Search This Blog

7.8.13

தமிழைக் கட்டாய பாடமாக்காததேன்? -பெரியார்

தமிழைக் கட்டாய பாடமாக்காததேன்?


இப்போது நடந்த சென்னை சட்டசபைக் கூட்டத்துக்கு சில நாட்களுக்கு முன் காங்கரஸ் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் பல ரசமான விவாதங்கள் நடந்தன. அதுசமயம் காங்கரஸ் தலைவர்களின் அந்தரங்க மனப்பான்மை வெளியாயிற்று. சட்ட சபைக் காங்கரஸ் மெம்பர்களுக்குள்ளேயே சிறு பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

தாய்ப்பாஷையபிமானமும், தேசீய வேட்கையுமுடைய எம்.எல்.ஏ. ஒருவர் காங்கரஸ் தலைவர்களைக் கண்டு நாம் சென்ற வருஷ ஆகஸ்டு மாதத்தில் நடந்த கமிட்டி கூட்டத்திலேயே இந்தியைக் கட்டாய பாடமாக வைக்கும்போது தாய்ப்பாஷையையும் கட்டாயமாக்க வேண்டும் என்று  தீர்மானித்திருக்கிறோமே இப்போது தாய்ப் பாஷையைக் கட்டாயப்படுத்தாமல் இந்தியைக் கட்டாய பாடமாக்கியதால் தானே இவ்வளவு எதிர்ப்பு உண்டாகி விட்டது; தாய்பாஷையும் கட்டாய பாடமாகப் பத்தாம் வகுப்பு வரையில் இருக்க வேண்டுமென்று உத்தரவு செய்து விடுங்கள் என்று கேட்டார். உடனே, தலைவர் அவரை ஏற இறங்கப் பார்த்து உண்மையாகவா இப்படி கேட்கிறீர் என்று கேட்டு "தாய்ப் பாஷையை - தமிழைக் கட்டாயமாக்கினால் எப்படி இந்தி எதிர்ப்பு அடங்கிவிடும்?" என்றார். அதற்கு அவர் "இந்தியை எதிர்ப்பவர்களில் பெரும்பாலார் தமிழுக்கு ஆபத்து வந்ததென்று கருதுகிறவர்களே. இந்தியென்பது சமஸ்கிருதத்தின் கலப்புப்பிள்ளை என்று தெரிந்திருக்கிறது. இப்பொழுது தாய்ப் பாஷையின் ஸ்தானத்தில் சமஸ்கிருதம் இருக்கிறது. மாணவர்கள் தமிழோ சமஸ்கிருதமோ எதையேனும் ஒன்று எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர தாய்ப் பாஷையைக் கட்டாயம் படிக்க வேண்டுமென்ற நியதி கிடையாது. இந்தி கட்டாய பாடமானால் - இந்திக்கு செல்வாக்கு அதிகப்பட்டால் - பெரும்பாலார் இந்தியைச் சுலபமாய்க் கற்றுக்கொள்வதற்காக சமஸ்கிருதத்தைத் தான் எடுத்துக்கொள்வர். அதனால் தமிழ் செல்வாக்கு குறைந்து பெரிய ஆபத்துக்குள்ளாகி விடுமல்லவா" என்று கூறினார்.

தாய்மொழி அபிவிருத்தி வேண்டாமா?

தலைவர் "இதர பாடங்களைத் தமிழில் கட்டாயமாகச் சொல்லித்தரவேண்டுமென்று ஏற்பாடாகியிருக்கிறதே. அதனால் எப்படி தமிழ் கெட்டுவிடும்?" என்றார். உடனே மற்றவர் "இதர பாடங்கள் தமிழில் கற்பிக்கிறேன் என்பது உங்கள் ஏற்பாடல்லவே. ஏற்கெனவே தீர்மானித்திருக்கிற விஷயமாயிற்றே. மேலும் அவை யாவும் பாஷா பாடமல்ல. அவற்றால் மாணவர்களுக்கு பாஷாஞானம் உண்டாகாதே. சிறுவர்களுக்கு போதுமான பாஷா ஞானமே இல்லாதபோது பாஷா பாடமல்லாத பாடங்களைத் தமிழில் படித்தால் பாஷாஞானம் உண்டாகுமென்று சொல்லுவது தப்பல்லவா? எத்தனை பாஷைகளைப் படித்தாலும் ஒருவன் தன் தாய் பாஷையில் நல்ல அபிவிருத்தி பெறுவது தானே முக்கியமாகும். தமிழ் எப்படியும் கட்டாய பாடமாக வைக்கவேண்டியது அவசியம் தானே. ஆகையால் தமிழை உடனே கட்டாய பாடமாக வைக்கவேண்டும்" என்று வாதித்தார்.

தலைவர் "சரி, நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இப்போது ஆந்திரர்கள் ஆந்திர மாகாணத்துக்குப் போராடுகிறார்கள். தமிழர்கள் தமிழ் கட்டாய பாடமாக வேண்டும் என்று வாதாடுவார்களானால் காங்கரஸ் பலவீனமாய் விடுமே. பிறகு எதிரிகள் கைகொட்டி சிரிப்பார்கள்" என்றார். இப்படி இவர்கள் பேச்சில் பல ரசமான மர்மங்கள் வெளியாயின.

சட்டசபைக் காங்கரஸ் மெம்பர்கள் கருத்து?

1. தமிழைக் கட்டாயமாக்கினால் காங்கரஸ் பலவீனப்படும். இதன் மர்மம் என்ன? தாய் பாஷையில் ஜனங்களுக்கு மூடத்தனம் நிரம்பியிருக்க வேண்டும் என்பது காங்கரசின் முழுக் கொள்கை போல் இருக்கிறதல்லவா? தமிழர்கள் தமிழைக் கட்டாயமாக்க வேண்டும் என்று போராடினால் உடனே பிராமணர்கள் சமஸ்கிருதம் வேண்டும் என்பர். அதனால் காங்கரசுக்குள் தமிழ்க் கட்சி, சமஸ்கிருதக்கட்சி எனக் கட்சிகள் தோன்றிவிடும். அது காங்கரசுக்குப் பலவீனமாகும். ஆகவே காங்கரசுதான் முக்கியமே தவிர, நமது சட்ட சபை மெம்பர்களுக்குத் தங்கள் தாய் பாஷை, தேசமக்களின் ஞானம் என்ற இவற்றில் முக்கிய கருத்தில்லையென்று படுகிறதல்லவா?

2. இப்போதுதான் தமிழர் சிலர் தமிழ் படித்து வித்வான்களாக வந்திருக்கின்றனர். இவர்களால்தான் பார்ப்பனரல்லாதார் கட்சி வளம் பெறுகிறது. இவர்கள்தான் தமிழர் நாகரிகம், ஆரிய நாகரிகம் என்று பிரித்துப் பார்ப்பனர்களைத் தூஷிக்கின்றனர். இந்த நிலையில் தமிழ் கட்டாயமாய் விட்டால் தமிழர், வங்காளிகளைப் போல ஓங்கி உயர்ந்து விடுவர். பிறகு பார்ப்பனர் தலைகுனிந்து வணங்கிப்போக வேண்டிவரும். இது இரண்டாவது மர்மம். இதனால், காங்கரசில் இருக்கும் பார்ப்பனர்கள் யாவரும் ஒருமுகமாய் தமிழ் கட்டாயமாகக் கூடாது என்பதன் நோக்கம் தமிழர்களை தமிழறியாத மூடர்களாக்கி விடவேண்டுமென்பது எனத் தெரிகிறதல்லவா?

சட்ட சபைத் தமிழன் அறியவேண்டியது

3. தமிழ் கட்டாயமாய் விட்டால், சமஸ்கிருதத்துக்கு இடமில்லாமல் போய்விடும். சமஸ்கிருதம் படிப்பவர் இல்லாமல் போய்விடுவர். ஏற்கனவே அது பேசுவாரற்று செத்துப்போய் கிடக்கிறது. இதற்கு ஆக்கம் தேடவேண்டுமானால், தாய் பாஷையை - தமிழை - கட்டாயமாக்கக் கூடாதாம், சமஸ்கிருதம் தலையெடுத்தால் தமிழ் நாட்டில் பிரமத்துவேஷம் நீங்கிவிடுமாம்! எப்படியென்றால், இந்தியென்பது சமஸ்கிருதத்தின் வேறொரு தோற்றமே. கட்டாய இந்தி ஒரு பக்கம் நிற்க, தாய் பாஷையின் ஸ்தானத்தில் சமஸ்கிருதம் வீற்றிருக்க பாஷா பாடமல்லாத இதர பாடங்களை 100-க்கு 80 சமஸ்கிருத பதம் கலந்த மிலேச்ச தமிழில் கட்டாயமாகக் கற்பிக்கத் தொடங்கினால், சுத்த தமிழ் என்பது மாண்டுமறையும். அதனால் தான் இப்போது வந்திருக்கும் கணக்கு, விஞ்ஞானம், சரித்திரம், பூகோளம் முதலிய பாடபுத்தகங்கள் 100-க்கு 80, 85 வீதம் சமஸ்கிருத பதம் செறிந்த மிலேச்சத் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன. பிறகு, தமிழர்கள் "தூய தமிழ்" "செந்தமிழ் மணம்;" "தமிழ் நாகரிகம்" என்றெல்லாம் பேசமாட்டார்கள். "இப்படி நாலாவகையிலும் சமஸ்கிருதத்துக்கு வழி செய்து விட்டால், பிரமத்துவேஷமே தலைகாட்டாமல் போய்விடும்" என்று காங்கரஸ் பார்ப்பனர் கருதுகின்றார்களென்று தெரிகிறது. வடநாட்டுக் காங்கரஸ் தலைவர்கள் பாஷையெல்லாம் சமஸ்கிருதத்தின் வழிவந்தவை. அதனால் அவர்கள் சமஸ்கிருதம் தமிழ் நாட்டில் ஆதிக்கம் பெறுவது நல்லதென்று கருதுகிறார்கள். மேலும் அவர்களுக்குத் தென்னாட்டுப் பார்ப்பனரின் சூழ்ச்சிவகையும், தமிழின் தனிப்பட்ட சிறப்பும் தெரியாது. மேலும், அவர்களுக்கு போதுமான பாஷா ஞானமும் கிடையாது. இவைகளைச் சட்ட சபையிலிருக்கும் தமிழன் நன்றாய் அறிய வேண்டும்.

தமிழா மயங்காதே

ஆகவே ஏ, சட்டசபைத் தமிழா! நீ சர்வமுட்டாள் அல்ல. தாய் நாட்டுக்குத் துரோகம் செய்யும் தறிதலை யல்ல. தாய் பாஷையைக் கட்டாயமாக்கக் கூடாதென்று கருதித்திரியும் சண்டாளனல்ல. நீ தமிழன்; உன் தந்தை தமிழன்; உன் தாய் தமிழ் மகள்; உற்றார் தமிழர், உறவினர் தமிழர். உனது முறுக்கேறிய நரம்புகளில் ஓடுவது வீரத்தமிழர் குறுதி. கட்டாய இந்தியால், உன் தமிழ் நாலா வகையிலும் நசுக்கப்படுகிறது. பாஷா பாடங்களைத் தமிழில் கற்பிப்பதால் தமிழ் விருத்தியாய் விடும் என்று கருதி மயங்காதே தனராசி எண், ரிணராசி எண், வியாசார்த்தம், அனுபூரகம், குணரங்கம் என்றெல்லாம் உன் தமிழ் பாஷையில் நீ கேட்டதுண்டா? இவையெல்லாம் உன் தாயை, உன் தமிழைக் கொல்லுவதற்குப் பார்ப்பனர் விடும் அம்புகள் என்று நினைக்கின்றாயா? நீ காந்தியைக் கும்பிடு; உன் சி. ஆரைக் கட்டிக்கொண்டு அழு; உன் காங்கரஸை மோக்ஷ சாதனம் என்று பின்பற்று; ஆனால், அவர்கள் பேச்சு வழி நின்று உன் தாயை - உன் தமிழை - இம்சிக்காமல், தமிழைக் கட்டாய பாடமாக்க வேண்டுமென்று இப்போதே தீர்மானிப்பாயாக. இல்லையானால், தமிழைக் கட்டாயமாக்க வேண்டுமென்று முயலாயானால், நீ உன் நாட்டுக்குத் துரோகியாவாய்; உன் நாட்டு மொழிக்குத் துரோகியாவாய்; உன் நாட்டின் கலைக்கு விரோதியாவாய். நீ மானமுள்ள தமிழனானால், மதி மிகுந்த தமிழனானால் உன் பெற்றோரின் தமிழ் ரத்தம் உன் உடலில், நரம்பில், உதிரத்தில் தோய்ந்திருக்குமானால், இப்போழுதே - ஏன் இன்றே - எங்கள் நாட்டில் எங்கள் தாய்மொழி கட்டாயமாக்கப்பட வேண்டுமென்று ஒரு தீர்மானம் அனுப்புவாயாக.

உங்கள் தலைவர் சி.ஆர். அவர்கள் தமிழினிடத்தும், தமிழ் பிள்ளைகளிடத்தும் மிகுந்த அன்புடையவர் என்று சொல்லுகிறாரே, அவரே தமிழன் என்று சொல்லிக்கொள்ளுகிறாரே, உண்மையில் அவர் தமிழனானால் தமிழ் மொழி விருத்தியாக வேண்டுமென்ற எண்ணமுடையவரானால், தமிழை - தாய் பாஷையை - இந்தியைச் சொன்னதைப் போலக் கட்டாய பாடமாக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்திருக்க மாட்டாரா? தமிழை ஒவ்வொருவறும் கட்டாயம் படித்தால்தானே தமிழ் கலைச் சொற்களையுண்டுபண்ண முடியும். "தமிழைக் கட்டாய மாக்கமாட்டோம், எங்கள் சமஸ்கிருதம் இல்லாமல்போகும். உங்கள் தமிழ் கெட்டாலென்ன" என்று கருதும் பார்ப்பன மனப்பான்மை எங்கே அவரை விட்டது? தமிழில் ஆபாசமான நடையில் சில கதைகள் எழுதிவிட்டு, "எனக்குத் தமிழில் எவ்வளவு ஆசையிருக்கிறது தெரியுமா" என்கிறார். இவற்றைக் கேட்டு வாய் பிளக்கும் மூடமக்களைப் போல, நீங்களும் உங்கள் தமிழைக் கட்டாயமாக்க முயற்சி செய்யாமல் இருப்பது உங்கள் தகுதிக்கு அடுக்குமா? நீங்கள் தன் உணர்ச்சியில்லாத விலங்குகளா? தாய் பாஷையில் அபிமானமில்லாத தசைப்பிண்டங்களா?

துரோகியாகப் போகிறாயா?

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது ஒத்து 100-க்கு 95 பேர் தமிழ் தெரியாமல் இருக்கும்போதே சமஸ்கிருதத்தை தாய் பாஷையாகவும், இந்தியைக் கட்டாய பாஷையாகவும், ஆங்கிலத்தை ராஜாங்க பாஷையாகவும் வைத்து, தமிழ்ப் பதங்களை எல்லாம் போக்கி, சமஸ்கிருதமாக்கி, தமிழன் மானத்தை தமிழன் பிதிரார்ஜித பாஷையை, தமிழன்னையைக் கெடுப்பதற்காக உங்கள் சி. ஆரை உள்ளிட்ட பார்ப்பனர்கள் தந்திரமாய் வேலை செய்யும்போது, தமிழனாகிய நீ! தமிழைக் கட்டாய பாடமாக்கி, தமிழன் ஒவ்வொருவனும் தமிழை நன்றாகக் கற்றிருக்க வேண்டுமென்று முயற்சி செய்யாத நீ! தமிழ் கெட்டாலும் கெடட்டும், தமிழர்கள் மானமழிந்தாலும் அழியட்டும், நான் காங்கரஸ் செய்யும் எல்லா அயோக்கியத்தனத்துக்கும் உள்ளாகியிருப்பதே போல, என் தாய் பாஷையை என் அருமைத் தலைவர் சி.ஆர். அவர்களும் அருமைத் தோழர்களான பார்ப்பனர்களும் கூடிக் கொலை செய்வதற்குத் துணையிருப்பேன் என்று நினைக்கிறாயா? தேசத்தின் பெயரையோ சமூகத்தின் பேரையோ, அரசியல் கொள்கையின் பெயரையோ சொல்லிச் சிறை சென்றவர் எல்லா நாட்டிலும் உண்டு. நீ, விரும்பும் இந்தி பேசும் நாட்டிலும் உண்டு. தான் பேசும் பாஷை குறித்து சிறை புகுந்த தீரம் தமிழனுக்கு உண்டு! தாய் பாஷைக்காகச் சிறை புகுந்தான், புகுகிறான், புகுவான்; தடியடி பட்டான், படுகிறான், படுவான்; சகல துன்பங்களையும் அனுபவிப்பான், அவன் பேசும் தமிழை தாய் பாஷையாக உடைய நீ இப்படித் தாய்பாஷையை கட்டாயமாக்கக் கூடாது என முயலும் துரோகியாகப் போகிறாயா? போவாயானால் ஏ,துரோகி உன் சட்டசபை வாழ்வுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதென்று எண்ணிக்கொள்.

------------- -----------------உண்மை கண்டோன் என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை --  ”குடி அரசு” - கட்டுரை - 04.09.1938

26 comments:

தமிழ் ஓவியா said...


மந்திரம்


கேரள மந்திரவாதம், மலையாள மந்திரவாதி இவை நாடு நெடுகப் பிர பலமான சொற்கள்; கோட் டயத்தை அடுத்த சூர்ய காவடி மனை மந்திரவாதி சூரியன் சுப்பிரமணியன் பட்ட திரிப்பாடு தலைமை யில் ஆண்டுதோறும் ஒரு பக்தர் குழு இமயமலை வரை சென்று ஏழு புனித நதிகளின் நீர், மானசரோ வர் ஏரி நீர் ஆகியவற்றைச் சேகரித்துக் கொண்டு வந்து மாசுபட்ட 44 கேரள நதிகளைத் தூய்மைப்படுத் தும் தொண்டு செய்து வருகிறது.

இந்தப் பணி 8 ஆண்டு களாக நடைபெற்றதில் 20 நதிகள் தூய்மைப்படுத்தப் பட்டு உள்ளதாகத் தெரி விக்கிறார் சூரியன். தனது மாந்திரிக பூஜைகளில் எல்லா ஜாதியினரும் கலந்து கொள்ள அனு மதித்து ஒரு புரட்சி செய்திருக்கிறார் சூரியன். அது மட்டுமல்ல, இதுவரை சில பூஜாரிகளுக்குத் தெரிந்திருந்த கணேச மந்திரத்தைப் பகிரங்கப் படுத்தினார். மனிதர்கள் மேலும் நல்ல நிலை அடை வதற்காக இஷ்ட பூர்த்தம் என்ற 256 நாள் வேள்வி ஒன்றையும் நடத்தினார் என்கிறது ஆர்.எஸ்.எஸ். இதழான விஜயபாரதம்.

இதனைப் படித்து நன்கு வயிறு குலுங்கச் சிரிக்கலாம். மந்திரத்தால் மாங்காய் விழுமா? என்று குக்கிராமங்களில்கூட கேள்வி கேட்பார்கள். அந்தப் படிக்காத மக் களிடத்தில் இருக்கும் பொது அறிவுகூட இந்த சங்பரிவார் கும்பலுக்கு இல்லாதது பரிதாபமே!

மந்திரத்தால் நதி களைச் சுத்தப்படுத்த முடி யும் என்றால் கங்கையைச் சுத்தப்படுத்த ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு ஏன் பணம் ஒதுக்க வேண்டும்? பேசாமல் இந்த மந்திர வாதியை மந்திரியாக ஆக்கி விடலாமா? மந்திரவாதி என்பதற்கும் மந்திரி என் பதற்கும்கூட கிட்டதட்ட எழுத்து நெருக்கமாக இருக்கவில்லையா?

மந்திரவாதியால் மாசு பட்ட ஆறுகளைச் சுத்தி கரிக்க முடியும் என்றால் அந்த மந்திரத்துக்கு மேலும் கிக் கொடுத்தோ அல்லது 256 நாள் யாகம் என்பதை 756 நாள் என்று ஆக் கியோ, இந்தியாவில் உள்ள நதிகளையெல்லாம் இணைத்து விடலாமே! எவ்வளவுப் பணம் மிச்சம்!

ஹிந்துத்துவாவாதிகள் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டில் அரசாங்கமே தேவை இருக்காது.

சூ மந்திரகாளி! என்று கை அசைத்தால் மூட்டை மூட்டையாக நவதானியங்கள் வந்து கொட்டும். ஜெய் ஜக்கம்மா என்றால் எல்லா அய்ஸ் வர்யங்களும் ஆறாகப் பெருக்கெடுத்து நுரை தள்ளி ஓடும் - அப்படித் தானே!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


ஒரு நொடியில் சாதிக்கலாமே!


டில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு - பெரும் எதிர்ப்புப் புயலைக் கிளப்பி விட்டது. முக்கிய எதிர்க்கட்சிகள் மக்களவையில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி யுள்ளன.

சமூகநீதித் தளத்தில் எப்பொழுதும் முன் வரிசையில் நின்று தடம் பதிக்கும் திராவிடர் கழகத்தின் தலைவர், இந்தத் தகவல் வெளிவந்த அந்த நிலையிலேயே கண்டனம் தெரிவித்ததோடு, டில்லியிலே போராட்ட அறிவிப்பினையும் வெளிப் படுத்தியுள்ளார்.

மத்திய அரசுக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் 27 விழுக்காட்டுக்கு வழி செய்யும் சட்டம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாமல் உச்சநீதிமன்றம் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும்?

நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு அவசியம் என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள ஜஸ்டிஸ் திரு.சதாசிவம் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ள ஒரு காலகட்டத்தில், உச்சநீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை அளித்திருப்பது அதிர்ச்சிக்குரியதாகும்.

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்த நிலையில், மண்டல் குழுப் பரிந்துரைகளின் அடிப்படையில் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் பிரதமராக வந்த நிலையில்தான் முதன்முதலாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காட்டுக்குக் கதவு திறந்தார். இதே தேதியில் (7.8.1990). அதன் காரணமாக ஆட்சியையும் பறிகொடுத்தார் (பி.ஜே.பி. தன் ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டது!)

கல்வியில் இட ஒதுக்கீடு என்பது 2006 இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் அறிவிக்கப்பட்டது. அதுவும் ஆண்டுக்கு 9 சதவிகிதம் என்று மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக் குள்ளும் அவ்வாறு செயல்படுத்தாமல் அதனை அய்ந்தாண்டு என்கிற அளவுக்கு இழுத்தடித்து விட்டனர்.

இப்பொழுது என்னவென்றால், உச்சநீதிமன்றம் வரை சென்று எய்ம்ஸ் போன்ற உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்ற தீர்ப்பினைப் பெற்றுவிட்டனர்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு என்று அறிவித்தபோது இதே எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர்கள்தான் நோயாளிகளுக்கு வைத்தியம் செய்ய மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரும் பெரும் பணமுதலைகள் எல்லாம் இவர்களின் பின்ப(பு)லத்தில் இருந்தனர் - மும்பையில் மதுக்கடைகளை நடத்துபவர்களும் இருந்தனர் - எப்படிப் போராட்டம்?

நோயாளிகளைக் கவனிக்காமல் சீட்டாடிக் கொண்டு இருந்தனர். அரசுக்குச் சொந்தமான தளவாடங்கள்- மின்சாரம் போன்றவற்றை அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்துக்குப் பயன் படுத்திக் கொண்டனர்.

இதில் இன்னொருகொடுமை என்ன தெரியுமா? இவர்கள் வேலைக்குச் செல்லாமல் போராட்டம் நடத்திய நாட்களுக்கும் இதே நீதிமன்றம் சம்பளம் கொடுக்கச் சொன்ன கொடுமையை என்ன சொல்ல!

இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் சக்திகள் சாதாரண மானவையல்ல - 47 நிறுவனங்களில் இட ஒதுக்கீடு கிடையாது என்று கூறி மாநிலங்களவையில் அவசர அவசரமாக (அதுதான் அந்த நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டம்) ஒரு மசோதாவை இரண்டே நிமிடத்தில் நிறைவேற்றிக் கொண்டனர் என்றால், அந்தச் சக்திகள்தான் எத்தகையவை!

இதனை எதிர்த்து அப்பொழுதே திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மக்களவையில் அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை - அத்தோடு காலாவதியாகிவிட்டது அந்த மசோதா!

கொல்லைப்புற வழியாக சாதிக்க முடியாததை இப்பொழுது நீதிமன்றம்மூலம் சாதித்துக் கொண் டுள்ளனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 200-க்கும் மேல் இருக்கின்றனர்.

இவர்கள் இணைந்து ஒரே ஒருமுறை குரல் கொடுத்தாலே போதும் - ஒரே நிமிடத்தில் சமூகநீதி வெற்றி பெற்றுவிடுமே! ஏன் தயக்கம்?

தமிழ் ஓவியா said...


படிக்கவேண்டிய பாக்கிகள் பெருக்கம்!


பசித்தவர்களும், ருசித்துச் சாப் பிட்டே பழக்கப்பட்டவர்களும் எப் போதும் புதுப்புது உணவு வகைகளை யும், புதிய சமையல் பக்குவங்களையும் ருசி பார்க்கவே விரும்புவர்; அத் தகைய உணவு விடுதிகளையே தேடுவர் - நாடி ஓடுவர்!

அதுபோலத்தான் புத்தகங்களை விரும்பி (சு)வாசித்தே பழக்கப்பட்ட வர்கள் - புதிய நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து படித்துச் சுவைப்பர் - செரிமானம் செய்து சிந்தனைப் பெட்டகத்தில் ஏற்றி வைப்பர்!

சந்திக்கும் நண்பர்கள் பலரும் புத்தகங்களைக் கொடுத்த வண் ணமே உள்ளனர் - சேர்த்து வைப்ப தற்கு வீட்டில் இடமே இல்லை.

பெரியார் - பகுத்தறிவு நூலகம் சென்னையில் உள்ள அருமையான அறிவுக் கருவூலம்; அதற்கும் இது வரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை அன்பளிப்பாக அளித்து மகிழ்ந்துள்ளேன். அங்கும் இடப் பிரச் சினை; பல நண்பர்களின் கொடை உள்ளம் நாளும் இடப் பிரச்சினையை அங்கேயும் ஏற்படுத்துகிறது. மூன்று மாடி (தளங்கள்) கொண்ட புதிய நூலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள் ளது. நிதி மற்றும் பல பிரச்சினைகளில் அப்புதிய நூலகக் கட்டட முயற்சித் தள்ளிக் கொண்டே போகிறது!

மதுரைத் தோழர்கள் குறிப்பாக பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் வா.நேரு, மண்டலச் செயலாளர் அழகிரிசாமி, கழகத் தோழர்கள் எம்.கனி, முருகேசன் போன்ற பலரும் புத் தகங்களையே, மலர்ச்செண்டுகளுக்குப் பதிலாக கொடுத்து மகிழ்வர்!

அதில் ஒரு நூல்! தேவதாசியும் மகானும் என்ற ஒரு நூல் வெங்கட கிருஷ்ணன் ஸ்ரீராம் ஆங்கிலத்திலும், தமிழில் பத்மா நாராயணன் பெங்களூரு நாகரத்தினம் அம்மாள் என்ற பிரபல நாட்டிய, இசை மற்றும் பல்கலைக் கலைஞரான வீராங்கனைபற்றிய ஓர் அருமையான நூல். இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு நம் பெண்களும், உயர்ஜாதி ஆணாதிக்கமும், எப்படியெல்லாம் பல்வகைப் போராட் டங்களில் ஈடுபட்டு, தத்தம் திறமையை வெளிப்படுத்தி வியக்க வைத்தார்கள்; வரலாறு படைத்தார்கள் -

திருவையாறு தியாகய்யர் சமாதி - கோவில் எல்லாம் எப்படி பல்வகைப் போராட்டத்திற்குப் பிறகு இன்றுள்ள நிலையை எய்தின என்ற வரலாறும், சமூகநீதி - பாலியல் நீதிக் கான தொடர் போராட்டங்களும் தேவ தாசி மகளிர் என்று அழைத்த பெரு மைக்குரிய பெங்களூரு நாகரத்தினம் அம்மாள், முத்து, பழனி, வீணைதனம் மாள், அவர்தம் சந்ததி போன்ற பல வரலாற்றுக் களஞ்சியமாக உள்ளது! பல வரலாற்று நூல்களில் காண முடியாத சமூக விஞ்ஞானம் - சமூகப் புரட்சி - எதிர்ப்புரட்சி போராட்டங்களும் பற்றிய அரிய தகவல்கள் அந்த ஒரு நூலில் ஏராளம் கிடைக்கின்றன! சுவையாக இருக்கிறது!
இன்னும் நான் படித்து முடிக்கவில்லை; இன்றோ, நாளையோ முடிப் பேன்.

ஜிம்ரோன் என்ற ஒரு உற்சாகமூட்டும் பேச்சாளர் ஒருவர் கூறுகிறார்:

நீங்கள் ஒவ்வொரு வாரமும் குறைந் தது இரண்டு புத்தகங்களையாவது படிக்கவேண்டும். இதன்படி ஒரு ஆண்டில் நூறு புத்தகங்களைப் படித்து முடிக்கலாம் என்கிறார்!

இப்படிச் செய்தால் நீங்கள் பத் தாண்டுகளில் - பத்தாயிரம் புத்தகங் களைப் படித்து முடிக்கலாமே! அதன் மூலம் பத்தாயிரம் புத்தகங்களின் கருத்துக்குப் பின்தங்கியவர்களாக ஒருபோதும் இருக்கமாட்டீர்கள் அல்லவா!

படிக்க நேரத்தைக் கண்டுபிடிப்பது தான் எம்மைப் போன்றவர்களுக்கு உள்ள பெரிய பிரச்சினை; உறங்குமுன் தவறாது படிப்பது என்பது ஒரு நல்ல பழக்கம். பயணங்கள், குறிப்பாக ரயில் - தொடர்வண்டி பயணங்கள் படிக்க உதவிடுகின்றன - அங்கும் நண்பர்கள் குறுக்கிடாமல் இருந்தால்!

குறிப்பிட்ட நேரம் - படிக்கும் நேரம் - சிலருக்கு உண்டு - நமக்கோ கிடைக்கும் நேரம் எல்லாவற்றையும் படிக்கும், எழுதும் நேரமாக்கிக் கொண்டுள்ளதால், முடிக்கும் நேரம் தெரியாமல், புத்தகங்கள் பாக்கியாகவே உள்ளன!

கடனில் வாழும் பழக்கமுடையவன் அல்ல நான்; காரணம், தேவை குறைவே!

ஆனால், புத்தகக் கடன் பாக் கியோ ஏராளம்! புதிது புதிதாக வந்து சேர்ந்து விடுகின்றனவே என்ன செய்ய! புது வழி தேடுகிறேன் - 24 மணிநேரம் - இதில் தூங்கியும், உண்டும் ஆக வேண்டுமே - அவையும் நல வாழ்வின் இன்றியமையாமை அல்லவா! ---veramani

தமிழ் ஓவியா said...


பொருளல்ல...



மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும்.
(விடுதலை, 10.6.1970)

தமிழ் ஓவியா said...


ஆகஸ்ட் 8 ஆர்ப்பாட்டம்: அகிலமே வியக்கட்டும்! கலைஞர் கடிதம்

உடன்பிறப்பே,

16-7-2013 அன்று சென்னை - அண்ணா அறி வாலயத்தில் தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப்பின் (டெசோ) கூட்டம் என்னுடைய தலைமையில் நடைபெற்ற போது நிறைவேற் றப்பட்ட நான்கு தீர்மானங்களின் அடிப்படையில்; இலங்கை அரச மைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை முழு மையாக நிறைவேற்ற வலியுறுத்தியும்,

இலங்கையில் நடைபெறவுள்ள காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும்,

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண் டும் என்பதை எடுத்துக்காட்டியும் நிறைவேற்றப் பட்ட நான்கு தீர்மானங்களையும், தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழுச்சியை ஒன்று திரட்டவும், டெசோ இயக்கத்தின் சார்பில் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில், தமிழகம் முழுதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில், தமிழர் பெருந்திரள் ஆர்ப் பாட்டம் நடத்துவதென டெசோ இயக்கத்தின் சார்பில் முடிவெடுத்து அறிவித்ததற்கிணங்க; நாளையதினம் சென்னையில் என்னுடைய தலைமையிலும், மதுரையில் தமிழர் தலைவர் இளவல் கி. வீரமணி தலைமையிலும், திருச்சியில் கழகப் பொருளாளர் தம்பி மு.க.ஸ்டாலின் தலைமையிலும், திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையிலும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் நம்முடைய இயக்கங்களின் முன்னணியினர் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமான முறையில் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதற்காக நான் இது வரை மூன்று கடிதங்களை எழுதியிருக்கிறேன். இருந்தாலும் இந்தக் கடிதத்தில் எதற்காக இந்த ஆர்ப்பாட்டம் என்பதைப் பொதுமக்களுக்கு விளக்குவதற்காக, 16ஆம் தேதி நிறைவேற்றப் பட்ட நான்கு தீர்மானங்களின் சுருக்கத்தை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தீர்மானம் 1 :- இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்களும், இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே அவர்களும் கையெழுத்திட்ட உடன் பாட்டின்படி, மாகாணக் கவுன்சில்களுடன் அதி காரப் பகிர்வு செய்து கொள்ள, வழிவகை செய்யும் வகையில் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் 13ஆவது திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் இன் றைய இலங்கை அதிபர் ராஜபக்சே அரசு அதை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல், நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதில் தீவிர மாக இருக்கிறது. இந்தப் பிரச்சினை குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை உருக்குலைத்திட நடக்கும் முயற்சிகள் குறித்து அறிந் திருப்பதாகவும், இலங்கையில் தமிழ் மக்கள் மற்றும் இதர சமூகங்களைச் சேர்ந்த மக்கள் சமமாக வும் சுயமரியாதையுடனும் நடத்தப்படுவதை உறுதி செய்ய முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதுவரை எந்த ஒப்பந்தத்தையும் உறுதி மொழி யையும் காப்பாற்றாத இலங்கை அரசு, தற்போது சிவசங்கர மேனன் அவர்களிடம் இலங்கை அதிபர் தெரிவித்த உறுதிமொழியை எந்த அளவிற்குக் காப்பாற்றப் போகிறது என்பதுதான் கேள்விக் குறியாகும். 1987ஆம் ஆண்டில் கையொப்பமிடப் பட்ட ஒப்பந்தத்தில், தற்போதைய இலங்கை அரசு இந்தியாவின் அனுமதியின்றித் தன்னிச்சையாகத் திருத்தங்கள் மேற்கொள்ளவிருப்பதாக, இலங்கை அதிபர் இராஜபக்சேயின் சகோதரரும், இலங்கை அமைச்சருமான பசில் இராஜபக்சே தெரிவித் திருக்கிறார். மேலும், 13ஆவது சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொள்வதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற கருத்தினை இலங்கை அதிபர் ராஜபக்சேவும், அவரது சகோதரரும் - இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சருமான கோத்தபய ராஜபக்சேவும் வெளிப் படையாக தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இரண்டு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப் பட்ட ஒப்பந்தத்தைத் தன்னிச்சையாக மீறுவதற்கோ திருத்தம் செய்வதற்கோ எந்த ஒரு நாட்டுக்கும் அதிகாரம் கிடையாது. காரணம், மேற்படி ஒப்பந்தத் தில் இந்திய நாட்டின் நலனும் அடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், பசில் ராஜபக்சேயின் அறிவிப்பு உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடை முறைக்கு எதிராக அமைந்துள்ளது.

தமிழ் ஓவியா said...

13ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்பதும்; இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர் களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர் களுடைய கருத்தினைக் கேட்டுத் தீர்வு காண்பது தான், ஈழத் தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும் என்பதும்தான், டெசோ அமைப்பின் நிலைப் பாடாகும். இருப்பினும் தற்காலிகத் தீர்வாகவாவது, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பயன்பட வேண்டும் என்று டெசோ அமைப்பு கருதுகிறது.

இந்திய அரசு, ஒப்பந்தத்தில் கண்டுள்ளவாறு, எந்தவிதத் திருத்தங்களும் இல்லாமல் 1987 ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று டெசோ அமைப்பின் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2 :- இலங்கையில் காமன்வெல்த் மா நாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும், டெசோ அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தமிழகத் தலைவர் களும், பல்வேறு தமிழ் அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் வலியுறுத்திய பிறகும்; இலங் கையிலே அந்த மாநாடு நடைபெறுவது உறுதியாகி விட்ட நிலையில் - காமன்வெல்த் மாநாடு இலங் கையில் நடைபெற்றால், அதன் காரணமாகவே அடுத்த இரண்டாண்டு களுக்கு காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பாரென்றும்; அதனால் 54 நாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது இக்கட்டாக ஆகிவிடக் கூடுமென் றும்; வலிமையான கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருவதால், இலங் கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக் கொண்டு, அதிலே கலந்து கொள்ளுமேயானால், அங்கே நடைபெற்ற இனப்படு கொலைகளை இந்தியா ஏற்றுக்கொள்வது போலாகி விடும். அம்மாநாட்டில் இந்தியா பங்கேற் கக் கூடாது எனும் அழுத்தமான வேண்டுகோளை தொடர்ந்து நாம் டெசோ சார்பில் வலியுறுத்தி வருகிறோம். இலங் கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்ய வேண்டு மென இக்கூட்டம் இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3:- இந்திய மத்திய அரசுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும் எத்தனையோ வேண்டுகோள் விடுத்த பிறகும், இலங்கைக் கடற் படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப் படுவதும், தாக்கப்படுவதும் நின்றபாடில்லை. இத்தகைய கொடுமையான நிகழ்வுகள் கடந்த பல ஆண்டு காலமாகவே தொடர் கதையாக நீடித்துக் கொண்டே வருகின்றன. ஒவ்வொரு முறை மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்படும் போதெல்லாம், தமிழ கத்திலே உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு வேண்டுகோள் அறிக்கைகளை வெளியிடுவதும், டெசோ அமைப்பின் சார்பில் கண்டனத் தீர் மானங்கள் நிறைவேற்றி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதும், தமிழக அரசின் சார்பில் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும் எந்த விளைவையும் இலங்கை அரசிடம் ஏற்படுத்திய தாகத் தெரியவில்லை. எனவே மத்திய அரசு இனியாவது உறுதியானதொரு நடவடிக் கையை, தமிழகத்தின் மீனவர்கள் பிரச்சினை ஒட்டு மொத்த மாகத் தீருகின்ற வகையில் உடனடியாக எடுக்க வேண்டுமென்று இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தமிழ் ஓவியா said...

தீர்மானம் 4 :- இலங்கையில் பன்னெடுங் கால மாகத் தமிழர் வாழும் பகுதிகளில் எல்லாம் சிங்கள வர்களைக் குடியேற்றும் கொடுமை தொடர்வதைப் பற்றியும், தமிழர் பகுதிகளில் உள்ள ஊர்ப் பெயர் களை தமிழிலிருந்து சிங்களத்திற்கு மாற்றுவதைப் பற்றியும், தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து எழுதிவருவதை நிரூபித்திடும் வண்ணம், வடக்கு மாகாணத்தில் உள்ள வவுனியா மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை மாவட்டத்திற்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த இணைப்பைத் துண்டித்திடும் வகையிலும், சிங்களப் பகுதியான அனுராதபுரா மாவட்டத்தோடு இணைந்திருக்கும் வகையிலும், வெளிஓயா என்ற சிங்களப் பெயரிலேயே ஒரு புதிய மாவட்டத்தை சிங்கள அரசு உருவாக்கி, அங்கே சிங்களவர்களை மட்டுமே குடியேற்றி வருகின்ற நிகழ்வுகளும் தற்போது நடைபெறு வதை, டெசோ இயக்கம் சுட்டிக்காட்டி, அய்.நா. மனித உரிமைகள் ஆணை யத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி, பொதுத் தேர்தல்கள் நடைபெறும் காலத்தில் இதுபோன்ற மாவட்டங்களை உருவாக்குவதோ, எல்லைகளை மாற்றுவதோ, புதிய குடியேற்றத்தை ஊக்கு விப்பதோ கூடாது என்று திட்டவட்டமாகக் கூறப்பட் டிருந்த போதிலும், அதை மீறுகின்ற வகையில் சிங்கள அரசு செயல்படுவதையும் இந்திய அரசு கவனத்தில் கொண்டு, இதனை உலக நாடுகள், மற்றும் அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, உடனடியாகத் தடுத்து நிறுத்திட ஆவன செய்திட வேண்டுமென்று, இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. உடன்பிறப்பே, இந்த நான்கு தீர்மானங்களை வலியுறுத்தித்தான் நாளைய தினம் நாம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக டெசோ இயக்கத்தின் சார்பில் நாம் நடத்துகின்ற முதல் ஆர்ப்பாட்டம் இதுவல்ல. டெசோ சார்பில் ஈழத் தமிழர்களுக்காக 29-4-1985 அன்று சென்னையில் நடைபெற்ற மறியலில் 4002 பேரும், 30ஆம் தேதி திருச்சியில் 3000 பேரும், மே 3ஆம் தேதி தர்மபுரியில் 1000 பேரும், 6ஆம் தேதி சேலத்தில் 3000 பேரும், 7ஆம் தேதி தஞ்சையில் 6000 பேரும், 8ஆம் தேதி வட ஆர்க்காட்டில் 2500 பேரும், 13ஆம்தேதி தென் ஆர்க்காட்டில் 3000 பேரும், 15ஆம் தேதி பெரியார் மாவட்டத்தில் 1500 பேரும், 16ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3000 பேரும், 17ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் 3500 பேரும், 18ஆம் தேதி ராமநாதபுரம், பசும்பொன், காமராஜர் மாவட்டங்களில் 3000 பேரும், 20ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் 5000 பேரும், 22ஆம் தேதி நெல்லை, குமரி, புதுவையில் 5500 பேரும் ஈடுபட்டு கைது ஆயினர்.

இலங்கைத் தமிழர்களின் நலன் காக்க 16-5-1985 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மறியல் போராட் டத்தில் கலந்து கொள்ளச் சென்ற நானும் மற்றும் ஆயிரம் பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டோம்.

தமிழ் ஓவியா said...


இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து டெசோ அமைப்பின் சார்பில் 3-10-1985 அன்று கோவையிலும், 4-10-1985 அன்று திண்டுக்கல் லிலும், 5-10-1985 அன்று தூத்துக்குடியிலும், 6-10-1985 அன்று திருச்சியிலும், 7-10-1985 அன்று சேலத்திலும், 13-10-1985 அன்று வேலூரிலும் மிகப் பெரிய பேரணிகள் நடத்தப்பட்டன. 4-5-1986 அன்று மதுரையில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாடே நடைபெற்றது. கடந்த ஆண்டு 12-8-2012 அன்று சென்னையில் டெசோ இயக்கத்தின் சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை யினர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதைக் கண்டித்து 18-2-2013 அன்று ராமேஸ்வரத்திலும், 19-2-2013 அன்று நாகப்பட்டினத்திலும், டெசோ இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவ்வாறே அந்த அறவழி ஆர்ப்பாட்டங்களும் தமிழ் மக்களின் பேராதர வோடு நடைபெற்றுள்ளன. மனித உரிமைகளை மீறிய போர்க் குற்ற வாளியான இலங்கை அதிபர் ராஜ பக்சேவைக் கண்டித்திடும் வகையில் மார்ச் 5ஆம் தேதியன்று டெசோ இயக்கத்தின் சார்பில் சென் னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகை யிடும் போராட்டம் நடைபெற்றது. மேலும் மார்ச் 7ஆம் தேதியன்று டெசோ இயக்கத்தின் சார்பில் டெல்லியில் நடைபெற்ற சிறப்பு மாநாடு மற்றும் கருத்தரங்கில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு மனிதநேய அமைப் பினரும் கலந்து கொண்டனர். இலங்கை அரசின் இனப் படுகொலையைக் கண்டித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 12-3-2013 அன்று தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடத்தப் பட்டது. 15-4-2013 அன்று நடைபெற்ற டெசோ கூட்டத்தில், கச்சத் தீவினை இலங்கைக்கு ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பதுதான் உண்மை என்றும், எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதைப் பிரகடனப்படுத்தவும், டெசோ அமைப் பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதென முடிவெடுக் கப்பட்டு அவ்வாறே உச்ச நீதிமன்றத்தில் என் பெயரிலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிடப்பட்டிருக் கிறது.

இந்தப் போராட்டங்களின் தொடர்ச்சியாகத் தான் நாளை ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று தமிழகம் முழு வதிலும் டெசோ இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். இதற்கிடையே செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கையில் வடக்கு, வட மேற்கு, மத்திய மாகாணக் கவுன்சில்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் 2-8-2013ஆம் தேதியோடு முடிவடைந்து விட்டது. அதனையொட்டி பேசிய இலங்கை பிரதமர் டி.எம். ஜெயரத்னே, மாகாணக் கவுன்சில் களுக்கான காவல் துறை அதிகாரம் மற்றும் நிலம் சம்பந்தமான உரிமைகள் பறிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இதிலிருந்து இவருடைய பேச் சின் மூலம் 13ஆவது சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய்து, வடக்கு மாகாணத்தில் உரிமைகள் ஏதும் தராத பொம்மை அரசு ஒன்றை உருவாக்க எண்ணி டும் சூழ்ச்சிதான் தெரிகிறது. இதனை எதிர்க்கும் வகையிலேதான் நாளை நம்முடைய ஆர்ப் பாட்டம் அமையவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத் தினை வெற்றி கரமாக ஆக்கித் தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது. சென்னையிலே நடைபெறும் ஆர்ப் பாட்டத்திற்கு நானே தலைமை தாங்குகிறேன். அங்கே ஆர்ப்பரித்து வரும் அடலேறுகளாம் உடன்பிறப்பு களைச் சந்திக்கிறேன். நாளை ஆகஸ்ட் 8 ஆர்ப் பாட்டம்; தமிழர் பெருந்திரள் கண்டு தரணியே வியக்கட்டும்!

அன்புள்ள,
மு.க.

தமிழ் ஓவியா said...


அறிவோடு சிந்திக்க...



புத்தர் அந்தக் காலத்திலேயே துணிந்து சொன்னார்; கடவுள் என்று ஒன்று இல்லை; அது இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்று சொன்னார். கடவுள் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் புத்தரால் அறிவோடு சிந்திக்க முடிந்தது.
(விடுதலை, 23.1.1968)

தமிழ் ஓவியா said...


ஈழ விடுதலை மாநாட்டை மதுரையில் நடத்தியது திராவிடர் கழகம்


நாம் தொடுத்துள்ள போராட்டம் ஓயாது!

மதுரையில் தமிழர் தலைவர் முழக்கம்

மதுரை, ஆக.8- நமது அமைப்பு வலிமை மிக்கது - ஈழத் தமிழர்களுக்காக நாம் தொடுத் துள்ள போராட்டம் வெற்றி கிடைக்கும் வரை ஓயாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

மதுரையில் காட்ரோடு தலைமைத் தபால் அலுவலகம் எதிரில் இன்று (8.8.2013) காலை 10 மணியளவில் டெசோவின் ஆர்ப்பாட்டம் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இந்த தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்து தமிழர் தலைவர் உரையாற் றுகையில் குறிப்பிட்டதாவது:

மதுரைக்கும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. டெசோ என்னும் அமைப்பு முதன் முதலில் மதுரையில் தான் தொடங்கப்பட்டது. திராவிடர் கழகம் சார்பாக ஈழ விடுதலை மாநாடு மதுரையில் நடைபெற்றது. குமரிநாடன் என்னும் ஈழத் தோழரே மாநாட்டில் கொடியை ஏற்றினார். இதில் லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொண்ட அந்த மாநாடு மதுரையில் நடைபெற்றதுண்டு.

மீண்டும் டெசோ புதுப்பிக்கப்பட்டு அதன் சார்பாக ஆர்ப்பாட்டம் இன்று (8.8.2013) நடை பெறுகிறது. காமன்வெல்த் மாநாடு இலங்கையிலே நடைபெற உள்ளது. அடுத்து இரு ஆண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைவராக ராஜபக்சே இருக்கப் போகிறார். கனடா போன்ற நாடுகள் அங்கு நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தன. அங்கு காமன்வெல்த் மாநாடு நடந்தால் இந்திய அரசு சார்பாக பிரதமரோ, மற்ற யாருமோ கலந்து கொள்ள கூடாது.

டெசோ மீண்டும் புதுப்பிக்கப்பட்டபோது சிலர் கேலி செய்தார்கள். இதனால் என்ன பலன் என கேட்டார்கள். ஆனால் டெசோவின் சார்பாக ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்காக, தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெறுகின்றன.

ஈழத் தமிழர்கள் மத்தியில் வாக்கெடுப்பு தேவை! உலகளவில் உள்ள ஈழத் தமிழர்கள் எல்லாம் வாக்களித்து எத்தகைய அரசியல் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதுதான் இறுதி முடிவு . ஆனால், அதற்கு இடைப்பட்ட நிலையில் கொடுங்கோலன் இராஜபக்சேவும், அவரது சகோதரர்களும் செய்கின்ற ஈழத் தமிழர் ஒழிப்பு நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும். சிங்களவர்களை ஈழப் பகுதியில் குடியேற்றுவதைத் தடுக்க வேண்டும். அன்றைய மத்திய அரசால் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் போடப்பட்டது. திராவிடர் கழகம் அப்பொழுதே அதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி அதனை எதிர்த் தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட 13ஆவது திருத் தத்தை இன்றும்கூட செயல்படுத்த மறுக்கிறது இலங்கை அரசாங் கம்! அதற்கு துணை போகிறது இந்திய அரசாங்கம்.

தமிழ் ஓவியா said...


அட, மூடத்தனமே!


வேப்பனஹள்ளி, ஆக.9- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில மாதங்களாக சிக்குன் குனியா காய்ச்சலால் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏராளமானோர் வீடுகளிலேயே முடங்கினர்.

நோயிலிருந்து மக்கள் விடுபடவும், மழை பெய்து வறட்சி நீங்கவும் குருபரப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஊரை காலி செய்து விட்டு காட்டில் குடியேறி சிறப்பு வழிபாடு நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை தங்களது வீடுகளைப் பூட்டி விட்டு, வனப்பகுதிக்குச் சென்றனர். அப்போது, சாமி சிலைகளையும் அலங்கரித்து தங்களுடன் எடுத்துச் சென்றனர். காட்டுக்குள் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். தங்களது வளர்ப்புப் பிராணிகளான ஆடு, கோழி, நாய் ஆகியவற்றை தங்களுடன் பிடித்துச் சென்றனர். இது தொடர்பாக ஊர்ப் பெரியவர்கள் கூறும் போது, மக்களுக்கு பிணி மற்றும் வறட்சி ஏற்பட்டால் இவ்வாறு கிராம மக்கள் அனைவரும் கிராமத்தை விட்டு காலி செய்து வனப்பகுதிக்கு சென்று மாரியம்மனுக்கு பொங்க லிட்டு வழிபடு வதை எங்களது மூதாதையர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். மூதாதையரை போன்று நாங்களும் இந்த வழிபாட்டினை மேற்கொண் டுள்ளோம் என்றனர். இதையடுத்து, மாலை அனை வரும் சாமி சிலைகளுடன் ஊர் திரும்பினராம்.

ஒரு சந்தேகம். இவ்வூர் மக்கள் நோய்க்கு மருந்தே சாப்பிட மாட்டார்களா?

தமிழ் ஓவியா said...


இந்நாள்... இந்நாள்....
எழுத்துரு அளவு Larger Font

தந்தை பெரியார் அவர்களின் தனிச் செயலாளராகப் பணியாற்றி - தனி வாழ்வைத் துறந்து பொதுப் பணிக்கே தம்மை அர்ப்பணித்துக் கொண்ட புலவர் கோ. இமயவரம்பன் அவர்களின் நினைவு நாள் இந்நாள்! (1994).

தமிழ் ஓவியா said...


புறக்கணிக்கச் சொல்லுவது பொருத்தமான கருத்தே!



டெசோ சார்பில் நேற்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைமை இடங்களிலும் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் வெகு எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோடிக்கணக்கில் இருக்கும் என்பதில் அய்யமில்லை.

நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து நேரடியாக, கலந்து கொள்ள முடியாத தமிழர்கள் அதே நேரத்தில் இனவுணர்வோடு - சிந்தனையை எல்லாம் தமிழ் நாட்டை நோக்கிச் செலுத்திக் கொண்டிருப்பவர்களும் கோடானு கோடி பேர்கள்.

தமிழ்நாடு அரசின் காதுகளும், மத்திய அரசின் காதுகளும், ஏன் ராஜபக்சேயின் ஆட்களும் (சோ ராமசாமி, குருமூர்த்தி வகையறாக்கள்) நேற்று தமிழ்நாடு தழுவிய அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் - அதில் வெளிப்படுத்தப்பட்ட உணர்வு அலைகள் - தலைவர்கள் ஆற்றிய உரையின் வீச்சுகள் - முழக்கங்கள் - மக்கள் மத்தியிலே அவற்றின் எதிரொலி - இவற்றை அறிந்த பிறகாவது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளாமல், ஈழத் தமிழர் பிரச்சினையில் மக்கள் மத்தியில் வேர்ப்பிடித்து நிற்கும் உணர்வின் கூர்மையான ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நேற்று தொலைக்காட்சிகளில் இந்த ஆர்ப் பாட்டத்தைப் பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. அதில் எதிர் தரப்பில் வைக்கப்பட்ட ஒரு கருத்து. இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால்தான் ஈழத் தமிழர்கள்பற்றி எடுத்து வைக்கப்படக் கூடிய வாய்ப்புக் கிட்டும்; போகாவிட்டால் அந்த வாய்ப்புப் பறி போகும் அல்லவா என்று காங்கிரஸ் தரப்பில் எடுத்துக் கூறப்பட்டது.

இதில் முதலாவது காமன்வெல்த் மாநாட்டில் ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி இந்தியா எடுத்து வைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படி நம்புவதற்கு - இதற்குமுன் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா நடந்து கொண்டு வந்திருக்கும் போக்கும் அணுகு முறைகளும் நம்புவதற்கான எண்ணத்தை ஏற்படுத்தவில்லையே!

அய்ரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 17 நாடுகள் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தன. இலங்கையின் போர்க் குற்றங்களை முன்னிறுத்தி இலங்கை அரசின்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்; போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம் (26.5.2009) அப்பொழுது இந்தியாவின் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங்கரே அவையில் என்ன பேசினார்?

இந்தக் கூட்டமே அவசியமற்றது - உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பைப் போரில் தோற்கடித்ததற்காக இலங்கை அரசைப் பாராட்ட வேண்டுமே தவிர, தண்டிக்க, கண்டிக்க முயற்சி எடுக்கக் கூடாது என்று பேசிடவில்லையா?

பேசியதோடு மட்டுமல்லாமல், அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது, இலங்கைக்கு ஆதரவாகப் பாராட்டுத் தீர்மானம் நிறைவேறிட இந்தியா கை கொடுக்கவில்லையா?

இந்த நிலையில் உள்ள இந்தியா, இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிராக அங்கு இலங்கை அரசின் செயல்பாடுகளைக் கண்டிக்கவுமான, கருத்துக் களைச் சொல்லும் என்று எதிர்பார்க்க முடியுமா?

இந்தியா என்ற 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு பெரிய நாடு காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கிறது என்றால், அதனால் ஏற்படக் கூடிய தாக்கம் இலங்கை அரசுக்கு நெருக்கடி யையும், பேரழுத்தத்தையும் கொடுக்குமே!

நேற்றைய டெசோ ஆர்ப்பாட்டத்தில் இலங்கை காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா புறக் கணிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கை மிகச் சரியானதே!

தமிழ் ஓவியா said...


தமிழருக்குக் கேடு


இந்நாட்டில் அரசியல் கிளர்ச்சி என்னும் பேரால் நூறு ஆண்டுகளாக நடந்து வந்திருப்பதன் உள் தத்துவமே பார்ப்பனனின் உத்தியோகம், பதவி, ஆதிக்கம் இவற்றுக்காகவே தவிர, அரசியல் நீதியையோ, மனிதத் தர்மத்தையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. பார்ப்பனர் ஆதிக்கம் கிடைத்த போதெல்லாம் தமிழர்க்குக் கேடாகவே நடந்துள்ளனர்.

- (விடுதலை, 5.4.1965)

தமிழ் ஓவியா said...


பெரியார் தொலைக்காட்சி வேண்டும்


ஆசிரியருக்குக் கடிதம்

பெரியார் தொலைக்காட்சி வேண்டும்

ஆன்மீகவாதிகள் தனித்தனி தொலைக்காட்சி மூலம் ஆன்மீக பொய்களை மக்களுக்கு பரப்பி வருகின்றனர். ஆனால் அய்யாவின் சிந்தனைகள் பற்றி பெரியார் என்ற பெயரில் தனி தொலைக்காட்சி ஒளிபரப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். ஆன்மீக சிந்தனைகள் அதிகமாக இருப்பதால் ஒரு சமயம் சிறந்த நாடு அழிந்து போக சந்தர்ப்பம் அதிகம் இருக்கிறது.

இதற்கு எதிர் மறையாக பல கூட்டம் நடைபெற்ற பொழுதும், பிரச்சாரம் இருந்தாலும் இது மக்கள் இடம் போய் சேருவதே இல்லை. எல்லோரும் விடுதலை, முரசொலி, உண்மை, பம்பாய் தமிழ் இலக்கிய பத்திரிகைகளை படிப்பது இல்லை.

இலவச பதிப்பகம், குறைந்த விலை புத்தகம் போன்றவை மக்களிடம் போய் சேருவது இல்லை. ஆனால் தொலைக்காட்சி மட்டுமே மக்கள் மனதில் பதியும் நாடகம், அய்யாவின் சொற்பொழிவுகள், காவியம், கதை, விளக்கம் போன்றவை சினிமா கலக் காமல் தனி ஒளிபரப்பு அவசியம் இதுபற்றி தாங்கள் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் மிக விரைவில் தனி தொலைக்காட்சி ஒளிபரப்பு மக்களுக்கு தேவை. மன் னிக்கவும். நாங்கள் பம்பாயில் இருப்ப தாலும் தமிழ் அதிகம் எழுதுவதற்கு வாய்ப்பு இல்லாததால் தமிழ் எழுத்து களில் தவறுகள் இருக்க நேர்கிறது மன்னிக்கவும்.

- வி.பி. மோகன், கல்யாண் மும்பை

தமிழ் ஓவியா said...


இலங்கை தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேச்சு


திருச்சி, ஆக.9- ஈழத் தமிழர்களுக்காக டெசோ தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று திருச்சியில் நடந்த டெசோ ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இலங்கையில் அந்நாட்டு அரசமைப்பு சட்டத் தின் 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடைபெற உள்ள காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி சந்திப்பு காதி கிராப்ட் அருகில்டெசோ அமைப் பின் சார்பில் நேற்று (8.8.2013) ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வ ராஜ் முன்னிலை வகித்தனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து பேசியதாவது:

சென்னையில் கடந்த 16 ஆம் தேதி டெசோ கலந்தாய்வு கூட்டம் திமுக தலைவர் கலைஞர் தலை மையில் நடந்தது. அதில் இலங்கையில் அந்நாட்டு அரசமைப்பு சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.

தமிழர்கள் பகுதியில் சிங்களர்கள் குடியேறுவதை தடுக்க வேண்டும் என்ற 4 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை மக்களிடம் எடுத்துச்செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழக மக்கள் மற்றும் மத்திய அரசு கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனே இடையே இலங்கை யில் மாகாண கவுன்சில் பகுதியில் அதிகாரம் வழங்குவது தொடர்பாக 13 ஆவது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த ஒப்பந் தத்தை நீர்த்துப்போகும் வகையில் இலங்கை அதிபர் ராஜபக்சே செயல்பட்டு வருகிறார்.

இதை நிறை வேற்ற இலங்கை அரசுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால் 13 ஆவது சட்ட திருத்தத்தில் உடன்பாடு இல்லை, 2 நாட்டின் இடையில் தன்னிச்சை திருத்தம் செய்ய அதிகாரம் இல்லை என அந்நாட்டு ராணுவ தளபதி கோத்தபய ராஜபக்சே கூறிவருகிறார். இதில் இரு நாட்டு நலன் அடங்கியுள்ளது.

ஈழத்தமிழர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே டெசோ அமைப்பின் நிலைப்பாடாகும். விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்து குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் தற்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடித்து வருகிறார்.

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் திமுக மக்களுக்காக பாடுபடும். இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவோர் தற்போது வயிற்றெரிச்சலோடு உள்ளனர். இலங்கை தமிழர்களுக்காக டெசோ தொடர்ந்து குரல் கொடுக்கும். டெசோ சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியோடு நடந்துள் ளது. சிங்கள அரசின் கொடிய ஆட்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

- இவ்வாறு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்

தமிழ் ஓவியா said...


சிந்தனைப்பூக்கள்


நமது புராணக்காரர்களுக்கு பார தத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப்பனுக்குப் பிறந்தவர்கள் அல்லர் என்று சொன்னால் யாரும் கோ பித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயி ருக்கின்றது என்றால் உடனே கோபித் துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.

@@@@@@@@@@@@@@@@@@

மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதா யுகத்து கெய்டைப் பார்த்து, கலியு கத்தில் பிரயாணம் செய்ய வேண்டு மென்கின்றோம்.

@@@@@@@@@@@@@@@@@@

பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.

@@@@@@@@@@@@@@@@@@

மேல்நாட்டானுக்கு பொருளாதாரத் துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

மதமும் லெனினும்

மதம் மக்களுக்கு அபின் என்று மார்க்ஸ் கூறினார். இந்தக் கூற்று மதம் பற்றிய மார்க்சீய சித்தாந்தம் முழுவதற்கு உறைகல்யாகும். தற்கால மதங்கள், மத ஸ்தாபனங்கள், சகலவிதமான மத சங்கங்கள் ஆகிய அனைத்தும் தொழிலாளர் வர்க்கத்தை மூடத்தனத்தில் ஆழ்த்தி, தங்கள் சுரண்டலை ஆதரிக்கும் நோக்கம் படைத்த பூர்ஷ்வா பிற்போக்குப் பிண்டங்களின் கைக் கருவிகள் தான் என்று மார்க்சீயம் கருதி வந்துள்ளது.

உழைக்கின்ற மக்களை சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாக்கி முதலாளித்துவத்தின் கண்மூடித்தனமான சக்திகளுக்கு முன்னே அவர்கள் ஒன்றுமே செய்ய முடியாத வகையற்ற நிலையிலுள்ளவர்கள் போன்று நிற்கும்படி செய்யும் அளவுவரைக்கும், இன்றைய மதம் ஆழமாக வேர்விட்டிருக்கிறது.

முதலாளித்துவத்தின் இந்த கண் மூடித்தனமான சக்திகள் சாதாரண உழைப்பாளி மக்களுக்கு யுத்தம், பூகம்பம் போன்ற எப்பொழுதாவது நடக்கின்ற சம்பவங்களால் ஏற்படும் பயங்கரமான துன்பமும் வேதனையையும் விட ஆயிரம் மடங்கு அதிகமான துன்பத்தையும், வேதனையையும் நாள்தோறும் இடைவிடாமல் விளைவித்து வருகின்றன.

- மதத்தைப்பற்றி லெனின்

தமிழ் ஓவியா said...


மதத்துக்கு இசையும் விரோதமாம்!


மதம் ஆட்சி செய்யும் ஈரான் நாட்டில் - மேற்கத்திய இசைகளை கேட்பது பாவம் என்றும் மதத்திற்கு விரோதம் என்றும் அறிவிக்கப்பட்டு - முல்லாக்கள் அரசு சார்பில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் ஈரானிய இளைஞர்கள் பலர் மேற்கத்திய இசையில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

இந்த இசையைப் பதிவு செய்து விற்கும் ஒலிப்பதிவு நாடாக்கள் விற்பனை நிலையத்தின் முன்பு ஏராளமான இளைஞர்கள் இசை யைக் கேட்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்போது கடை உரிமை யாளர் முல்லாக்கள், இந்த காட்சியைப் பார்க்கட்டும் என்று அறை கூவல் விடுத் தார். நான்கு மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட கடையில் ஒரு நாளைக்கு 100 இசைப்பதிவு நாடாக்கள் மட்டுமே விற்பனையானது; இப்போது நாளொன்றுக்கு 400 இசைப் பதிவு நாடாக்கள் விற்பனை ஆகிறதாம்.

தமிழ் ஓவியா said...

சரக்கு கேடு; டப்பி அழகு!

பிறநாட்டினர் இயற்கை முறையில் தமது முகப்பொலிவை உண்டாக்கி, உருவத்திலும் சமூக ஒற்றுமை கொண்டிருக்கின்றனர். நம்நாட்டினர் சரக்கு கேடாயிருந் தாலும் அதனுடைய டப்பியை அழகுபடுத்துவது போல், வற்றிய முகத்தில் நாமம், விபூதி முதலிய வைகளை எழுதிக் கொண்டு சமூக பேதத்தை வளர்த்துக் கொண்டு போகின்றனர்.

- புரட்சிக்கவிஞர்

தமிழ் ஓவியா said...

கடவுளும் மனிதனும்!

கடவுளுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு! உண்டு! உண்டு! உதாரணம்:- மனிதன் சுருட்டுப் பிடித்து விடும் புகை கடவுளிருக்கும் வானத்தை நோக்கிப் போகிறதல்லவா?

- புரட்சிக்கவிஞர்

தமிழ் ஓவியா said...


மனு தர்ம முரண்பாடு


சூத்திரன் தன் குலத்தில் மட்டும், வைசியன் தன் குலத்திலும் சூத்திர குலத்திலும், சத்திரியர்கள் குலத்திலும், சத்திரியர் தன் குலத்திலும் வைசிய, சூத்திரக் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்து கொள்ளலாம்.

(மனுதர்மம், அத்தியாயம் 3, சுலோகம் 13)

படுக்கையில் சூத்திர கன்னிகையோடு சமமாய் படுத்திருக்கிற பிராமணன் நரகத்தை அடைகிறான்; பிள்ளையை உண்டுபண்ணுகிறவன் பிராமணத் தன்மை யினின்றும் நீங்கி விடுகிறான்.

(மனு, அத்தி.3, சு.17)

13ஆவது சுலோகத்தில் பிராமணன் தன் குலத்திலும் மற்ற மூன்று குலத்திலும் விவாகம் செய்யலாம் என்று சொல்லி விட்டு, 17ஆவது சுலோகத்தில் சூத்திர பெண்ணிடத்தில் சமமாய் படுக்கிற பிராமணன் நரகத்தை அடைவான் என்றும், பிள்ளையை உண்டுபண்ணினால் பிராமணத் தன்மையினின்றும் விடுபடுவான் என்றும் கூறுவது எவ்வளவு பெரிய முரண்பாடு.

இதுதான் பெரிய தரும நூலாம்; இதைத்தான் பிரம்மாவானவர் உபதேசித்தாராம்.

பார்ப்பானுடைய புத்திசாலித்தனம் 4 சுலோகங்கள் வரிசைகளுக்கிடையே முரண்பாடாக தொனிக்கிறது

தமிழ் ஓவியா said...

லாலாலஜபதி கூறுகிறார்!

சென்னை மாகாணத்தில் உள்ள கோவில்கள் அதன் பூஜை முதலிய நடைமுறைகள் நம்மை சமூக வீழ்ச்சி என்னும் நரகத்திற்குக் கூட்டிச் சென்று, அழுத்திக் கொண்டிருக் கிறது என்பது எனக்கு நன்றாய்ப் புலப்பட்டு விட்டது. நமது நாட்டுக்கு ஒரு சமுதாய விடுதலை வேண்டுமானால் எதற்கும் அஞ்சாத ஒரு சமுதாயச் சீர்திருத்த வீரன் தோன்றியாக வேண்டு மென்று எனக்கு ஏற்பட்டு விட்டது.

-லாலாலஜபதிராய்

தமிழ் ஓவியா said...

இருமுடி மகிமை!

அப்பா (சலூன்காரரிடம்): இந்தாப்பா! என் மகனுக்கு மொட் டையடி! கவனமா இரண்டு முடியை மட்டும் விட்டுடு! மறந்துடாதே.
சலூன்காரர்: அது என்னங்க? இரண்டு முடியை மட்டும் விட்டுடச் சொல்றீங்க?

அப்பா: பையன் இருமுடியோட அய் யப்பன் கோயிலுக்கு போறதா பிரார்த்தனை செஞ்சுக் கிட்டிருக் கான்பா?

- பெரியார் வளவன், திருத்தணி.

தமிழ் ஓவியா said...

ஒரு வழக்கு

வழக்கறிஞர்: யுவர் ஆனர்; எனது கட்சிக்காரர் மகாமக விழா வில் நகைக்காக ஆசைப்பட்டு ஒரு குழந்தையைக் கொன்றது உண் மைதான் என்றாலும் அதே நாளில் மகாமகக் குளத்தில் குளித்து அந்தப் பாவத்தை அவர் போக்கிக் கொண்ட காரணத்தால் கோர்ட்டு அவரை நிரபராதியாகக் கருதி விடுதலை செய்ய உத்தரவிடுமாறு வேண்டு கிறேன்.

- பொதட்டூர் புவியரசன், திருத்தணி

தமிழ் ஓவியா said...


காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது: நாடாளுமன்றம் எதிரே திமுக ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் டெசோ அமைப்பு சார்பில் நேற்று (8.8.2013) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக டில்லியில் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் தலைமையில் நாடாளுமன்ற பிரதான வாயிலில் உள்ள காந்தியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

புதுடில்லி, ஆக. 9- இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இந்தியா புறக் கணிக்கவேண்டும். தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நாடாளுமன்ற பிரதான வாயில் எதிரே திமுக உறுப்பினர்கள் நேற்று (8.8.2013) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் ஈழம் ஆதரவாளர்கள் அமைப் பின் (டெசோ) கூட்டம் கடந்த 16.7.2013 அன்று சென்னை அண்ணா அறிவால யத்தில் டெசோ அமைப்பின் தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங்கள் அடிப்படையில்,

இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நிறை வேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்பதை வற்புறுத்தியும்,

தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்கவேண்டும் என் பதை எடுத்துக்காட்டியும்,

நிறைவேற்றப்பட்ட நான்கு தீர்மானங் களையும், தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும், இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், சிங்கள ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழுச் சியை ஒன்று திரட்டவும், டெசோ இயக்கத்தின் சார்பில் நேற்று (8.8.2013) காலை தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட் டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

அதையடுத்து, நாடாளுமன்றம் தொடங் கும் முன்பாக பிரதான வாயில் எதிரே உள்ள காந்தி சிலை முன் திமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் கனி மொழி கூறியதாவது: இலங்கைப் போரின் போது அப்பாவி மக்களைக் கொன்று குவித்துச் சொல்ல முடியாத அளவுக்கு மனித உரிமை மீறல் களில் இலங்கை அரசு ஈடுபட்டது. அதன் மீதான பன்னாட்டு விசாரணை கோரி உலக நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், இலங்கையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடத்தப் பட்டால், அது அந்நாட்டு அரசுக்கு அளிக்கும் அங்கீகாரம் போல ஆகும். எனவே, இம்மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. தமிழக மீனவர்களைக் குறி வைத்து இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அவ்வப்போது மீனவர்களை நடுக்கடலில் சட்டவிரோதமாக சிறைப்பிடித்து அந் நாட்டு சிறைகளில் இலங்கைக் கடற்படை அடைத்து வைக்கிறது.

அதனால் தமிழக மீனவர்களின் வாழ் வாதாரம், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளது. இதற்கு நிரந்தரத் தீர்வாக கச்சத் தீவை மீட்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் உரிமை களைப் பாதுகாக்கும் வகையில் 1987 இல் இந்தியாவும் இலங்கையும் மேற்கொண்ட ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை செயல்படுத்தவேண்டும் என்று திமுக கோருகிறது என்றார் கனிமொழி.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சென்ற திமுக உறுப்பினர்கள் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியா பங் கேற்கக் கூடாது என்று குரல் கொடுத்தனர்.

அக்கட்சியின் ஏ.கே.எஸ். விஜயன் தலை மையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கள் மக்களவையின் மய்யப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். பின்னர் மக்கள வைத் தலைவர் மீரா குமார் கேட்டுக் கொண்டதையடுத்து, அவர்கள் இருக் கைக்குத் திரும்பினர்.