Search This Blog

31.8.13

ஆண்டவனார் தூங்குகின்றார்!அயர்ந்த நித்திரை!எப்பொழுது எழுந்திருக்கப் போகிறார்?

புதுமை இலக்கியப் பூங்கா - ஆண்டவனார் தூங்குகின்றார்!


திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவர் கே.ஏ.மதியழகன். தமிழக அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றியவர் தென்னகம் என்ற வார இதழின் ஆசிரியராக இருந்தவர். கருத்து வளம் செறிந்த கட்டுரைகள் பல வரைந்த திராவிட இயக்க எழுத்தாளர். அவரது படைப்புகளில் ஒன்று உண்மை வாசகர்களுக்காக...

நானிலம் ஆண்டவனாரின் நாடக மேடை. மனித குலத்தார் அவர் ஆட்டுவிக்கும் கருவிகள். தேவைகளையும், தெவிட்டாத ஆசைகளையும், இச்சைகளையும், இன்ப எண்ணங்களையும், நம்பிக்கையையும், நடுக்கத்தையும், காதலையும், கசப்பையும் அவர்கள் வாழ்விலே நிரப்புகிறார். ஆனந்த ஊற்றுக்களைத் தொடுகிறார். வீணையின் நாதத்தை மீட்டுகிறார். விஷ ஜந்துக்களின் கொடுக்குகளால் கொட்டுகிறார். பொறிகளை அமைக்கிறார். பள்ளங்களை வெட்டுகிறார்.
இந்தக் கூத்து ஒரு தொடர் நாடகம்.
அவரது கைப் பாவைகளாகிய இவர்கள் போராடுவதையும் தோல்வியுறுவதையும் கவனிக்கிறார். ஒருவனை ஒருவன் ஏமாற்றுவதையும் தன்னையே ஏமாளியாக்குவதையும் கவனிக்கிறார். எல்லாக் குற்றங்களையும் புரியத் தூண்டுகிறார். பிறப்புகளையும், இறப்புகளையும் கவனிக்கிறார். தொட்டில் அருகே எழும் தாலாட்டுக் கீதத்தையும் சவப்பெட்டியருகே எழும் அழுகை ஓலத்தையும் செவிமடுக்கிறார்.
இரக்கம் என்பது இறைவனாரிடம் எள்ளளவும் இல்லை! சலிப்பு, சஞ்சலங்கள், தற்கொலை, கோர முடிவுகள் _ இவைகளைக் கண்டு குதூகலப்படுகிறார். படுகொலைகள், பயங்கரத் தாக்குதல்கள், விபச்சாரம், நீக்கப்பட்ட குழந்தைகள், நிராதரவான தன்மை ஆகியவற்றைக் கண்டு புன்னகை புரிகிறார். எளியோர் வதை புரிவதையும், மதலையைக் கொள்ளை கொடுத்த மாதாக்களையும், சிறைக் கம்பிகளுக்குப் பின் நிற்கும் நிரபராதிகளையும், தூக்கு மேடையின் மீது நிற்கும் தூயவர்களையும் பார்க்கிறார். குற்றம் கொலு வீற்றிருப்பதையும், கபட வேஷம் தரித்திருப்பதையும் காண்கிறார்.
மழையை நிறுத்திக் கொள்கிறார்; அவரது கைப்பாவைகள் பசியால் துடிக்கின்றனர். பூகம்பத்தின் பெயரால் பூமியைப் பிளக்கிறார்; பலர் விழுங்கப்படுகின்றனர். வெள்ளத்தை அனுப்புகிறார்; பலர் மூழ்கடிக்கப்படுகின்றனர். எரிமலையிலிருந்து நெருப்பைக் கக்குவிக்கிறார்; அந்தக் கனலிலே பலர் கருகிச் சாகின்றனர். புயற் காற்றை அனுப்புகிறார்; அதிலே பலர் சிக்கிச் சின்னா பின்னமடைகின்றனர். இடியின் வேகத்தால் இறப்புடன் மோதுகின்றனர். நீரிலும் காற்றிலும் கண்ணுக்குத் தெரியாத வாழ்வின் வைரிகளை, துன்பத்தின் தூதுவர்களை நிரப்புகிறார்; அவர்கள் மூச்சு விடும்போதும், நீர் அருந்தும்போதும் கவனிக்கிறார். அவர்களின் சதைகளையும் நடுங்கும் நரம்புகளையும் உண்டு கொழுக்க கான்சர் வியாதி உண்டு பண்ணுகிறார். இரத்தக் குழாய்களில் விஷத்தை நிரப்பிப் பாம்புகளை உண்டு பண்ணுகிறார். அவர்களின் எலும்புகளை நொறுக்கவும் கொட்டுகிற இரத்தத்தை உறிஞ்சவும் வனாந்திர மிருகங்களை உண்டு பண்ணுகிறார்.
சில பரிதாபத்திற்குரியவர்களைப் பைத்தியக்காரனாக்குகிறார். அவர்களை, இருளிலே கூசும் கண்களுடனும் கூரிய நகங்களுடனும் தோன்றுகிற பூதங்களாகிய கற்பனையுடன் போராட வைக்கிறார். சிலரைச் சிந்தனை ஜோதியே யின்றி இருள் செறிந்த வாழ்விலே திணற வைத்துச் சீரழிக்கிறார். துயரங்கள், அநீதிகள், வறுமையின் கந்தலாடை, தேவையின் சுருங்கிய கரங்கள், தாயை இழந்த சேய்கள், அங்கங்கள் பங்கமானோர், குஷ்டரோகிகள் _ இவை அத்தனையையும் பார்க்கிறார்.

புரண்டோடுகிற கண்ணீர் தெரிகிறது. கோவெனக் கதறும் புலம்பல் கேட்கிறது. பள பளவெனப் பிரகாசிக்கும் வாட்கள் தெரிகின்றன. துப்பாக்கியின் வேட்டுச் சத்தம் கேட்கிறது. இரத்தம் தோய்ந்ததால் சிவப்பேறிய போர்க்களம் _ பிணங்களின் வெளுத்துப்போன முகங்கள் தெரிகின்றன.
ஆனால் அவர்கள் அஞ்சுகிற நேரத்தில் நையாண்டி புரிகின்றார்; அவர்களின் ஆபத்தான அழிவு நேரத்தில் நகைத்துச் சிரிப்பொலியால் நிரப்புகின்றார். இவை அத்தனைக்கும் தப்பி உயிருடன் விடப்பட்ட துர்ப்பாக்கியமான கைப்பாவை முழங்காலிட்டு இருதய சுத்தியாக இந்த சுதந்திரக்கார எத்தனுக்கு வணக்கம் செலுத்த வேண்டும்!
சொல்லப் போனால் ஆண்டவர்கள் அவர்களுடைய அருமைக் குழந்தைகளைக் காப்பாற்றி ஆதரிக்கவில்லை. அதற்குப் பதிலாக மனிதர்கள் ஆண்டவர்களைக் காப்பாற்றி ஆதரித்துள்ளனர். பல ஆலயங்களைக் கட்டியுள்ளனர். ஆடு, மாடு, குழந்தைகளைப் பலியிட்டனர். பலி பீடங்களை இரத்த அபிஷேகத்தால் நனைத்தனர். தங்களிடமிருந்த வெள்ளி, தங்கம், வைரம் ஆகியவைகளை வழங்கினர். புரோகிதர்களுக்கு அன்ன ஆகாரமும் ஆடை அணி வகைகளும் அளித்தனர்.
ஆனால் ஆண்டவர்களோ பிரதி உபகாரம் ஏதும் செய்யவில்லை. இருட்டிலே ஒளிந்துள்ள தெய்வங்கள் அவர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலிறுக்கவில்லை. கூக்குரலைச் செவிமடுக்கவில்லை. குறிப்பொன்றும் காட்டவில்லை. கரம் கொடுக்கவில்லை. கருணை மொழியொன்றும் புகலவில்லை. பாராமுகமாய், கேளாக் காதாய், செவிடுகளாய், குருடுகளாய், ஊமைகளாய் உன்மத்தம் பிடித்தவர்களாய்த் தமது சிங்காதனங்களிலே கொலு வீற்றிருந்தனர். ஆலயங்களின் கோபுரங்கள் உயர்ந்தன. பிரார்த்தனையின் ஒலிச் சத்தம் அதிகரித்தது. ஆனால் ஆண்டவனார் தூங்கினார். பலன்தான் ஏதும் இல்லை.
தெய்வங்களைத் திருப்திப்படுத்துவதற்காக மனிதன் என்னென்ன செய்துள்ளான் என்பதை எண்ணிப் பாருங்கள். தனது பகுத்தறிவைத் துறந்துள்ளான். அறிவின் சுடரை அணைத்துக் கொண்டுள்ளான். ஆதாரம் இல்லாமலும் ஆதாரத்திற்கு எதிராகவும் பலவற்றை நம்பியுள்ளான். தன்னையே இழித்தும் பழித்தும் கொண்டுள்ளான். உபவாசங்களும் உண்ணாவிரதப் பட்டினிகளும் இருந்திருக்கின்றான். அங்கங்களைப் பங்கப்படுத்திக் கொண்டான். மேனியிலே சூடுகளைப் போட்டுக் கொண்டுள்ளான். குருதியைக் கொட்டியுள்ளான். உடன் பிறந்த மனித குலத்தோரைக் கொலை புரிந்துள்ளான். கொட்டறைகளில் அடைத்துள்ளான். கொடுமை பல புரிந்து அழித்துள்ளான்; மனைவி மக்களைப் பிரிந்திருக்கிறான். அநாதையாக ஆரண்யங்களிலே வாழ்ந்துள்ளான். சூடம், சாம்பிராணி, தூபதீப நைவேத்யம் செய்து கொண்டு, ஜபமாலையை உருட்டிக் கொண்டு, கமண்டல நீரை மெய்யிலே தெளித்துக் கொண்டு, கண்களை மூடிக் கொண்டு, முழங்கால் புழுதியிலே தண்டனிட்டுப் புரண்டு வேண்டியுள்ளான். ஆனால் கடவுளர்கள் மௌனிகளாய் _ ஊமைகளாய் இருந்தனர் _ கற்களைப் போல ஊமைகளாய் இருந்தனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலே தித்திக்கும் வளம் நிறைந்த கருத்துடைய இத்தகு வசீகர வசனங்களை எத்தனையோ ஆயிரம் மேடைகளில் சொற்பெருக்காற்றினான், அமெரிக்க சிந்தனையாளன் இங்கர்சால். அறிவின் தூதர்கள் மேற்கொண்ட திருப்பணியின் விளைவு இன்று அந்த நாட்டு ஆண்டவர்களாகிய ஓடின், தார், அபொல்லோ, மினர்வா, ஜூபிடர், மெர்குரி போன்றவர்களைக் கண்காட்சி மண்டபத்திலேதான் சந்திக்க முடியும்.
நம்முடைய ஆண்டவர்களோ, அவர்களெல்லாம் கண்டு பொறாமைப்படும் பெருநிலையிலேயுள்ளவர்கள். திருவரங்கம் கோவில் கர்ப்பக்கிரகத்திலே தீப்பிடித்தாலும் பிடித்தது! எவ்வளவு அக்கறை! எவ்வளவு கவலை! மூன்று மந்திரிமார் கோவிலைப் பிரதட்சணம் வந்தனர். சட்டசபையிலே கேள்வி. சனாதனிகள் மத்தியிலே சர்ச்சை, லோகத்திற்கு என்ன நாசம் சம்பவிக்குமோ என்ற சம்சயம்!
அடேயப்பா! எந்தக் குடிசை பற்றி எரிந்தபோது, இவர்கள் வயிறு பற்றி எரிந்தது? மனிதர்களிடம் காட்டும் அக்கறையைவிட, மந்திரிமார்கள் மகேஸ்வரனிடம் காட்டும் அக்கறைக்கு ஒன்றும் குறைவே கிடையாது. அந்தஸ்திலே மட்டும் என்ன குறைவாம்? ஆயிரம் ஏக்கர் நன்செய், புன்செய், தோப்பு, துரவு, வெள்ளி வாஹனம், தங்க ரிஷபம்; வைர நகைகள், கோட்டையோ கொத்தளமோ எனச் சந்தேகிக்கத் தக்க கோவிற் பங்களா வாசம்! அவைகளைப் பரிபாலிக்க அர்ச்சகர்கள். அவர்கள் செய்யும் ஆறுகால பூஜை, ஆண்டுக்கொரு கலியாணம், ஆனி மஞ்சனம், ஆருத்ரா தரிசனம், மாசிமகம், மதுரைச் சித்திரை _ அப்பப்பா! இந்த நாட்டுக் கோடீஸ்வரர்களுக்கேது அந்தக் குதூகல வாழ்வு! வருமானம்! இந்த ஆண்டு (1969) சனவரித் திங்கள் திருமலை _ திருப்பதி தேவஸ்தானங்களில் வெங்கடேஸ்வரர் கோவிலுக்குக் கிடைத்த வருவாய் மட்டும் ரூபாய் இரண்டு லட்சத்து இருபத்தொன்றாயிரம்! கோவில் அதிகாரி அறிவித்துள்ள கணக்கே இவ்வளவு!
சாதாரணமாய்க் கன்னமிடுபவன், கள்ளக் கையொப்பமிடுபவன், காயப்படுத்துபவன், கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன் இப்படி, ஆயிரங் குற்றங்கள் நாட்டில் நடைபெறுகின்றன அல்லவா? அவைகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்திலே தண்டனை கொடுக்கப்படுகிறதல்லவா? நமது ஆண்டவர்கள் புரிந்த குற்றத்திற்குத் தண்டனை கொடுப்பது என்று ஆரம்பித்தால் நமது நீதிமன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கு வேறு வேலையே நடக்காது. தேவ காரியத்திற்கே சரியாய்விடும்.
அகல்யாவைக் கற்பழித்தான் தேவர்கோன் இந்திரன்; மாற்றான் மனைவியை மருவலாமா? தெய்வயானை இருக்கும்போது குறமகள் வள்ளியை மணந்தான் குமரக் கடவுள் முருகன். இருதாரம் ஏற்புடைத்தா? தாருகாவனத்து ரிஷி பத்தினிகளிடம் மூலக் கடவுளர்கள் மூவரும் பிச்சைக்காரர்கள் போல் நிர்வாணமாய் நின்றனர். ஆபாசத்தின் உச்ச கட்டமல்லவா? கண்ணன் வெண்ணெயைத் திருடினான். கானலோலன் நாரதர் கலக மூட்டினான். பாண்டவர் பாஞ்சாலியைச் சூதாடினர். பரசுராமன் தாயைக் கொன்றான். அயோத்தி இராமன் கர்ப்பிணி சீதாவை ஆரண்யத்திற்கனுப்பினான். ஆரண்ய விசுவாமித்திரன் அழகு மேனகைக்குக் காதற் கொழுந்து சகுந்தலையைக் கொடுத்தான்! சேச்சே! வெட்கமாயும் இருக்கிறது; கூச்சமாயும் இருக்கிறது எடுத்துக் கூற!
செந்தமிழிலே சொற் சித்திரம் தீட்டுவதானாலும், செம்பஞ்சுத் தூரிகையிலே வண்ணச் சித்திரம் தீட்டுவதானாலும், உளியிலே உருக்குவதானாலும் ஆபாசம் அருவெறுப்பைத்தான் கொடுக்கும். அழகு நிர்வாணமானதுதான் என்று மனித மனம் ஒத்துக்கொள்வதில்லை போர்வை தேவைப்படுகிறது. பொலிவு அங்குதான் உதயமாகிறது. நமது மந்திரிமார்கள் அவசர அவசரமாக ஆபாச சுவரொட்டி விளம்பரங்களைத் தடுக்க மசோதா கொண்டு வந்தார்கள்.
மத சம்பந்தமான புராண ஏடுகள், ஓவியங்கள், சித்திரங்கள், ஆலயங்களிலே உள்ள கற்சிலைகள், தேர்களிலே செதுக்கப்பட்டுள்ள காமக்களி நடனங்கள் ஆகியவற்றை எந்தச் சட்டமும் தடுக்காது; கட்டுப்படுத்தாது. எப்படியிருக்கிறது நியாயம்? ஆண்டவர்கள் பாடே அதிர்ஷ்டம்தான்! அதற்குக் குறுக்கே நிற்க நாம் யார்?
புராண ஏடுகளிலே நிறைந்த போதைக் கருத்துகள் எத்தனை மலைமலையாக இருக்கின்றன! அவையெல்லாம் ஆபாசத்தைத் தூண்டவா?
பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் _ பேசும் பொற்சித்திரம் போன்ற பெண் பதுமைகள் _ புல்லாங்குழல் இனிமையிலே சில்லெனத் துள்ளும் உள்ளம் _ நீராடுந் துறைதனிலே ஆயர் மகளிர் _ மரத்தின் உச்சியிலே நீலவண்ணன் _ பொன்னவிர் மேனிக்குப் போர்வை இல்லாததால், அந்தப் பிரதிபலிப்பிலே தண்ணீரும் தங்கமெனப் பிரகாசிக்க அந்தப் பொன்மயமான காட்சி புல்லாங்குழலூதியின் கார் வண்ணமேனிக்கும் கானகத்தின் பளபளப்பை அமளிக்க, கூசும் கண்களும், கொடுக்க மாட்டேன் உங்கள் சேலைகளை என்று கூறிய காட்சி _ ஏட்டுச் சுவடியிலானாலும், வீட்டுச் சுவர்களிலானாலும் இந்திரியங்களெனும் துட்டக் குதிரைகளுக்கு அறிவெனும் கடிவாளத்தையா பூட்டும்?
தமிழகத்துத் தேவாலயங்களிலே, தில்லையிலே, திருவாரூரிலே, திருவரங்கத்திலே, காஞ்சியிலே, கன்னியாகுமரியிலே, ஆயிரங்கால் மண்டபங்களிலும், கோவிற் பிரகாரங்களிலும் உருவாக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் ஜீவாத்மாவிற்கும், பரமாத்மாவிற்கும் உள்ள உறவு முறையை உபதேசிக்கின்றனவா, ஆணுக்கும் பெண்ணுக்குமுள்ள உறவு முறைகளை ஓதிக்கொண்டிருக்கின்றனவா? திவ்ய ஷேத்திரங்கள் என்கிறார்களே, அந்த ஊர்களிலுள்ள தேர்களிலே செதுக்கப்பட்டிருக்கும் சித்திரங்கள் காமவேள் நடனசாலையை ஞாபகப்படுத்துமா, கடவுளின் அருட்கருணையைக் கிளறுமா? இதுவெல்லாம் ஆபாசமில்லையாம்!

ஏனெனில் கடவுள் முலாம் பூசப்பட்டிருக்கிறதே! என் செய்வது?
அரசியல் சட்டத்திலேயே ஆண்டவனுக்கு அளிக்கப்பட்டுள்ள இடம் மிகப் பெரியது. ஜனநாயகம் என்றுதான் பேசுகிறோம். சர்வேஸ்வரனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அந்தஸ்து, சாமான்யமானவர்களாகிய நமக்கேது? அதிலும் இந்த நாட்டு ஈஸ்வரர்கள் விஷயமே அலாதியானது. வேறு நாட்டிலும்தான் மத சுதந்திரம், கடவுள் சுதந்திரம் இருக்கின்றன. ஆனால் வித்தியாசம் உண்டு. ஒரே ஓர் உதாரணம்:
எந்தக் குடிமகனும் தனது விருப்பப்படி கடவுளைத் தொழவும், மதவிரோதமான பிரச்சாரம் செய்யவும் இந்த நாட்டு அரசியல் சட்டம் உரிமையளிக்கிறது _ இது ரஷ்ய நாட்டு அரசியல் சட்டம்.
எந்தக் குடிமகனும் தனது விருப்பப்படி கடவுளைத் தொழவும், மத சம்மந்தமான பிரச்சாரம் செய்யவும் இந்த நாட்டு அரசியல் சட்டம் உரிமையளிக்கிறது _ இது இந்திய அரசியல் சட்டம்.

சூட்சமம் புரிகிறதா? ரஷ்ய நாட்டில் எந்தக் கடவுளையும் தொழலாம். கடைப்பிடிக்கலாம். கதாகாலட்சேபம் செய்யக்கூடாது. ஆனால் பகுத்தறிவுக் கொள்கைப் பிரச்சாரம் அனுமதிக்கப்படும். ஊக்குவிக்கப்படும் _ இங்கு எவரும் எந்தக் கடவுளையும் பூசிக்கலாம். ஆனால் கண்ணப்ப நாயனார் சரித்திரமும், ருக்மணி கல்யாணமும், சிறீராம பட்டாபிஷேகமும்தான் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.
பகுத்தறிவு தலைகாட்டக் கூடாது. மத சம்மந்தமான பிரச்சாரம் இருக்கலாம். மதத்திற்கு விரோதமான பிரச்சாரம் தவறு. சட்டப்படி குற்றம். புரிந்ததா? காரணம் கேட்காதீர்கள்!

மரகதத்தீவு, _ அயர்லாந்து தேசமுள்ளதே அந்த நாட்டினர், இங்கிலாந்து இணையற்றதாய் இருந்தாலென்ன, எங்களுக்குத் தனித் தாயகம் வேண்டுமென்றனர் விடுதலை பெற்ற வீரக்கோட்டத்தினர். அவர்களும் அவனி புகழ் அரசியல் சட்டம் செய்துள்ளனர். அந்தச் சட்டத்தில் ரோடுகள் போட, ரயில் பாதை அமைக்க, மின்சார விளக்கு அமைக்க, குடி தண்ணீர், சாக்கடை வசதிகளைச் செய்ய, கோவில் பணத்தை உபயோகிக்கலாம் என்று சட்டமியற்றி நடைமுறையிலும் நடத்துகிறார்கள். கதையல்ல, அய்ரிஷ் அரசியல் சட்டத்தின் எட்டாவது விதி இதுதான்.
நமக்கு எட்டாக் கோட்டையோ எனக் கொட்டாவி விடாதீர்கள்.
கோட்டையேறாவிட்டால்கூடப் பரவாயில்லை! சிதம்பரம் கோவில் பற்றிக் குழியுமல்லவா பறித்து விட்டார்கள்! நம்முடைய அரசியல் சட்டம்தான் அடிப்படை உரிமைகள் அனுமதித்துள்ளதே. இத்தகு கருத்துகளுக்கு இடமில்லையா? என்று கேட்டு விடாதீர்கள். அது பெரிய கதை. க்ஷேமநல சர்க்கார் என்றுதான் இந்த அரசுக்குப் பெயர். யாருடைய க்ஷேமம், நலம் என்பதிலேதான் வேறுபாடு.
ரோடு போட அல்ல, மின்சார விளக்கு அமைக்க அல்ல, ரயில் எஞ்சின் வாங்க அல்ல _ கோவில்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தவும், பெருச்சாளிகளைப் பொறியிலே சிக்க வைக்கவும், கமிஷனர்கள் நியமிக்க வேண்டும். பொது மக்கள் தர்மகர்த்தாக்களாகவும் டிரஸ்டிகளாகவும் அமையத் தக்க அதிகாரம் படைத்த இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டத்தை 1951இல் சென்னை சர்க்கார் நிறைவேற்றியது. பல கோவில்களை அதன் அதிகாரத்திற்கு உட்படுத்திப் பதிவு செய்தனர்.
சிதம்பரத்தை விட்டுவிட முடியுமா? தில்லை மூவாயிரம் க்ஷேத்திரமாயிற்றே! இங்கு தானே,

குனித்த புருவமுங் கொவ்வைச்
செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போன்
மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்
உள்ள நடராசப் பெருமான் நர்த்தனமாடுவதாகத் திருநாவுக்கரசர் சொல்லுகிறார்?
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டிற்கும் இறைவா போற்றி!

என்கிறார்களே, பொன்னம்பலத்தான் புவனம் முழுதிற்கும் சொந்தமல்லவா என்ற அடிப்படையில் அட்டவணையில் சேர்த்தது.
அரசு தலையிடும் கோவில்களில் தீட்சதர்களின் கண்களிலே தீப்பொறி பறந்தது. வழிபடுவதற்கு வேண்டுமானால் உரிமையுண்டு. வாரிசுகள் நாங்களல்லவோ? என்ன அதிகாரம் இந்த குட்டி சர்க்காருக்கு என்று இலட்சார்ச்சனையில் திட்டவில்லை; வழக்கு மன்றம் ஏறினர். வாதாடினர். சென்னை சர்க்கார் எங்கள் உரிமைகளிலே தலையிட முடியாது, இது எங்கள் சொத்து என்றனர். சிதம்பரம் சபாநாயகர் கோவில் வழக்கு என்று அதற்குப் பெயர்.
வழக்கு மன்றம் ஏறிவிட்டால், வரலாறெல்லாம் வந்துதானே ஆக வேண்டும்? தீட்சதர்கள் தங்கள் பூர்வோத்திரம் கூறினர். கனோஜி நாட்டுப் பிராமணர்கள் நாங்கள், இரணிய வர்ணன் என்பவன் எங்கள் மூதாதையரை இங்கு அழைத்தான். கோவில் எழுப்பித்தான். இதன் முழு உரிமைகளும் எங்களைச் சேர்ந்தவை. வாரிசு முறை இங்குச் செல்லாது. ஒவ்வொரு திருமணத்தாலும், பிறப்பாலும் அந்த உரிமை பெறப்படுகிறது. தில்லைப்பெண் எல்லையைத் தாண்டாது. ஒவ்வொரு திருமணமான தீட்சதனும் கோவிலுக்குப் பாத்தியதை உடையவன். அவர்கள்தான் அர்ச்சகர்கள், அந்நியர் தலையிடுவது அரசியல் சட்டத்திற்கு விரோதம். ஆகவே, அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் முரணானது என்றனர்.
கோவில் மணி அடிக்கிறது. அர்த்த ஜாம பூஜை போல் தெரிகிறது! ஆண்டவனார் தூங்குகின்றார். அயர்ந்த நித்திரை. அவர் எப்பொழுது எழுந்திருக்கப் போகிறார்? நெடுநாளாகத் தூங்கிக் கொண்டே இருக்கிறார். மணியோசை நமது மாந்தரையாவது எழுப்பக் கூடாதா?

                             ----------------------------------கே.ஏ.மதியழகன்- நூல்: முத்துப்பந்தல்

35 comments:

தமிழ் ஓவியா said...


கைதட்டி வரவேற்போம்!


ஒரு பெண் விவாகரத்துப் பெற்று விட்டாலும் அந்தப் பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் திருமண சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த திங்களன்று (26.8.2013) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் தொகையில் பெண்கள் எண்ணிக்கை 50 விழுக்காடு இருந்தாலும், இந்தியாவில் உள்ள சொத்துகளில் பெண்களுக்கு உரிமை உடையது வெறும் இரண்டே இரண்டு விழுக்காடுதான் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியிருப்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த நிலையில் இப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

பெண்ணை, ஒரு சொத்தாகப் பாவிக்கும் மனப்பான்மை நம் நாட்டு மக்களுக்கு உண்டு. பெண்களை உயிருள்ள ஜீவன் என்று நினைப்ப தில்லை. அதனால்தான் வரதட்சணை என்ற ஆரியக் கலாச்சாரமே இங்கு புகுந்தது.

பெண்களைப் பெற்றவர்கள் ஏன் பெற்றோம் என்று கண்ணீர் விடும் கொடுமை இந்தப் பாரத புண்ணிய பூமியில்! தான்

பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படு வதும் இந்தச் சுமையால்தான்! மணமகன் டாக்டராக இருந்தால் அதற்கொரு தொகை, வெறும் ஆசிரியராக இருந்தால் தொகையில் கொஞ்சம் சலுகை.. - இத்தியாதி இத்தியாதி விலைவாசிப் பட்டியலை (மார்க்கெட் நிலவரம்) ஆண் ஆதிக்க உலகம் கையில் வைத்துள்ளது - வெட்கக்கேடு!

பெண் என்றால் திருமணம் செய்து கொடுத்து விட்டாலே போதும்.. அவருக்கு ஏன் சொத்து பத்துகள் என்று நினைக்கிற இந்துத்துவ மனப்பான்மை உள்ளவரை பெண்ணுலகம் தலை நிமிர்ந்திட முடியவே முடியாது.

இப்படிப்பட்ட சமூக அமைப்பில் பெண்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அடிப்படைத் தேவை கல்வியே! இந்த உரிமையை ஈட்டித் தருவதற்காக - இந்தப் பிரச்சினைகளை மய்யமாக கொண்டு - அதனை ஓர் இயக்கமாகவே நடத் தினார் தந்தை பெரியார்.

பெண்களுக்குச் சொத்துரிமைபற்றி, 1928ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் தலைமையில், நடைபெற்ற தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில், தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்குக் கல்வி உரிமை; இராணுவத்தில் கூட பெண்களுக்குப் பணிகள், என்று 1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டிலேயே தீர்மா னத்தை, நிறைவேற்றச் செய்தார் தந்தை பெரியார்.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் முதல், பெண்களின் சுயமரியாதையைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை, மேற்கொண்டது திராவிடர் இயக்கமே.

சமூகத்தில் உண்டாக்கப்பட்ட விழிப்புணர்வே, பெண்கள் வளர்ச்சிக்கான உரிமைக்கான சட் டங்கள், அரசு தரப்பில் நிறைவேற்றப்பட்டதற்குக் காரணம்.

பெண்கள் சொத்துரிமைப் பற்றிய மசோதாவை, மய்யப்படுத்தியே சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர், அமைச்சர் பதவியைத் தூக்கி எறிய நேர்ந்தது. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கும் சொத்துரிமைக்கு வழி வகுக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும்கூட, நடைமுறையில் எந்த அளவுக்கு, அது செயல்பாட்டில் இருக்கிறது, என்பது கேள்விக்குறியே!

இந்தச் சூழலில் விவாகரத்துப் பெற்ற பெண்ணுக்கும், அவரின் குழந்தைகளுக்கும் இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்ற சட்டம் மகளிர் முன்னேற்றத் திசையில் சிறப்பானதோர் மைல் கல்லே!

சட்டம் வந்தால் மட்டும் போதாது - நடை முறையில் எந்த அளவுக்குச் செயற்பாட்டில் இருக் கிறது என்ப தற்கான உத்தரவாதம்தான் மிக மிக முக்கியமாகும்.

சட்டத்தைத் திராவிடர் கழகம் கை தட்டி வரவேற்கிறது.

தமிழ் ஓவியா said...


கேட்டீர்களா சேதியை? கலாச்சார எல்லையாமே!


விசுவ ஹிந்து பரிஷத்துக்காரர்கள் அயோத்தியை நோக்கி யாத்திரை புறப்பட இருந்ததும் - உ.பி. அரசு அனுமதி மறுத்ததும் - அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற நிலையில் உ.பி. அரசின் தடை செல்லும் என்று தீர்ப்பு வந்ததும் அனைவருக்கும் தெரியும்.

தடையை மீறிய வி.எச்.பி. பொதுச் செயலாளர் ப்ரவீன் தொகாடியா என்ன சொன்னார் தெரியுமா?

அயோத்தியைச் சுற்றி எங்கள் கலாச்சார எல்லை இருக்கிறது. எனவே அங்கு முஸ்லீம்களின் சின்னங் களை அனுமதிக்க முடியாது என்று கொக்கரித் துள்ளார்.

சட்டீஸ்கர் மாநில வி.எச்.பி.யின் அமைப்புச் செயலாளர் அம்பரீஷ் சிங் என்பவரோ, அயோத்தியைச் சுற்றி 252 சதுர கிலோ மீட்டர் எங்களின் கலாச்சார எல்லை; இந்த வட்டாரத்தில் முசுலிம்களின் எந்த ஒரு சின்னமும் இருக்கக் கூடாது; இருக்கவும் விட மாட்டோம் என்று நீட்டி முழங்கி இருக்கிறார். இந்தக் கூட்டத்தின் கையில் ஆட்சி சென்றால் என்ன ஆகும்? சிந்திப்பீர்.

தமிழ் ஓவியா said...


மனிதனின் பூர்விகம் செவ்வாய் கிரகமாம்! விஞ்ஞானிகள் தகவல்


லண்டன், ஆக.30- பூமியிலுள்ள மனிதர்கள் எல்லோருக்கும் செவ்வாய் கிரகம்தான் பூர்விகம் என்று ஆய்வறிக்கை ஒன்றில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித் துள்ளனர்.

ஃப்ளோரன்ஸில் நடைபெறும் 23-ஆவது கோல்டுஷ்மித் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், உயிர்களின் தொடக்கத்துக்கு மூலகாரண மான மாலிப்டினம்' என்ற ஆக்ஸிஜன் நிரம்பிய கனிமம், செவ்வாய் கிரகத்தில் மட்டுமே இருப்பதாகவும், புவிப்பரப்பில் அவை கிடையாது என்பதால் உயிர்கள் தோன்றியது செவ்வாய் கிரகத்தில்தான் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பங்கேற்ற அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவன் பென்னர் கூறியதாவது:

மாலிப்டினத்தில் அதிக அளவில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்ந்ததுதான் உயிரி னங்கள் உருவாவதன் தொடக்கமாக இருந்தது. இந்த மாலிப்டினம் பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்தில் இருந் திருக்கவே முடியாது. காரணம், 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மிகக் குறைவான அளவே ஆக்ஸிஜன் இருந்தது. ஆனால் அதே நேரம் செவ்வாய் கிரகத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தது.

செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியில் வந்து மோதிய விண்கல்லால்தான் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்க முடியும் என்ற தத்துவத்துக்கு இந்த ஆதாரம் வலு சேர்ப் பதாக உள்ளது. உயிரிகள் உருவாக செவ் வாய்தான் பொருத்தமான கிரகம் என்றா லும், அவை பரிணாம வளர்ச்சியடை வதற்கு பூமி ஏற்ற கிரகமாக இருந்தது.

இந்த ஆதாரங்களிலிருந்து நாமெல்லோ ரும் செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது. அங்கு உருவாகி, ஒரு பாறை மூலமாக பூமிக்கு வந்த உயிரிகளின் வழித்தோன்றல்கள்தாம் நாம் என்கிறார் ஸ்டீவன் பென்னர்.

தமிழ் ஓவியா said...

பழங்குடியினர் பட்டியலில் நரிக் குறவர்கள் இனம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி, ஆக.30- பழங்குடியினர் பட்டி யலில் (எஸ்.டி.) நரிக் குறவர்கள் இனத்தவரைச் சேர்க்க மத்திய அமைச் சரவை வியாழக்கிழமை ஒப்புதல் தெரிவித்தது.

இது தொடர்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு திமுக தலைவர் கலைஞரும், தமிழக முதல்வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியிருந்த கடிதங் களில் கோரிக்கை விடுத் திருந்தனர்.

இந்நிலையில், பிரத மர் மன்மோகன்சிங் தலைமையில் டில்லியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத் தில் நரிக்குறவர்கள் இனத் தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப் புதல் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரவையின் அனுமதியைத் தொடர்ந்து, அரசியலமைப்புச் சட் டத்தின் 342 (1) மற்றும் (2) பிரிவுகளில் நரிக் குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்க மத்திய அரசு சட்டத் திருத்த மசோதா தயாரிக்க வேண்டும். அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு இதற்கான அறி விப்பு அரசிதழில் வெளி யிடப்படும். அதன்பிறகு பழங்குடியினருக்கான அனைத்து சலுகைகள், பலன்கள் நரிக்குறவர் களுக்குக் கிடைக்கும்.

தமிழ் ஓவியா said...


தகுதி - திறமையைப் பாரீர்! 30-க்கு ஒரே ஒரு மதிப்பெண் பெற்ற நால்வருக்கு வங்கி செயல் தலைவர் பதவியாம் எல்லாம் ஜாதிக் குறிதான்!


புதுடில்லி, ஆக.30- பொதுத் துறை வங்கிகளில் செயல் இயக்குநர் (Executive Director) பொறுப்புகளுக்கு 4 அதிகாரிகள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் நேர்முகத் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களோ, 30-க்கு ஒன்றே ஓன்றுதான்!

ஒரு செயல் இயக்குநர் (Executive Director) வங்கியின் மிக உயர்ந்த நிர்வாகத்தின் ஒரு பங்கு. வங்கித் தலைவர், நிர்வாக இயக்குநர் ஆகிய பணிகளுக்கு அடுத்த இடம்தான் செயல் இயக்குநர்.

எல்லா வங்கி அதிகாரிகளும் அவர்களது ஆண்டு ரகசிய அறிக்கைகளில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

நேர்முகத் தேர்வில் 30-க்கு ஒரே ஒரு மதிப்பெண் பெற்று, நீங்கள் வேலை பெற முடியுமா? முடியும். நீங்கள் பொதுத்துறை வங்கியின் செயல் இயக்குநராக ஆசைப் பட்டால் முடியும்.

நான்கு பொதுத் துறை வங்கிகளின் பொது மேலாளர்கள் செயல் இயக்குநர்களாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், இந்தியப் பொருளாதாரப் பணிகள் செயலாளர் ராஜீவ் தக்ரூ என்பவரால் ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

அவ்விதம் அறிவிக்கப்பட்டவர்கள் பி.எஸ். ராமராவ், ஆந்திரா வங்கியின் பொது மேலாளராக இருப்பவர், விஜயா வங்கியின் செயல் இயக்குநராகவும், சென்ட்ரல் பாங்கு ஆஃப் இந்தியாவின் பொது மேலாளரான அப்துல் அகர்வால், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநராகவும் சிண்டிகேட் வங்கி பொது மேலாளர் மகேஷ் ஜெயின், இந்தியன் வங்கி செயல் இயக்குநராகவும், ஒரியண்டல் வங்கி ஆஃப் காமர்ஸ் பொது மேலாளராக இருந்த தக்கர், தேனா வங்கி செயல் இயக்குநர் பதவிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

செயல் இயக்குநர் பதவி, வங்கித் தலைவர், மற்றும் நிர்வாக இயக்குநருக்கு அடுத்த பதவி. செயல் இயக்குநர் பதவிக்கு, பணி அமர்த்தும் பொறுப்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் நடைபெறும். ஆளுநர் வர முடியாமல் போகும் பட்சத்தில், பொருளாதாரப் பிரிவுச் செயலாளர் நியமிக்கும் ஒரு துணைக் குழு, வேட்பாளர்களைப் பேட்டி கண்டு பொருளாதாரப் பிரிவு செயலாளர் தலைமையில் வேட்பாளர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.

ஆனால், இந்த குறைந்த மதிப்பெண் பெற்ற பொது மேலாளர்கள் பணி நியமனக் குழுவை எப்படி ஏமாற்றி வந் தனர் என்பது புரியவில்லை. (எல்லாம் ஜாதிக் குறிதானே).

தகவல்: டைம்ஸ் ஆஃப் இந்தியா 28.8.2013)

தமிழ் ஓவியா said...


தீவிரவாதம் ஒழிய, மாணவர்கள் பகுத்தறிவாளர்களாகட்டும்!


இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மதம் சாராத அறிவியற் கொள்கைகளை, மக்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டி யது அரசின் கடமை. ஆனால் உண்மை நிலையென்ன? நாட்டில் மதக்கலவரங் கள், தீவிரவாதங்கள், கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்பு சம்பவங்களென நாளும் பெருகி வருகின்றது. மக்களின் வாழ்க்கையில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் போன்ற தன்மைகள் உண்டாக அரசாங்கத்திடம் எந்த விதமான கொள் கைகளோ, கோட்பாடுகளோ, எதுவும் இல்லை. மக்கள் வெளியே நடமாட அஞ்சு கின்றனர். பெண்கள் ஆபரணங்களுடன் சென்று திரும்ப முடியவில்லை.

இளம் பெண்கள் தனியாக வெளி இடங்களுக் குச் சென்று வர முடியவில்லை. 1947-இல் கிடைத்ததாகச் சொல்லப்படும் சுதந்திரம் 2013-ஆம் ஆண்டிலும் மக் களுக்கு கிடைத்ததாகத் தெரியவில்லை. இந்தியா ஜனநாயக நாடு என்று சொல் லப்படுகிறதே தவிர ஜனங்களுக்குப் பாதுகாப்பில்லை. நாயகர்களுக்கும் (தலைவர்களுக்கும்) பாதுகாப்பில்லை. எங்கும் பணநாயகமே மேலோங்கி நிற்கிறது. இலஞ்சம் தலை விரித்தாடு கிறது. இலட்சியவாதிகள் அலட்சியப் படுத்தப்படுகின்றனர். இந்நிலை நீடித்தால், நாட்டில் அமைதிக்குப் பங்கம் தான் விளையும். இன்று தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்று சொல்லுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு தண்ணீருக்கு டில்லிக்கும் சென்னைக் கும் நாயாய் அலைய வேண்டியிருக்கிறது. தப்பித்தவறி தண்ணீர் வந்துவிட்டால், அதைச்சேமிக்க எந்த துப்புமில்லை. கொடநாட்டில் கொடி நாட்டினால் போதுமா? தமிழ்நாட்டில் நாற்று நட வேண்டாமா? கொள்ளிடம் ஆற்றில் மேலணைக்கும் (முக்கொம்பு) கீழணைக் கும் (அணைக்கரை) இடையில் தஞ்சை மாவட்டத்தில் கோவிலடி, சுக்காம்பார், வைத்தியநாதன் பேட்டை, தேவன்குடி, கருப்பூர், புத்தூர், குடிதாங்கி, திருவைக் காவூர் ஆகிய இடங்களில் கதவணைகள் அமைத்தால் 30 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்கலாமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனரே!

இதுபற்றி அரசுக்கு ஏதேனும் அக்கறை உண்டா? பார்ப்பனர் பண்ணையம் கேட்பாரில்லை என்ற நிலைதானா? மேட்டூர் அணை 16 கதவணையிலிருந்து இடைப்பாடிக்கு தண்ணீர் கொண்டு வர கால்வாய் வெட்டி யிருந்தால், பெரிய ஏரி நிரம்பியிருக்குமே. மக்கள் நலன் பற்றி அக்கரை இல்லாத அரசு; திராவிடர் கழகங்களின் ஆர்ப் பாட்டங்களை அலட்சியப்படுத்தினார் ஆட்சி அதிகாரம் ஆட்டம் காணக்கூடும் என்றாரே நம் தமிழர் தலைவர், உண்மை தானே!

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத் திற்கு, தமிழ்நாட்டு முதலமைச்சரே முட்டுக்கட்டை போடுகின்றார் என்றால், ஓட்டுப் போட்ட தமிழ்நாட்டு மக்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு போகவேண்டிய நிலைதானா! இஞ்சி தின்ற குரங்காக இன்று மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றார்கள். மந்திரி மார்கள், வாய் திறக்கவே பயப்படுகிறார் கள். பதவி ஆசையில் பட்டத்து ராணியின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்கும் திராணி யுள்ள தலைவர் நம் தமிழர் தலை வரன்றோ! அவரணியில் தமிழ்மக்கள் ஒன்று சேர வேண்டாமா! சிந்திப்பீர். இன்னும் உறக்கம் வேண்டாம். விழித் தெழுங்கள்!

எல்லாப் பிரச்சினைகளுக்கும் தமிழர் தலைவர் காலத்திலேயே முடிவு கட்ட வேண்டும். இன்றைய மாணவர்கள் நாளைய குடிமக்கள். இன்றைய மாண வர்கள் நாளை நாடாளும் மந்திரிகள். அவர்கள் பகுத்தறிவாளர்களாக ஆக்கப் படவேண்டும். அவர்கள் சுயசிந்தனையா ளர்களாக மாற்றப்பட வேண்டும். நாம் வரலாற்று ரீதியாக திராவிடர்கள் என்பது உணரப்படவேண்டும்.

இதற்காகத் தான், தந்தை பெரியார் 135-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் பெரியார் பிஞ்சு இணைந்து வழங்கும் பெரியார் 1000 மாபெரும் வினா - விடைப் போட்டியாகும் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- கா.நா.பாலு (தலைவர் நகர தி.க., இடைப்பாடி)

தமிழ் ஓவியா said...



தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி சொல்வது எப்படி?


தெற்கு ரயில்வேயைச் சேர்ந்த திருவனந்தபுரம் கோட்டத்துக்குள் அடக்கிய தமிழ்நாட்டின் பகுதிகள் (கன்னியாகுமரி மாவட்டம், திருநெல் வேலி மாவட்டத்தின் தென் பகுதி) தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக சில ஆண்டுகளாகவே பத்திரிகைகள் எழுதின; பொது மக் களும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். திருவனந்தபுரம் கோட்டம் எதையும் கண்டு கொள்ளவே இல்லை.

இந்நிலையில் இதை திராவிடர் கழகம், தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. விடுதலையும் மார்ச் மாத இறுதியில் இதைச் சுட்டிக் காட்டியது. உடனே ஆர்வமாக இதில் களம் இறங்கியது தெற்கு ரயில்வே.

தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா அவர்கள் மே மாதம் 4-ஆம் நாள் கன்னியா குமரி மாவட்டத்துக்கு நேரில் வந்து பார்வையிட்டு உண்மையைக் கண்ட றிந்தார். உடனேயே அந்தப் பகுதியின் மேம்பாட்டுக்கு செய்ய வேண்டிய வற்றை செய்தார். அதன் விளைவு என்ன தெரியுமா?

திருவனந்தபுரம் முதல் திருநெல் வேலி வரை இரட்டை ரயில் பாதைப் பணிகள் ஆரம்பிக்க இருக்கின்றன. திராவிடர் கழகமும் விடுதலையும் சுட்டிக்காட்டிய நாகர்கோயில் டவுன் (Nagarkoil Town) ரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது. அங்கே டிராக் அமையப்போகின்றது என்றும் அதனால் தற்பொழுது இருக்கின்ற அலுவலகக் கட்டடமும், ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பின் ஒரு பகுதியும் இடிக்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்தார் ரயில்வே ஊழியர் ஒருவர். இதற்காக டெண்டர் விடப் பட்டுவிட்டது என்றும் ஆறு மாதங் களில் வேலை ஆரம்பித்துவிடும் என்றும் அவர் கூறினார்.

யாராலும் எதுவும் செய்ய முடி யாது என்றிருந்த ஒரு பகுதியை மேம்படுத்துவதற்கான ஏற்பாட்டை செய்ய தந்தை பெரியார் அவர்கள் துவக்கிய திராவிடர் கழகத்துக்கு சில மாதங்களில் முடிந்தது என்றால், அதற்குக் காரணம் தமிழர் தலைவர் அவர்கள்தான்.


தமிழ் ஓவியா said...

அண்மையில் திராவிடர் கழகம் தலையிட்ட ரயில்வே சம்பந்தமான செய்திகளின் வெற்றியை அறிந்ததும், 20 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடர் கழகம் தலையிட்டு வெற்றியை ஈட்டிய வேறொரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது.

சென்னைக்கு அருகிலுள்ள தாம் பரத்தையும், காஞ்சிபுரத்தையும் இணைக் கின்ற சாலை வண்டலூர் - வாலாஜாபாத் சாலை. இந்தச் சாலையில் மண்ணி வாக்கம், கரசங்கால், படப்பை, செரப்பனஞ்சேரி, ஒரகடம், வாரணவாசி உள்பட பல கிராமங்கள் அமைந்துள்ளன. மணிமங்கலம், வல்லக்கோட்டை ஆகிய ஊர்கள் இந்தச் சாலைக்கு அருகிலுள் ளவைதான். இந்தச் சாலையிலுள்ள சிறிய பாலங்கள் தூறல் மழை பெய்தாலே உடைந்து விழுந்து விடும். போக்குவரத்து நின்றுவிடும். சாலையால் போக்கு வரத்தை மட்டுமே நம்பியிருக்கின்ற வண்டலூர் - வாலாஜாபாத் சாலை மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாயினர்.

இந்த நிலையைக்கண்ட திராவிடர் கழகம், அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டுவர நினைத்தது. இங்கே இன்னொரு செய்தியையும் சொல்ல வேண்டும். தூறல் மழை பெய்தால் உள்ள நிலைமை என்ன தெரியுமா? ஏரிகளின் மதகுகளைத் திறந்து விடுவதால் மண்ணி வாக்கத்துக்கு அருகிலும் வாரண வாசிக்கு அருகிலும் காட்டாற்று வெள்ளம் போல், மழை வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு வெளியுலகிலிருந்து இந்தப் பகுதிகள் துண்டிக்கப்பட்டு விடும்.

இதை அரசின் கவனத்துக்குக் கொண்டுவர திராவிடர் கழகம் நினைத்ததும், பெரியவர் ஒருவர் சொன்னார்: நான் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன், 35 ஆண்டு களாக படப்பை டேவிட் நகரில் வசிக் கின்றேன். இந்த 35 ஆண்டுகளும் இந்தச் சாலையைச் செப்பனிடச் சொல்லி போராடி வருகின்றேன். எந்த பலனும் இல்லை. நீங்கள் இதற்காக நேரத்தையும், பணத் தையும் வீணாக்காதீர்கள்.

எனினும் திராவிடர் கழகம் பின்வாங்க வில்லை. மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்துக்கு இதைக் கொண்டு வந்தது. காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியரின் உத்தரவின்பேரில் சிறிய பாலங்கள் அனைத்தும் உறுதியான பாலங்களாகக் கட்டி முடிக்கப்பட்டன. இந்த வேளையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திராவிடர் கழகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தது விளைவு என்ன தெரியுமா?

அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உத்தரவின் பேரில், அன் றைய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தா.கிருஷ்ணன் அவர்கள் வண்டலூர் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையைப் பார்வையிட்டார். மறுநாள் கோட்டப் பொறியாளர் நம்மிடம் கூறியதாவது: மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நூறு கி.மீ. வேகத்தில் நிதானமாக சாலையைப் பார்வையிட்டுச் சென்றிருக்கின்றார். இனி நீங்கள் விரும்பிய வகையில் சாலை மேம்படுத்தப்படும்.

ஆம்! கலைஞர் அரசு பெரு மழையிலும் சாலை தூண்டிக்கப்படாத அளவுக்கு பாலங்கள் கட்டி திராவிடர் கழகத்தின் கோரிக்கையை நிறைவேற் றித் தந்தது. இன்று வண்டலூர் - வாலாஜாபாத் சாலையிலுள்ள ஒரகடம் தொழில் நகரமாக உருவாகி வருவது அனை வரும் அறிந்தது தான்!

35 ஆண்டுகளாக பெரியவர் ஒருவரின் கோரிக்கையைப் புறக் கணித்த அரசுகள், திராவிடர் கழகம் தலையிட்டதும் அந்தப் பணியைச் செய்தது என்றால் அதற்குக் காரணம் தமிழர் தலைவர் அவர்கள் தான்.

இங்கே முல்லைப் பெரியாறு பிரச் சினையின் துவக்கத்தில் திராவிடர் கழகம் தலையிட்டது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய செய்தி. 1996-1997-ஆம் ஆண்டுகளில் மலை யாள ஏடுகள், முல்லைப் பெரி யாறு இருக்கும் இடம் கேரளத்தைச் சேர்ந்த பகுதி; அதை 999 ஆண்டுகால ஒப்பந் தத்தின் அடிப்படையில் தமிழ் நாட்டுக் குக் கொடுத்திருக்கின்றார்கள். நூறு ஆண்டுகள்தான் கடந்திருக்கின்றன. மீதி 899 ஆண்டுகளுக்காக மலை யாளிகள் காத்திருக்கக்கூடாது; அங்கே சென்று அந்த அணையைக் கைப்பற்ற வேண்டும் என்று எழுதின.

அன்று முல்லைப் பெரியாற்றைப் பற்றி பொதுமக்கள் பலருக்குத் தெரி யாது. முல்லைப் பெரியாறா? அப்படி ஒன்று உண்டா? தந்தை பெரியார்தான் உண்டு. முல்லைப் பெரியார் எல்லாம் கிடையாது என்று கிண்டலாகப் பேசிய பத்திரிகை செய்தியாளர்களும் உண்டு. இத்தகைய கால கட்டத்தில்தான் திரா விடர் கழகம் அரசின் கவனத்துக்கு இதைக் கொண்டு வந்தது.

கலைஞர் அரசு எடுத்த நடவடிக் கையால் கேரளப் பத்திரிகைகள் கூட மிரண்டு விட்டன. அதற்குப் பிறகு முல்லைப் பெரியாற்றை மீட்க வேண்டும் என்று அவை புலம்பவே இல்லை. தொடர்ந்து இன்றுவரை உள்ள நிகழ் வுகள் அனைவரும் அறிந்ததுதான்.

மேற்படி சம்பவங்கள் நடைபெறக் காரணமான தமிழர் தலைவர் அவர் களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என்று திகைக்கின்றார்கள் தமிழ் நாட்டு மக்கள்.

- அமலா, திருச்செந்தூர்

தமிழ் ஓவியா said...


மனித சமுதாயம்


நாட்டினுடைய வளப்பம் மனித சமுதாயத்தின் அத்தனைப் பேரை யும் பொறுத்ததே ஒழிய, மூன்றே முக்கால் பேர்களைப் பொறுத்தது அல்ல.

(விடுதலை, 2.4.1966)

தமிழ் ஓவியா said...


மனப்பாடம் செய்வீர்!


பார்ப்பனரைப் புரோகிதராக அழைத்து நடைபெறும் திருமண வீடுகளிலே புரோகித பார்ப்பான் கூறும் மந்திரம் கீழே தரப்படுகின்றது. இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து நமது இயக்கப் பேச்சாளர்களும், பகுத்தறிவாளர்களும் ஒவ்வொரு திருமணத்திலும் கூறக் கேட்டுக் கொள்கின்றோம்.

சோமஹ ப்ரதமோ
விவிதே கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸ்டே
பதிஸ துரியஸ்தே
மனுஷ்ய ஜாஹ.

இதன் பொருள்: இங்கு மணமகளாக இருக்கும் பெண்ணை முதலில் சோமனும், பின்னர் முறையே கந்தவர்வனும், உத்திரனும், அக்னியும் அடைந்து அனுபவித்தார்கள். இப்போது அய்ந்தாவதாக மண மகனாகிய உனக்குத் தானம் செய்து கொடுக்கிறேன் என்று புரோகிதர் சொல்லுகிறார்.

நமது பெண்களையும், ஆண்களையும் பார்ப்பனர்கள் எவ்வளவுக் கேவலப்படுத்துகிறார்கள் என்கிற உண் மையை நாம் அம்பலப்படுத்தி பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை உணர வைக்க வேண்டும். புரியாத மொழியால் வரும் கேட்டைப் பார்த்தீர்களா? மந்திரங்கள் எல்லாம் வடமொழியில் தான் இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் சொல்லும் சூட்சுமம் புரிகிறதா?

தமிழ் ஓவியா said...

புத்தர் பற்றி ரசல்!

கிறிஸ்துவுக்கு 623 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கவுதம புத்தர் கூறாத நல்லொழுக்கம் எதையும் கிறித்து புதிதாக கூறவில்லை

- பெர்ட்ரண்டு ரசல்

தமிழ் ஓவியா said...


மதத்திற்குள் ஒருமைப்பாடு


இந்து சந்நியாசிகள் எதை துறந்தாலும் பொறாமையைத் துறக்க மாட்டார்கள் என்று எழுத்து வேந்தர் சுகி.சுப்பிரமணியம் ஒரு தடவை எழுதியிருந்தார். இந்திய நாட்டுச் சாதாரண சந்நியாசிகளிலிருந்து மடாதிபதிகள் வரை இதற்கு விதி விலக்கல்லர். ஜகத்குரு என்பதெல்லாம் கூட ஒப்பனைப் பெயர்களே தவிர, உணர்வுப் பெயர்களல்ல.

இந்தியாவில் ஜகத்குரு என்ற பெயரில் அரை டஜன் மடாதிபதிகள் இருக்கிறார்கள். இதில் சிருங்கேரி ஜகத்குரு, காஞ்சி காமகோடி ஜகத்குரு மடத்தை, ஆதிசங்கரர் நிர்மாணித்த மடமே இல்லை என்பார். சைவ மடங்கள் பற்றிக் கேட்பானேன்? திருவாவடுதுறையும், திருத்தரும புரமும் வடக்கு - தெற்குத்துருவங்கள் போல நெடுந் தொலைவுக்குப் போவானேன்? உங்கள் நல்லூர் ஞான சம்பந்தராதீனம் சுவாமிநாத சுவாமிகளுக்கும், மதுரை ஆதீனத்துக்குமே இப்பொழுது இராசிப் பொருத்த மில்லையாம்!

இந்த பழைய மடங்கள்தான் அப்படி என்றால், புதிய நிறுவனங்களிடையிலும் கூட ஒருங் கிணைப்பு இல்லை. இராம கிருஷ்ண மிஷனில் சுவாமி சிவா னந்தர் சேரவில்லை. சிவானந்த தபோவனத் திலோ இராமகிருஷ்ண மிஷனிலோ சுவாமி சின்மயானந்தர் சேரவில்லை.

எல்லாம் தனித்தன்மைகள்! இந்த அவலச் சூழ்நிலையில் எப்படி உலக நிறுவனம் தோன்ற முடியும்?

ஜாதி வேற்றுமைகள், வழக்கு நெறிகள், விளம்பர ஆசைகள், ஆதிபத்திய உரிமைகள் ஆகியன சைவத்திற்கு ஒரு உலகந் தழீஇய நிறுவனத்தை படைப்பதில் தடையாக உள்ளன. இந்த தடையை உடைத்து ஒருமைப்பாடு காண நாம் எடுத்த முயற்சிகள் போதிய பலன் தர வில்லை.

- குன்றக்குடி அடிகளார் - (நமது சிந்தனை 1.11.1980 இதழில்)

தமிழ் ஓவியா said...

இங்கல்ல... யூகோஸ்லாவியாவில்....

யூகோஸ்லாவியா பயணக்கதை எழுதி வரும் திரு.மணியன் அங்கு தான் சந்தித்த ஒரு முஸ்லிம் ஜோடிகளுடன் நடந்த உரையாடலை எழுதுகிறார்.

நீங்கள் தினமும் பிரார்த்தனை செய்வீர்கள் இல்லையா? என்று கேட்டேன் அந்த இளம் ஜோடியை.

இல்லை, எங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை! என்று பதில் சொன்னார்கள்.

கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் முஸ்லீமாக இருக்க முடியாதே! என்றேன்.

இந்த நாட்டில் அப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். நான் முஸ்லீம் இல்லை; கிறிஸ்டியன் இல்லை; நான் ஹ்யூமன்... இங்கே இரண்டு மனிதர்கள்தான் சந்தித்துக் கொள்வார்கள். இரண்டு மதங்கள் சந்தித்துக் கொள் ளாது. கிறிஸ்தவர் குடும்பத்தில் பிறந்த பெண், முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த பிள்ளையைக் காதலித்து கல் யாணமும் செய்து கொள்வாள். எங்கள் திருமணமெல்லாம் பதிவுத் திருமணம்தான்... என்று விளக்கமாக சொன்னாள்.

நன்றி: இதயம் பேசுகிறது மே (5-11) 1985
தகவல்: வே.அன்புராஜ், திருலோக்கி

தமிழ் ஓவியா said...

நாத்திகம் பற்றி வினோபா?

நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல. எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும். நாஸ்திகன் தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன், ஆத்தி கனால் சேவை செய்ய முடி யாது. உதாரணமாக ஒருவன் பீடி குடிக்கிறான் என்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது.

அவனுடைய மனதை மாற்றி, பீடி குடிப்பதை நிறுத்துவதுதான் உண்மையான சேவையாகும். எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால் தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.

(22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடு துறையில் உள்ள திருமுறை கழகக் கட்டடத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஆச்சாரியார் வினோபா உரையாற்றுகையில் குறிப்பிட்டது

தமிழ் ஓவியா said...


கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?

(அப்போஸ்தலர்: 7:33)இல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது என்றும்.

(அப்போஸ்தலர்: 12:79)இல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின் சென்று.... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்றுதானே தெரியவருகிறது?

ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ்தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின்றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரியவில்லையா?

(ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978இல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)

தமிழ் ஓவியா said...

ஆளை விடய்யா!

திருடர்களுக்கு: வீண் சிரமப்பட்டு பூட்டை உடைக்க வேண்டாம். விலை மதிப்புள்ள பொருள்கள், பொன், வெண்கலச் சிலைகள் மற்றும் மதிப்புள்ள பொருள்கள் எதுவும் இல்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. இப்படி எழுதப்பட்டுள்ள கோவில் நெல்லை மாவட்டம் காருகுறிச்சியின் கீழ் பகுதியில் கால்வாய் கரையில் அமைந்துள்ளது.

ஆளைவிடய்யா... என் கையிலே மடியிலே ஒன்றுமில்லை என்று கடவுள் கெஞ்சுவது போல் இல்லையா?

தகவல்: நெல்லை சந்திரன், மீனவன்குளம்

தமிழ் ஓவியா said...


ரெண்டும் ஒன்னு தான்! - சிவகாசி மணியம்


அம்மாவின் கரத்தைப் பற்றிய படி கோயில் வளாகம் முழுக்க சுற்றி வந்தபோது அங்கிருக்கும் சிலைகள் ஒவ்வொன்றையும் அம்மா செய்வது போலவே கும்பிட்டு வந்தது குழந்தை.

இடது காலைச் சற்று சாய்த்தபடி புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலையை குழந்தைக்கு காட்டி ஏதோ சொன்னாள் தாய். கொண்டு வந்த உதிரிப் பூக்களை சிலையின் மீது தூவி விட்டு மூன்று முறை சுற்றி வந்தாள். பூஜை முடித்து ஒரு வழியாக வெளியே வந்தார்கள்.

கோயிலின் நுழைவாயிலில் வளையல் கடை, புத்தகக்கடை, பூக்கடை என்று பல இருந்தாலும் குழந்தையைக் கவர்ந்தது பொம்மைக் கடை தான்! அம்மாவிடம் அந்தக் கடையைச் சுட்டிக் காட்டியபடி அங்கே இழுத்துப் போனது.

கரடி பொம்மையிலிருந்து கடவுள் பொம்மைகள் வரை அங்கே குவிந்து கிடந்ததைப் பார்த்த குழந்தைக்கு கோயிலுக்குள் பார்த்தது போன்ற ஒன்று கண்ணில் பட்டது. வண்ண மயமாய் முரளி கிருஷ்ணன் முழு உருவத்தில் இருந்தார்.

குழந்தைக்கு ரொம்பவும் பிடித்துப்போக அதை வாங்கித் தரும்படி அம்மாவிடம் கேட்டது. கோயிலுக்குள்ள பார்த்தோமே அதே மாதிரி இல்ல.
அங்கே பார்த்தது சாமிடி

அப்ப இது,,?

பொம்மை.,,!

தமிழ் ஓவியா said...


மனிதனின் ஆயுளை கண்டறியும் சோதனை!


ஒருவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிரோடு இருப்பார் என்பதைக் கூறக் கூடிய "இறப்பை அறியும் சோதனை'யை பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகிலேயே முதன் முறையாக இந்தச் சோதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக இருக்கும் அனீடா ஸ்டெஃபனோவ்ஸ்கா, பீட்டர் மெக்கிளிண்டாக் ஆகியோர் இந்தச் சோதனைக்கான காப்புரிமையைச் சமீபத்தில் பதிவு செய்தனர். இதன்படி, கைக்கடிகாரம் போன்ற சாதனத்தின் மூலம் மனிதர்களின் தோல் மீது வலியில்லாத லேசர் ஒளிக்கற்றை பாய்ச்சப்படும்.

இது, உடலில் உள்ள எண்டோதீலியல் செல்கள் எனப்படும் உட்புற செல்களை ஆராய்ந்து, வயது அதிகரிக்கும்போது குறிப்பிட்ட நபரின் உடல் எப்போது சிதைவுறும் (இறப்பு) என்பதை மதிப்பிடும். இந்த செல்கள் ரத்த நாளங்கள் உள்ளிட்ட உள் உறுப்புகளில் காணப்படுகின்றன.

லேசர் ஒளிக்கதிர் பாய்ச்சப்படும்போது இந்த செல்களில் ஏற்படும் அதிர்வுகளை மதிப்பிடுவதன் மூலம் தங்களால் குறிப்பிட்ட நபர் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ முடியும் என்று கூற முடியும் என மேற்கண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்கக் கூடிய ஆபத்து குறித்தும் கூற முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இந்தச் சோதனையை டாக்டர்களால் எளிதில் பயன்படுத்தத் தக்க தொழில்நுட்பம் அடுத்த 3 ஆண்டு களில் உருவாக்கப்பட உள்ளது. இத்தொழில் நுட்பத்தைக் கொண்டு பல்வேறு மனிதர்களின் ஆயுள்காலத்தை அறிந்து ஒரு தகவல் பெட்டகம் உருவாக்க முடியும் என்று நம்புவதாக விஞ்ஞானி ஸ்டெஃபனோவ்ஸ்கா தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


களங்காண வாருங்கள் காளையரே!


போர்க்களம்! போர்க்களம்!! சாதி யொழிப்புப்
போர்க்களம் சனாதனம் காக்கும்
பார்ப்பனர்க் கெதிரான போர்க்களம்! பெரியார்
நெஞ்சில்முள் அகற்றும் போர்க்களம்!
இருமுறை தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய
தீர்மானம் ஏற்காததால் போர்க்களம்!
பெரும்பான்மை மக்களை இன்னும் பஞ்சம
சூத்திர ராக்குவதால் போர்க்களம்!
அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்
பட்டது தீண்டாமை ஒழிந்ததா?
அரசை நடத்துவோர் அதிகார மய்யங்கள் சிந்திந்து சீர்செய்ய மனமில்லை
தேர்ந்தெடுக்கப் படாது நியமனம் பெற்றோரால்
உருவானதே அரசமைப்புச் சட்டம்
பார்ப்பனரே அதிகார மய்யமாய் இருந்ததால்
வெகுமக்கள் உரிமை முடக்கம்!
சட்டத்தின் முன்னே அனைவரும் சமமென்று
சாற்றுவது வெறும் சொல் விளையாட்டு
சட்டப் படியும் சாத்திரப் படியும்
சூத்திர ரென்பது இழிவன்றோ!
ஓட்டை உடைசல் உரிமை மீறலே
இந்நாட்டில் அரசமைப்புச் சட்டம்
கோட்டை கொத்தளம் கொலு மண்டபம் வேதபுரிகள் வேட்டைக் காடாகியே!
தகுதித் திறமை தமக்கு மட்டும்
இருப்பதாக எண்ணிக்கொண்டு
மிகுதியாக பீற்றித் திரியும் பார்ப்பனரே
தமிழர்க்கும் அருச்சகர் தகுதியுண்டு
முட்டுக் கட்டைப் போடும் மூடர்காள்
தன்னலம் மட்டுமே தகுதியாகா
வட்டியும் முதலுமாய் வாங்கிக் கட்டிக்
கொள்வீர்! எச்சரிக்கை செய்கிறோம்!
வீர வணக்கம் வீர வணக்கம்
சாதி யொழிப்புச் சமரினில்
சரித்திரம் படைத்த ஈகியர்க்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!
களங்காண வாருங்கள் காளையரே அய்யா
முன்னெடுத்த போர்க்களம்! தமிழர்
தலைவர் அழைக்கின்றார்! தோழமை துணையுடன்
அய்யா பணிமுடிப்போம் ஆர்த்தெழுவீர்!

- இனியன், திருச்சி--_14

தமிழ் ஓவியா said...


உணர்வுக்கு உரம் ஈட்டிய உடுமலை


- மு.வி.சோமசுந்தரம்

உடுமலைப்பேட்டை என்ற ஊரை நினைத்தாலும் உச்சரித்தாலும், உச்சரிக்கக் கேட்டாலும் ஏற்படும் உற்சாகத்துக்கும், பொங்கி எழும் உணர்வுக்கும் அணை கட்ட முடியாது.

காலை அரும்பி பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்

என்று வள்ளுவர், வேறு சூழ் நிலையை விளக்க வந்த கருத்து, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகி யோரின் ஆழிசூழ் உலகின் அழியா சிந்தனைப் பெருஞ்சுடர், என் பள்ளி வாழ்க்கையில் அரும்பி, கல்லூரி வாழ்க்கையில் போதாகி, உடுமலை அதன் விரிவாக்கம் அமராவதிநகரில் மலர்ந்தது என்று கூறும் வகையில், உடுமலை தனிச்சிறப்பைப் பெறுகிறது.

அமராவதி நகரிலிருந்து 25 ஆண்டுகள் பணி ஆற்றிய காலத்தில், பெற்ற நட்புகள் (கு.வெ.கி.ஆசான், பொறியாளர் து.பரமசிவம், அ.ப. நட ராசன் கபிலன் செகன்னாதன், வசந்தம் இராமச்சந்திரன், தென்மொழி ஞானபண்டிதன், வழக்கறிஞர் கஸ்தூரி புலவர் மருதவாணன் மற்றும் பலர்) நிகழ்ந்த நிகழ்வுகள் (தந்தை பெரியார், ஜி.டி.நாயுடு, நிகழ்ச்சி மண்டல் கமிஷன் விளக்க பயிற்சி முகாம் (தமிழர் தலைவர் பங்கேற்பு) மதுரை ஆதீனம் ஆசிரியர் கூட்டம், இறையன் - செல் வேந்திரன் பட்டிமன்றம், முத்துக்கூத் தன் பொம்மலாட்டம், ஜோசப், முனைவர் நெடுஞ்செழியன், ஆசான் - தமிழ்க்குடிமகன், கண்மணி - தமிழரசன், கோரா, ஞானபண்டிதன், திருக்குறள் முனுசாமி, சாலை இளந்திரையன், முனைவர் அருணா ராஜகோபால், பெரியார் பிறந்தநாள் விழாக்கள், இந்தி எதிர்ப்பு ஊர்வலம், கலந்துரையாடல் கள் நடிகவேள் இராதா நாடகம்) பள்ளியுடன் இணைந்த விழாத் தொடர்புகள் (முத்தமிழ் அறிஞர் கலைஞர், சாதிக்பாட்சா, நாவலர் நெடுஞ்செழியன், பாபு ஜெகஜீவன்ராம், ப.உ.சண்முகம், மதியழகன்)

இவற்றைத் தொகுத்துப் பார்க்கும் நேரத்தில் தொண்டு செய்து பழுத்த பழத்தின் சுவையைக் கண்டவனாகத் தான் எண்ண வேண்டியுள்ளது. களம் கண்டோ, போராட்ட ஏர் பிடித்தோ பணியாற்றியதில்லை.

இவற்றை இன்று நினைத்துப்பார்க்க வேண்டிய வாய்ப்பை ஏற்படுத்தியது, சைனிக் பள்ளியின் என் பழைய மாணவர்களின் இரண்டு (1988-இல் படித்து முடித்தவர்கள்) நாள்கள் வெள்ளி விழா நிகழ்ச்சிகள். அவர்கள் கற்ற காலத்திலிருந்த ஆசிரியர்களைக் குடும்பத்துடன் பார்க்க வேண்டும்.

அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்ற விழைவில் அன்பு அழைப்பு விடுத்தார்கள், தொலைபேசி மூலமும் நினைவுபடுத்தினார்கள். பல ஆண்டு களுக்குப் பிறகு, இணையருடன், உடுமலை, அமராவதிநகரைப் பார்க்க, உடன்பணியாற்றியவர்களையும் சந்திக்க, ஜூன் 28இல் புறப்பட்டோம். (தனியாக, மகிழுந்தை ஏற்பாடு செய்து கொடுத் தார்கள்). இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கும் வகையில் அமைந்திருந்தன.

இக்கட்டுரையை எழுதுவதற்கு முக்கிய காரணமே வேறு. உடுமலைக்கு செல்வது என்ற எண்ணம் ஏற்பட்ட வுடன், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் பெரிதும் வியந்து பாராட்டி எழுதிய உடுமலை தமிழறிஞர், தெளிந்த சிந்தனையாள ரான, 99 அகவையை அடைந்துள்ள ந.சுப்ரமண்யன் அவர்களைக் காண வேண்டும், உரையாட வேண்டும் என்ற அவா மிகுந்திருந்தது.

ஆசிரியர் அய்யா அவர்கள் உடுமலை பெரியவர் எழுதிய பல நூல்களைப் பற்றியும், குறிப்பாக உரத்த சிந்தனை என்ற நூலைப் பற்றி விடுதலை இதழில் இரண்டு நாள்கள் எழுதியதும், என் அவாவை மேலும் உயர்த்தியது.

எண்ணிய எண்ணம் கைகூட நம் கழக பெரியார் தொண்டரும், நண்பரு மான அய்யா நடராசன் துணையிருந்து அழைத்துச் சென்றார். நல்லதொரு மகிழ்ச்சி அளித்த சந்திப்பு என்றும் நினைவில் நிற்கும் சந்திப்பு, இணைய ருடனும், என்னுடனும் அன்பாக 20 நிமிடங்கள் உரையாடினார். உரையாட லின் போது, எழுப்பிய வினாக்களுக்கு அவர் கூறிய விளக்கங்களை இங்கு பதிவு செய்வது நல்லது என்று கருதுகிறேன்.

1) எனக்கு தமிழ்மொழி தாய் (Mother),ஆங்கிலம் காதலி (Love) தாய்க்கு கட்டுப்பட்டவன், சொல்படி நடப்பவன், காதலியுடன் எப்படியும் இருப்பேன்(Flexible)

2) உ.வே.சாமிநாதன் தமிழில் வல்லவர் ஆங்கிலம் தெரியாது, சமஸ்கிருதமும் தெரியாது.

3) என் தந்தையார் தாம்பரம் கிறித்துவக்கல்லூரியில் சூர்ய நாராயண சாஸ்திரி மாணவர், டாக்டர் மில்லர் டென்னிசனின் பாடலில் உள்ள இயற்கைக் காட்சிக்கு இணையா வேறு இருக்காது என்று கூறினார். என் தந்தை, கம்பராமாயணத்தில் உள்ள பாடலை விளக்கினார்.

4) கிறித்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் சந்திரன் தேவனேசன் வலிய என்னை ஷிலாங் பல்கலைக் கழகத் துக்கு அழைத்துச் சென்றார்
(Dr. சந்திரன் தேவனேசன் என் விடுதி காப்பாளர்)

5) பாரதிதாசனின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்கள் இருவர் என்று கூறினார். பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார்.

6) பார்ப்பனர்கள் பிறவி அலுவலக ஊழியர்கள் (Born clerk like Robert Clive)

7) பார்ப்பனர்களுக்கு நாட்டுப்பற்று என்பது கிடையாது.

8) யூதர்களுக்கு முதலீடு பணம் பார்ப்பனர்களுக்கு அறிவு.

9) பார்ப்பனர்களுக்கு ஒழுக்கம் கிடையாது. (No character)

அன்பு விடை பெற்று அவரின் மூன்று நூல்களைப் பெற்று மகிழ் வுடன் திரும்பினோம்.

தமிழ் ஓவியா said...


எரிந்த தாளில் எழுத்துக்கள் தெரிவது ஏன்?


காகிதங்கள் எரிந்த பின்னாலும், அதிலுள்ள எழுத்துக்கள் தெரிவதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். அது ஏனென்று தெரியுமா?

காகிதம், தாவர செல்லுலோஸ் என்னும் கரிமப் பொருளால் ஆனது. இது எரியக் கூடியது. அச்சு மையிலும் கரிமப் பொருட்களும், வண்ணம் தரும் நிறமிகளும் இருக்கும். இரும்பு சல்பேட் போன்ற சில ரசாயன பொருட்களும் மையில் காணப்படும்.

காகிதம் எரியும்போது, கரிமப் பொருட்களும், நிறமியும் எரிந்து போகும். ஆனால் இரும்பு சல்பேட் மட்டும் எரியாமல் இருக்கும். இதுவே எழுத்து இருந்த இடத்தில் இருந்து எழுத்துக்களை அடையாளம் காட்டுகிறது.

தமிழ் ஓவியா said...

அதிகம் காபி குடிப்பவரா நீங்கள்?

ஒரு நாளைக்கு நான்கு கோப்பைக்கும் அதிகமாக காபி குடிக்கும் நாற்பதாயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில், காபி குடிக்கும் பழக்கம் அதிகரிப்பதால் உடல் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதாகவும், 32 விழுக்காட்டினர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இப்பழக்கத்தால் 2500-_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், 55 வயதிற்கு உட்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இதயம் எளிதில் பலவீனம் அடைவதாகவும் கடந்த 17 ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழ் ஓவியா said...


வளர முடியும்


நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி ஏற்படுத்தப்பட் டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.

(விடுதலை, 20.9.1968)

தமிழ் ஓவியா said...


ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவசத் திட்டங்கள் பொருளாதார ஏற்றத் தாழ்வைக் குறைக்கின்றன


தமிழகத்தில் ஏழை மக்களை இலவசத் திட்டங்கள் மூலம் திரா விடக் கட்சிகள் சோம்பேறிகளாக்கி விட்டன (தினமணி 12.8.2013) என்று காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் கண் டனம் தெரிவித்திருக்கிறார். ஆனால் பொருளாதார மேதைகள் ஏழை களுக்கு வழங்கப்படும் இலவசத் திட் டங்கள் சமூகத்தில் நிலவும் பொருளா தார ஏற்றத் தாழ்வைக்குறைக்க உதவுகின்றன என்று கூறுகிறார்கள்.

20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் அரசாங்கத்தின் தலையாய குறிக்கோள் குடிமக்களின் வாழ் வைக் கருவிலிருந்து கல்லறை வரை பராமரித்து அவர்களின் வாழ்க் கையை வளமிக்கதாக ஆக்குவதே ஆகும். அத்தகு அரசைப் பொதுநல அரசு Welfare State என்று கூறுகி றோம். 1930-ஆம் ஆண்டு மே 10, 11 நாட் களில் ஈரோட்டில் நடந்த சுயமரி யாதை இயக்கத்தின் 2-ஆவது மாநில மாநாட்டில் தந்தை பெரியாரின் உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தவை,

உரை வருமாறு: ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்கின்ற தன்மை இருக்கின்ற வரையில், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் ஐந்து வேளை சாப்பிட்டுவிட்டு இருக்கின்ற வரையில், ஒருவன் இடுப்புக்கு வேட்டி இல்லாமல் திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக் கொண்டு உல்லாசமாகத் திரிவதுமான தன்மை இருக்கின்ற வரையில், பணக்காரர்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழுதும் தங்களுடைய சுக வாழ்விற்கே என்று கருதிக்கொண்டு இருக்கின்ற வரையில் சுயமரியாதை இயக்கம் இருந்தே தீரும்.

காமராசர் தமிழக முதல்வராக இருந்த போது 14 இலட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. எந்த மனித நேய முள்ள அரசியல் தலைவராவது இதைக் குறை கூற முடியுமா?

இதைப்போலவே தான் முதியோர் உதவித்தொகை, கருவுற்ற ஏழைப் பெண்களுக்கு உதவித்தொகை. பத்தாம் வகுப்பு வரை படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித் தொகை ஆகியவை ஏழைகளின் வாழ்வில் வளம் சேர்க்கும் திட்டங்கள்.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் பயன் அடைந் துள்ளனர். இதனால் அரசுக்கு ரூபாய் 700 கோடி செலவாகி உள்ளது.

உலக வங்கி World Bank தனது சென்ற ஜூன் மாத அறிக்கையில் உலகம் முழுவதும் 120 கோடி ஏழைகள் ஏழ்மையில் வாடுகின்றனர் என்றும், இந்தியாவில் மட்டும் 40 கோடி ஏழைகள் உள்ளனர் என்றும் அறிவித்துள்ளது. இந்த ஏழை மக்களுக்கு உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதி முதலிய அடிப்படைத் தேவைகளை அளித்து அவர்களின் வாழ்வில் ஓரளவு நிம்மதியை அளிப்பது தான் பொது நல அரசின் கடமை ஆகும்.

தந்தை பெரியார் ஈரோடு சுயமரி யாதை மாநாட்டில் கூறிய கருத்தையே திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு களுக்கு முன், பின் வருமாறு கூறு கிறார்:

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

கிடைத்ததைப் பகுத்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப் பாற்றுதல் அற நூலோர் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

ஏழைகளுக்கு இலவச திட்டங்கள் வழங்குவதன் மூலம் திராவிட கட்சி கள் அவர்களை சோம்பேறிகளாக்கி விட்டன என்று கூறுவது உண்மைக் கும் புறம்பான கூற்றாகும்.

- இர.செங்கல்வராயன் (முன்னாள் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு)

தமிழ் ஓவியா said...


பதவி உயர்வும், தகுதி, திறமையும்

பொதுத்துறை வங்கிகளில் செயல் இயக் குநர் பதவிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டது பற்றி நேற்றைய விடுதலையில் (30.8.2013) முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நான்கு பேர்களும் ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகளில் பணிகளில் இருந்தவர்கள்தாம். இவர்களுக்கு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் மொத்தம் 30 மதிப்பெண் களுக்கு, ஒரே ஒரு மதிப்பெண்தான் பெற்றுள் ளனர் என்றாலும் அவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்கள்தான் தகுதி திறமைகளை நிர்ணயிக்கக்கூடிய அளவுகோல் என்று கதறி வந்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

பார்ப்பனர்கள் தொடக்கத்தில் சொல்லி வந்த ஒவ்வொரு காரணமும் பொருளற்றவை என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.

இடஒதுக்கீட்டால் ஜாதி வளரும் என்றனர். இடஒதுக்கீட்டின் காரணமாக கல்வி வளர்ச்சி பெற்று - ஜாதி உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. படித்தவர்களிடையே ஜாதி கடந்த திருமணங் கள் நாட்டில் பெருகி வருகின்றன.

இடஒதுக்கீட்டால் தகுதி திறமை பாதிக்கப் படுகிறது - தகுதிக்கு அளவுகோல் தேர்வு களில் பெறும் மதிப்பெண்கள் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள். அது வெறும் வார்த்தை ஜாலமே தவிர, உண்மையல்ல என்பதும் நிதர் சனமாகி விட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் கள் பெறுபவர்கள் அவர்களின் துறைகளில் பரிணமிக்கவில்லை; அதே நேரத்தில், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறாதவர்கள்கூட, அவர்கள் சார்ந்திருக்கும் துறைகளில் சாதனை முத்திரைகளைப் பொறித்து வருகின்றனர்.

சிவ அய்யாத்துரை என்ற தமிழர் கிராமப் பள்ளியில் படித்து - இடஒதுக்கீட்டின் காரண மாக வாய்ப்பைப் பெற்றவர்தான். ஆனாலும் மின்னஞ்சலை அவர்தான் கண்டுபிடித்துக் கொடுத்து உலக அளவில் போற்றப்படுகிற மனிதராகி விட்டார்.

இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பார்ப்பனர்கள் கூறி வந்த ஒவ்வொரு காரணமும், தோல்வி அடைந்து - இப்பொழுது வேறு வழியின்றிப் பார்ப்பனர்களே மாநாடு போட்டு தங்களுக்குரிய இடஒதுக்கீடு தேவை என்று தீர்மானம் போடும் அளவுக்கு கீழே இறங்கி வந்துவிட்டனர். இதனை நாம் வரவேற்கிறோம். மக்கள் தொகையில் அவர்கள் இருக்கும் 3 சதவீத அளவு இடஒதுக்கீட்டை ஒத்துக் கொள்வார் களேயானால், அனேகமாக இடஒதுக்கீடு பிரச்சினையே ஒரு முடிவுக்கு வந்து விட்ட தாகக் கருதப்படும்.

பதவி உயர்வில், இடஒதுக்கீடு தேவை என்பதையும் உயர் ஜாதியினர் எதிர்த்து வருகின்றனர். டில்லியில் வங்கிப் பணிகளில் பதவி உயர்வு பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் மிகக் குறைந்த அளவு (30-க்கு ஒன்று) மதிப்பெண்கள் பெற்றவர்களே. இவர்கள் பெரும்பாலும் உயர்ஜாதிக்காரர்கள்தான். இதற்குப் பிறகாவது பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது சரியானதுதான் மதிப்பெண் ணெல்லாம் தேவையில்லை என்று ஒத்துக் கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாமா?

தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்கிற வரவேற்கத்தக்க சட்டத் திருத்தம் செய்யப்பட்டு விட்டது. அதனை யொட்டி பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண் டும் என்ற நியாயத்தை அனைத்துத் தரப் பினரும் ஏற்றுக் கொள்வார்கள். பிற்படுத்தப் பட்டவர்களுக்கான நாடாளுமன்றக் குழு இதில் கவனம் செலுத்தி ஆவன செய்ய இதுதான் சரியான நேரம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...


கடவுள் சக்தி அவ்வளவுதான்! வைத்தீஸ்வரன் கோவில் மண்டபம் இடிந்து விழுந்தது


கோவில் திருஷ்டி சுத்தி மண்டபத்தின் மேல்தளம் இடிந்து விழுந்திருப்பதைக் காணலாம்

சீர்காழி, ஆக.31- சீர் காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவி லில் உள்ள மண்டபம் இடிந்து விழுந்தது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே தரும புரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வைத்தீஸ் வரன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் வைத் தியநாதசாமி, தையல் நாயகி, விநாயகர், செல்வ முத்துக்குமரசாமி, அங் காரகன் ஆகிய சுவாமி களுக்கு தனித்தனி சன் னதிகள் உள்ளனவாம்.

இந்தக் கோவிலுக்கு தின மும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர். மேலும், இந்தக் கோவில் நவக்கிரகங்களில் ஒன் றான செவ்வாய் தலம் என்பதால் திருமண தோஷம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனராம்.

இந்த கோவிலில் விழாக்காலங்களின் போது விழா முடிவ டைந்தவுடன் பஞ்ச மூர்த்திகளை திருஷ்டி சுத்தி மண்டபத்தில் வைத்து திருஷ்டி கழிப் பது வழக்கமாம். சில ஆண்டுகளாக கோவி லின் பல்வேறு இடங் கள் வலுவிழந்து காணப் பட்டதாம். இந்த நிலை யில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு மேற்கு கோபுரவாசல் பகுதியில் உள்ள திருஷ்டி சுத்தி மண்டபத்தின் இடது பக்க மேல்தளம் இடிந்து விழுந்தது.

நேற்று (30.8.2013) மதியம் இந்த மண்ட பத்தின் வலது புற மேல் தளம் இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில் நிர்வாகிகள் மண்டபம் இடிந்த பகுதி யைச் சுற்றி கம்பிவேலி அமைத்தனர். கோவில் மண்டபம் இடிந்து விழுந்த சம்பவத்தால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.

தன்னுடைய கோபு ரத்தையும், மண்டபத் தையும் காக்க முடியாத வைத்தீசுவரன் எப்படி பக்தர்களைக் காப்பான்.

தமிழ் ஓவியா said...


திமுகவில் எந்த கோஷ்டியும் இல்லை அடக்கும் வல்லமை எனக்கு உண்டு: தி.மு.க. தலைவர் கலைஞர்


சென்னை, ஆக. 31- திமுகவில் எந்தக் கோஷ்டியும் இல்லை. கோஷ்டி இருந்தாலும் அடக்கக்கூடிய வல்லமை என்னிடம் உண்டு என்று கலைஞர் பேசினார்.

வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி இல்ல திருமணத்தை திமுக தலைவர் கலைஞர் நேற்று (30.8.2013) தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி கலைஞர் பேசியதாவது:

ஒரு மனிதன் என்னதான் பெரும்புகழ் செல்வம் பெற்றிருந்தாலும், எல்லாவற்றையும்விட பெரும் செல்வம், அவன் அதிகமாக நண்பர்களைப் பெற்றி ருப்பதுதான். அந்த வகையில் காந்தி அளவற்ற நண் பர்களைப் பெற்றிருக்கிறார். இந்தத் திருமண விழா வில் துரைமுருகன், காந்தி பற்றி பாராட்டியதைவிட, துணைவியாரைத்தான் அதிகமாகப் பாராட்டினார்.

காந்தி வீட்டுக்குப் போனால், தங்களுக்கு நல்ல இனிய உணவு விருந்தளிப்பார் என்பதை அவர் சொன்னபோதுதான், எனக்கு உண்மையான விஷயம் புரிந்தது. இவர்கள் ராணிப்பேட்டை காந்தி வீட்டைச் சுற்றி வந்தததற்குக் காரணம், அங்கே கிடைக்கின்ற நல்ல உணவுதான். அவர்களுக்கு உணவு கிடைக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், காந்தியிடம் நான் காண்பது, திராவிட உணர்வு, தமிழ் உணர்வு, சுயமரியாதை உணர்வு.

சட்டமன்றத்தில் அவர் இருந்தபோது நானும் இருந்திருக்கிறேன். சட்டமன்றத்தில் காந்தி பேசி னால், காங்கிரஸ்காரர்கள் அதை பாராட்டி மகிழ்ச்சி தெரிவிப்பார்கள். திமுக அரசாக இருந் தாலும், காந்தி, தான் நினைத்ததை சொல்லத் தவறு வதில்லை.

உண்மைக்காக தொண்டாற்றக் கூடிய ஒருவர். உண்மையைச் சொல்லி, திமுகவில், ஆட்சி யில் இருக்கின்ற குறைபாடுகளை எடுத்து சொன்ன வர். மாவட்ட செயலாளர் என்ற பதவி காரணமாக இந்த மாவட்டத்தில் எந்தவிதமான பூசலும் இல் லாமல், எல்லோரும் நண்பர்களாகப் பழகுகின்ற நிலையை உருவாக்கியிருக்கிறார் என்று துரை முருகன் சொன்னார்.

துரைமுருகன் சாதாரணத் தொண்டரல்ல துணைப் பொதுச் செயலா ளர். அவர் சொன்னார் தமிழ்நாட்டில் கோஷ்டி இல்லாத ஒரு மாவட்டம், வேலூர் மாவட்டம்தான் என்றார். துரைமுருகன் அவருடைய மாவட்டமும் அது என்பதால் அப் படிச் சொல்லிக் கொண்டாரோ என்று எனக்குத் தெரியவில்லை.

வேலூர் மாவட்டத்தில்தான் கோஷ்டி இல்லை என்றால், மற்ற மாவட்டங்களில் கோஷ்டி இருப் பதைப் போல சிலர் நினைக்கக் கூடும். தி.மு.க.வில் எந்தக் கோஷ்டியும் எங்கும் இல்லை. எந்தக் கோஷ்டி இருந்தாலும், அந்தக் கோஷ்டிகளை அடக்கக் கூடிய வல்லமையும், வாய்மையும் என்னிடமும், திமுகவில் உள்ள தலைவர்களிடத்திலும் உண்டு. மணமக்க ளுக்கு நான் சொல்லுகிற அறிவுரை குடும்ப வாழ்வை சீராக, செம்மையாக, சிக்கனமாக எளிய முறையில் வாழ வேண்டும் என்பதுதான்.

- இவ்வாறு கலைஞர் பேசினார்

தமிழ் ஓவியா said...


இன்னுமா நமக்கு சூத்திரப் பட்டம்?

நமது நாட்டில் ஆதியில் வருணாசிரம தர்மம் என்பது இல்லையென்றும், மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லையென்றும், இப்போது வருணாசிரம தர்மம் என்பதன் மூலமாய் வருணாசிரம முறையில் மிகவும் தாழ்ந்த நிலைமை யில் நாம் அழைக்கப்படுகிறோம் என்றும், அதாவது பார்ப்பனர்களால், சூத்திரர்கள், பஞ்சமர்கள், மிலேச்சர்கள் என்று கருதப்படுகிறதும் 100க்கு 97 பேருக்கு மேலான எண்ணிக்கை கொண்ட நாம் இப்பெயரை வகிப்பது மிகவும் சுயமரியாதையற்ற தென்றும், சூத்திரன் என்கிற பதம் பார்ப்பனர்களின் அடிமை, பார்ப்பனர்களின் வேசிமக்கள் என்னும் கருத்தையே கொண்டது என்றும்,

பஞ்சமன் என்கிற பதம் ஜீவ வர்க்கத்தில் பூச்சி, புழு, பன்றி, நாய் கழுதை முதலியவைகளுக்கு இருக்கும் உரிமை கூட இல்லாததும் கண்களில் தென்படக் கூடாததும் தெருவில் நடக்கக் கூடாததுமான கொடுமை தத் துவத்தைக் கொண்டது என்றும், மிலேச்சர்கள் என்பது துலுக்கர், கிறிஸ்தவர், அய்ரோப்பியர் முதலிய அன்னிய நாட்டுக்காரரை குறிப்பது என்றும்,

அவர்களைத் தொட்டால் தொட்ட பாகத்தை வெட்டி எறிந்து விட வேண்டிய கருத்தைக் கொண்டதென்று உண்டாக்கி அந்தப்படியே பார்ப்பனர்களால் ஆதாரங்களும் ஏற்படுத்தி வைத்துக் கொள்ளப்பட்டு அதுதான் இந்து மதத்திற்கு ஆதாரமென்று காட்டப்படுகிறதென் றும் அநேக தடவைகளில் ஆதார பூர்வமாய் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். அதற்காக எவ்வளவோ கிளர்ச்சிகளும் செய்து வந்திருக்கிறோம்.

இவ்வளவும் நடந்துவரும் இந்தக்காலத்தில் இன்னமும் முனிசிபாலிட்டி, ஜில்லா போர்டு, தாலுகா போர்டு முதலிய ஸ்தாபனங்கள் சூத்திரன், பஞ்சமன், பிராமணன் என்னும் பதங்களை உபயோகப்படுத்தி வருகிறதென்றால் இதன் தலைவர்களுக்கு மானம், வெட்கம், சுயமரியாதை உணர்ச்சி, சுத்த ரத்த ஒட்டம் ஆகியவை இருக்கிறதா என்று கேட்கிறோம்.

சமீபத்தில் மதுரையில் நடந்த பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் பொது ஜனங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியே இதுதான். இப்படியிருக்க, அம்மதுரைப் பட்டணத்திலே மங்கம்மாள் சத்திரங்களில் சூத்திரன் என்னும் வாசகங்கள் கொண்ட போர்டுகள் எழுதி தொங்க விடப்பட்டிருக்கின்றன. இது எவ்வளவு அநியாயம்? ஆதலால் மதுரை ஜில்லா போர்டாரோ, முனிசிபாலிட்டியாரோ உடனே இதைக் கவனித்து இவ்வித இழி மொழிகள் கொண்ட போர்டு களையும், வாசகங்களையும் அப்புறப்படுத்தி இவ்வித வித்தியாசங் களையும் ஒழித்துவிடுவார்கள் என்று நம்புகிறோம்.

இதுபோலவே இன்னும் மற்ற ஊர்களிலும் இம்மாதிரி வாசகங்களோ, சொற்களோ காணப்பட்டால் அதை உடனே அடியோடு நிவர்த்திக்க வேண்டியது உண்மை யான மக்களின் முதல் கடமை என்பதாக தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 06.02.1927

தமிழ் ஓவியா said...


நன்றி கெட்ட தன்மை


சென்னையில் வர்த்தகர்கள் சங்கம், வியாபாரச் சங்கம் என்பதாக இரண்டொரு சங்கங்கள் இருந்து வந்தாலும் அவை முழுவதும் அய்ரோப்பியர்கள் ஆதிக்கமாகவே இருந்து வருவதோடு, இந்திய வியாபாரிகளுக்கு அவற்றில் போதிய செல்வாக்கும், சுதந்திரமும் இல்லை என்பதாகக் கண்டு காலஞ்சென்ற பெரியார் சர். பி. தியாகராய செட்டியார் அவர்கள் பெருமுயற்சி செய்து தென் இந்திய வர்த்தக சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அது நிலைத்திருப்பதற்கு வேண்டிய சகல சவுகரியங்களும் செய்து கொடுத்து அதன் மூலம் அய்ரோப்பிய சங்கங் களுக்கு இருப்பது போலவே சென்னை முனிசி பாலிடிக்கும், சென்னை சட்டசபைக்கும் இந்திய சட்டசபைக்கும் அங்கத் தினர்களை தெரிந்தெடுக்கும் உரிமைகள் முதலிய பெருமைகளையும் வாங்கிக் கொடுத்து அதற்கு ஒரு யோக்கியதையையும் உண்டாக்குவதற்கு எவ்வளவோ கஷ்டமும் பட்டார்.

இப்போதும், மற்ற எல்லா ஸ்தாபனங்களையும் நமது பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்காக சூழ்ச்சிகளாலும், தந்திரங்களாலும் சுவாதீனப்படுத்திக் கொண்டது போலவே, இதையும் கைப்பற்றிக்கொண்டு இருப்பதோடு அச்சங்கத்திற்கு இவ்வளவு பெருமையும், யோக்கியதையும் சம்பாதித்துக் கொடுத்த சர் தியாகராயரின் வாரிசான ஸ்ரீமான் பி.டி. குமாரசாமி செட்டியார் அவர்களையே அச்சங்கத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டார்கள்.

இக் கூட்டத்தாரின் கல்னெஞ்சத்தையும், நன்றிகெட்ட தன்மையும் காட்ட இதைவிட வேறு ஏதாவது உதாரணம் வேண்டுமா? ஆகவே, நமது பொது நன்மைக்காக என்று எந்த ஸ்தாபனங்களை ஏற்படுத்தினாலும் மெள்ள மெள்ள அதில் வேலைக் காரராக வந்து சேர்ந்து குமாஸ்தாவாகி, மேனேஜராகி, எஜமான்களாகி நம்மை கூலிக்காரர்களாக செய்து விடுகிறார்கள்.

இக்காரணங்களால்தான் நாம் செய்யும் தியாகமோ, உழைக்கும் உழைப்போ, ஏற்படுத்தும் ஸ்தாபனங்களோ, நமக்கே பலன்தர வேண்டுமானால் கண்டிப்பாய் அவற்றில் பார்ப்பனர்களைச் சேர்க்கக்கூடாது என்று வாதாடி வருகிறோமே அல்லாமல் மற்றபடி அவ்வகுப்பார்மீது துவேஷம் கொண்டல்ல.

இந்த விஷயத்தை அறியாமல் இருப்பவர்களும், பார்ப்பனர் களிடம் கூலி வாங்கிப் பிழைப்பவர்களும், பார்ப்பனர் விரோதம் கொண்டால் வாழ முடியாதவர்களும், தங்களைப் பெரிய தேசபக்தர்கள் போல காட்டிக்கொண்டு உபதேசம் செய்யவந்து விடுகிறார்கள். ஆனபோதிலும், பொது ஜனங்கள் இதை ஏதோ அறியாமையாலும், வயிற்றுக் கொடுமையாலும், இப்படி உளறுகிறார்கள் என்பதாக மதித்து கூடியவரையில் பார்ப்பனச் சம்பந்தமில்லாமலே முற்போக்கான வழி தேடவேண்டுமென்றும், அதற்கேற்ப ஸ்தா பனங்களையும், ஏற்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 06.02.1927

தமிழ் ஓவியா said...


இன்னும் பிராமணியமா?

திருவாங்கூரைச் சேர்ந்த கொட்டாரக்கரையில் காலஞ் சென்ற ஸதாநந்த சுவாமிகள் கண்ட ஆசிரமமொன் றுள்ளது. அதில் தற்பொழுது சுவாமி ஆத்மாநந்தபாரதி அவர்கள் தலைமை வகித்து வருகிறார்கள். அன்னார் இப்பொழுது ஒரு குருகுலங் கண்டிருக்கிறார்கள். அதில் இப்பொழுது தாழ்த்தப்பட்டவர்கள் சேர்க்கப்பட வில்லை.

இதைப்பற்றி, சுவாமிகள் குருகுல நிதி திரட்ட நாகர்கோவில் வந்தபொழுது ஸ்ரீமான் டாக்டர் ஆ.நு. நாயுடு அவர்கள் பேட்டி கண்டு பேசினார்கள். அதற்குச் சுவாமிகள் பிறப்பினாலேயே பிராமணர்கள் உயர்ந்த வர்களென்றும், ஏனையோர் ஸம்ஸ்காரத் தினாலேயே உயரவேண்டு மென்றும் கூறி சேரமாதேவிக் குருகுலம் நாசமாவதற்குக் காரணம் தாழ்த்தப் பட்டவர்களைச் சேர்த்ததினாலேயே என்றுங்கூறினார்கள். அதற்கு டாக்டர் அவர்கள் தாழ்த்தப்பட்ட இந்துக்களை ஏனைய மதத்தவர் வலிந்து இழுக்கும் போது இந்து மதத்தவரான நாம் அகற்றுவது அழகாகுமாவென்று கேட்டார்கள்.

அதற்குச் சுவாமி அவர்கள் ஸம்ஸகாரமடைந்தால் யாவரையும் எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அக்காலம் தனக்குத் தெரியுமென்றும், அதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் பரவாயில்லை யென்றும் கூறினார்கள். இதைக் கேட்டவுடன் மனிதனை மனிதனுக்கு அடிமையாக்கும் உங்கள் இந்து மதம் அழிந்து ஒழிகவென்று கூறி வெளிவந்தார்கள். இதைப்பற்றி டாக்டர் அவர்கள் சமுதாயத் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீமான் மன்னத்துபத்மனாப பிள்ளை அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதிக் கேட்டார்கள்.

அதற்கு பிள்ளையவர்கள் சுவாமிகளின் வைதிகப் பார்ப்பனியம் தனக்குப் பிடிக்கவில்லை யென்றும் இதை முன்னிட்டுத்தான் இதற்கு முன் தான் ஒரு அபிப் பிராயமும் கொடுத்த தென்றுங்கூறி பதிலிறுத்தனர். ஜாதி பேதமும், தீண்டாமையும், நீங்கவேண்டு மென்று மும்முரமாக வேலைநடந்து வருமிவ் வேளையில் இந்துமதம் இத்தீண்டாமை யெனுங்கொடுமையால் ஆயிரக்கணக் கான மக்களை ஆண்டுதோறும் அன்னிய மதத்திற்குக் கொடுத்துவரு மிக்காலத்தில் பாலர்களுடைய மாசற்ற இருதயங்களில் பேதநிலையை உண்டாக்காதவாறு காப்பதற்கு மாறாக பேத நிலையை உண்டு பண்ணுவது கூடாது.

சுவாமிகள் ஒரு பிராமணரல்லாதாராகவிருந்தும் பார்ப்பனியத்தை ஆதரிப்பது கண்டு ஆச்சரியப் படுகிறார்கள். சுவாமிகளும் சேர மாதேவி குரு குலத்தின் பேத நிலையால் வசூலான பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்ட செட்டி நாட்டுக்குச் செல் வாரென்று தெரிகிறது. மாணவர்களுக்கிடையே பேதநிலைமையுண்டு பண்ணாதிருந்தால் தான் அங்கே செல்வாக்கு கிடைக்குமேயொழிய அல்லதில்லை.

தன் குருகுலம் நல்ல நிலையையடைய வேண்டு மானால் தன் கொள்கையை அடியோடு விட்டு விடவேண்டும். இனியாவது சுவாமிகள் தங்கள் கொள்கையை மாற்றி விடுவார்களென்று நம்புகிறேன்.

- குடிஅரசு - கட்டுரை - 30.01.1927

தமிழ் ஓவியா said...


ஒடுக்கப்பட்ட மக்களின் படைத்தளபதியாக இருப்பவர் தொல்.திருமாவளவன்



எழுச்சித் தமிழர் பொன் விழா நிறைவு விழாவில் தமிழர் தலைவர் புகழாரம்!

சென்னை, செப். 1- ஒடுக்கப்பட்ட மக்களின் படைத்தளபதியாக இருப்பவர் தொல்.திருமாவளவன் என, எழுச்சித் தமிழர் பொன்விழா ஆண்டு நிறைவு விழாவிற்கு தலை மையேற்று பேசிய தமிழர் தலைவர் புகழாரம் சூட்டினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் பொன் விழா ஆண்டு நிறைவு விழா நேற்று (31.8.2013) மாலை 6.30 மணியளவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர் களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு விடுதலை சிறுத் தைகள் கட்சியின் பொதுச் செயலா ளர்கள் ம.செ.சிந்தனைச் செல்வன், து.இரவிக்குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். முகம்மது யூசுஃப் வரவேற்புரையாற்றினார்.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 51 பவுன் தங்க செயினை, திருமாவளவனுக்கு அணிவித்து வாழ்த்துக்கள் தெரி வித்து சிறப்புரையாற்றினார். முன்ன தாக கவிக்கோ அப்துல்ரகுமான், பேராயர் எஸ்றா சற்குணம் வாழ்த் துரை வழங்கினர். எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஏற்புரை நிகழ்த்தினார்.

இவ்விழாவில் தோழமைக்குரல் - இசுலாமியர் களத்தில் திருமா வளவன் என்ற நூலை கலைஞர் வெளியிட்டார். புரட்சியின் புதல் வன், போர்வீரன் திருமா, தங்க மானவன், என்றும் பதினாறு, புலியின் தம்பி ஆகிய இசைப் பேழைகளை கலைஞர் வெளியிட தமிழர் தலைவர் பெற்றுக்கொண் டார்.

முன்னதாக இவ்விழாவிற்கு தலைமையேற்று, பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள்:-
ஒடுக்கப்பட்ட மக்களின் படைத் தளபதியாக இருப்பவர் மானமிகு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவள வன் ஆவார். எப்படி திராவிடர் கழகம் தந்தை பெரியார் வழி நின்று சமூக நீதிக்காக பாடுபடுகிறதோ, அதே போன்று விடுதலை சிறுத் தைகள் கட்சியும் அதே உணர்வுடன் இனத்தின் மீட்சியாக பாடுபட்டு வருகிறது.

தொல்.திருமாவளவன் அவர்கள் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத் கர் ஆகிய சமூக புரட்சியாளர்க ளைப் படித்தவர். இந்தியாவில் புரட்சியாளர்களாக தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இருந்தவர்கள்; அவர்களை பின் பற்றி நடப்பவர் தொல்.திருமா வளவன்.

தொல்.திருமாவளவன் பயிற்சி பெற்ற இடம் பெரியார் திடல், திராவிடர் கழகம் நடத்திய இலங்கை பிரச்சினைக்காக ரயில் மறியல் போராட்டத்திலும், இந்தி எழுத்து அழிப்பு போராட்டத் திலும் பங்கேற்றவர். எனவே அவர் நீண்டகாலம் தொண்டறச் செம் மலாக இருக்க வேண்டும். என தமி ழர் தலைவர் புகழாரம் சூட்டினார்.

முன்னதாக இவ்விழாவில் தமிழர் தலைவர் அவர்கள், கலைஞர், தொல்.திருமாவளவனின் தாயார், தொல்.திருமாவளவன் ஆகி யோர்க்கு பொன்னாடை அணி வித்து சிறப்பு செய்தார். விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு தொல்.திருமாவளவன் பொன் னாடை அணிவித்து அயோத்தி தாச பண்டிதர் மற்றும் இரட்டை மலை சீனிவாசன் ஆகியோரின் சிலைகளை நினைவுப் பரிசாக வழங்கி சிறப்பித்தார். திமுக தலை வர் கலைஞர் அவர்களுக்கு இரண்டு சவரனில் நெல்லிக்காய் உருவம் கொண்ட தங்க பரிசை வழங்கினார் தொல்.திருமாவளவன்.
இவ்விழாவில் திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் துரை.முருகன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பாலாஜி, வன்னி யரசு உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று விழா வைச் சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


அடடே, அண்ணா திமுகவுக்கு வந்த கொள்கைக் கோபத்தைப் பாருங்கள்!


அண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது.

அதற்குத் திடீரென இனமானம், தன்மானம், சுயமரியாதை, பகுத்தறிவு கொள்கை மீது பாசம் பொங்கிப் பிரவாகித்து விட்டது.

திமுக ஆதரவில் நிறைவேறிய உணவு மசோதாவை வரவேற்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறிவிட்டாராம்.
கலைஞர் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒருகணம் நடுக்கம், அச்சம் (ஞாடியை) இவர்களுக்கு ஏற்படுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியாதா, என்ன?

கலைஞர் கட்டினார் என்பதற்காக தலைமைச் செயலகத்தை இழுத்து மூடவில்லையா? கலைஞர் ஆட்சி உருவாக்கியது என்பதற்காக அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தைத் தூக்கி எறிய ஆசைப்படவில்லையா?

புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்த நூலகத்தின் கதி என்ன? செம்மொழிப் பூங்கா என்னவாயிற்று? துறைமுகம் - மதுரவாயல் சாலை எனும் மிகப்பெரிய திட்டம் கைவிடப்படவில்லையா? சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லவில்லையா?

இந்த மக்கள் நலத்திட்டங்களையெல்லாம் தீர்த்துக் கட்டிய ஆட்சி இது - ஒரே காரணம் இவையெல்லாம் மானமிகு கலைஞர் சம்பந்தப்பட்டது என்பதுதான். திமுக ஆதரவுடன் நிறைவேறிய உணவு மசோதா என்ற வார்த்தைகள் வந்து விட்டதாலேயே விட்டேனாபார் என்று வில்லை எடுக்கிறது இந்த அண்ணா திமுக ஏடு. தமிழர் தலைவரைப் பார்த்து கருப்புச் சட்டை ஒரு கேடா என்றும் கேள்வி கேட்கிறது. அண்ணா பெயரில் ஆன்மீக ஏடு நடத்துவதுதானே அண்ணா திமுக!

சின்ன வயதில் வெண்ணெய் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடியவன் பற்றி அண்ணா எழுதியது இந்த கோலிவிளையாட்டுச் சிறுவர்களுக்குத் தெரியுமா?

அத்தகைய அண்ணாவின் பெயரைக் கட்சியிலும் கொடியிலும் வைத்து கொண்டு கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக் கூறும் கூட்டத்துக்கு கருப்புச் சட்டை பற்றிப் பேசவோ, அண்ணா பெயரைப் பயன்படுத்தவோ, உச்சரிக்கவோ முதற்கட்டத்திலேயே தகுதி உண்டா! பெண்களும், சூத்திரர்களும், வைஸ்யர்களும் பாவ யோனியிற் பிறந்தவர்கள் என்று கீதை (அத்தியாயம் 18 சுலோகம் 44) கூறுகிறது என்பதை அறிவாரா அதிமுக பொதுச் செயலாளர்? அறிந்துதான் கீதையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிடுகிறாரா? பூணூலின் மகத்துவத்தைப் பற்றி நமது எம்.ஜி.ஆர். படம் போட்டு விளக்குகிறது என்றால், திராவிட இயக்கத்திலே பூணூல் புகுந்துவிட்டது என்றுதானே பொருள்?

அண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா? அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்? நீங்கள் கொடுப்பது நெத்தியடி என்றால் நாங்கள் கொடுப்பது புத்தி அடி!

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் பிறந்த நாள் - வாழ்விலே ஒரு திருநாள்!


பெரியார் ஆயிரம் வினா - விடையில் இலட்சக்கணக்கான மாணவச் செல்வங்கள் பங்கேற்றுச் சாதனை!

பட்டிதொட்டியெல்லாம் பெரியார் கொள்கை முழக்கம் கேட்கட்டும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாளை (செப்டம்பர் 17) புதிய அம்சங்களுடன் சிறப்பாகக் கொண்டாடுவோம் - பட்டி தொட்டி யெல்லாம் பெரியார் கொள்கை முழக்கம் கேட்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பாசத்திற்குரிய கழகக் கொள்கைக் குடும்பத்தினர்களே,

கனிவான வணக்கம்.

செப்டம்பர் பிறந்து விட்டது!

நமது கொள்கைத் திருவிழாவின் கொடியேற்றம் துவங்கி விட்டது என்பதுதானே அதன் பொருள்?

போதி மரம் செல்லாப் புத்தன்!

தரணிக்கெல்லாம் தன்மானத்தைப் போதித்த, போதி மரம் செல்லாத புத்தனாம், நமது பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் பெருவிழா - திருவிழா (செப்டம்பர்) 17ஆம் தேதி துவங்கி, உலகெலாம் உன்னத அறிவுத் திருவிழாவாக, அறியாமைக்கெதிராக அறிவொளி பாய்ச்சும் அற்புத விடியல் விழாவாக நடைபெற திட்டமிடப்படுகிறது!

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் ஒரு தனி நபர் அல்ல - அறிஞர் அண்ணா அவர்கள் அழகுற அறிவுச் செறிவுடன் கூறியபடி பெரியார் ஒரு சகாப்தம், ஒரு கால கட்டம், ஒரு திருப்பம்!

மக்களுக்கு மாலை நேர வகுப்புக்களை எடுத்தவை களாக தனது பொதுக் கூட்டங்களைப் பயன்படுத்திச் சொல்லிக் கொடுத்த தமிழகத்தின் முதல் பேராசிரியர்!

ஒப்பாரும், மிக்காரும் இல்லாத ஒரே தலைவர் சிந் தனையும், செயலும் இணைந்த ஓர் இணையற்ற மாவீரர்; மாமனிதர்!
தனி மனிதரல்ல பெரியார்!

தனி மனிதரானால் அவர் மறைந்து விட்டார் என்ற குறிப்பு உண்டு; நிறுவனங்கள் அப்படியல்ல; நீடித்து நிலைத்தவை!

கடைசி மூடநம்பிக்கையும், அறியாமைக் கொடுமையும், சமூக அக்கிரமும், வக்கிரமும் இருக்கும் வரை பெரியார் என்ற தத்துவமும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும் - நோய் தீர்க்கத் தேவைப்படும் மருந்து போல!

பெரியார் தம் அறிவுரைகளும், ஆக்கப்பூர்வ திட்டங்களும், புதிய உலகுக்குப் புத்தொளி பாய்ச்சிடும், புதுமைப் படைக்கலன்கள் ஆகும்!

அதனை மக்கள் மன்றத்திற்கு - காலத்திற்கேற்ற புதிய உத்திகளுடன் - மின்னணு, தகவல் புரட்சி யுகத்தின் தேவைக்கும் தேடுதலுக்கும் ஏற்ப செதுக்கிச் செயல் படுத்த வேண்டிய நமது கடமை - காலத்தின் கட்டளை யாகும்.

பெரியார் ஆயிரம் வினா -விடைப் போட்டியின் மாட்சி!

அதன் முதல் பிரச்சாரம் பெரும் முயற்சிதான் - சுமார் லட்சத்திற்குமேல் பெரியாரைப் புரிந்து கொள்ளப் புறப்பட்ட பள்ளிக்கல்வி மாணவச் செல்வங்கள் (இரு பாலரும்) கடந்த சில நாள்களாக பங்கு பெற்று (பெற்றோர்களுடனும் இணைந்து) மகிழும் பெரியார் ஆயிரம் வினா விடைப்போட்டி நாடு தழுவிய அளவில் எங்கெங்கும் எழுச்சியோடு நடைபெற்றுள்ளன!

ஏற்பாட்டாளர்களைப் பாராட்டுகிறேன்.

நமது தலைமைக் கழகத்தின் சீரிய செயல்பாட்டின் மூலம், பெரியார் பற்றிய புரிதலை - இளம், வளர் இளம் பிராய இருபால் மாணவச் செல்வங்கள் அறிந்து கொண்டுள்ள அற்புத முயற்சி!

திட்டமிட்டதைவிட, எதிர்பார்த்ததைவிட அதிகமான வரவேற்பு இதற்கு நாடெங்கும்!

இது இன்னும் பல கட்டங்களாக தமிழ், ஆங்கில மொழிகளில் மட்டுமில்லை. இந்திய மொழிகள், உலக மொழிகளிலும், On - Line
மூலமாக - கணினி மூலம் உலகத்தின் பற்பல நாடுகளில் பலவற்றிற்கும் எடுத்துச் சென்று பெரியாரை உலகமயமாக்கிடும் அரிய சிறப்பான முயற்சியின் துவக்கம்!

புதிய திட்டங்கள் தயார்!

அடுத்தடுத்து, இளைய தலைமுறை, மகளிர் - இரு சாராரை ஈர்க்கும் கொள்கை வகுப்புப் போன்ற பல முயற்சிகள் - இல்லத்தரசிகள் கொள்கை அரசிகளாக்கப் படல் வேண்டும் என்பதற்கே மகளிர் மாண்புக்குக் காரணமான பெரியார்தம் தொண்டறம் பற்றிய செய்திகளும், அவைகளையே துடுப்புகளாக்கி தமது வாழ்க்கையில் ஓடத்தை ஓட்டி - வெற்றிக்கரை சேர வாரீர்! என்று அழைக்கும் அமைதியான அறிவுப் புரட்சித் திட்டங்களும் தயாராகிக் கொண்டுள்ளன!

உற்சாகம் பொங்கி வழிய, கொள்கைத் திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவோம்.

நமக்கென உள்ள வாழ்விலோர் திருநாள் பெரியார் பிறந்த நாள் என்ற திருநாள் - பெருநாள்!

மனிதர்களை வாழவைக்கும் மருத்துவ முகாம் போன்றவைகளை பெரியார் மருத்துவ அணி மருத்துவச் செம்மல்கள் ஊக்கத்துடன் துவங்கி திசையெட்டும் நடத்த முன்வந்து நடத்தி வெற்றிச் சாதனை புரிந்து வரு கின்றனர்.

இப்படி புதுமையுடன் இந்த ஆண்டு 135 துவங்கி நடைபெறட்டும்!

பட்டி தொட்டியெங்கும் பெரியார் கொள்கை முழங்கட்டும்!

உங்கள் தொண்டன்

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


சென்னை
2.9.2013

தமிழ் ஓவியா said...


சிறுத்தையின் உறுமல்!


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழா - பொன் விழா நிறைவுப் பெரு விழாவாக சென்னை காமராசர் அரங்கில் எழுச்சியுடன் நடைபெற்றது. (31.8.2013)
இளைஞர்களின் அடர்த்தித் திரளாக அமைந் திருந்தது அந்த நிகழ்ச்சி. மண்டபம், வெளிப்புறம் என்று எங்கு பார்த்தாலும் இளைஞர்களின் எழுச்சிச் சங்கமம்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கிட முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் நிறைவுரை ஆற்றிட விழா நிறைவான விழாவாக அமைந்திருந்தது.

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் தம் சிந்தனைகளைச் சுற்றிச் சுழன்ற நிகழ்ச்சி! இந்தக் கால கட்டத்தில் முன்னெடுக் கப்பட்ட சிந்தனைகள் இவைதானே!

எழுச்சித் தமிழர் ஏற்புரையில் சொன்னது மிக முக்கியமானது; ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடக் கூடிய, தேர்தலில் போட்டியிடாத திராவிடர் கழகம், தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. - இத்துடன் சிறுபான்மை மக்களின் பிரதிநிதி களாக பேராயர் எஸ்றா சற்குணம், கவிக்கோ அப்துல் ரகுமான் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியைத் தேர்தலுக்கும், அரசியலுக்கும் அப்பாற்பட்ட இணைப்பாகக் கருத வேண்டும் என்று மானமிகு திருமா அவர்கள் சொன்னது மிக முக்கியமானது. இது ஒரு கோட்பாட்டுப் பார்வை. இன்றைய கால கட்டத்தில் சமூக நீதிக்காகப் பாடுபடக் கூடிய தேவைப்படக் கூடிய அமைப்புகளின் வலிமை வாய்ந்த ஒற்றுமை மிகவும் அவசியம்.

மதவாத சக்திகளுக்கும், மதத்தை முன் வைத்து அரசியலை நடத்தத் துடிக்கும் பிற்போக்குவாதிகளுக்கும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட சாட்டைதான் இந்த இணைப்பு.

இந்து நேஷனலிஸ்ட் என்று வெளிப்படை யாகத் தன்னைப் பற்றிய ஓர் அறிமுகத்தோடு இந்தியாவின் பிரதமருக்கான வேட்பாளர் என்று மார்தட்டிக் கூறும் கால கட்டம் இது.

இத்தகு சூழ்நிலையில் சென்னை காமராசர் அரங்கம் அந்தச் சக்திகளை, முகத்துக்கு முகம் சந்தித்து வீழ்த்திட, ஒரு பெரிய குரலைக் கொடுத்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரியார் திடலில் வெளிச்சம் கிடைத்துப் புறப்பட்ட சிறுத்தை என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டதன் பலனை, அவருடைய பேச்சு பறைசாற்றி விட்டது. தன்னை ஆற்றுப் படுத்தி வரும் இரு தலைவர்கள் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும்தான் என்பதையும் மனந்திறந்து நன்றி உணர்ச்சி மேலிடப் பிரகடனமும் செய்தார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் ஒரு தலைவர் பிறந்து முறையாக வளர வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். அப்படி உருவாகும் இளைஞர் பெரியாரி யலையும், அண்ணல் அம்பேத்கர் இயலையும் சுவாசித்து உள் வாங்கிக் கொண்டு எந்தவித சபலத்திற்கும் ஆளாகாமல் இலட்சியப் பயணத் தைத் தொடரும் பட்சத்தில் நிச்சயம் எதிர்காலம் அவர்கள் வசப்படும் என்பதில் அய்யமில்லை.

பஞ்சமி நில மீட்பு, ஈழத் தமிழர் விடிவு, தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு இம் மூன்றையும் முன்னிறுத்தி அவர் பேசியதில் சமூகநீதி, இனவுணர்வு, உரிமை மீட்பு என்ற மூன்றும் முத்தாய்ப்பாக முறுகி நிற்கிறது. அது மேலும் வளரட்டும்!

தந்தை பெரியாரை முன்னிறுத்தியதால் பகுத்தறிவு ஒளி அங்கே தானாகவே ஊடுருவி விட்டது.

எத்தனை இடம் கிடைக்கும் என்பதைவிட தமிழன் எந்த இடத்தில் இருக்கிறான்? அவன் முழு விடுதலைக்குரிய இடம் எது? என்பதில் குறியாக இருப்பதுதான் சிறந்த குறிக்கோளாக இருக்க முடியும். அது எழுச்சித் தமிழரின் ஏற்புரையில் உறையிலிருந்து வெளிவந்த வாளாக மின்னியது. அந்தப் பொன் விழா நிறைவு காணும் இலட்சிய சிறுத்தைக்கு நமது வாழ்த்துக்களைக் கூறுவோம். தமிழா இனவுணர்வு கொள்!

தமிழா தமிழனாக இரு!

தமிழ் ஓவியா said...


முட்டாள்தனம்


மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத்திலேயே மாறும். அவன் சந்ததிக் காலத்திலும் மாறும். ஆகவே, அதைச் சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள்தனம்.

(விடுதலை, 28.4.1943)