Search This Blog

14.9.14

சுயமரியாதை இயக்கம் ஏன் தோன்றியது? எப்படித் தோன்றியது?




தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கம் ஏன் தோன்றியது? என்ற தலைப்பில் ஆற்றிய சிறப்புரையாவது:-


 இன்றையத் தினம் இங்குச் சுயமரியாதை இயக்கம் என்பது பற்றி விளக்கம் தரவேண்டும் என்பதற்காக நம் தோழர்கள் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.


சுயமரியாதை இயக்கம் தோற்றுவித்து இன்றைக்கு 45 வருடங்களுக்கு மேலாகின்றது. அதனைத் தோற்றுவித்ததன் உத்தேசமே சமுதாயத் தொண்டு செய்வதற்காக ஆகும்.

சமுதாயத் தொண்டு செய்கிற ஸ்தாபனத்திற்குச் சுயமரியாதை இயக்கம் என்று பெயர் வைக்க வேண்டி ஏன் ஏற்பட்டது என்றால், மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களின் மானமற்றத் தன்மையை எடுத்துக் காட்ட வேண்டும் என்பதற்காக முதலில்- Self Respect Propaganda Instuition என்று ஆங்கிலப் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் நோக்கம் நம் மக்கள் இழிவான நிலை ... இழிவான வாழ்வு வாழ்கிறார்கள்; அவர்கள் இழிவை எடுத்துக் காட்ட வேண்டும். அவர்களுக்கு அறிவையும், மான உணர்ச்சி யினையும் ஏற்படுத்த வேண்டுமென்பதாகும்.
என்ன இழிவு என்றால் பார்ப்பானைத் தவிர இந்நாட்டு மக்கள் நாலாம் சாதி, சூத்திர மக்களாக இருக்கிறார்கள். அதனை மாற்ற வேண்டும்- மக்களின் இழிவு நிலையைப் போக்க வேண் டும். அவர்களின் அறிவற்ற தன்மையை எடுத்துக்காட்டி அறிவு பெறச் செய்து, சூத்திரத் தன்மையைப் போக்க வேண்டும் என்பதாகும்.


நம் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட போது, நம் மக்களுக்கு மனிதன் மதப்படி, மத தருமப்படி நடக்க வேண்டும், சாஸ்திரப்படி நடக்க வேண்டும் எனப் புகுத்தப்பட்டு, அது மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது, மக்களில் சிலர் ஏன் கீழ்ச்சாதி- பறையன் என்றால், முன் ஜன்மத்தில் செய்த பாவத்தால் என்றும், ஏன் பார்ப்பான் என்றால் முன் ஜன்மத்தில் செய்த புண்ணியத்தால் என்றும் மக்கள் கருதினார்களே தவிர, இந்த ஜன்மத்தில்  புண்ணியம் செய்து அடுத்த ஜன்மத்தில் மேல்சாதியாகப் பிறக்க வேண்டும் என்று கருதினார்களே தவிர, இந்த ஜன்மத்தில் நாம் ஏன் இழிசாதியாக இருக்கிறோம் என்று நம் மக்களில் எவரும் வெட்கப்பட வில்லை. இந்த இழிவு ஒழிக்கப்பட வேண்டும் என்று நாம் தோன்றுகிற வரை எவருமே முயற்சிக்கவும் இல்லை.


பார்ப்பனரல்லாத மக்களுக்காக இங்கு ஜஸ்டிஸ் கட்சித் தோற்றுவிக்கப்பட்டது என்றாலும், அதில் பதவி உத்தி யோகங்களில் பார்ப்பானுக்கே உரிமைகள் வழங்கப்படு கின்றன, அதில் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத் தோன்றியதே தவிர, மக்களின் இழிவைப் பற்றி அது கவலைப்பட வில்லை.


வெள்ளைக்காரன் கூட இங்குள்ள மததருமப்படி தான் ஆட்சி செய்தான். அவன் சில திருத்தங்கள் சமுதாயத் துறையில் செய்ய முற்பட்ட போது, இந்நாட்டுப் பார்ப் பனர்களே அதை எதிர்த்தனர். எனவே, அவன் அதில் தலையிடவில்லை,
இந்த நாட்டில் காங்கிரஸ் ஏற்பட்டது வெள்ளைக்காரன் ஆட்சியைப் பாதுகாக்கவே தவிர, மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்ல. 

வெள்ளைக்காரன் சமுதாயத் துறையில் அரசாங்கத்திற்கு இருந்த எதிர்ப்பைச் சமாளிக்க, பார்ப்பனர்களைப் பிடித்து ஏற்பாடு செய்தது தான் காங்கிரசாகும். காங்கிரசின், சரித்திரத்தைப் பார்த்தால் ஓரிருவர் சமுதாய திருத்தம் பற்றிப் பேசி இருக்கிறார்கள் என்றாலும், அப்போதே அது பற்றிப் பேசக்கூடாது என்று அவர்களைத் தடுத்து விட்டனர். அது காங்கிரசின் கொள்கைக்கு விரோதம் என்று சொல்லிவிட்டார்கள்.


திலகர் என்ற பார்ப்பனர்- சமுதாய சம்பந்தமான கருத்தே காங்கிரசில் இருக்கக் கூடாது என்று தடுத்துவிட்டார். பார்ப்பனர்களே, காங்கிரசின் தலைவர்களாக இருந்து வந்தனர். ஒரு சமயம் நடைபெற்ற காங்கிரஸ் மகாநாட்டில் ராஷ்பிகாரிகோஷ்  என்கின்ற பார்ப்பனரல்லாத ஒருவரைத் தலைவராக்கி விட்டனர். அதனை உடனே எதிர்த்து, திலகர் வேறு ஒருவரை பிரப்போஸ் செய்கிறேன் என்று சொல்லி, ராஷ்பிகாரி கோஷைத் தேர்ந்தெடுத்தது செல்லாது என்று கலகம் செய்ய ஆரம்பித்தார். திலகரின் ஆட்கள் மேடையில் செருப்பு வீச ஆரம்பித்து விட்டனர். தாதாபாய் நவுரோஜி முதலியவர்கள் மீதெல்லாம் செருப்பு விழுந்தது.


அதன்பின் காங்கிரசில் வெகுநாட்கள் வரை பார்ப்பனரல்லாதார் தலைமையே வரவில்லை. அரசியலை மட்டும் வைத்துக் கொண்டு மக்களை நெருங்க முடியாது. மக்களின் ஆதரவு பெற வேண்டுமானால்  சமுதாயத்தை யும் சேர்த்துக் கொண்டால் தான் முடியும் என்கின்ற நிலை ஏற்பட்ட பின், காங்கிரஸ் அரசியலுக்காகவே என்று ஒரு பிரிவும், சமுதாய சம்பந்தமான காரியத்திற்காக ஒரு பிரிவும் என்று, எங்குக் காங்கிரஸ் மாநாடு நடந்தாலும் ஒரு நாள் அரசியலுக்கும், ஒரு நாள் சமுதாயத்திற்கும் என்று பிரித்து நடத்த ஆரம்பித்தனர்.


அப்போது தான் சென்னையில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் தோன்றியது. அவர்கள் பார்ப்பனர்கள் நம் மக்களை ஏமாற்றிப் பதவி- உத்தி யோகங்கள் பெறுகின்றனர் என்பது பற்றிப் பிரசாரம் செய்ததில், மக்களுக்குப் பார்ப்பனர் மேல் வெறுப்பு ஏற்படும் படியாயிற்று. காங்கிரஸ் என்றாலே அப்போது பார்ப்பனர்கள் தான் இருந்தார்கள்; ஆனதால் காங் கிரசையே மக்கள் வெறுத்தனர். அதன் காரணமாகக் காங் கிரஸ் செல்வாக்கற்றுப் போய் விட்டது. காங்கிரஸ்காரர் களை மக்கள் வெறுக்க ஆரம்பித்தனர். அவர்கள் தனியே வெளியில் வரவே பயந்தனர்.


அதன்பின் காங்கிரஸ் சமுதாயத் தொண்டின் மூலம் தான் மக்களை அணுக முடியும் என்று உணர்ந்ததும் காங்கிரசிற்கும், அரசியலுக்கும் சம்பந்தமில்லை. அதன் இலட்சியம் சமுதாயத் தொண்டுதான் என்று சொல்லி மக்களிடையே பிரச்சாரம் செய்தார்கள். எங்கள் இலட்சியம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லி விட்டு, அதன்பின், ஆனால் சாதி  அமைப்பை மாற்றக் கூடாது என்றார்கள். தீண்டப்படாத மக்களுக்குத் தனி கிணறு, தனிப்  பள்ளிக்கூடம் கட்டிக் கொடுப்பது என்று வேஷம் போட்டார்கள். சமபந்தி போஜனம் பற்றிக் காந்தியார் சொன்னது என்ன என்றால், மலம் கழிப்பதில் கூட மனிதன் இன்னொருவனுடன் சேர்ந்து இருப்பதற்கு வெட்கப்படும் போது, சாப்பாட்டில் எப்படிச் சேர்ந்து சாப்பிட முடியும்? என்று கேட்டவர் ஆவார். இது பற்றிக் குடிஅரசுவில் அப்போதே கண்டித்து எழுதி இருக்கின்றேன்.


சமுதாய ஏற்றத் தாழ்வைப்- பார்ப்பனர், பார்ப் பனரல்லாதார் என்கின்ற பேதத்தை ஒழிப்பதற்காக என்று, இந்த ஊர் பார்ப்பான் வ.வே.சு. அய்யர் என்பவர் ஒரு குருகுலம் ஆரம்பித்தார். அப்படிக் குருகுலம் ஆரம்பித்த அந்தப் பார்ப்பனர் நமக்கு முன் வந்த, பண்டங்களையே சாப்பிட மாட்டார். அப்படிப்பட்ட அவரால் ஆரம்பிக்கப் பட்ட குருகுலத்தில் சாதி பேதம் கடைப்பிடிக்கப்பட்டது.


பார்ப்பானுக்குத் தனியாக நல்ல உணவும், பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனியாக சாதாரண உணவும் பரிமாறப்பட்டது. இந்தக் குருகுலத்திற்குக் காங்கிரஸ் நிதியிலிருந்து ரூ.10 ஆயிரம் கொடுப்பதாகச் சொல்லி முதலில் ரூ. 5000 கொடுத்திருந்தேன். அதன் நடவடிக்கை தெரிந்ததும் நான் அந்த மீதிப்பணத்தைக் கொடுக்க வில்லை. எனக்குத் தெரியாமல் என்னுடைய செகரட்டரி பார்ப்பானிடம் வந்து அந்தப் பணத்திற்குச் செக் வாங்கிக் கொண்டு போய்விட்டார். இது தெரிந்ததும் நான் ராஜாஜியிடம் சென்று பார்த்தீர்களா பார்ப்பன புத்தியைக் காட்டிவிட்டார் என்று கோபித்துக் கொண்டேன். அதற்கு அவர், தான் கண்டிப்பதாக சமாதானம் கூறினார்.


காங்கிரஸ் 1920-இல் சட்டசபையில் எவ்வளவு ஸ்தாபனங்கள் இருந்ததோ அதில் பாகம் தான் 1923-இல் ஜெயித்தார்கள். பின் 1926-இல் ஜஸ்டிஸ் கட்சியினர் அடியோடு தோற்று விட்டனர். அப்போது நம் தீவிர பிரசாரத்தால் காங்கிரசிற்கு நல்ல செல்வாக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, அதுவரை தேர்தலுக்கு நிற்ப தில்லை என்று பிரசாரம் செய்த காங்கிரஸ் தேர்தலில் நிற்பது என்று ஆரம்பித்தது. நான் அப்போது அதனை எதிர்த்தேன்.
1925-இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், காங்கிரஸ் தேர்தலில் நிற்பதானால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு 100-க்கு 50 ஸ்தாபனங்களை ஒதுக்கிவிட்டு மற்றதில் தான் போட்டி போட வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு சென்றேன். அதனைப் பெரும்பாலானவர்கள் ஆதரித்தார்கள். ஓட்டுக்கு விட்டால் அந்தத் தீர்மானம் நிறைவேறிவிடும் என்கின்ற நிலை ஏற்பட்டதும், அந்த மாநாட்டிற்குத் தலைமை வகித்த திரு.வி. கல்யாணசுந்தரம் அவர்கள் காங்கிரசின் கொள்கைக்கு விரோதம் என்று சொல்லி என் தீர்மானத்தை ஏற்கவில்லை என்றதும், உடனே நான் கோபமாகப் பேசிவிட்டு வெளியேறி விட்டேன்.
அதிலிருந்து வெளிவந்த பின்தான் நான் சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன். அதன் கொள்கை கடவுள், மதம்,  சாஸ்திரம், காங்கிரஸ் ஒழிக, பார்ப்பான் ஒழிக, என்கின்ற 5 கொள்கைகளாகும். இவை ஒவ்வொன்றையும் விளக்கி, குடிஅரசுவில் பல கட்டுரைகளை எழுதினேன். அதை எதிர்த்து எவரும் ஒரு கட்டுரை கூட எழுதவில்லை. பார்ப்பான் எல்லாம் ஒன்று கூடி இதுபோல எழுது கின்றானே என்று யோசித்து, விஜயராகவாச்சாரி தலைமையில் கூட்டம் போட்டார்கள். அந்தக் கூட்டத்தில் விஜயராகவாச்சாரியே அவன் என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டு போகட்டும்; நீங்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டாம். அவன் சொல்வதை, எழுதுவதை வெளியிட வேண்டாம் என்று சொன்னார். அதன்படி தான் இன்று வரை பார்ப்பனர்கள் நடந்து கொள்கின்றனர்.


1925-இல் நான் சுயமரியாதை இயக்கத்தை ஆரம் பித்தேன். 1927-லேயே காந்தி என்னோடு பேசவேண்டும் என்று இராமநாதனை அழைத்து, என்னை அழைத்து வரும்படிச் சொன்னார். இராமநாதன் வந்து சொன்னதும் நானும் அவரும் சேர்ந்தே சென்றோம். காந்தியார் அப்போது பெங்களூரில் தங்கியிருந்தார். நானும், இராமநாதனும் போய்ச் சந்தித்தோம். அங்கு இராஜாஜியும், தேவதாஸ் காந்தியும் கீழே இருந்தார்கள். காந்தி மாடியில் தங்கியிருந்தார். நாங்கள் போனதும் எங்களை விட்டுவிட்டு அவர்கள் கீழே வந்து விட்டார்கள். ``என்ன ராமசாமி உன்னைப் பற்றி ``கம்ப்ளைன்ட் வந்திருக்கிறதே என்ன என்றார் காந்தியார். நான் உடனே ஒன்றும் கம்ப்ளைன்ட் இல்லைங்க; இந்த மதம் ஒழிய வேண்டும் என்பது தான் என் கொள்கையாகும் என்றேன். அதற்கு அவர் இந்து மதம் என்று ஒரு மதமே கிடையாது என்று ஒப்புக் கொண்டார்.


அந்தச் சம்பாஷணையில் கடவுள், மதம், சாஸ்திரம், ஆகியவற்றைப் பற்றி எல்லாம் பேசினோம். பார்ப்பனர் களைப் பற்றி நான் சொன்னதும், ஏன் பார்ப்பான் மேல் உனக்கு வெறுப்பு வந்தது என்று கேட்டார். உடனே நான் அயோக்கியன் மேல் வெறுப்பு வருவதில் தவறில்லையே என்றேன். அப்படியானால் பார்ப்பனர்கள் எல்லோருமே அயோக்கியர்கள் என்கின்றாயா? என்று கேட்டார். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது என்றேன். உடனே அவர் ராஜகோபாலாச்சாரி என்றார். அதற்கு நான் அவர் நல்லவர், தியாகி, உண்மையானவர்; ஆனால் எல்லாம் அவர் ஜாதிக்காக என்றேன். உன் கண்ணுக்கு ஒரு பார்ப்பனர் கூட நல்லவராகத் தென்படவில்லையா? என்றார். இல்லை என்றேன். அப்படிச் சொல்லாதீர்கள்; கோபாலகிருஷ்ண கோகலேயை நல்ல பிராமணர் என்றே கருதுகிறேன் என்றார்.


நான் உடனே மகாத்மாவின் கண்ணுக்கே ஒரு பிராமணர் தான் நல்லவராகத் தோன்றியிருக்கிறார் என்றால், சாதாரணமான எங்களைப் போன்றவர்கள் கண்களுக்கு எப்படி உண்மை பிராமணர் தோன்ற முடியும்? என்று சொன்னேன். இப்படி உரையாடியதில் யாரும் எந்த முடிவுக்கும் வரவில்லை.


காந்தியார், இதுவரை நாம் ஒரு முடிவுக்கும் வரவில்லை என்று நினைக்கின்றேன். இன்னும் இரண்டு, மூன்று முறை சந்தித்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று சொன்னார். சரிஎன்று சொல்லிக் கீழே வந்ததும், இராஜாஜி அவர்கள் என்ன பேசினாய் என்று கேட்டார். நான் அங்கு நடந்த உரையாடலை அப்படியே சொன்னதும் இராஜாஜி, அவருடைய (காந்தியாருடைய) ஒரு மாதத்து ஓய்வைக் கெடுத்து விட்டாய் என்று சொன்னார். தேவதாஸ் காந்தி அவர்கள் இன்னமும் இரண்டு நாள் இங்கேயே தங்கி மறுபடியும் சந்தியுங்கள் என்று சொன்னார். நாங்கள் விடைபெற்றுக் கொண்டு வந்துவிட்டோம்.


--------------------------------15.3.1970, அன்று திருச்சியில் ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 7.5.1970

6 comments:

தமிழ் ஓவியா said...


அண்ணா வெறும் படமல்ல - பாடம்! அவற்றைப் படிப்போம் - செயல்படுத்துவோம்! தமிழர் தலைவர் அறிக்கை


அறிஞர் அண்ணாவின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அறிஞர் அண்ணாவின் 106ஆம் பிறந்த நாள் பெரு விழா! (செப்.15- 2014) இன்று.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தலை சிறந்த மாணவராகத் திகழ்ந்து, அவர் கண்ட பகுத்தறிவு - சுயமரியாதை இயக்கத்தின் தளபதியாய் உயர்ந்து, பிறகு கோலோச்சும் நிலைக்கு மக்கள் ஆட்சியின் மகத்தான வாய்ப்புக் காரணமாக உயர்த்தப்பட்ட நிலையில், இளமையில் கற்ற பாடங்களை மறக்காது, ஆட்சியின் அரிய திட்டங்களாக - சட்டங்களாக ஆக்கி, தன்னை ஆளாக்கிய தலைவனின் பாராட்டையும், வாழ்த்தையும் பெறும் அளவுக்கு வாழ்ந்து காட்டி, வரலாறு படைத்தவர் அறிஞர் அண்ணா. ஆட்சி அவருக்கு அலங்கார பீடமல்ல; அவனியோர்க்கு ஆற்ற வேண்டிய மனித நேயக் கடமைக்களுக்கான வாய்ப்பு ஆகும்.

அப்படித்தான் செயற்கரிய செய்து குறுகிய காலத்தில் சாதனைச் சரித்திரம் படைத்தார்.

இன்றோ அண்ணாவைப் பற்றிய வெளிச்சங்கள், வாண வேடிக்கைகள் அதிகம்; ஆனால், அண்ணா எந்த பகுத்தறிவுக் கொள்கையை இறுதி மூச்சடங்கும் வரை ஆட்சியில் இருந்தபோதும் செயல்படுத்துவதில் சமரசம் விரும்பாத தலைவராக இருந்தாரோ, அந்தப் புரிதலும் அதை ஒட்டிய செயல்பாடும் தேடித் தேடியும், காணாமற் போனவைகளாகி விட்டது - வேதனைக்கும் வெட்கத் திற்கும் உரியது!

கடவுள் படங்களை நீக்கச் சொன்னார்

ஆட்சிக்கு வந்தவுடன், மதச் சார்பின்மை என்பது ஆட்சியின் தத்துவம் ஆனதால், அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை மாட்டியிருப்பது தவறு; அவைகளை அகற்றிட வேண்டும் என்று சுற்றறிக்கையே அனுப்பி தலைமைச் செயலகத்திலேயே அதனை செயல்படுத்தவும் வற்புறுத்தினார் 1967-இல்.

அவருக்கு ஆதரவு கொடுத்த ஆச்சாரியார் - ராஜாஜி அவர்களேகூட இந்தச் சுற்றறிக்கையை பின் வாங்கிட வேண்டும் - தமிழக அரசு என்று அறிக்கை விட்டு, எதிர்ப்புத் தெரிவித்ததையும் பொருட்படுத் தாது, ஆட்சியைத் தொடர்ந்த துணிச்சலின் சொந்தக்காரராக முதல் அமைச்சர்அண்ணா திகழ்ந்தார்!

ஆனால், அது பிறகே செயல்பாடற்றுப் போனது - வேதனையான நிலையே!

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே பார்ப் பனர் இல்லாத அமைச்சரவையை அமைத்து வெறும் 9 பேர்களையே (முதல்வர் உட்பட) கொண்டு ஆட்சியை நடத்தி, அகிலத்தையே வியக்க வைத்தார்!

எங்கும் பகுத்தறிவு முழக்கம் செய்தார்; பட்டமளிப்பு விழாக்கள் என்றாலும் சரி, பாராட்டு விழாக்களானாலும் சரி, அதை ஒரு முக்கிய கடமையாகவே செய்து சரித்திரம் படைத்தார்! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களையும் அண்ணாவையும் பிரித்துப் பார்க்க முடியாது!

ஆனால், இன்று அண்ணா பெயரைப் பயன்படுத்தியும், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், கொடியில் பொறித்தும் நடத்துகின்றவர்கள் இம்மூன்றையும் கடைப் பிடித்து ஒழுகும் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள் தானா என்று நெஞ்சில் கைவைத்து கேள்வி கேட்டு நேர்மையான விடை காண முயல வேண்டும்.

அண்ணா வெறும் படம் அல்ல.
பாடம்! பாடம்! படிப்பினை
பெரியார் வாழ்க! அண்ணா விரும்பிய புதிய சமுதாயம் மலர்க!

சென்னை
15.9.2014

கி. வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://www.viduthalai.in/e-paper/87808.html#ixzz3DOLbVtcU

தமிழ் ஓவியா said...


அண்ணாவின் மூன்று சாதனைகள் கழகத் தலைவர் ஆசிரியர் பேட்டி


சென்னை அண்ணாசாலையில் அண்ணா சிலைக்குக் கழகத் தோழர்கள் புடைசூழ மாலை அணிவித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அண்ணா என்பவர் ஒரு தத்துவம்; அவர் ஒரு பெரும் பாடம் என்பது மிக முக்கியமானது. படத்தோடு அண்ணா முடிந்துவிட்டார் என்று கருதாமல், கொள்கையோடு வாழ்வதுதான் அண்ணாவிற்கு நாம் காட்டக் கூடிய சிறப்பு என்று மிகப்பெரிய அளவிலே உணர்வுகளைப் பெற வேண்டும்.

அண்ணா செய்த சாதனைகள்

அண்ணா மூன்று சாதனைகளைத் தமிழ்நாட்டில் செய்தார். ஆட்சிக்கு வந்த நிலையில்!

தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்தார்.

அதுபோலவே, இருமொழிக் கொள்கை - இந்திக்கு இடமில்லை என்று சொன்னார். ஆனால், இன்றைக்கு இந்தியும், சமஸ்கிருதமும் மீண்டும் இந்தத் தமிழ் மண் ணிலே மட்டுமல்ல, இந்தியாவையே ஆளத் துடித்துக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில், அண்ணா, தந்தை பெரியார் வழியிலே மிகவும் நினைவூட்டப்பட வேண்டி யவர் மட்டுமல்ல, அண்ணாவை ஏந்தி, அவர்தந்த களத்தை நாம் மீண்டும் புதுப்பிக்க வேண்டியதுதான், அண்ணாவின் பிறந்த நாளில் நாம் ஏற்கவேண்டிய சூளுரையாகும்.

மோடி வித்தை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டில் பலிக்காது!

செய்தியாளர்: இப்பொழுது தொடர்ந்து மோடி அரசாங்கம் இந்தியை பல வகைகளில் ஆட்சி மொழியாக்கவேண்டும் என்று சுற்றறிக்கையை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்; இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர் பதில்: மோடியை ஆதரித்தவர் களிடம் கேட்கவேண்டிய கேள்வி இது. எங்களைப் பொறுத்த வரையில், இது வியப்பானது அல்ல; எதிர் பார்க்காததும் அல்ல. ஏற்கெனவே, மோடி வந்தால் என்ன செய்வார் என்பதை தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் சொன்னோம்.

அதைத் தாண்டி, அவர் ஆட்சிக்கு வந்தால் எதை எதையோ செய்துவிடுவார்கள் என்று நினைத் தார்கள்; எனவே, மோடி வித்தை எந்தக் காலத்திலும் தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் பலிக்காது!

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியில் கூறினார்.

Read more: http://www.viduthalai.in/e-paper/87803.html#ixzz3DOLpSmv8

தமிழ் ஓவியா said...


ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம்!


ரகசியம் என்றாலே அனைவரும் அதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவோம். அதில் தற்போது பெரும்பாலானோர் தெரிந்துகொள்ள விரும்பும் ஒன்று ஒல்லியாக இருப்பவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதுதான்.

ஒல்லியாக இருப்பவர்கள் நன்கு சாப்பிடுவார்கள். ஆனால், ஒரே சமயத்தில் வயிறு நிரம்ப சாப்பிடாமல் அவ்வப்போது ஏதேனும் சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள். இப்படி போதிய இடைவெளி விட்டு சாப்பிடுவதால், செரிமான மண்டலம் சீராக இயங்கி, கொழுப்புகள் தங்குவதைத் தடுக்கிறது.

அதேசமயம் தண்ணீரை அதிகம் குடிப்பதோடு உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும். ஒல்லியாக இருக்க விரும்புபவர்கள் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்கவேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களானது உடலில் இருந்து வெளியேறி, உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும்.

மேலும் டயட்டில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சேர்த்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள சிட்ரஸ் ஆசிட்டானது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்துவிடும்.

உணவில் அவ்வப்போது கசப்பான உணவுகளையும் சேர்த்து சாப்பிடவேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் உடலில் கொழுப்புகள் தங்குவதில்லை. மேலும் எவ்வித நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை. நேரம் கிடைக்கும் போது ஏதேனும் ஒரு விளையாட்டு, நடனம் அல்லது உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடவேண்டும். இரவில் சரியாக தூங்காமல் இருந்தால் உடல் பருமனடையும். எனவே குறைந்தது தினமும் 7 மணி நேர தூக்கமானது மிகவும் அவசியம். ஒல்லியாக இருக்க நினைப்பவர்கள் அதிகம் இனிப்பு வகைகளைச் சாப்பிடக்கூடாது.

உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடக்கூடாதவை: முட்டை ஒரு சத்தான உணவுதான். ஆனால் உடற்பயிற்சிக்கு பின் முட்டை, தயிர், சாக்லெட், பீட்சா போன்றவற்றை சாப்பிடக் கூடாது. குளுட்டென், சர்க்கரை அதிகம் இருக்கும் பிரட் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு சர்ரென்று ஏறிவிடும் ஆபத்து உள்ளது.

செரிமானத்திற்கும் நல்லதல்ல. உடற் பயிற்சிக்குப் பின், நம் உடலில் ரத்தமானது வயிற்றுக்குள் செல் லாமல் வெளியே பாய்ந்து கொண்டிருக்கும். அப்போது ஒரே ஒரு ஸ்பூன் வெண்ணெய் மட்டும் சாப்பிட்டால் போதுமானது. அதற்கு மேல் சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லதல்ல.

தமிழ் ஓவியா said...

கண்களை பாதுகாப்போம்!

அகத்தின் அழகை முகம் காட்டிகொடுப்பதுபோல நமது கண்களும் அவற்றை வெளிப்படுத்துகின்றன.

இயற்கையான இடங்களையோ, அழகான பொருளையோ காணும்போது நம்மை எளிதில் அவ்விடத்திற்குத் திசை திருப்பி விடும் சக்தியைக் கொண்டது கண்கள். அக்கண்களை நாம் மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கவேண்டும். கண்கள் சிவந்து இருந்தாலோ, ஏதேனும் கட்டிகள் ஏற்பட்டாலே, கண்களை அலட்சியப்படுத்தாமல் அவற்றிக்கு உரிய மருத்துவத்தை கடைப்பிடிக்கவேண்டும்.

நந்தியாவட்டை பூக்களைப் பறித்து கண்களில் வைத்து இரவு முழுவதும் கட்டிவைத்துவிட்டு காலையில் அவிழ்த்து சுத்தம் செய்து விடுங்கள். பார்வை பளிச்சிடும். கண்ரோகம் வராது. சில துளிகள் விளக்கெண்ணெயை இமை புருவம் முதலிய இடங்களில் இரவில் படுக்கப்போகும் முன் தடவுங்கள். இதனால் முடி நன்கு வளரும்.

இரவில் ஒவ்வொரு கண்ணுக்கும் ஒரு நன்கு பழுத்த எலுமிச்சம் பழத்தை வைத்துக் கட்டிக்கொண்டு படுத்துவிடுங்கள். காலை எடுத்து வைத்துவிட்டு கண்களை சுத்தம் செய்தால் கண்களுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. கண்களுக்கு ஒய்வு கொடுக்க வெள்ளரிப்பிஞ்சை துண்டுகளாக்கி அய்ஸ் துணியில் வைத்துக் கட்டிப்படுத்துக் கொண்டு விழிகளை ஒற்றி எடுங்கள் கண்களுக்கு நல்லது.

தேயிலை நீரில் துணியை நனைத்து அடிக்கடி கண்களை துடைத்து விடுங்கள். கண்களில் சிவப்பு நிறம் உண்டாகாது.

Read more: http://www.viduthalai.in/page-7/87786.html#ixzz3DOS9Rcxl

தமிழ் ஓவியா said...


நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்


மேதி என்று அழைக்கப்படும் வெந்தயம் ஒரு மாமருந்து. கீரைவகையில் இருந்து கிடைக்கும் விதையாகும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் வெந்தயம் விளைகிறது. வாரம் ஒருமுறை வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல், வாயு, கபம், இருமல், சீதக்கழிச்சல், வெள்ளைப்படல், இளைப்புநோய் என எந்த நோயும் அண்டாது. இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், செரிமானமின்மை போன்றவை ஏற்படாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தப் பொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருள்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது.

இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடலுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் போலிக் அமிலம், ரிபோபிளேவின் (பி2), வைட்டமின் ஏ, பைரிடாக்சின், வைட்டமின் சி, செலினியம், துத்தநாகம், மாங்கனீஷ், இரும்பு சத்து, தாமிரச்சத்து, பொட்டாசியம், உலோகச் சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளன.

வெந்தயம் உடலுக்குக் குளிர்ச்சி அளிப்பதுடன், உடல் வெப்பத்தை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில், அந்தத் தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலச்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாக பயன்படுகிறது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சினையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரைமணி நேரம் தலையில் தடவி குளித்து வந்தால் முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்யும்.

பொடுகு பிரச்சினை, அரிப்பு குறைவதோடு, முடி உதிர்வது நீங்கி தலைமுடி நன்கு வளரும். வெந்தய காபி, வெந்தய தேநீர் குடிக்கலாம். வெந்தயத்தில் ஹைட்ரோ அய்சோலியூசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பை தூண்டக் கூடிய தன்மை உடையது.

தாவர வகைகளிலேயே வெந்தயத்தில் மட்டுமே இந்த அமினோ அமிலம் உள்ளது. இது கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

தமிழ் ஓவியா said...


அரிசியும் நோய் தீர்க்கும்

தென்னிந்திய மக்களின் மிக முக்கிய உணவுப் பொருள் அரிசி. நம்மில் பெரும்பாலா னோருக்கு ஒரு வேளையாவது அரிசி சாதம் சாப்பிட்டே ஆகவேண்டும். அண்மைக் காலமாக அரிசிக்குப் பதில், அரிசியைக் குறைத்துக்கொண்டு கோதுமையை அதிக உணவாகப் பயன்படுத்தும் பழக்கம் பெருக ஆரம்பித்திருக்கிறது. அரிசியை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று சிந்திப்பதே தவறு.

பதார்த்தகுண சிந்தாமணி போன்ற மருத்துவ நூல்களில் 25-க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் மருந்தாகவும், உணவாகவும் பயன்படும் முறை விளக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நெல் மற்றும் அரிசியின் பயன்பாடும் நம் முன்னோர்களிடையே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அரிசியையும் மற்ற தானியங் களையும் அவற்றின் தன்மைகளுக்கேற்ப எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உணவாக்கிக் கொள்வது நல்லது.

அரிசி என்றால், மேலோட்டமாய் புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாசுமதி அரிசி, சிகப்பரிசி இவைகளைத்தான் நம்மில் பலர் அரிசி என்று தெரிந்து வைத்திருக்கிறோம். இவைதவிர வெவ்வேறு சூழல்களில் வளரக்கூடிய பல்வேறு வகையான நெல் வகைகள் அந்தந்தச் சூழலின் மண்ணின் தன்மையையும் சிறந்த மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பதை நாம் அறிந்திருக்கவில்லை.

கருங்குறுவை என்றொரு அரிசி கறுப்பு நிறத்திலும் செங்குறுவை என்றொரு அரிசி சிகப்பு நிறத்திலும் இருக்கும். இவைபோல வண்ண அரிசி வகைகளும் நம் பாரம்பரியத்தில் இருந்தன. அரிசியில் மட்டுமல்ல, எந்தப்பொருளிலுமே நிறமிகளிருந்தால் அவற்றில் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைவாக இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

அரிசியின் மேல் இருக்கும் தவிடு, உமி, அன்னக்காடி இவை எல்லா வற்றிலும் நல்ல மருத்துவக் குணங்களும் உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன. பருமனாக இருக்கும் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இவ்வகை பருமனான அரிசி வேக அதிக நேரம் எடுக்கும் என்பதும் அதேபோல் செரிமானத்துக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை. உதாரணத்துக்கு மணிச்சம்பா அரிசியை கூறலாம். இதுபோல், மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் சாதம் சமைத்து மதிய உணவு சாப்பிட்டால் இளவட்டக்கல்லைத் தூக்கும் அளவுக்கு உடல் உறுதியும், வலிமையும் பெறலாம்.

புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புச்சத்து எல்லாம் இந்த அரிசியில் நிரம்ப உள்ளன. விஷமுறிவுக்கு கருங்குருவை, பாலூட்டும் தாய்மார்களுக்கு நீளச்சம்பா, பொலிவான தோற்றத்திற்கு அன்னம் அழகி, வாதத்தை போக்க (கெட்ட நீரைப் போக்க) சீரகச்சம்பா உள்ளிட்ட அரிசிகள் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் பச்சரிசி சாதம் சாப்பிடக்கூடாது.

கைக்குத்தல் அரிசி என்பது தவிடு பிரியாமல் இருக்கக் கூடியது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கூடவே ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையும் உள்ளது. புழுங்கல் அரிசி எளிதில் செரிமானமாகும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. அரிசி சாதம் மட்டுமல்ல அரிசிப் பொரியும் பித்தத்தைச் சமப் படுத்தக்கூடியது தான்.

அவல் வாதத்தைச் சமப்படுத்தும் மாவுச்சத்து மிகுந்தது. அரிசியை முற்றிலுமாகத் தவிர்க்காமல் அதனூடாகவே மற்ற பல தானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.