை முறையே இப்பிரதேசத்தைச் சுற்றிப் பரவி எழுந்து அவை யாவும் அங்கங்கே சிவசேத்திரங் களாக ஏற்பட்டு, பூஜார்ஹமாக விளங்கி வருகின்றன.

இந்நகரம் முக்கிய சிவசேத்திரமாக இருப்பதுமன்றி, முக்கிய விஷ்ணுசேத்திரமாகவும், புண்ணிய தீர்த்தங் களையுடையதாகவும், தொன்று தொட்டு விளங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பு: இது சுதேசமித்தரன் 19.2.1945ஆம் தேதி இதழில் காணப்படுகிறது. இதைக் கண்ணுறும் எவரும் இது எவ்வளவு ஆபாசக்களஞ்சியம் என்பதையும், இதையும் இந்த 20ஆம் நூற்றாண்டில் நம் மக்கள் நம்பி வருகிறார்களே என்றும் எவர்தான் வருந்தாமல் இருக்கமுடியும்?

இவ்வளவு கூட பகுத்தறிவு இல்லாத மக்கள் அடிமையாக இருப்பதில் ஆச்சரியமென்ன?

(24.2.1945 குடிஅரசு இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)

Read more: http://viduthalai.in/page-7/88252.html#ixzz3ETU59qjA

தமிழ் ஓவியா said...

நீர் பொங்குமாம்!


12 ஆண்டிற்கு ஒருமுறை மகாமகக் குளத்தில் நீர் பொங்கி வருவதாக நேரில் பார்த்ததாகவே சிலர் கூறுகிறார்கள்.

தண்ணீரை நெருப்பில் வைத்துக் காய்ச்சினாலல்லது, பொங்குகிற வஸ்துவை அதில் போட்டாலல்லது தண்ணீர் எப்படி பொங்க முடியும்? மாமாங்க தினத்தன்று தண்ணீர் குளத்தில் விட்டு வைத்த அளவுக்கு மேல் அதிகமாகக் காணப்படுவதாக சில பார்ப்பனர்கள் கதை கட்டி விடுகிறார்கள்.

மக்களைத் தண்ணீருக்குள் இறங்கவிடாமல் தடுத்து நிறுத்தி பிறகு தண்ணீரை பார்த்தால் அப்போது அது பொங்குகிறதா இல்லையா என்பதின் உண்மையை கண்டுபிடிக்க முடியும்.

அப்படிக்கில்லாமல் பதினாயிரக் கணக்கான மக்களை குளிக்க விட்டு அதன்பிறகு தண்ணீர் அதிகமாகி இருக்கிறது என்று சொன்னால் அதை எப்படி தண்ணீர் என்றே சொல்ல முடியும்? குளிக்கப்போகும் மக்கள் அந்தக் குளிரில் தங்கள் சிறுநீரைக் கழிக்க அந்தக் கூட்டத்தில் குளக்கரையில் எங்கு இடம் காணமுடியும்?

ஆதலால் குளிக்கிறவர்கள் அவசர அவசரமாகத் தண்ணீரில் இறங்கி அங்கு சிறுநீர் கழிக்க ஏற்பட்டு விடுவதன் மூலம் குளத்தின் தண்ணீர் பெருகி இருக்கலாம். அந்த சிறுநீரின் தன்மையால் குளத்தில் குமிழிகள் காணப்படலாம். அன்றியும் மக்கள் ஏராளமாகத் தண்ணீரில் இறங்குவதாலும் தண்ணீர் உயர்ந்து இருக்கலாம்.

இந்த மாதிரி காரணங்களால் தண்ணீர் மட்டம் 4, 2 படிக்கட்டுகளுக்கு உயர்ந்து விட்டால், அதைப் பொங்கிற்று என்று சொல்லுவது அறிவுடைமையாகுமா என்று கேட்கிறோம்.

- தந்தை பெரியார்

Read more: http://viduthalai.in/page-7/88254.html#ixzz3ETUIYGxm

தமிழ் ஓவியா said...



செவ்வாய்க்கலன் (மங்கள்யான்) வெற்றிக்காக உழைத்த விஞ்ஞானிகளைப் பாராட்டுகிறோம்

விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் வளர்த்து செவ்வாய் தோஷம் போன்ற மூட நம்பிக்கைகளுக்கு முடிவு கட்டுவீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை!

செவ்வாய் கோளுக்கு விண்கலத்தினை அனுப்பி அரியதோர் சாதனையைப் படைத்த விஞ்ஞானி களைப் பாராட்டுவதோடு, இதைப் பயன்படுத்தி, இளைஞர்களிடம் விஞ்ஞானமனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் மத்திய - மாநில அரசுகள் செயல்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 10 மாதங்களுக்குமுன்பு அனுப்பப்பட்டு, இப் போது செவ்வாய்க் கோளை அடைந்து, அதைத் துல்லிய மாய் படமெடுத்து அனுப்பும் விண்வெளிக்கலன் எம்.ஓ.எம். (Mars Orbiter Mission) நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்டவர்கள் இத்துறையின் தலைவர் திரு.ராதாகிருஷ்ணன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அரிய கடும் பரிசோதனை மிகவும் வெற்றிகரமாக அமைந்துவிட்டது; நேற்று செவ்வாய் வட்டத்திற்குள் கலன் சென்று படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. பிரதமர் மோடி அவர்களும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து விண்வெளி விஞ்ஞானிகளும் இதனைப் பாராட்டி வாழ்த்தியுள்ளனர். இது பெருமைப்படத்தக்க சாதனையே!

அறிவியல் மனப்பான்மையை வளர்த்திடுக!

இதை ஒரு அரிய சாதனை என்ற அளவில் மட்டுமே நிறுத்திவிடாமல், அறிவியல் மனப்பாங்கு (scientific temper) வளர இதனை ஒரு நல்ல திருப்பமாக ஆக்கிக்கொண்டு, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளில் (Fundamental Duties) (பிரிவு 51-ஏ(எச்)) ஒன்றான அறிவியல் மனப்பான்மையைப் பரப்பிட மத்திய - மாநில அரசுகள் முயலவேண்டும்.

அரசமைப்புச் சட்டம் என்ன சொல்லுகிறது?

It shall be the duty of every citizen to develop the scientific temper, humanism and the spirit of enquiry and reform

என்ற கடமையை நினைவுறுத்திப் போதிக்கவேண்டும்.

மூடநம்பிக்கைகளை நாளும் வளர்ப்பதாக விஞ்ஞானி களின் போக்கு இருந்தால் அது இரட்டை வேடமாகிவிடும். எதிர்விளைவையும் உண்டாக்கும். எனவே, விஞ்ஞானிகள் ஒருபோதும் அஞ்ஞானிகளாக ஆகிவிடக்கூடாது.

செவ்வாய்த் தோஷமாமே!

செவ்வாய்க் கிழமைகளில் ஏதும் தொடங்கவே கூடாது; காரணம், செவ்வாயே வெறு வாயே என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதும்,

45 வயது ஆகியும்கூட இந்தப் பெண்ணுக்கு ஏன் திருமணம் ஆகவில்லை என்றால், அதற்கு செவ்வாய் தோஷம் என்று கூறிடும், நம் நாட்டில் மூட நம்பிக்கைகள் பரப்பப்பட்டு, பல்லாயிரக்கணக்கான பெண்களின் திருமண வாழ்க்கையே அமையாது, அவர்கள் மனம் நொந்து தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலை இதுவரை இருந்து வந்தது. இனிமேலாவது செவ்வாய்க்கோளுக்குச் சென்றடைந்து, வெற்றிகரமாக விண்கலன் திரும்புவதன் மூலம் செவ்வாய் தோஷம் பொய், கற்பனை, மூட நம்பிக்கை - செவ்வாய்க்கிழமையில்தான் இந்த விண்கலம் புறப்பட்டு வெற்றிகரமாக நேற்று (24.9.2014) நுழைந்து சாதனை புரிந்துள்ளதன்மூலம், செவ்வாய் வெறுவாய் என்ற கூற்று, ஒரு மூடத்தனம் என்பது புரியவில்லையா?

தீபாவளி கதை மூடத்தனம்!

பூமி உருண்டை என்று படிக்கும் மாணவர்களிடையே, பூமியைப் பாயாகச் சுருட்டி கடலுக்குள் ஒளிந்தான் இரண்யாட்சதன். அதை மீட்ட பின்பு, பூமி தேவிக்கும், கிருஷ்ண பரமாத்மாவுக்கும் ஏற்பட்ட காதல்மூலம் பிறந்தவன்தான் நரகாசுரன்; அவனை வதம் செய்யவே, கிருஷ்ண அவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு என்று கதை கூறி, தீபாவளி என்னும் மூடப்பண்டிகையை இன்னும் நடத்துவது, கொண்டாடுவது எவ்வளவு தூரம் அறிவுக்கு உகந்தது? சிந்தித்துப் பாருங்கள்!

எனவே, அறிவியல் செய்திகளைப் பார்த்தால், படித்தால் மட்டும் போதாது, மூட நம்பிக்கைகளை விரட்டி, சீர்திருத்தம் பெறவேண்டியது - இந்த 21 ஆம் நூற்றாண்டு அறிவியல் மின்னணுவியல் காலகட்டத்தில், செவ்வாயில் மனிதன் குடியேற ஆயத்தமாகும் காலத்தில் மிகவும் தேவை!

பாராட்டுகிறோம் விஞ்ஞானிகளை!

நம் மக்கள் செவ்வாய்க் கோளுக்குச் சென்றாலும், அங்கும் ஒரு கர்ப்பகிரகத்தை ஏற்படுத்தி, அங்கு தீட்டு கூறும் ஜாதியைக் கொண்டு போகாமலிருந்தால் சரி - என்று கூறி, இஸ்ரோ விஞ்ஞானிகளைப் பாராட்டி மகிழ்கிறோம்.



கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்



சென்னை
25.9.2014

Read more: http://viduthalai.in/page1/88198.html#ixzz3ETVDj038

தமிழ் ஓவியா said...

கறுப்புக் கொடி போராட்டம்பற்றி தமிழர் தலைவர் பேட்டி

சென்னை, செப்.26- சென்னை பெரியார் திடலில் இன்று (25.9.2014) கறுப்பு தினப் போராட்டத்தையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலைஞர் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

கடந்த மாதம் கலைஞர் அவர்களுடைய தலைமையிலே டெசோ கூடியபோது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று போர்க்குற்றவாளியான இலங்கை அரசும், ராஜபக்சேவும் அதை மனித உரிமை ஆணையத்தின் சார்பிலே விசாரணை செய்யப்படும்போது அவர்களைக்கூட அனு மதிக்க முடியாது என்றும் அதேநேரத்திலே அவர்களுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் கொடுக்க மாட்டோம் என்றும் மறுத்துக் கொண்டிருக்கிற இலங்கை அரசின் சார் பாகவோ, ராஜபக்சேவோ அய்.நா. மாமன்றத் திலே இன்றைக்குப் பேசுகிறார் என்று அவர் அழைக்கப்பட்டிருப்பது என்பது மற்ற நாடுகளைப்போல் சகஜமானது என்று எடுத்துக்கொள்ள முடியாது.

ஏனென்றால், குற்றவாளி ஒருவரையே அழைத்து நீதிமன்றத்திலே சிறப்பு செய்தால் எப்படி இருக்குமோ? அதுபோன்ற ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டி, அதைத் தவிர்க்க வேண்டும் என்பதை டெசோவின் தலைவர் கலைஞர் அவர்களுடைய தலைமையிலே கூடிய அந்த அமைப்பு திட்டவட்டமாகத் தெரிவித்தது. அதுமட்டுமல்ல, இந்திய அரசு, மத்திய அரசு அதற்கு சிறப்பான முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று சொன்னோம். கண்டனத்தை

அமைதி வழியிலே, அறவழியிலே...

ஆனால் இரண்டு பேருமே செய்ய வில்லை என்பது வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியது. நம்முடைய துன்பத்தை, அதேநேரத்தில் கண்டனத்தை அமைதி வழியிலே, அறவழியிலே காட்ட வேண்டும் என்பதற்காக டெசோவின் தலைவர் கலைஞர் அவர்கள் டெசோவின் சார்பிலே விடுத்த வேண்டுகோள் என்பது எல்லோரும் கறுப்புச்சட்டை அணிந்து நம்முடைய துக்கத்தை உணர்த்துங்கள். அதேபோல வீடுகளிலே கறுப்புக் கொடி களை ஏற்றுங்கள். கறுப்புச்சட்டை அணியாத வரும், கறுப்புச் சின்னங்களை அணியுங்கள் என்றெல்லாம் வேண்டுகோள் விடுத்தார்கள். அதை ஏற்று டெசோவின் உறுப்பினர் கள் மட்டுமல்ல, டெசோவைச் சார்ந்த எங்களைப் போன்றவர்கள் மட்டுமல்ல, உணர்வாளர்கள் அத்துணை பேருமே மனிதநேயத்தின் அடிப்படையிலே இன்று நாடு தழுவிய அளவிலே பல இடங்களில் சிறப்பாக இந்த உணர்வுகள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, இன்று (25.9.2014) காலை யிலே வந்திருக்கிற ஒரு செய்தி, நியூயார்க் நகரத்திலே போர்க்குற்ற, கொலைகார ராஜபக்சே பேசுவதை எதிர்த்து, ஒரு போராட்டமே நடந்திருக்கிறது அறவழியிலே. அய்க்கிய நாடுகள் மன்றத்தின் முன் பாகவே அங்கே இருக்கிற காவல்துறையினர் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட இடத்தில் 200-க்கும் மேற்பட்ட கனடா நாட்டிலிருந்து வந்தவர்களும் மற்றும் அமெரிக்காவினு டைய பல மாநிலங்களில் வாழும் ஈழத் தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் மற்றும் அவர்களது அமெரிக்க நண்பர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள். மனித நேயத் திலே நம்பிக்கை உள்ளவர்கள் அமெரிக் கர்களாக இருந்தாலும் அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

போர்க்குற்றவாளி ராஜபக்சே, இலங்கை அரசு போன்ற அந்த பயங்கரவாத அரசுக்கு இலங்கை ராணுவமே தமிழ் ஈழத்தைவிட்டு வெளியேறு என்பது போன்ற அற முழக் கங்களை ஓங்கி முழங்கி இருக்கிறார்கள். எனவே, தமிழீழ உணர்வுகளும், அதேநேரத்தில் மனித உரிமையைப்பறித்த ராஜபக்சேவுக்கு எதிர்ப்பும் என்பதை, நாம் மட்டும் காட்டவில்லை. உலகளாவிய நிலையிலே எங்கே ராஜபக்சே பேசுகிறாரோ அதே நியூயார்க் நகரத்திலே இன்று காலையிலே அங்கு தெளிவாக நடைபெற்றி ருக்கிறது என்பதையும், அதேநேரத்திலே அங்கு இனி தமிழர்கள் சாட்சி சொல்ல வேண்டும். எந்த அச்சமும் இல்லாமல் என்று ஒரு உறுதி எழுத்திலே வழங்கப்பட்டிருக் கிறது. அய்க்கிய நாட்டு அமைப்பு யார் சொன் னார்கள் என்பதை வெளியிட மாட்டோம் என்று ஒரு உறுதியைச் சொல்லி இருக் கிறார்கள். ஆகவே, நீங்கள் நடந்தவற்றை அந்த மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக் குழுவுக்கு முன்பாக அப்படியே செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். எவ்வளவு தான் அவர்கள் வேறுவிதமாக நடந்து கொண்டாலும்கூட டெசோ வற்புறுத்திய கருத்தும், மனிதநேய சிந்தனைகளும் இன்னமும் பட்டுப் போகவில்லை. இந்த உணர்வுகள் என்பது மேலும் அடுத்தபடியாக முன்னெடுத்துச் செல்லப்படும். இதைப்பற்றி டெசோவின் தலைவர் கலைஞர் அவர்கள், அதன் உறுப்பினர்கள் அடுத்த கட்டத்தில் முடிவு செய்வார்கள்.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டியில் கூறினார்கள்.

Read more: http://viduthalai.in/page1/88200.html#ixzz3ETVXp8z6

தமிழ் ஓவியா said...

கறுப்புக்கொடி ஏன்? கலைஞர் பேட்டி


சென்னை, செப்.25- தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார். பேட்டி வருமாறு:

செய்தியாளர்: இன்று (25.9.2014) நடைபெறும் கறுப்பு தினத்தையொட்டி என்ன கூற விரும்புகிறீர்கள்? கலைஞர்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பிலும், டெசோ அமைப்பின் சார்பிலும் அறிவிக்கப் பட்டு, இன்று நடத்தப்படுகின்ற இந்த கறுப்பு நாளை தமிழகத்திலே மாத்திரமல்ல; உணர்ச்சியுள்ள தமி ழர்கள் எங்கெங்கு வாழ் கிறார்களோ அங்கெல்லாம் - எங்கள் அறிவிப்புக்கு இணங்க கறுப்பு தினமாக கடைப்பிடிக் கிறார்கள். செய்தியாளர்: மத்திய அரசுக்கு இதுபற்றி தாங்கள் விடுத்த வேண்டுகோளை அவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லையே?

கலைஞர்: நாங்கள் எங்கள் வேண்டு கோளை இப்போது உள்ள மத்திய அரசு மாத்திரமல்ல; ஏற் கெனவே நடைபெற்ற மத்திய அரசும் உணருகின்ற வகையில், எங்களுடைய எதிர்ப்பையும், மறுப்பையும் தெரிவித்திருக்கிறோம். அதை இன்று உள்ள மத்திய, மாநில அரசுகள் செவிமடுக்க மறுத்தாலும் கூட, இந்தக் கறுப்பு தினம் உருவாக்கியுள்ள உணர்வையும், எழுச்சி யையும் தமிழர்கள் உள்ள வரையில் மறக்கமாட் டார்கள். - இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தி யாளர்களிடம் கூறினார்.

Read more: http://viduthalai.in/page1/88201.html#ixzz3ETVgDdbT

தமிழ் ஓவியா said...

எனது ஆசை?


எனக்கு ஆசை எல்லாம், மக்கள் பகுத்தறிவாளர்களாக ஆகவேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. - (விடுதலை, 28.8.1972)

Read more: http://viduthalai.in/page1/88211.html#ixzz3ETW3wqRm

தமிழ் ஓவியா said...

தமிழில் பெயர் சூட்டுவீர்!

தந்தை பெரியாரால் தன்மானம் பெற்றோம். தமிழ் உணர்வும் பெற்றோம். நம் பிள்ளைகளுக்கெல்லாம் தமிழ்ப் பெயர்களாகவே சூட்டினோம். தமிழர் இல்லங்களில் தமிழ்ப் பெயர்கள் தவழ்ந்தன.

ஆனால் இன்று நிலைமையே வேறு. கடந்த செப்டம்பர் 2 நாளிட்ட விடுதலை தலையங்கத்தில் அண்மைக்காலமாக தமிழன் வீட்டுப் பிள்ளைகளின் பெயர் கள் எந்த மொழியைச் சார்ந்தது என்று புரிந்து கொள்ள முடியாத புது நாகரிகம் புழுத்துக் கிளம்ப ஆரம்பித்துவிட்டது என்றும் செப்டம்பர் 9 நாளிட்ட விடுதலை தலையங்கத்தில் தப்பித் தவறிப் பார்ப்பனர்களில் தமிழ்ச்செல்வி என்றோ, கனிமொழி என்றோ, மதி யழகன் என்றோ தமிழ்ப் பெயரைச் சூட்டிக்கொண்ட ஒரே ஒரு பார்ப்பனக் குடும்பத்தைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று உள்ளம் நொந்து குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மை.

தமிழ், தமிழ் என்று சொல்லித் தமி ழுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போல் காட்டிக் கொள்ளுகிற தினமணி வைத்தியநாத அய்யர் தம் வீட்டுப்பிள்ளை ஒன்றுக்காவது தமிழ்ப் பெயரைச் சூட்டி யிருப்பாரா?

தமிழர்கள் நடத்துகின்ற செய்தித்தாள் களில் குழந்தைகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வாழ்த்தில் ஒரு முறை 104 குழந் தைகள் படத்துடன் பெயரும் இருந்தன. அந்த 104 பெயர்களில் ஒரே ஒரு பெயர் தான் தமிழாக இருந்தது. இன்னொரு முறை வந்த 69 பெயர்களில் 3 பெயர்கள் மட்டுமே தமிழ்ப் பெயர்கள் மற்றும் ஒரு முறை வந்த 88 பெயர்களில் 4 பெயர்கள் தான் தமிழாக இருந்தன.

அறிஞர் அண்ணா அவர்கள் அன்று ஏ, தாழ்ந்த தமிழகமே என்று பேசினார். இன்று ஏ, உணர்விழந்த தமிழனே என்று சொல்ல வேண்டியுள்ளது. நாம் மட்டும் தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். பெரும் பெரும் தமிழறிஞர்கள், புல வர்கள், தமிழ் ஆர்வலர்கள் மேலும் தமிழ்த்தேசியமே எங்கள் மூச்சு என் பவர்களும் இருக்கிறார்களே, இவர்க ளெல்லாம் தமிழ் பெயர் சூட்டுதலில் ஆரியம் புகுந்து கொண்டதே இதற்கு என்ன செய்யப் போகிறார்கள்?

நாம் தான் வாழ்விணை ஏற்பு விழாக்களில் தமிழில் பெயர் சூட்டுங்கள் என்று தொடர்ந்து வலியுறுத்தி வர வேண்டும்.

- தா.திருப்பதி (தலைமைச் செயற்குழு உறுப்பினர், காவேரிப்பட்டணம்)

Read more: http://viduthalai.in/page1/88218.html#ixzz3ETWCdAHq

தமிழ் ஓவியா said...

உட்காராமல் நடமாடினால் நீண்டநாள் வாழலாம்! சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!


உட்காராமல், சுறுசுறுப்பாக நடமாடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறைந்த பட்சம், நின்று கொண்டாவது இருக்க வேண்டும். இதன் மூலம் நமது டி.என்.ஏ. மரபணு மாற்றமடைந்து, நீண்ட காலம் வாழ முடியும் என சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

உட்காராமல், சுறுசுறுப்பாக நடமாடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. குறைந்த பட்சம், நின்று கொண்டாவது இருக்க வேண்டும். இதன் மூலம் நமது டி.என்.ஏ. மரபணு மாற்றமடைந்து, நீண்ட காலம் வாழ முடியும் என சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

உட்காருவதை குறைத்து, சுறுசுறுப்பாக செயல்பட்டால், நமது உடல் திசுக் களில் உள்ள வயதாகும் தன்மையின் வேகம் குறையும். நடமாடாவிட்டாலும், குறைந்தபட்சம் நின்று கொண்டாவது இருக்க வேண்டும். இவ்விதம் நாம் செய்தால், நமது டி.என்.ஏ. மரபணுக்களில் மாற்றம் நிகழும். இவற்றின் நுனியிலுள்ள டெலோமெரஸ் என்ற நுண்ணிய மூடிகள் நீளமாக வளர்ந்து, நீண்டநாள் வாழ்வது அதி கரிக்கும்.

இவ்வாறு சுவீடன் நாட்டு அறி வியலாளர்கள் ஆராய்ச்சி மூலம் கண்டு பிடித்துள்ளார்கள். சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிக்காக 68 வயதுடைய, உடல் பருமனான சிலரைத் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் அனைவரும் பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே பொழுதுபோக்கும் குணமுடையவர்கள். இவர்களை இரு பிரிவாக பிரித்தனர்.

ஒரு பிரிவினரிடம், உட்காருவதை குறைக் குமாறும், முடிந்தவரை நடமாடுமாறும் கூறினர். குறைந்த பட்சம், நிற்பதையாவது அதிகரிக்கும் படியும் தெரிவித்தனர். அடுத்த பிரிவினரிடம், வழக்கமான நடவடிக் கைகளை மேற் கொள்ளும்படி கூறினர். இவ்விதம் 6 மாதங்கள் செயல்படும்படி அறிவுறுத்தினர்.

6 மாதங்கள் சென்றபின் அனைவரது உடல் நிலையையும் விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். இதில், முதல் பிரிவினரின் டெலோ மெரஸ் கணிசமாக வளர்ந்து, அவர்கள் இளமை துடிப்போடு செயல்பட்டனர். இரண்டாவது பிரிவினரின் டெலோ மெரஸ், அளவில் குறைந்திருந்தது.

உட்காராமல் சுறுசுறுப்பாக நடமாடினால், குறைந்த பட்சம் நிற்பதை அதிகரித்தால், நீண்ட காலம் வாழலாம். இறக்கும் போதும், நமது உடல் இளமை யாகவே காணப்படும். இவ்வாறு சுவீடன் நாட்டிலுள்ள உப்சலா பல்கலைக்கழக பொது சுகாதாரத்துறை பேராசிரியர் பெர் ஜோக்ரென் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளார்

Read more: http://viduthalai.in/page1/88197.html#ixzz3ETX2QsXy

தமிழ் ஓவியா said...

பெரியார் வழியில் நண்பர்களாக வாழும் அமெரிக்கர்கள்


அமெரிக்காவில் திருமணம் ஆகாதவர்கள் குறித்த ஆய்வு ஒன்று 20 வயது முதல் 25 வயதுடைய ஆடவர் - மகளிரிடம் அண்மையில் நடத்தப்பட்டது. அதில், முன்பு எப்போதையும் விட தற்போது இளம் வயது அமெரிக்கர்கள் திருமணத்தில் ஆர்வம் இல்லாதவர்களாகவே உள்ளனர் என்பது தெரிய வந்ததுள்ளது.

அமெரிக்க மக்கள் தொகையான 21 கோடியில் சுமார் 20 சதவீதம் பேர் அதாவது, 4 கோடியே 20 லட்சம் பேர் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார்களாம். குறிப்பாக ஆண்களில் 23 சதவீதம் பேரும், பெண்களில் 17 சதவீதம் பேரும் இப்படி உள்ளனர்.

மேலும் தற்போது, அமெரிக்காவில் ஆண்களின் முதல் திருமண வயது 29 ஆகவும், பெண்களின் முதல் திருமண வயது 27 ஆகவும் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மாறி வரும் வாழ்க்கை முறைதான்.

பெரும்பாலான இளம் இணையர் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்கிறார்களாம். இன்னும் பலர் குழந்தை பெற்றபிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று திருமணத்தை தள்ளிப் போடுகிறார்களாம்.

Read more: http://viduthalai.in/page1/88184.html#ixzz3ETXGMsFc